செல்வநாயகம்

செல்வநாயகம்

பாகம் 8: மிதவாத அரசியலும் ஆயுத அரசியலும் உறவும் – முரணும்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 08 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 08

தேசம்: 1983 யூலைக்கு முதல் நடந்த விடயங்களை திருப்பி பார்ப்போம். 70க்கு பிற்பட்ட காலங்களில் தமிழர் எழுச்சியை தமிழரசுக்கட்சி தலைமை தாங்குகிறது. தொடர்ந்து 1980களுக்குப்பின் ஆயுதக்குழுக்களின் கைக்கு மாறுகின்றது. இந்த காலகட்டங்களில் தமிழரசுக் கட்சி – தமிழர் விடுதலைக் கூட்டணி – பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணி – விடுதலை இயக்கங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான உறவு எப்படி இருந்தது அதனை உங்களால் எப்படி உணர முடிந்தது…? முன்னைய பேட்டிகளில் உங்களுக்கு தமிழரசுக்கட்சி மீது பல விமர்சனங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் பொதுவாக நிலை அப்பிடி இல்ல. அந்த நிலை எப்படி ஆனதாக காணப்பட்டது…?

அசோக்: தமிழரசு கட்சியின், தமிழர் விடுதலைக் கூட்டணியின் நடத்தை தொடர்பாக தான் பிரச்சினை இருந்ததே தவிர தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி பேசிய அரசியல் தொடர்பாக எங்களுக்கு சிக்கல் இருக்கவில்லை. இக் கட்சிகள் பேசிய அரசியல் யதார்த்தமான அரசியல். பேரினவாத ஒடுக்குமுறை, குடியேற்றத் திட்டங்கள் தொடர்பான பிரச்சனை, தமிழர்களுக்கான சம உரிமை இன்மை, சிறுபான்மை இனங்கள் நசுக்கப்படுகிறது என்று கூறிய கோரிக்கைகள் உண்மையானவை. அந்த எதிர்பார்ப்புகள் அவர்களுடைய உரிமை தொடர்பான விடயங்கள் உண்மையானவை. எனக்கு இக் கட்சிகளின் நடத்தை தொடர்பாக விமர்சனங்கள் இருந்தது. செயற்பாடு தொடர்பாக அதனுடைய அதிகாரம் தொடர்பான பிரச்சனைகள் நிறைய இருந்தது.

தேசம்: குறிப்பாக

அசோக்: தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வடிவாக கையாண்டு இருக்க முடியும் என நினைக்கிறேன். அவர்களினுடைய அரசியல் முக்கியமாக பாராளுமன்ற கதிரைகளுக்கான அரசியலாக, பேரம் பேசுவதற்கான அரசியலாகபோய்விட்டது. தமிழ் மக்களுக்கான அரசியலாகவன்றி அது தங்களுடைய கட்சி உறுப்பினர்களுக்கான அரசியலாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் செல்வநாயகம் இருக்கும்போதும் அந்த அரசியல் வேறு மாதிரித்தான் இருந்தது. செல்வநாயகம் இருக்கும் வரை ஓரளவுக்கு தமிழரசுக்கட்சி தமிழர்களின் உரிமைக்கான ஒரு குரலாக இருந்தது. ஏனென்றால் முஸ்லிம்களுக்கான தனியலகு பற்றி கூட செல்வநாயகம் பேசி இருக்கிறார். அவர் இனங்களுக்கிடையிலான சமத்துவம், ஒற்றுமை பற்றி எல்லாம் பேசி இருக்கிறார். இந்த உணர்வுகள் பின்பு தமிழரசுக் கட்சியிடம் இருந்ததில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணிடமும் இருக்கவில்லை. முஸ்லிம் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த கட்சிகளை விட்டு வெளியேறியதற்கு காரணமும் இந்த கட்சிகளின் சந்தர்ப்பவாதம்தான்.

தேசம்: நீங்கள் கூறுகின்ற இந்த அரசியல் விளக்கம் அன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடையே எப்படி பிரதிபலித்திருந்தது …? அல்லது தமிழரசு கட்சியோ அதன் பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணியோ தமிழர்களுக்கு விசுவாசமாக இல்லை என்பதை அவர்கள் எப்படி உணர்ந்தனர்…?

அசோக்: வெகுஜன பரப்பில் தமிழரசுக்கட்சி பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணி உன்னதமான ஒரு அமைப்பாகவே உணரப்பட்டது. விமர்சனங்கள் இருந்தது. உதாரணமாக எங்களுடைய குடும்பத்தை எடுத்துப் பார்த்தால் கூட எனக்கு விமர்சனம் இருந்த அளவிற்கு, என்னுடைய குடும்பத்தினரிடம் விமர்சனங்கள் எதுவும் இருக்கவில்லை. எங்களுடைய கிராமத்தில் கூட விமர்சனங்கள் இருக்கவில்லை. அது யாரிடம் வந்தது அரசியல் சமூக அறிவு பெற்ற – இடதுசாரித் தோழர்கள் மத்தியில் தான் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி பற்றிய முரண்பாடுகள் வருது. நீங்கள் கேட்டது போல ஏன் ஆயுதக் குழு இயக்கங்கள் தோன்றின என்பதற்கு இன்னொரு விதமான அரசியல் இருந்தது. என்னவென்றால், தமிழர் விடுதலைக் கூட்டணி தன்னை ஒரு தமிழர்களின் பாதுகாப்புக்கான பாராளுமன்ற கட்சியாக தன்னை நினைத்திருந்தால் குறைந்தபட்சமாவது தமிழர் பிரச்சினைகளைத் தீர்த்து இருக்கலாம். ஒரு உரையாடல் முக்கியம். முரண்பாடு தோன்றிய சமூகத்துடனான உரையாடல் உங்களுக்கு அவசியம். அந்த உரையாடல் எப்பொழுதும் நிகழ்ந்ததில்லை. சிங்கள மக்கள் மத்தியில் தமிழரசுக்கட்சியினர், தமிழர் விடுதலைக்கூட்டணி யாருமே தமிழர்களின் பிரச்சினையை கொண்டு செல்லவில்லை. இயக்கங்களும் கொண்டு செல்லவில்லை.

புளொட் அதற்கான முயற்சியை ஓரளவு மேற்கொண்டது. JVP யில் இருந்து பிரிந்த தோழர்களோடு ஒரு உறவை வளர்த்தது. அதற்கான ‘ தமிழிழம்- சிறிலங்கா நட்புறவுக் கழகம்’ என்ற பெயரில ஒரு அமைப்பை உருவாக்கி இருந்தம். இவ்அமைப்பில் குமரன், முரளி, ஈஸ்வரன், கௌரிகாந்தன் , நானும், சிங்கள தோழர்களும் இணைந்து தென்னிலங்கையில் பல வேலைத்திட்டங்களை தொடங்கினோம். ஆனா புளொட் தலைமை ஒத்துழைப்பு கொடுக்கல்ல. தொடங்கின கையோட முடிஞ்சி போய்ச்சி. சிங்களத் தோழர்களுக்கு எங்களில சரியான ஏமாற்றம். என்டாலும் பறவாயில்ல புளொட் ரேடியோவில சிங்கள சேவிச நடத்திச்சு. அது சிங்கள மக்கள மத்தியில் தாக்கத்தை கொடுத்ததென்றுதான் சொல்லவேண்டும்.

தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி நினைத்திருந்தால் அவர்கள் நிறைய செய்திருக்கமுடியும். அதற்கான வளங்கள் இருந்தன. அதில் அங்கத்துவம் வகித்தவர்கள் எல்லோரும் சட்டத்தரணிகள். அவர்களுக்கு மொழி ஒரு தடையாக இருந்திருக்காது. நன்றாக ஆங்கிலம் கற்று இருந்தார்கள் பல்வேறு தரப்பினரை சந்தித்து தமிழர்களின் பிரச்சினையை எடுத்துரைத்திருந்திருக்கலாம். எமது நியாயங்களை சிங்கள மக்கள் புரிந்து கொணடிருப்பாங்க.

தேசம்: இந்தக் காலகட்டங்களில் தலைவர் அமிர்தலிங்கம் உள்ளிட்டோருக்காக கைகளைப் கிழித்துக் கொள்ளும் அளவிற்கு எழுச்சிமிக்க இளைஞர்கள் அலை ஒன்று வடக்கில் இருந்தது. இதேபோன்றுதான் நிலை கிழக்கிலும் இருந்ததா…?

அசோக்: ஓ ஓ…, கிழக்கிலும் உணர்ச்சி அரசியல் இருந்தது. எங்களின் கிராமத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி கூட்டங்கள் நடைபெற்றபோது நிறைய இளைஞர்கள் கைகளைப் கிழித்துக்கொண்டு ரத்தத்தை நெற்றியில் பூச கூடிய அளவிற்கு காசி ஆனந்தனுக்கு – அமிர்தலிங்கம் ஆகியோருக்கு எல்லாம் பெரிய ஆதரவு இருந்தது.

தேசம்: நீங்கள் குறிப்பிடக்கூடிய இந்த நிலையில் பின்னர் மாற்றங்கள் ஏதாவது வந்ததா…?

அசோக்: அந்த காலத்திலிருந்த தலைமுறையில் பெரிய அளவிலான மாற்றங்கள் வந்திருக்கவில்லை. என்னுடைய தலைமுறையினரிடம் மாற்றம் வந்ததே ஒழிய முன்னையவர்களிடம் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவுமில்லை. இன்றைய காலத்தில் தமிழரசு கட்சியின் வாக்கு வங்கி அவர்கள்தான். இந்தத் தலைமுறையினர் தான் இன்று 65 – 75 வயது தலைமுறையினராக உள்ளனர். இவர்களுடைய வாக்குவங்கி தான் தமிழரசுக்கட்சியின் பெரும் வாக்கு வங்கியாக உள்ளது. அதற்குப் பின்னர் பெரும்பாலான இளைஞர்கள் அரசியல் ரீதியாக வளர்க்கப்பட்ட – ஓரளவு சிந்திக்ககூடியவர்களாக இருந்தனர். இவர்கள்தான் தமிழரசுக் கட்சி மீதான அரசியல் விமர்சனங்கள் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். மற்றும்படி தமிழரசுக் கட்சிக்கான வாக்கு வங்கி என்றுமே உறுதியாக இருந்துள்ளது. பேரினவாதத்தின் ஒடுக்குமுறை, புறக்கணிப்பு இருக்கும் வரை தமிழ் அரசுக் கட்சி வாழும். அதற்கு மேல ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்.

இன்றும் கூட கடுமையாக நாங்கள் தமிழரசுக் கட்சியை விமர்சிக்கிறோம். ஆனாலும், ஒரு பாராளுமன்ற தேர்தலின் போது வாக்குகள் தமிழரசு கட்சிக்கு தான் போகின்றது. அதற்கு மாற்றீடாக எந்த கட்சிகளுமே இல்லை.

தேசம்: நீங்கள் சொல்கின்ற அந்த 82 – 83 கால கட்டங்களிலும் இதே நிலைதானா…? இளைஞர் இயக்கங்கள் அல்லது அமைப்புகள் பெரிய அளவிறகு மக்களின் மனதை வென்றெடுக்கவில்லை என்டுறீங்க.?

அசோக்: ஆம். வென்றெடுக்கவில்லை. ஏனென்றால் தமிழர் விடுதலைக் கூட்டணி க்கு மாற்றீடான ஒரு கட்சியை இளைஞர்களால் உருவாக்க முடியவில்லைத்தானே…

குறைந்த பட்சம் ஒரு வெகுஜன அமைப்பைக் கூட உருவாக்க இல்லைத்தானே. இளைஞர்கள் உருவாக்கிய ஆயுத இயக்கங்களிடம் இருந்து பெரும்பாலும் மக்கள் அன்னியப்பட்டு பார்வையாளர்களாகத்தான் இருந்தாங்க. பங்களிப்பாளர்களாக ஒரு காலமும் இருந்ததில்லை.

மக்களுக்கு இயக்கங்கள் தொடர்பாய் பிரமிப்பும், பயமும் இருந்ததே தவிர நெருக்கமான உறவு இருக்கல்ல. சில இயக்கங்கள் மக்களிடம் எஜமான் தன்மையுடன்தான் நடந்துகொண்டன. மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் மக்களுக்கு தண்டனை வழங்கின. மரண தண்டனை கூட கொடுத்தாங்க. அதிகார ஆணவத்தோடு இந்த இயக்கங்கள் நடந்து கொண்டன. பிறகு எப்படி இவை மக்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுக்கமுடியும்.

ஒரு விடுதலைப் போராட்டத்தில் மக்கள் பங்களிப்பின் முக்கியத்துவம், அதன் அவசியம் இயக்கங்களால் உணரப்படவே இல்லை. அரசியல் சார்ந்த வெகுஜன அமைப்ப கட்டியெழுப்பேல. ஆயுதம் இருந்தால் காணும் என்ற எண்ணம்தான் இருந்தது.

என்றாலும், புளொட், ஈபிஆர் எல் எப் இரண்டும் மக்கள் பங்களிப்பு, அணிதிரட்டல் போன்ற வெகுஜன வேலைத்திட்டங்களில் ஆர்வம் கொண்டிருந்தன.

காந்தியத்தை தடை செய்யாமல் விட்டிருந்தால் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மாற்றான அமைப்பாக காந்தியம் வளர்ந்திருக்கும். ஒருவேளை அது ஒரு எழுச்சியாக அமைந்திருக்கும். ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து அரசியல் சமூக மேம்பாட்டு இயக்கமாக அது வந்திருக்க முடியும். காந்தியத்துக்கு இருந்த பெரிய பிரச்சனை ஒரு ஆயுத இயக்கம் அதுக்குள் போகும் போது ஒரு வெகுஜன இயக்கத்திற்கும் ஆயுத இயக்கத்துக்குமான பரஸ்பர உறவு முறையாக – கவனமாக கையாளப் பட்டிருக்க வேண்டும். அது புளொட்டிலும் இல்லை.

தேசம்: இதை இப்படி பார்க்கலாமா…? தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு மிதவாத அரசியலை செய்ததாக இருந்த நிலை மாற்றம் கண்டு ஆயுத அரசியல் தான் தமிழர்களுக்கான ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் என்ற போக்கு தான் அந்த கால கட்டத்தில் இருந்ததா…? அதாவது இவர்கள் அரசியலுக்கானவர்கள்..

அசோக்: தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கம், தமிழர் விடுதலைக்கூட்டணியின், இதனுடைய ஒரு பகுதியாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். இளைஞர் பேரவை தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உபகுழுவாகதான் உருவாக்கப்பட்டது. பிறகு தமிழ் இளைஞர் பேரவைக்கும் – தமிழர் விடுதலைக் விடுதலைக் கூட்டணிக்கும் இடையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு புஷ்பராஜா, வரதராஜப்பெருமாள், முத்துக்குமாரசாமி எல்லாம் பிரிந்தது வேறு வரலாறு. ஆனால், அது தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உப குழுவாக தான் உருவாக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் போதாமை காரணமாக தான் ஆயுத இயக்கங்கள் உருவெடுத்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலில் காணப்பட்ட போதாமை இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஆயுத குழுக்களிலும் காணப்பட்டது.

தனி நாடு, தமிழ் ஈழம், பிரிவினை இப்படித்தான் எங்கள் நோக்கமும் இருந்ததே தவிர உலக அரசிலை யதார்த்தத்தை நாங்கள் அக்காலத்தில புரிஞ்சி கொள்ளல. எந்த ஒரு அரசியல் விழிப்பூட்டல்களும் இடம்பெறவில்லை. ஆயுத இயக்கங்கள் திடீர் வளர்ச்சியடைந்தன.

தேசம்: யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய தமிழர் மாவட்டங்களில் காந்தியத்தின் மீதான ஈடுபாடு காணப்பட்டதும் பிறகு பல இளைஞர்கள் அரசியல் மயப் படுத்தப்பட்டனர் என்ற போக்கு ஒன்று இருக்குது. அதே சமயம் வடக்கிலிருந்து காந்தியம் செய்யப்படல. அங்க வந்து மாணவர் இயக்கங்கள் தான் ஏற்பட்டிருந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்பி கொண்டிருந்தார்கள். இவர்களின் அரசியலும் ஆயுத அரசியலாகத்தான் இருந்ததுவா?

அசோக்: மாணவர் அமைப்பு கெஸ் வந்து ஓரளவு அரசியல் வகுப்பு நடாத்தி இருக்கும் என நினைக்கிறன். எல்லா மாணவர் அமைப்புக்களும் ஆயுத போராட்டத்தை நோக்கித்தான் அரசியல் மயப்படுத்தப்பட்டன. அன்றைய காலத்தில் வெகுஜன அமைப்புக்கள் இயக்கங்களால் தொடங்கப்பட்டாலும் அவற்றிக்கு தனித்துவமான வெகுஜன அரசியல் இருக்கல்ல. இயக்கங்களின் கிளைகளாகத்தான் அவை இருந்தன.

யாழ்ப்பாணத்தில் புளொட் மாணவர் அமைப்பான தமிழிழ மாணவர் பேரவை TESO கலவரத்திற்கு பிறகுதான் தீவிரமாக தொடங்குகிறது. TESO தனித்துவமான வெகுஜன அமைப்பாக செயற்பட முயன்றும் தலைமை இடம் கொடுகல்ல.புளொட்டின் யாழ் மாவட்ட அரசியல்பற்றி பின்னர் கதைக்கும் போது இதுபற்றி சொல்றன். புளொட்டின் தொழிற்சங்க அமைப்புக்களும் இப்படித்தான்.

தேசம்: கெஸ்ல இருந்த எல்லாருமே கடைசியா ஈபிஆர் எல்எப் ல போய்ச்சேருகினமா…

அசோக்: அப்படித்தான் கெஸ் , ஈபிஆர் எல்எப் ஆக மாற்றம் பெறுகிறதென நினைக்கிறன். அதன்ற வரலாறு எனக்கு தெரியல்ல. கெஸ் வந்து மாணவர்களுக்கூடாக கட்டமைக்கப்பட்டதால் ஓரளவு அரசியல் தேர்ச்சி அவங்களுட்ட இருந்திருக்கு. ஏனென்டால் ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்கள் நிறைய பேரோட கதைக்குறப்போ அரசியல் ரீதியான உரையாடல்களை செய்யக்கூடியதாக இருந்தது. மற்ற அமைப்புகள்ட்ட அது இருக்கல.

தேசம்: அப்ப இந்த தமிழ் இளைஞர் பேரவை போன்ற அமைப்புகளின் அரசியல் வளர்ச்சி…

அசோக்: தமிழ் இளைஞர் பேரவைட்ட தமிழரசு கட்சியின்ற வலதுசாரி அரசியல்தான் இருந்தது. . இடதுசாரி அரசியல் அவங்களிட்ட இல்லை. இடது சாரி அரசியல் கொண்டவங்க காலப்போக்கில் புளொட்டிற்கும் ஈபிஆர்எல் எப்பிக்கும் போறாங்க.

தேசம்: இளைஞர் பேரவை யாழ்ப்பாணத்துக்கு வெளியிலயும் பலமாய் இருந்ததா…?

அசோக்: ஓம் . பலமாய் இருந்தது. மட்டக்களப்பில தமிழ் இளைஞர் பேரவையை காசி ஆனந்தனோடு சேர்ந்து உருவாக்கியதில வசந்தகுமார் முக்கியமானவர். இவர் ரியுட்டரி வைத்திருந்து படிப்பித்தவர். இவருக்கூடாகத்தான் நிறையபேர் தமிழ் இளைஞர் பேரவைக்கு வாறாங்க. காசி ஆனந்தனோடு சிறைக்கு சென்று கடுமையான சித்திரவதைகளை அனுபவிச்சவர்.ஆனா அவர் பெயர் மறக்கப்பட்டுவிட்டது. இவங்களையெல்லாம் பதிவு செய்ய வேணும். நடேசானந்தம், வாசுதேவா, வேணுதாஸ், பரமதேவா, சிவநாதன், ராம்ராஜ் எல்லாம் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்தாக்கள் தானே இயக்கங்களுக்கு வந்தது.வாசுதேவா, சந்ததியார், வரதராஜபெருமாள், கி.பி அரவிந்தன், தங்ககேந்திரன் எல்லாம் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்தாக்கள்தானே. புஸ்பராஜா, வரதராஜபெருமாள், கி.பி அரவிந்தன் தங்ககேந்திரன் எல்லாரும் ஈபிஆர்எல்எஃப் க்கு போய்ட்டாங்கள். சந்ததியார், வாசுதேவா, ராம்ராஜ் போன்றவங்க புளோட்டுக்கு வந்துட்டாங்கள். காசி ஆனந்தன், வேணுதாஸ் பரமதேவா எல்லாரும் எல் ரீ ரீ ஈ க்கு போறாங்க.

தேசம்: அப்ப இந்த இயக்கங்கள்ட வளர்ச்சிக் கட்டத்தில இந்த இயக்கங்கள்ன்ட பொருளாதார தேவைகள் எல்லாம் என்னென்று நிறைவேற்றப்படுது…? ஒரு தொகையான இளைஞர்கள் அதுக்குள்ள இருக்கேக்குள்ள… ஏற்கனவே அங்கு வங்கிக் கொள்ளைகள் எல்லாம் நடந்திருக்கு. இதெல்லாம் எவ்வளவு தூரம் சமூகத்தில பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கு…?

அசோக்: புளோட்டை பொருத்தவரை மக்கள்ட்ட தான் தங்கியிருந்தது. நாங்க மக்கள் மத்தியில தான் சாப்பாடு எல்லாம். பெரிய செலவில்லை. நாங்க போற இடத்தில மக்கள் மத்தியில் சாப்பிடுறது, பிரச்சாரம் பண்றது. ஏனைய அரசியல் வேலைத்திட்டங்களுக்கு, கூட்டங்களுக்கு பலர் அன்பளிப்பு நிதி தந்து உதவினாங்க. ஆயுத ரீதியான இயக்கம் ஒன்றுக்குத்தான் பணம் தேவை. வெகுஜன இயக்கங்களுக்கான ஆதரவு பொருளாதார உதவி மக்களுட்ட இருந்து கிடைத்தது. எல்லாத்தையும் மக்களிட்டையே பெற்றுக் கொண்டோம். வெகுஜன அமைப்பாக தொடங்கி ஆயுத இயக்கமாக மாறுகின்ற போது தான் பணம் தேவைப்படுது. அந்தக் கட்டத்தில்தான் கிளிநொச்சி வங்கி கொள்ளை அடிக்கப்படுது புளோட்டால. எப்ப வந்து நீங்க ஒரு ஆயுத இயக்கமா செயல்பட ஆரம்பிக்குறீங்களோ அப்பதான் பணம் ஒரு தேவையா தெரிய தொடங்குது.

தேசம்: அந்த நேரத்தில் பெரும்பான்மையான அமைப்புக்கள் வங்கிக் கொள்ளையில – தவறு என்றும் சொல்ல ஏலாது . இது ஆனால் சர்வசாதாரணமாக நடைபெற்று இருக்குது.

அசோக்: ஓம். நடந்திருக்கு. வங்கிக்கொள்ளைல ஈடுபட்டிருக்காங்க.அது சர்வசாதாரணமாக நடந்தது. வெகுஜன அமைப்புகள் மக்கள் மத்தியில் போய் பேசுதல், அவர்களோடு உறவுகளை வளர்த்தல், மக்களின்ர பங்களிப்பு, மக்களை அணிதிரட்டுதல் மக்கள் போராட்டம் என்ற ஒரு படிமுறை வளர்ச்சி கூடத்தான் ஆயுதப் போராட்டம் நடக்கும்.இப்ப நீங்க கியூபா, வியட்நாம் உட்பட எல்லா இடமும் பார்த்திங்க என்டா நீண்டகால படிமுறை வளர்ச்சி ஒன்று இருக்கு.

எங்க போராட்டத்தில மக்கள் மயப்பட்டபோராட்டங்களில நம்பிக்கை இருகல்ல. ஆயுதப்போராட்டம் ஒன்றுதான் தீர்வென நம்பினோம். அப்ப ஆயுதங்களுக்கு, பயிற்சிகளுக்கு பணம் வேணும் . ஒரே தீர்வு வங்கிக் கொள்ளைகள்தான். அதனோட ஜூலை கலவரம் வந்துட்டு உடனடியாக… அப்ப இங்க அந்த நீண்ட கால வெகுஜன இயக்கத்துக்கான அவகாசம் இல்லாம போயிட்டு.

தேசம்: ஆயுத இயக்கங்கள் கிட்டத்தட்ட ஒரு short cut அதான் பார்க்குறினம் என. மக்கள்கிட்ட போய் அரசியல் செய்யாமல் வங்கிகளையும் சிலஇயக்கங்கள் தனிப்பட்ட மக்கள் சொத்துக்களையும் கொள்ளையிட்டு உள்ளன.

அசோக்: சில இயக்கங்கள் செய்துள்ளன. முழுக்க முழுக்க ஆயுத இயக்கங்கள் என்னதான் சித்தாந்தங்கள், மக்கள் போராட்டம் என்றெல்லாம் அணி திரட்டுதல் என்றெல்லாம் கதைத்தாலும் கூட அவர்கள் முழுவதும் ஆயுத கவர்ச்சியோடதான் இருந்தாங்க.. ஆயுத பலத்தின் ஊடாக புரட்சி செய்து தமிழீழம் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் எல்லா இயக்கத்திடமும்இருந்தது. அந்த நம்பிக்கை தான் எங்ககிட்ட கூட இருந்தது. ஆனால் இன்றைக்குத் திரும்பிப் பார்க்கும்போது விமர்சனத்துக்குரியதாகத்தான் இருக்குது.

தேசம்: இந்த வங்கிக் கொள்ளைகள் இதுகளால மக்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டு இருக்காங்க. வங்கிக் கொள்ளைகள் மட்டுமில்ல. சங்க கடைகள் கூட அடித்து உடைக்கப்பட்டிருக்குது. இதனால் சாதாரண மக்கள் எவ்வாறான பாதிப்பை எதிர் கொண்டார்கள். நான் நினைக்கிறேன்; களுதாவளை உங்களுடைய கிராமத்தில் கூட மக்கள் சேமிப்புக்காக கொடுத்திருந்த நகைகளை கூட கொள்ளை அடிப்பதற்காக திட்டம் ஒன்றும் இருந்தது.

அசோக் : ஓம். அது வேறு ஒரு அமைப்பு ஒன்று. அப்ப நாங்க JVP ல இருந்து வெளியேறி இருந்த காலகட்டத்தில், வெவ்வேறுபட்ட அமைப்புகள் வந்து எங்கள சந்திப்பாங்க. இப்ப வெளிப்படையா கதைக்கலாம். ஈரோஸ் அமைப்பு அன்னலிங்கம் ஐயா எங்களோட உறவு வைத்திருந்தவர். அவருடைய பிரதானமான நோக்கமாய் இருந்தது எங்க ஊர் வங்கியை கொள்ளை அடிப்பது. இப்படியான கிராமிய வங்கிகளில நகைகளை ஈடு வைச்சிருக்கிறவங்க ஏழை விவசாயிகள்தான். அவங்களுக்கு இந்த கிராமிய வங்கிகளினால் நஷ்ட ஈடு கொடுக்கமுடியாது; பாவம் மக்கள். மக்கள் மத்தியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டீங்க என்டு சொன்னா அது எங்களை மக்கள் மத்தில இருந்து அன்னியப்படுத்திவிடும். தடையாக போயிடும். நீங்க இப்படியான ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டு போலீசுக்கு தெரியவந்தால் உங்களால அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியாமல் போய்விடும். ஆனா இந்த அமைப்புகள் முழுக்க, மக்கள் இயக்கங்களை கட்டமை த்து மக்களிடம் ஆதரவும் நிதியும் பெறுவதை விடுத்து , பொருளாதார ரீதியான வங்கிக் கொள்ளைகளில் தங்கியிருந்தனர். பொருளாதார ரீதியாக மத்தியில் மக்கள் நிதி திரட்டவும், மக்கள் மத்தியில் தங்கி வாழ்வதற்கான சாத்தியங்கள் இருந்தது.அப்படியான நேரத்தில் இந்த வங்கிக் கொள்ளைகள செய்ய நாங்க விரும்பல.

தேசம்: அப்ப வங்கி கொள்ளை இடம் பெற்றதா…?

அசோக்: ஓம் அது நடந்தது வேறு இடத்தில். ஆனால் அது நாங்கள் கடுமையாக எதிர்த்தனாங்க.

தேசம்: இந்த வங்கிக் கொள்ளைகளில் எடுக்கப்பட்ட பணமும் நகையும் எப்படிப் பயன்படுத்தப்பட்டது இந்த இயக்கங்களால…?

அசோக்: அனேகமான வங்கிக் கொள்ளைகள் அனைத்தும் பயிற்சிகளுக்கு ஆயுதங்களுக்கு செலவழிக்கப்பட்டிருக்கு. . தனிநபர் ரீதியாக அது எங்கேயுமே பயன்படுத்தப்படல. ஒரு சில சம்பவங்கள் தவிர்க்க முடியாமல் சின்ன சின்ன தவறுகள் நடந்து இருக்கலாமே தவிர , மற்றும்படி அந்தத் தங்கங்களையும், பணங்களையும், நகைகளையும் இயக்கங்கள் தமக்காகவே பயன்படுத்தினர். அதேநேரம் தனிநபர்க்கூடாக பயன்படுத்தப்பட்டது என்று சொன்னா அது யாழ்ப்பாண ஹட்டன் நெசனல் வங்கி கொள்ளை தான்.

தேசம்: அவர்களுடைய அரசியல் செயற்பாடுகளும் வலு மட்டுப்படுத்தப்பட்டதாக தான் இருந்தது. இராணுவ நடவடிக்கைகளும் அவர்கள் மேற்கொள்ளல என …

அசோக்: அது மட்டுப்படுத்தப்பட்ட காலங்களில்தான் கொள்ளைகளும் அடிக்கப்பட்டது. அதுக்குப்பிறகு இயக்கமும் இல்லாம போயிட்டுது. பணமும் அதுக்குள்ள பயங்கர சிக்கலுக்கு உள்ளாகிட்டுது.

தேசம்: மற்ற அமைப்புகளுக்கு அது வழங்கப்பட்ட தாக சொல்லப்படுகிறதே…

அசோக்: தீப்பொறி இயக்கத்திற்கு கொடுக்கப்பட்டதா சொல்லப்படுது. ஐயருக்கு ஊடாக அது கொடுக்கப்பட்டதாக…!

தேசம்: அதைவிட வேற நான் நினைக்குறேன், ரெலி ஜெகன் எல்லாரும் அவர்களுடைய அமைப்பு சார்ந்து சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்தக் காலகட்டத்தில் சில தனி நபர் அமைப்புகளும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு இருந்த காலகட்டம் இருக்கு தானே… குறிப்பாக யாழ்ப்பாணத்தில.

அசோக்: இந்த இயக்கங்களின் அதிகரித்த உருவாக்கம் இருக்குதானே.., அது எங்க நடக்குது என்று சொல்லி சொன்னா ஒருவிதமான அதிகார மோகத்தினால, ஆயுத கவர்ச்சியாலதான் இந்த இயக்கங்களின் உருவாக்கம் அமைந்திருந்தது. அதனோட மத்தியதர வர்க்க மனோபாவமான ஹீரோசியம் சுயபிரபல்யம் ஒரு காரணமாக இருக்கு. ஈபிஆர்எல்எஃப் , ஈரோஸ் , புளோட் , ரெலோ புலிகள் எல்லாம் இயக்கங்களாக உருவாக்கப்பட்டிருக்குது. குறைந்தபட்சம் இந்த இயக்கங்களிடம் அதற்கான சித்தாந்தங்கள், அரசியல், இருக்குது. இனிமே புதுசா ஒரு இயக்கம் வருதென்டா இந்த இயக்கங்களின் கொள்கைகள் சித்தாந்தங்களை நடைமுறைகளைவிட வலுவான ஒரு காரணம் தேவையாய் இருக்கும். அப்படியான ஒன்றுமே இல்லை. அப்ப புதுசா இயக்கங்கள் வாரத்துக்கான நோக்கம் எங்க உருவாகுதென்டா நான் சொன்ன இந்தக் காரணங்கள்தான். அதேநேரம் அந்தக் காலத்திலே இயக்கம் என்பது பிரமிக்கத்தக்க ஒரு குறியீடாக போயிட்டு. அதால நிறைய இயக்கங்கள் அந்த காலத்தில வருது. அவற்றை தமிழர்களின் விடுதலைக்கான இயக்கங்களாக பார்க்க இயலாது என்று தான் நான் நினைக்கிறேன். ஏனென்டா உண்மையா அவங்க விடுதலைக்கான உந்துசக்தியாக வரவேண்டும் என்று நினைத்திருந்தால் ஏற்கனவே இருந்த இயக்கங்களில் எதுலயாவது சேர்ந்திருப்பார்கள். ஏதாவது ஒரு அமைப்பை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கலாம். அப்படி இல்லாட்டி புதிய அமைப்பை உருவாக்குகின்ற போது ஏற்கனவே உருவாக்கப்பட்ட அமைப்புகளை விமர்சனத்திற்கு ஊடாக கற்றிருக்கோனும். பாக்கப் போனா எல்லாரும் தனிநபர் தாக்குதல்களை நடத்தினார்கள். எல்லாம் தனிநபர் பயங்கர வாதச் செயல்களாகத்தானே இருந்திருக்கு.

தேசம்: நான் நினைக்கிறேன் இயக்கங்கள்ட எண்ணிக்கை அதிகரித்தது இந்த ஜூலை கலவரத்துக்கு முன்னமே தானே.

அசோக்: ஈரோஸ் , ஈபி.ஆர்.எல்.எப், புளோட் ,ரெலோ – எல்ரிரீ இந்த இயக்கங்கள்ட தோற்றம் வருது. நான் நினைக்கிறேன் எவ்வளவு இயக்கம் வந்ததே எங்கட போராட்டத்தினுடைய தோல்விதான். ஒரே கோட்பாட்டுக்காக – ஒரே கொள்கைக்காக ஒரே லட்சியத்திற்காக போறம் என்று சொன்னால் ஈபி.ஆர்.எல்.எப்- ம் மார்க்சிசம் கதைக்குது , ஈரோசும் மாக்சிசம் கதைக்குது , புளோட்டும் மாக்சிசம் கதைக்குது ஆனா எல்லாம் வெவ்வேறு பட்ட அமைப்புக்களா தானே இருக்குது. குறைந்தபட்சம் உடன்பாடுகள் கூட இல்லை தானே. ரெலோவும் – எல்ரிரீயும் ஆயுதம் சார்ந்து சிந்திக்கும் இயக்கங்கள். என்றாலும்கூட இவர்களுக்கு இடையிலான ஒருமைப்பாடு எங்கேயும் இருக்கல்ல தானே. எல்லாமே மத்திய தரவர்க்க குணாம்சங்களோடு உறைந்து போன இயக்கங்கள்தான். அதன்ர வெளிப்பாடுதான் இத்தனை இயக்கங்களும், முரண்பாடுகளும், சண்டைகளும் , அதிகாரப் போட்டிகளும், அழிவுகளும். மக்கள் நலன்களைவிட தனிநபர் மேலாதிக்க மனோபாவம் , சுயநலம், அதிகார ஆசைகள்தான் நம்ம போராட்ட இயக்கங்களை அழிச்சது.இன்றும் தமிழ்க் கட்சிகளிடம் இதுதானே மேலோங்கி இருக்கு.

தேசம்: அப்ப இப்படியான சூழலில் உங்களைப் போன்றவர்கள் அரசியல் செய்கின்ற போது எப்படியான பிரச்சனைகளை எதிர் கொண்டீர்கள்..? மற்ற இயக்கங்க ங்கள் ஆட்களை உள்வாங்கேக்குள்ள எப்படி உங்கள வித்தியாசப்படுத்துறீங்க…;

அசோக்: ஜூலை கலவரத்துக்குப் பிறகு இயக்கங்களோட ஆட்சேர்ப்பு என்பது கடும் விமர்சனத்துக்கு உரியதுதான். இவர்கள் சித்தாந்த ரீதியாக வந்த ஆட்கள் இல்லை தானே. ஒரு ஆர்வம் இருக்கும் தானே .

அதுலயும் நிறையபேர் ஆயுத கவர்ச்சி காரணமாக எந்த இயக்கத்திற்கும் போகத் தயாராக இருந்தார்கள். ஓரளவு சித்தாந்த ரீதியாக அரசியல் ஆர்வம் உடையவர்கள் ஈபிஆர்எல்எஃப் ஐ தேர்ந்தெடுப்பார்கள் – ஈரோசை தேர்ந்தெடுப்பார்கள் – புளோட்டை தேர்ந்தெடுப்பார்கள். வெறும் ஆயுத கவர்ச்சி கவர்ச்சி உடையாக்கள் அதிகமாக ரெலோவுக்கும், எல்ரிரிக்கும் தான் போனார்கள். எங்களைப்போன்ற சிந்தனை கொண்டவர்களுக்கு இந்த ஆள் சேர்ப்பு பெரிய சிக்கல்தான். இந்தியா ,பின்தள பயிற்சி எல்லாம் எங்கட சிந்தனைகளுக்கு, செயற்பாடுகளுக்கு இடம்இல்லாமல் செய்து விட்டது. என்டாலும் 83 ஜூலை கலவரத்திற்கு பின் அந்த நேரத்திலும் நாங்க யாழ்ப்பாணத்தில அரசியல் வகுப்புக்கள் வெகுஜனஅமைப்புக்கள் என்று ஏதோ நம்பிக்கையில வேலை செய்ய தொடங்கி இருந்தம்.

தேசம்: அப்ப 1983 ஜூலை கலவரம் – திருநெல்வேலி தாக்குதல் வரைக்கும் பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்று நினைக்கிறேன். அப்படித்தான..?

அசோக்: 83 திருநெல்வேலி தாக்குதல் நடந்த வரைக்கும் பாரிய இராணுவ தாக்குதல் அதுவரைக்கும் நடக்கல. 13 பேர். எல்ரீரியிட முதல் தாக்குதல் அதுதான் என நினைக்கிறன்.

தேசம்: நான் நினைக்கிறேன் அடுத்த பதிவில் அதை செய்யலாம் என்று.

 

யாழ் மேலாதிக்கம் என்பது என்ன? : எம் ஆர் ஸ்டாலின்

யாழ் -மேலாதிக்கம் என்பது முதலில் ஒரு கருத்தியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது எப்படி சிங்கள மக்களை குறிக்காமல் அந்த சிங்கள சமூகத்தில் இருந்து வெளிக்கிளம்புகின்ற ஆதிக்க சக்திகள் கொண்டிருக்கின்ற இனமேலாதிக்க கருத்தியலை குறிக்கின்றதோ அதேபோலத்தான் இக்கருத்தியலை நாம் புரிந்துகொள்ள முயலவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது சிங்கள மக்களை குறிக்கவில்லை. சிங்கள மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கு எதிரானதும் இல்லை. அதேபோலத்தான் யாழ் மேலாதிக்கம் என்பதையும் அதற்கெதிரான கருத்துப்பரிமாறல்கள் என்பதையும் யாழ்ப்பாண மக்களுக்கு எதிரானதாக கொச்சையாக புரிந்துகொள்ளக்கூடாது.

ஆனால் துரதிஸ்ட வசமாக இந்த புரிதலில் சிலருக்கு சிக்கல் இருக்கின்றது மேலும் சிலர் புரிந்து கொள்ளாதவாறு திரித்து கிழக்கில் இருந்து யாழ்-மேலாதிக்கம் குறித்து கருத்திடுவோர் மீது பிரதேசவாத துரோக முத்திரை குத்த முனைகின்ற போக்கும் அதிகரித்து வருகின்றது.

தமிழ் தேசியமென்பது பரந்துபட்ட தமிழ் மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகளில் இருந்து உருவாகிய கருத்துருவமா? அன்றில் தமிழ் சமூகத்தில் ஆதிக்க சக்திகளாக அகல கால்பதித்து நின்ற யாழ்-மேட்டுக்குடிகளின் நலன்களில் இருந்தே அச்சிந்தனையுருவாக்கம் நிகழ்ந்ததா? இக்கேள்விகளுக்கான விடைகளை நாம் மேலோட்டமாக பார்ப்போம். அதனுடாகவே தமிழ் தேசியம் என்பதையும் யாழ் மேலாதிக்கம் என்பதையும் விளங்கிக்கொள்ளலாம்.

ஒரு சமூகமோ அல்லது ஒரு இனமோ அதன் அசைவியக்கம் சார்ந்து தனக்கான ஒரு கருத்தியலுடனேயே பயணிப்பது வழமையாகும். அந்த கருத்தியலின் உருவாக்கத்தில் அச்சமூகத்தின் சமூக பொருளாதார பண்பாட்டம்சங்களே நிச்சயம் தாக்கம் செலுத்தும். எனவே அந்த சமூக பொருளாதார பண்பாட்டு அம்சங்களில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினரின் செல்வாக்கானது அச்சமூகத்தினது கருத்தியல் உருவாக்கத்தில் பிரதான பங்கெடுக்கும்.

அந்த வகையில் தமிழ் தேசியத்தின் வேர்களாகவும் பிதாமகர்களாகவும் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதையிட்டு ஆராய்வோமானால் பொன் இராமநாதன், ஜ ஜி பொன்னம்பலம், சுந்தரலிங்கம், எஸ் ஜே வி செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோரை தவிக்கமுடியாது. இவர்களெல்லாம் தனவந்தர்களாகவும், பிற்போக்குவாதிகளாகவும், ஏழைகளை சுரண்டி பிழைப்போராகவும், ஆதிக்கசாதி வெறியர்களாகவும், ஆணாதிக்க மற்றும் பிரதேசவாதிகளாகவும், ஏகாதிபத்தியத்தின் முகவர்களாகவும் இருந்தார்கள் என்பது நமக்கேயுரித்தான வேதனையான வரலாறு ஆகும். இந்த பின்னணியில் இருந்துதான் தமிழ் தேசியமென்பதன் சிந்தனை மற்றும் கருத்தியல் உருவாக்கத்தில் தாக்கம் செலுத்திய வர்க்கத்தினரையும் இத்தமிழ் தேசியமென்பதன் ரிஷிமூலம் என்ன என்பதையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

1920களில் பள்ளிக்கூடங்களிலே அனைத்து மாணவர்களுக்கும் சம ஆசனமும் சமபந்தி போசனமும் வழங்கப்படக்கூடாதென்றும் தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகளை தள்ளி வைக்க வேண்டுமென்றும் பிரித்தானிய தேசாதிபதியிடம் சென்று தலைகீழாக நின்று வாதாடியவர் பொன்.இராமநாதன் ஆகும்.

அதேபோல எல்லோருக்கும் வாக்குரிமை வழங்க கூடாது ‘வேளாளருக்கும் தனவந்தருக்கும்’ மட்டுமே வாக்குரிமை வேண்டும் என்றும் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டால் அது கும்பலாட்சிக்கு வழிகோலும் என்று டொனமூர் ஆணைக்குழு முன் சென்று சாட்சியம் சொன்னவரும் இந்த பொன்.இராமநாதன்தான்.

1944ஆம் ஆண்டு இலவச கல்வி மசோதா முன்வைக்கப்பட்டபோது
ஜி.ஜி பொன்னம்பலம் சிறிபத்மநாதன், மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் சட்டசபையிலே ஒருமித்து நின்று அந்த மசோதாவை எதிர்த்தார்கள்.

அதுமட்டுமல்ல ஆங்கிலத்தை அகற்றி சுயபாஷைகளை அரச கரும மொழியாக்குவோம் என்று தென்னிலங்கையில் சுயபாஷை இயக்கம் உருவானபோது அதனை கடுமையாக எதிர்த்து ‘சிங்களமும் வேண்டாம் தமிழும் வேண்டாம்’ என்று அரச கரும மொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டுமென்று காலனித்துவத்தின் முகவர்களாக வாதங்களை முன்வைத்தவர்கள் ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற தலைமைகளேயாகும்.

1947ல் பத்து லட்ஷம் மலையக மக்களின் வாக்குரிமையை பறிக்க காரணமான பிரசா உரிமை சட்டத்தை ஆதரித்து யுஎன்பியின் மக்கள் விரோத ஆட்சிக்கு துணைபோனவரும் இந்த பொன்னம்பலம்தான்.

இன்னுமொருவர் தமிழ்த்தேசியத்தின் தத்துவவாதி என்றும் ‘அடங்கா தமிழன்’ என்கின்ற ‘பெருமைமிகு’ அடைமொழியாலும் போற்றப்படுபவர் சுந்தரலிங்கம். அந்த மனிதனைப்போல் சாதிவெறியன் இனியொருபோதும் பிறக்க முடியாது.

1957 ல் நெற்காணி சட்டம் கொண்டுவரப்பட்டபோது செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியினர் அதை எதிர்த்தனர்.

ஏழை எளிய மாணவர்களுக்கு சமபந்தி போசனத்தையும் சம ஆசனத்தையும் மறுத்தவர்கள், இலவச கல்வி கூடாது ‘கண்ட கண்டவர்களுக்கு’ கல்வி எதற்கு என்று குவித்திரிந்தவர்கள், வாக்குரிமையா ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் கூடவே கூடாது என்று கொக்கரித்தவர்கள், சுயபாஷையா? எதற்கு? ஆங்கிலத்தை அகற்றத்தேவையில்லை என்று தமது சொந்த நலன்களில் நின்று அடித்து பேசியவர்கள், மலையக மக்களை நிர்கதிக்குள்ளாக்கியவர்கள், ஏழைமக்களுக்கு காணிகளை வழங்குவதை எதிர்த்தவர்கள் எல்லோரதும் அரசியல் பரம்பரியமே இன்று வரை தொடருகின்ற தமிழ் தேசிய அரசியலாய் இருக்கின்றது.

மக்களின் நலன் சார்ந்த திட்டங்களையும் மசோதாக்களையும் எதிர்த்தவர்கள், பிரித்தானிய-சிங்கள ஆளும் வர்க்கத்தோடு இணைந்து கொண்டு ஏழை மக்களை ஒடுக்கி பிரபுத்துவ அரசியல் செய்தவர்கள் யாரோ அவர்களே துரதிஸ்ட வசமாக எமக்கு தேசியத்தை போதித்தனர்.

1947 ல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது ‘அங்கே ஜின்னா பாகிஸ்தானை பிரித்தார். இங்கே பொன்னா தமிழீழத்தை பிரித்து எடுப்பேன்’ என்று பேசித்திரிந்தார் பொன்னம்பலம். பாராளுமன்ற முறைமை அறிமுகமானபோது தேர்தல் அரசியலுக்கான இனவாத அணிதிரட்டல் ஒன்றை நோக்கியே அவரது இந்த பேச்சுக்கள் இருந்தன.

1956ல் அரச கருமமொழிச்சட்டம் வந்தபோது பிரித்தானியரின் அருவருடிகளாக ஆங்கிலம் கற்று அரச நிர்வாக அதிகாரிகளாக இலங்கையெங்கும் பரவியிருந்த யாழ்ப்பாணத்து அதிகார வர்க்கம் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டது.

1971ல் கல்வி தரப்படுத்தல் வந்தபோதும் இந்த அதிகார வர்க்கத்தின் வாரிசுகளே பாதிப்படைந்தனர். இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளவே ‘தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது ஒட்டுமொத்த தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள்’ என்று ஒப்பாரிவைத்தனர் இந்த யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தினர்.

ஆனால் அதற்கு மாறாக கல்வித்தரப்படுத்தல் என்பது வடக்கு கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய ஆறு மாவட்ட மக்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாய் அமைந்திருந்தன. இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குரிய இட ஒதுக்கீட்டுக்கு சமனான அந்த சட்டத்தை தமிழரசு கட்சியினர் யாழ் மேட்டுக்குடிகளின் நலன்களில் இருந்து எதிர்த்தனர்.

மூதூர் பிரதிநிதியான தங்கதுரையும் மட்டக்களப்பு பிரதிநிதியான இராஜதுரையும் கல்வி தரப்படுத்தலால் பரந்து பட்ட தமிழர்களுக்கு வரலாற்றில் முதற்தடவையாக பல்கலைக்கழக வாய்ப்புக்கள் கிடைக்கும் என்கின்ற மாற்று கருத்துக்களை தமிழரசு கட்சியில் முன்வைத்தபோது அவை புறந்தள்ளப்பட்டன. கல்வி தரப்படுத்தல் ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் எதிரான இனவாத செயற்பாடு என்றே தமிழரசு கட்சி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

பிரிவினை கோரிக்கை எமது மக்களையை அழித்தொழிக்கும் என்று வட்டுக்கோட்டை மாநாட்டிலேயே வந்து சொன்னார்கள் கனவான் தேவநாயகமும் தொண்டமானும். ஆனால் கிழக்கினதும் மலையகத்தினதும் அதிருப்திகளை அமிர்தலிங்கம் போன்றோர் கருத்தில் கொள்ளவில்லை.

யாழ்-மேட்டுக்குடிகள் யாழ்ப்பாணத்துக்கு உள்ளே ஒடுக்கப்பட்ட மக்களினதும் யாழ்ப்பாணத்துக்கு வெளியே வாழும் ஏனைய பிரதேச மக்களினதும் சமூக பொருளாதார வாழ்வியல் பிரச்சனைகளை பின்தள்ளி தாமும் தமது வாரிசுகளும் எதிர்கொண்ட உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சனைகள் மட்டுமே அனைத்து தமிழருக்கும் உரியதான பிரச்சனைகளாக அரசியல் மயப்படுத்தினர். தமது நலன்களை அடிப்படையாக கொண்டே ஆயுத போராட்டத்தை முன்மொழிந்தனர். அதையே தமிழ் தேசியமென்றனர். தமிழீழ கோரிக்கையை பிறப்பித்தனர்.

இதுதான் யாழ் மையவாத சிந்தனை ஆகும். ஒரு சமூகத்தில் மேலாட்சி செலுத்துபவர்கள் தமது நலன்களில் மட்டுமே மையம்கொள்ளும் சிந்தனையின் வழியிலேயே அனைவரையும் பயணிக்க கோருவதும் அதுவே தமிழ் தேசியம் என்று முழங்குவதும் மேலாதிக்கமாகும்.

அதனால்தான் 1960-1970 காலப்பகுதியில் வடமாகாணத்தில் வெளிக்கிளம்பிய சாதி தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை தலைமையேற்று நடத்த அன்றைய காலத்தில் முக்கிய அரசியல் சக்திகளாக இருந்த தமிழ் காங்கிரசும் தமிழரசு கட்சியும் முன்வரவில்லை. அது முழுக்க முழுக்க வர்க்க அரசியல் பேசுகின்ற இடதுசாரி கட்சிகளாலேயே வழிநடத்தப்பட்டது. அதுமட்டுமன்றி அந்த சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை பாராளுமன்றத்தில் கிண்டலடித்து உரையாற்றினார் தளபதி அமிர்தலிங்கம். தமிழ் தேசியத்தின் தந்தை என்று விளிக்கப்படுகின்ற செல்வநாயகமோ ‘நான் கிறிஸ்தவன் இது இந்துக்களின் பிரச்சனை’ என்று ஒதுங்கிக்கொண்டார்.

ஆனால் தேசியமென்பது சமூகத்தில் ஒடுக்கப்படுகின்ற சாமானிய மக்களின் பிரச்சனைகளை புறமொதுக்கி ஆதிக்க வர்க்க நலன்களை முதனிலைப்படுத்துவது அல்ல. மேட்டுக்குடிகளின் பிரச்சனைகளை ஒட்டுமொத்த இனத்தின் அரசியல் அபிலாசைகளாக மேலிருந்து கீழ் நோக்கி திணிப்பதற்கு பெயர் தேசியமல்ல. மாறாக பரந்துபட்டு பெரும்பான்மையாக வாழும் அடித்தள மக்களிடமிருந்து அவர்களின் பிரச்சனைகளில் மையம்கொண்டு கீழிருந்து மேலாக பரந்து விரிய வேண்டியதே தேசியவாத குரலாகும். தேசியம் என்பது வெறும் சொல்லாடல் அல்ல. அது குறிக்கின்ற எல்லைக்குள் வாழும் முழு சமுதாயங்களினதும் வளர்ச்சிக்கான கருத்தியலாக இருக்கவேண்டும்.

ஒரு தேசியவாதத்தின் தொடக்கத்தில் அந்த இனத்தின் சிந்தனை மட்டத்தில் மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் பிரச்சனைகளே முன்னிறுத்தப்படுவது சிலவேளைகளில் தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால் காலப்போக்கில் அனைத்து மக்களது குறைபாடுகளையும் உள்வாங்கி தன்னை முற்போக்கான தேசியமாக வளர்த்துக்கொள்வதுண்டு. ஆனால் தமிழ் தேசியத்தில் அது இம்மியளவும் சாத்தியமாகவில்லை.

ஒரு தேசிய இனத்தின் முதன்நிலை பண்பு கூறுகளான மொழி நிலம் பண்பாடு பொருளாதாரம் என்பவற்றை வெறும் சடத்துவ நோக்கில் அணுகுவதால் மட்டும் தேசிய கூட்டுணர்வை உருவாக்கி விட முடியாது. வடக்குக்கும் கிழக்குக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான (மடுவென்பது கிடங்கெனக்கொள்க) அரசியல்,பொருளாதார,பண்பாட்டு வித்தியாசங்கள் குவிந்து கிடக்கின்றன. வரலாற்று ரீதியாக ஒருபோதும் வடக்குக்கும் கிழக்குக்குமான ஒரே அரசியல் தலைமை இருந்ததுமில்லை.

அதையும் தாண்டி வடக்கில் எங்கே பொதுப்பண்பாடு காணப்படுகின்றது. யாழ்ப்பாண சமூகம் என்பது சாதிகளால் கட்டமைக்கப்பட்ட அதிகார படிநிலை சமூகமாகும். சாதிக்கொரு சவக்காலையும் சாதிக்கொரு வீதியும் சாதிக்கொரு கோவிலும் வைத்துக்கொண்டு தமிழினத்துக்கான பொதுப்பண்பாட்டை எப்படி உருவாக்க முடியும்? எல்லோருக்குமான சமூகநீதியை எங்கே தேடுவது? நாமெல்லோரும் ஓரினம் என்னும் கூட்டுணர்வு எப்படி சாத்தியமாகும்? இன்றுவரை அகமண முறையை கைவிட தயாரில்லாது சாதிகளின் பொருட்காட்சி சாலையாக தோற்றமளிக்கும் யாழ்ப்பாணத்தில் வாழுவது ஓரினமா? அன்றி ஒரே மொழி பேசும் பல பழங்குடியினங்களா என்று கேட்க தோன்றுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இன்றுவரை பல கோவில்கள் தலித் மக்களுக்காக பூட்டிக்கிடக்கின்றன. ‘ஊர்கூடி தேரிழுப்பதென்பது’ முதுமொழி. ஆனால் ஊரிலுள்ள ஆதிக்க சாதிகள் புலம்பெயர்ந்து போனபின்பு தேரிழுக்க உயர்குடிகள் இல்லை என்பதால் ஜெஸிபி மெசினை கொண்டு தேரிழுக்கின்றோம் எதற்காக? தலித் மக்களை தேரில் கை வைக்க விடக்கூடாதென்பதற்காகத்தானே, தேர் தீட்டு பட்டுவிடும் என்பதற்காகத்தானே. இந்த நிலையில் தமிழருக்கான பொது பண்பாடு எங்கேஇருக்கின்றது? இருப்பதெல்லாம் வெறும் சாதிய பண்பாடு மாத்திரமேயாகும். அவற்றை கட்டிக்காப்பதுவும் யாழ்ப்பாண- மேலாதிக்கம்தான் நாம் குரல் கொடுப்பது யாழ்பாணத்து மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படும் ஏழைகள் மற்றும் சாதியரீதியில் ஒடுக்கப்படும் தலித் மக்களுக்காகவும்தான்.

இந்த லட்ஷணத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற கட்சிகளின் தலைவர்களில், பாராளுமன்ற உறுப்பினர்களில், மாகாண சபை உறுப்பினர்களில் யாதொருவராயினும் தாழ்த்தப்பட்ட குலத்தவர் உண்டோ என்கின்ற கேள்வியெழுப்புதல் அவசியமற்றது ஆகும். அப்படி எதுமே இன்னும் சாத்தியமாகவில்லை. ஆனால் தமிழ் மக்களின் நலன்சார்ந்து ஒரு சிறு துரும்பையேனும் நகர்த்திய வரலாற்றை கொண்டிராத கறுவாக்காட்டு பரம்பரைகளான சுமந்திரனும்,விக்கினேஸ்வரனும்,கஜேந்திரகுமாரும் மக்களின் தலைவர்களாக வலம் வர முடிகின்றது.

உண்மையில் தமிழ் தேசிய கொள்கை சார்ந்து தேர்தல் அரசியலுக்கு அப்பால் எத்தனை சிவில் அமைப்புக்கள் செயலாற்றுகின்றன? எத்தனை தன்னுரிமை செயற்பாட்டாளர்கள் களத்தில் வேலை செய்கின்றனர்? என்று கேட்டால் என்ன பதில்? வெறுமனே வாக்கு வங்கி அரசியலுக்காகவே இந்த தமிழ் தேசியவாத பிதற்றல்களை யாழ்ப்பாண கட்சிகள் காவித்திரிகின்றன என்பதே உண்மையாகும். அதனாற்தான் இந்த யாழ் மேட்டுக்குடிகள் பேசுகின்ற தேசியம் என்பது போலியானது. மக்களை ஏமாற்றி மேட்டுக்குடிகளின் நலன்களை மட்டுமே பூர்த்திசெய்கின்ற கபட நோக்கம் கொண்டது என்று சொல்லுகின்றோம்.

ஆனால் தேசியவாதமென்பது இதுவல்ல. பொங்கு தமிழ் ஆரவாரம் பண்ணி மக்களை அணிதிரட்டுவதாலோ பொங்காத தமிழ் ஆர்ப்பரிப்போ செய்து தென்னிலங்கைக்கு சவால் விடுவதாலோ தமிழ் தேசியம் தழைத்தோங்க முடியாது. பூர்வீகம் பற்றிய புல்லரிக்கும் வீர வசனங்களாலோ முள்ளி வாய்க்காலில் சத்தியப்பிரமாணம் எடுக்கின்ற ஆசாமிகளாலோ தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முடியாது.

தேசியம் என்பது பற்றி ரஷ்ய புரட்சியாளன் லெனின் என்ன சொன்னார்? ஸ்டாலின் என்ன சொன்னார்? அல்லது ரோசா லுக்சம்பேக் என்ன சொன்னார்? பெனடிக் ஆண்டர்சன் என்ன சொன்னார்? அந்தோனியா கிராம்சி என்ன சொன்னார்? எரிக் ஹாப்ஸ்வாம் என்ன சொன்னார்? என்பதெல்லாம் நமக்கு புதியவையல்ல. இவையனைத்தையும் எமது முன்னோர்களே சொல்லிச்சென்றுள்ளனர்.

‘துடியன்,பாணன் கடம்பன்,பறையன் என இந்நான்கல்லது குடியும் இலவே’ என்கின்றது புறநானுற்று அறம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பான் கணியன் பூங்குன்றனார் என்னும் சங்ககால தமிழ் புலவன். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பார் திருவள்ளுவர்.

இவைதான் அனைவரையும் உள்ளீர்க்கின்ற தேசிய தர்மம் ஆகும். தமிழர்தம் தேசியத்தின் போற்றத்தக்க முதிசங்கள் இவையே ஆகும். இத்தகைய அரவணைப்பிலும் அகன்று விரிந்த மனப்பான்மையிலும் உருவாகின்ற தமிழுணர்வுதான் தமிழ் தேசியத்தின் அடிப்படையாக இருக்க முடியும்.

தேசியவாதமென்பது இன வெறி, மதவெறி, சாதிய ஆதிக்கம், தனவந்தரதிகாரம், பிரதேச வெறி, ஆணாதிக்கம், பரம்பரையதிகாரம், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் சுரண்டல், ஏகாதிபத்தியம் போன்ற அனைத்துவித அதிகாரங்களுக்கும் எதிரான ஒருமித்த குரல்களின் சங்கமமாக உருப்பெறவேண்டியதாகும். அதனுடாக சுயநிர்ணயம் கொண்ட வன்முறையற்ற சமூகநீதியுடன் கூடிய சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்பும் இலட்சிய வேட்கை கொண்டதே தேசியவாதமாகும்.

ஆனால் நமது தமிழ் தேசியமோ யாழ்பாணத்து மேட்டுக்குடிகளின் மையத்தில் நின்றுகொண்டு இவன் பள்ளன், இவன் பறையன் அவன் வன்னிக்காட்டான், அடுத்தவன் மட்டக்களப்பு மடையன், அதற்கப்பால் சோனி, தொலைவில் இருப்பவன் தோட்டக்காட்டான் என்று வக்கணம் சொல்லி சொல்லியே தன்னை உருவாக்கியது. பன்மைத்துவ தன்னிலைகளையும் தனித்துவங்களையும் அங்கீகரித்து உள்ளீர்ப்பதற்கு பதிலாக அனைவரையும் நிராகரித்து தனிமையப்படுத்தி வெளித்தள்ளியது.

நாம் வாழுகின்ற மண்ணையும்,காற்றையும்,கடலையும், நீர்நிலைகளையும் பேணிப்பாதுகாத்தலே இந்த தேசியத்தின் அடிப்படையாகும். அதற்காகவே ஆளும் உரிமையை நாம் கோருகின்றோம் என்பதே அதன் தாற்பரியமாகும். அதேபோன்று அனைவரும் சமம் என்பதும், நாமெல்லாம் ஒரே இனமென்பதும் மனதளவிலும் செயலளவிலும் திரளாகின்ற உணர்வே தேசிய உணர்வாகும்.

செல்வநாயகம் 1949 ஆம் ஆண்டு தமிழரசு கட்சியை தொடங்கி கிழக்கு மாகாணத்துக்கு வந்து தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாகி அணிதிரளுங்கள் சமஷ்டியை பெற்றுத்தருகின்றேன் என்று அறைகூவல் விடுத்தார். அப்போது சமஸ்டி சாத்தியமில்லாதது,கிழக்கு மூவினங்களும் வாழும் இடம் இங்கே இனவாத அரசியல் வேண்டாம், இரத்த ஆறு ஓட வழிவகுக்க வேண்டாம் என்று செல்வநாயகத்தை எச்சரித்தார் மட்டக்களப்பின் நல்லையா மாஸ்டர் என்னும் பெருந்தகை. பதிலுக்கு கிழக்குமாகாணத்தின் சமூக, பொருளாதார, கல்வி, சுகாதார, மேம்பாட்டுக்காக அயராது பாடுபட்டு சாதனை புரிந்த அந்த மகானை அரச கைக்கூலி என்று பிரச்சாரம் செய்து தோற்கடித்தது தமிழரசு கட்சி.

மறுபுறம் செல்வநாயகத்தின் அறைகூவலின் பின்னால் ஒன்றுபடுவோம் என்று சொல்லி தமிழரசு கட்சியை கிழக்கு மாகாணத்தின் மூலை முடுக்குகளெல்லாம் கொண்டு சென்று வளர்த்து 1977ல் தமிழர் தலைவராக மட்டக்களப்பிலிருந்து மேலெழுந்து வந்த இராஜதுரைக்கு என்ன நடந்தது? அவரை வஞ்சித்து, ஒதுக்கி, துரோகியாக்கி வெளியேற்றியது தமிழரசுகட்சி. சொல்லப்பட்ட காரணம் என்னதெரியுமா? 1978ஆம் ஆண்டு சூறாவளியால் அழிந்து கிடந்த மட்டக்களப்பை பார்வையிட வந்த பிரதமர் ‘பிரேமதாசாவை வரவேற்கச்சென்றது குற்றம்’ என்றது அமிர்தலிங்கத்தின் குற்றப்பத்திரிகை. அத்தனைக்கு பின்னரும் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரலில் செல்வநாயகத்தின் 35 வது நினைவு கூட்டமொன்றுக்காக யாழ்ப்பாணம் சென்ற ராஜதுரையை ‘மட்டக்களப்பு சக்கிலியா’ ‘துரோகி’ என்று துரத்தினார் சிவாஜிலிங்கம் என்கின்ற தமிழ் தேசிய பித்தர்.

* யாழ் மேயரான செல்லன் கந்தயன் யாழ்- நூலகத்தை திறந்துவைத்தல் கூடாது என்கின்ற மேட்டுக்குடிகளுக்கு ஒத்தாசை வழங்கி திறப்புவிழாவை தடுத்து நிறுத்தினர் தமிழீழவிடுதலைப்புலிகள்.

*தமிழ் பேசும் இஸ்லாமியரை தமிழ் தேசியத்துக்கு வெளியே துரத்தியடித்தனர் தமிழீழ விடுதலைப்புலிகள்.

*2004 ல் தமிழீழத்தின் நிழல் நிர்வாக கட்டமைப்புக்கு 32 துறை செயலாளர்களை தமிழீழ விடுதலை புலிகள் நியமித்தபோது 31 செயலர்களை வடமாகாணத்துக்குள் சுருட்டிக்கொள்ளுதல் தகுமோ? என்று கேட்ட கருணாம்மானை துரோகி என்று அறிவித்து வெருகல் படுகொலைக்கு ஆணையிட்ட அன்றே அறுந்து போனது வடக்கு கிழக்கு தாயக உறவு.

பிரபாகரனது முப்பத்துவருட ஆயுதப்போராட்டம் தமிழ் பேசும் மக்களின் (சாதி,மத, பிரதேச,) பன்மைத்துவத்துவ குரல்களை அங்கீகரிக்க மறுத்து வீணாகி மண்ணோடு மண்ணாகிப்போனது..

இப்போது கிறிஸ்தவரையும் கழித்துவிட்டு இந்து கட்சிகளின் உருவாக்கத்துக்கு அத்திவாரம் இட்டுக்கொண்டிருக்கின்றது. யாழ்-மையவாத சிந்தனை முகாம். அதனை மூத்த தமிழீழவாதிகளில் ஒருவரான மறவன் புலவு சச்சுதானந்தம் கச்சிதமாகவே செய்து வருகின்றார்.

அண்மைக்காலமாக பெண்களின் குரலை உதாசீனம் செய்துவருகின்றது தமிழரசுக்கட்சி. கடந்த தேர்தலில் மட்டக்களப்பு மங்களேஸ்வரி சங்கருக்கு வேட்பாளர் வாய்ப்பு மறுக்கப்பட்டமைக்கு சுமந்திரன் சொன்ன காரணம். ‘அவர் துரோகம் செய்ய கூடியவர்’ என்று முன்னரே உணர்ந்தாராம் சுமந்திரன். இப்படி அவரே முடிவெடுப்பதென்றால் கட்சியின் செயலாளர் பதவியை துரைராசசிங்கத்துக்கு கறிவேப்பிலைக்கா கொடுத்து வைத்திருக்கின்றது தமிழரசு கட்சி? இதைத்தான் யாழ் மேலாதிக்கம் என்கின்றோம். ஒரு கணவனை இழந்த பெண் என்னும் வகையில் சசிகலா ரவிராஜை வைத்து வாக்குசேகரிக்க முயன்றது தமிழரசு கட்சி. அதன்பின்னர் அவருக்கு நடந்த அநியாயத்துக்கு விளக்கம் தேவையில்லை.

தமிழ் சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்துகின்ற இந்த யாழ்ப்பாண மேட்டிமை சக்திகளிடத்தில் உண்மையான தமிழ் தேசிய சிந்தனை இல்லை. இருப்பதெல்லாம் ஆதிக்க சிந்தனை மட்டுமேயாகும். அதில் சிங்களவர்களிடமிருந்து அதிகாரத்தை கைமாறி புதிய எஜமானர்களாக தங்களுக்கு முடி சூட்டி கொள்ளுகின்ற கபட நோக்கம் மட்டுமே மறைந்திருக்கின்றது. அதுவே வடமாகாண சபை முதலமைச்சர் விடயத்திலும் நடந்தேறியது.

நம்மை நாமே ஆளுதல் என்கின்ற அற்புதமான சிந்தனை ஆட்சியாளர்களை அடையாளமிட்டு மலினப்படுத்தப்பட்டுவிட்டது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு பதிலாக தமிழ் எம்பிக்களும் அமைச்சர்களும் முதலமைச்சரும் வந்துவிட்டால் தமிழ் தேசியம் தழைத்தோங்கும் என்று அப்பாவித்தனமாக நம்பவைக்கப்பட்டுள்ளனர் எமது மக்கள். வெறும் இனவாத வெறியை விதைத்து ஆளுவதற்கான உரிமைக்காக மட்டுமே போராட்டம் என்கின்ற எளிமைப்படுத்தப்பட்ட கருத்துருவமே சாமானிய மக்களின் மனநிலையில் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளது..

இதுவரைகாலமும் தமிழ் தேசியத்தை தலைமையேற்று வழிநடத்தியவர்களில் அநேகமானோர் யாழ்- மேட்டுக்குடி நலன்களில் மையம்கொண்டுள்ள ஆதிக்க சிந்தனைக்கு மாற்றானவர்களாய் இருக்கவில்லை. அப்படியிருக்க முனைந்த ஒரு சிலரும் மைய நீரோட்ட அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர். ஒதுக்கப்பட்டனர். அல்லது துரோகிகள் என்று கொன்றொழிக்கப்பட்டனர். இத்தகைய கேடுகெட்ட யாழ்-மேட்டுக்குடி தலைமைகளுடைய ஆதிக்க சிந்தனையின் அம்மணத்தை மறைக்க தேசியம் என்றும் தாயகமென்றும் விடுதலையுணர்வு என்றும் வேசம்கட்டுவதற்கு பெயர்தான் யாழ்- மேலாதிக்கம் என்பதாகும்.

அதனால்தான் சொல்கின்றோம். இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழீழம் என்பது யாழ்-மேலாதிக்க தமிழீழம்தான் . இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழ் தேசியம் என்பது யாழ் மேலாதிக்க தமிழ் தேசியம்தான். இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழ் நோக்கு என்பதும் யாழ் மேலாதிக்க தமிழ் நோக்குத்தான். என்றொருநாள் தமிழ் பேசும் மக்களின் தலைமையானது யாழ்-மேட்டுக்குடிகளிடமிருந்து கைமாறுகின்றதோ அன்றுதான் தமிழர்களின் நன்னாள் தொடங்கும். (Source: padakutv.lk)