காத்தான்குடியில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வைபவமொன்றில் கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், துரையப்பா நவரெட்ணராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்த வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாகாண அமைச்சர் நவரெட்ணராஜாவின் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியே தவறுதலாக வெடித்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. எனினும், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அறியவருகிறது.
மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பில் மாகாண விவசாய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.நவரட்ணராஜா கலந்துகொள்ளும் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் நேற்று காத்தான்குடி, ஆரையம்பதி பிரதேசங்களில் நடைபெற ஏபற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காத்தான்குடி கமத்தொழில் விவசாய நிலையத்தில் அடிக்கல் நடும் விழாவில் மாகாண அமைச்சர்கள் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே ஒரு மீற்றர் தூரத்திற்குள் நின்ற மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கி தவறுதலாக திடீரென்று வெடித்ததையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது. ரவைகள் மேலே நோக்கி பாய்ந்ததால் அமைச்சர்களான ஹிஸ்புல்லாஹ், நவரட்ணராஜா மற்றும் அதிதிகள், பொதுமக்கள் எந்தவொரு ஆபத்துமின்றி உயிர்தப்பினர்.
உடனடியாக கடமையில் இருந்த ஏனைய பொலிஸ் அதிகாரிகள் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கியை கைப்பற்றியதுடன் வெடித்த நான்கு ரவைகளையும் மீட்டெடுத்துள்ளனர். பின்னர் நிலைமை வழமைக்கு திரும்பியதையடுத்து நிகழ்வுகளும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.