வவுனியா நலன்புரி நிலையங்களில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த 31,000 பேர் வவுனியாவில் 13 நலன்புரிநிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இங்கு குறைந்தது பத்துப்பேருக்கு மலசல கூடம் தேவையாகும். ஆனால், இங்கு 100 பேருக்கு ஒரு மலசல கூடம் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதாக நிவாரண பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தண்ணீர் விநியோகம் நடைபெறுகின்றது. ஆனால், தற்போதைய வெப்பகாலத்தில் கூடுதலான நீர் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வெப்பகாலத்திற்கு பொருத்தமற்ற கூடாரங்களிலும் தகரத்திலான கொட்டகைகளிலும் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் பல இடர்களை அனுபவிக்கவேண்டியுள்ளது.
வந்தவர்களை தங்கவைக்க தற்காலிக ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.செட்டிகுளத்தில் வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. வைத்தியகுழுவினர் நலன்புரி நிலையங்களுக்கு தினமும் விஜயம் செய்துவருவதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார்.
நலன்புரிநிலையத்திற்குள் நுழைவதற்கு மாவட்ட செயலகத்தினால் பாஸ் வழங்கப்பட்டவர்கள் மாத்திரம் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்புக் கடமையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.