குடியுரிமை

குடியுரிமை

பிரித்தானியாவில் பதிவுகள் இல்லாமல் 1.2 மில்லியன் பேர்: இவர்ளைப் பதிவு செய்ய பொதுமருத்துவர்கள் முன்வருகின்றார்கள் இல்லை!!!

பிரித்தானியாவில் குடியுரிமை மற்றும் ஆவணங்கள் ஏதும் இன்றி 1.2 மில்லியன் பேர் இருப்பதாகவும், 80வீதமான பொது மருத்துவர்கள் இவர்களை தங்கள் மருத்துவ மையத்தில் பதிவு செய்ய மறுக்கின்றனர் எனவும் தெரியவருகின்றது. தற்போது மிக வேகமாக பரவி வருகின்ற டெல்டா வெரியன்ரும், இனி வரும் குளிர் காலத்தில் ஏற்படப் போகும் வைரஸ் தொற்றுக்களாலும் இந்த மக்கள் பிரிவினர் கூடுதலாகப் பாதிக்கப்படுவர் என அஞ்சப்படுகின்றது.

தற்போதைய கொன்சவேடிவ் அரசு குடிவருவோருக்கு எதிராக கடந்த பல ஆண்டுகளாக கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்ததால்; வீடுவாடகைக்கு விடுபவர்கள் முதல் பொதுமருத்துவர்கள் வரை உள்துறை அமைச்சின் முகவர்கள் போலவே செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டனர். தற்போது பொது மருத்துவர்களுக்கு அவ்வாறான நிர்ப்பந்தங்கள் எதுவும் இல்லாத போதும், பொது மருத்துவர்கள் குடிவரவுப் பத்திரங்கள் இல்லாதவர்களை தங்கள் சுகாதார மையங்களில் பதிவு செய்ய மறுக்கின்றனர்.

தற்போது ஜெனரல் மெடிக்கல் கவுன்சில் குடிவரவு பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாதவர்களையும் பொது மருத்துவர்கள் தங்கள் மருத்துவ சுகாதார மையங்களில் பதிவுசெய்து; அவர்களுக்கான கோவிட் வக்சினை வழங்குமாறு வலியுறுத்தி வருகின்றது. அரசும் பொது மருத்துவர்கள் எவ்வித குடிவரவு மற்றும் ஆவணங்கள் இல்லாமலேயே பொதுமருத்துவர்கள் தங்கள் மையங்களில் யாரையும் பதிவு செய்யலாம் என்பதையும் வலியுறுத்தி உள்ளது. அரசுக்கு எத்தனை பேர் கோவிட் வக்சீன் போட்டுள்ளார்கள் என்று தெரியுமே அல்லாமல் எத்தனை பேர் வக்சீன் போட்டுக் கொள்ளாமல் உள்ளனர் என்ற விபரம் தெரியாது.

மேலும் பொது மருத்துவர்களின் கீழ் பதிவு செய்பவர்களின் விபரங்கள் குடிவரவுத் திணைக்களத்துடன் பரிமாறப்படாது என்ற உறுதியையும் ஜெனரல் மெடிகல் கவுன்சில் வழங்கி உள்ளது. மேலும் ஆவணங்கள் இல்லாதவர்கள் வக்சீன் போடுவதற்கு வசதியாக நடமாடும் வக்சீன் மையங்கள் சிலவற்றையும் அரசு இயக்கிவருகின்றது.