ஜேவிபி

ஜேவிபி

“எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளைபூர்த்தி செய்வோம்.” – வடபகுதி மக்களிற்கு ஜேவிபியின் தலைவர் அழைப்பு !

எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளைபூர்த்தி செய்வோம் என  வடபகுதி மக்களிற்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க ஊழல்மிகுந்த ஆளும்குழுவை தோற்கடிப்பதற்கான தேசிய விடுதலை இயக்கத்திலும் நீங்கள் இணைந்துகொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்து நாளிதழிற்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

எங்களின் நெருங்கிய அயல்நாடான இந்தியா மிகவும் வலுவான அரசியல் பொருளாதார மையமாக மாறியுள்ளமை எங்களிற்கு தெரியும். ஆகவே பொருளாதார அரசியல் முடிவுகளை எடுக்கும்போது அது இந்தியாவை எப்படி பாதிக்கும் என்பது குறித்து நாங்கள்கவனம் செலுத்துவோம்

இரண்டு சக்தி வாய்ந்த நாடுகள் மத்தியிலேயே பூகோளஅரசியலில் போட்டி காணப்படுகின்றது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இல்லை. இந்த நாட்டில் சில பிரச்சினைகள் உள்ளன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் குறிப்பாக தமிழர்கள் முஸ்லீம்கள் தொடர்பில் – அவர்களது மொழி கலாச்சார விடயங்கள் மற்றும் ஆட்சி முறையில் பங்கெடுத்தல் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன.

இந்த விவகாரங்களிற்கு நாங்கள் தீர்வை காணவேண்டும். வடக்கு மக்களிற்கு தேசிய மக்கள் சக்தி  விடுக்கின்ற வேண்டுகோள் இதுதான் எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வோம்.

ஊழல்மிகுந்த ஆளும்குழுவை தோற்கடிப்பதற்கான தேசிய விடுதலை இயக்கத்திலும் நீங்கள் இணைந்து கொள்ள வேண்டும்.

நாட்டிற்குள் டொலரை வர வழிவிடுங்கள்! உல்லாசப் பயணிகளுக்கு வழிவிடுங்கள்! – த.ஜெயபாலன்

நாட்டின் மொத்த உற்பத்தியில் 12வீதத்தை அதாவது 10 பில்லியன் டொலர்களை நாட்டிற்குள் கொண்டுவரும் உலாசப் பயணிகளுக்கு வழிவிடுங்கள். நாட்டின் பொருளாதாரம் நெருக்கடி நிலையைச் சந்திக்கிறது என்று போராடுபவர்கள் நாட்டின் பொருளாதார விருத்தியை முடக்குவது தீர்வு அல்ல.

இன்று எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பது அவற்றை கொள்வனவு செய்வதற்கான அந்நியச் செலவாணி இல்லாமையே. அதனால் நாட்டிற்குள் டொலரைக் கொண்டுவரக்கூடிய நடவடிக்கைகளை முடக்கிவிட வேண்டும். இக்கருத்துக்கு முற்றிலும் முரணாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டிற்குள் வரும் உல்லாசப் பயணிகள் காலிமுகத்திடலில் மட்டையைப் பிடித்து போராடலாம் என்ற வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை நாங்கள் பயப்படும் அளவுக்கு ஆபத்தானது அல்ல. இச்சூழலை சாதகமாக்கவும் வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த வெளிநாட்டவர் தற்போது உலகம் சுற்ற விரும்புகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள நாணய ஒடுக்கும் அல்லது நாணயத்தின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இலங்கையின் உல்லாசப் பயணத்துறைக்கு ஒரு வரப்பிரசாதம். உல்லாசப் பயணிகளை எங்கள் நாட்டுக்கு வந்து, குறைந்த செலவில் எம் நாட்டின் அழகை ரசியுங்கள். எங்கள் கலை கலாச்சாரங்களை அறியுங்கள் என்று உல்லாசப் பயணிகளுக்கு செங்கம்பள வரவேற்பளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு போராடுகிறோம், எரிக்கிறோம், கொழுத்துகிறோம் என்பதெல்லம் கஞ்சி ஊத்தாது.

இரண்டு ஆண்டுகால கோவிட் முடக்கத்தில் உலக பொருளாதாரமே முடங்கிக் கிடந்தது. அந்த முடக்கத்தில் இருந்து மெல்ல எழ ரஷ்யா, உக்ரைன் மீது படைநகர்த்தி சர்வதேச அரசியல் – பொருளாதாரச் சூழலை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. இந்த நெருக்கடி நிலைக்குள் இருந்து மீள்வதற்கு எவ்வித திட்டமிடலும் இல்லாமல் ஜேவிபி இப்போராட்டத்தை மிகத் திட்டமிட்ட முறையில் நடாத்தி வருகின்றது. இந்தப் போராட்டம் இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக தன்னியல்பானதாக நடைபெற்றதாகச் சொல்லப்பட்டாலும் ஜேவிபிக்கு ஆதரவாகவே போராட்டம் நகர்கின்றது. ஜேவிபின் தவைரைத் தவிர ஏனைய கட்சித் தலைவர்கள் போராட்ட களத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

ஒரே நாளில் 30 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை திட்டமிட்டு எரிக்கின்ற அளவுக்கு இலங்கையில் தன்னியல்பு தலைமைகள் கிடையாது.

முப்பது ஆண்டுகள் உலகின் மிக நவீன ஆயதங்களை வைத்து போராடிய விடுதலைப் புலிகளால் மே 19ற்குப் பின் ஒரு துப்பாக்கிச் சூட்டைக் கூட நடத்த முடியவில்லை. ஆகையால் நடந்த எரிப்புச் சம்பவங்களுக்குப் பின்னணியில் ஜேவிபி இல் இருந்து பிரிந்த அதிதீவிரவாதப் பிரிவாகச் செயற்பட்டுவரும் முன்னிலை சோசலிசக்கட்சி குமார் குணரட்ணம் மீதே மையம்கொள்கின்றது.

ஆனால் இடதுசாரித்துவம் பேசும் ஜேவிபியோ முன்னிலைவாத சோசலிசக் கட்சியோ இந்தப் பொருளாதார நெருக்கடியில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் பங்களிப்புப் பற்றி வாயே திறக்கவில்லை. சர்வசே நாணய நிதியம் உலக வங்கி பற்றி தொடர்ந்தும் மௌனமாகவே உள்ளனர். இவர்களின் தோழமைக் கட்சியாக அணுகக் கூடிய பிரித்தானியாவில் செயற்படும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாகவும் முன்னிலை சோசலிசக் கட்சி மௌனம் காக்கின்றது.

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பு காலிமுகத்திடல் போராட்டத்திற்கு கொள்கையளவான ஆதரவை வழங்கிய போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அவை அனைத்துமே சர்வதேச நாணய நிதியத்த்தினதும் உலக வங்கியினதும் கொள்கைகளுக்கும் அவர்களுடைய நிபந்தனைகளுக்கும் முற்றிலும் எதிரானதாக உள்ளது. அனைத்து கடன்களையும் இரத்து செய்யுமாறு கோருவதோடு பெரு முதலாளிகளின் சொத்துக்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யக் கோருகின்றது. விவசாயிகளுக்காக மானியங்களை வழங்குவதுடன் மலையக தொழிலாளர்களின் நிலவுரிமையை உறுதி செய்யவும் கோருகின்றது. ஆனால் காலிமுகத்திடல் போராட்டம் இந்த நிபந்தனைகளைப் பற்றி எவ்வித கரிசனையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு பொருளாதார நெருக்கடிக்காகப் போராடும் தன்னை தீவிர இடதுசாரியாக தக்கவைத்துக்கொள்ளும் ஜேவிபி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி எந்தவொரு இடதுசாரி பொருளாதாரக் கோசங்களையும் வைக்கவில்லை. மாறாக அரசியல் கோஷத்தை மட்டுமே வைக்கின்றனர்.

இதன் பின்னணி என்ன? ஜேவிபி, முன்னிலை சோசலிசக் கட்சி தற்போது விலைபோகத் தயாராகி விட்டதா? குமார் குணரட்ணம் முன்னிலை சோசலிசக் கட்சியயை உருவாக்கியதைத் தொடர்ந்து பின் புலம்பெயர்நாடுகளில் இருந்தும் பலர் முன்னிலை சோசலிசக் கட்சியின் – சமவுடமை இயக்கத்தில் தங்களை வெளிப்படையாக இனம்காட்டிக்கொண்டனர். குறிப்பாக பிரான்ஸில் இடதுசாரிப் புயல் இரயாகரன், பிரித்தானியாவில் புதிய திசைகள் மற்றும் பல இடதுசாரி சிந்தனையுடையவர்களும் தங்களை முன்னிலை சோசலிசக்கட்சியுடன் அடையாளம் காட்டினர்.

ஆனால் தமிழ் சொலிடாரிட்டி தவிர்ந்த ஏனை இடதுசாரிக்குழுக்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராகவோ உலக வங்கிக்கு எதிராகவோ கருத்துக்களை மிக அடக்கியே வாசிக்கின்றனர். பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்பும் வெற்று அரசியல் கோஷங்களையே வைத்து போராட்டம் நடத்தினர்.

அரசும் புதிய பிரதமர் உட்பட போராட்டகாரர்களும் நாட்டின் நிலைமையை மோசமடையச் செய்துகொண்டுள்ளனர். அரசு ஆணித்தரமான முடிவுகளை எடுக்க வேண்டும். இன்று ஏற்பட்டுள்ள நிலையை இலங்கையின் எதிர்காலத்திற்கு சாதகமாக மாற்ற முடியும். அதற்கு அரசியல் வாதிகளும், பல்கலைக்கழகங்களும் ஒருங்கிணைந்து நீண்டகாலத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

நாட்டை உல்லாசப் பயணிகளுக்கு திறந்துவிடுவதுடன் உல்லாசப் பயணத்துறையை காத்திரமான முறையில் வளர்க்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
அரசு நாடுகளுக்கு இடையேயான கடன்கள் உட்பட அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்!
நாணயப் பெறுமதி குறைந்துள்ளதை சாதகமாக்கி ஏற்றுமதி நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்!!
சிறிலங்கா பெஸ்ற் மற்றும் மேடின் சிறிலங்கா என்பன நாட்டின் தாரகமந்திரமாக வேண்டும்!!!

“இலங்கையர்கள் ராஜபக்ஷக்களின் அடிமைகள் அல்ல.”- ஜே.வி.பி சாடல் !

“இந்த நாட்டின் குடிமக்கள் ராஜபக்சாக்களின் அடிமைகள் அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டு மக்கள் ராஜபக்சக்களை வணங்கும் தங்களின் குடிமக்கள் என்று நினைத்திருக்கிறார்கள்.”  என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று (01) தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே  திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,.

இந்த அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தால், தாங்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை எதிர்த்து நிற்க மக்களுக்கு நியாயமான உரிமை உண்டு. அந்த மக்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்கவில்லை என்றால், அதற்கு எதிராக நிற்க மக்களுக்கு நியாயமான உரிமை உண்டு. அந்த உரிமையை நாங்கள் பாதுகாக்கிறோம். மேலும், கட்சி என்ற ரீதியில் எமது தரப்பிலிருந்து முடிந்த பங்களிப்பை வழங்குவோம்.

ரத்னகிரியில் மிரிஹானவில் உள்ள அரச தலைவரின் இல்லத்திற்கு அருகாமையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. அரச தலைவரை வீட்டுக்கு செல்லுமாறு கோரி போராட்டம் நடத்துவது தீவிரவாத கும்பலின் செயல் என அரச தலைவரின் ஊடகப் பிரிவு அறிக்கைகளை வெளியிட்டிருந்தது. இந்நாட்டு மக்கள் படும் இன்னல்களையும் வேதனைகளையும் அரச தலைவரோ அல்லது அவரது அரசாங்கமோ கண்டுகொள்ளவில்லை என்பதையே இந்த அறிவிப்பு காட்டுகின்றது.

ஏராளமான ஆதரவற்ற தாய்மார்கள், வீடு திரும்பும் பயணிகள், சாதாரண குடிமக்கள், வயதான தாய்மார்கள், தந்தைகள் மற்றும் பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் அதிகாலை 2.00 – 3.00 மணி வரை தங்கியிருந்து அரச தலைவரை வீட்டுக்கு செல்லுமாறு வற்புறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாதாரண குடிமக்கள் இப்படி நிற்பது வேடிக்கைக்காகவா? இல்லை. மக்கள் படும் துன்பங்களை இந்த அரசு கண்டுகொள்ளாததே இதற்கு காரணம்.

12 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகளின் ஆடைகளை மதியம் 12.00 மணிக்கு அயர்ன் செய்ய வேண்டும். மீண்டும் அதிகாலை 3.00 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்படும். வெப்பமான காலநிலையில் குழந்தைகள் நன்றாக தூங்குவதில்லை. காலை உணவு தயாரிக்க மின்சாரம் இல்லை. எரிவாயு இல்லை. குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இந்த அடக்குமுறை அரசுக்கு புரியவில்லையா?

மக்கள் இவ்வாறு துன்பப்படும் போது எம்.பி.க்கள், பிரதமர், அரச தலைவர் ஆகியோர் தங்கியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதில்லை. இந்த நிலையை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள முடியாது. ஒரு லீற்றர் எரிபொருளின் விலை 100/- – 150/- வரை அதிகரித்துள்ளது. காஸ் சிலிண்டரின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. பால் மாவின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அரிசி ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. சராசரி குடிமகனின் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் இருமடங்காக உயர்ந்துள்ளதால் மக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு கவனம் செலுத்தாததால் தான், மக்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். பிரச்சினைகளில் அரசாங்கத்தின் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற முடிவுகள் மக்களின் எதிர்ப்பைப் பாதித்துள்ளன. இந்த நாட்டின் குடிமக்கள் ராஜபக்சாக்களின் அடிமைகள் அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டு மக்கள் ராஜபக்சக்களை வணங்கும் தங்களின் குடிமக்கள் என்று நினைத்திருக்கிறார்கள். அதனால்தான் இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையிலும் தனி விமானங்களை சார்ஜ் ஏற்றி திருப்பதியை வழிபட சென்றோம். இந்த நெருக்கடியான நேரத்தில் நாமல் ராஜபக்ச மாலைதீவுக்கு செல்கிறார். இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில்தான் நாம்  பறக்கிறோம்.

நெருக்கடியான நேரத்தில் பிரதமர் இத்தாலி செல்கிறார். இத்தகைய இக்கட்டான நேரத்தில் குப்பைகளுக்காக(சீன கப்பல்) 6.9 மில்லியன் டொலர்களுக்கு மேல் இழப்பீடாக ஷசேந்திர ராஜபக்ச செலுத்தியுள்ளார்.

அடக்குமுறை அரசாங்கத்தை அகற்றுவதற்கான பிரச்சாரங்களின் போது அரசாங்கமே நடத்தும் வன்முறைகளைத் தடுப்பதும் குடிமக்களின் பொறுப்பாகும். இத்தகைய போராட்டங்கள் முடிந்தவரை அமைதியாகவும், முடிந்தவரை ஒழுங்கமைக்கப்பட்டதாகவும், முடிந்தவரை வழிநடத்தப்பட்டதாகவும் நடத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

புளொட் – ஜேவிபி அரசியல் – அசோக்கின் கைது!!!

பாகம் 7: புளொட் – ஜேவிபி அரசியல் – அசோக்கின் கைது!!!
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 07 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 7

தேசம்: புளொட்டின் உருவாக்கம் பற்றி பேசியிருந்தோம். யார் உங்களை புளொட்டுக்குள்ள கூடுதலாக influence பண்ணின என்று நினைக்கிறீங்க…

அசோக்: கூடுதலாக அதில கேசவன், ரகுமான் ஜானுடைய கருத்துக்கள். இவங்களிடம் இடதுசாரிக் கருத்துக்கள், மார்க்சிய ஐடியோலொஜி இருந்தது. ஈஸ்வரன் அடுத்தது வாசுதேவா. வாசுதேவாவின் பிற்காலம் என்பது விமர்சனத்துக்கு உரியது. அந்த காலத்துல வாசுதேவா முற்போக்கான ஆளாகத் தான் இருந்தவர். காந்தியத்தில் மிக செயற்திறனுடைய ஆளாகத்தான் இருந்தவர். மட்டக்களப்பு தோழர்கள் பலர் புளொட்டுக்குள்ளும், காந்தியத்துக்குள்ளும் உள்வாங்கப்படுவதற்கு வாசுதேவா தான் முக்கிய காரணம். மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக நான் வருவதற்கு வாசுதேவோவும் ஒரு காரணம்.

தேசம்: மாவட்ட அமைப்பாளரின் செயற்பாடுகள் என்ன? என்னென்ன பணிகள் உங்களுக்கு தரப்பட்டது?

அசோக்: கூட்டங்கள் பிரச்சாரங்கள்தான். மக்களை அரசியல்மயப்படுத்தல். அரசியல் வகுப்புகள் நடத்துதல். வெகுன போராட்டங்கள் செய்வது, பத்திரிகைகள், துண்டுப்பிரசுர வினியோகம் இப்படிஇருக்கும். கூடுதலாக புதிய பாதை பேப்பர் விற்பது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் ராணுவ பயிற்சி அதுகள் இருக்குதா?

அசோக்: அதுகள் ஒன்றுமில்லை. உண்மையிலேயே புளொட்டில் முக்கியமாக இருந்தது அரசியல் வகுப்புக்கள்தான். தோழர்களை புளொட்டில் இணைப்பதும் தான் எங்களுடைய வேலையாக இருந்தது. அந்த நேரத்தில் என்னோடு மிகத் தீவிரமாக வேலை செய்த ஆட்கள், வரதன் என்று ஒரு தோழர், அடுத்தது சக்தி வடிவேல் என்று ஒரு தோழர், அகஸ்டின் என்ற ஒரு தோழர் அவர் பிறகு அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக வந்தவர். பேரின்பம் நிறைய தோழர்கள். செல்வரெத்தினம், பணிக்ஸ், பாக்கி மாமா, கராட்டி அரசன், மங்களம் குணரா ஜா, குருக்கள்மடம், பழுகாமம் கிரமாங்களிலிருந்து நிறைய தோழர்கள். வாழைச்சேனையில் யோகராஜா, பெயர்கள் நிறைய மறந்து விட்டது. அவங்க பெயர்களைலெல்லாம் பதிவு செய்யனும். மாணிக்கம் பிள்ளை என்ற ஒரு தோழர் இருந்தவர். அவர்கள் எல்லாம் மிகத் தீவிரமாக வேலை செய்தவர்கள். வரதன் என்ற தோழர் தன்னை அர்ப்பணித்து வேலை செய்தவர். கடைசி வரைக்கும் நாட்டை விட்டு வெளியேவில்லை.இப்பவும் ஊரில மக்களுக்கு ஏதாவது உதவி செய்து கொண்டுதான் இருக்கிறார்.

தேசம்: ஜே.வி.பி காந்தியம் புளொட் என்று உள்வாங்கப்படுகிறீர்கள். இதுக்கெல்லாம் உங்களை தள்ளுகின்ற முரண்பாடு எதுவாக இருந்தது? இலங்கை அரசாங்கத்தின் எந்த வகையான செயற்பாடுகள் உங்களை எப்படித் தள்ளுது?

அசோக்: எனக்கு ஒரு அனுபவம் இருக்கு என்ன என்று கேட்டால், சின்ன வயதிலிருந்தே பல பிரதேசங்களுக்கு போய் வந்திருக்கிறேன். மலையகத்தில் நான் இருந்தனான். மலையகத்தில் எனக்கு பேனா நண்பர்கள் நிறைய பேர் இருந்தவர்கள். கற்றன், தலவாக்கெல, லிந்துல, டயகம, பொகவந்தலாவ, கொட்டகலை போன்ற இடங்களில் நண்பர்கள் இருந்தாங்க. நெடுஞ்செழியன் என்ற நண்பன் சில வருடங்களுக்கு முன் இறங்துட்டாங்க. பிற் காலத்தில வீரகேசரியில வேலை செய்தவர். அரசியல் சமூக அக்கறை கொண்ட நண்பன். அவரோடு மலையகத்தில் பல இடங்கள் சுற்றியுள்ளன்.

இவர் மூலம்தான் சந்திரசேகரம், விஜயகுமார் மற்ற தீர்த்தக்கரை இலக்கிய அரசியல் நண்பர்கள் பலரின்ற அறிமுகம் கிடைச்சது.

அப்ப நான் அடிக்கடி போவேன். நாங்கள் ஒரு மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் இருந்தாலும் கூட, எங்களுடைய சிந்தனை முறை வித்தியாசம் தானே. எங்களுடைய கல்வி, வாசிப்பு, அரசியல்…

அப்ப பார்க்கேக்கை, தொழிலாளர் மீதான ஒடுக்குமுறை என்பது சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும், மலையக மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் ஒன்றாகத்தான் இருந்தது. இலங்கை அரசு தமிழ் மக்களை மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் அதேநேரத்தில், தொழிலாளர் ஒடுக்குமுறை என்பது எல்லா பக்கமும் ஒன்றாகத்தான் இருந்தது.

அதனாலதான் நாங்க ஜே.வி.பியிடம் போக வேண்டி வந்தது. பிறகு இனவாத ஒடுக்கு முறை வரும்போது எங்களுக்கு ஒரு சிந்தனை வருது. இதற்கு அங்கால ஒடுக்குமுறையில் ஒரு பரிணாமம் இருக்குத்தான் என்று. இன ஒடுக்குமுறை என்பது திடீரென வந்த ஒன்று இல்லைதானே. அதற்கு ஒரு பரிணாம வளர்ச்சி இருக்குதானே. தமிழ் தேசியத்தின் வளர்ச்சி என்பது திடீரென ஏற்பட்ட ஒன்று இல்லைதானே. அடிப்படைக் காரணங்கள் இருக்கு. அதற்கும் பரிணாம வளர்ச்சி ஒன்று இருக்கு. இனவாத ஒடுக்கு முறையால் தான் அது உற்பத்தி ஆகுது. வளருது. அப்ப நாங்க பார்க்கும்போது அது நியாயமாக எங்களுக்குப்படுது. தமிழரசு கட்சி மீதான விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் மீதான ஒடுக்குமுறை என்பது யதார்த்தம் தானே

தேசம்: அதை எப்படி feel பண்ணுகிறீர்கள்… எல்லைப்புறக் கிராமங்களை கைப்பற்றுவதால் இனக்கலவரங்கள் ஒரு விடயமாக இருந்திருக்கும், போலீஸ் ராணுவ கெடுபிடிகள் இருந்திருக்கும், அதில ஒன்றா தரப்படுத்தல் தொடர்பாகவும் பேசப்பட்டது. இளைஞர்கள் ஆயுத வன்முறையில் ஈடுபட்டதற்கு தரப்படுத்தல் முக்கிய காரணமாக இருந்தது. அது எவ்வாறான தாக்கத்தை கிழக்கு மாகாணத்தில் அல்லது உங்களில் ஏற்படுத்தியது?

அசோக்: தரப்படுத்தலுக்கு அரசியல்ரீதியாக வேற காரணங்கள் இருந்தது. தரப்படுத்தல் கிழக்கு மாகாண , மற்ற கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பாக இருந்தது என்பது உண்மைதான். ஆனா, அது முழுத்தமிழ்ச் சமுகத்தின் கல்வி வளர்ச்சியில் தேக்க நிலையை உருவாக்கியது என்பதை காணத்தவறி விடுறம். பல்கலைக்கழகத்திற்கு எடுபடுவது மாத்திரம் முக்கியம் அல்ல. கல்வியின் திறன், ஆற்றல், கொள்ளளவு, ஆளுமை, வளர்ச்சி இவை எல்லாம் தமிழ் மாணவர்களுக்கு கிடைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்ப் பல்லைக்கழகங்கள் செய்யத்தவறி விட்டன. அதற்கான போதிய வளங்கள் இல்லை. இதற்கு இலங்கை அரசு முக்கிய காரணம். இது பற்றி நாம நேர்மையாக ஆராய்ய வேண்டும். சிங்கள பிரதேசங்களில் கிராமப்புற பகுதிகளில் இருந்து பல்லைக்கழகம் சென்று வெளியேறும் மாணவர்களின் அறிவார்ந்த வளர்ச்சி திறன், ஆற்றல் தமிழ் மாணவர்களிடம் இல்லாமல் போனதை நாம் எப்போதாவது கவனிச்சோமா?

சிங்கள கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சியோடு, திறமையோடு ஒப்பிடும்போது, எமது கிராமப்புற மாணவர்கள் மிக பின்தங்கியவர்களாக இருக்கிறாங்க. பேரினவாத அரசுகள் பின்தங்கிய தமிழ் கிராமப்புற பாடசாலைகளுக்கான கல்வி வளர்ச்சிக்கான கட்டமைப்புக்களில் திட்டமிட்ட புறக்கணிப்புக்கள செய்து வருகிறதை நாம் கவனிக்க தவறிவிடுறம். ஒவ்வாரு வருடமும் இந்திய உயர் கல்வி பல்கலைக் கழகங்ளுக்கு பிஎச்டிக்கு நிறைய மாணவர்கள் போகிறாங்க. டெல்லி ஜேஎன்யு க்கு போன பலரை எனக்கு தெரியும். எங்கட ஆட்கள் என்றால் யாரும் பெரிதாய் இல்லை. என்ன காரணம் இதையெல்லாம் ஆராய்யவேணும்.

இனக்கலவரங்களின் தோற்றத்தின் பிண்னணியை ஆராய்ந்தால், அந்தந்த காலங்களில் ஆட்சி செய்த அரசின் இனவாதமும், திட்டமிட்ட செயலும் தெரியவரும். எந்தவொரு மக்கள் கூட்டமும் இனவாதிகளாக பிறப்பதில்லைத்தானே. அதிகார வர்க்கம் இனவாத சிந்தனைகளை விதைக்கிறது. தமிழ் அதிகார வர்க்கமும், சிங்கள அதிகார வர்க்கமும் விரும்பி இருந்தா, எங்கட தேசிய இன சிக்கல்களை எப்போ தீர்த்து இருக்க முடியும்தானே. இவங்களின்ர இருப்புக்கு முரண்பாடுகள் அவசியம் என்பது அவங்களுக்கு தெரியும்.
எனக்கு அரசுகளின் இனவாத செயற்பாடுகளில் முக்கிய காரணமாகபட்டது.

திட்டமிட்ட குடியேற்றத்திட்டங்கள்தான். பௌத்த மயமாக்கல். தமிழ்மக்களின்ர நிலத்தை பறிப்பது மாத்திரமல் தமிழ் மக்களின்ர உரிமைகளையும் சுதந்திரங்களையும் அந்த நிலத்திலிருந்து பறிப்பதுதான் இதன்ற நோக்கம். கந்தளாய்க் குடியேற்றத் திட்டம் கல்லோயாக் குடியேற்றத் திட்டம்
இவையெல்லாம் இந்த நோக்கத்தோடுதான் செய்யப்பட்டன.

இதைப்பற்றி புள்ளி விபரங்களோடு நிறையக் கதைக்கலாம். வி.நித்தியானந்தம் அவங்க இதைப்பற்றி நிறைய எழுதி இருக்காங்க. யாழ்ப்பாண யூனிவசிற்றில இருந்தவர். இப்ப நி யூசிலாந்து யுனிவசிற்றில இருக்கிறார். நாங்கள் எடுத்த உடனேயே தரப்படுத்தலை தானே பார்க்கிறோம்…

தேசம்: தரப்படுத்தல் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை…

அசோக்: தரப்படுத்தல் என்பது உப காரணிதான். ஒரு தமிழ் தேசிய போக்கினுடைய வளர்ச்சிக்கும் வீக்கத்துக்கும் போராட்டத்தின் தொடக்கத்திற்கும் உந்து சக்தியாக இருந்தது தரப்படுத்தல்தான். அது ஒரு உப காரணி. அதற்கு முதல் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் சமஉரிமை இல்லாதது, சிங்கள குடியேற்றம், பௌத்த மயமாக்கல். தனிச்சிங்களச் சட்டம், புறக்கணிப்புக்கள் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது.

தேசம்: இதெல்லாம் நீங்கள் உணரக்கூடியதாக இருந்தது…

அசோக்: உணரக்கூடியதாக இருந்தது. அடுத்தது இந்த ஒடுக்குமுறை என்பது படுபயங்கரமாக இருந்தது. இரண்டு ஒடுக்குமுறைகள் இருந்தது. ஒன்று இன ரீதியான ஒடுக்குமுறை. அடுத்தது வர்க்க ரீதியான ஒடுக்குமுறை. தேசிய இனமாக ஒடுக்கப்படுகின்ற அதேநேரம் வர்க்க ரீதியாகவும் ஒடுக்குமுறை இருந்தது. அப்போதான் புளொட்டினுடைய தேசிய விடுதலைக்கு ஊடாக வர்க்கப் போராட்டம். வர்க்கப் போராட்டம் என்பது சகல மக்களுக்குமான விடுதலை. தேசிய விடுதலைப் போராட்டத்துக்காக ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டு சிங்கள மக்களுடன் இணைந்து ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்தல். ஒரு தமிழீழப் போராட்டம் என்பது தந்திரோபாயம். அதை வைத்துக்கொண்டு மூலோபாயத்தை நோக்கி போதல் என்பதுதான் புளொட்டினுடைய கோட்பாடாக இருந்தது.

அரசியல் கோட்பாடு எமக்கு உடன்பாடாக இருந்தது. இதப்பற்றி முன்ன கதைச்சி இருக்கம்.
அது சாத்தியமா சாத்தியம் இல்லையா என்பதை இப்ப நாங்கள் யோசிக்க வேண்டி இருக்கு. அந்த நேரம் சாத்தியமாக தான் தெரிந்தது. ஏனென்றால் ஜே.வி.பி எங்களுக்கு ஒரு உந்துதல் சக்தியாக இருந்தது தானே. அது தோல்வியடைந்தாலும் கூட, ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு ஊடாக வர்க்கப் போராட்டத்தை கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையை ஜே.வி.பி எங்களுக்குத் தந்தது.

தேசம்: இந்தக் காலகட்டத்தில்தான் நான் நினைக்கிறேன் 81 காலகட்டத்தில்தான் மாவட்ட சபை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது தமிழீழக் கோரிக்கையை 77 ஆம் ஆண்டு முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணி அதற்குப் பிறகு அந்த கோரிக்கையில் இருந்து பின் வாங்குற ஒரு நிலைப்பாட்டை எடுத்து மாவட்ட சபையை ஏற்றுக்கொள்கின்ற நிலைக்கு வாறினம். மாவட்ட சபையை ஏற்றுக்கொள்கின்ற நிலையில் தான் யாழ்ப்பாணத்தில மாவட்ட சபைத் தேர்தலை ஒட்டி கலவரம் ஒன்று நடக்கிறது. அதை எப்படி நீங்கள் உணர்ந்தீர்கள்? கிழக்கு மாகாணத்தில் அது ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததா?

அசோக்: மாவட்ட சபை என்பது எந்தவிதமான பூரணமான தீர்வையும் தமிழ் மக்களுக்கு தரப்போவது இல்லை என்பதில் மிகக் கவனமாக இருந்தனாங்கள். மட்டக்களப்பிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற ஆட்கள் மாவட்ட சபையை ஏற்றுக் கொண்டவர்கள் தானே. அபிவிருத்தி என்பது வேறு, அரசியல் விடுதலை உரிமை என்பது வேறு. மாவட்ட சபை என்பது எங்களுக்கு அபிவிருத்தி ரீதியான பிரயோசனங்களைத் தரலாமே, ஒழிய அரசியலுக்கான தீர்வாக மாவட்டசபை இருக்க இயலாது. அதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். மாவட்ட சபை என்பது தமிழ் மக்களுக்குரிய பிரச்சினையை தணிப்பதற்கான ஒரு உபாயமாக தான் அரசு கையாண்டது. ஒரு சமூகத்தின் அரசியல் விடுதலை அதன் சம உரிமை சுதந்திரம் இவைகளுக்கூடாகத்தான் புரண அபிவிருத்தி கிடைக்குமே தவிர இந்த அபிவருத்தியெல்லாம் ஒருவகை ஏமாற்று வேலதான்.

தேசம்: இந்த மாவட்ட சபையை கூட தர விரும்பாத ஒரு நிலையில்தான் அரசாங்கம் இருந்தது.

அசோக்: இலங்கை அரசியல் பாரளுமன்ற ஆட்சி அதிகாரம் இனவாதத்தினலாதான் கட்டமைக்கப்பட்டதுதானே. இதற்கு இனமுரண்பாட்டை கூர்மையாக்கல் அல்லது தக்க வைத்துக்கொள்ளல் அவசியம். அப்பதான் ஆட்சியை பிடிக்க முடியும். அதே நேரம் சர்வதேசத்திற்கு, இந்தியாவுக்கு இனமுரண்பாட்டை தணிப்பது போல பாவனையும் காட்டவேண்டும். மாவட்ட சபைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இருந்த தாக்கம் கிழக்கு மாகாணத்தில் இருக்கவில்லை. ஏனென்றால் ஆயுதப் போராட்டத்துக்குரிய தாக்கங்கள், சின்ன சின்ன வடிவங்கள், அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் தான் இருந்தது. அங்க உருவாகவில்லை.

தேசம்: அந்தக் குழப்பம் யாழ்ப்பாண நூலக எரிப்பு இதுகள் அவ்வளவு தூரம்….

அசோக்: யாழ்ப்பாண நூலக எரிப்பு பெரிய தாக்கத்தை கொடுத்தது. அது ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் நாங்கள் வாசகர் வட்டம், படிப்பு என்று இருந்தபடியால், நூலக எரிப்பு என்பது பெரிய தாக்கத்தை கொடுத்தது.

தேசம்: அதற்கு எதிரான ஊர்வலங்கள் ஏதாவது நடந்து இருக்கா.

அசோக்: அது பெருசா நடக்கல. கிழக்கில் பெருசா நடந்த மாதிரி தெரியல. நாங்க துண்டுப்பிரசுரம் அடிக்க நினைச்சம். முடியல்ல.

தேசம்: புளொட்டில் நீங்கள் இணைந்த பிறகு தான் துண்டுப் பிரசுரங்கள் அதுகளை விநியோகிக்கிறது அப்படியாக செயற்பட்டீர்கள். இதனால் என்னென்ன பிரச்சனைகளை எதிர்நோக்கினீர்கள் அந்த காலத்தில்?

அசோக்: பிரசுரம் தொடர்பாக பிறகு நான் கைது செய்யப்பட்டன். ஆரம்பத்தில் முதலாவது கைது, கல்முனையில் ஒரு சிங்கள முதலாளியினுடைய லாரி ஒன்று எரிக்கப்பட்டது. தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் புளொட் தோழர்கள் கைது செய்யப்பட்டவர்கள்.

அந்த நேரத்தில் நான் மட்டக்களப்பு மாவட்ட புளொட் அமைப்பாளராக இருந்தபடியால் கைது செய்யப்பட்டன். ஆனால் உண்மையில் அவங்களுக்கு அதோட சம்பந்தமில்லை. அரஸ்ட் பண்ணி கொஞ்ச காலம் வைத்திருந்த பிறகு பிணையில் விட்டவங்க. அந்த வழக்கில் அஸ்ரப் தான் பேசினவர். அதற்குப்பிறகு இன்னொரு சந்தர்ப்பத்தில் நான் கைது செய்யப்பட்டேன். சைன் வைக்க வேண்டும் எனக் கூறி விடுவிக்கப்பட்டன். நான் போலீசுக்கு போகாமல் விட்டுட்டேன். போகாமல் விட்டவுடனே நான் தேடப்பட்ட ஆள் ஆகிட்டேன். பிறகு என்னை அரஸ்ட் பண்ணிட்டாங்க. அரஸ்ட் பண்ணி என்னை கொண்டு போயிற்றாங்க. டி.ஐ.ஜி மகேந்திரன் தான் விசாரித்தவர். அது ஒரு சுவாரசியமான சம்பவம்

தேசம்: என்ன நடந்தது அதுல? மஹேந்திரன் பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தின் டி.ஐ.ஜி யாக இருந்தவர் என்று நினைக்கிறேன் யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவ காலத்தில் இருந்தவர் என நினைக்கிறேன்.

அசோக்: என்னுடைய பெயர் யோகன் கண்ணமுத்து தானே அப்ப கண்ணமுத்து என்றவுடன் அவர் நினைத்தார் ஆள் ஒரு பெரிய ஒரு சைசா உடம்பா இருப்பார் என்று. அவருக்கு தெரியாது நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று. அப்ப நூர்டீன்தான் என்னை அரஸ்ட் பண்ணினது. என்னை டி.ஐ.ஜி மஹேந்திரன் விசாரிப்பதற்காக அவரின் ஒபிசிக்கு கொண்டு போனாங்க… என்னை உள்ளுக்கு அனுப்பினதும். அவர் என்னை எதிர்பார்க்கவில்லை, இந்த தோற்றத்துடன் எதிர்பார்க்கவில்லை.

தேசம்: மாணவனை எதிர்பார்க்கவில்லை.. !

அசோக்: என்னை கொண்டு போன சிஐடி இன்ஸ்பெக்டர் , தம்பிராஜா எம்பியின் மகன். பெயர்
ஜெயக்குமார். எனக்கு நிறைய உதவி செய்தவங்க. அவர் வந்தவர். கூட்டிக் கொண்டு போன மூணு பேரையும் வெளியில போக சொல்லிப்போட்டு என்னைப் பார்த்தார். நான் கை கட்டிக்கொண்டு நின்றேன். என்னை சொன்னார் உட்கார சொல்லி. நான் உட்காரவில்லை. நான் பெரிய அப்பாவி மாதிரி சோகத்துடன் இருந்தன். ஆள் சொல்லிச்சு உட்கார சொல்லி.

கேட்டார் புளொட்டுக்கும் உனக்கும் என்ன உறவு என்று. நான் சொன்னேன் ஒரு தொடர்பும் இல்லை என்று. அப்ப வாசுதேவாவ எப்படி தெரியும்? நான் சொன்னேன், காந்தியத்தில் நான் வேலை செய்கிறேன் என்று. நான் படித்துக்கொண்டு, காந்தியம் சமூக சேவைகள் என்று ஈடுபடுகிறேன். நீ பொய் சொல்ல வேண்டாம் நீதான் மாவட்ட அமைப்பாளராக வேலை செய்கிறாய். ரிப்போர்ட் எல்லாம் வந்திருக்கு. நிறைய வன்செயல்களில் ஆட்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதுக்குப் பின்னாடி நீ இருக்கிறாய் என்று. நான் சொன்னேன், அதற்கும் எனக்கும் தொடர்பே இல்லை. நான் படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் பிரின்ஸிப்பலிடம் கேட்டுப் பாருங்கள் என்று.

அப்ப கேட்டார் தமிழீழம் கிடைக்கும் என்று நீ நம்புறியா என்று. நான் சொன்னேன் எனக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியாது என்று. நான் காந்தியம் தான் என்று. தமிழீழம் கிடைக்கப்போவதில்லை வீணாக வாழ்க்கையை இழக்காமல் ஏதாவது தொடர்ந்து படி. அல்லது படித்து போட்டு வெளிநாட்டுக்கு போ. இனிமேல் இதில ஈடுபடக்கூடாது என்று போட்டு, இதுதான் கடைசி இனி ஏதாவது பிரச்சனை வந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்று போட்டு, இவரை ரிலீஸ் பண்ணுங்க என்று சொல்லி அனுப்பிட்டார்.

அதோட என்னை விட்டாச்சு பிறகு. பிறகு என்ன நடந்தது என்று கேட்டால், போலீஸ் தெரியும் தானே, தொடர்ந்து கண்காணிப்பில் தான் நான் இருந்திருக்கிறேன். ஒரு நாள் என்ன நடந்தது என்றால், ஜே ஆர் ஜெயவர்த்தன வடகிழக்கு பிரதேசங்களுக்கு விஜயம் செய்வது தொடர்பாக வடகிழக்கில் மாணவர் பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்று நடந்தது. அதுல யாழ்ப்பாணத்தில ஈபி ஆர்எல் எப் GUES செய்தது. மட்டக்களப்பில் நாங்கள் பொறுப்பெடுத்தோம்.

வடகிழக்கில் பாடசாலைகளை பகிஷ்கரிக்க சொல்லி எல்லாம் ஒழுங்கமைத்தாச்சு. அது தொடர்பா நோட்டீஸ் அடிக்கிறதுக்கு மட்டக்களப்பு ராஜன் அச்சகத்துக்கு நான் போனேன். அங்க ஓடர் கொடுத்திட்டேன் முதலே நோட்டீஸ் எல்லாம் அடிக்கிறதுக்கு. அண்டைக்கு போய் நோட்டீஸ் எடுத்து ரோட்ல வரும்போது அரஸ்ட் பண்ணுப்படுறேன் கையும் மெய்யுமா. அரஸ்ட் பண்ணு பட்டதும் தெரியும்தானே, ஒன்றுமே செய்ய இயலாது ஏனென்றால் கையும் மெய்யுமாக அரஸ்ட் பண்ணபடுறேன். நாங்க நோட்டிசை தமிழ் ஈழ விடுதலைக் கழகம் என்ற பெயரிலதான் அச்சிட்டிருந்தோம்.

தேசம்: என்ன காரணம்…

அசோக்: அது ஒரு அபத்தமாக காரணம். தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் அண்டகிரவுண்ட் என்றும், தமிழ் ஈழ விடுதலைக் கழகம் அதனோட ஓப்பின் வொடி என்றுதான் நாங்க அந்த நேரத்தில இயங்கினம். வெகுஜன வேலைகள் எல்லாம் இதன் பெயரிலதான் செய்தோம். ஆன பொலிசிக்கு தெரியும் ஓரே ஆட்கள்தான் என்று. பெயரில் ஒரு சொல்தான் வித்தியாசம். சாதாரணமாகவே விளங்கும் இரண்டும் ஒன்றுதான் என்று.

அரஸ்ட் பண்ணின உடனே என்னை விசாரித்தது நூர்டீன். அவருக்கு இயக்கங்கள் பற்றி சகலதும் தெரிந்திருந்தது. நாங்கதான் முட்டாள்தனமாக இயக்கம் நடாத்தி இருக்கம்.

அந்த நேரத்தில புளொட்டின் தலைமையிடம் அண்டகிரவுண்ட் அமைப்பின் வடிவம், வெகுஜன அமைப்பின் வடிவம் பற்றிய எந்த அரசியல் புரிதல்களும் இருக்கல்ல. இப்ப நினைக்கும்போது சிறுபிள்ளத்தனமாக இவைகள் தெரிகின்றன. பார்த்தீங்க என்றா அண்டகிரவுன்ட அமைப்பின் பெயர் தமிழ் ஈழமக்கள் விடுதலைக் கழகம். வெகுஜன அமைப்பின் பெயர் தமிழ் ஈழ விடுதலைக் கழகம் யோசித்துப் பாருங்க, இப்படி யாரும் பெயர் வைப்பாங்களா?

தேசம்: அந்த நேரம் புளொட்டின் தலைமை என்று யாரை சொல்கிறீர்ங்க?

அசோக்: உமா மகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம் போன்றவங்க…

தேசம்: பிறகு என்ன நடந்தது…?

பிறகு, நூர்டீன் என்னை கடுமையாக விசாரிக்க முன்னரே, என்னை சிஐடி அரஸ்ட் பண்ணினபடியால், அவங்க என்னை விசாரிக்க பொறுப்பெடுத்தாங்க. ஒரு அடி கூட விழல.

சிஐடி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் நல்லா கெல்ப் பண்ணினார். அடுத்த நாள் வாசுதேவாவையும் அரஸ்ட் பண்ணிட்டாங்க.

விசாரித்த பிறகு, கோர்ட்டுக்கு கொண்டு போனாங்க. பிறகு ரிமாண்ட் ஒரு மூன்று மாதம் உள்ளுக்கு இருந்தன்.

வாசுதேவாவை ஒரு மாதத்தில விட்டிட்டாங்க. பெட்றிக்சும், பேரின்பநாயகம் என்று சொல்லி யாழ்ப்பாணத்திலிருந்து வந்த லோயர் இரண்டு பேரும்தான் வாதாடுனவங்க. என்னை விடுவிக்கக்கோரி மாணவர் பகிஷ்கரிப்பு போராட்டம் ஊர்வலம் எல்லாம் நடந்தது. அதற்குப்பிறகு, பிணையில் வந்தாலும் கூட தொடர்ந்து சயின் பண்ண வேணும் நான். சைன் பண்றதால என்ன பிரச்சனை என்றால் ஏதாவது பிரச்சனை நடந்தால் என்னை தான் அரஸ்ட் பண்ணறது. அடுத்த தெரியும்தானே. போலீசில் பிடிபட்டால்… அதால நான் தலைமறைவு ஆகிட்டேன். அதற்குப் பிறகு தேடப்படும் ஆளாக ஆக்கப்பட்டேன்.

தேசம்: 82 ஆண்டுக்கு பிறகு நீங்கள் தேடப்பட்ட ஆளா ஆக்கப்பட்டுட்டீங்க. உங்களுடைய கைது தொடர்பா பத்திரிகைகளிலும் வந்தது என்று நினைக்கிறேன்

அசோக்: ஓம் எல்லா பத்திரிகைகளிலும் வந்தது.

தேசம்: அதற்குப் பிறகு உங்களுடைய தலைமறைவுவுக்கு பின் செயற்பாடுகள் எப்படி இருந்தது.

அசோக்: தலைமறைவாக இருந்துகொண்டு நிறைய தோழர்களை வைத்துதான் செயற்பட்டனான். வரதன் சக்திவேல், பேரின்பம், தில்லைநாதன், குணம், பாக்கி மாமா, ஜீவா நிறைய தோழர்கள் இருந்தவர்கள்.

தேசம்: அப்ப இயக்க முரண்பாடுகள் கிழக்கில பெருசா வரேல.

அசோக்: அந்த நேரம் வரேல. மிக தோழமையாக தான் நாங்கள் இருந்தோம். மட்டக்களப்பு ஜெயில் விரேக் வந்து… அதைப் பற்றி கதைக்கலாமா?

தேசம்: அதை அடுத்த பாகத்தில் பார்ப்போம். இந்தக் காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில இயக்க முரண்பாடுகள் பாரிய பிரச்சனையாக வந்து கொண்டிருக்கின்றது என்று.

அசோக்: அந்த டைம்ல அதற்கு முதலில் சுந்தரம், இறைகுமாரன், உமைகுமாரன் படுகொலை எல்லாம் நடந்திட்டு தானே.

தேசம்: அது சம்பந்தமா என்ன அறிந்து இருந்தீர்கள் அந்த நேரம். நீங்கள் சேர முதலே அது நடந்து விட்டது என்று நினைக்கிறேன்

அசோக்: இல்லை சுந்தரம் படுகொலை 82இல் தானே நடக்குது.

தேசம்: சுந்தரத்திற்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருந்தது?

அசோக்: பெரிதாக நெருக்கமான உறவு ஏற் படவாய்ப்பிருக்கவில்லை. இரண்டு தடவைகள் சந்தித்திருக்கிறன். புலிகள் சுந்தரத்தை சுட்ட போது புலிகள் மீது எங்களுக்கு கடும் ஆத்திரம் வந்தது. இயல்பாகவே ஒரு ஆத்திரம் வரும் தானே.

தேசம்: அதுதான் முதலாவது சகோதர படுகொலை…

அசோக்: ஓம், ஆனால் அந்த படுகொலை மட்டக்களப்பில் ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தவில்லை. எங்களுக்கு அதிருப்தி இருந்தது புலிகள் மீது. மட்டக்களப்பு புலித் தோழர்களுடன் கதைத்தால் அவங்களுக்கும் இதுக்கும் தொடர்பில்லை. அவங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் நடக்கிற எந்த ஒரு விஷயத்துக்கும் தொடர்பில்லை அப்ப முரண்பட்டும் பிரயோசனமில்லை தானே.

தேசம்: மட்டக்களப்புக்கு யாழ்ப்பாணத்துக்கும் அடுத்த சிக்கல் என்னவென்றால் நிலத் தொடர்போ, நேரடி தொடர்போ இல்லை.

அசோக்: அப்படித்தான் அன்றைய நிலமை இருந்தது. அடுத்தது அங்கு வேலை செய்த தோழர்கள் எல்லாருமே, அப்ப ஈரோசில வேலை செய்த ரமேஷ் என்ற தோழர், ஈபிஆர்எல்எஃப் பில் வேலை செய்த தோழர்கள் பாலா, சிவலிங்கம், கணேஸ், சின்னத்துரை நிறைய தோழர்கள் பெயர்கள் நான் மறந்துட்டேன். எல்லோரும் நாங்கள் ஃபிரண்டா இருந்த ஆட்கள் தானே. ஈபிஆர்எல்எஃப் பில் சின்னத்துரை என்ற ஒரு தோழர் அவர் என்ற பெஸ்ட் பிரெண்ட்.

தேசம்: இதையெல்லாம் பார்க்கும்போது யாழ்ப்பாணத்துக்கும் மட்டகளப்புக்கும் இடையில பெரிய ஒரு கலாச்சார வேறுபாடு ஒன்றும் இருந்திருக்கு

அசோக்: கலாச்சார வேறுபாடு என்று சொல்ல முடியாது. யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சனை, நான் என்ன நினைக்கிறேன் என்றால், இயக்கங்களுக்குள்ள அரசியல் கல்வி இல்லை. ஒரு அரசியல் கல்வி ஊட்டப்பட்டு இருந்தால் ஒரே நோக்கத்துக்காக…

தேசம்: சித்தாந்த அரசியல் கலாச்சாரம் ஒன்று இருக்கேல…

அசோக்: இருக்கேல. அரசியல் கல்வி ஊட்டப்பட்டு இருந்தால் இந்த இயக்க முரண்பாடுகள் வந்திருக்காது. ஒரே நோக்கத்துக்காக, ஒரே போராட்டத்துக்காக, ஒரே கொள்கைக்காக நிக்கிறம் என்ற உணர்வு வந்திருக்கும். மத்தியதர வர்க்கத்திற்குரிய போட்டி, பொறாமை, அதிகார ஆசை இவை எல்லாம் அரசியல் கல்வி, மக்கள் மயப்பட்ட செயற்பாடு சிந்தனை முலம்தான் இல்லாமல் போகும். 83 ஜூலை கலவரத்துக்கு பிறகுதான் யாழ்ப்பாணத்தில நாங்கள் வகுப்புகள் எடுக்கிறோம். சம ணர் குளத்தில் நடந்த வகுப்புகள் ஒன்றுக்குமே யாழ்ப்பாணத்திலிருந்து தோழர்கள் வந்தது குறைவு. நான் அறிய யாருமே வந்ததில்லை. பொன்னுத்துரை தோழர் மாத்திரம் வந்து போவார். வேறு தோழர்கள் வந்ததில்லை.

தேசம்: யாழ்ப்பாணத்தில நான் நினைக்கிறேன் அந்த காலகட்டத்திலேயே இங்க வந்து யுஎன்பி செயற்பாட்டாளரைக் கொலை செய்தது மாதிரி யாழ்ப்பாணத்திலும் சில கொலைகள் நடந்திருக்கு என்று நினைக்கிறேன் ஐக்கியதேசிய கட்சி உறுப்பினர் தியாகராஜா…

அசோக்: மட்டக்களப்பில் நடந்த கொலைகளை எங்களால நிறுத்த முடிந்தது. நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாலா ராமச்சந்திரன் யு என் பி அமைப்பாளராக இருந்தாலும்கூட எங்களுக்கு அந்த கொலையை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இருக்கல்ல. கொலை, தனிநபர் பயங்கரவாதம் என்பது எப்பவுமே விடுதலைக்கு சாத்தியமில்லை.

தேசம்: துரையப்பா படுகொலையை நீங்கள் எப்படி பார்த்தீர்கள் அந்த நேரம்..

அசோக்: சுதந்திரன் பத்திரிகைக்கு ஊடாக அவரைப் பற்றி மோசமான பிம்பம்தான் கட்டமைக்கப்பட்டு இருந்தது. துரையப்பா அவர் தொடர்பாக பொசிட்டிவான விடயங்கள் இருக்கு. அதை ஏற்றுக் கொள்கிற அதே நேரம், அவர் தொடர்பான நெகட்டிவான விமர்சனங்களையும் நாங்கள் கவனத்தில் எடுக்கத்தான் வேண்டும். அதுக்காக படுகொலை என்பது பிழை. ஆனால் அவரை பிழையற்ற நபராக புனிதராக கட்டமைக்கும் போக்கு ஒன்று இருக்குத் தானே அது பிழை.

ராஜன் செல்வநாயகம் மட்டக்களப்பில் இருந்தவர். அவரும் எஸ்எல்ஃப் பி இல இருந்தவர். துரையப்பா மாதிரிதான் அவர் அபிவிருத்தி வேலை செய்தவர். தமிழர் விடுதலைக் கூட்டணி அதன்ர அரசியல் எல்லாத்திற்கும் எதிரான ஆள். அதே நேரம் விடுதலை இயக்கங்களுக்கு நிறைய சப்போர்ட் பண்ணினவர். ஒரு தடவை பொதுக்கூட்டம் நடத்த எங்களுக்கு பொலிஸ் பெமிசன் தரல்ல. ராஜன் செல்வநாயகம்தான் எடுத்துத் தந்தவர். மாலா ராமச்சந்திரன் படுகொலை செய்யப்படாமல் இருந்தால் அவரும் இயக்கங்களுக்கு சப்போர்ட் பண்ணி இருப்பார். அதால தான் தனிமனித பயங்கரவாதத்தை, கொலைகளை நாங்க எதிர்த்தம். நாக படை உருவாகியிருந்தால் யாழ்ப்பாணம் மாதிரி தனிநபர் பயங்கரவாதம், கொலைக் கலாச்சாரம் உருவாகியிருக்கும். கண்டகண்ட முழுப்பேரையும் எதிரிகளாக்கி சுட்டு இருப்பார்கள். அதே நேரம் ராஜன் செல்வநாயகம் போல துரையப்பா இருக்கல்லதானே.

தேசம்: துரையப்பா செய்வதற்கான சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி அவரை ஒரு எதிரியாகத் தானே காட்ட முற்பட்டது.

அசோக்: எப்பவுமே அரசியல் இருத்தலுக்கு இலங்கை அரசிற்கு தமிழர்களை எதிரிகளாக்குவது போல, தமிழரசுக்கட்சிக்கு, கூட்டணிக்கு எதிரிகளை கட்டமைக்கவேண்டிய அவசியம் இருக்கு. அதற்கான சந்தர்ப்பங்களை துரையப்பா போன்றவங்க வழங்கியது அக்காலங்களில் இவர்களுக்கு சாதகமாக போய்விட்டது.

தேசம்: இயக்கங்களின் மந்தமான ஒரு வளர்ச்சி, இவ்வாறான ஒரு போக்குத்தான் 83 ஜூலை வரைக்கும் தொடர்ந்து கொண்டிருந்ததா?

அசோக்: 83 ஜூலை வரை எல்லா அமைப்புகளும் மந்தமான போக்கா, பெரிய வளர்ச்சி இருக்கல்ல.
புளொட் சித்தாந்த ரீதியாக வளர்ந்த தோழர்களை கொண்டிருந்த போதிலும், ஒழுங்கான கட்டமைப்பு இருக்கல்ல. நான் நினைக்கிறேன் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக அந்த காலகட்டத்தில் இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் மாத்திரம்தான் என்று… ஈபிஆர்எல்எவ் இல் அரசியல் ரீதியான வளர்க்கப்பட்ட தோழர்கள் நிறைய பேர் இருந்தார்கள். ஓரளவு சித்தாந்த ரீதியாக வளர்க்கப்பட்ட அமைப்பாக, ஒரு கட்டமைப்பை கொண்டு ஈ.பி.ஆர்எல்எஃப் இருந்தது. அது வேறு எந்த அமைப்பிலும் இருக்கவில்லை.

தேசம்: ஆரம்ப காலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தான் ஆகக்கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக இருந்தது. விடுதலைப்புலிகளை காட்டிலும் பன்மடங்கு. இந்த உறுப்பினர்கள் பெரும்பாலும் எந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அல்லது இது இந்த வீக்கம் 83 ஜூலைக் பிறகுதான் வருதா அல்லது அதற்கு முதலே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துக்குள்ள கூடுதலான நபர்கள் உள்வாங்கப்பட்டு விட்டார்களா?

அசோக்: 83 ஜூலைக் கலவரத்திற்கு முற்பாடு புளொட்டுக்குள்ள உள்வாங்கப்பட்ட தோழர்கள் முழுப்பேரும் அரசியல் சித்தாந்த ரீதியாக வளர்க்கப்பட்டவர்கள். ஏனென்றால் பாசறை நடத்தப்பட்டது .யாழ்ப்பாணம் தவிர்ந்த எல்லா இடங்களிலும் பாசறை நடத்தப்பட்டது. அடுத்தது அவர்கள் உழைக்கும் வர்க்கத்தில் இருந்து வந்தாங்க. வடக்குக்கு அங்கால விவசாய குடும்பங்களாக , கடல்தொழிலாளர்கள் குடும்பங்களாக, தொழிலாள குடும்பங்களாக. அல்லது மத்தியதர வர்க்கமாக இருந்தாலும், உழைக்கின்ற சமூகத்தினுடைய அபிலாசைகளையும், குணாதிசயங்களையும் கொண்டிருந்தாங்க. நிறைய தோழர்கள் இருந்தாங்க. 83 ஜூலைக் பிறகுதான் எல்லா இயக்கங்களிலும் வீக்கம் ஏற்படுது. புளொட்டிலும் அப்படித்தான். இலங்கை அரசின் பேரினவாத செயல்களினால், இனக்கலவரத்தால் உணர்ச்சி கொண்ட, பாதிக்கப்பட்ட பலரும் இயக்கங்களில் சேருராங்க. எல்லா மாவட்டங்களிலிருந்தும். கூடுதலா புளொட்டில் யாழ்ப்பாணத்திற்கு வெளியேதான் கூட தோழர்கள் இருந்தாங்க. பெரும்பான்மை தோழர்கள் இப்படித்தான் வந்தவங்க. ஆனால் பின்தளத்தில் இவங்களுக்கு அரசியல் கல்வி ஊட்டப் பட்டது. புளொட்டில் அரசியல் கல்விக்காக, அரசியல் சமூக விஞ்ஞானக் கல்லூரி ஒன்று சென்னையில T3S என்ற பெயரில் தொடங்கப்பட்டது. மற்ற இயக்கங்கள் எப்படியோ தெரியல்ல.

அரசியல் பக்கம்: ஜேவிபி உடன் இணைவும் முறிவும்: பாகம் 3

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 03 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 3

தேசம்: இளந்தளிர் வாசகர் வட்டம் தொடர்பில் கதைத்திருந்தோம். அந்த நேரம் உங்களுக்கு கிட்டத்தட்ட 15 வயது வந்திருக்கும். அந்த காலகட்டத்தில் உங்களுடைய தந்தையார் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அப்போது எத்தனை வயது உங்களுக்கு?

அசோக்: அப்பா இறக்கும் போது, எனக்கு பத்து வயது இருக்கும் என்று நினைக்கிறன்.

தேசம்: அது ஞாபகம் இருக்கா உங்களுக்கு…

அசோக்: பெரிதாக ஞாபகம் இல்ல. கொஞ்சம் ஞாபகம் இருக்குது. அப்பாக்கு தொடர்ந்து அஸ்மா தான். மட்டக்களப்பில் செல்லையா டாக்டர் என்று ஒருத்தர் இருந்தார். டிசம்பர் மாத காலத்தில், அப்பா எங்கட வீட்டில் இருக்கிறேல. Paying ward என்டு காசுக்கட்டி, செல்லையா டாக்டரிட வார்டில அப்பா அட்மிட் ஆகிடுவார். அந்தக் காலம் அங்கதான் அப்பா இருப்பார். ஏனென்றால் மார்கழி மாதக்குளிரில் அப்பாவுக்கு வருத்தும் கூட.

தேசம்: அந்த காலகட்டத்தில அப்பா ஓய்வு பெற்றுவிட்டாரா?

அசோக்: ஆம். அப்பா ஓய்வு பெற்றிட்டார். செல்லையா டாக்டரிட வாட்டிலதான் அப்பா இறந்தார். அம்மாவின் மடியில்தான் அப்பா இறந்தாக, அம்மா சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். நான் கடைசி ஆள் என்றபடியால், நான்தான் கிரியை செய்ய வேண்டும். அப்ப மொட்டையடித்து கொள்ளி வைத்தது அதெல்லாம் ஞாபகம் இருக்கு.

தேசம்: அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையிலான உறவு நிலையை எப்படிப் பார்க்கின்றீர்கள்? அவர்கள் விரும்பித் தான் செய்தவை. அவர்களுக்குள் சமத்துவம் இருந்ததா?

அசோக் : அப்ப தெரியல. ஆனால் இப்ப பார்க்கேக்கை, அப்பாட்ட ஒரு அதிகாரத்தனம் இருந்தது. தலைமை ஆசிரியரும் தானே அப்பா. அரசியல் ரீதியாக அப்பா ஒரு தமிழ்த் தேசியவாதியாகவும், பெரியாரிஸ்டாக இருந்தாலும், கூட வீட்டில ஒரு சட்டம்பியாகத்தான் இருந்தார். எனக்கு தெரிய படங்கள் எல்லாம் அவர் சொல்ற படங்கள் தான் அக்காக்கள் பார்க்க வேண்டும்.

தேசம்: பெண்களை பாதுகாக்கிற ஒரு எண்ணம்…

அசோக்: ஓம், சிவாஜி படங்கள் தான் பார்க்க வேண்டும். வேறு யாருடைய படங்களையும் பார்க்க கூடாது.

தேசம்: தன்னுடைய விருப்பங்கள் சார்ந்து செய்றார்.

அசோக் : சத்தியாகிரக போராட்டத்தில் அம்மா திருகோணமலைக்கு ஊர்வலமாக போனார் என்பது எங்களுக்கு முற்போக்காக பட்டாலும் கூட அது, அப்பாவினுடைய அபிலாஷையாகத்தான் இருக்க முடியும் என்று நான் நினைக்கிறன். அம்மா விரும்பி இருக்கலாம். ஆனால், அம்மாவுக்கு பெரிய ஒரு சுதந்திர வெளி இருந்ததாக தெரியவில்லை. ஆனால், அதற்காக அடக்குமுறை அடிப்பது அதுகள் இல்லை. ஆனா ஒரு ஆணாதிக்க தனம்தான் அப்பாவிடம் இருந்தது. அதிகார சட்டம்பித்தனந்தான் குடும்பத்தில் இருந்தது.

தேசம்: பெரும்பாலான முற்போக்கு பேசுபவர்களின் குடும்பங்களிலும் அதுதானே இன்றும் நிலைமை. அது அம்மாவை பாதிக்கும் விதமாக இருக்கவில்லை…

அசோக்: அப்படி இருக்கவில்லை. இதைவிட பெரிய பிரச்சினை கொடுக்கக்கூடிய ஆளாக நான் தான் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். என்னொரு விடயம் என்னென்றால், எங்கள் வீட்டில் அண்ணாக்கள் எல்லாருடையதும் காதல் திருமணம். அண்ணிமாரைத் திருமணம் செய்து அவங்கள்தான் அனைத்து பொறுப்பையும் பார்க்குற ஆட்களா இருந்தார்கள். அந்நேரம் அப்பா எதிர்ப்பு காட்டினாலும் கூட, காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஆளாக மாறிட்டார்.

தேசம்: திருமணத்தை தடுத்து நிறுத்தக்கூடிய அளவுக்கு எல்லாம் போகேலை

அசோக்: இல்லை

தேசம்: அப்பா இல்லாத காலத்தில் அந்தக் கால சமூகத்தில் ஆண் இல்லாமல் குடும்பத்தை கொண்டு நடத்துவது அல்லது முன்னுக்கு கொண்டுவருவது என்பது மிக கஷ்டமாக இருந்திருக்கும். நீங்கள் ஏழு வயதாக இருக்கும் போதே அப்பா இறந்துட்டார். அதற்குப் பிறகான உங்களை வளர்த்தெடுப்பதில் அம்மாவின் உடைய பங்கு எப்படி?

அசோக்: 7 வயதில்லை. எனக்கு அப்போது 10 வயது இருக்கும். அப்பா இறக்கும் போது அண்ணாக்கள் ஓரளவு வளர்ந்துட்டாங்க . ஆனா யாருக்கும் உத்தியோகம் இல்லை. அப்பாவினுடைய பென்ஷன் இருந்தது. காணிகள் வருமானங்கள் இருந்தது. அப்பா இறந்ததற்கு பிறகு என்ன நடந்தது என்றால் அப்பா அரசியல் நடவடிக்கைகள் சார்ந்து நிறைய கடன் பட்டிருந்தார். அப்பா நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார்.
எங்களுக்கு காணி, பூமி நிறைய இருந்ததால் அதை வைத்துதான் காலப்போக்கில் கடன்கள் எல்லாம் அடைத்தோம்.

78 ல் மட்டக்களப்பில் சூறாவளி வரும் வரைக்கும் தென்னந்தோப்பால் பெரிய வருமானம் இருந்தது. பொருளாதார ரீதியாக பெரிய பிரச்சனை இருக்கவில்லை. அம்மாவுக்கு நான் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற விருப்பம் நிறைய இருந்தது. 5ம் வகுப்பு கொலர்சிப்பில் பாஸ் பண்ணும் அளவுக்கு திறமை இருந்தது. ஆரம்ப இளம்வயதில் விளையாட்டுத்தனம் இருந்தாலும் இடைக்காலத்தில் நல்ல மாணவனாக நான் இருந்தேன். கிருஸ்ணபிள்ளை சேர், இவர் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்தவர். என்னில் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். இப்படித்தான் அம்மாவும்.

என் சிந்தனைகளும், போக்கும் அவங்களுக்கு நிறைய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என இப்ப நினைக்கிறன்.

தேசம் : அந்த நேரம் அப்பா தமிழரசுக்கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்திருக்கின்றார். அந்த காலகட்டத்தில் அப்பாவின் இழப்பு தமிழரசுக்கட்சி க்கு எப்படி இருந்தது?

அசோக்: தமிழரசுக் கட்சிக்கு அப்பாவினுடைய இழப்பு பெரிய ஒரு இழப்பாக இருக்கவில்லை. ஏனென்றால் அதை ஈடு செய்வதற்கு அவர்கள் இன்னொருவரை தேர்ந்தெடுத்து இருப்பார்கள்.

தேசம் : அவருக்கான கௌரவத்தை கொடுத்ததாக இல்லை?

அசோக் : இல்லை அப்பா தமிழரசுக்கட்சியை நேசித்தாரேயொழிய, தமிழரசுக்கட்சி அப்பாவை பயன்படுத்தியது. அது எனக்கு காலப்போக்கில் தெரியவந்தது. எனக்னொரு அத்தான் இருந்தார். இரா. பத்மநாதன் என்று பேர். சுதந்திரன் பத்திரிகையில் எஸ் .டி. சிவநாயகம் ஆசிரியராக இருந்த காலத்தில் அத்தான் அதன் துணை ஆசிரியராக இருந்தார். மட்டக்களப்பு எம்பியாக இருந்த இராஜ துரையின் வகுப்புத் தோழன். மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்தவர். அத்தான், அப்பா போன்றவர்கள் பயன்படுத்தப்பட்டார்களே தவிர, எந்த கௌரவமும் அவர்களுக்கு கிடைக்கல்ல.

தேசம் : அதை எப்படி பார்க்குறீர்கள்? ஏன் அந்த உணர்வு உங்களுக்கு வருகிறது? நீங்கள் எந்த காலத்திலும் தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து வேலை செய்யவில்லை?

அசோக் : இல்லை. அண்ணாக்கள் தமிழரசுக் கட்சியுடன் மிகத் தீவிரமாக இருந்தவர்கள். ஒரு அண்ணன் இருக்கிறார் அவர் இப்போதும் தீவிரமான தமிழரசுக் கட்சிதான். எங்க குடும்பம் தமிழரசுக் கட்சி குடும்பமாக தான் எப்பவும் இருக்கிறது. எனக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவங்களின்ர காலத்தில் இருந்த அரசியல் நோக்கமும், போராட்ட உணர்வும் தமிழரசுக் கட்சியிடம் இல்லாமல் போய் விட்டது. அவர் உண்மையாகவே தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும், மலையக மக்களுக்குமான தீர்வை விரும்பினார். முதன் முதலில் முஸ்லிம் மக்களுக்காக தனிஅலகுக் கோரிக்கையை முன்வைத்தவர் அவர்தானே. முஸ்லிம் தமிழ் உறவை வளர்த்தவர். ஆனா, என்ன செய்வது வேறு தேர்வுகள் இல்லை. தமிழ் அரசுக் கட்சிதான் இருக்கிற திருடர்களில் நல்ல திருடனாக இருக்கிறது.

தேசம்: இந்த இளந்தளிர் வாசகர் வட்டம் தான் உங்களுடைய அரசியலின் அரும்பு நிலை என்று நினைக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் எப்படியான அரசியலை நீங்கள் தேர்வு செய்கின்றீகள்?

அசோக்: இளந்தளிர் வாசகர் வட்டத்துக்குள் இருக்கும்போது அப்ப 71 ஆம் ஆண்டு ஜனதா விமுக்திப் பெரமுன ஜே.வி.பி யின் ஆயுதப் புரட்சி நடக்குது.

தேசம்: அது தொடர்பாக உங்களுக்கு ஏதும் ஞாபகம் இருக்கின்றதா?

அசோக்: அது ஞாபகம் இருக்குது. அம்பாறையில் சென்றல் கேம் என்ற இடத்தில் ஒரு சிறைச்சாலை உருவாக்கி அங்கு அட்களை கொண்டு போனார்கள். அது மட்டக்களப்பிலிருந்து எங்கட ரோட்டாலதான் போனது. அப்பா சின்ன வயசுல நாங்க ….. கொண்டு போறாங்க என்று ஆட்கள் போய் பார்த்தவங்க. அந்த ஞாபகம் இருக்கு.

தேசம்: ஜே.வி.பி தொடர்பான பிரமிப்பு ஒன்று அந்த நேரம் இருந்திருக்கு…

அசோக் : அதுக்குப் பிறகு என்ன நடந்தது என்றால். 1977 ம் ஆண்டு இது நடக்குது. ஆறு வருஷத்தால ஜே.வி.பி வெகுஜன இயக்கமாக. ஜனநாயக முறைக்குத் திரும்புவதாக அறிவித்து அவங்கள் தங்களை பிரகடனப்படுத்துறாங்கள்.

78ஆம் ஆண்டு அவங்களுடைய கொள்கைப் பிரகடனம் தமிழில் வருது. இந்தப் பிரகடனத்தை படிக்கிறம் நாங்கள். ரஷ்யப் புத்தகங்களைப் படித்தது. கியுபா புரட்சி, வியட்நாம் போராட்டம் சேகுவேரா, பெடல் கஸ்ரோ, மார்க்சீய சித்தாந்தம் தொடர்பில் எங்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்ததுதானே. அந்தக் கொள்கை பிரகடனம் எங்களை கவர்ந்தது.

இலங்கையில் ஒரு வர்க்கப் போராட்டத்தை கொண்டு வரலாம் ஒரு முழுமையான புரட்சி என்ற சிந்தனை எங்களுக்கு இருந்தது.

தேசம்: கிட்டத்தட்ட 77 ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே உங்கட பார்வை ஒரு இடதுசாரி பார்வையாக வந்திட்டுது.

அசோக்: ஆம் ஏனென்றால் மாக்சிச புத்தகங்கள், ரஷ்யா நாவல்கள்: தாய், வீரம் விளைந்தது எல்லாம் படிக்கத் தொடங்கிவிட்டோம். லைபிறரில இந்த புத்தகங்கள் எல்லாம் வாரது தானே. அதால ஓரளவு இடதுசாரி அரசியல் எங்களுக்குள் உருவாகிவிட்டது. அதால தான் நாங்கள் அந்த கொள்கை பிரகடனத்தை படித்தவுடனேயே அதிலும் இலங்கையில் வர்க்கப் போராட்டம், தொழிலாளர் புரட்சி என பல்வேறு விடயங்கள் கதைக்க பட்டிருந்தது.

அப்ப நான் என்ன செய்தேன் என்றால் அந்த புத்தகத்தைப் படித்துவிட்டு, லயனல் பொபேகேவுக்கு கடிதம் எழுதுறன். அதுல ஒரு அட்ரஸ் போட்டிருந்தது. உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகின்றோம் என அனுப்பிட்டன். அனுப்பி ஒரு பதினைந்து இருபது நாள் போக அந்த கடிதத்தோடு தோழர் முபாரக் என்றவர் வீட்டில் வந்து என்னை சந்திக்க வாரார். நீங்கள் தோழருக்கு கடிதம் எழுதி இருந்தீங்க. உங்களோட கதைக்க வந்துள்ளேன் என்றார். அப்பதான் ஜனதா விமுக்திப் பெரமுனவுக்கும் எனக்கும் தொடர்பு ஏற்படுகிறது. பிறகு நாங்கள் தோழருடன் எல்லா நண்பர்களும் சந்தித்து வகுப்பெடுத்து…

தேசம்: நீங்கள் சொல்வது தனிப்பட்ட முறையிலா அல்லது இளந்தளிர் வாசகர் வட்டமாகவா?

அசோக்: இளந்தளிர் வாசகர் வட்டம்தான். நாங்கள் அவங்களுடைய கொள்கைப் பிரகடன த்தை படித்துவிட்டு தொடர்பு கொள்ளலாம் என்று முடிவெடுத்த பின்பு நான்தான் அந்த கடிதத்தை எழுதுறன். அவர் வந்து எங்களை சந்தித்த பிறகு கேள்விகள் கேட்கிறம். அந்தக் கேள்விக்கு எல்லாம் அவர் பதில் அளித்த பிறகு எங்களுக்கு சேர்ந்து வேலை செய்யலாம் என்று நம்பிக்கை வருது. எங்களுடைய முதல் வேலை போஸ்டர் ஒட்டுறது. துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது.

தேசம்: நீங்கள் சொல்லுகின்ற இதே காலகட்டத்தில் நீங்கள் ஜேவிபி சார்பாக போறீங்க அதே நேரம் உங்கட குடும்பம் வந்து தமிழரசு கட்சியுடன் தமிழ்தேசியத்தோட ஐக்கியமாகி இருக்கு. இதே காலகட்டத்தில் தான் வடக்கில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பாக நீங்கள் அந்த காலத்தில் ஏதும் அறிந்திருந்தீர்களா?

அசோக்: அப்பா சுதந்திரன் பத்திரிகை தொடர்ச்சியாக எடுக்கிறவர். அப்பா இறந்த பின்பும் சுதந்திரன் பத்திரிகை வீட்டுக்கு வாரது. அதற்கூடாக நாங்கள் அறிந்திருக்கிறோம்.

தேசம்: அறிந்திருந்தும் தான் நீங்கள் அங்கு செல்கிறீர்கள்?

அசோக்: ஓம். எனக்கு தமிழரசு கட்சியின் மீதான வெறுப்பு நிலை இருக்குதானே. இப்போ நினைத்துப் பாத்தா தமிழரசுக் கட்சி மீதான வெறுப்பு நிலையை விட அது கட்சி சார்ந்த எம் பிக்களின் போக்குகள் நடத்தைகள் காரணமாக வந்திருக்கும் எண்ணுகிறன்.

தேசம்: நீங்கள் ஒரு தமிழ் தேசிய அரசியல் குடும்பத்தில் இருந்து கொண்டு இடதுசாரி அரசியலை எடுக்கிறீர்கள். அதேநேரம் இடதுசாரி அரசியலை படிச்சுப்போட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பா தமிழ்த்தேசிய அரசியலுக்க போனவர்கள் இருக்கிறார்கள் தானே. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

அசோக்: அவர்கள் உண்மையான இடதுசாரி கருத்துக் கொண்டவர்களாக இருந்திருக்கெலாது. இருந்திருந்தால் புலி அரசியலுக்குள் போய் இருக்க முடியாது. இயக்கங்களை தேர்ந்தெடுத்து அங்கு போனதற்கு ஒவ்வொருவருக்கும் அரசியல் காரணங்கள் இருக்கு. அவங்ளின்ர அரசியல் வர்க்க நிலையும் இத தீர்மானிக்கும்தானே.

தேசம்: உங்களுக்கு ஜேவிபியோட இருக்கிற அரசியல் உறவிலிருந்து எப்படி நீங்கள் விடுபட்டீர்கள் பிறகு?

அசோக் : ஜே.வி.பியோட நாங்கள் தீவிரமாக வேலை செய்திருக்கிறோம். பாசறைக்கெல்லாம் போய் இருக்கின்றோம். படுவான்கரையில் ஒரு கிராமத்துல வீடெடுத்தனாங்கள். நாங்க ஒரு பதினைந்து இருபது தோழர்கள் போய் அங்கேயே தங்கி ஒரு வாரம் நின்று வகுப்பெடுத்து மிகத் தீவிரமாக இருந்தனாங்கள்.
அந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு முபாரக், உதுமாலெப்பை என்ற ஒரு தோழர் அவர் வந்து கொழும்பு மாவட்டத்தில் ஜேவிபினுடைய மாவட்ட சபை உறுப்பினராக இருந்தவர் என்று நினைக்கிறன். வகுப்பெடுத்தார்கள். முஸ்லிம் தோழர்கள் நிறைய பேர் ஜே.வி.பியில இருந்ததாங்க… அதுதான் மிகவும் ஆச்சரியமான விடயம். எங்களுக்கு வகுப்பெடுத்த 3 – 4 தோழர்கள் முஸ்லிம்கள். ஒரு தமிழ் தெரிந்த சிங்களத் தோழர். சிங்கள தோழர்கள் எடுக்கிறதை இவர்கள் மொழிபெயர்ப்பார்கள்.

தேசம்: மட்டக்களப்பில் தமிழ், சிங்களம், முஸ்லிம் சமூகமும் இருந்தபடியால் தான் ஜே.வி.பியினுடைய ஆதிக்கம் அங்கு வருதா? வடக்கில் நான் நினைக்கல இப்படியொரு ஆதிக்கம் இருந்தது என்று.

அசோக்: வடக்கில் இடதுசாரி கட்சிகள், இயக்கங்கள் இருந்தபடியால் அந்த இடத்தை ஜே.வி.பியால் நிரப்ப முடியவில்லை.

எங்களுக்குள்ள இடதுசாரித் தாக்கம் ஒன்று இருந்தபடியால் எங்களுக்கான இடம் வந்து ஜே.வி.பியாத்தான் இருந்தது. யாழ்ப்பாணத்தில இருந்த கம்யூனிஸ்ட் பார்ட்டி வேற ஏதும் வந்திருந்தால் நாங்கள் அவர்களுடன் சேர்ந்து இருப்போம்.

இடதுசாரி இயக்கம் வந்து, வர்க்கப் போராட்டம் என்று வந்திருந்தால், நாங்கள் அதற்குத்தான் போயிருப்போம். ஆனால் கிடைத்தது ஜே.வி.பி தான். பிறகு என்ன நடந்தது என்றால் அனுராதபுரத்தில் இனக்கலவரம் நடந்தது. அதற்குப் பின்னால் ஜே.வி.பி முக்கிய பங்கு வகித்தது என்ற ஒரு கதை வந்தது. அந்த கதை தொடர்பான உரையாடல்தான் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு வந்தது. பிறகு நாங்கள் அவர்கள் ஒரு இனவாதக் கட்சி தான் என்ற முடிவுக்கு வாறம். அதுல இருந்து நாங்க ஒதுங்குறம்.

தேசம்: ஜேவிபியினுடைய நீங்கள் சொன்ன ஐந்து பாடத்திட்டத்தில் ஒன்று இந்திய எதிர்ப்பு என்று நினைக்கிறேன்

அசோக்: அது எங்களுக்கு எடுக்கப்படவில்லை இந்திய விஸ்தரிப்புவாதம் என்ற அந்த வகுப்பு எங்களுக்கு இல்லை.

தேசம்: தமிழ் மக்களுக்கு எதிரான அந்த பகுதியே எடுத்துட்டாங்க

அசோக்: எடுத்திட்டாங்கள். வகுப்பில வந்து வந்து சுயநிர்ணய உரிமை பற்றி. தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் சம உரிமை, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம்… சோசலிசம் இப்படி அரசியல் வகுப்புக்கள் இருக்கும். அவர்கள் எங்களுக்கு எடுக்காமல் விட்ட இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற வகுப்பு, மலையக மக்களுக்கு எதிரான இனவாதம் கொண்டது என்பதை அவர்களை விட்டு வந்த பிறகு அறிந்து கொண்டோம். ஜே.வி.பி இடது சாரி போலிமுகம் கொண்ட மோசமான இனவாதக்கட்சி.

தேசம் : கிட்டத்தட்ட 77ஆம் ஆண்டு காலகட்டம் என்றால் நீங்கள் ஜி.சி.இ எடுக்கிற காலகட்டம் என்று நினைக்கிறன்.

அசோக்: ஆம். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. சனி ஞாயிறு தான் எங்கடை சந்திப்புகள் எல்லாம் நடக்கும். ஒரு பாடசாலை விடுமுறை காலத்தில் தான் நாங்க பாசறைக்கு போனோம்.

தேசம்: பாசறை எங்க நடந்தது என்று சொன்னீர்கள்?

அசோக்: அது படுவான்கரையில் விவசாய நெல் காணியில் ஒரு வீடு எடுத்து, அங்கேயே தங்கி சமைச்சு சாப்பிட்டு அங்குதான் வகுப்பு நடந்தது.

தேசம்: இப்ப இந்த ஜே.வி.பியின் பிரச்சனைக்குப் பிறகு உங்களுக்கு இடைவெளி ஒன்று வரப்போகுது…

அசோக்: நாங்கள் என்ன செய்த என்றால் வெளியேறிவிட்டு, இளந்தளிர் வாசகர் வட்டம் , விளையாட்டுகள் என்று திரியிறம். இக் காலங்களில தேசிய இளைஞர் சேவை மன்றத்தோடும் நாங்க இருக்கம். அப்ப மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகஸ்தராக செட்டிபாளையத்தைச் சேர்ந்த செல்வநாயகம் அண்ணர் பொறுப்பாக இருந்தார். அவர் எங்களுக்கு நிறைய உதவிகள் செய்தார். அவர்கள் நடாத்தும் விளையாட்டு முகாம், தலைமைத்துவ பயிற்சி நெறி, சிரமதானம் என்று இதிலையும் ஈடுபடுகின்றோம். இந்த டைமில தான் 77 கலவரம் முடிந்து 78 என்று நினைக்கிறேன் காந்திய வேலைத்திட்டங்கள் அங்க மட்டக்களப்பு பிரதேசங்களில தொடங்குது.

தேசம்: 77 கலவரம் என்ன மாதிரி உங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது? அதுல கொஞ்சம் நீங்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?

அசோக்: அதை ஒரு இனவாதமாகத்தான் நாங்கள் பார்த்தனாங்கள். அதுல வந்து ஜே.வி.பி பெரிய ஈடுபாடு கொண்டிருந்தது என்பது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இடதுசாரி இயக்கமே அதுல பின்னணியாக இருந்தது என்பது பெரிய தாக்கமாக ஏமாற்றமாக இருந்தது. அது தாக்கத்தை கொடுத்தபடியால்த்தான் நாங்கள் காந்தியத்தோட வேலை செய்யத் தொடங்கினாங்கள். மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களோடு வேலை செய்ய வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு இருந்தது.

தேசம்: அப்பவும் தமிழ்தேசியத்தோடு அதற்கு போவதற்கு நீங்கள் விரும்பவில்லை?

அசோக் : இனவாதம், தேசிய இனப்பிரச்சனை, புறக்கணிப்புக்கள், தமிழர் மேலான வன்முறைகள், உரிமை மறுப்பு, கொடுமைகள் தொடர்பாய் எங்களுக்கு பார்வைகள் எண்ணங்கள் இருந்தன. திட்டமிட்ட சிங்கள குடியேற்ற திட்டங்களான கல்லோயா, கந்தளாய் பற்றியெல்லாம் அப்ப அறிந்திருந்தோம். தனிநாட்டுக் கோரிக்கை தொடர்பாக எங்களுக்கு அந்த ஐடியா இருக்கவில்லை. காசி ஆனந்தனின் பேச்சுக்கள் உணர்ச்சியூட்டக்கூடிய பேச்சுக்கள் எல்லாம் எனக்கு அந்த நேரமே அலர்ஜியாகத்தான் இருந்தது. அமிர்தலிங்கம் மங்கையர்கரசியின் பேச்சுக்களெல்லாம்… எப்பவுமே நான் இந்தக் கூட்டங்களில் ஆர்வம் காட்டியதில்லை.

தேசம்: அது முக்கியம் ஏனென்றால் அந்தப் பதின்ம வயதில் பெரிய அரசியல் விழிப்புணர்வு ஒன்று இருந்திருக்காது. இருந்தும், அது ஒரு சலிப்புத் தாற, உண்மைக்குப் புறம்பான விடயமாகத் தான் நீங்கள் பார்க்கிறீர்கள்?

அசோக்: காசி ஆனந்தனின் பாட்டெல்லாம் இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை கொடுத்தது ஆனால் எனக்கு எவ்வித தாக்கத்தையும் கொடுக்கவில்லை. இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை இலங்கைத் தொழிலாளர்களின் வறுமைப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது தமிழரசுக் கட்சியால் முடியாது என்பது அந்த வயதில் இந்த எண்ணம் எங்களிடம் இருந்தது. எங்க கிராமத்தில் தமிழரசுக் கட்சிக்கு செல்வாக்கு இருந்தது. எங்கள் மத்தியில் அது பெரிய தாக்கத்தை கொடுத்ததாக தெரியவில்லை. எனக்கு தெரிய மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி எம்பி மார்களின் குடும்பம் ஊழல் கொண்டதாகவே இருந்தது.பணம் ஒன்றே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.