‘கோட்டா கோ ஹோம்’ அல்ல ‘ஸ்றிலங்கா பெர்ஸ்ற்!’, ‘ரூறிஸ்ற் ஹம் ஹோம்!!’ அன் ‘மேட் இன் சிறிலங்கா!!!’ பணவீக்கம் என்பது அடிப்படையில் தவறான பொருளாதார புரிதல்!

‘இன்று மே 21ம் திகதி முதல் குழந்தைகளின் பால்மாவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு கடைகளில், சுப்பர்மாக்கற்களில் பால்மா தட்டுக்கள் காலியாகிக் கிடக்கின்றது. கைக் குழந்தைகளின் பெற்றோர் பால்மாவுக்காக கடை கடையாக ஏறி இறங்குகின்றனர். ஏற்கனவே பால்மா உற்பத்தி குறைந்திருந்த நிலையில் பால்மா அருந்திய குழந்தைகளில் பற்றீரியா தொற்று ஏற்பட்டதால் குறிப்பிட்ட நிறுவனம் தன்னுடைய பால்மாக்களை உடனடியாக மீளப்பெற்றது நிலைமையை மோசமடையச் செய்துள்ளது. அதனால் ஜனாதிபதி இராணுவத்தை உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபடுத்துவதாக அறிவித்துள்ளார்’.

இந்நிலை இலங்கையில் அல்ல அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் சமையல் எண்ணைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கோதுமை மாவுக்கான நெருக்கடி உலகத்தை நெருக்கப் போகின்றது. இந்தியா கோதுமை மற்றும் உணவுப் பொருட்களுக்கான ஏற்றுமதியை தடைசெய்துள்ளது. இன்றைய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் நெருக்கடிகள் இலங்கைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. அவ்வாறு குறுக்கிப் பார்ப்பது மிகவும் ஆபத்தான பின் விளைவுகளுக்கு நாட்டை இட்டுச் செல்லும்.

உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் சர்வதேச பொருளாதார பயங்கரவாதிகள்:

பின்விளைவுகளை ஆழமாக நோக்காமல், இலங்கையில் அரசியல் மாற்றத்தை கொண்டுவரப் போவதாகக் கூறி நடக்கும் போராட்டங்கள்; உலகப் பொருளாதாரப் பயங்கரவாதிகளான உலக வங்கியிடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் இலங்கையைத் தள்ளிவிட்டுள்ளன. பழைய ஆனால் மீண்டும் புதிதாகப் பதவியேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இலங்கை மக்களை தயார்படுத்த ஆரம்பித்துவிட்டார். நிலைமைகள் மோசமடையும் என்பதை மெல்ல மெல்ல அவிழ்த்து வருகின்றார். ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. ஆனால் அரையும் குறையுமாக தங்களுக்கே புரியாமல் செய்தி வெளியிடும் ஊடகங்கள், சர்வதேச நாணய நிதியம் கோத்தபாய ராஜபக்ச பதவி விலகினால் தான் தாங்கள் உதவமுடியும் என அறிவித்திருப்பதாக செய்தியை வெளியிட்டு வருகின்றன. சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் நாட்டை சூறையாடுவதற்கு யார் அனுமதித்தாலும் அந்நாடுகளுக்கு தங்கள் ‘உதவிக் கரத்தை’ நீட்டும். உலகில் இருந்த சர்வதிகாரிகள், கொடுங்கோலர்கள் எல்லோருக்கும் வாரி இறைத்து அந்நாடுகளைச் சுரண்டுவது தான் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியத்தியமும் இதுவரை செய்து வந்தது. அதனை அவர்கள் பசுத்தோல் போர்த்திக் கொண்டு செய்வார்கள்.

ஏப்ரல் 23இல் சர்வதேச நாணய நிதியமும் உலகவங்கியும் இளவேனிற்கால சந்திப்பை வோஷிங்டனில் மேற்கொண்டன. அதில் இலங்கையின் நிதியமைச்சர் அலி சபாரி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கேயும் கலந்துகொண்டனர். இச்சந்திப்பின் பின் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட செய்தி அறிக்கை: Going forward, the IMF team will support Sri Lanka’s efforts to overcome the current economic crisis by working closely with the authorities on their economic program, and by engaging with all other stakeholders in support of a timely resolution of the crisis. – முன்நோக்கிச் செல்ல சர்வதேச நாணய நிதியக் குழு இலங்கை தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கு ஏனைய பங்குதாரர்களோடும் இணைந்து அதிகாரிகளின் பொருளாதாரத் திட்டத்திற்கு ஆதரவு அளித்து தக்க தருணத்தில் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரும்”. இந்தச் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டு மூன்று வாரங்களில் மேற்குலகுக்கு சார்பான ரணில் விக்கிரமசிங்க பதவிக்குக் கொண்டுவரப்பட்டார். ஆயினும் பொருளாதார நெருக்கடிக்கு உதவத்தயார்; பாதிக்கப்படும் ஏழை பாளைகளின் நெருக்கடியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவத் தயார் என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டு ஒரு மாதமாகியும் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை.

அவ்வாறு உடன்பாடு எட்டப்படாத விடயம் என்ன? யார் அந்த ஏனைய பங்கு தாரர்கள்? சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் உலகெங்கும் சோசலிசக் கொள்கைகள் உருவாகிவிடக்கூடாது, நாடுகள் தங்கள் எல்லைகளை தங்கள் நாட்டு (அமெரிக்க – பிரித்தானிய மற்றும் நாடுகளுக்கு இவர்கள் தான் ஏனைய பங்குதாரர்கள்) நிறுவனங்களுக்கு திறந்துவிட்டு திறந்த சந்தைப் பொருளாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். இந்நாடுகள் தொடர்ந்தும் நவகாலனிகளாக இருக்க வேண்டும். அதற்காக இந்த மக்களின் அடிப்படைத் தேவைகளில் கை வைத்தாலும் கேள்வி எழுப்பக்கூடாது. எரிபொருள், மின் சக்தி, விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியங்கள் குறைக்கப்பட வேண்டும் அல்லது முற்றாக நிறுத்தப்பட வேண்டும். இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரம் என்பனவற்றுக்கு படிப்படியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இந்நாடுகளில் மக்கள் எவ்வளவு சுரண்டப்பட்டாலும் வறுமைப்பட்டாலும் பரவாயில்லை ஆனால் தாங்கள் அறவிடும் அறாவட்டியை ஒரு சதம் பாக்கி இல்லாமல் செலுத்த வேண்டும். இவை தான் இந்த பொருளாதார பயங்கரவாதிகளின் நிபந்தனை. இவர்கள் ஒன்றும் கோல்பேஸில் காற்று வாங்கவரும் போராளிகள் எதிர்பார்ப்பது போல் தேவதூதர்கள் அல்ல.

போராட்டகாரர்களுக்கு தமிழ் சொலிடாரிட்டியின் வேண்டுகோள் கேட்குமா:

உறுதியாக இருந்த இடதுசாரிகளின் நீண்ட போராட்டங்களினால் இலங்கை மக்கள் பல்வேறு அடிப்படை உரிமைகளைப் பெற்றிருந்தனர். இதனால் இலங்கை, அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளினால் கூட வழங்கமுடியாத இலவசக் கல்வியை பல்கலைக்கழகம் வரை வழங்குகின்றது. இலங்கையில் இலவச அடிப்படைச் சுகாதார கட்டமைப்புகள் குறிப்பிடத்தக்கன. விவசாயிகளுக்கான மானியங்கள், எரிபொருள் மானியங்கள் அடித்தட்டு மக்களுக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பையாவது வழங்கி இருந்தது.

ஆனால் அடுப்பில் இருந்து நெருப்பில் வீழ்ந்த கதையாக இலங்கையின் நிலைமை மாறி வருகின்றது. பொருளாதார நெருக்கடியில் இருந்த இலங்கை தற்போது சர்வதேச பொருளாதார பயங்கரவாதிகளின் பொறிக்குள் வீழ்ந்துகொண்டிருக்கிறது. காலிமுகத்திடல் போராட்டம் சர்வதேச நாணய நிதியத்திற்கும் உலக வங்கிக்கும் இலங்கையை தாரைவார்த்து கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது போலவே தெரிகின்றது.

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பு காலிமுகத்திடல் போராட்டத்திற்கு கொள்கையளவான ஆதரவை வழங்கிய போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அவை அனைத்துமே சர்வதேச நாணய நிதியத்த்தினதும் உலக வங்கியினதும் கொள்கைகளுக்கும் அவர்களுடைய நிபந்தனைகளுக்கும் முற்றிலும் எதிரானதாக உள்ளது. அனைத்து கடன்களையும் இரத்து செய்யுமாறு கோருவதோடு பெரு முதலாளிகளின் சொத்துக்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யக் கோருகின்றது. விவசாயிகளுக்காக மானியங்களை வழங்குவதுடன் மலையக தொழிலாளர்களின் நிலவுரிமையை உறுதி செய்யவும் கோருகின்றது. ஆனால் காலிமுகத்திடல் போராட்டம் இந்த நிபந்தனைகளைப் பற்றி எவ்வித கரிசனையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

கடன்களை திருப்பிச் செலுத்த முடியாது என இலங்கை அறிவிக்க வேண்டும்:

இலங்கை அனைத்து கடன்களையும் இரத்து செய்ய வேண்டும். கடன்களை மீளக் கட்ட முடியாது என்பதை வெளிப்படையாகக் அறிவிக்க வேண்டும் என என்னுடைய முன்னைய பதிவுகளிலும் ஆணித்தரமாகக் குறிப்பிட்டு இருந்தேன். ஏற்கனவே பல தனிப்பட்ட கடன்களை கட்ட முடியாத நிலையில் அக்கடன்களை இலங்கை இரத்துசெய்துள்ளது. ஆனால் நாடுகளுக்கு இடையிலான பன்நிலைக் கடன்களை செலுத்த முயற்சிக்கின்றனர். இக்கடன்களையும் இலங்கை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். புதிதாகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மேலும் கடன் வாங்கி, கடன்களை திருப்பிச் செலுத்த முயற்சிக்கின்றார். உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் முகவராக இயங்கும் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் நலன்களை முன்னிலைப்படுத்தவில்லை.

அவர் அமெரிக்க தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் ‘உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருவது பாதுகாப்பானதா என்று கேட்கப்பட்ட போது, “அவர்களும் காலிமுகத்திடலில் வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளலாம்” என்று குறிப்பிட்டார். அவருக்கு கேள்வியின் ஆழம் புரியவில்லை என்பதால் அதே கேள்வி திருப்பிக் கேட்கப்பட்ட போதும் ரணில் விக்கிரமசிங்க உல்லாசப் பயணிகளின் வருகையை வரவேற்று கருத்துத் தெரிவிக்கவில்லை. இலங்கை மக்கள் மீது அழுத்தங்களை இறுக்கி அவர்களை இயலாமையின் விழிம்பில் பணயம் வைத்து, தங்கள் நிபந்தனைகளுக்கு பணிய வைக்கவே அனைத்து முயற்சிகளையும் ரணிலும் – சர்வதேச நாணய நிதியமும் மேற்கொள்கின்றது.

இலங்கை ஆண்டுக்கு 7 முதல் 9 பில்லியன் டாலர்களை 51 பில்லியன் வெளிநாட்டு கடன்களை கட்டுவதற்கு செலுத்துகின்றது. அறவட்டிக்கு வாங்கப்பட்ட இக்கடன்களை தொடர்ந்தும் செலுத்தினால் பெற்றோல், மருந்து மற்றும் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான டொலர் கையிருப்பு இருக்காது. அதனால் அரசு உடனடியாக அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். கடன்களை மீளச்செலுத்துவதற்கான மீள்வரையறை செய்வது இப்போதுள்ள நெருக்கடியை சற்றுத் தள்ளிப்போடவே வழிவகுக்கும். அரசு தற்போது கூட்டு முடிவை எடுப்பதாக இல்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களின் நலனிலும் பார்க்க உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் நலனிலேயே கூடுதலாக அக்கறைகொள்கின்றார்.

‘பணவீக்கம்’ மிகத் தவறான சொற்பாவனை – விலை வீக்கம் என்பதே சரியானது:

தமிழில் தற்சமயம் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்று ‘பணவீக்கம்’ இந்தச் சொல்லானது அடிப்படையிலேயே மிகத் தவறான சொல். ஆங்கிலத்தில் இன்பிளேஷன் – inflation என்ற சொல் பொருளாதாரத்தில் மிக முக்கியமானது. அது குறித்த காலப்பகுதியில் பொருட்களின் விலையுயர்வை குறிக்கும். இன்பிளேஷன் – inflation என்பது வீக்கத்தை குறிக்கும். எமது உடலில் ஏற்படும் வீக்கம் முதல் பலூனை ஊதுவது எல்லாமே இன்பிளேயர் – inflare என்ற லத்தீன் சொல்லில் இருந்து ஆங்கிலத்திற்குச் சென்றது. ‘காற்றடித்து பெரிதாவது’ என்பதை அது குறிக்கும். இதனை தமிழில் ‘பணவீக்கம்’ என்கின்றனர். அதன் தமிழாக்கத்தின்படி வீக்கம் என்பது ‘பெரிதாவது’. அதாவது ‘பணவீக்கம்’ என்பது பணத்தின் பெறுமதி அதிகரிப்பது என்றே அர்த்தப்படும். பணத்தின் பெறுமதி அதிகரிப்பது ஒரு பொருளாதாரத்திற்கு சாதகமான விடயம். ஆனால் அதனை புரிதல் இல்லாமல் பாவிக்கின்றனர். பணவீக்கம் என்பது ஆங்கிலத்தில் அப்பிரிசியேஷன் – appreciation என்பார்கள். அதாவது பணத்தின் பெறுமதி அதிகரிப்பது. பணத்தின் பெறுமதி ஒடுங்கினால் அல்லது வீழ்ந்தால் அதனை டிப்பிரிசியேஷன் – depreciation என்பார்கள். பதங்களின் உண்மையான அடிப்படையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டு இருப்பது பணஒடுக்கமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட விலைவிக்கமும் ஆகும். இதனைப் புரியாமல் விலையுயர்வை பணவீக்கம் என்று குறிப்பிடுவதன் மூலம் பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளையே போட்டுக் குழப்புகின்றனர். பல்கலைக்கழகங்கள் இவை தொடர்பில் சொற்களஞ்சியத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.

விலைகள் ஏன் உயர்கின்றது:

ஒரு நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு: 1) பொருட்களின் சேவைகளின் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் (போக்குவரத்துச் செலவு உட்பட) விலை அதிகரிக்கின்ற போது – cost push inflation 2) பொருட்களுக்கான தேவை கேள்வி அதிகரிக்கின்ற போது – demand pull inflation 3) நாட்டின் பணத்தின் பெறுமதி வீழ்ச்சி அடையும் போது அதாவது பணஒடுக்கம் – currency depreciation ஏற்படும் போது (இறுக்குமதி செய்கின்ற) பொருட்களின் விலை அதிகரிக்கும். இலங்கையில் மட்டுமல்லாது கோவிட் தாக்கத்தில் இருந்து வெளிவரும் உலகின் பெரும்பாலான நாடுகளின் நிலை இதுவே.

கோவிட் காலத்தில் பெரும் வேலையிழப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்த்த போதும் அமெரிக்கா, பிரித்தானியா, இலங்கை போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வேலையிழப்புகள் ஏற்படவில்லை. பெரும்பாலும் சம்பளம் வழங்கப்பட்டது. மேலும் அரச உதவிகளும் மற்றும் உதவிகளும் மக்களுக்கு கிடைத்தது. ஆனால் சாதாரண காலத்து செலவீனங்கள் அளவுக்கு அவர்களுக்கு செலவீனங்கள் ஏற்படவில்லை. நாடுகள் முடக்கத்தில் இருந்ததால் செலவழிப்பதற்கான வாய்ப்பும் இருக்கவில்லை. அதனால் முடக்கத்தில் இருந்து நாடுகள் தங்களைத் திறக்க ஆரம்பித்ததும் மக்கள் தாராளமாகவே செலவழிக்க ஆரம்பித்தனர். அதனால் பொருட்களுக்கான தேவையும் கேள்வியும் அதிகரித்தது. ஆனால் நாடுகள் திறக்கப்பட்ட வேகத்திற்கு தொழிற்காலைகள் திறக்கப்படவில்லை. உற்பத்திகள் குறைந்தது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்திலும் தடங்கல் ஏற்பட்டது. குறிப்பாக உலகின் தொழிற்சாலையாக இருக்கும் சீனாவின் சில பகுதிகள் மாறி மாறி தொடர்ந்தும் முடக்கத்திலேயே இருக்கின்றது. அதனால் விநியோகத்தில் தடை அது பொருட்களின் விலையை மேலும் அதிகரித்தது. – Demand pull inflation.

கோவிட் முடிவில் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தன் மூலம் உலகில் எரிபொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டது. அனைத்து உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் எரிபொருள் தவிர்க்க முடியாதவொன்று. அதனால் பொருட்களின் விலை மேலும் எகிறியது. Cost push inflation.

ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி இன்னுமொரு நாட்டின் நாணயத்தின் பெறுமதியோடு ஒப்பிட்டே தீர்மானிக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை மத்திய வங்கி நிதி நிலையைச் சமாளிக்க ஒரு சோம்பேறித்தனமான முடிவை எடுத்தது. பணத்தை அச்சிட்டு (quantitative easing) புழக்கத்தில் விட்டது. இது பணத்தின் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையச் செய்தது. பணத்தின் பெறுமதி வீழ்ச்சியடைய பணஒடுக்கம் (currency depreciation) ஏற்பட இறுக்குமதிப் பொருட்களுக்கு நாங்கள் செலுத்தவேண்டிய பணத்தின் அளவு அதிகரித்தது. பொருட்களின் விலைவீக்கமடைந்தது (விலையுயர்வு).

இலங்கையின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகம்:

பணத்தின் பெறுமதி வீழ்ச்சி அடைவது அல்லது பணஒடுக்கம் முற்றிலும் மோசமானது அல்ல. இலங்கை ஏற்றுமதி வர்த்தகத்தை கூடுதலாக செய்யும் நாடாக இருந்திருந்தால் எமது பொருட்களின் விலை உலக சந்தையில் குறைந்திருக்கும். அதனால் ஏற்றுமதி அதிகரித்து இருக்கும். ஆனால் இலங்கை கூடுதலாக இறக்குமதியையும் மிகக் குறைந்தளவில் ஏற்றுமதியையும் செய்வதால் அதுவும் இலங்கைக்கு பாதகமானதாகி உள்ளது. ஒவ்வொரு நாடும் இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிப்பதையே செயற்திட்டமாகக் கொண்டுள்ளது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம், சீனா அமெரிக்காவினுடைய பொருட்களை இறக்குமதி செய்யும் அளவைக் கூட்ட வேண்டும் என்று அந்நாட்டோடு ஒரு வர்த்தக யுத்தத்தையே மேற்கொண்டார். உலகமயமாதல் – globalization மூலம் தங்களை வளர்த்துக்கொண்ட பெரு முதலாளித்துவ நாடுகளான அமெரிக்காவும் பிரித்தானியாவும் அவற்றின் நட்பு நாடுகளும் தற்போது அதே உலகமயமாதல் தங்களுக்கு சாதகமாக இல்லை என்றதும் திறந்த சந்தைப் பொருளாதாரத்தோடு (open market economy) தங்கள் நாடுகளில் பொருளாதார பாதுகாப்பு கொள்கையை (protectionism) கொண்டு வருகின்றனர். அவர்கள் கோருவதெல்லாம் தாங்கள் உலகெங்கும் சென்று சுரண்டுவதற்கான உரிமையை மட்டுமே. ஆனால் ஆசிய, ஆபிரிக்க நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் பொருட்களை கொண்டுவரக்கூடாது.

அதனால் சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் இலங்கை போன்ற நாடுகள் ஏற்றுமதி செய்வதை செய்வதை ஒரு போதும் ஊக்கப்படுத்தாது. அவர்களை இறக்குமதியாளர்களாகவும் கடன்காரர்களாகவுமே வைத்திருக்கும். சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த 1970க்களில் கொண்டுவரப்பட்ட கடுமையான தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கையால் 1977இல் மட்டும் இலங்கையில் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் ஏற்றுமதி கூடுதலாக இருந்தது. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் சக 3.6 வீதமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் 1980இல் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக விகிதாசாரம் சய (எதிர்மறையானது) 22.5 வீதமானது. இன்று வரை இந்த ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக விகிதாசாரம் எதிர்மறையாகவே உள்ளது. தற்போது இது சய மூன்று வீத்திலும் குறைந்திருக்கும்.

இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை நாங்கள் பயப்படும் அளவுக்கு ஆபத்தானது அல்ல. இச்சூழலை சாதகமாக்கவும் வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த வெளிநாட்டவர், தற்போது உலகம் சுற்ற விரும்புகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள நாணய ஒடுக்கும் அல்லது நாணயத்தின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இலங்கையின் உல்லாசப் பயணத்துறைக்கு ஒரு வரப்பிரசாதம். இலங்கைக்கு அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் முக்கியமான துறை இது. போராடுகிறோம் என்ற பெயரில் சர்வதேச நாயண நிதியத்திற்கும் உலக வங்கிக்கும் நாட்டை தாரைவார்க்காமல், எங்கள் நாட்டுக்கு வந்து குறைந்த செலவில் எம் நாட்டின் அழகை ரசியுங்கள். எங்கள் கலை கலாச்சாரங்களை அறியுங்கள் என்று உல்லாசப் பயணிகளுக்கு செங்கம்பள வரவேற்பளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு போராடுகிறோம், எரிக்கிறோம், கொழுத்துகிறோம் என்பதெல்லம் கஞ்சி ஊத்தாது.

இப்பொருளாதார நெருக்கடியை ஒவ்வொருவரும் நாட்டிற்கு சாதகமானதாக்க வேண்டும். நாட்டினை தற்சார்புப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்த வேண்டும். உள்ளுர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அதரிக்கப்பட வேண்டும். தரமாக்கப்பட வேண்டும். அத்தியவசியமற்ற சர்வதேச பொருட்களை கொக்கோ கோலா முதல் பஜ்ரோ வரை மக்கள் நிராகரிக்க வேண்டும். இவற்றின் இறக்குமதிகள் தடுக்கப்பட வேண்டும். ‘மேட் இன் சிறிலங்கா – made in Sri Lanka’ என்ற சொல்லுமளவிற்கு பல்கலைக்கழகங்கள் உள்ளுர் உற்பத்தியை நோக்கி நாட்டை நகர்த்த வேண்டும்.

யாழ் பல்கலைக்கழக உப வேந்தரின் ஆதங்கம்:

இது பற்றி யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ் சற்குணராஜா தனது ஆழமான விசனத்தை வெளிப்படுத்தி உள்ளார். தமிழ் அரசியல் தலைவர்களை பிச்சைக்கராரர் என்றும் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை ‘கொழும்பு செவன்’ இறக்குமதி என்றும் கடுமையாகத் தாக்கி உள்ளார். வடக்கு – கிழக்கு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் ஒருவர் இவ்வளவு துணிச்சலாக தனது கருத்தை வெளிப்படுத்தி இருப்பது இதுவே முதற் தடவை என நினைக்கிறேன். சில வாரங்களுக்கு முன் அவர் ஆற்றிய உரையில்: “இப்போது வோஷிங்டனில் இருந்து பத்தரமுல்ல வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் ஆண்களோ பெண்களோ most of them GCE(O/L) qualified இல்லை. அவர்களால் எப்படி எங்களை lead பண்ண இயலும். blind serve the blind என்று சொல்வார் என்னுடைய மாஸ்டர். நாங்கள் தான் எங்களை lead பண்ண வேண்டும். எங்கட பலம் strength என்ன என்று பார்க்க வேண்டும். எங்களுடைய பலவீனம் weakness என்ன என்று பார்க்க வேண்டும். எங்கட தமிழ் கலாசாரத்தில தமிழ் கலாசாரத்தில, சுதந்திரத்தைப் பற்றி கதைக்கிறத விட துரோகிய பற்றி கதைக்கிறதுதான் கூட. Parliment வேண்டாம் pajero வேண்டாம் permit வேண்டாம் extra disel வேண்டாம் என்றெல்லாம் சும்மா சொல்றது. எங்களுடைய அரசியல்வாதிகள் எல்லாம் beggars (பிச்சைக்காரர்கள்). ஏன் நீங்கள் பங்ளோவில இருக்கிறியல்.

இன்றைக்கு ஆயிரம் விதவைகள் இருக்கிறார்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம். Women lead families எங்களிடம் ஒரு பிளானும் இல்ல. நாங்கள் அடுத்த மாகாண சபை வருதென்றால் உடனே வேர்த்து விறுவிருத்து statementவிடத் தொடங்கிடுவோம். மோடி, அம்பேத்கர் அவங்க தங்கட ambassador இல்ல வாராங்க. நாங்க அந்நியத்தை நாடுறம்.

இன்றைக்கு மினி யாழ்ப்பாணம் எங்கிருக்கு. வெள்ளவத்தையில் இருக்கு. விட்ட நிலத்தில் சீவிக்க ஆட்களில்லை. எங்களுக்கு நாட்டம் அங்க. கொழும்பு செவன் வடக்கையும் கிழக்கையும் கண்டுகொள்ளயில்ல. ஆனால் எங்களுடைய weakness ஆடி… அடி… அடி… அடிச்சால் எல்லாத்தையும் weak ஆக்கிக் கொடுத்தால் எதிரிக்கு சுகம். இப்ப நாங்கள் politicianனையும் கொழும்பில் இருந்து import பண்ணற அளவுக்கு போய்ட்டம். நாங்க அந்நியத்தை நாடினால் என்ன நடக்கும்? இப்ப இருக்கும் economic இந்த problem எங்க கொண்டு போய் முடிக்கும் என்று தெரியாது. ஒருவர் ஒருவர் அடிச்சுக் கொல்லலாம், இன்னும் கொஞ்ச நாளில். Body guard போட்டுத் தடுக்க இயலாது. நடக்கலாம். இதெல்லாம் கன நாடுகளில் நடந்திருக்கு. இப்படியே போனால் என்ன நடக்குமோ எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு மார்ட்டின் லூதர் கிங் வேணும். மொரார்ஜி தேசாய் வேணும். மாவோ சேத்துங் வேணும், லெனின் வேணும்” என்று தமிழ் மக்களிடம் சீரான ஒரு அரசியல் தலைமையில்லாத ஆதங்கத்தைக் கொட்டினார்.

துணைவேந்தர் எஸ் சற்குணராஜா தொடர்ந்தும் குறிப்பிடுகையில்: “எத்தனை சாம்ராஜ்யங்கள் உலகத்தில் இருந்திருக்கு. பாபிலோனியா சாம்ராஜ்யம். இன்றைக்கு பாருங்கள் ஈராக் எப்படி இருக்கிறதென்று? எகிப்திய சாம்ராஜ்யம் எப்படியிருக்கு? இன்றைக்கு பிரிட்டன் மூன்றாம் உலக நாடாக போயிருக்கும், Northsea oil கண்டுபிடிக்காட்டி. நாம் deserving ஆக இருந்தால் எம்மை யாரும் அடிமைப்படுத்த இயலாது. இது natural law. இதில் பெண் என்றால் என்ன? ஆண் என்றால் என்ன?

சுதந்திர சரித்திரத்தை இவர்கள் சுதந்திரத்திற்கு பின்தான் கதைக்கிறார்கள். எமக்கு 2000 ஆண்டு 3000 ஆண்டு history இருக்கிறது. நல்லுரடிக்கு போனால் ஆட்கள் தரிசனத்திற்கு போகிறார்கள். பெரிய பெரிய தலங்களுக்கு எல்லாம் தரிசனத்திற்கு போகிறார்கள். ஆனால் அதில பிச்சைக்காரரகள் எப்பொழுதும் அங்கு இருக்கிறார்கள். 24 மணித்தியாலயமும். ஆனால் அவர்களுக்கு ஏதாவது ஆத்ம சித்தி கிடைத்ததா என்றால் இல்லை. 24 மணித்தியாலயமும் அந்தத் தளத்தில் இருக்கிறார்கள். ஏன் என்றால் அவர்களின் சிந்தனை முழுவதும் ரொட்டித் துண்டும் பிளேன் டீ யும். உயர்ந்த சிந்தனை இல்லை. Vision தான் முதல் எங்களுடைய பலம். எங்களுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. எங்களுக்கு ஒரு கலை இருக்கு, எங்களுக்கு ஒரு அழிவில்லா மொழி இருக்கு. அழிவில்லாத மொழி எங்களுக்கு. அப்படி பொக்கிஷங்கள் இருக்கு. இன்றைக்கு எங்களுக்கு knowledge நிறைய வேணும்” என்று சொல்லி தமிழ் மக்களில் மாற்றத்தை வேண்டி எஸ் சற்குணராஜா தன்னுரையை முடித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அமைச்சர்கள் காலிமுகத்திடல் போராளிகள் உட்பட அனைவரும் ஒரே குரலில் சிறிலங்கா பெஸ்ற் – Sri Lanka First, ருறிஸ்ற் ஹம் ஹோம் – Tourists Come Home, மேட் இன் சிறிலங்கா – Made in Sri Lanka என்ற கோசங்களை முன் வைக்க வேண்டும். எந்தக் கடனையும் மீளச் செலுத்த முடியாது என அறிவிக்க வேண்டும். இலவசக் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் அந்நாட்டை தோள்களில் தாங்கக் கூடிய கல்விச் சமூகத்தை உருவாக்க வேண்டுமெயொழிய பட்டத்தை பெற்றபின் வேலையையும் வாங்கித் தரச்சொல்லி போராடும் சோம்பேறிக் கூட்டத்தை உருவாக்கக் கூடாது. அப்படிச் செய்தால் நிச்சயம் இலங்கை சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிச் செல்லும்.

Show More
Leave a Reply to BC Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • BC
    BC

    தெளிவான பார்வை.

    Reply