சித்தங்கேணி

சித்தங்கேணி

பல லட்சம் ரூபாய் ஆலய ஊழல்: வாள் வெட்டில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் நேற்று சரணடைந்தார்!

யாழ் சித்தங்கேணியில் வாள்வெட்டில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ரஜீவன் நேற்று யூலை 14 இல் சரணடைந்தார். யுலை 11 இல் வாள் வெட்டு இடம்பெற்றது முதல் தலைமறைவாக இருந்த இவர் நேற்று மாலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இவரினால் வாள்வெட்டுக்கு உள்ளான குலசிங்கம் குலரத்தினம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டுக்கு வந்துள்ளார்.

சித்தங்கேணி பிள்ளையார் கோவிலில் இடம்பெற்ற மாகும்பாபிஷேகத்தையொட்டி உலகெங்கும் இருக்கும் ஆலயத்தின் அடியவர்களிடம் சேகரிக்கப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நிதி மோசடி செய்யப்பட்டது தொடர்பான வாக்கு வாதத்திலேயே ரஜீவன் வாள்வெட்டில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. மகா கும்பாபிஷேகத்திற்கு ஊரில் நிதிப் பங்களிப்புசெய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட போதும் வெளிநாடுகளில் இருந்து நிதிப்பங்களிப்பு செய்த பலரின் பெயர்கள் வெளிவரவில்லை. வெளிநாட்டில் இருந்து நிதிப்பங்களிப்புச் செய்தவர்கள் ஆலயத்துடன் தொடர்புகொண்டு தாங்கள் நிதிப் பங்களிப்புச் செய்ததை நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக கும்பாபிஷேக நிதி கணக்குகளுக்கு பொறுப்பாக இருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் ரஜீவன் குழுவினருக்கும் ஆலயத்தின் நிர்வாகத் தலைவராக இருந்த குலரத்தினம் குலசிங்கத்திற்கும் இடையே சிறிதுகாலமாக முறுகல் நிலை காணப்பட்டது.

யூன் 11 மாலை வாள்வெட்டு நடப்பதற்கு முன்னரும் இவர்கள் தொலைபேசியில் வாக்குவாதப்பட்டு நேரடியாக பார்த்துக்கொள்வதாக ரஜீவன் குலரத்தினத்திற்கு சவால்விட்டுள்ளார். அதனைத் தொடர்ந்தே அன்றைய தினம் மாலை 3:30 மணியளவில் அருகில் இருற்த சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் ரஜீவன் வாள் கொண்டுவந்து குலரத்தினத்தை தாக்கி உள்ளார்.

ஆலய வளாகத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேசசபை உறுப்பினர் 2வது நாளாகவும் தலைமறைவு!

யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் ரஜீவன் நடத்திய வாள்வெட்டு கோயிலில் இருந்த சிசிரிவி இல் பதிவாகி உள்ளது. அதனை ஆலய அடியவர் கெ யோகச்சந்திரன் தேசம்நெற்க்கு அனுப்பி வைத்திருந்தார்.

மேலும் தாக்குதல் நடத்திய ரஜீவன் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான குலசிங்கம் குலரத்தினம் ஆகியோரின் புகைப்படங்களையும் கெ யோகச்சந்திரன் தேசம்நெற்க்கு அனுப்பி வைத்தார். யூன் 11 மாலை 3:30 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதலைத் தொடர்ந்து தலைமறைவான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் இன்னமும் தலைமறைவிலேயே உள்ளார் என உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் சம்பந்தப்பட்ட இருவரும் தொலைபேசியல் வாக்குவாதப்பட்டு பின் வாளோடு தாக்குதல் நடத்தும் நோக்கத்துடனேயே வந்துள்ளாதாக தோண்றுவதாக கெ யோகச்சந்திரன் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார். சம்பந்தப்ட்ட இருவருமே ஆலய நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் இவ்வாறான செயல்களால் ஆலயத்தின் நன்மதிப்பு மிகவும் பாதிக்கப்படுவதாகவும் யோகச்சந்திரன் தனது அதிருப்தியயை வெளியிட்டார். பொறுப்பற்ற மனிதர்கள் பொறுப்பான பதவிகளில் இருக்கக் கூடாது என்பதையும் யோகச்சந்திரன் வலியுறுத்தினார்.

இது விடயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் யாழ் மாநகரசபை மேயர் மணிவண்ணனும் இன்னமும் மௌனமாகவே உள்ளனர். பட்டப்பகலில் ஆலய வளாகத்தில் வாளால் வெட்டிவிட்டு தப்பித்துக் கொள்ளலாம், யாரும் கேட்க முடியாது என்றுதான் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கருதுகிறது என தன்னை அடையாளம் காட்ட விரும்பாத இன்னுமொரு ஆலய அடியார் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் வாள்வெட்டு! தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேசசபை உறுப்பினர் தலைமறைவு!

யூலை 11 மாலை யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட பிரதேசசபை உறுப்பினர் தலைமறைவாகி உள்ளார். சித்தங்கேணி பிள்ளையார் கோவிலின் மகாகும்பாபிசேகக் கணக்கு தொடர்பில் எழுந்த வாக்குவாதத்தில் கேள்விகேட்டவரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினார் வாளால் வெட்டியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு இலக்கானவர் தலையிலும் கையிலும் வெட்டுக் காயங்களுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்கு உள்ளானவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்கும் பயிற்றுனர் எனவும் தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக அன்று சிவன்கோவிலின் 6ம் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில் சம்பவம் மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றதாகவும் சித்தங்கேணி பிள்ளையார் கோவிலின் கணக்கு வழக்குத் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் வாக்குவாதப்பட்டதை கேட்கக் கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்தார். சற்று நேரத்தில் வாக்குவாதம் மோதல்நிலைக்குச் செல்ல தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் வாளை எடுத்து வெட்டியதாகவும் அப்பக்தர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

சித்தங்கேணி சிவன் கோவிலும் பிள்ளையார் கோவிலும் சித்தங்கேணிச் சந்தியின் இரு புறமும் அருகருகே உள்ள ஆலயங்கள். இந்த ஆலயங்களின் நிர்வாகசபையில் உள்ளவர்களும் பெரும்பாலும் அதே உறுப்பினர்களாக இருப்பர். இந்த மோதலில் சம்பந்தப்பட்ட இருவருமே இரு ஆலயங்களினதும் நிர்வாகசபையில் உள்ளவர்களே.

தமிழ் பிரதேசங்கள் வன்முறை சம்பவங்கள் மலிந்த பிரதேசங்களாக மாறியுள்ள சூழலில் ஒழுக்கம் பண்புகளைப் பேண வேண்டிய ஆலயத்தில் வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவதற்காக உழைக்க வேண்டிய அரசியல் கட்சியினரே இந்த வாள்வெட்டை மேற்கொண்டும் உள்ளமை தமிழ் பிரதேசங்கள் எதிர்கொள்ளும் ஆபத்தினை கட்டியம் கூறுபவையாக உள்ளன.

தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் இளைஞர்களின் காடைத்தனங்களின் பின்னால் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாப தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு ஆண்டுகளாக இருந்து வருகின்றது. கடைத்தனங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு மாறாக அவர்களை சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வெளியே எடுத்து தங்கள் கட்சியின் நலன்களுக்கு பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டுகள் சமூகவலைத்தளங்களில் பரவலாக பதிவுசெய்யப்பட்டு உள்ளது. இந்தப் பின்னணியிலேயே நேற்று தமிழ் தேசிய முன்னணயின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே பட்டப்பகலில் ஒரு ஆலய வளாகத்தில் அடியார்கள் முன்னிலையில் வாள்வெட்டில் ஈடுபட்டுள்ளார்.

ஆலயத்தை பாரம்பரியமாக பராமரித்து வருபவர்களிடம் பிடுங்கிக் கொண்ட புதிய நிர்வாகத்தினர் தற்போது ஆலயத்தை மிகமோசமான முறையில் பரிபாலனம் செய்வதாக பெயர் குறிப்பிடவிரும்பாத அடியார் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இதன் உச்சகட்டம் தான் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தாக்குதலில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் தற்போதைய யாழ் மேயர் மணிவண்ணனுக்கு ஆதரவானவர் என்றும் இந்த அணியிலேயே வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடைய பலர் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது. இவர்களுடைய மிரட்டல்களுக்கு அஞ்சியே யாழ் ஊடகங்கள் சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினரின் கட்சியை குறிப்பிடுவதைத் தவிர்த்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் சிவகுமார் கஜேன் மரணித்து இருந்தார். இவருடைய மரணம் கொலையாக இருக்கும் என்ற சந்தேகம் எழுவதற்கும் கட்சியின் வன்முறை போக்கே காரணம் என நம்பப்படுகின்றது. ஆனால் சிவக்குமார் கஜேனின் மரணம் தற்கொலை என இறந்தவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காதலித்த பெண்ணை மணக்க அனுமதியாமல் மற்றுமொரு பெண்ணுடன் திருமணத்திற்கு நிர்ப்பந்தித்ததாலேயே சிவக்குமார் கஜேன் தற்கொலை செய்துகொண்டதாக இராமாவில் பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை தெரிந்ததே

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் யாழ் மேயர் மணிவண்ணனும் யாழில் நடைபெறும் வன்மறைச் சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பான முறையில் செயற்பட வேண்டும். கட்சிக்குள் வன்முறையைக் களையும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வன்முறையுடன் தொடர்புபட்டவர்களை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். தங்களுடைய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களே ஒவ்வொருவராக தற்கொலை செய்வதை பொருட்படுத்தாமல் இருந்துகொண்டு சமூகத்துக்கு எப்படி இவர்களால் வழிகாட்ட முடியும்.

யாழ்ப்பாணம் நல்லலூரடியில் ஒடுக்கபட்ட சமூகப் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வந்த போது துரிதகதியில் வந்து அவர்களை விரட்டியடிக்க முழுமூச்சுடன் செயற்பட்ட மேயர் மணிவண்ணன் குழுவினர் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் வன்முறை தொடர்பிலும் அவர்களின் தற்கொலைகள் தொடர்பிலும் துரிதகெதியில் செயற்பட வேண்டும்.