சம்பிக்க ரணவக்க

சம்பிக்க ரணவக்க

பொலிஸாரின் யுக்திய நடவடிக்கையால் சிறுவர்கள் பாதளஉலகத்தினருடன் இணையும் நிலையேற்பட்டுள்ளது – சம்பிக்க ரணவக்க

அரசாங்கத்தின் யுக்திய நடவடிக்கையால் சிறுவர்கள் பாதளஉலகத்தினருடன் இணையும் நிலையேற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

யுக்திய நடவடிக்கையின் போது தாயும் தந்தையும் கைதுசெய்யப்படுகின்றனர் இதனால் வீடுகளில் தனித்திருக்கும் சிறுவர்கள் பாதளஉலகத்தினருடன் இணையும் ஆபத்துள்ளது என தெரிவித்துள்ள அவர் பெண்கள் பாலியல் ஈடுபடும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் அவர்களின் பிள்ளைகள் தனித்துவிடப்பட்டுள்ளனர் உணவையோ பாதுகாப்பையோ பெற முடியாத நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க இந்த பிள்ளைகளிடம் தங்கள் பெற்றோருக்காக வாதாட சட்டத்தரணிகளை அமர்த்தும் வலுவோ பணமோ இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள பெரும்முதலைகள் கைப்பற்றப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கடற்கரையோரங்களில் உள்ள ஹோட்டல்களை பொலிஸார் புல்டோசர்களை பயன்படுத்தி அழித்ததை நாங்கள் பார்த்துள்ளோம் கடற்கரையோரத்தில் உள்ள அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் அதிகாரம் கரையோரா பாதுகாப்பு திணைக்கத்திற்குள்ளது பொலிஸார் இவ்வாறான கட்டிடங்களில் தலையிட்டு அது போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் கட்டப்பட்டது என தெரிவிப்பது சட்டத்திற்கு விரோதமானது எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

“எரிபொருள்,எரிவாயு மற்றும் மின்சார விநியோக கட்டமைப்பில் தற்காலிக தீர்வு தான் எட்டப்பட்டுள்ளது.” – சம்பிக்க ரணவக்க

வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் முறையான திட்டமிடல் இல்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளதை அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டும். என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

செப்டெம்பர் 27 ஆம் திகதி இலங்கைக்கு தீர்மானமிக்கது என்பதை ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்.வங்குரோத்து நிலையடைந்துள்ளதால் இந்த பாதையில் செல்லுங்கள் என சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழி காண்பித்துள்ளது.அரசாங்கமும் அந்த பாதையில் செல்கிறது.

ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை முழுமையாக அமுல்படுத்தினால் தான் நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நீடிக்கப்பட்ட நிதியுதவி கிடைக்கப்பெறும்.முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை இலங்கை முழுமையாக செயற்படுத்தவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள். ஆகவே இரண்டாம் தவணை நிதியுதவி கிடைப்பனவு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கடன்கள் மற்றும் வட்டி செலுத்தல் 2022.04.12 ஆம் திகதியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.கடன் செலுத்த முடியாத காரணத்தால் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என மத்திய வங்கி உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு உலக நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் நடைமுறையில் எந்த முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு இலங்கை எப்போது பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்தும் என பிரதான நிலை கடன் வழங்குநர்கள் காத்துக் கொண்டுள்ளார்கள். இதுவே உண்மை.

வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்தும் வழிமுறையை இலங்கை இதுவரை அறிவிக்கவில்லை அது பாரிய பிரச்சினைக்குரியது என நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரச வருமானத்தை அதிகரிக்குமாறு நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.வருமானத்தை எவ்வாறு அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதை நாணய நிதியம் குறிப்பிடாது.அரசாங்கமே அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

குறுகிய காலத்துக்குள் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளாவிட்டால் அரச சேவையாளர்களுக்கான சம்பளம் வழங்கல்,இலவச கல்வி, இலவச மருத்துவம், நலன்புரி சேவைகள் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு பாதிக்கப்படும்.சர்வதேச நாணய நிதியத்தி;ன் முதல் தவணை நிதியை பெற்றுக்கொண்டதன் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட 15 சதவீத அரச வருமான இலக்கை அரசாங்கம் அடையவில்லை.

எரிபொருள், எரிவாயு உட்பட மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைக்கப்பெறுகிறது,நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் சர்வதேச நாணய நிதியம் இவை தற்காலிக தீர்வே தவிர நிலையானதல்ல, நாடு வெகுவிரைவில் மீண்டும் நெருக்கடிக்குள்ளாகும் என்று நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளார்கள். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் தேசிய மட்டத்தில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெறும் என்றார்.

“ராஜபக்சக்கள் மீண்டும் இலங்கை அரசியலினுள்.”- தடுக்க வேண்டும் என்கிறார் சம்பிக்க ரணவக்க !

“சர்வகட்சி அரசாங்கத்தில் ஊழல்வாதிகள் மற்றும் ராஜபக்ஷ்வினர் இல்லாமல் அமைக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றது.” என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கண்டியில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சுதந்திரமாக செயற்படும் நிலையில் , இந்த வங்குரோத்து நிலைமையால் தங்களின் வாழ்க்கை அழிவடைந்தமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கிறங்கிய மக்களை தண்டிப்பதை அனுமதிக்க முடியாது. அரசாங்கத்துக்கு தற்போது சவாலாக இருப்பது மக்களின் நம்பிக்கையை வெற்றிகொள்வதாகும்.

அதனால்  அரசாங்கம் அடக்குமுறையை நிறுத்த வேண்டும். யாராவது சட்டத்தை மீறி செயற்படுவதாக இருந்தால், அதளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நாங்கள் எதிர்ப்பு இல்லை. அனைவருக்கும் ஒரேமாதிரி சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்.

அத்துடன் நாட்டை அதலபாதாளத்துக்கு இட்டுச்செல்ல காரணமாக இருந்த ராஜபக்ஷ்வினர் மீண்டும் அரசியல் களத்துக்கு வந்து செயற்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்கள் மீண்டும் தங்களின் ஊழல் நடவடிக்கைகளை மேற்கொண்டுசெல்ல முயற்சித்து வருகின்றனர்.

அதனால் எதிர்காலத்தில் அமைக்க இருக்கும் தேசிய அல்லது சர்வகட்சி அரசாங்கத்தில் ஊழல்வாதிகள் மற்றும் ராஜபக்ஷ்வினர் இல்லாமல் அமைக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அவ்வாறு அமையாவிட்டால் இதுதொடர்பில் அடிப்படை நம்பிக்கை இல்லாமல்போகும்.

மேலும் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர்கள் மற்றும் நாட்டை வங்குராேத்து அடையச்செய்ய  காரணமான இருந்த  அரசியல்வாதிகள் இல்லாத நாட்டையே . அவ்வாறு இல்லாவிட்டால், அரசாங்கம் எந்தவகையான அடக்கு முறைகளை கொண்டுசென்றாலும் மக்கள் போராட்டத்துக்கு செல்வதை தடுக்க முடியாது என்றார்

“ஜூன் மாதம் தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி உருவாகும்.” – எச்சரிக்கிறார் சம்பிக்க ரணவக்க !

எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெறுவதற்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெறுவதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வரும். இறுதியில் பொருட்களை பெற மக்கள் மத்தியில் கலவரம ஏற்பட வாய்ப்புள்ளது என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் .

 

“ஜூன் மாதம் நடுப்பகுதியில் நிச்சயமாக மீண்டும் ஒரு தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகும். அது நிச்சயமாக பெரிய அளவில் ஒரு கலவரமாக மாறும். பொருட்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பொருளாதார நெருக்கடியை தாங்கிக்கொள்ள முடியாத மக்களால் எரிபொருள், எரிவாயு, மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த கலவரம் உருவாகும் என்பது உறுதியாகும்.

இதனால் கடந்த 9 ஆம் தேதி இடம்பெற்ற கலவரம் போல் இல்லாமல் அரசியல்வாதிகள் சொத்துக்கள் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைவருடைய சொத்துக்களும் கொள்ளையிடப்படும். நாடு தற்போது பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுவிட்டது.

நாட்டுக்கு கிடைக்கப்பெறும் டாலர்களை கொண்டு மக்களுக்கு எரிபொருள், எரிவாயு பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றுவதை விடுத்து நாட்டை கட்டியெழுப்ப முறையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை பெற வேண்டும். சர்வ கட்சிகளையும் இணைத்து அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.

எனது குடியுரிமையை பறிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன – சம்பிக்க ரணவக்க

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது குடியுரிமையை பறிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என குற்றம்சாட்டியுள்ளார். விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் தன்னை அழைப்பதன் மூலம் தனது குடியுரிமையை பறிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழுவின் முன்னிலையில் நான் ஆஜராகியுள்ளேன் என தெரிவித்துள்ள அவர் முன்னைய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது எங்களை தண்டித்து எங்களது குடியுரிமைகளை பறிப்பதற்கான நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

“ நான் தமிழன். என்னிடம் நாடு வராது.” – மனோ கணேசன்

“சஜித் பிரேமதாசவும், பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்த்தால் மட்டுமே  இந்த காட்டாட்சியை வீழ்த்த முடியும் .” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்  தெரிவித்துள்ளார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் 43ஆவது படையணியின் மாநாடு கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்றுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் கலந்துகொள்ள கூடாது என கட்சியினால் அறிவறுத்தல் வழங்கப்பட்டடிருந்தது.  எனினும் நேற்றைய தினம் மனோ கணேசன், தலதா அத்துக்கோரளை மற்றும் குமார வெல்கம ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த விடயம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மனோ கணேசன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்,

நான் மனோ கணேசன். நான் ஒரு யதார்த்தவாதி. கொள்கைக்கும், நடைமுறைக்கும் இடையில் சமநிலை பயணம் செய்பவன். நான், இருப்பதை விட்டு விட்டு, பறப்பதை பிடிக்க அலைபவன் அல்ல. அன்றும், இன்றும், சமீப எதிர்காலம் வரைக்கும் இந்நாட்டில் பெரும்பான்மை ஆட்சிதான்.

அதற்குள் நாம் எப்படி எமது காரியங்களை செய்வது என்பதை நான், முயன்று, செய்து வருகிறேன். ஏதோ, நாட்டில் நான்தான் சர்வ அதிகாரம் கொண்ட அரச தலைவராக இருந்தது – இருப்பது போல் என்னிடம் கேள்வி கேட்பவர்களை கண்டால் எனக்கு சிரிப்புதான் வருகிறது.

முடியுமானால், என்னிடம் நாட்டை கொடுத்து பாருங்கள். மாற்றி காட்டுகிறேன். ஆனால், நான் தமிழன். என்னிடம் நாடு வராது. அதுதான் யதார்த்தம். நான் சுதந்திரமாக முடிவுகளை தைரியமாக எடுப்பதால்தான் எனக்கு எங்கும் அழைப்பு இருக்கிறது. எந்தவொரு பெரும்பான்மை கட்சிகள் – அரசியல்வாதிகள் நடத்தும் கலந்துரையாடல்களிலும் நான் கலந்துக்கொள்வேன்.

ஒருகாலத்தில் அதிகார பரலாக்கலுக்கு எதிராக இருந்த நண்பர் சம்பிக்க ரணவக்க இன்று அதுபற்றி சாதகமாக பேசுகிறார். அதுபற்றி பொது முடிவு எடுக்க வேண்டும் என்று என் பெயரை குறிப்பிட்டு கூறுகிறார். அது எமது வெற்றி. நாம் முன்னோக்கி செல்வோம். சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது. அதன்மூலமே இந்த காட்டாட்சியை வீழ்த்த முடியும் என நம்புகிறது.

தமிழ் முற்போக்கு கூட்டணி, எவருக்கும் எடுபிடி வேலை செய்யாத, ஒரு பலமான சுதந்திரமான கட்சி. இது காட்சி அல்ல, மக்களின் கட்சி. அதை இன்னமும் பலமாக நாம் வளர்ப்போம். அது ஒன்றே எமது பலம். அதன் மூலமே எம்மால் சாதிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

“இந்த அரசாங்கம் இலங்கை மக்களை தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளிவிட்டது.” – பாட்டலி சம்பிக்க ரணவக்க

டொலர் பிரச்சினைக்கு, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. எனவும் எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க  தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

“இவ்வாறு ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட முடியாத அளவிற்கு டொலர் பிரச்சினை பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

உரம், கிருமி நாசி ஆகியவற்றுக்கான இறக்குமதி தடை மற்றும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக இன்று மரக்கறி விலைகள் வானம் அளவிற்கு உயர்வடைந்துள்ளது.இவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை பொதுமக்களினால் பொருத்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால், மக்களின் வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சி அடைந்துள்ள பின்னணியில், அவர்கள் கொள்ளையடிக்கும் நிலைக்கும், தற்கொலை செய்துக்கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் பழைய தலைவர்களுக்கு இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பதனை ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். நாட்டை புதிய தலைமுறைக்கு கையளிக்க வேண்டும்.இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலுள்ள அங்கத்துவ கட்சிகளுக்கு மாத்திரமன்றி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுக்கு கூட இன்று தமது பிரதேசத்திற்கு செல்ல முடியாத நிலைமை எழுந்துள்ளது.

வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள பிரச்சினையை அனைத்து மக்களும் எதிர்நோக்கியுள்ளமை மற்றும் விவசாயிகளுக்கு உரம் கிடைக்காத பிரச்சினை ஆகியவற்றினாலேயே இவர்களுக்கு தமது பிரதேசத்திற்கு கூட செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பிரச்சினைகளை மறைப்பதற்காக தனிமைப்படுத்தல் சட்டம், இரகசிய பொலிஸாரை முறையற்ற விதத்தில் பயன்படுத்துதல், பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை தவறாக கையாளுதல் போன்ற செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறான விடயங்களினால், இந்த பிரச்சினைகள் வலுப் பெறும் எனவும், மக்களை இனிவரும் காலங்களில் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் கூறுகின்றார்.

“2006 முதல் என்னிடம் கைத்துப்பாக்கியொன்று இருப்பது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு தெரியும்” – சம்பிக்க ரணவக்க

“2006 முதல் என்னிடம் கைத்துப்பாக்கியொன்று இருப்பது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு தெரியும்” என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தன்னிடமுள்ள கைத்துப்பாக்கி குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அவர் சட்டவிரோத ஆயுதமொன்றை வைத்திருக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே சம்பிக்க ரணவக்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
இலங்கையில் உள்நாட்டு போர் இடம்பெற்றவேளை 2006 இல் தனது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கியொன்றை கொள்வனவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். அவ்வேளை நான் நிறுவனமொன்றின் இயக்குநராக ஜனாதிபதியாக பதவிவகித்த மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டேன். இதனை தொடர்ந்து எனது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கி வழங்கப்பட்டது இது கோத்தபாய ராஜபக்சவிற்கு தெரியும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

“கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக தொற்றுநீக்கிகள் சோதனைகருவிகள் போன்றவற்றின் மூலம் கிடைக்ககூடிய வருமானம் குறித்தே அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது“ – சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு !

“கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக  தொற்றுநீக்கிகள் சோதனைகருவிகள் போன்றவற்றின் மூலம் கிடைக்ககூடிய வருமானம் குறித்தே அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது“ என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு அதனை கட்டுப்படுத்த தவறிவிட்டது என ஐக்கியமக்கள் சக்தி தொடர்ச்சியாக குற்றஞசாட்டி வருகின்ற நிலையில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடும் போது,

அரசாங்கம் தாமதமின்றி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள கொரோனா மருந்தினை இலங்கைக்கு கொண்டுவரவேண்டும். அரசாங்கம் சுகாதார பிரிவினரின் பி.சி.ஆர் சோதனையிடும் திறனையும் வளங்களையும் அதிகரிக்கவில்லை.முகக்கவசங்கள் தொற்றுநீக்கிகள் சோதனைகருவிகள் போன்றவற்றின் மூலம் கிடைக்ககூடிய வருமானம் குறித்தே அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது.

கொரோனா வைரசினை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல் மயப்படுத்தியுள்ள அரசாங்கம் எதிர்கட்சியினரின் திட்டங்களை பலவீனப்படுத்தியுள்ளது .கொரோனா வைரசிற்கான மருந்திற்கு முன்னுரிமை வழங்க வண்டும்” எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜபக்ஷக்கள் மீது சம்பிக்க ரணவக்க பகிரங்க குற்றச்சாட்டு!

ராஜபக்க்ஷக்களின் ஒட்டுமொத்த குடும்பமும் ஹெரோயின் படை, எதனோல் மாஃபியா படை, மணல் கொள்கை உள்ளடங்கலான பல்வேறு செயற்பாடுகளினால் சூழலை மாசுபடுத்தும் படை, பாதாள உலகக்குழுக்கள் ஆகிய நாற்படைகளை மையப்படுத்தியே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது என சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் குறிப்பிடும் போது அவர் ; “இந்த நாட்டை நன்கு கற்ற, அறிவுடையவர்களே நிர்வகிக்கப் போகின்றார்கள் என்பதுதான் மக்களுக்கு வழங்கப்பட்ட மிகநீண்ட விருப்பம். தற்போது கம்பஹாவிலிருந்து சில படித்தவர்கள் வந்திருக்கிறார்கள் இல்லையா? நீர்கொழும்பிலிருந்து வந்திருக்கும் கற்றறிந்தவர் யார்? மினுவங்கொடவில் இருந்து தெரிவான அறிஞர் யார்? திவுலப்பிட்டியிலிருந்து வந்த தொழிற்சங்கவாதி யார்?

ஏற்கனவே இருந்த பழைய ஹெரோயின் கடத்தல்காரர்கள், பாதாள உலகக்குழுவினர், மணல்கொள்ளை மாஃபியாகாரர்கள் தான் இன்று ராஜபக்க்ஷக்களின் சேனையாகத் இருக்கின்றார்கள். முற்காலத்திலிருந்த நாற்படை போன்று ராஜபக்க்ஷக்களுக்கும் சிறப்பானதொரு நாற்படை இருக்கின்றது.

முதலாவது நாட்டில் ஹெரோயினை விற்று, அந்த வியாபாரத்தின் ஊடாக பணம் சம்பாதிக்கின்ற படை, இரண்டாவது பெருமளவான கொள்கலன்களில் எதனோலை நாட்டிற்குள் கொண்டுவருகின்ற, அந்தக் கொள்கலன்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியின் கையெழுத்தூடாக நிதியமைச்சிற்கு அறிவித்தார்.

எதனோல் வியாபாரத்தினூடாக வரும் பெருந்தொகை பணத்தை அரசியலுக்கு செலவிடுகின்ற எதனோல் மாஃபியா படை, மூன்றாவது கல் மற்றும் மணல் போன்றவற்றை அகழ்ந்தெடுத்து நாட்டின் வனப்பகுதிகளை நாசமாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற சூழலை மாசாக்கும் படை, நான்காவது பாதாளக்குழுக்கள் என்பவையே அந்த நாற்படையாகும்.

ராஜபக்க்ஷக்கள் ஆட்சிக்குவர முன்னர் சூழலுக்கு நேயமான தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதாகவும், காபன் அற்ற சூழல் என்று சான்றளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள். ஆனால் ஆட்சிபீடமேறிய பின்னர் சுமார் 6 மாதகாலத்திற்கு சுற்றுச்சூழலைக் கொள்ளையடிப்பதற்கு இடமளித்தார்கள்.

மீண்டும் பலவருட காலத்திற்கு பழைய நிலைக்குத் திருப்பமுடியாதளவிற்கு பாரிய சூழல் மாசடைவை ஏற்படுத்த இந்த அரசாங்கம் இடமளித்திருக்கிறது” என தெரிவித்துள்ளார்.