மலையகம்

மலையகம்

“இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை மறைக்கும்  ஒரு செயல்பாடாகும்.” – செந்தில் தொண்டமான் அதிருப்தி !

பிறப்பு, இறப்பு சான்றிதழில் இனத்தினை குறிப்பிடுவது குறித்து பதிவாளர் நாயக திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் தமது இனத்தை குறிப்பிடுவது தொடர்பாக பதிவாளர் நாயக திணைக்களத்திற்கு சுற்றுரூபம் வெளியிட எவ்வித உரிமையும் இல்லை.

இலங்கையர் என்ற வகையில் தனது இனத்தை பிறப்பு இறப்பு சான்றிதழ்களில் குறிப்பிட இந்நாட்டு பிரஜை என்ற வகையில் அனைவருக்கும் உரிமை உள்ளது.

பிரஜா உரிமை இல்லாத சமூகமாக நாம் இருந்த பொழுது, இந்தியா வம்சாவளி தமிழர்கள் என்ற அடையாளமே எமக்கான அங்கீகாரமாக இருந்தது. எம் இனத்தின் அடையாளத்தை தீர்மானிப்பதற்கு மூன்றாம் தரப்பினருக்கு எவ்வித உரிமையும் கிடையாது.

1948 ஆம் ஆண்டுகளில் பிரஜா உரிமை இன்றி இருந்த நம் சமூகம் கிட்டத்தட்ட 40 வருட போராட்டங்களுக்கு பிறகு இந்திய வம்சாவளியினர் என்ற அங்கீகாரத்துடன் பிரஜா உரிமை பெற்றது.

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை மறைக்கும்  ஒரு செயல்பாடாகும். இவ்வாறான சுற்றுநிரூபங்களை வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்குத் தலா 10 பேர்ச் காணிகளை வழங்க திட்டம்..? – பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண

தனியார் பெருந்தோட்டக் கம்பனிகளில் பயன்படுத்தப்படாதிருக்கும் காணிகளை பொதுச் செற்பாடுகளுக்குப் பெற்றுக் கொள்வது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைபை விரைவுபடுத்துவது குறித்து ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் கலந்துரையாட வேண்டும் எனப் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் அண்மையில் அவரது தலைமையில் நடைபெற்ற பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டமையால் அவற்றின் கீழ் பயன்படுத்தப்படாதுள்ள பல ஏக்கர் காணிகளைப் பொதுச் செற்பாடுகளுக்குக் கூடப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

 

இதனைப் பெற்றுக் கொள்வது குறித்து கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சட்ட வரைபொன்றைத் தயாரிக்கும் பொறுப்பு சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் நினைவுபடுத்தினார். இதனைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.

 

அத்துடன், பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்குத் தலா 10 பேர்ச் காணிகளை வழங்குவது தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் காணி அமைச்சு ஆகியன இணைந்து, கூட்டாக அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

பெருந்தோட்டத்துறையில் உள்ள ஏறத்தாழ 250,000 தொழிலாளர் குடும்பங்களில் ஏற்கனவே ஏறத்தாழ 60,000 குடும்பங்களுக்குக் காணி உரிமைகள் வழங்கப்பட்டிருப்பதாகக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

 

இதற்கமைய எஞ்சிய குடும்பங்களுக்கான காணிகளைப் பெற்றுக்கொடுக்க 5000 ஹெக்டெயர் காணி தேவைப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்டங்களில் காணப்படும் காணிகளில் விசேட செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும், ஒரு சில இடங்களில் காணப்படும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்தி செய்து கொடுக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

“மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.” – பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம்

“மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.” என்று பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்தின் பரீட்சார்த்த நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது எனவும் அவர் கூறினார்.

அட்டனில் இன்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் தற்போது உரிமைசார் விடயங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள தனி வீடுகள், லயன் வீடுகள் என தோட்டப்பகுதிகளில் முகவரி இல்லாத அனைவருக்கும் முகவரி வழங்கப்படும். இதற்கான திட்டம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது.

தற்போது இலக்கம் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றது, அப்பணி நிறைவுபெற்ற பின்னர் அனைத்து தரவுகளும் தோட்ட நிர்வாகம், கிராம அதிகாரி, அஞ்சல் மா அதிபர் ஆகிய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படும்.

கேகாலை மாவட்டத்தில் தற்போது பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை, இந்தியாவின் 10 ஆயிரம் வீட்டு திட்ட பணிகளும் இடம்பெறும். 10 பேர்ச்சஸ் காணி ஒதுக்கீட்டுக்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. மலையக மக்களுக்காக இந்திய அரசால் அண்மையில் ஒதுக்கப்பட்ட விசேட நிதி கல்வி, சுகாதாரத்துறைகளுக்காக பயன்படுத்தப்படும்.” – என்றார்.

தொழில் உரிமையை வழங்குமாறு கோரி தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் !

தமக்கான தொழில் உரிமை மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவ, டியன்சின் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட டியன்சின் தோட்டத்தில், தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளியொருவர், திடீரென வழுக்கி விழுந்துள்ளார்.

இதனால் அவருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும், அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கு தோட்ட நிர்வாகம் போக்குவரத்து வசதியை செய்துகொடுக்கவில்லை என தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் உபாதை ஏற்பட்ட நபருக்கு அந்த நாளுக்கான சம்பளம வழங்குவதற்கும் தோட்ட நிர்வாகம் இணக்கம் தெரிவிக்கவில்லை என கண்டித்துள்ளனர்.

நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்தும், தமக்கான தொழில் உரிமைகளை வழங்குமாறு வலியுறுத்தியும் தற்போது போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மலையகத்திற்கு விஜயம் !

மலையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அங்கு மக்களை சந்தித்து அவர்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார அரசியல் நெருக்கடிகள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்துள்ளார்.

இன்று நான் மலையகத்தில் அந்த மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார அரசியல் இடையூறுகள் , சிறந்த வீடு கல்வி தங்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து கேட்டறிவதற்காக அந்த பகுதி  குடும்பங்களைசந்தித்தேன் (இவர்களில் பலருக்கு 200 வருடகாலவரலாற்றை அந்தபகுதியுடன் தொடர்புள்ளது) என ஜூலி சங் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மகளிர் அமைப்புகளை சேர்ந்த சிறியளவு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்தேன், அவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்நாட்டு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான பயிற்சிகள் குறித்து தெரிவித்தார்கள் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கோதுமை மாவில் பூச்சிகள், வண்டுகள் மற்றும் எலிகளின் கழிவுகள் – தொழிலாளிகள் போராட்டத்தில்!

நுவரெலியா நானுஓயா எடின்பரோ தோட்டத்தைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை முதல் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் அண்மையில் வழங்கப்பட்ட கோதுமை மாவில் பூச்சிகள், வண்டுகள் மற்றும் எலிகளின் கழிவுகள் காணப்பட்டதாகவும் அதே கோதுமை மாவினை மீண்டும் வழங்குவதற்காக மேலும் 300 கிலோ கோதுமை மாவை தேயிலை தொழிற்சாலையில் களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கும் தோட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு தொடர்ச்சியாக தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் வழங்காமல் கொழுந்து பறிப்பதில் மாத்திரம் தொழிலார்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் சுகாதார வசதி மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என இம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடாமல் தோட்ட நிர்வாகம் தொழிலாளர் நலன்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலையக மக்களுக்கு நிரந்தர முகவரி வேண்டும் – உயர்நீதிமன்றில் மனு தாக்கல் !

பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு கோரி பெருந்தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பெருந்தோட்ட சமூக குடியிருப்பாளர்களுக்கான நிரந்தர முகவரிகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, மனுதாரரான மாவத்தகம, மூவன்கந்த தோட்டத்தை சேர்ந்த ஜீவரத்தினம் சுரேஸ்குமார் என்பவர் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையில் வாழும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், தமது குடியிருப்புகளுக்கு முகவரிகள் இல்லாத காரணத்தால் இந்த நாட்டின் குடிமக்களாகக் கருதப்படாது பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனுதாரர், தமது மனுவில் பிரதிவாதிகளாக. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட பலரை குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவின்படி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான பதிவு செய்யப்பட்ட நிரந்தர குடியிருப்பு முகவரிகள் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதன் மூலமே அவர்கள் அரச சேவைகளை அணுகலாம் என்றும் நாட்டின் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் வசிக்கும் மூவன்கந்த தோட்டத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இந்த குடும்பங்கள் எவற்றுக்கும் சொந்த முகவரிகள் இல்லை எனவும் மனுதாரர் குறிப்பிடுகிறார்.

நிரந்தர அஞ்சல் முகவரி இல்லாமையால், அந்த தோட்டத்தில் வசிக்கும் குடிமக்கள் தனிப்பட்ட முறையில் கடிதங்கள் மற்றும் அஞ்சல் பொருட்களைப் பெறுவதில்லை. தோட்டத்தில் வசிக்கும் அனைவருக்கும் ‘மூவன்கந்த வத்த, மாவத்தகம’ என்ற முகவரியே தரப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூவன்கந்த துணை அஞ்சல் அலுவலகத்திற்கு மொத்தமாக கடிதங்கள் வந்த பின்னர், அங்குள்ள அதிகாரி, குறித்த கடிதங்களை நம்பத்தகாத முகவர் மூலமாக பெருந்தோட்டத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்குவதையே நடைமுறையாக கொண்டுள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தாம் உட்பட்ட பெருந்தோட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை பிரதிவாதிகள் மீறியுள்ளனர் என்று அறிவிக்குமாறு மனுதாரர் உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுக்க அதிக கவனம் செலுத்துங்கள் – எஸ்.பி. திஸாநாயக்க

சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுப்பது மற்றும் பெருந்தோட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்வாறான செயல்களில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வேண்டிய நடவடிக்கையினை எடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (3) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே, அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

சிறுவர்களை இலக்கு வைத்து சந்தையில் ஒரு வகையான பாக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அது போதைப்பொருள் என குறிப்பிடப்படாவிட்டாலும், சிறுவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கக்கூடியது என பொலிஸ் அதிகாரியொருவர் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை இதுவரை 43 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தோட்டத்து மாணவர்களை கல்விக்கு சேர்க்காத கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் – போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு (தேசிய பாடசாலை) தமது தோட்டத்தில் உள்ள தரம் ஆறுக்கு மேல் கல்வி பயிலும் மாணவர்களையும் உள்வாங்குமாறு வலியுறுத்தி, கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் சுமார் 2500 மாணவர்கள் வரை கல்வி பயில்கின்ற போதிலும், தமது தோட்ட மாணவர்கள் உள்வாங்கப்படுவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இப்போராட்டத்தையடுத்து பாடசாலையில் முத்தரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றது. நுவரெலியா வலய கல்வி அதிகாரிகள், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை அதிபர், முகாமைத்துவ குழு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

எதிர்வரும் 31ம் திகதி, இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என சந்திப்பில் உறுதியளிக்கப்பட்டது என போராட்டத்தில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.

மலையகம் 200 ஆண்டுகள் – தோட்டத்தொழிலாளர்களின் இரத்தத்தை அட்டைகளை விட மோசமாக உறிஞ்சிய அரசியல்வாதிகள் !

இன்றைய தேதிக்கு இலங்கைக்கு டொலர்களை  கொண்டு வரக்கூடிய மிக முக்கியமான துறைகளாக 03 T காணப்படுகிறது.

Textiles and Garments
Tea Factories
Tourism
இவற்றுள் ஆடை உற்பத்தியும் சுற்றுலாத்துறை சார்ந்த நடவடிக்கைகளும் அண்மை கால இலங்கையில் பெரிய அளவிற்கு வெளிநாட்டு வருவாயை பெற்று தந்தாலும் பிரித்தானியர் இலங்கையை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலப்பகுதி தொடங்கி இலங்கைக்கு பெரிய அளவிலான பொருளாதார லாபத்தை ஈட்டி தரக்கூடிய ஒரு துறையாக தேயிலை உற்பத்தி துறை காணப்படுகின்றது.
No photo description available.
இந்த தேயிலை உற்பத்தியின் முதுகெலும்பு மலையக தோட்டங்களில் கடந்த 2 நூற்றாண்டுகளாக மாடாய் உழைத்துக்கொண்டிருக்கும்  தென்னிந்திய வழ்சாவழி மக்கள்  என்பதை மறுக்கமுடியாது. இவர்கள் இலங்கைக்கு கொத்தடிமைகளாக கொண்டுவரப்பட்டு சுமார் 200 ஆண்டுகளாகியுள்ள நிலையில் அவர்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்காக ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து பாரிய விழாக்களை முன்னெடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டிருந்த அதே நாளில் என் கண்ணில் இன்னுமொரு படமும் தென்பட்டது. மலையகத் தோட்டத்தொழிலாளியின் மகளான பாடசாலை மாணவி ஒருத்தியின் கிழிந்த சப்பாத்து. இந்த மக்களை அநாதைகளாக்கிய – உழைப்பை சுரண்டிய அரசியல்வாதிகள் ஆடம்பர வாழ்க்கை வாழ – இவர்களுக்காக – இலங்கையின் பொருளாதாரத்துக்காக ஓடாய் தேய்ந்த மக்களின் நிலை இன்று வரை இந்த மாணவியின் கிழிந்த சப்பாத்து போலவே காணப்படுகின்றது. இன்று நாம் காணும் சுற்றுலாத்தளமாக – இலங்கையின் பொருளாதார மையமாக மலையகம் மாறியிருந்தாலும் கூட அந்த பகுதிகளின் காடுகளை வெட்டி – அவற்றை பொருளாதார உற்பத்திக்கான நிலமாக மாற்றி – மனிதர் நடமாட கூடிய பகுதிகளாக மாற்றிய இந்த மலையக தோட்டத்தொழிலுக்காக வந்த மக்கள் இன்று வரை நம்மால் தோட்டக்காட்டான் என விழிக்கப்படும் அவலம் தொடர்கதையாகியுள்ளது.
பிரித்தானியர் கால இலங்கையில் கோப்பிச்செய்கைக்காக தென்னிந்தியாவில் இருந்து குறைந்த ஊதியத்திற்காக வேலை செய்ய மக்கள் கொத்தடிமைகளாக கொண்டு வரப்பட்டனர்.   கோப்பிச்செய்கை வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து அதற்கு மாற்றாக தேயிலை பெருந்தோட்ட பயிராக இலங்கையில் அறிமுகமானது. மிகப்பெரிய அளவில் தேயிலை உற்பத்தி பிரித்தானியருக்கு லாபம் அளித்த நிலையில் அதனை மேற்கொண்டு முன்நகர்த்திச் செல்வதற்காக இன்னும் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். இந்த நிலையில் தேயிலை செய்கையை விருத்தி அடையச் செய்வதற்காகவும் – அங்கு குறைந்த ஊதியத்திற்கோ அல்லது ஊதியம் இல்லாமலோ  வேலை செய்வதற்கான தொழிலாளர்களை தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பிரித்தானிய அரசு  கொத்தடிமைகளாக இலங்கையின் மத்திய மலைநாடு உள்ளிட்ட பகுதிகளில் கொண்டு வந்து குடியமர்த்தியது.
200 வருட மலையக மக்களும் 150 வருட தேயிலையும் – மலையகத் தமிழர் பண்பாட்டு பேரவை
காலனித்துவம் என்பது 19 – 20 ஆம் நூற்றாண்டுகளில் மிகவும் மலிந்து போயிருந்த நிலையில் அடிமைகளாக தேயிலைத் தோட்டங்களுக்குள் கொண்டுவரப்பட்ட தென்னிந்திய மக்கள் குறிப்பாக தென்னிந்திய தமிழர்கள் கவனிப்பாரற்ற நிலையில் காணப்பட்டதுடன்  அவர்களின் உடல் உழைப்ப சுரண்டப்பட்டதுடன் உழைப்புக்கான ஊதியம் வழங்கப்படவில்லை.
அத்துடன் அங்கு வாழ்ந்த மக்களின் அடிப்படை மனித உரிமைகளும் பிரித்தானியரால் எதுவிதமான கவனத்திலும் கொள்ளப்படவில்லை.  இது பிரித்தானியருடைய காலகட்டத்தில் நீண்டு கொண்டே இருந்தது. கொத்தடிமைகளாக கொண்டுவரப்பட்ட மக்கள் அடைக்கப்பட்ட லயங்களில் எந்தவிதமான அடிப்படை சுகாதார வசதிகளும் அற்ற ஒரு நிலத்தில் வாழ நிர்பந்திக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்களுக்கு கல்வி வசதிகளோ – சுகாதார வசதிகளோ – பொருளாதார உற்பத்தி செயற்பாட்டுக்கான அடிப்படை வசதிகளோ எவையுமே ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை.
காலனித்துவ கால இலங்கையில் மலையக மக்களின் இழிவான நிலை கண்டு கொள்ளாது  விடப்பட்ட போதும் சுதந்திரத்திற்கு பின்னரான கால இலங்கையிலும் கூட மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் கவனிப்பாரற்ற நிலையிலே காணப்படுகின்றனர். இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொடங்கி இன்று வரை ஏதோ ஒரு விதத்தில் அடக்கப்படுபவர்களாகவும் – கண்டுகொள்ளப்படாதவர்களாகவும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களாக உள்ள தமிழர்கள் காணப்படுகின்றனர். சுதந்திரத்திற்கு பின்னரான கால இலங்கையில்  தீர்வு திட்டங்கள் தருவதாக கூறி உருவாக்கப்பட்ட அத்தனை அரசியல் திருத்தங்களின் ஊடாகவும் – சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையில் நடைபெற்ற அத்தனை தமிழ் –  சிங்கள இனக் கலவரங்களின் போதும் பெரும் பாதிப்பை சந்தித்த ஒரு இனமாக மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் காணப்படுகின்றனர். சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில் மிகப்பெரிய வலிமை உடைய மக்கள் கூட்டத்தினராக காணப்பட்ட மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் திட்டமிட்ட வகையில் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டனர். இது மிகப்பெரிய ஒரு நீட்சியான கதை.
1931 ஆம் ஆண்டின் உள்ளுராட்சி தேர்தல் திருத்த சட்டம்.
1948 ஆம் ஆண்டின் குடியுரிமை பறிப்பு சட்டம்.
.1949 ஆம் ஆண்டின் இந்திய- பாகிஸ்தானிய குடியுரிமை சட்டம்.
1956 ஆம் ஆண்டின் அரச கரும மொழிகள் சட்டம்.
1958 ஆம் ஆண்டின் பேரின வாத வன்முறை தாக்குதல்கள்.
1964 ஆம் ஆண்டின் சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தம்.
1971 ஆம் ஆண்டின் காணி சீர்திருத்த சட்டம்.
1972 ஆம் ஆண்டின் முதலாம் குடியரசு யாப்பில் சோல்பரி யாப்பின் 29 ஆம் பிரிவை நீக்கிய ஏற்பாடு.
1972 ஆம் ஆண்டின் காணி சீர்திருத்த திருத்த சட்டம்.
1974 ஆம் ஆண்டின் சிறிமா – இந்திரா உடன்படிக்கை.
1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பு.
1978 ஆம் ஆண்டு வன்முறை தாக்குதல்கள்.
1979 ஆம்ஆண்டு வன்முறை தாக்குதல்கள்.
1980 ஆம் ஆண்டு வன்முறை தாக்குதல்கள்.
1981 ஆம் ஆண்டு வன்முறை தாக்குதல்கள்.
1983 ஆம்ஆண்டு கறுப்பு ஜீலை இன வன்முறை தாக்குதல்கள்.
1984 ஆம் ஆண்டு இரத்தினபுரி தமிழர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள்.
1986 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் இன வன்முறை தாக்குதல்கள் (தலவாக்கலை)
1994 ஆம் ஆண்டு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் உருவாக்கம்.
என தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற அத்தனை மாற்றங்களாலும் பாதிக்கப்பட்ட ஒரு கூட்டத்தினராக மலையகத் தோட்டத் தொழிலாளர்களை குறிப்பிடலாம்.
பழிவாங்கப்பட்ட இலங்கை தோட்டத்தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினர்
இலங்கையில் கணிசமான அளவிற்கு சிங்களவர்களும் கூட  தோட்டங்கள் உருவான  ஆரம்ப காலங்களில் தோட்டத் தொழிலாளர்களாக காணப்பட்டனர். ஆனால் இன்று சிங்களவர்கள் யாருமே தோட்டத் தொழிலாளர்களாக இல்லை. அவர்கள் அனைவருக்கும் அடுத்தடுத்த ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமும் தங்களுடைய ஆதரவு நிலைப்பாட்டை பொறுத்து மலையகப் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்த சிங்களவர்களை காணி உரிமையாளர்களாக மாற்றியது. சிங்களவர்களை காணி உரிமையாளர்களாக மாற்றிய இதே அரசாங்கங்கள் மலையகத் தமிழர்களை அரசியல் அனாதைகளாக விட்டுவிட்டனர்.
இந்த அரசாங்கங்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை வளர்த்தெடுப்பதாக கூறிக்கொண்ட மலையக கட்சிகள் இன்று வரை அந்த மக்கள் சார்ந்த எந்த முன்னேற்றத்தையும் வழங்கவில்லை. மாறாக அந்தக் கட்சிகளின் ஆட்சி முறை தென்னிந்தியாவில் நடப்பது போல குடும்ப ஆட்சியாக மாறியதுடன் – மலையக அரசியல்வாதிகளின் பிள்ளைகள் வெளிநாடுகளில் ஆடம்பரமான பாடசாலைகளில் படிக்க இவர்களை நம்பி ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கக்கூடிய மலையக மக்களின் பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலைகள் இல்லாத தாய்மொழி பாடசாலைகளின் அரவணைப்பில்லாது லயங்களை அண்மித்துள்ள சிங்கள பாடசாலைகளிலும் –  முஸ்லீம்  பாடசாலைகளிலும் கல்வி கற்க ஒதுங்குகின்ற துர்ப்பாக்கிய நிலை பல இடங்களில் இன்று வரை நீடிக்கின்றது.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் மட்டுமே வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றும் போக்கே நீடிக்கின்றது.
மலையக மக்கள் மத்தியில் தொடரும் அடிமைமுறைகள்.
அண்மைய தரவுகளின் படி மலையக மக்களிடையே மந்த போசணை அதிகரித்துள்ளதாகவும் – மாணவர்களின் பாடசாலை வருகை வீதம் குறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது எல்லா துறைகளிலும் ஏதோ ஒரு வகையில் மலையக மக்கள் பின்தங்கிய ஒரு வாழ்வியலையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முறையான பாடசாலை வசதிகள் இல்லை – தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பற்றாக்குறை –  பாடசாலைகள் இருந்தாலும் பாடசாலையில் கற்பித்தல் கருவிகளின் குறைவு – விளையாட்டு மைதானங்கள் இன்மை – சமூக அபிவிருத்தி நிறுவனங்கள் இல்லை – முறையான பாதை வலையமைப்பு வசதிகளில்லை –  முறையான தொலைதொடர்பு வசதிகள் இன்மை – முறையான சுகாதார வசதிகள் இன்மை என இலங்கையின் ஏனைய இடங்களுக்கு சாதாரணமாக கிடைக்கக்கூடிய இந்த சலுகைகள் கூட மலையக தோட்டப்புறங்களில் கிடைப்பது எட்டாக்கனியாகியுள்ளது.
No photo description available.
அண்மையில் சமூக வலைதளங்களில் பெரிதாக ஒரு படம் பேசு பொருளாகியிருந்தது. ஒரு மாணவி கிழிந்த சப்பாத்து  அணிந்திருப்பது தான் அந்த படம். இலங்கையில் இலவச கல்வி என ஒரு பக்கம் இலங்கையின் கல்விமான்கள் மார் தட்டி கொண்டாலும் கூட அந்த இலவசக் கல்வி  கூட மலைகள் சிறுவர்களை சென்றடைவதற்கு பல தடைகள் இன்று வரை காணப்படுகின்றன.  பாதை வசதிகள் முறையாக இல்லாததால் பல கிலோமீட்டர் நடந்தே பாடசாலைக்குச் செல்லும் துர்பாக்கிய நிலை இன்றும் மலையகத்தில் உள்ளன. ஒரு அவசரநிலையில் மருத்துவ சாலைகளுக்கு செல்வது கூட இந்த பாதை வசதிகள் இன்மையால் தடைப்பட்டு விடுகின்றது.
இப்படியான ஒரு நிலையிலேயே அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறிய ஒரு அறிவிப்பு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகிறது. அதாவது மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து இருநூறு ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் அதனை ஒரு விழாவாக கொண்டாடும்படி ஜனாதிபதி அறிவித்திருந்தார். இன்று வரை அந்த மக்களின் வாழ்க்கை தரம் இலங்கையின் ஏனைய பகுதி மக்களோடு ஒப்பிடும்போது மிகப் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான உத்தரவை வழங்காது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு விழாவை கொண்டாடும் படி கூறுவதும் – அதனை மலையக அரசியல்வாதிகள் பெருமையான விடயமாக  அதைகாவிச்சென்று மக்கள் மத்தியில் கூறுவதும் – விழா எடுப்பதும் –  அந்த மக்கள் எத்தனை தூரம் ஏமாற்றப்படுகிறார்கள் அல்லது வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதற்கு மிகச் சிறப்பான எடுத்துக்காட்டு.
Jeevan Thondaman steps down - Breaking News | Daily Mirror
கோட்டபாய அரசாங்கம் ஆட்சி அமைத்த போது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கும் என்ற மிகப்பெரிய ஒரு வாக்குறுதியை வழங்கியிருந்தனர். கோட்டபாய ராஜபச்கவுடன் இணைந்து செயற்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்னும் சில தினங்களில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படும் என உறுதியளித்தே  மக்களிடமிருந்து பாராளுமன்ற தேர்தலின் போது வாக்குகளைப் பெற்றுக் கொண்டனர். புதிய பாராளுமன்றம் பதவியேற்று மூன்று வருடங்கள் ஆகின்ற போதிலும் கூட இன்று வரை அந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த சம்பளம் கிடைக்கவில்லை. இதே நிலைதான் சுதந்திரம் அடைந்த இலங்கையில் இருந்து இன்று வரை நீடிக்கின்றது.
இலங்கையின் பல துறைகளிலும் வேலை செய்யக்கூடிய எல்லா தொழிலாளர்களுக்கும் நாள் சம்பளம் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமே. அண்மையில் கூட ஆசிரியர்கள் சம்பளம் அதிகரிப்பு கோரி போராட்டங்களை மேற்கொண்ட போது அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது. இவ்வாறெல்லாம் இருக்கும்போது மலையகத் தோட்ட தொழிலாளர்கள் கேட்கக்கூடிய ஆயிரம் ரூபாய் சம்பளத்தை கொடுப்பது அரசாங்கத்துக்கு என்ன சிக்கல் இருக்க போகிறது..? இந்த வருட சுதந்திர தினத்திற்காக மட்டுமே 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருட பட்ஜெட்டிலும் சண்டையே நடக்காதுள்ள  இலங்கையில் பாதுகாப்புக்கு என பல மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படுகிறது. இவை அனைத்தும் வீணான செலவுகளே. இவற்றைக் கொண்டு மலையக மக்களின் வாழ்வாதாரத்தை அரசாங்கம் பல்வேறு பட்ட வழிகளிலும் மேம்படுத்த முடியும். ஆனால் அரசாங்கம் செய்யாது.
மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கொடுப்பதில் இருக்கக்கூடிய – கொடுக்காமல் இருப்பதற்கு பின்னணியில் இருக்கக்கூடிய அரசியலை சற்று ஆழமாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.;
இதற்குப் பின்னால் உள்ள அரசியல் மிகப்பெரியது. மலையகத் தோட்டங்களில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் பட்சத்தில் மலையக தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஒரு குடும்பத்தில் இருவர் ( பெரும்பாலும் கணவன் –  மனைவி) தோட்டங்களில் வேலை செய்தால் குறித்த குடும்பத்துக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கிடைக்கும். அறுபதாயிரம் ரூபாய் சம்பளமாக அவர்களுக்கு மாதாந்தம்  கிடைக்குமாயின் அவர்களும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களைப் போல சாதாரணமான ஒரு வாழ்க்கையை அவர்களால் வாழ முடியும். தங்களுடைய பிள்ளைகளுக்கு நிறைவான கல்வியை அவர்களால் கொடுக்க முடியும். தங்களுக்கான வீட்டு தேவைகளை யாருடைய துணையுமின்றி அவர்களால் என்ன நிறைவேற்றிக் கொள்ள முடியும். பிள்ளைகளை நன்றாக கல்வி கல்வி கற்க வைப்பதன் மூலம் கல்வி கற்ற பரம்பரை ஒன்றை உருவாக்கி – அவர்களை அரச பணிகளில் அமர வைக்க முடியும். கல்வி கற்றவர்கள் மலையகப் பகுதிகளை கைவிட்டு வேறு பகுதிகளுக்கு சென்று தொழில் தேட ஆரம்பிப்பர். கல்வி கற்ற தலைமுறை ஒன்று உருவாக ஆரம்பித்து விட்டால் இயல்பாகவே  அந்த மக்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் தோட்டங்களை விட்டு விலகி விடுவர். அதன்பின் தோட்டங்களில் வேலை செய்வதற்கு இவர்கள் எதிர்பார்ப்பது போல கொத்தடிமைகள் இல்லாது போய்விடுவார்கள். இதனை தடுப்பதற்காகவே இந்த அரசாங்கமும் – அவர்களோடு இணைந்துள்ள மலையக அரசியல் தலைவர்களும் பல தசாப்தங்களாக  மலையக மக்களின் உரிமைகளை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கும் வரை மட்டுமே இந்த அரசியல்வாதிகளால் அரசியல் செய்ய முடியும். இந்த ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பிரச்சனையை தீர்த்து வைத்து விட்டால்..? மலையக அரசியல்வாதிகள் எதை வைத்து அரசியல் செய்வது..?
இதுதான் மலையக மக்களுக்கான சம்பளம் அதிகரிப்பு இன்றுவரை தடைப்பட்டு நிற்பதற்கான முக்கியமான காரணம்.
மலையக மக்கள் இன்று வரை எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான தீர்வு என்ன என கேட்டால்..?
மக்கள் அரசியல் மயப்படுத்தப்படுதல் வேண்டும். மக்கள் அரசியல் மயப்படுத்தப்படாத வரை இந்த ஏமாற்று அரசியல் தலைமைகள் அரசியல் என்ற பெயரில் உழைத்துக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். மலையகத்தில் இயங்கி வரக்கூடிய சமூக மட்ட அமைப்புகள் முதலில் மக்களை அரசியல் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாளாந்த உணவுக்கே பெரும் பாடாக இருக்கின்ற நிலையில் நாட்கூலிகள் ஆகவே வாழ்ந்து பழக்கப்பட்ட மக்களை அரசியல் மயப்படுத்துவது மிக கடினமான ஒரு செயலாக இருந்தாலும் இதனை மலையகத்தில் உள்ள புத்திஜீவிகள் செயல்படுத்த முன்வருதல் வேண்டும். இங்கு அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை. இங்கு நாம் உண்ணக்கூடிய உணவில் இருந்து இரவு தூக்கம் வரையான அனைத்து விடயங்களையும் தீர்மானிப்பது இந்த அரசியலே. எனவே மக்கள் அரசியல் மயப்படுத்தப்படுவது இன்றியமையாது ஒன்றாக உள்ளது. மக்கள் அரசியல்மயப்படுத்தப்படும் போதுதான் தம் இரத்தத்தை உறிஞ்சுவது அட்டைகளல்ல- தம்மால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்தலைவர்களே என்பதை புரிந்து கொள்வார்கள். மலையகத்தில் ஒவ்வொரு மழைக்காலங்களிலும் பாதைகள் காணாமல் போய்விடுகின்றன. அதில் பெரிய ஊழல் நடந்து கொண்டிருக்கிறன்றது. வெள்ளளைக்காரன் போட்ட பாதைகள் கூட இன்றுவரை தாக்குப்பிடிக்க மலையகத்தில் சுதந்திரத்துக்கு பின்பு தலைமையேற்றுக்கொண்ட அரசியல்வாதிகள் போட்ட பாதைகள் ஒர பெருமழையுடன் காணாமல் போய்விடுகின்ற நிலை நீடிக்கின்றது. இன்றைய அரசியல்வாதிகளும் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவர்களே.., ஆனால் அவர்கள் கார் – மாளிகைவீடு – பிள்ளைகளுக்கான வெளிநாட்டுக்கல்வி என வாழ பாவம் சாதாரண மக்கள் தமது பிள்ளைகளுக்கு  இன்றுவரை தேயிலை கொழுந்து பறிக்க பழக்கிக்கொணடிருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டுமாயின் மக்கள் அரசியல்மயப்படுத்துவது தான் மலையக மக்கள் சார்ந்த முன்னேற்றத்துக்கான முதல் படி,
கல்விகற்ற  பட்டதாரிகள் கணிசமான அளவுக்கு மலையகப் பகுதிகளில் உருவாகி விட்டார்கள். இருந்தாலும் பட்டதாரிகளால் மட்டுமே இயக்கப்படக்கூடிய சில அமைப்புகளே மலையகப் பகுதிகளில் இன்று வரை காணப்படுகின்றன. ஏனைய பட்டதாரிகள் தாம் படித்தோம் –  தாம் கல்வி கற்றோம் –  ஒரு அரச வேலையை பெற்றுக் கொண்டோம் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு தங்களுடைய வாழ்க்கையை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சமூகம் சார்ந்த செயல்பட முன் வருதல் வேண்டும். குறிப்பாக மலையக பகுதி மாணவர்களுக்கான அடிப்படைக் கல்வி தடைப்பட்டு போகின்ற ஒரு சூழல் காணப்படுகின்றது. எனவே இந்தப் பட்டதாரிகள் இணைந்து மாணவர்களுக்கான கல்வி அறிவை குறிப்பாக  வாசிப்பு பழக்கத்தையும் ஊக்குவிக்க வருதல் வேண்டும். மலையக மக்கள் இன்றுவரை எதிர்கொள்ளக்கூடிய முக்கிய பிரச்சினைகளுக்கு காரணம் இந்த பட்டதாரிகள் பலரின் சுயநல மனப்பாங்கு. பெரும்பாலான மலையகமக்கள் லயப்புற வாழ்க்கைக்கே பழக்கப்பட்டவர்கள். ஆனால் பட்டதாரிகள் பலரும் ஏனைய மக்களை காட்டிலும்  அறிவுநிலையில் மேம்பட்டவர்களாகவும் – தோட்டப்புற வாழ்க்கைக்கு வெளியேயுள்ள சமூகத்தை அறிந்து கொண்டவர்களாகவும் காணப்பட்டாலும் கூட பல பட்டதாரிகளின் சுயநல மனப்பாங்கினால் தம்சார்ந்த முன்னேற்றத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு சமூக முன்னேற்றத்தை மறந்துவிடுகின்றனர். கல்வி கற்ற பட்டதாரிகளுக்கு இருக்கக்கூடிய சமூகப்பொறுப்பு தொடர்பில் மலையக பட்டதாரிகள் விழிப்பாக இருக்கவேண்டும். புரட்சியாளர்  சேகுவேரா “கல்வியே புரட்சிக்கான அடிப்படை ” என கூறுகிறார். எனவே அந்த பொறுப்பை பட்டதாரிகள் எடுத்துக்கொள்ள வுண்டியது காலத்தின் கட்டாயம்.
ஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சனைக்கான  தீர்வுக்கான போராட்டங்களை தொழிற்சங்கங்கள் இதயசுத்தியுடன் முன்னெடுக்க வேண்டும். தொழிற்சங்கங்களும் அரசியல்வாதிகளுடன் இணைந்து மக்களை ஏமாற்றி வருகின்ற செயற்பாடுகளே  பல தசாப்தங்களாக நிகழ்ந்து வருகின்றன. எனவே  தொழிற்சங்கங்கள் தொடர்பிலும் தொழிற்சங்க அங்கத்தவர்கள் தெரிவு தொடர்பிலும்  மலையகத் தோட்ட தொழிலாளர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தமக்கான தலைவர்களை அடையாளம் காணக்கூடிய – உருவாக்ககூடிய ஒரு களமாக தொழிற்சங்கங்களை மலையக மக்கள்பயன்படுத்த வேண்டும்.
அரசாங்கம் மலையகத் தோட்டத் தொழிலாளர்களையும் தேசிய இனமாக கருதி அவர்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை வழங்க முன் வருதல் வேண்டும். மக்களுக்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய உண்மையான அரசியல் தலைமைகளை மக்கள் உருவாக்க வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிகளை நம்பி மதி மயங்காது தெளிவான தலைமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்ற விழிப்புணர்வை மலையகப் பகுதிகளில் செயற்பட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களிடையே தொடர்ச்சியாக மேற்கொள்ளுதல் வேண்டும்.  அதுவே முறையான மாற்றத்துக்கான அடிப்படையாகவும் அமையும்.
இவ்வாறாக ஒரு நீண்ட கால செயற்றிட்டங்களின் அடிப்படையில் மட்டுமே மலையகத்தை மீட்டெடுக்க முடியும்.
“ஆளும் வர்க்கம் எப்போதும் மலையக மக்களை அடிமைப்படுத்தப்பட்டவர்களாகவே அடக்குமுறைக்குள் வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இன்று மலையகத்தில் உருவாகியுள்ள கல்வி கற்ற மக்கள் கூட்டம் – புத்திஜீவிகளை உள்ளடக்கிய குழுக்கள் என அனைவரும் இணைந்து செயல்பட்டு மலையகத்தை முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாத வரை 400 ஆண்டுகள் கடந்தாலும் இந்த நிலை மாறப்போவதில்லை என்பதே நிதர்சனம்.”
“ஏனெனில் அரசியல்வாதிகளும் ஏமாற்றி பழகி விட்டார்கள் – மக்களும் அவர்களின் வார்த்தைகளுக்கு ஏமாற பழகிவிட்டார்கள்.”