சீனா

சீனா

தொடர்ச்சியாக 3வது தடவையாக மீண்டும் சீனாவின் ஜனாதிபதியாக ஜின்பிங் !

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் கடந்த 2012ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஜின்பிங் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்டார்.

அதன்பிறகு 2வது முறையாக அவர் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக 3வது தடவையாக மீண்டும் அவர் சீன ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

சீனா கம்யூனிஸ்டு கட்சி விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இதுவரை இல்லாத அளவில் கடந்த அக்டோபர் மாதம் மூன்றாம் முறையாக ஜின்பிங் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் அனைத்து உயர் மட்ட குழுவினரும் சேர்ந்து அவரை தேர்ந்தெடுத்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று சீனா பாராளுமன்றத்தில் நடந்த 14வது தேசிய மக்கள் மாநாட்டில் சுமார் 2,952 உறுப்பினர்கள் மீண்டும் ஜின்பிங்கை அதிபராக தேர்வு செய்துள்ளனர். எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டு உள்ளார். மேலும் அவர் சீன ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பேற்க உள்ளார். சீன வரலாற்றில் இதுவரை யாரும் தொடர்ந்து 3 முறை அதிபராக பதவி வகிக்கவில்லை. அந்த சாதனையை ஜின்பிங் பெற்று இருக்கிறார். இன்னும் 5 ஆண்டு காலம் அவர் சீன அதிபராக பதவி வகிப்பார்.

தற்போது 69 வயதாகும் அவர் கொரோனா காலகட்டத்தின்போது கட்டுப்பாடுகள் விதித்ததில் பொதுமக்களின் எதிர்ப்புகளை சம்பாதித்தார். அவருக்கு எதிராக போராட்டங்களும் நடந்தது. ஆனால் அதையெல்லாம் மறந்து இப்போது ஜின்பிங் மீண்டும் சீன அதிபராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சீனாவில் மக்கள் போரைாட்டத்தை அடுத்து தளர்த்தப்பட்டது கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் !

உலக நாடுகளில் இரண்டரை ஆண்டுகளாக தீவிர அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகளில் பல்வேறு அலைகளாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனினும், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பிற நாடுகளை விட, பரவலை முன்பே சீனா கட்டுப்படுத்தி இருந்தது.

இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, சீனாவில் புதிதாக ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியது. கொரோனா அதிகரிப்பை முன்னிட்டு பல்வேறு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது. அரசின் இந்த ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வியாழ கிழமையன்று ஜின்ஜியாங் மாகாண தலைநகரான உரும்கி நகரில் குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு வந்து சேருவதில் காலதாமதம் ஏற்படுத்தியது என இதுபற்றி ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படுத்தியது. அரசின் பூஜ்ய கொரோனா கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி ஜி ஜின்பிங் பதவி விலக கோரியும் மக்கள் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து, பொதுமக்கள் வீதிகளில் இறங்கி மெழுகுவர்த்திகளை ஏந்தியபடியும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இவர்களில் குவாங்ஜவ் மாகாணத்தில் தெருக்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே (மிளகு தூள்) தூவி அவர்களை கலைந்து போக செய்ய ஷாங்காய் போலீசார் முயற்சி செய்தனர். ஒரு தசாப்தத்திற்கு முன் ஜின்பிங் பதவியேற்றதில் இருந்து, இதுவரை இல்லாத வகையிலான அரசுக்கு எதிரான மக்களின் இந்த போராட்டம், மக்களின் மிக பெரிய கீழ்படியாமை தன்மை என அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சீனாவில் தொடர்ந்து, புதிதாக கொரோனா பாதிப்புகள் உச்சம் அடைந்து வரும் சூழலில், மக்கள் போராட்டம் எதிரொலியாக மாவட்ட அளவிலான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி வருகிறது. பல இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், 7 மாவட்டங்களில் தற்காலிக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

இதனால், கிழக்கு பீஜிங் நகரில், லேசான அறிகுறிகள் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு பதிலாக, வீட்டிலேயே தங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்த மாடியிலேயே உள்ள அண்டை வீட்டுக்காரர்கள் மற்றும் அந்த தளத்தில் இருந்து மேலே மற்றும் கீழே என 3 மாடியில் வசிக்கும் மக்களும் வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை பெருமளவிலான மக்கள் வரவேற்று உள்ளனர். இதன்படி, மத்திய சீனாவில் சூப்பர் மார்க்கெட்டுகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் உணவு விடுதிகளை மீண்டும் தொடங்குவதற்கான வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு ஏற்ற வகையில், கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளை கவனித்து வரும் துணை பிரதமர் சன் சுன்லான் கூறும்போது, கொரோனாவின் தொற்று நோய் ஏற்படுத்தும் வீரியம் குறைந்து வருகிறது என கூறியுள்ளார். ஒரு புது சூழலை நாடு எதிர்கொண்டு வருகிறது. தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான புதிய பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. ஒமைக்ரான் பலவீனமடைந்து வருகிறது. அதிகளவில் மக்கள் தடுப்பூசி போட்டு கொண்டு, வைரசின் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்று சன் கூறியுள்ளார். எனினும் மக்கள், பரிசோதனைகள், சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார்.

சீனாவில் ஒரே நாளில் 31,000 பேருக்கு கொரோனா தொற்று – அச்சத்தில் உலகம் !

சீனாவின் வூகான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகளையெல்லாம் பாதித்தது.

 

நேற்று முன்தின நிலவரப்படி உலகமெங்கும் 63 கோடியே 95 லட்சத்து 78 ஆயிரத்து 239 பேரை கொரோனா பாதித்துள்ளது. இந்தத் தொற்றால் 66 லட்சத்து 25 ஆயிரத்து 979 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக 9 கோடியே 85 லட்சத்து 3 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 10 லட்சத்து 78 ஆயிரத்து 929 பேர் இறந்தனர்.

பல இடங்களில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் கூட சீனாவில் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்கு பல நகரங்களில் பொதுமுடக்கம் இருந்தாலும் தொற்று அவ்வப்போது எழுச்சி பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றுமுன்தினம் அங்கு கொரோனா புதிய எழுச்சி பெற்றது. ஒரே நாளில் 31 ஆயிரத்து 527 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பி.பி.சி. தெரிவித்தது.

 

கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார கமிஷன் நேற்று தெரிவித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதம் உச்சம் தொட்டபோது ஏற்பட்ட பாதிப்பை விட (28 ஆயிரம்) அதிகம் என்பது கோடிட்டுக்காட்டத்தக்கது. சீனாவில் ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரவேண்டும் என்பது கொள்கை. இதன் காரணமாக அங்கு 140 கோடி மக்களின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை சற்றே தளர்த்தினர். குறிப்பாக தொற்று பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அரசு மையத்தில் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்பது 5 நாட்களாக குறைக்கப்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்துவது 3 நாட்களாக குறைக்கப்பட்டது. இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்களை பதிவு செய்வதை விட்டு விட்டனர். பொத்தாம்பொதுவாக ஊரடங்குகளை பிறப்பிப்பது தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா அலை எழுச்சி பெற்றுள்ளது. 60 லட்சம் பேர் வசிக்கிற ஜெங்சூவ் நகரில் நேற்று (வியாழக்கிழமை) முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு வாங்கவும், சிகிச்சை பெறவும் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. வைரசுக்கு எதிரான அழிப்புப்போர் என்று அந்த நகர நிர்வாகம் அழைக்கிறது. மேலும் தினமும் பெருந்திரளான மக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக நடத்தப்படுகிறது.

 

முதல் முறையாக பறவை காய்ச்சல் மனிதருக்கும் பரவுகிறது – சீனாவில் இருந்து புதிய காய்ச்சல் !

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் முதல் முறையாக பறவை காய்ச்சல் மனிதருக்கு பரவி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பறவை காய்ச்சலின் ‘எச்3 என்8’ திரிபு முதல் மனித நோய்த்தொற்றை பதிவு செய்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார  ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காய்ச்சல் உள்ளிட்ட பல அறிகுறிகள் காணப்பட்ட 4 வயது சிறுவனுக்கு பறவை காய்ச்சல் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் காகங்கள் மூலம் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவி இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

சிறுவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த யாருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை.

இது தொடர்பாக சுகாதார ஆணையம் கூறும்போது, ‘எச்3 என்8’ வைரஸ் மாறுபாடு பறவைகள், குதிரைகள், நாய்கள் ஆகியவற்றில் கண்டறியப்பட்டது.  ஆனால் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக எதுவும் பதிவாகவில்லை. ஆரம்ப ஆய்வுகளின்படி இந்த மாறுபாடு இன்னும் மனிதர்களை திரும்ப பாதிக்கும் திறனை கொண்டிருக்கவில்லை. பெரிய அளவிலான தொற்று நோய்க்கான ஆபத்து குறைவாக உள்ளது-. எச்3 என்8 பறவை காய்ச்சல் வைரஸ் மக்களிடையே பரவுதற்கான ஆபத்து குறைவாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

செயற்கை நிலவை உருவாக்கி சீனா சாதனை !

மின் செலவை குறைப்பதற்காக செயற்கை சூரியனை சீனா அண்மையில் உருவாக்கி உலக நாடுகளை பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தது.  இந்த நிலையில் உலகில் முதன் முறையாக  செயற்கை நிலவை சீனா உருவாக்கி சீனா இன்னும் புதிய பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த திட்டத்தின் தலைவரும், சீன சுரங்கம் மற்றும் தொழில்நுட்ப பல்கலை விஞ்ஞானியுமான லி ருய்லின் தெரிவித்த போது,

நிலவைப் போலவே செயற்கை நிலவை உருவாக்கியுள்ளோம். நிலவில் ஈர்ப்பு விசை இல்லை என பலர் நினைக்கின்றனர். அது தவறு.

புவியீர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கு  நிலவில் உள்ளது. இதற்கு அங்கு நிலவும் காந்த அலைகள் தான் காரணம். இத்தகைய குறைந்த ஈர்ப்பு விசையை விமான சோதனையில் தற்காலிகமாக உருவாக்க முடியும்.

ஆனால் செயற்கை நிலவில் இத்தகைய ஈர்ப்பு விசையை நாம் விரும்பும் காலம் வரை நீட்டித்துக் கொள்ளலாம். இதனால் சீனா, பிற நாடுகளைப் போல ஈர்ப்பு விசையற்ற விமானங்களில் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்காமல் ஆய்வுகளை சுலபமாக மேற்கொள்ளலாம். மேலும், 2 அடி விட்டமுள்ள இந்த சிறிய செயற்கை நிலவில், இயற்கை நிலவில் உள்ளது போன்ற எடை குறைந்த மணல், கற்கள் துாசிகள் நிரப்பப்பட்டுள்ளன .

இதில் மேற்கொள்ளப்படும் சில சோதனைகளில், முடிவுகள் சில வினாடிகளில் தெரிந்து விடும். அதேவேளை ஒரு சிலவற்றின் முடிவுகளை அறிய பல நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளார்.

 

ஆசிய நாடுகள் தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு !

தென்கிழக்கு ஆசியாவில் சீனா தனது அதிகாரத்தை விரிவுபடுத்த முயற்சித்து வருவதாக அந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக தென்சீன கடல் விவகாரத்தில் சீனவுக்கும், பிராந்தியத்தின் மற்ற நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஆசியான் என்று அழைக்கப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்துக்கும், சீனாவுக்கும் இடையிலான 30 ஆண்டுகால உறவை குறிக்கும் வகையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜின்பிங் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் தென்கிழக்கு ஆசியா மீது சீனா ஆதிக்கம் செலுத்தாது என அவர் உறுதிபட தெரிவித்தார். இதுபற்றி அவர் பேசுகையில்

“சீனா மேலாதிக்கம் மற்றும் அதிகார அரசியலை உறுதியுடன் எதிர்க்கிறது. அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேண விரும்புகிறது மற்றும் பிராந்தியத்தில் நிலையான அமைதியை கூட்டாக வளர்க்க விரும்புகிறது. தென்கிழக்கு ஆசியாவில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யாது. சிறியவர்களை கொடுமைப்படுத்தாது” என கூறினார்.

ஒரு மில்லியன் டோஸ் சினபோர்ம் நாட்டை வந்தடைவு

மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினபோர்ம் (Sinopharm) தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

இன்று (02) அதிகாலை 5.00 மணியளவில் UL 869 எனும் விமானம் மூலம் குறித்த தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன என மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

ஹாங்காங் மீதான சீனாவின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணையும் உலக நாடுகள் !

இங்கிலாந்து தனது ஆதிக்கத்தின்கீழ் இருந்து வந்த ஹாங்காங்கை 1997-ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைத்தது. அதையடுத்து சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் தன்னாட்சி பிராந்தியமாக ஹாங்காங் இருந்து வருகிறது. ஆனால் அதன் தன்னாட்சியை சிதைக்கின்ற வகையில் சீனா பல நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது.

குறிப்பாக சர்வதேச நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தை ஹாங்காங்கில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அதை எதிர்த்து போராடுகிறவர்களை தனது நிர்வாகம் மூலம் ஒடுக்குகிறது. இந்த சட்டத்துக்கு எதிராக போராடிய சட்டசபை உறுப்பினர்களை சீன நிர்வாகம் பதவி நீக்கம் செய்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஹாங்காங் விடுதலைக்கான போராட்டம் - எதிர்

இதனால் சீனாவினுடைய அடக்கு முறைகளுக்கு  எதிராக இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய உலக நாடுகள் அணி திரண்டுள்ளன. இந்த நாடுகளின் வெளியுறவு மந்திரிகள், கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஹாங்காங் சட்டசபை உறுப்பினர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று சீனாவை வலியுறுத்தி உள்ளனர்.

சீனாவின் செயல்பாடுகள், சட்டபூர்வ கடமைகளின் தெளிவான மீறல் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஹாங்காங் மக்களின் உரிமைகளை பலவீனப்படுத்துவதின் மூலம் விமர்சன குரல்களை சீனா ஒடுக்குவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஹாங்காங்கின் ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றை காக்க மக்கள் தங்கள் நியாயமான கவலைகளை வெளிப்படுத்த உரிமை வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

எனவே சீனா, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஹாங்காங் சட்டசபை உறுப்பினர்களை மீண்டும் தங்கள் கடமைகளை செய்யும் வகையில் மீண்டும் பதவி அமர்த்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உயிருடன் இருக்கும் தன் மக்களையே பரலோகம் அனுப்புகிறது அமெரிக்க அரசு! அப்படியிருக்க, உயிருடன் இல்லாதவர்களை பொம்பயோ எப்பிடி கண்டுபிடிப்பார்?

சீனாவின் சர்வதேச ஆதிக்கத்தை தாங்க முடியாத அமெரிக்கா!
அமெரிக்க ராஜாங்க அமைச்சர் மைக்கல் பொம்பயோ இலங்கை வருகை!!!

உலக பொருளாதார ஆதிக்கத்தை தன் பக்கம் சுவீகரித்துக்கொள்ளும் சீனாவின் வளர்ச்சியயைத் தடுக்க அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக்கல் பொம்பயோ ஆசிய சுற்றுப் பயணம் மேற்கொண்டு அதில் ஒரு கட்டமாக இலங்கைக்கும் வருகின்றார் இன்று. மைக்கல் பொம்பயோ காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துக் கொடுக்க இலங்கைக்கு வரவில்லை. அது பற்றி கரிசணையுடையவரோ அல்ல. அடுத்த இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதே கேள்விக்குறியாக இருக்கின்ற போது அமெரிக்க இராஜாங்க அமைச்சரின் ஆசிய விஜயம் ஒரு பொருட்டாகவே அமையப் போவதில்லை. தனது சொந்த நாட்டில் 225,000 பேர் கொல்லப்பட்டதையே பொருட்படுத்தாத ஒரு இராஜாங்க அமைச்சரிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடிக்கும் அதிகாரம் அந்த நாட்டிடம் உள்ளது என்று உளறும் முட்டாள்தனத்தை என்ன செய்வது.

இறுதி யுத்தத்தில் பெரும்பாலும் உயிரோடு இல்லை என்பது சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கும், தமிழ் அரசியல் வாதிகளுக்கும், இலங்கை அரசுக்கும், சர்வதேசத்திற்கும் மிகத் தெளிவாகத் தெரியும். உயிருடன் இருப்பவர்களையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் பரலோகம் அனுப்பிக்கொண்டுள்ளார். அவருடைய ராஜாங்க அமைச்சர் இல்லாதவர்களை எப்படி கண்டுபிடிக்க முடியும்?

ஈராக், அப்கானிஸ்தான், லிபியா இன்று சிரியா இப்படியே இந்த மேற்குலகம் கொலைக்களமாக்கிய நாடுகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஏராளம்! ஏராளம்!! யார், யாரிடம் எல்லாம் போய் நீதி கேட்பது என்ற விவஸ்தையே இல்லாமல் இன்னும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை வைத்துத் தான் அரசியல் நடத்த வேண்டும் என்ற அளவுக்கு தமிழ் அரசியல் ஈனமாகிப் போய்க் கிடக்கின்றது.

இறுதி யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்க படைகள் வன்னியில் உள்ள மக்களை மீட்கப் போவதாக ஒரு செய்தி அந்நேரத்தில் கசிந்தது. அவர்கள் எவ்வளவு தூரம் சாத்தியப்பட்டு இருக்கும் என்பது உறுதியாகத் தெரியாது. ஆனால் இச்செய்தி வெளியானதும் அமெரிக்காவில் உள்ள பேர்ள் என்ற தமிழர் அமைப்பு வன்னி எங்களின் சொந்த மண் அந்த மண்ணில் இருந்து மக்களை மீட்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டது. அதற்குக் காரணம் வன்னி யுத்தகளத்தில் இருந்து மக்கள் மீட்கப்பட்டால் – போராட்டத்தின் மண் மூட்டைகள் – பாதுகாப்பு அரண் – அடுத்த சில மணிநேரங்களிலேயே யுத்தம் முடிவுக்கு வந்துவிடும். போராட்டத்தை வைத்து சர்வதேச நாடுகளில் தாங்கள் வியாபாரம் செய்ய முடியாது. அதற்காகவே இந்த வெளிநாட்டு சரகு புலிகள் குரல்கொடுத்து வந்தனர். அன்று வன்னிமக்களை கொல்லக்கொடுத்து சூறையாடிய பணத்தில் இன்று பகட்டு வாழ்க்கை வாழ்கின்றனர். அதில் கொஞ்சத்தை வீசியெறிந்து இன்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கின்றோம் என்று உலாவிக்கொண்டு திரிகின்றனர்.

பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் சீனா – ஆப்பிள் டெய்லி உரிமையாளர் கைது !

சீன கொம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக எழுதியதாகவும், வெளிநாட்டினருடன் சேர்ந்து சதிச்செயலில் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டி, ஹாங்காங் ஆப்பிள் டெய்லி நாளேட்டின் உரிமையாளர்  ஜிம்மி லாய் உள்பட 7 பேரை போலீஸார் நேற்று  தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சீன அரசு கொண்டு வந்துள்ள கொடூரமான தேசிய பாதுகாப்புச்சட்டம் கடந்த ஜூன் 30-ம் தேதி முதல் ஹாங்காங்கில் நடைமுறைக்கு வந்துள்ளது. சீனா கொண்டுவந்துள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்ய வாரண்ட் தேவையில்லை இந்த சட்டப் பிரிவின்படி, ஹாங்காங் போலீசாருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பிடியாணை  இல்லாமல் ஒருவரின் வீட்டில் ஆதாரங்களை சேகரிப்பதற்காக போலீசார் சோதனையிட முடியும். இந்த சட்டத்தில் ஒருவர் கைதானால் அவர் தன் கடவுச்சீட்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்க வேண்டும். நாட்டை விட்டு வெளியேற முடியாது. ஒரு குறிப்பிட்ட கட்டடம், தேசிய பாதுகாப்புக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் இருந்தால், அதை முடக்க, கையகப்படுத்த, போலீசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு எதிரான செய்திகளை நீக்கும்படி, இணைய தளங்கள், இணைய சேவை வழங்குவோருக்கு உத்தரவிட முடியும். அதை மீறினால், அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்., ஆட்சேபகரமான பதிவுகளை வெளியிடும் தனிநபருக்கும் இந்த தண்டனை பொருந்தும்.

ஒருவருடைய தொலைபேசி , தொலைபேசி தகவல்கள் உட்பட அனைத்து தகவல்களை இடைமறிக்கவும், கண்காணிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இ்ந்த கொடூரமான சட்டத்தின் கீழ்தான் தற்போது ஆப்பிள் டெய்லி நாளேட்டின் தலைவர் ஜிம்மி லாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாங்காங்கைச் சேர்ந்த ஜிம்மி லாய் நடத்திவரும் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் ஆப்பிள் டெய்லி நாளேடு பிரசுரமாகி வருகிறது. இந்த நாளேட்டில் சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், அதன் தலைவர்களின் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்தும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் எந்தவிதமான முன்னறிவிப்பும், விளக்கமும் கேட்காமல் ஆப்பிள் டெய்லி நாளேட்டின் நிறுவனர் 72 வயதான ஜிம்மி லாயை ஹாங்காங் போலீஸார் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இன்று கைது செய்தனர். வெளிநாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பல்வேறு சதிகளில் ஜிம்மி லாய் ஈடுபடுவதாக சந்தேகப்படுவதையடுத்து அவரைக் கைது செய்துள்ளதாக ஹாங்காங் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், ஜிம்மி லாய் மகன்கள், மற்றும் நாளேட்டின் முக்கிய நிர்வாகிகள் என மொத்தம் 7 பேரை ஹாங்காங் போலீஸார் கைது செய்துள்ளனர். ஆப்பிள் டெய்லி நாளேட்டின் உரிமையாளர் ஜிம்மி லாய்பெயரை மட்டுமே தெரிவித்துள்ள ஹாங்காங் போலீஸார் மற்ற 6 பேரின் பெயரைக் குறிப்பிட மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து ஹாங்காங் போலீஸார் பதிவிட்ட ட்விட்டர் பதிவில் “ தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதால்,  39 வயது முதல் 72 வயதுக்குட்பட்டவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெளிநாட்டுடன் சேர்ந்து சதிவேலையில் ஈடுபட்டு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனிடம் இருந்து ஹாங்காங் பிரிவதற்கு முன் கடந்த 1995-ம் ஆண்டு ஜிம்மி லாய், ஆப்பிள் டெய்லி நாளேட்டைத் தொடங்கினார். ஜனநாயகத்துக்கு ஆதரவாகவும், சீனாவின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்தும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளை எதிர்த்தும் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகிறது.

ஹாங்கிங்கின் ஜனநாயகத்தை முடக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் சீனா கொண்டு வந்த தேசியப் பாதுகாப்புச் சட்டம் எனும் அஸ்திரம் முதன்முதலாக ஊடகத்தின் மீது செலுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.