2022 ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து சுமார் 1500 மருத்துவர்கள் வெளியேறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த புள்ளிவிபரங்கள் மிகச்சரியானவை என்றும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற முற்படும் போது பெறப்படும் இலங்கை மருத்துவ கவுன்சிலின் (SLMC) “சான்றிதலுக்கான ” விண்ணப்பங்களில் இருந்து இந்த புள்ளிவிபரங்கள் பெறப்பட்டன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எம்.பி.யின் கூற்றுப்படி,
புள்ளிவிவரங்கள் பின்வருமாறு:
ஜன: 138
பிப்: 172
மார்ச்: 198
ஏப்: 214
மே: 315
ஜூன்: 449
தெரிவித்துள்ளார்.
………..
இங்கு தனித்து வைத்தியர்களுக்கு மட்டுமல்ல. முழு நாட்டுக்கும் பொருளாதார நெருக்கடி தான். எல்லோருமே நாட்டை விட்டு தப்பித்து ஓட முடிவெடுத்தால் நாட்டை முன்னோக்கி நகர்த்துவது எப்படி ..?
இவர்கள் இலவசமாக இலங்கையின் பல்கலைக்கழகங்களில் கற்று மருத்துவர்கள் ஆனவர்கள் தான். படிக்கும் காலத்தில் ஏதேனும் தடை ஏற்பட்டிருந்தால் நாட்டை விட்டு போயிருப்பார்களா..? என்ற கேள்வியும் கேட்கப்பட வேண்டிய தேவை உள்ளது.
இலங்கையின் சாதாரண மக்களை விட இந்த வைத்தியர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுக்கொண்டே உள்ளன. எரிபொருள் வரிசைகளில் கூட சாதாரண மக்கள் பல நாட்கள் காத்திருக்க இவர்களுக்கு இலகுவாக பெட்ரோல் கிடைக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நெருக்கடியான நேரத்தில் இதனை விட வேறு என்னதான் செய்ய முடியும்..?
உண்மையிலேயே ஏனையவர்களை விட இலங்கையில் இலவசக் கல்வி மூலமாக கல்வி கற்று வைத்தியரான இவர்கள் இன்னும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியவர்கள். வைத்தியர்கள் மட்டுமல்ல. உயர்கல்வி கற்று வெளிநாடுகளுக்கு தப்பியோட நினைக்கும் ஒவ்வொரு கல்விமான்களுமே சுயநலவாதிகள் தான். சந்தர்ப்பவாதிகள் தான்.
அண்மையில் யாழ். பல்கலைக்கழககத்தில் மருத்துவ துறையில் கற்கும் இறுதிவருட மாணவன் ஒருவரை யாழ்ப்பாண வைத்தியசாலையின் முன்புள்ள உணவகம் ஒன்றில் சந்தித்த போது நடைமுறை பிரச்சினைகள் பற்றி பேசிக்கொண்டு இருந்த போது ” இது என் நாடு. வாழ்வோ சாவோ இங்கேயே வாழ்ந்து விடுவது என்பதே தீர்வு.” என கூறினார் அந்த மாணவர்.
இப்படியான மனிதர்கள் இருப்பதாலேயே இன்னமும் நமது நாட்டின் இலவச சேவைகளின் தரம் குறையாது உள்ளது.