துவேஷப் பேச்சு தொடர்பாக வருண் காந்தி மீது இரண்டு கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதைக் காரணம் காட்டியும், தேர்தல் ஆணையம் அவரை போட்டியிடுவதிலிருந்து தடை செய்ய முடியாது. காரணம், அவர் கோர்ட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட் மூலம் 2 ஆண்டுகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே தற்போதைய சட்டப்படி தேர்தலில் நிற்க தடை விதிக்க தேர்தல் ஆணையத்தால் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவுக்கு அறிவுரை மட்டுமே கூறும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. அதை அமல்படுத்த அது முடியாது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. மேலும், தேர்தல் ஆணையம் அதிகபட்சம் பாஜகவின் தேர்தல் சின்னத்தை பிலிபித் தொகுதியில் முடக்கி வைக்க முடியும். அது கூட கடைசிக் கட்ட முயற்சியாகவே இருக்கும் என்கிறார்கள். அப்படிச் செய்வதற்கு தேர்தல் ஆணையம் அவசரப்படாது என்றும் கூறப்படுகிறது.