கிம் ஜாங் உன்

கிம் ஜாங் உன்

‘உலகின் மிக சக்திவாய்ந்த அணுசக்தியை வைத்திருப்பதே எனது நாட்டின் இறுதி இலக்கு.” – கிம் ஜாங் உன்

அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி வருகிறது. பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா இதனை செய்து வருகிறது. இதனை தொடர்ந்து ஏவுகனை சோதனையில் ஈடுபட்ட பல ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

இதனிடையே, உலகின் மிக சக்திவாய்ந்த அணுசக்தியை வைத்திருப்பதே தனது நாட்டின் இறுதி இலக்கு என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் செய்தி வெளியிட்டுள்ளார். நாட்டின் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் சோதனையை கிம் ஆய்வு செய்த பின்னர், வெள்ளியன்று அமெரிக்க அணு ஆயுத அச்சுறுத்தல்களை அணு ஆயுதங்கள் மூலம் எதிர்கொள்வதாக உறுதியளித்த பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

மேலும் அவர், தற்போது சோதனை செய்யப்பட்டுள்ள ஏவுகணை உலகின் வலுவான மூலோபாய ஆயுதம் என்று கூறினார். இது வட கொரியாவின் உறுதியையும், இறுதியில் உலகின் வலிமையான இராணுவத்தை உருவாக்கும் திறனையும் நிரூபிப்பதாக கூறினார். வட கொரிய விஞ்ஞானிகள் “பாலிஸ்டிக் ஏவுகணைகளில் அணு ஆயுதங்களை ஏற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஒரு அற்புதமான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர் என்று கிம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மீது நாமும் அணுஆயுத தாக்குதல் நடத்துவோம் – வடகொரிய அதிபர் எச்சரிக்கை!

அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் எச்சரித்துள்ளார்.

அணு ஆயுதங்களை அணு ஆயுதங்களோடு சந்திப்போம் என்றும் தாக்குதல்களை எதிர்கொள்வோம் என்றும் அமெரிக்காவுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக தலைநகர் பியான்யாங்கில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை அவர் நேரில் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் வடகொரியா மீதான வெறுப்புப் பார்வை மாறப்போவதில்லை” – வடகொரிய ஜனாதிபதி

அமெரிக்கா தான் தங்களது மிகப்பெரிய எதிரி எனக் கூறிய வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் “அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் வடகொரியா மீதான வெறுப்புப் பார்வை மாறப்போவதில்லை” என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையேயான பூசல் பலகாலமாக அனைவரும் அறிந்ததே.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் வரும் 20ம் திகதி ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில், வடகொரிய ஜனாதிபதி கிம்மின் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இது தொடர்பாக கொரிய மத்திய செய்தி ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

வடகொரியா மீது வாஷிங்டன்னின் பார்வையில், கொள்கையில் ஒருநாளும் எந்த ஒரு மாற்றமும் வரப்போவதில்லை. ஆகையால் எதிரிகளை சமாளிக்கும் வகையில், அணுஆயுதங்கள், ஸ்பை செயற்கைகோள்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் என அனைத்தையும் அதிகளவில் தயாரித்து இருப்பில் வைக்க வேண்டும்.

நமது அரசியல் கொள்கை நம்முடைய புரட்சிகரமான வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கும் அமெரிக்காவை சமாளிக்கும் வகையில் அமைய வேண்டும்.

இவ்வாறு கிம் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2019ல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் நேருக்கு நேர் சந்தித்துப் பேசினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உணவு பற்றாக்குறையை தீர்க்க மக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் நாய்களை ஒப்படைக்க வேண்டும் – வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்

நாய் இறைச்சி அற்புதமான உணவு என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். மேலும் செல்லப் பிராணியான நாய்களை கொன்று அதை இறைச்சியாக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

வடகொரியாவில் உள்ள 2.55 கோடி மக்களில் 60 சதவீதம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்று ஐ.நா. சபை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. வடகொரியாவில் உணவுப்பற்றாக்குறை பிரச்சினை காரணமாக நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் மீது நாட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் உணவு பற்றாக்குறை குறித்து வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் வடகொரியாவில் இறைச்சி பற்றாக்குறை காரணமாக மக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் நாய்களை ஒப்படைக்க வேண்டுமென ஜனாதிபதி கிம் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாயின.

இதை தொடர்ந்து அதிகாரிகள் செல்லப் பிராணியான நாய்களை வளர்க்கும் வீடுகளை கண்டறிந்து, அவற்றை ஒப்படைக்கும்படி கட்டாயப்படுத்தியும், பலவந்தமாக பறிமுதல் செய்தும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பறிமுதல் செய்யப்படும் நாய்களில் சில நாய்கள் அரசு நடத்தும் உயிரியல் பூங்கா அல்லது இறைச்சி உணவகங்களுக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

வடகொரியா அணு ஆயுத தயாரிப்பு நாடு என்பதால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் 1990-களின் மத்தியில் உணவுப் பஞ்சத்துக்கு மட்டும் 30 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது மீண்டும் அங்கே உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான் செல்லப் பிராணிகளை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி கிம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நாய் இறைச்சியை அருமையான உணவு என்றும், அது பாரம்பரியமான எதிர்ப்பு சக்தியை உடலுக்குத் தருகிறது என்றும் ஜனாதிபதி கிம் கூறியுள்ளார். எனவே நாய்களை கொன்று அதை இறைச்சிக்காக தருமாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் கோழி, மாடு, பன்றி இறைச்சியை விட அதிக வைட்டமின்கள் நாய் இறைச்சியில் இருப்பதாகவும் ஜனாதிபதி கிம்  தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மனித உடலில் உள்ள குடலுக்கு நாய் இறைச்சி அதிக நன்மையைத் தருவதாகவும் கிம் குறிப்பிட்டுள்ளார்.

கிம் ஜாங் உன்னின் அறிவிப்பு ஒரு பக்கம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தினாலும், சிலர் நாய் இறைச்சியை விரும்பி சாப்பிடுகின்றனர். அதை சுவையான இறைச்சி என்றும் அழைக்கின்றனர். மேலும் நாய் இறைச்சியை அதிகம் சாப்பிடுமாறு அவர்கள் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

வட கொரியாவில் நாய் இறைச்சி உணவு என்பது மிகவும் பிரபலமான உணவு வகையாகவும் கருதப்படுகிறது. ஆனால் செல்லப் பிராணிகளை அடித்துக் கொன்று அதை இறைச்சியாக்குவதுதான் வேதனை என்று சிலர் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் வட கொரியாவின் அண்டை நாடான, தென் கொரியாவில் செல்லப் பிராணியான நாய்களைக் கொல்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.