புதுமாத்தளன் பகுதியிலுள்ள அவசரமாக சிகிச்சை பெற வேண்டிய நோயாளர்கள் மற்றும் காயப்பட்டவர்களை புல்மோட்டைக்கு அழைத்துவரும் நோக்கில் புறப்பட்ட சேருவில கப்பல் சீரற்ற காலநிலை காரணமாக திரும்பிவிட்டது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு திருகோணமலையிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வழித்துணையுடன் சேருவில கப்பல் சென்றது. இக்கப்பல் நேற்று காலை 7 மணியளவில் புதுமாத்தளன் கரையை அடைந்ததாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதார பணிப்பாளர் டாக்டர் ரி. வரதராஜா தெரிவித்தார்.
எனினும், காலநிலை சீரின்மையால் கடல்கொந்தளிப்பையடுத்து நோயாளர்களையும் காயப்பட்டவர்களையும் கப்பலில் ஏற்றுவது சிரமமானதென்பதால் அக்கப்பல் பிற்பகல் 2 மணிக்கு திருமலை நோக்கி புறப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, புதிதாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை இக்கப்பலில் கொண்டுவரப்படும் அவசர மேலதிக சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவோருக்கென புல்மோட்டை கள வைத்தியசாலை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.