கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கம் வாகனங்களைக் குறைக்கும் நோக்கில்; ‘சிட்டி லைனர்’ சொகுசு பஸ் சேவை இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தென் பகுதியிலிருந்து கொழும்புக்குள் வரும் தனியார் வாகனங்களை மொரட்டுவ விசேட பார்க் என்ட் ரைட் வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு ‘சிட்டி லைனர’ என்ற இணைப்பு சொகுசு பஸ் சேவையூடாக கொழும்புக்குள் வரும் புதிய நடைமுறை இன்று முதல் அமுல்படுத்தப்படும்.
காலி வீதி மொரட்டுவ கட்டுபெத்த இலங்கை போக்குவரத்துச் சபை பயிற்சிக் கல்லூரிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பார்க் என்ட் ரைட் வாகன தரிப்பிடத்தையும் இலங்கை போக்குவரத்துச் சபையில் சிட்டி லைனர் சொகுசு பஸ் சேவையையும் இன்று காலை அமைச்சர் டளஸ் அழகபெரும திறந்து வைத்தார்.
இந்த வாகனத் தரிப்பிடத்தில் ஒரே நேரத்தில் 150 வாகனங்களைத் தரித்து வைக்கக்கூடிய வசதிகள் உள்ளன. இங்கு எவ்விதக் கட்டணங்களும் அறவிடப்படமாட்டா. இந்த ‘சிட்டி லைனர்’ இணைப்பு சொகுசு பஸ் சேவை கொழும்புக் கோட்டைக்கும் மொரட்டுவைக்கும் இடையில் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை சேவையிலீடுபடுத்தப்படும். தேவையேற்படும் பட்சத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இச்சேவையை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.