ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி

ஐ.தே.க கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த்..? – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியது என்ன..?

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார் என நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில்  தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க குறித்த விடயத்தை தெரிவித்தார்.

 

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டு வருகிறார். குறித்த கூட்டத்தில் இதுவரை காலமும் கட்சியின் ஆதரவாளர்களாக உறுப்பினர்களாக இருந்த பலரும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அமைப்பாளர் ஒருவரை இன்னும் உத்தியோகப்பூர்வமாக தெரிவு செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐ.தே.க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த மறுசீரமைப்புகள் தொடர்பில் இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக தீர்மானங்கள் எடுக்கப்பட வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, தனது யாழ்ப்பாண விஜயத்தில் அங்கஜன் ராமநாதன் கூட இருப்பார் என்றும், உத்தியோகப்பூர்வ நியமனங்கள் வழங்குவதற்கு முன்னர் எதிர்ப்புகள் காணப்படுமாயின் அவை கருத்தில் கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

“தற்போதைய தேவை அரசியலமைப்பு மாற்றமல்ல. பொருளாதார முன்னேற்றம்.”- ஐக்கிய தேசியக் கட்சி

இத்தருணத்தில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் தீர்வு காணும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியின் போது அரசியலமைப்பின் 19, 20 அல்லது 21வது திருத்தத்தை மக்கள் விரும்பவில்லை என பாராளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,

மாறாக, மக்கள் வாழ்வதற்கான உரிமையை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். ஒரு பொதுவான போராட்டத்தின் போது சில அரசியல் கட்சிகள் தங்கள் தனிப்பட்ட நலன்களை மேம்படுத்த முயற்சிக்கின்றனர்.

மக்களுக்கு எரிவாயு, எரிபொருள், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இன்னும் சீராக வழங்கப்படவில்லை. ஒரு சிலிண்டரின் விலை 2,650 ரூபாவாக இருந்த போதிலும், முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க நான்கு வருடங்களுக்கு 1,650 ரூபாவிற்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் தனது பதவிக்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கான நிலையான விலையை உறுதி செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகுகிறார் அர்ஜுன ரணதுங்க !

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இன்றுடன் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அறிவித்துள்ளார்.

அதற்கான கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரிடம் அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈ.பி.டி.பி ஆதரவுடன் காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினர் அப்பாத்துரை தெரிவு !

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினர் அப்புத்துரை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் பிரதேச சபையின் முன்னாள்  தவிசாளர் இதய நோய் தாக்கத்தினால் உயிரிழந்துள்ள நிலையில் காரைநகர்  பிரதேச சபை தவிசாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.

காரைநகர்  பிரதேச சபை தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு இன்று (புதன்கிழமை) உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில்  இடம்பெற்றது

குறித்த அமர்வின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் பாலச்சந்திரன் போட்டியிட இருந்த போதிலும் அவருக்கு ஏனைய கட்சிகள் ஆதரவு அளிக்காத நிலையில் சுயேச்சை குழு கட்சியை சேர்ந்த ஒருவர் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டு ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவுடன் சுயேட்சை குழு  உறுப்பினர் அப்புத்துரை  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தவிசாளர் தெரிவு விசேட அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளதோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நடுநிலை வகித்துள்ளனர்

காரைநகர்  பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மூன்று உறுப்பினர்களும் சுயேட்சை குழுவில் மூன்று உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் இரண்டு உறுப்பினர்களும்,ஈபி டி பியில் இருவரும்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் ஒருவரும் உள்ள நிலையில் ஈபிடிபியின் ஆதரவுடன் சுயேட்ச்சை குழுவானது தவிசாளர் பதவியினை கைப்பற்றியுள்ளது.

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வாருங்கள் – ஐக்கிய மக்கள் சக்தியிடம் ரணில் வேண்டுகோள் !

ஐக்கிய மக்கள் சக்தியால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை முழு அரசுக்கும் எதிரான பிரேரணையாக மாற்றப்பட வேண்டும்.” என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கட்சித் தலைமையமான சிறிகொத்தாவில் நேற்று (15) நடைபெற்ற கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அரசில் தனி நபர் ஒருவருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையானது அரசில் உள்ள தரப்பினரை ஒற்றுமையடையச் செய்யும் வகையிலானதாகவே அமையும்.

எவ்வாறாயினும் தனி நபருக்கு எதிராக அன்றி ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முழு அரசுக்கும் எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர வேண்டும்.

இதற்கமைய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அரசுக்கு எதிரான பிரேரணையாக ஐக்கிய மக்கள் சக்தி மாற்றியமைக்க வேண்டும் – என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசன்னமில்லாத இலங்கை வரலாற்றின் முதல் பாராளுமன்ற அமர்வு!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர்கூட இன்றி நாளை (20.08.2020)(வியாழக்கிழமை) நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.இந்த நிலையில், இலங்கையில் வரலாற்றில் முதன் முறையாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர்கூட இன்றி இடம்பெறும் முலாவது நாடாளுமன்ற அமர்வாக நாளைய அமர்வு அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முதற்பாராளுன்றில் டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியுடன் தொடங்கி ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தல்களிலும் கணிசமானளவு பிரதிநிதிகள் இக்கட்சி மூலம் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

9ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எவரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை

எவ்வாறிருப்பினும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கு ஒருவருக்கு வாய்ப்பு காணப்பட்டது.

எனினும் பொதுத் தேர்தல் நிறைவடைந்து இரு வாரங்கள் கடந்துள்ள போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்  குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் இதற்கான தீர்வினைக் காண எதிர்பார்த்துள்ளதாகவும் இறுதி தீர்மானம் எடுத்ததன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஸ்திரமானதொரு தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.