தேசம்நெற் பதிவை நீக்கக்கோரிய விண்ணப்பத்தை பிரித்தானிய நீதிமன்றம் நிராகரித்தது!

அபிராமி கணேசலிங்கம், ராகுலன் லோகநாதன் ஆகியோர் கூட்டாக தம்பிராஜா ஜெயபாலன் உட்பட ஒன்பது பேருக்கு எதிராக கொண்டுவர முற்பட்ட இடைக்காலத் தடையை வில்சன் கவுன்ரி கோட் நிராகரித்துள்ளது. மாவட்ட நீதிபதி கன்வர் முன்நிலையில் அபிராமி கணேசலிங்கம் தன்பக்கத்து வாதத்தை வைத்து தடையுத்தரவைக் கோரி இருந்தார். இந்த விண்ணப்பத்தில் அபிராமி கணேசலிங்கம் முதலாவது வாதியாகவும் ராகுலன் லோகநாதன் இரண்டாம் வாதியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தனது விண்ணப்பத்தை முன்வைத்து அபிராமி கணேசலிங்கம் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கையில் தானும் தனது குடும்பமும் சட்டவிரோத மோசடிகளில் ஈடுபட்டதாக ஒன்லைன் வெளியீடு ஒன்றில் குறிப்பிட்டு இருந்ததாகவும், அதனால் தனது குடும்பத்தினர் பயமுறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், பிரதிவாதிகள் தங்களுடைய நன்மதிப்பை பாதிக்கும் வகையில் இவ்விணையத்தளத்தில் கருத்துக்களை எழுதியதாகவும், அதனால் அப்பதிவை நீக்குவதற்கான இடைக்காலத்தடையுத்தரவை அவர் கோரியிருந்ததாக அந்த விண்ணப்பத்தை நிராகரித்து வழங்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இடைக்காலத்தடையுத்தரவைக் கோரிய விண்ணப்பதாரிகளான அபிராமி கணேசலிங்கம், ராகுலன் லோகநாதன் பற்றிய தம்பிராஜா ஜெயபாலனால் எழுதப்பட்ட செய்தியொன்று தேசம்நெற்றில் பெப்ரவரி 15 அன்று வெளியிடப்பட்டு இருந்தது. வாதிகளில் ஒருவரான ராகுலன் லோகநாதன் இயக்குநராக இருந்த ரெய்டன் (Raidenn Ltd) என்ற நிறுவனம் பற்றியும் அதன் வாடிக்கையாளர்கள் பற்றியும் அச்செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. குறிப்பிட்ட நிறுவனத்தின் செயற்பாடுகளால் தாங்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி இருந்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அச்செய்தியின் கீழ் அபிராமி கணேசலிங்கம் ராகுலன் லோகநாதன் ஆகியோருக்கு சார்பாகவும் எதிராகவும் கருத்தக்கள் வெளியிடப்பட்டு இருந்தது.

மேலும் அச்செய்தியில் ராகுலன் லோகநாதன் இச்செய்தி தொடர்பாக தம்பிராஜா ஜெயபாலனோடு தொடர்புகொள்வார் என்று அபிராமி கணேசலிங்கம் தம்பிராஜா ஜெயபாலனுக்கு உறுதியளித்து இருந்தார் என்றும் ஆனால் பல வாரங்களாகியும் பல்வேறு வகையில் முயற்சித்தும் ராகுலன் லோகநாதன் தொடர்பு கொள்ளவில்லை என்பதையும் அச்செய்தி சுட்டிக்காட்டி இருந்தது.

இதன் பின்னணியிலேயே அபிராமி கணேசலிங்கன் மற்றும் ராகுலன் லோகநாதன் ஆகியோர் வில்சன் கவுன்ரி கோர்ட்டில் இச்செய்திக்கு எதிராகத் தடையுத்தரவைக் கோரியிருந்தனர். பெப்ரவரி 17இல் நீதிபதி கன்வர் அபிராமி கணேசலிங்கம் மற்றும் ராகுலன் லோகநாதன் ஆகியோரின் விண்ணப்பம் சிபிஆர் 3.40 (CPR 3.40. க்கு அமைவாக அமையாததன் அடிப்படையில் அதனை நிராகரிப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.

அக்கட்டளை வருமாறு குறிப்பிடுகின்றது: The application for Injunction part 8 claim are struck out pursuant to CPR 3.40. இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள்: இந்த விணப்பத்துக்கான நியாயமான காரணங்கள் இல்லாமல் இருக்கலாம், இது நீதிமன்ற செயன்முறைகளை துஸ்பிரயோகம் செய்வதாக அமையலாம் எனப் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கலாம் என ஜஸ்ரிஸ்.கோ.யுகெ இணையத்தில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

இந்த விண்ணப்பத்தில் இச்செய்தியை எழுதிய தம்பிராஜா ஜெயபாலன் முதலாம் எதிரியாகவும் ரவிச்சந்திரன் சேனாதிராஜா இரண்டாம் எதிரியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ரவிச்சந்திரன் சேனாதிராஜாவின் துணைவியார் புஸ்பாவதி சேனாதிராஜா மூன்றாம் எதிரியாகவும் இவர்களுடைய மகள் சிவானி ரவிச்சந்திரன் நான்காம் எதிரியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ரவிச்சந்திரன் சேனாதிராஜா தன்னுடைய நண்பரான செல்வராஜா செல்வச்சந்திரனை ரீமோட்கேஜ் செய்து கொடுப்பதற்காக அபிராமி கணேசலிங்கத்திடம் அறிமுகப்படுத்தியதாக தேசம்நெற்றிடம் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பின்னாட்களில் இந்த ரீமோட்கேஜ் விடயம் விபரீதமாக ரவிச்சந்திரன் சேனாதிராஜா அபிராமி கணேசலிங்கம் தம்பதிகளின் வீட்டுக்கு நியாயம் கேட்கச் சென்றதாகவும் அப்போது தாங்கள் தன்னை தாக்க வருவதாக அவர் பொலிஸில் முறையிட்டு இருந்ததாகவும் தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். இவை எதுவற்றிலுமே தன்னுடைய மனைவிக்கும் மகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தங்கள் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயற்படுவதாக அபிராமி – ராகுலன் தம்பதியினரால் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 5ம் எதிரி செல்வராஜா செல்வச்சந்திரன். ஆறாம் எதிரி செல்வராஜா செல்வச்சந்திரனின் துணைவியார் ஜெயவதனி செல்வச்சந்திரன். செல்வச்சந்திரன் – ஜெயவதனி தம்பதிகளின் மகள் கௌசிகா செல்வச்சந்திரன் ஏழாம் எதிரியாகக் குறிப்பிடப்பட்டு உள்ளார்.

எட்டாம் எதிரியாகக் குறிப்பிடப்பட்ட நடராஜா ரபீன்திரன் தேசம்நெற் இல் வெளியான வயதான தம்பதிகளோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர். ரெய்டன் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் இவர் தொடர்பில் உள்ளதாக தெரியவருகிறது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

கடைசி எதிரியான ரூபன் நடராஜா யாழ் நல்லூரைப் பூர்வீகமாகக் கொண்ட அபிராமி கணேசலிங்கத்தின் மிக நெருங்கிய உறவினர். தான் வெளிநாடு வருகின்ற போது அபிராமி பிறந்திருக்கவில்லை என அவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். தானும் அபிராமியின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் முதலீட்டுக்காக நூறாயிரம் பவுண்களை வழங்கியதாகவும் ஆனால் ஆரம்பத்திலேயே ஏதோ சரியாகப்படவில்லை என்பதை உணர்ந்து பணத்தை மீளப்பெற முயன்றதாகவும் இன்னமும் தனக்கு பணம் வந்து சேரவில்லை எனவும் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

இச்செய்தி தொடர்பாக அபிராமி கணேசலிங்கம் – ராகுலன் லோகநாதன் ஆகியோரோடு தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவர்கள் தேசம்நெற்றை தொடர்புகொள்ளும் பட்சத்தில் அவர்களுடைய பக்கதை சொல்வதற்கான முழுமையான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

Show More
Leave a Reply to Parthi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Parthi
    Parthi

    UK court has rejected this couples appeal, it’s almost proven they did fraud

    Reply
  • Sri
    Sri

    ஊரைக் கொள்ளை அடித்துவிட்டு தடை உத்தரவு வேறு கேட்டார்களா இந்த திருடர்கள் ? அதுவும் திருட்டுப் பணத்திலா?

    Reply