‘மோதல் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை இந்தியா வரவேற்கும்’- சிவ்சங்கர் மேனன்

menon.jpgஇலங்கையில் வடபகுதியில் மோதல் நடக்கும் இடங்களில் தாக்குதல்களை இடைநிறுத்தி அங்கு அகப்பட்டுள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதாக இலங்கை அரசாங்கம் கூறியிருப்பதை இந்தியா வரவேற்பதாக இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் டெல்லியில் தெரிவித்திருக்கிறார்.

மோதல் பகுதிகளில் அகப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கில், ஒரு தாக்குதல் நிறுத்தம் உட்பட பல வழிவகைகள் குறித்து ஆராய தாம் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியிருப்பதாக அண்மையில் வரும் செய்திகளை இந்தியா வரவேற்கின்றது என்றார் சிவ்சங்கர் மேனன்.

இந்திய பிரதமரின் முதன்மைச் செயலர் ரி.கே.ஏ. நாயர் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சிவ்சங்கர் மேனன் அவர்கள், அவருடைய விஜயம் மிகவும் சிறப்பாக அமைந்தது என்று கூறினார்.

நம்பகத்தன்மையுடனான ஒரு அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய ஒரு அரசியல் திட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக கொண்டுவரவேண்டும் என்பது குறித்து முக்கியமாக அந்த விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தரப்பினருடன் நாயர் அவர்கள் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை, போரில் அகப்பட்டுள்ள மக்களுக்கான மனித நேயப் பணிகள் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் அவர் இலங்கை அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் விவாதித்ததாகவும் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *