இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.
பிரதமராக பதவியேற்றதில் இருந்து, எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதே அவரது முதன்மையான பணியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா மற்றும் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மேற்குலக நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்த்தைகளும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னதாக ஊடகங்களிடம் பேசியிருந்த அவர்,
‘கோட்டகோகம’ போராட்டம் தொடர வேண்டும் எனவும் ‘கோட்டகோகம’ போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தலையிடாது எனவும் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றையதினம் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.