நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் பதவி விலகினர்.
இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது. பின்னர் அடுத்தடுத்து கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54 பேர் ராஜினாமா செய்தனர். இதனால், போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி அதிகரித்த நிலையில், இன்று தனது பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ளார். புதிய பிரதமரை கட்சி விரைவில் தேர்ந்தெடுக்கும் என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எவ்வாறாயினும் அக்கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்படும் வரை தாம் பிரதமராக நீடிப்பதாக பிரித்தானிய பிரதமர் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் பல உலகத்தலைவர்களும் தங்களுடைய கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பல தலைவர்களும் பிரெக்ஸிட் வெளியேற்றத்தை காரணம் காட்டி தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இதே நேரம் உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர், மைக்கைலோ போடோலியாக் இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது” “ஏவுகணைத் தாக்குதல்கள் இருந்தபோதிலும், கியேவுக்கு முதலில் வந்தவர் ஜோன்சன். எப்போதும் உக்ரைனை ஆதரிப்பதில் முன்னணியில் இருப்பதற்காக அவருக்கு நன்றி” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா செய்தியாளர்களிடம் தெரிவித்த போது “திரு. ஜான்சன் அவரால் ஏவப்பட்ட பூமராங்கால் அவரே தாக்கப்பட்டார்” என்றும் இந்த கதையின் முடிவு “ரஷ்யாவை அழிக்க முயலாதே” என்பதே என்றும் கூறினார்.