படையினர், போர் சட்டவிதிமுறைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே தமது இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் போர்ச் சட்டத்தை மீறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்று விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளதாக ராய்ட்டர் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் அவ்வியக்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அச்செய்திச் சேவையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது விடுதலைப் புலிகளின் மேற்படி குற்றச்சாட்டினை பாதுகாப்பு தரப்பு என்ற ரீதியில் நாம் முற்றாக மறுக்கின்றோம். வன்னியில் இடம்பெயர்ந்துத் தங்கியுள்ள பொதுமக்கள்மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பொறுப்பாளர். நடேசன் தெரிவித்துள்ளார்.
ஆயினும் இந்தக் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை. பொதுமக்களுக்கு சேதம் எற்படும் வகையில் படையினர் தமது இராணுவ முன்னெடுப்புக்களை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை. வன்னியில் சிக்குண்டுள்ள பொதுமக்களைக் கருத்திற் கொண்ட பிறகே அவர்கள் தாக்குதல்களை நடத்துகின்றனர். இதனால் படையினரின் தாக்குதல்களின் போது பொதுமக்களுக்கு எவ்விதச் சேதமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.
ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் வன்னியிலிருந்து வரும் பொதுமக்களை படையினர் மிகவும் அன்போடுதான் வரவேற்று வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் படையினராலேயே வழங்கப்பட்டு பின்னர் தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அம்மக்களுக்குத் தேவையான பாதுகாப்பினை வழங்குவதிலும் படையினர் பின்வாங்கவில்லை. அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கச் சென்றதில் இராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்துள்ளனர் என்பதையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும். இராணுவத்தினர் போர் சட்டத்திற்கு மதிப்பளித்து தமது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் விடுதலைப் புலிகள் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. அவர்களே பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பாவிப் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.