சஜித் பிரேமதாச

சஜித் பிரேமதாச

அமெரிக்காவின் குப்பைகள் இலங்கைக்கு ஏன் வந்தன..? – அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் சஜித் பிரேமதாச!

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் குறித்த கப்பல் தொடர்பாக இன்று கவனம் செலுத்தப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அமெரிக்காவில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த சிங்கப்பூர் கப்பலொன்று அண்மையில் அமெரிக்கா போல்டீமோர் பகுதியில் விபத்துக்குள்ளானது.

 

இந்த கப்பலில் 764 கொள்கலன்களில் பாரிய கழிவுத்தொகை காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பலில் காணப்பட்ட 56 கொள்கலன்களில் வெடிபொருட்கள் காணப்பட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

 

இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கடற்பரப்புக்களில் இறக்குமதி – ஏற்றுமதி மற்றும் பரிமாற்றங்களின் போது மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அறிவிக்க வேண்டும். ஆனால் இது தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அறிவிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

 

இது மிகவும் மோசமான நிலையாகும். அமெரிக்காவின் போல்டீமோர் பகுதியில் குறித்த கப்பல் விபத்துக்குள்ளானதாலேயே இந்த கப்பல் இலங்கை நோக்கி பயணிப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இல்லையெனில் எமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தற்போது மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் திருத்தங்களை செய்வோம் – சஜித் பிரேமதாச

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தற்போது மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான  அரசாங்கம் திருத்தங்களை மேற்கொள்ளுமென அந்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை, நிதியத்தின் பிரதிநிதிகளுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது தான் அவர்களுக்கு எடுத்துரைத்ததாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது காணப்படும் பிரச்சனைகளுக்கான நேரடி தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடியுள்ளது.

இதன்படி, தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்காலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமென அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டாலும் தமது கட்சி நிச்சயம் மேற்கொள்ளுமெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பை சில அரசியல் கட்சிகள் புறக்கணித்திருந்ததாக சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெறுமதி சேர் VAT வரிகாரணமாக உயிரிழப்புகள் ஏற்படலாம் – சஜித் பிரேமதாச

புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (VAT) மக்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும், இதனால் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாத குடும்பங்கள் காரணமாக தற்கொலை சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மக்களின் அவலத்தை மேலும் கூட்டி வருவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய VAT வரியை அமுல்படுத்துவது அத்தகைய நடவடிக்கையாகும் என்றார்.

அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கு VAT வரியை அதிகரிப்பது மாத்திரம் அல்ல என சுட்டிக்காட்டிய அவர், நாட்டிலிருந்து திருடப்பட்ட பணத்தை மீள்குடியேற்றுவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதே மற்றுமொரு வழியாகும் எனவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் திருடர்களை நம்பி ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை பெற்றுக் கொண்டமையினால் இதனைச் செய்ய முடியாதுள்ளது.

திருடர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக அவர்களைப் பாதுகாப்பதற்காகவே தற்போதைய அரசாங்கம் செயற்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கம்பஹாவிலுள்ள பாடசாலையொன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்

பல கோடி கடன் பெற்றவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு மனித உடல்களை அடக்கம் செய்வதற்கு வரி அறவிடுகிறது – சஜித் பிரேமதாச விசனம் !

அரச வங்கிகளிடமிருந்து பல கோடி ரூபா கடன் பெற்று , கடனை செலுத்தாத 150 பேருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் மனித உடல்களை அடக்கம் செய்வதற்கு வரி அறவிடுதல் எந்தளவுக்கு நியாயமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் உள்ள  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டை தோற்கடித்துள்ளோம். வற் வரியில் புதிதாக இணைக்கப்படும் 97 பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பட்டியலை  சபைக்கு சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தினோம்.

வற் வரி சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அதிக அக்கறை கொண்ட அரசாங்கம்  வரி தொடர்பான தகவல்களை சபைக்கு சமர்ப்பிக்கவில்லை. 97 பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பட்டியலையும் சமர்ப்பிக்கவில்லை.

வற் வரி அதிகரிப்பதை காட்டிலும் அதனை செயற்படுத்துவதற்கு ஏதுவாக அமைய காரணிகள் தொடர்பில் ஆராய வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களினால் குறுகிய காலத்துக்குள் 600 பில்லியன் ரூபா முதல் 700 பில்லியன் ரூபா வரையிலான வரி வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளது.

வரி வருமானம் இழப்பை தொடர்ந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் புத்திஜீவிகள் நாட்டை விட்டு நாளாந்தம் வெளியேறுகிறார்கள். பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டு மக்கள் மீது சுமையையும் அரசாங்கம் திணித்துள்ளது.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி, பொருளாதார படுகொலையாளிகள் என்று  உயர்நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள கோட்டபய ராஜபக்ஷ, கோட்டபய ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால்,டப்ள்யூ.டி லக்ஷமன்.எஸ்.ஆர்.ஆட்டிகல,பி.பி.ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள்.

பொருளாதார படுகொலையாளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர்களின் குடியுரிமையை பறித்து,அவர்கள் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும். இதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

அரச வங்கிகளிடமிருந்து பல கோடி ரூபா கடன் பெற்ற 150 பேரின் பெயர் விபரங்களை பகிரங்கப்படுத்துமாறு  நிதியமைச்சரிடம்  பலமுறை கோரிக்கை விடுத்தேன். ஆனால் இதுவரை அது தொடர்பான விபரங்கள் கிடைக்கவில்லை. இவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள  மக்களை அடக்கம் செய்வதற்கும் வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு நியாயமானது என்றார்.

வடக்கு- கிழக்கு மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்

வடக்கு- கிழக்கு மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

உலகத்துக்கு நல்லிணக்கம் தொடர்பாக எடுத்துக்கூறாமல் நாட்டிலும் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

 

இதேநேரம் இவ் வருடத்தின் பெப்ரவரி மாதத்திற்குள் வடக்கு கிழக்கில் காணப்படும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என கடந்த வருடம் ஜனாதிபதி தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காயிருந்தார்.

 

வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களும் ஏனைய பகுதி வாழும் மக்களும், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையின் கிராமங்களில் அதிகரிக்கும் நுண்நிதி கடன்களுடன் தொடர்புடைய கடன் சுமை – பாலியல் இலஞ்சம் கொடுக்க கட்டாயப்படுத்தப்படும் பெண்கள்!

கிராமப்புறங்களில் பெண்களை வீட்டுத் தலைவியாகக் கொண்ட பெரும்பாலான குடும்பங்கள் முறைசாரா நுண்நிதி கடன் நிறுவனங்களிடம் சிக்கொண்டுள்ளன. இந்தக் கடனை அடைக்க முடியாத போது பாலியல் இலஞ்சம் பெறும் நிலைக்கு ஆளாகுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (30) நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

 

ஆய்வுகளின் பிரகாரம் கிராமப்புற மக்களில் பெண்களை வீட்டுத் தலைவியாகக் கொண்ட பெரும்பாலான குடும்பங்கள் முறைசாரா நுண்நிதி கடன்களுடன் தொடர்புடைய கடன் சுமை காரணமாக காதணிகளைக் கூட அடகு வைத்து வருகின்றனர்.

 

நாட்டில் தற்போது 11,000 நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. கிராமங்களில் ‘படுக்கைக் கடன்’ என்று அழைக்கப்படும் இந்தக் கடனை அடைக்க முடியாத போது,பாலியல் இலஞ்சம் பெறும் நிலை காணப்படுகிறது.

 

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் தெரிவித்துள்ளதன் பிரகாரம்,கடந்த மாதம் 15 வயதுக்குட்பட்ட 169 சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதோடு,அதில் 26 சிறுவர்கள் கர்ப்பமடைந்துள்ளனர்.

 

அத்துடன் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகங்கள் தடுப்பு பணியகத்தின் அறிக்கையின் படி, கடந்த 9 மாதங்களில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

மேலும் 1086 பாலியல் வன்கொடுமைகள்,கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் 425 பதிவாகியுள்ளன. இந்நிலையில் இருந்து சிறுவர் தலைமுறையை பாதுகாக்க வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

 

அத்துடன் இதுவரை 2000 தொழிற்சாலைகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு 533858 பேர் வேலை இழந்துள்ளனர். 20 சதவீத ஆடைத் தொழிற்சாலைகள் மூன்று மாதங்களுக்குள் மூடப்பட்டுள்ளன. இதில் 10 நிறுவனங்கள் நஷ்டஈடு வழங்கி ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன.இதனால் அவர்களது குடும்ப நலன் நடவடிக்கைகள் கூட முடங்கியுள்ளன. வேலையிழந்ததால் பெண்கள் வேறு வழிகளில் பணத்தைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

மேலும் பொருளாதார நெருக்கடியை படிப்படியாக தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினாலும்,சாதாரண மக்களைப் பார்க்கும் போது அவர்களின் பரிதாப நிலை குறையவில்லை. பொருளாதார நெருக்கடியால் பெண்கள் மற்றும் சிறுவர்களே நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2023 மே மாதத்திற்குள் 39 இலட்சம் பேர் மிதமான உணவுப் பாதுகாப்பின்றிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. திரிபோஷாவில் கூட அப்ளாடோக்சின் என்ற நச்சு இரசாயனம் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

அண்மையில் சுகாதார அமைச்சு,”தேசிய போஷாக்குக் கொள்கை 2021-2030” பத்தாண்டு கொள்கையை வெளியிட்டது. இதனை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் என்ன என கேட்கிறோம். ,2023 இல் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தால் வெளியிடப்பட்ட Understanding Multidimensional Vulnerability Impact on People of Sri Lanka குறியீட்டின் பிரகாரம், இலங்கை 0.026A தரப்படுத்தல் நிலையில் உள்ளது,10 பேரில் 6 பேர் பன்முக ஆபத்தில் உள்ளனர். இது மொத்த சனத்தொகையில் 55.7 வீதமாகும் என்றார்.

இலங்கையில் 7 இடங்களில் தாக்குதல் நடாத்த ஐ.எஸ் திட்டம் – நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச!

கொழும்பில் உள்ள 7 இடங்கள் மீது ஐ எஸ் குண்டுத் தாக்குதல் நடத்த திட்டம் இருப்பதாக அரசாங்கப் பத்திரிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பாராளுமன்றம், நாடு மற்றும் மக்களுக்கு இது குறித்த உண்மை தன்மையை சரியாக அறிவிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

 

பாராளுமன்றத்தில் நேற்று (6) உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

சிறைச்சாலையில் இருக்கும் ஐ எஸ் பயங்கரவாதிகளால் இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது பாரதூரமானதோர் விடயம் என்பதனால், இதன் உண்மை தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறும், ண்டும் பயங்கரவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது என்பதால் கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்று இந்த அபாயம் குறித்து ஆராயுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

 

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நாட்டின் சட்டத்தினுள் இயன்ற உச்சபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்மதித்தால் இலங்கையில் மது – போதைப்பொருள் பாவனையை இல்லாது செய்யலாம்.” – சஜித் பிரேமதாச

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்மதித்தால், மது,புகையிலை,சிகரெட் மற்றும் போதைப்பொருள் பாவனையில்லா நாட்டை உருவாக்க முடியுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ”போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை பெறுவதற்கான விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” VIP வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி விமான நிலையத்தில் இருந்து தங்கம் கொண்டு வந்த எம்பிக்கு எதிராக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக தீர்மானம் கொண்டு வந்ததைப் போன்று, போதைபொருள் பாவனையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும்.

 

மேலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சிங்கப்பூரில் உள்ளதைப் போன்று கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் தற்போதைய பாடசாலை கட்டமைப்பை ஆட்கொண்டுள்ள போதைப்பொருள் கடத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என சஜித் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தரம் குறைந்த மருந்துகளால் மற்றுமொரு மரணம் – நாடாளுமன்றில் விசனம் வெளியிட்ட சஜித் பிரேமதாச !

நாட்டில் தரம் குறைந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை என சுகாதார அமைச்சர் மீண்டும் வலியுறுத்திய போதிலும் தரம் குறைந்த மருந்துகளினால் மற்றுமொரு மரணம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட Propofol மருந்தை செலுத்தியதால் காலியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாதிரி தர சோதனைகளில் தோல்வியடைந்த மூன்று மருந்துகளில் ப்ரோபோஃபோலும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தரம் குறைந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை என தெரிவித்ததாக எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.

“தரமற்ற மருத்துவம் தொடர்பான சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க எங்களிடம் இடமில்லை அல்லது இதுபோன்ற சம்பவங்களை விசாரிக்கும் பிரிவு இல்லை. அதற்கான சரியான பொறிமுறையை நாம் கொண்டிருக்க வேண்டும். தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் திருடர்களின் கூடாரமாக உள்ளது. அதன் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியும் பொறுப்பேற்க வேண்டும்,” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“ஆளும் தரப்பின் ஆலோசனைகளுக்கு அமைய சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார்.” – எதிர்க்கட்சித்தலைவர் குற்றச்சாட்டு !

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆளும் தரப்பின் ஆலோசனைகளுக்கு அமைய ஒருதலைபட்சமாகவும்,சர்வாதிகாரியாகவும் செயற்படுகிறார். சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி சபாநாயகரின் செயற்பாடுகள் குறித்து ஒரு தீர்மானம் எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டம் மீதான வாக்கெடுப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் இரு நாள் விவாதத்தை கோரினோம். தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்து நாட்டு மக்கள் பல விடயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கு தெரியாமல் மக்களின் இறுதி சேமிப்பை கொள்ளையடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டை வெளிப்படுத்துவதற்காகவே இருநாள் விவாதம் கோரினோம்.

இருநாள் விவாதம் அவசியமில்லை. சனிக்கிழமை (01) முழு நாள் விவாதத்தை நடத்தலாம். தேவையாயின் விவாதத்துக்கான காலத்தை நீடித்துக் கொள்ளலாம் என கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் உரையாற்ற இருந்த நிலையில் அவர்களுக்கு அனுமதி வழங்காமல் தன்னிச்சையாக செயற்திட்டம் மீதான வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்தினார். வாய்ப்பு கோரியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கட்சித் தலைவர் கூட்டத்தில் எடுத்த தீர்மானங்களை புறக்கணித்து ஆளும் தரப்பின் ஆலோசனைகளுக்கு அமைய சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார். பாராளுமன்றம் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு சபாநாயகர் சர்வாதிகாரி போல் செயற்படுகிறார்.

சபாநாயகர் ஒருவர் எவ்வாறு செயற்படக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன செயற்படுகிறார். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி அவரின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு தீர்மானம் எடுப்போம் என்றார்.