க.வி.விக்னேஸ்வரன்

க.வி.விக்னேஸ்வரன்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னை ஏமாற்றிவிட்டார். அவரை நான் சந்திக்க மாட்டேன்” – க.வி.விக்னேஸ்வரன்

ஜனாதிபதி ரணில் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் அவருடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 

நாளையதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலளித்து அனுப்பிய கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதில் நான் வருந்துகிறேன். எனது முடிவை அதிபருக்கு தெரிவிக்கவும் – என்றுள்ளது.

 

13வது திருத்தச் சட்டத்தை

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் அதிபரால் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் நிறைவேறாது என்பதே எனது கருத்தாகும்.

“இந்தியாவை ஏமாற்றவே அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் இந்திய விஜயம்.” – இந்திய ஊடகத்திடம் விக்கினேஸ்வரன் !

இந்தியாவை தனது நட்பு நாடென காட்டிக்கொள்ளும் விதமாக, இந்தியாவிற்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இந்தியாவை ஏமாற்றும் நடவடிக்கையே இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் இந்திய விஜயம் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனவே வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் வாக்குறுதிகளை நம்பி இந்தியா ஏமாந்துவிட கூடாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்கினேஸ்வரன் இந்திய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட இந்தியாவிற்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என குறிப்பிட்டார்.

ஆகவே இனப் படுகொலை குறித்த சர்வதேச விசாரணையை இந்தியா நேரடியாக வலியுறுத்தாமல் விட்டாலும் ஏனைய நாடுகளின் ஊடாக அதனை முன்னெடுப்பதற்குரிய இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் இந்தியாவினால் எவ்வளவு தூரத்திற்கு எமது அதிகாரங்களை பலப்படுத்த முடியுமோ அதுவே இந்தியாவின் பாதுகாப்பிற்கும் கைகொடுக்கும் என்றும் க.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபை கையிலிருந்த போது எதையும் செய்யாது இன்று புலம்பிக்கொண்டிருக்கிறார் க.வி.விக்னேஸ்வரன் !

மாகாண பாடசாலைகளை மத்திய அரசு கையகப்படுத்துவதற்கு எதிராக வெகுவிரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போதுள்ள அரசானது மாகாணங்களுக்கு உரித்தான கல்வி ,சுகாதாரம் போன்ற விடயங்களை மாகாணங்களுக்கான அதிகாரங்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அதற்கு சிலர் துணை போகிறார்கள். சில மாயைகளை நம்பி சிலர் மாகாண அதிகாரத்தை மத்திக்கு தாரை வார்க்கும் முகமாக செயற்படுகிறார்கள்.

ஆனால் தற்போதுள்ள அரசானது 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு உட்பட்ட கல்வி ,சுகாதாரம் போன்ற விடயங்களை தனது ஆளுகைக்கு உட்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் நாம் நேற்று கல்வியலாளர்களுடன் ஒரு சந்திப்பினை மேற்கொண்டு ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளோம். அதாவது இந்த மாகாணத்திற்குட்பட்ட பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளை மத்திய அரசு கையகப்படுத்துவதற்கு எதிராக வெகுவிரைவில் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ய உள்ளதாக தீர்மானித்துள்ளோம் என்றார்.

……………………………………………………………………………………………………………………………………………………

வடமாகாணசபை இறுதியாக இயங்கிய காலத்தின் போது முதலமைச்சராக விளங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது. அதிகாரம் இவர்களுடைய கைகளில் இருந்த போது மாகாணசபைக்குள் நிதி மோசடியும் – கட்சிப்பேதங்களுமே அதிகரித்து காணப்பட்டிருந்தது. இன்று இவர்கள் அழுது கொண்டிருக்கும் பாடசாலைகள் தொடர்பாகவும் அதிகமாக அக்கறைப்பட்டிருக்கவில்லை.  மாகாணசபை இயங்குநிலையிலிருந்த போது பாடசாலைகளின் விடயங்களில் பெரிய தலையீடு செய்யவில்லை. வேறு மாகாணங்களின் பாடசாலைகளில் நவீன வகுப்பறைகள் என்ற தொனியிலான பல வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இதன் எண்ணிக்கை வடக்கில் மிகச்சொற்பமே. இது தவிர பல பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது. ஆங்கிலம் முறையாக கற்பிக்கப்படுவதில்லை. ஆய்வுகூட வசதிக் குறைவு . இப்படியான நிறைய குறைபாடுகள் உள்ளன. இவற்றை நீக்க எந்த மாதிரியான நகர்வுகளை மேற்கொண்டுள்ளார்கள் என்பது யாருக்குமே தெரியாது. பாடசாலைகள் தேசியமயமாவது தொடர்பாக அலட்டிக்கொள்ளும் நீங்கள் மாகாணபாடசாலையாக காணப்பட்ட போது என்ன செய்தீர்கள் என்பது ஆராயப்படவேண்டியது.

உண்மையிலேயே மாகாணசபைகளின் பால் அதீத அக்கறையுடையவர்களாயின் இவர்கள் பொறுப்பிலிருந்த போதே அதனை பலப்படுத்தியிருக்க வேண்டும். பிரச்சினைகளை சுமூகமாக முடித்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாது விட்டுவிட்டு இன்று மாகாணசபை அடக்கப்படுகின்றது – ஒடுக்கப்படுகின்றது என்றெல்லாம் கூறுவது என்ன வகையான மனோநிலை என்பது தான் தெரியவில்லை.

இது தவிர அரசினால் ஒதுக்கப்பட்டிருந்த நிதியை வடமாகாணசபையினர் மீள அரசுக்கு அனுப்பிவைத்ததாக கடந்த காலங்களில் அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறித்த விடயம் தொடர்பாக அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ ஆகியோரும் பதிவு செய்திருந்தனர். இவ்வளவு தான் இவர்களுடைய கால  தூரநோக்கான செயலாக அமைந்திருந்தது. இது தவிர புலம்பெயர் தேசங்களில் வாழும் முதலீட்டாளர்களை வடக்குக்கு அழைத்து வருவதற்கான எந்த நடவடிக்கைகயும் வடமாகாண சபை மேற்கொண்டிருக்கவில்லை.

 

சரி வேறு என்ன தான் சாதித்தார்கள் என்று கேட்டால் , மாகாணசபையால் கிடைத்த பெயரை வைத்துக்கொண்டு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எழுக தமிழ்- தமிழ்தேசியம் என்றெல்லாம் கூறி அவர் தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சியை உடைத்து புதிதான ஒரு கட்சியை உருவாக்கியதை தவிர வேறெதுவுமே நடந்தாகவில்லை என்பதே உண்மை. இனிவரும் காலங்களில் பதவிக்கு வரும் மாகாணசபைகளாவது இவர்கள் போல நடந்து கொள்ளாமல் இருந்தாலே போதுமானது என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டனர் என்பதே உண்மை.

“மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து அரசு முழுமையான இராணுவமயமாக்கலுடன் சர்வாதிகார ஆட்சியை மேற்கொள்கிறது.” – க.வி.விக்னேஸ்வரன்

“மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து அரசு முழுமையான இராணுவமயமாக்கலுடன் சர்வாதிகார ஆட்சியை மேற்கொள்கிறது.” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்டநாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் நடைபெற்ற அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஜனநாயக ரீதியில் தேர்தல் ஒன்று நடைபெறும்போது வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் இடையில் எழுத்தில் அடங்காத உடன்பாடு ஒன்று எட்டப்படுகின்றது. நாம் உங்களுக்கு வாக்களித்து நீங்கள் வென்றால் எமது பிரச்சினைகளைப் பேச வேண்டும். அவற்றுக்கு தீர்வு காண வேண்டும். அதிகாரம் கிடைத்த பின்னர் எம்மை விரட்டக் கூடாது என வாக்காளர் வேட்பாளர்களுடன் உடன்பாடு செய்கின்றனர்.

வேட்பாளர்களும் இந்த எழுத்தில் அடங்காத உடன்பாட்டை ஏற்றுக்கொண்டு, நாம் வென்றால் உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்போம், சுயநலம் கருதிச் செயற்படமாட்டோம். உங்களுடன் ஒன்றாக நிற்போம் என்று கூறுகின்றனர். இதுதான் ஜனநாயகத்தின் தாற்பரியம்.

ஆனால், இவ்வாறு வாக்காளர்களுக்கு வாக்குறுதி கொடுத்து வென்ற பின்னர் மக்களை மறந்து, அவர்களுடனான உடன்பாடுகளை மீறி ஜனநாயகத்துக்கு முரணாகச் செயற்படத் தொடங்குகின்றனர். இதனால் மக்கள் இந்த அரசியல்வாதிகளுடனான தமது உடன்பாட்டை எடுத்துக்காட்ட வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

இதனை எடுத்துக்காட்ட முற்படும்போதே ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் கைது என ஜனநாயகத்துக்கு எதிரான சர்வாதிகாரம் தலைதூக்குகின்றது.

தற்போது நிர்வாகம் சம்பந்தமான சகல விடயங்களிலும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதன் மூலம் சர்வாதிகாரம் வித்திடப்படுகின்றது.

இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கான சகல தயார்படுத்தல்களும் முழுமையடைந்துள்ளன. இவ்வாறான நிலையில்தான் தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர். இவற்றையும் சர்வாதிகாரம் மூலம் அடக்கவே ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர்.என்றார்.