நாடு முழுவதும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை, எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நாவலபிட்டி பகுதியில் நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் முதலாம் திகதி கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய, நாட்டை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டிற்குள் கொவிட் பரவல் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை மீள திறப்பது குறித்து எதிர்வரும் ஓரிரு தினங்களில் விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நடத்தப்படும் கலந்துரையாடலின் ஊடாக, எட்டப்படும் தீர்மானங்களுக்கு அமைய, நாட்டை மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிடுகின்றார்.