திரு கோணமலையிலுள்ள பேக்கரி ஒன்றில் பாண் மற்றும் பணிஸ் போன்ற மாப்பண்டங்களை உட் கொண்டு பாதிக்கப்பட்டவர்களில் ஐவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக திருமலை பொது வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் அனுஷியா ராஜ்மோகன் நேற்றுத் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் நேற்று காலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த ப்பட்டதுடன், அச்சடலத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் உடற்கூற்றியல் பிரிவுக்கு அனுப்பிவைக்கப் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், பாண் மற்றும் பணிஸ் உட் கொண்டதால் பாதிக்கப்பட்ட 148 பேர் நேற்று முன் தினம் சிகிச்சைக்காக வந்தனர். இவர்களில் 89 பேர் மாணவ/மாணவியராவர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஐவர் தான் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் இருவர் சிறுவராவர். இதர மூவரும் மீனவர்கள். ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்.