சி.வி.விக்னேஸ்வரன்

சி.வி.விக்னேஸ்வரன்

“3000 வருடங்களாக இருந்த தமிழ் மக்களை ஓரங்கட்டிவிட்டு முழு நாடும் எங்களுடையது என்பது அசாதாரண விடயமாகும்” – சி.வி. விக்னேஸ்வரன்

“3000 வருடங்களாக இருந்த தமிழ் மக்களை ஓரங்கட்டிவிட்டு முழு நாடும் எங்களுடையது என்பது அசாதாரண விடயமாகும்” என  நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா கூட்டத் தொடரின் போது செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜெனீவாவில் என்ன செய்ய வேண்டுமென்பது தொடர்பாக வட, கிழக்கிலுள்ள மூன்று கட்சிகளும் இணைந்து கலந்துரையாடினோம். இந்த நிலையில் எதிர்வரும் காலத்தில் என்ன வேண்டும்? என்பது தொடர்பாக பேசுவதற்கும் நாங்கள் குழுவொன்றை நியமித்துள்ளோம்.

இந்த நிலையில், அந்தந்த இடங்களிலுள்ள மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளவதோடு தங்களைத் தாங்களே ஆட்சி செய்ய வேண்டுமென்றே சட்டங்களும் கூறுகின்றன. அதன்படியே, அந்தந்த இடங்களிலுள்ள மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை தாங்களே நிவர்த்தி செய்து கொண்டு தங்களை ஆட்சி செய்வதற்கு இடமளிக்குமாறே நாங்களும் கோருகின்றோம். மாறாக, மத்திய அரசாங்கம் எங்களை அடிபணிய வைத்து ஆட்சி செய்யும் போது எங்களால் எதனையும் செய்ய முடியாது.

இதேவேளை, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது நாங்கள் முன்வைக்கும் எந்தவொரு யோசனையையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது. குறிப்பாக, வட, கிழக்கில் ஆரம்பத்தில் சிங்கள மக்கள் இருந்ததாகவும் தற்போதே தமிழ் மக்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், அது மிகப் பெரிய பொய்யாகும். வட , கிழக்கில் அதிகளவான சிங்கள மக்கள் இருக்கவில்லை. 3000 வருடங்களுக்கு மேலாக தமிழ் பேசும் மக்களே அங்கு இருக்கின்றனர். சிங்கள மொழியானது 1400 வருடங்களுக்கு முன்னே பிறந்தது. அவ்வாறாயின் 3000 வருடங்களாக இருந்த மக்களை ஓரங்கட்டிவிட்டு முழு நாடும் எங்களுடையது என்பது அசாதாரண விடயமாகும்” என்றார்.

“சுமந்திரன் பொய் கூறுவதை நிறுத்த வேண்டும்” – சி.வி.விக்னேஸ்வரன்

“சுமந்திரன் தனது திறமைகளைத் தமிழ் மக்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தாமல், அரசாங்கத்தின் நன்மைகளுக்காக பயன்படுத்தி வருவதே அவர் மீதான முரண்பாடுகளுக்கு காரணம்” என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

ஐ. நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக வவுனியாவில் செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ள தாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என தமிழ் மக்கள் கூட்டனியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

குறித்த விடயம் தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார் .

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐ. நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக வவுனியாவில் செய்தியாளர்கள் மத்தியில் கூறி இருப்பதாக ஊடகங்களில் படித்தேன்.

சுமந்திரனின் இந்த கூற்றில் எந்த உண்மையும் இல்லை. இது அப்பட்டமான பொய். இந்த வரைபை தான் தயாரிக்கவில்லை என்றும் வேறு யாரோ தான் தயாரித்துள்ளார்கள் என்பதை அறிந்ததும் நான் இணக்கம் தெரிவித்துள்ளதாக வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போல இந்த கடித விவகாரம் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்துவரும் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைகின்றன. சுமந்திரன் எனது பார்வைக்காக அனுப்பிய கடிதத்தை தான் வரையவில்லை என்றும் புலம்பெயர் அமைப்பு ஒன்றே வரைந்ததாகவும் கூறிவருகிறார்.

எது உண்மை எது பொய் என்பது எனக்கு தெரியாது. ஆனால், இந்த கடித்தை எனக்குத் தந்தது சுமந்திரனே. எனக்கு இந்த வரைபைத் தந்த சுமந்திரன் அதனைத் தயாரித்தது வேறு யாரோ என்று எதுவும் குறிப்பிட்டதாக எனக்கு ஞாபகமில்லை. “நாங்கள்” என்ற பதத்தைப் பாவித்ததாகவே எனக்கு நினைவு.

இந்த வரைபை படித்து பார்க்கின்ற எவருக்குமே இந்த வரைபின் நோக்கம் அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் சபையில் முன்னைய தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு மேலும் காலம் வழங்குவதே என்பது புலன் ஆகும். இதில் எந்த மயக்கமும் இருக்க முடியாது. சுமந்திரன் எனக்கு அனுப்பிய வரைபை நான் பகிரங்கப்படுத்தவில்லை. அதற்கு நான் அளித்த பதிலையே பகிரங்கப்படுத்தினேன். இவ்வாறு நான் பகிரங்கப்படுத்தியதனால் தான் அவரது கபடத்தனமான முயற்சி முறியடிக்கப்பட்டது.

நான் என் பதிலைப் பகிரங்கப்படுத்தியமை காரணமாக அரசாங்கம் நாம் என்ன செய்கின்றோம் என்று விழித்துக்கொண்டு விட்டது என்று நகைப்புக்கிடமான கருத்துக்களைக் கூறி வருகிறார். உண்மையில் சுமந்திரனின் வரைபு அரசாங்கத்தைக் காப்பாற்றும் ஒரு முயற்சி. இதில் அரசாங்கம் கோபப்பட என்ன இருக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை.

சுமந்திரனின் கருத்துடன் உடன்பட மறுத்து பெரும்பான்மையான புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கூட்டாக ஒரு வரைபை தயாரித்து அனுப்பி இருந்தார்கள். அந்த வரைபில் சர்வதேச நீதிமன்றம் (நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும்), நீதிக்கான சர்வதேச நீதிமன்றம், சர்வதேச சுயாதீன விசாரணை போன்ற அடிப்படையான விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இந்த வரைபுக்கு நான் இணக்கம் தெரிவித்துள்ளேனே தவிர சுமந்திரனின் வரைபுக்கு அல்ல. அதேவேளை, மனித உரிமைகள் சபை ஆணையாளர் மற்றும் சபையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பும் பொருட்டு மிகவும் இறுக்கமான ஒரு வரைபை தயாரித்து ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இணக்கம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

இதேவேளை, வவுனியாவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சுமந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் மனித உரிமைகள் சபை தொடர்பிலான பொதுவான வரைபு ஒன்றை தயாரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். இது நல்ல விடயம். மூன்று கட்சிகளுக்கும் இடையே இது தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுவதற்கு என்னால் ஆன ஒத்துழைப்பை வழங்குவேன். குறித்த வரைபு எது என்று இதுவரையில் தெரியாது.

ஆனால், அடிப்படை விடயங்களில் விட்டுக்கொடுப்பதற்கு நான் தயார் இல்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் ஆகியவை சாத்தியம் இல்லை போன்ற கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இவை சாத்தியமோ? சாத்தியம் இல்லையோ? பாதிக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் கிடைக்கின்ற எல்லா வழிகளையும் நாம் முயற்சிக்க வேண்டும். சரிவராதுவிட்டால் பரவாயில்லை. வெற்றி தோல்விகள் என்னைப் பொதுவாகப் பாதிப்பதில்லை.

ஆனால், இவற்றுக்காக முயற்சிப்பது சர்வதேச ரீதியில் நீதிக்கான எமது போராட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்வதற்கு வலுவான ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தித் தரும் என்பது எனது நம்பிக்கை. அதேவேளை, நாம் கடும்போக்கு நிலையில் நின்றால், ஐ. நா மனித உரிமைகள் சபையின் பிடியில் இருந்து இலங்கை விடுபட்டுபோகும் என்ற அர்த்தம் அற்ற கருத்துக்களையும் நான் நிராகரிக்கின்றேன். நாம் கேட்பது எதுவுமே கடும்போக்கு அல்ல. அவை நீதியின் பாற்பட்ட நியாயமான கோரிக்கைகளே.

இறுதியாக, சுமந்திரன் பொய் கூறுவதை நிறுத்த வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுக்கின்றேன். மூன்று நாட்களுக்கு முன்னர்தான் அவருக்கும் எனக்கும் இடையில் எந்தவித தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை என்றேன். அவருக்கு எனக்கெதிராக ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதைச் சொல்லட்டும். அதை விட்டு விட்டு பொய் கூற விழையக் கூடாது.

சுமந்திரன் தனது திறமைகளைத் தமிழ் மக்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தாமல், அரசாங்கங்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தி வருவதே எனக்கும் அவருக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு காரணமாகும். விரைவில் அவர் இந்த நிலைமையில் இருந்து விடுபட்டு, தனது சொந்த மக்களுக்கு நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதை புரிந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதற்கு முன்வருவார் என்று நம்புகிறேன்.

அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வை புதிய அரசியல் யாப்பினுடாகத் தரும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் செயற்படாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேரில் தன்னை ஆதரித்த மக்களுக்காகவும் தமிழ்த் தேசியத்துக்காகவும் உண்மையாக உழைக்க முன்வருமாறு அவரை அன்புடன் வேண்டுகின்றேன்” எனவும் அந்த அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

“அரசாங்கம் ஏற்கனவே பெரும்பான்மை மக்களுக்கான ஒரு அரசியல் யாப்பு வரைவை தயார் செய்து விட்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாகப் பாசாங்கு செய்கிறது”  – சி.வி.விக்னேஸ்வரன்

“அரசாங்கம் ஏற்கனவே பெரும்பான்மை மக்களுக்கான ஒரு அரசியல் யாப்பு வரைவை தயார் செய்து விட்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாகப் பாசாங்கு செய்கிறது”  என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்

புதிய அரசியல் யாப்பு பற்றிய தமிழ் மக்கள் கூட்டணியின் கருத்துக்களை அனுப்பிய போது, இதனையும் தெரிவித்துள்ளார்.

அந்தக்கடிதத்தில் க.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அண்மையில் நீதி அமைச்சினால் பொது மக்களிடம் இருந்து அரசியல் யாப்பு பற்றிய கருத்துக்களைக் கோரியது சம்பந்தமானது இக்கடிதம். மேன்மைமிகு மற்றும் படித்த பெரியோர்கள் உங்கள் நிபுணத்துவ குழுவை அலங்கரித்துக் கொண்டிருப்பினும் எங்களுடைய அதுவும் முக்கியமாக தமிழ் மக்களின் கருத்துரைகள் எதுவுமே உங்கள் குறித்த குழுவினால் பரிசீலிக்கப்பட மாட்டாது என்பது எமது பார்வை பாற்பட்ட கருத்தாகும்.

எமது சந்தேகப்படி பெரும்பான்மை சமூகத்தவருக்கு சார்பான ஒரு அரசியல் யாப்பு வரைவை நீங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்துக் கொண்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாகப் பாசாங்கு செய்து ஈற்றில் ஏற்கனவே தயாரித்த குறித்த வரைவை வெளிவிடுவதே உங்கள் எண்ணம் என்று நாம் கருதுகின்றோம்.

எம்மிடம் கருத்துக்கள் கோரி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தமைக்கு காரணம் எல்லோரினதும் கருத்துக்களையும் கேட்டறிந்தோம் என்று உலகத்திற்குப் பறைசாற்றவே என்று நாம் எண்ணுகின்றோம்.

இவ்வாறான எமது கருத்துக்கு வலுச் சேர்ப்பது என்னவென்றால் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிற்கு எம்மிடம் இருந்து தமிழ்ப் பெயர்களைப் பெற்றபின் முதலில் முற்றிலும் சிங்கள மக்களைக் கொண்ட ஆணைக்குழுவையே நீங்கள் நியமித்தீர்கள். அதுவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இவ்வாறான பெரும்பான்மையினரை மட்டுமே நியமித்தீர்கள். பொதுமக்கள் தமது ஏமாற்றத்தை வெளியிடப் போய் பின்னர் ஒரு தமிழரும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

ஆகவே பெரும்பான்மையினருக்கு மட்டுமே சார்பான ஒரு அரசியல் யாப்பையே இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. நாட்டின் பல்வேறு வகைபாடுகளையும் பன்மைத்துவத்தையும் கருத்தில் எடுத்து அதற்கேற்ப ஒரு அரசியல் யாப்பு வரைவு கொண்டுவரப்படும் என்று நாங்கள் நம்பவில்லை.

ஏழு மாகாணபெரும்பான்மையினர் தமக்கு இயைபான சட்டத்தை இயற்றி மற்றைய இரு மாகாண பெரும்பான்மையினரின் உரிமைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பாதிக்கும் வண்ணம் நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக நாம் கணிக்கின்றோம். கடந்த 3000 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப் பேசும் பெரும்பான்மையிரே இவ்விரு மாகாணங்களிலும் இருந்து வந்துள்ளார்கள் என்பதே உண்மை.

ஆனால் புதிய அரசியல் யாப்பைத் தயாரிக்கும் செயற்பாட்டில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை என்ற அவச்சொல் வராதிருக்கவே நாம் எமது கருத்துக்களை பிறிதொரு ஆவணத்தில் உள்ளடக்கி இத்துடன் இணைத்துள்ளோம்.

11 விடயங்கள் பற்றி எமது கருத்துக்களைக் கோரி 12வதாக மேற்படி 11ல் உள்ளடங்காதவற்றைப் பற்றி குறிப்பிடலாம் என்று கூறியுள்ளீர்கள்.

ஆனால் நாம் முன்னுரையாக சில விடயங்களைக் கட்டாயமாக எடுத்துக்கூற வேண்டியுள்ளது. இதில் நாம் கடந்தகால உண்மைகளைச் சுட்டிக் காட்டியுள்ளோம். அரசாங்கம் வேண்டுமெனில் முன்னர் செய்த அதே தவறுகளை இம்முறையும் இழைக்காது இந்தப் புதிய முயற்சியின் போது இந் நாட்டின் சகல இன மக்களினதும் எதிர்பார்ப்புக்களையும் அரசியல் அபிலாஷைகளையும் நிறைவுசெய்யும் விதத்தில் ஒரு தகுந்த அரசியல் யாப்பை வரைந்துநாடாளுமன்றத்தில் பதிந்து நிறைவேற்றலாம்.” என  குறிப்பிட்டுள்ளார் விக்கினேஸ்வரன் .

“சிங்கள மக்களை நாம் என்றும் எமது விரோதிகளாகக் கருதவில்லை. மாறாக எமது பகுதிகளில் எம்மை நாமே ஆளக்கூடிய வகையிலான ஒரு கூட்டுச் சமஷ்டி முறையிலான தீர்வையே நாம் விரும்புகின்றோம்” – ‘அழிக்கப்படும் சாட்சியங்கள்’ நூல் வெளியீடு விழாவில் சி.வி.விக்னேஸ்வரன் !

“சிங்கள மக்களை நாம் என்றும் எமது விரோதிகளாகக் கருதவில்லை. மாறாக எமது பகுதிகளில் எம்மை நாமே ஆளக்கூடிய வகையிலான ஒரு கூட்டுச் சமஷ்டி முறையிலான தீர்வையே நாம் விரும்புகின்றோம்” என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ‘அழிக்கப்படும் சாட்சியங்கள்’ நூல் வெளியீடு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,

இன்றைய இந்த நூல் வெளியீட்டு விழா சற்று வித்தியாசமானது. எத்தனையோ புத்தக வெளியீடுகள், நூல் ஆய்வரங்குகள் ஆகியவற்றில் கலந்துகொண்டு அவ்வந்த நூல்களின் இலக்கியச்சுவைகள் பற்றியும், தமிழ் மொழி நடை பற்றியும், வட்டார வழக்குகள் பற்றியும், உலக நடப்புக்கள் பற்றியும், மதம், இலக்கியம், வரலாறு, சமூகவியல், சட்டம், அரசியல் பற்றி எல்லாம் பல விதமான உரைகளை உரையாற்றியிருக்கின்றோம். ஆனால் இன்றைய இந்த ஆவணக் கையேட்டை சற்று கனத்த மனதுடன் துக்கம் தொண்டையை அடைக்க வெளியீடு செய்ய வேண்டிய ஓர் துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகியிருக்கின்றோம்.

IMG 20201227 WA0030

இந்த நூலில் ஆராய்வதற்கோ அல்லது விமர்சிப்பதற்கோ எந்த மொழி நடையோ இலக்கியச் சுவையோ ஆழமான கருத்துக்களோ இல்லை. மாறாக துன்ப வலிகளைச் சுமந்து கொண்டு நடைப்பிணங்களாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்து இறுதியில் மரணத்தைத் தழுவிக் கொண்ட எம்மிடையேயான ஒரு மக்கள் தொகுதியின் நினைவுகளும் புகைப்படங்களுமே இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன. அறவழிக் கண்ணீர் போராட்டங்களின் போது கண்ணை மூடிய கணிசமான எம் மக்களின் நினைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணக் கையேட்டு வெளியீட்டு வைபவம் அவர்களுக்கான கண்ணீர் அஞ்சலியாகவே நடைபெறுகின்றது.

இந்த நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகளைத் தொடர்ந்து பல்வேறுபட்ட இளைஞர் யுவதிகள் வகைதொகையின்றி இராணுவப் படைகளாலும் புலனாய்வுப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களைத் தேடி அலைந்த அவர்களின் பெற்றோர்கள், பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள் எனப் பலர் தமது இறுதி மூச்சுவரை மகனை அல்லது மகளை அல்லது சகோதர சகோதரிகளை அல்லது உற்றவரை, உறவினரைத் தேடி அலைந்து, அவர்களுக்காக நீதிகோரிய போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு இறுதியில் நோய் வாய்ப்பட்டு இறப்பைத் தழுவிக் கொண்ட 74 பேரின் பதிவுகள் இந்த நூலில் காணப்படுகின்றன. ஏமாறிய நிலையில் இவ்வுலகைவிட்டு ஏகியவர்களின் விபரக்கோவையே இன்று வெளியிடப்படும் நூல்.

IMG 20201227 WA0028

பண்டைய தமிழ் மக்களின் வரலாறுகள், அவர்களின் இருப்புக்கள், பாரம்பரியங்கள் என்பன நூல் வடிவிலோ, ஓலைச் சுவடிகளிலோ அல்லது கற்களில் வடித்தோ முறையாக பேணப்படாமையால் இன்று எமது சரித்திர வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு வருகின்றன. தினம் தினம் மாற்றி எழுதப்பட்டு வருகின்றன. பெரும்பான்மை மக்களின் சாசனங்கள் வாயிலாக வரலாறுகள் தமிழர்க்கு எதிராகத் திரிக்கப்பட்டு எழுதப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாது இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாகிய 3000 வருடங்கள் பழைமை வாய்ந்த தமிழர்களின் வரலாறுகள் நீக்கப்பட்டு கிறீஸ்துவுக்குப் பின் 6ம் 7ம் நூற்றாண்டளவில் வழக்கிற்கு வந்த சிங்கள மொழி பேசுவோரே இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் எனவும் தமிழ் மக்கள் அதன் பின்னைய காலங்களில் குடியேறிய மக்கள் எனவும் சிருஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இனப்படுகொலையின் ஒரு அம்சமாகவே இதனை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

இலங்கைத் தீவை விட சிறிய நாடாகிய சிங்கப்பூரில் பல மொழிகளைப் பேசுகின்ற பல் இன மக்கள் வாழுகின்ற போதும் அந்த நாட்டில் மொழி வேறுபாடு இல்லை. மத வேறுபாடு இல்லை. ஆனால் அங்கு சுபீட்சம் நிலவுகின்றது. நாடும் வளம் பெற்று வளர்ந்து வருகின்றது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

ஆனால் எமது நாட்டில் இரண்டு பிரிவினர்களுக்கிடையே தான் பிரச்சனை வலுவடைந்துள்ளது. நிலவுகின்ற இந்தப் பிரச்சனையை தீர்த்து வைப்பது ஒரு காரியமே அல்ல. எனினும் தமிழ் மக்களுக்கு எதனையும் கொடுத்துவிடக்கூடாது என்ற மனப்பாங்குடன் செயற்படும் சிங்களத் தலைவர்களின் பிழையான வழிகாட்டல்களே தமிழ் மக்கள் மீது பல விதமான ஒடுக்குமுறைகள் தலைவிரித்தாடக் காரணமாக இருந்து வந்துள்ளன.

யுத்தம் நிறைவு பெற்ற 2009ம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்திடம் தமது கணவரை முறையாக கையளித்த பெண்கள், பிள்ளைகளை கையளித்த தாய்மார்கள், சகோதரங்களைக் கையளித்த சகோதரர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் போன்றோரை கையளித்தவர்களை இழிவுபடுத்தும் விதத்தில் அவ்வாறான கையளிப்புக்கள் எதுவும் நடக்கவில்லை அவ்வாறான எந்தவொரு அரசியல் கைதிகளும் தம்மிடம் இல்லை எனக் கூறி இப்போது மறுப்புத் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. அது சம்பந்தமான விசாரணையை நடத்த வேண்டும் என்று உலக நாடுகள் கேட்டுவரினும் அக் கோரிக்கைகளுக்கு இணங்காது தான்தோன்றித்தனமாக இலங்கை அரசாங்கம் நடந்து வருகின்றது. அதுபோலவே இன்றைய கை நூலில் ஆவணப்படுத்தப்படும் வரலாற்றுப் பதிவுகள் தொடர்ந்து எம் கைகளில் கிட்டாமல்ப் போனால் இன்னும் சற்றுக் காலம் செல்ல இந்த நிகழ்வுகள் எல்லாம் பொய்யாகப் புனையப்பட்டவை என ஜெனீவாவிலும் உலக அரங்கிலும் கூறத் தொடங்கிவிடுவார்கள். ஆகவேதான் மரணித்தோரின் பதிவுகள் இந்நூலின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டு வருங்கால நிரூபணங்களாக பதியப்பட்டுள்ளன.

எனவே எமது வரலாறுகள் நன்மையானதோ தீமையானதோ அனைத்தும் ஆவணமயப்படுத்தப்பட வேண்டும் என்பது அத்தியாவசியமாகின்றது. முன்னர் தான் நாம் எமது சரித்திரங்களை எழுதிவைக்கவில்லை. தொடர்ந்தும் அவ்வாறு வாளாதிருப்பது எமக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வளவு கோரக் கொடுமைகளின் பின்பும் தமிழ் மக்கள் அமைதியாக இங்கு இருந்து வருவது பிறநாட்டவர்க்கு வியப்பை அளித்தாலும் ஏதோ ஒரு விடிவு காலம் அண்மையில் வரப் போகின்றது என்ற எண்ணமே எம் மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்து எம்மை ஓட்டி வருகின்றது. காலத்திற்குக் காலம் மாற்றங்கள் ஏற்படுவதே மனித வாழ்க்கை. தொடர்ந்து கஷ்டத்தையே எம் மக்கள் அனுபவித்து வரவேண்டிய அவசியமில்லை. விடிவு விரைவில் வரும் என நம்புவோம்.

தமிழ் மக்கள் என்றுமே சிங்கள மக்களை அடக்கி ஆளவோ அல்லது அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கவோ விரும்பவில்லை. மாறாக தாம் வாழுகின்ற பகுதிகளில் தம் மக்கள் சுபீட்சத்துடன் வாழ தம்மைத் தாமே ஆளக்கூடிய வகையிலான ஒரு ஆட்சி முறைமையையே விரும்புகின்றார்கள். இதை சர்வதேசச் சட்டம் அங்கீகரிக்கின்றது. ஆனால் பேரினவாதிகளோ இந்த நாடு முற்றுமுழுதாக சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு சிங்கள பௌத்த தேசம் எனவும் சிறுபான்மை மக்கள் தாம் போடுகின்ற பொரியை உண்டு விட்டு கைகட்டி வாய் பொத்தி தங்களுக்கு சேவகம் செய்ய வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றார்கள். அதன் விளைவே சில காலங்களுக்கு முன்பு அவர்கள் அனுபவித்த துன்பங்களுக்கான மூலாதாரங்கள்.

எம் மக்கள் ஏற்கனவே முப்பது ஆண்டுகளுக்கு மேலாக துன்பச் சுமைகளைச் சுமந்து பழக்கப்பட்டவர்கள். அவர்களின் எந்த அழுத்தங்களையோ அல்லது அவர் தரும் துன்பங்களையோ கண்டு எம்மவர் துவண்டுவிடமாட்டார்கள். ஒரு நாள் பேரழிவையே தாங்கமாட்டாத இந்தப் பேரினவாதிகளுக்கு அடி மழை, வெள்ளங்கள் ஏற்பட்ட காலத்தில் முதலாவது உதவி, அக்காலத்தில் தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானித்த தலைவர்களிடமிருந்தே, எடுத்துச் செல்லப்பட்டது என்பது வரலாற்று உண்மை. மாத்தறையில் உலர் உணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்ட பௌத்த பிக்குமார்கள் வெளிப்படையாக இயக்கங்களிற்கு நன்றி தெரிவித்தார்கள்.

இன்றும் நாம் அதையே நினைவுகூர விரும்புகின்றோம். சிங்கள மக்களை நாம் என்றும் எமது விரோதிகளாகக் கருதவில்லை. மாறாக எமது பகுதிகளில் எம்மை நாமே ஆளக்கூடிய வகையிலான ஒரு கூட்டுச் சமஷ்டி முறையிலான தீர்வையே நாம் விரும்புகின்றோம். காரணம் ஒற்றையாட்சிக்குக் கீழ் பெரும்பான்மையினரின் ஆதிக்க வெறியாட்டம் இதுவரையில் நாம் அறிந்த உண்மையே. சமஷ்டி என்கின்ற ஒரு சொல்லைக் கேட்டவுடனேயே நாக பாம்பை மிதித்துவிட்டவர்கள் போல சிங்கள அரசியல்வாதிகள் துள்ளிக் குதிக்கின்றார்கள். நாட்டைக் கூறு போடப் போகின்றோம் என்று கூச்சலிடுகின்றார்கள், ஓலமிடுகின்றார்கள். உண்மை நிலையை விளங்கிக் கொள்ளாத சிங்கள மக்களும் அதனை நம்பி தமிழ் மக்கள் மீது வன்முறையில் ஈடுபட எத்தனிக்கின்றார்கள்.

சிங்களக் குடிமக்கள் பழகுவதற்கு இனியவர்கள். பண்பானவர்கள். ஆனால் இனம் என்று வருகின்ற போது சுயநலம் மிகுந்த அரசியல் தலைவர்களின் வன்முறை அரசியல் கலாச்சாரத்தின் தூண்டலில் இவர்கள் வன்முறையாளர்களாக மாறுகின்றார்கள். உடமைகள் அழிக்கப்படுகின்றன. உயிர்கள் அழிக்கப்படுகின்றன. நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இவ்வாறாக இன்னோரன்ன துன்பங்களைத் தமிழ் மக்களுக்குப் புரிவதற்கு அவர்கள் தூண்டிவிடப்படுகின்றார்கள்.

நான் வன்முறைக் கலாசாரத்தை விரும்புவதில்லை. மாறாக நீதியின் வழியில் எமக்கு கிடைக்க வேண்டிய சகல உரித்துக்களும் நேர்மையான அரசியல் முன்னெடுப்புக்கள் வழியாகக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பவன். ஆனால் தொடர்ச்சியான வன்முறைகளும் அடக்குமுறைகளும் நில அபகரிப்புக்களும் முப்படைகளின் உதவியுடன் தமிழ் மக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் பல புரியப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிங்களப் பொது மக்கள் இடையே உண்மையை உணர்த்த வேண்டும். உலக நாடுகளுக்கும் உண்மையை உரக்கக் கூறவேண்டும். சட்டத்தின்பாற்பட்ட சகல நடவடிக்கைகளையும் தவறாது எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தற்போது மேலோங்கியுள்ளது.

இறையருளால் குற்றம் இழைத்தவர்கள் தமது குற்றங்களை உணர்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. எது எப்படியோ எமக்குரிய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான எமது நடவடிக்கைகள் தொடர வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களையும் அவர்களின் இருப்புக்களையும் உறுதி செய்யும் வரையிலும் எதுவித குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாத நிலையில் பல ஆண்டுகளாக சிறையில் வாடுகின்ற எமது இளைஞர் யுவதிகள் விடுவிக்கப்படும் வரையிலும் எமது பணி ஓயாது. மக்கள் நலனுக்காக நாம் யாவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற முன்வருவோமாக! இந்த நூல் வெளியீடு எம் மக்கட் தலைவர்களை ஒன்று சேர்ப்பதாக! நூல் வெளியீட்டாளர்களுக்கு எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த நாடு சிங்களவர்களுடையது, அவர்கள் தான் சிறுபான்மை மக்களுக்கு கொடுப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் நிலைப்பாட்டில் சரத் வீரசேகர உள்ளார் ” – சி.வி.விக்னேஸ்வரன்

“இந்த நாடு சிங்களவர்களுடையது, நாங்கள்தான் சிறுபான்மை மக்களுக்கு கொடுப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் நிலைப்பாட்டில் சரத் வீரசேகர உள்ளார் ” என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முறைமை தேவையற்றது என அமைச்சர் சரத் வீரசேகர, பல இடங்களில் தெரிவித்து வருகின்ற கருத்து தொடர்பாக இன்று (21.12.2020), சி.வி.விக்னேஸ்வரனிடம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

குறித்த கேள்விக்கு பதில் வழங்கும்போதே க.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு சொல்லும் போது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வேறு சிலர் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடந்தவுள்ளதாக கூறுகின்றார்கள். ஆகவே அரசாங்கம் அவ்வாறும் கூறுகின்றது இவ்வாறும் கூறுகின்றது . சரத் வீரசேகர கூறுவது தமிழ் மக்களுக்கென்று எந்தவிதமான அதிகாரப் பகிர்வும் கொடுக்கக் கூடாது. இந்த நாடு சிங்களவர்களுடையது, நாங்கள்தான் சிறுபான்மை மக்களுக்கு கொடுப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் நிலைப்பாட்டில் உள்ளார்.

அவருடைய கருத்து பிழையானது என்பதனை நான் பல தடவைகள் எடுத்துக்கூறி வந்திருக்கின்றேன். உதாரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்கள் எந்த காலத்திலும் பெரும்பான்மையாக இருக்கவில்லை. சரத் வீரசேகர பிழையான கருத்துக்களை பிழையான அடிப்படையில் வெளியிட்டு வருகின்றார். அவர் அவ்வாறு செய்வதால் நாட்டு மக்களிடையே  நல்லுறவும்  ஒற்றுமையும் ஏற்படாது என்பதனை அவர் மனதிலே வைத்திருக்க வேண்டும்.

எனவே அவருடைய கருத்தை வட.கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சுமந்திரனால் எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாளாக்க முடியாது. அதுவும் அவருக்கு சட்டம் படிப்பித்த ஆசிரியரை முட்டாளாக்கப் பார்ப்பது குருத்துரோகம் ஆகும் ” –  சி. வி விக்னேஸ்வரன்

சுமந்திரனால் எல்லாக் காலத்திலும் எல்லோரையும் முட்டாள் ஆக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எதிர்வரும் மார்ச் மாத அமர்வையொட்டி சர்வதேச சமூகத்தை ஐக்கியப்பட்டு அணுகுவதற்காகத் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான  எம்.ஏ.சுமந்திரன் வரைவு ஒன்றின் உள்ளடக்கம் பற்றி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். இந்நிலையில் இருவருமே சுமந்திரனின் வரைவு அரசுக்கான கால அவகாசம் வழங்குதாக கூறி அதனை நிராகரிப்பதாக கூறியிருந்தனர்.

இதற்கு “விக்கினேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் பொய்யான, விஷமத்தனமான பிரசாரம் செய்கின்றனர்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையில் இது பற்றி கூறும்போதே சி.வி.விக்னேஸ்வரன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

திரு.சுமந்திரன் அவர்கள் சிலரை எல்லா காலத்திலும் முட்டாள்கள் ஆக்கலாம். பலரை சில காலம் முட்டாள்கள் ஆக்கலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாள் ஆக்கமுடியாது. அதுவும் அவருக்கு சட்டம் படிப்பித்த ஆசிரியரை முட்டாளாக்கப் பார்ப்பது குருத்துரோகம் ஆகும்.

நானும் கஜேந்திரகுமாரும் பொய் சொன்னதாகக் கூறியுள்ளார். அவர் கூறுவது சரியா? அல்லது கஜேந்திரகுமாரும் நானும் கூறுவது சரியா? என்பதை அவரால் எம்மிடம் கையளிக்கப்பட்ட கடித வரைவை மொழி பெயர்த்தால் தெரிந்துவிடும். அவர் அனுமதி அளித்தால் குறித்த கடிதத்தை மொழி பெயர்த்துக் கொடுக்க முடியும்.அதில் தமது சிபார்சுகள் என்று கூறி முதலில் அவர் அங்கு கூறியிருப்பது இலங்கை உட்பட ஒரு தடவை அல்லது மூன்று தடவைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அங்கத்தவர்கள் யாவரினதும் சம்மதத்துடன் இயற்றியது போன்ற ஒருகூட்டத் தீர்மானத்தை 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இயற்ற வேண்டும் என்பதே.

அதாவது முன்னர் மூன்று முறை காலக்கெடு அளித்தது போல் மேலும் ஒரு முறை காலக்கெடு அளிக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம். இதில் எந்த மயக்கமும் இல்லை.

அவர் தமது சிபார்சுகளின் பின்னர் அதாவது சிபார்சுகளுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்களினால் முன்னர் செய்த காரியங்களை அவர் குறிப்பிடுகின்றார். அதில் சிரியா பற்றியும் மியன்மார் பற்றியும் குறிப்பிடுகின்றார். ஆனால் அந்த நாடுகள் சம்பந்தமாகச் செய்தது போல் இலங்கை சம்பந்தமாகவும் பொறிமுறைகளை இயற்றுங்கள் என்று எங்குமே அவர் கூறவில்லை. இதைத்தான் அளாப்பிறது என்று கிராமங்களில் கூறுவார்கள் சுமந்திரன் அளாப்புகின்றார்!

ஆனால் எம்மிடம் இருந்து பதில் வர முன்னரே குறித்த கடிதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கும் ஏனையோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அறிகின்றேன். எம்மிடம் எமது கருத்துக்களைக் கோரிவிட்டு அதற்கு முன்னர் குறித்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தால் அது வருத்தத்திற்குரியது. ஆனால் இப்பொழுதும் அனைவரின் சம்மதத்துடன் புதியதொரு வரைவை அனுப்பலாம். அத்துடன் மைய நாடுகளுடனும் பேசவேண்டியிருக்கின்றது.
அடுத்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கின்றீர்கள்.

பொதுவாக இரண்டு விடயங்களைப் பலர் அடையாளம் கண்டுள்ளார்கள். ஒன்று ஐ.சீ.சி என்னும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு இலங்கையைப் பாரப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அல்லது இலங்கைக்கென நியமிக்கப்படும் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் முன் இலங்கையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதனைச் சம்பந்தப்பட்ட ஒரு அங்கத்துவ நாட்டின் ஊடாகச் செய்ய வேண்டும். அடுத்தது சர்வதேச சுதந்திர விசாரணைப் பொறிமுறையொன்றை நிறுவி அதைக் கொண்டு இலங்கையில் நடந்த மிக ஆபத்தான சர்வதேசக் குற்றங்களையும் சர்வதேசச் சட்ட மீறல்களையும் பற்றிய சாட்சியங்களைச் சேகரித்து அவற்றை ஒன்றுபடுத்தி, பாதுகாத்து அவற்றை ஆய்வு செய்யவும் அவை தொடர்பாக உரிய கோவைகளைத் தயாரித்து சர்வதேசச் சட்ட முறைமைக்கேற்றவாறு நியமிக்கப்படும் நீதிமன்றங்களில் அல்லது தீர்ப்பாயங்களில் நடைபெறும் குற்றவியல் நடவடிக்கைகளில் அக் கோவைகளை சமர்ப்பித்து நீதியும் சுதந்திரமானதுமான விசாரணைகளை விரைவாக நடத்த அனுசரணை வழங்கும் விதத்தில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் சமாந்திரமாக சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையைக் கொண்டு போவது பற்றியும் பரிசலிக்கப்பட வேண்டும்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையூடாக விசேட ஆய்வாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், காணி அபகரிப்பு போன்றவற்றைக் கண்காணிக்கவும் ஆராயவும் இவ்வாறான ஆய்வாளர் ஒருவரை நியமிக்கக் கோரலாம்.

அதுமட்டுமல்ல. ஒரு சுயாதீனமான விசாரணைப் பொறிமுறையொன்றையும் தாபித்து பொறுப்புக் கூறலையும் போர்க்குற்ற செயல்பாடுகளை ஆராயுமாறும் கோரலாம். இவை பற்றி எல்லாம் ஆராய வெளிநாட்டு சர்வதேசச் சட்ட வல்லுநர்களுடன் நான் தொடர்பில் இருக்கின்றேன். மைய நாடுகளுடன் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது.தமிழ் தரப்பார் யாவரும் சேர்ந்து ஒரு கோரிக்கை விடுத்தால் நாம் அதன்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஜெனிவாவில் இருக்கும் பிரித்தானியத் தூதுவர் கூறியுள்ளார். ஆகவே நாங்கள் மேலும் கால அவகாசம் கொடுக்காது, இலங்கைக்கு எதிராக செய்ய வேண்டியவற்றை மைய நாடுகள் துணை கொண்டு செய்ய வேண்டும். அதற்கு சகல தமிழ்த் தரப்பாரும் ஆதரவு வழங்க முன்வரவேண்டும். எமது ஒற்றுமையே இந்த தருணத்தில் எமக்குப் பலமாகும் என தெரிவித்துள்ளார்.

“தமிழர்கள் தோற்கடிக்கப்பட்ட மக்களாகவே இங்கு நடத்தப்படுகிறார்கள். நாங்கள் எவரும் தோற்கடிக்கப்படவில்லை. நாம் சுதந்திரத்துக்கான தீபத்தை ஏந்திக்கொண்டிருக்கிறோம் ” – பாராளுமன்றில் சி.வி.விக்னேஸ்வரன் !

“நீங்கள் தமிழர்களை சக மனிதர்களாக அன்றி தோற்கடிக்கப்பட்ட மக்களாகவே இந்த தீவில் தொடர்ந்து நடத்துகிறீர்கள். நாங்கள் எவரும் தோற்கடிக்கப்படவில்லை. நாம் சுதந்திரத்துக்கான தீபத்தை ஏந்திக்கொண்டிருக்கிறோம் ” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று(09.12.2020)  பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“நீதியே இந்த நாட்டின் எல்லா மக்களினதும் இன்றைய எதிர்பார்ப்பாகும். நீதியானது தவிர்க்கமுடியாத வகையில், தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வுடனும் எதிர்காலத்துடனும் பிணைந்துள்ளது. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொடூரமாகவும் இரக்கம் இன்றியும் கொலைசெய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கான நீதியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களுக்கான நீதியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக தமக்கான நீதியை எதிர்பார்க்கிறார்கள். தமது சமூகத்தை சார்ந்த ஒருவர் நீதிக்கு அமைச்சராக இருக்கின்ற போதிலும் முஸ்லிம்கள் தமது ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான நீதியை எதிர்பார்க்கிறார்கள். 2010 ஏப்பிரல் 21 ஆம் திகதி குண்டுவெடிப்புக்களில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதியை கத்தோலிக்க மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நீதியும் சமாதானமும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. உடல், உள, புத்தி ரீதியாகவும் தாற்காலிகமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமாதானத்தை அடைவதற்கான முதல் படி அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொள்வதாகும்.

இன்றைய அரசாங்கம் சமாதானத்தை அடைவதற்கும் அதனால் நீதிக்காக உழைப்பதற்கும் தயாராக இருக்கிறதா?

இலங்கைக்குள் உங்களின் சக பிரஜைகளான சுதேச தமிழ் மக்களின் துன்பங்கள், துயரங்கள், பிரச்சினைகள் பற்றி உங்களுக்கு உண்மையான கரிசனை உணர்வு இருக்குமானால் அவர்களின் நிலங்களை அபகரிக்க மாட்டீர்கள். எமது கலாசார சின்னங்களை அழிக்க மாட்டீர்கள். தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு கிழக்கில் பெரும் எண்ணிக்கையான சிங்கள இராணுவத்தை வைத்திருக்கமாட்டீர்கள். பாதிக்கப்பட்டவர்கள் மீதும் நலிந்தவர்கள் மீதும் உணர்வு இருக்குமானால் அவர்களிடம் இருந்து அபகரிக்கமாட்டீர்கள். மாறாக, அவர்களுக்கு கொடுத்து உதவிசெய்து ஆறுதல் கூறுவீர்கள். ஆனால், நீங்கள் எமது நிலங்கள், எமது பாரம்பரிய வாழ்வு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை இல்லாமல் செய்வதில் அக்கறை கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எம்மை சக மனிதர்களாக அன்றி தோற்கடிக்கப்பட்ட மக்களாகவே இந்த தீவில் எம்மை தொடர்ந்து நடத்துகிறீர்கள். நாங்கள் எவரும் தோற்கடிக்கப்படவில்லை. எமது இதயங்களில் இன்னமும் நாம் சுதந்திரத்துக்கான தீபத்தை ஏந்திக்கொண்டிருக்கிறோம்.

அப்பாவிகள் பக்கமாக அன்றி தவறிழைப்பவர்கள் பக்கமாகவே இந்த நாட்டில் நாம் செயற்படுவதை நீதி தொடர்பாக பேசுகின்றபோது நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 1956, 1958,1961,1977,1981 மற்றும் 1983 ஆண்டு இனக்கலவரங்களின்போது கொலைகள், சித்திரவதைகள், தீவைப்பு மற்றும் பாலியல்வல்லுறவுகளில் ஈடுபட்ட ஒருவரையேனும் நாம் தண்டித்திருக்கிறோமா? 97,000 நூல்களையும் ஓலைச்சுவடிகளையும் கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமைக்கு ஒருவரையாவது தண்டித்திருக்கிறோமா? அப்போது தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகச்சிறந்த நூலகமாக அது திகழ்ந்தது. அண்மைக்காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்ட எவரையாவது தண்டித்திருக்கிறோமா? ஆகக்குறைந்தது இந்த விடயங்களில் பொறுப்புக்கூறலுக்காவது முயற்சித்திருக்கிறோமா? தொடர்ந்துவந்த அரசாங்கங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை அமுல்படுத்தி இருக்கிறோமா? இவை எல்லாமே வசதியாக தட்டுக்களில் வைக்கப்பட்டுள்ளன.

ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு தமிழர் அமைச்சர்களாக இருக்கின்ற போதிலும் அதிகாரம் பெரும்பான்மை சமூகத்தின் கைகளிலேயே இருக்கிறது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் எமக்கு எது நல்லது என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்த நாள் முதல் இதுதான் நிலைமை. அனைவருக்குமான நீதி ( inclusive justice ) என்பது இந்த நாட்டில் இல்லை. பக்கச்சார்பான நீதியே ( selective justice) காணப்படுகின்றது. சிங்கள பௌத்த மக்களின் நல்வாழ்வுக்காக ‘நீதி’ தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்படுகின்றது.

இங்கு ஒரு புதுமையான அரசியல் கலாசாரம் வளர்க்கப்படுகின்றது. எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவர் கூடுதலான குற்றங்களையும் துன்பங்களையும் செய்கிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவருக்கு வெகுமதிகளும் பதவி உயர்வுகளும் கொடுக்கப்படுகின்றன. இதன் தாக்கத்தை இந்த சபையிலும் உணர முடிகின்றது. அதனால் தான் படித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் முஸ்லிம் மக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சமுகம் பற்றியும் அரசாங்கம் பற்றியும் உண்மைகளை பேசும்போது கூச்சல் போட்டு குழப்புகிறார்கள்.

இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எதிராக காணப்படுவது முழுமையான ஒரு இனவாதமாகும் (Systemic Racism). அரச நிறுவனங்களின் செயற்பாடுகளின் ஊடாக இது முன்னெடுக்கப்படுகின்றது. இந்த இனவாதம் என்பது ஒரு சித்தாந்தம் (Ideology) ஆகியுள்ளது. இந்த சபையில் முறைகேடாக நடக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சித்தாந்தத்தை காவுகிறார்கள். இனவாதத்தை விதைக்கும் கருவிகளாக ஊடகங்களும் மாறிவிட்டன. இந்த இனவாதம் எம்மை எங்கேயும் கொண்டுசெல்லப்போவதில்லை. இது இந்த நாட்டின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் பெரும் குந்தகத்தையும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பேரழிவையும் ஏற்படுத்தப்போகின்றது.

இன்றைய விவாதம் நீதி அமைச்சு பற்றியது என்பதால், நிதி அமைச்சின் இணையத் தளத்துக்கு சென்று பார்த்தேன். அதில் பூகோள முன்னேற்றங்கள் மற்றும் மக்களின் அபிலாஷைகளுக்கு அமைவாக சமூகங்களின் தேவைககளை பூர்த்திசெய்யும் வகையில் சட்ட மறுசீரமைப்பு செய்தல் இந்த அமைச்சின் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாங்கள் இந்த நோக்கத்தை முன்னெடுக்கிறோமா ? இந்த நாட்டில் நீதியுடன் சம்பந்தமான எல்லா விடயங்களுமே உலக நடப்புக்கள், உலக நியதிகள், ஒழுக்க எதிர்பார்ப்புக்கள் ஆகியவற்றில் இருந்து முரண்பட்டு செல்வதே யதார்த்தமாக இருக்கிறது. தனி மனித உரிமைகள், சமூகங்களின் கூட்டு உரிமைகள், நல்லிணக்கம் , சமாதானம், சகவாழ்வு போன்ற பண்புகளை முன்னிலைப்படுத்தி நாகரிகத்தின் வளர்ச்சிப்பாதையில் எவ்வாறு முன்னேறிச்செல்லலாம் என்று சிந்தித்து அவற்றுக்கு ஏற்ப தமது நாடாளுமன்றங்களில் சட்டங்களை இயற்றி உலக நாடுகள் பயணம் செய்கையில் இந்த பண்புகளுக்கு முரணாக அல்லவா இந்த நாடு பயணம் செய்கின்றது? குறிப்பிட்ட ஒரு சமுகத்தை சார்ந்த மக்களின் நிலங்களை பறிப்பதுடன் அவர்களின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை முறைகளை இல்லாமல் செய்வதற்கு முயலுகின்றது.

சிங்கள பௌத்த தொல்பொருள் எச்சங்களை பாதுகாப்பது என்ற போர்வையில் எமது சமூகத்தின் நிலங்களை அபகரிக்கும் நோக்குடன் அவசர அவசரமாக விசேட ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. பௌத்த எச்சங்கள் இருக்கின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த புராதன எச்சங்கள் தமிழ் பௌத்த காலத்தில் இருந்தனவை. சிங்கள மொழி பிறப்பதற்கு முன்னரேயே தமிழ் மக்கள் பௌத்தத்தை தழுவியிருந்தனர்.

தமிழ் பௌத்தர்கள் காலத்தில் இருந்த எச்சங்களை நீங்கள் பேணி பாதுகாக்க விரும்பினால் இந்த ஆணைக்குழுக்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் ஆணையாளர்களாகவே இருக்க வேண்டும். தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து சிங்கள மக்களுக்கு கொடுக்கவா முயலுகிறீர்கள்? இதுவா இந்த ஆணைக்குழுக்களின் நோக்கம் ? 3000 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் இணக்கம் மற்றும் இசைவு இன்றி எந்த ஒரு செயற்பாடும் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படக்கூடாது.

சிங்கள மக்களுக்கு எதிராகவோ அல்லது அவர்களின் இறைமைக்கு எதிராகவோ எமது இளையோர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. அதேநாட்டில் தமது பகுதிகளின் இறைமைக்கு ஆபத்து ஏற்பட்டதாலேயே அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். அவர்கள் தமது அடையாளத்தை பாதுகாக்க வேண்டியிருந்தது. ஆனால், அவர்கள் பயங்கரவாதிகளாக அழைக்கப்பட்டு 20 க்கும் அதிகமான நாடுகளின் உதவியுடன் கொடூரமாக அழிக்கப்பட்டார்கள்.

ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். நாட்டின் இறைமையை விட மக்களின் இறைமையே மேலானது. இன்றைய சர்வதேச உறவில் அப்படித்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் தான் சர்வதேச சட்டங்களும் கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டுவருகின்றன. நாட்டின் இறைமையின் பின்னால் ஒளிந்துநின்றுகொண்டு எமது மக்களின் இறைமையை இல்லாமல் செய்யலாம் என்று கனவு காணாதீர்கள். 18 ஆம் நூற்றாண்டு காலத்துக்குரிய நாட்டின் இறைமையை பாதுகாக்கும் கோட்பாடு இன்று பொருத்தம் அற்றதாகி வலுவிழந்துவிட்டது. ஒரு நாட்டின் மனித உரிமைகள் மோசமாக மீறப்படும்போது மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக அந்த நாட்டின் இறைமையை உதாசீனம் செய்யலாம் என்பதே இன்றைய உலக நடப்பு என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

இறுதிப் போரில் மனிதக் கேடயங்களாக அப்பாவி மக்களை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாகவும், அந்த மக்களை நீங்கள் மீட்டதாகவும், எந்த ஒரு போர்க்குற்றத்தையும் படையினர் செய்யவில்லை என்றும் கூறுகிறீர்கள். இது உண்மையானால், இதை நீங்கள் கூறவேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தான் கூறவேண்டும். ஆனால், இறுதி யுத்தத்தில் நீங்கள் காப்பாற்றியதாக கூறும் மக்கள் நீங்கள் தமது உறவுகளை கொலை செய்ததாக அல்லவா கூறுகிறார்கள். நீங்கள் அந்த மக்களை உண்மையாக மீட்டு அவர்களுக்கு வாழ்வு அளித்திருந்தால், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின் வந்த சகல தேர்தல்களிலும் உங்களையல்லவா அவர்கள் ஆதரித்திருந்திருப்பார்கள்? ஆனால், தங்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாக நீங்கள் கூறும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்று நீங்கள் இன்றும் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பை அல்லவா மக்கள் தேர்தல்களில் பல தடவைகள் வெல்ல வைத்துள்ளார்கள் ? எவ்வாறு 2013 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற வட மாகாண சபை தேர்தலில் வட மாகாணத்தின் ஆகக்கூடுதல் சாதனை வாக்குகளாக 133,000 வாக்குகளை மக்கள் எனக்கு அளித்தனர்?

விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்றும் படையினர் மக்களை பாதுகாத்தார்கள் என்றும் நீங்கள் சொல்வது உண்மையானால் ஏன் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு தயங்குகிறீர்கள்? நீங்கள் சொல்வது உண்மையானால் சர்வதேச விசாரணை மூலம் அது நிரூபிக்கப்பட்டு உங்கள் மீதான விமர்சனங்கள் களையப்படவேண்டும். நீங்கள் அப்போது உங்கள் சர்வதேச அரங்கில் உங்கள் தலையை நிமிர்த்திக்கொண்டு வலம்வரமுடியும்.

ஆனால் உண்மை மாறாக இருக்கிறது. அதனால் தான் சர்வதேச விசாரணையை முகம்கொடுக்க நீங்கள் அஞ்சுகிறீர்கள். நீங்கள் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவதும் சீனாவின் பின்னால் ஓடுவதும் உங்கள் படையினர் போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையை இழைத்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகின்றது.

அடுத்தவருடம் மார்ச் மாதம் நாம் ஐ. நா மனித உரிமைகள் சபையை எதிர்கொள்கின்றோம். சர்வதேச சமுகத்தின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. மார்ச் மாத நடுப்பகுதி தொலைவில் இல்லை என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தப்புவதற்கு சிறிய சந்தர்ப்பமே உள்ளது. ஆனால் ஒரு வழி உண்டு. அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருகின்றது. இந்த நாட்டின் எல்லா சமூகங்களும் சமத்துவம், ஒற்றுமை, சுதந்திரம், ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் வாழும் வகையில் ஒரு சமஷ்டி அல்லது அரை சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி அரசியல் அமைப்பை தயாரித்து நிறைவேற்றுங்கள். உங்கள் அரசாங்கம் மட்டுமே இதை செய்ய முடியும். பெரும்பான்மை சமூகத்துடன் சமத்துவம் மற்றும் சக வாழ்வுடன் வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக மக்களும் கூட வாழும்வகையில் உண்மையான அதிகார பகிர்வை ராஜபக்ஸ குடும்பம் உறுதிசெய்யட்டும்.

நீங்கள் தவறினால், யுத்தம் நடைபெற்றபோது பேச்சுவார்தைகளுக்காக நாடுகளின் தலை நகரங்களுக்கு ஏறி இறங்கியதுபோல மீண்டும் ஏறி இறங்குவீர்கள். இந்த நாட்டில் இன முரண்பாடுகளை மேலும் கூர்மையாக்கி சர்வதேச வல்லரசுகள் காலூன்றுவதற்கு (இதுவரை அப்படி செய்திருக்கவில்லை என்றால்) இடமளிக்காதீர்கள் என்று இந்த அரசாங்கத்திடம் வேண்டிக்கொள்கின்றேன்.

“நாம் தனிநாடு கேட்கவில்லை.ஒரே நாட்டுக்குள் எம்மை நாமே ஆள வழி விடுங்கள் என்றே  கேட்கின்றோம். அவ்வாறு விட்டால் நாட்டை நாம் முன்னேற்றித்தருகின்றோம்” – பாராளுமன்றில் சி.வி.விக்னேஸ்வரன் !

“நாம் தனிநாடு கேட்கவில்லை.ஒரே நாட்டுக்குள் எம்மை நாமே ஆள வழி விடுங்கள் என்றே  கேட்கின்றோம். அவ்வாறு விட்டால் நாட்டை நாம் முன்னேற்றித்தருகின்றோம்” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று(19.11.2020)  நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் அங்கு தெரிவித்ததாவது,

அரசு 2021ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவுக்கு அபரிதமான தொகையை ஒதுக்கியுள்ளது. எதற்காக இவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது? யாருடன் போரை மேற்கொள்ள இந்த நிதித் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னொரு போரை எதிர்பார்த்தா அரசு இந்தத் தொகையைப் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கியுள்ளது? அப்படி போர் என்றால் யாருடன்? அந்தப் போர் தமிழர்களுடனா? அல்லது இந்தியர்களுடனா அல்லது மேற்கத்தைய நாட்டவர்களுடனா? யாரைப் பார்த்து இந்த அரசு அஞ்சுகின்றது.

எதற்காகப் போர்க்கால வரவு – செலவுத் திட்டமொன்றை சமாதான காலத்தில் முன்வைத்துள்ளீர்கள்? என்னைப் பொறுத்தவரை இந்த வரவு – செலவு திட்டத்தில் குறைந்த நிதியைப் பாதுகாப்புக்கும், அதிகளவு நிதியை நுண் பொருளாதார மற்றும் நடுத்தர வர்த்தக செயற்பாடுகளுக்கு ஒதுக்கியிருக்க வேண்டும்.நீங்கள் உங்கள் முகத்துடன் கோபித்துக்கொண்டு உங்கள் மூக்கை வெட்டப்பார்க்கின்றீர்கள். நாட்டின் ஒரு சாராரை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதால்தான் போர்க்கருவிகள், பீரங்கிகள், தற்பாதுகாப்புக் கவசங்களை வாங்கிக் குவிக்கின்றீர்கள். காலாட் படைகளை அதிகரிக்கின்றீர்கள். பெரும்தொகை கடற்படை உபகரணங்களை வாங்குகின்றீர்கள். இதுவரை கண் மண் தெரியாமல் வாங்கிக் குவித்ததால் தானே எமது தேசியக் கடன் இந்தளவுக்கு உயர்ந்துள்ளது.

2021ஆம் ஆண்டில் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் 1.9 ட்ரில்லியன் ரூபா. உத்தேச செலவு என்றுமில்லாதவாறு 3.52 ட்ரில்லியன் ரூபாவாக உயரப் போகின்றது. 1.56 ட்ரில்லியன் ரூபா விழுக்காட்டை எப்படி சமாளிக்க போகின்றீர்கள்? இது நீங்கள் தமிழர்களை நம்பாததால் வந்த வினை. உங்கள் தேசியக் கடன் எங்களையும் பாதிக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.

விரைவில் உங்களை நம்பத்தகுந்த கடன் கேட்பவர்களாக நாடுகள், நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க முடியாது நீங்கள் தவிக்கின்றீர்கள். எவ்வாறு மேலும் கடன் தர முடியும் எனக் கேட்பார்கள். தமிழர்களை நம்பி அவர்களின் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டு அவர்களுக்குரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளது. நாம் நாட்டைப் பிரித்துத் தருமாறு கேட்கவில்லை.

ஒரே நாட்டுக்குள் எம்மை நாமே ஆள வழி விடுங்கள் என்றே  கேட்கின்றோம். அவ்வாறு செய்தால் நாமும் எமது இலட்சக்கணக்கான புலம்பெயர் தமிழ் உறவுகளும் உங்களுடன் சேர்ந்து இந்த நாட்டை முன்னேற்றத் தயாராகவுள்ளோம்.

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திகள் குறித்து அரசு கூடிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். போர் முடிந்து 11 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் வடக்கு, கிழக்கிலுள்ள மாவட்டங்கள் இன்னமும் வறுமையான மாவட்டங்களாகக் காணப்படுகின்றன. எனவே, வேலைவாய்ப்புகள், அபிவிருத்திகள் என்பவற்றுக்கு அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். எனவே, இதுகால வரையும் சிந்தித்த வழியிலேயே சிந்திக்காது புதுவிதமாகச் சிந்திக்கப் பழகுங்கள்” என தெரிவித்துள்ளார்.

நான் சாராயம் கொடுத்தோ ? 5000 ரூபா கொடுத்தோ? வெற்றி பெற்றதை விக்னேஸ்வரன் நிரூபிப்பாரேயானால் அரசியலை விட்டுவிட்டு விலக தயார் ! – அங்கஜன்.

தேர்தல் பிரசார காலத்தில் ஒருவருக்கேனும் சாராயம் கொடுத்ததையோ..? அல்லது 5000 ரூபா பணத்தைக் கொடுத்ததையோ..? சி.வி. விக்னேஸ்வரன் நிரூபிப்பாரேயானால் அரசியலை விட்டுவிட்டு போக தாம் தயாராக உள்ளதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ். மாவட்டத்தில் இருந்து இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிங்கள ஊடகமொன்றுக்கு நேர்காணலொன்றை வழங்கியிருந்தார்.

இதன் போது அங்கஜன் ராமநாதன் அதிகூடிய விருப்புவாக்குகளைப் பெற்றுள்ளமை குறித்து அந்த ஊடகம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த சி.வி. விக்னேஸ்வரன்,

சாராயம் மற்றும் பணத்தைக் கொடுத்ததன் மூலமே அது சாத்தியமானதாக கருத்து வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பாக அங்கஜன் ராமநாதன் கருத்து வெளியிடுகையில்,

தன் மீதான குற்றச்சாட்டுக்களை சி.வி. விக்னேஸ்வரன் நிரூபிப்பாரேயானால் அரசியலை விட்டுவிட்டு போவதற்கு தாம் தயாராக உள்ளதாக ஆணித்தரமாக தெரிவித்தார்.

பொதுமக்களை கொலை செய்ய வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருக்கவில்லை ;இராணுவமே அவர்களை கொலை செய்தது – சி.வி.விக்கினேஸ்வரன்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த நேர்காணலின் சுருக்கமான கேள்விகளும் பதில்களினதும் தொகுப்பு.

 

கேள்வி :- விடுதலைப் புலிகள் அமைப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள் ?

பதில்:- விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது . தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தி போராட தூண்டப்பட்டனர்.

கேள்வி :- உலக நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்கையில் நீங்கள் இதனை ஏன் பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ளவில்லை?

பதில் :- அரசாங்கம் தான் செய்யும் தவறுகளை மூடி மறைத்து, அது குறித்து கேள்வி எழுப்புகின்றவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது.

கேள்வி :- இராணுவத்தினர் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களைத் தவிர்த்து அப்பாவி மக்களை கொலை செய்தனரா.?

பதில் :- 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள். பொதுமக்களை கொலை செய்ய வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருக்கவில்லை என்றும் இராணுவமே அவர்களை கொலை செய்தது.

கேள்வி :-முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதிகள் மயானத்தில் ஏன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டீர்கள் என  கேள்வி எழுப்பப்பட்டது.

பதில் :- அந்த இடத்திற்குச் சென்று மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை உள்ளதாகவும் அதனாலேயே நான் அங்கு சென்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன்.

கேள்வி :- தமிழ் மொழியை இலங்கையின் முதன் மொழியாக கூறியமைக்கு ஆதாரம் உள்ளதா..?

பதில் :- இலங்கை பண்டையகாலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு என்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன.

என்றும் சி.வி.விக்னேஸ்வரன் இந்த நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளார்.