ரஷ்யா

ரஷ்யா

பாலஸ்தீன் மீதான போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் பிரேரணை ஐ.நா பாதுகாப்பு அவையால் நிராகரிப்பு!

இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் தொடர்ந்து 11 ஆவது நாளாக நடந்து வருகிறது.

 

இதற்கிடையே, போர் நிறுத்தம், பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் எனும் பிரேரணையை ஐ.நா. பாதுகாப்பு அவையில் ரஷ்யா கொண்டு வந்தது.

 

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ரஷ்யாவின் வரைவு பிரேரணையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை நிராகரித்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு அவையில் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் உட்பட மொத்தம் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

 

இங்கு கொண்டுவரப்படும் ஒரு தீர்மானம் நிறைவேற 9 நாடுகளின் ஆதரவு தேவை. இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ரஷ்யா கொண்டு வந்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

 

ரஷ்யாவின் பிரேரணைக்கு ஆதரவாக சீனா, கபோன், மொசாம்பிக், ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. எதிராக இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய 4 நாடுகள் வாக்களித்தன. அல்பேனியா, பிரேசில், ஈக்வடார், கானா, மால்டா, ஸ்விட்சர்லாந்து ஆகிய 6 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதனால், இந்த பிரேரணை தோல்வி அடைந்தது.

 

முன்னதாக, இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் தொடர்பாக ரஷ்ய பிரேரணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, இதனை ஆதரிக்க முடியாது. ஹமாஸ் அமைப்பின் செயலை கண்டிக்காததன் மூலம் அத்தகைய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அப்பாவி மக்களை கொன்றுள்ளது, கடத்திச் சென்றுள்ளது. இதில், அமெரிக்கக் குடும்பங்களும் உள்ளன. காஸா மக்கள் தற்போது சந்தித்து வரும் துயரங்களுக்குக் காரணம் ஹமாஸ்தான், என குறிப்பிட்டார்.

 

இதேபோல், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் தூதர்களும் ரஷ்ய பிரேரணைக்கு எதிராக தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

Silicon Vally Bank, Signature Bank, First Republic Bank, Credit Suisse, … அடுத்தது எந்த வங்கி? ஆனால் ரஷ்யாவின் எந்த வங்கியும் சிக்கலில் சிக்கவில்லை!!!

சிலிக்கன் வலி பாங்க், சிக்னேர்சர் பாங்க், பெஸ்ற் ரிபப்ளிக் பாங்க், கிரடிஸ் சுவிஸ் அடுத்தது எந்த வங்கி? ஆனால் ரஷ்யாவின் எந்த வங்கியும் சிக்கலில் சிக்கவில்லை!!!

வினை விதைத்தவன் வினையறுப்பான் என்பது போல் தற்போது வரிசையாக மேற்கு நாடுகளின் வங்கிகள் சரிந்து வீழ்கின்றது. இது வங்கிகளின் வீழ்ச்சி மட்டுமல்ல டொலர் நாணயத்தினதும் அமெரிக்காவினதும் வீழ்ச்சியை கட்டியம் கூறி நிற்கின்றன. முதலாளித்துவத்தின் முதகெலும்பாக இருக்கும் வங்கிகள் முறிந்து வீழ்வது முதலாளித்துவத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும். அமெரிக்கா எப்படியாவது ரஷ்யாவை இல்லாமல் பண்ணுவதற்கு பல்வேறு முயற்சிகளையும் எடுத்து, ரஷ்யாவின் எல்லை நாடுகளை நேட்டோவில் இணைத்துக்கொண்டது. அதன் தொடரச்சியாக உக்ரைனையும் நேட்டோவில் இணைக்க முயற்சித்ததை அடுத்து, ரஷ்யா தன் படைகளை உக்ரைனுக்கு அனுப்பி, ரஷ்யர்கள் வாழும் பகுதிகளைக் கைப்பற்றியது.

நீண்ட காலமாக ஈடாட்டத்தில் இருந்த கிரடிட் சுவிஸ் வங்கி (Credit Suisse) மார்ச் 19 வீழ்ந்து கொண்டிருக்கையில், அதனை அரச மயப்படுத்துவதா என்ற கேள்வி எழுந்த நிலையில், யுபிஎஸ் (UBS) வங்கி கிரடிட் சுவிஸ் வங்கியை இன்று $3.25 billionக்கு வாங்கியதன் மூலம் வீழ்ச்சி தற்போது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அதே சமயம் வங்கி வீழ்ச்சிக்கு சம்பந்தம் இல்லாமல் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியோபோல் பகுதிக்கு ரஷ்ய அதிபர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மார்ச் 18இல் ரஷ்ய அதிபருக்கு போர்க் குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் ‘முடிந்தால் புடுங்கிப் பாருங்கள்’ என்ற தோரணையில் விளாடிமீர் பூட்டின் உக்ரைனின் மரியப்போல் பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துவிட்டது என்று தங்கள் சரிந்து விழும் செல்வாக்கை தூக்கி நிறுத்த முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனும் போர் முழக்கம் இட்டு ‘பொங்கு நேட்டோ’ நடாத்தினர். உக்ரைனை தங்கள் ஆயத தளபாடங்களால் நிறைத்து ரஷ்யாவுக்கு பாடம் புகட்டி, தங்கள் செல்வாக்கை மீளக் கட்டியெழுப்பலாம் என நினைத்தனர். ஆனால் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மண் கவ்வினார். அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அவரைத் தொடர்ந்து ‘உக்ரைனுக்கு போய் போராடுங்கள்’ என்று அறிக்கை விட்ட லிஸ் ரஸ் பிரதமரானார். அவருடைய ஆட்சியும் 44 நாட்களில் கவிழ்ந்தது.

ரஷ்யாவை மண்டியிட வைக்க பொருளாதாரத் தடைகள், வங்கிப் பரிமாற்றங்களில் கட்டுப்பாடுகள், ஏனைய நாடுகளையும் ரஷ்யாவோடு வர்த்தகம் செய்ய தடை விதித்தனர், நிறுவனங்களையும் ரஷ்யாவில் இருந்து வெளியேற நிர்ப்பந்தித்தனர். ரஷ்யா இதுவரை இவையெல்லாவற்றையும் கொசுக்கடியென தட்டிவிட்டு நகர்ந்து கொண்டிருந்தது. ரஷ்யா உக்ரைனுக்குள் நுழைந்து சில வாரங்களுக்கு முன் ஓராண்டு ஆன நிலையில் ரஷ்யா குறிப்பிடத்தக்க அளவான பொருளாதார நெருக்கடிகள் எதற்கும் முகம்கொடுக்கவில்லை.

தங்களுக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்று செய்த பொருளாதாரத் தடைகள் மற்றும் திருகுதாளங்கள் எல்லாம் சொந்த செலவில் தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்த கதையாகியது. உக்ரைன் யுத்தத்தை நேட்டோ நாடுகள் நெய்யூற்றி ஆயதங்களை உக்ரைனில் குவித்து தூண்டிவிட, நேட்டோ நாடுகளில் எரிபொருள், உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலையேற்றம் ரொக்கற் வேகத்தில் உயர்ந்தது.

நேட்டோ நாடுகளில் மக்கள் விலையேற்றத்திற்கு எதிராகவும் சம்பள உயர்வு வேண்டியும் வீதிகளில் இறங்கிப் போராடினர். விலையேற்றம் எகிறிக்கொண்டு சென்ற போதும் மக்கள் வேலைக்குச் செல்லவோ மேலதிக வேலைகளைச் செய்யவோ விரும்பவில்லை. அதனால் நிறுவனங்களில் பணி செய்வதற்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இதனைச் சமாளிக்க மக்களுக்கு மேலும் மேலும் நெருக்கடிகளை வழங்கி அவர்களது உழைப்பைச் சுரண்டுவதற்காக தொடர்ந்தும் நேட்டோ நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டிவீதத்தை அதிகரித்தன. இதன் மூலமாவது மக்களை கூடுதலாக வேலை செய்ய நிர்ப்பந்தித்தனர்.

ஆனால் நேட்டோ தலைவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக வட்டிவீதம் அதிகரித்ததால் வங்கிகள் ஏற்கனவே முதலீடு செய்த இணைப்பு பத்திரங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. ஆயினும் அவர்களின் புதிய முதலீடுகளுக்கு கூடிய லாபம் இடைக்கும். மேலும் வங்களின் வரன்முறையற்ற குறுகிய லாபநோக்கம் மட்டும் கொண்ட ஆபத்தான வியாபாரச் செயற்பாடுகளாலும் சில வங்கிகள் கடுமையான ஆபத்தை எதிர்நோக்கின. மேலும் அமெரிக்காவின் பிற்கொயின் நிறுவனம் எப்ரிஎஸ் (FTS) திவாலானது போன்றவற்றால் சில வங்கிகளிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் வங்கிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே எப்போதும் மிக நெருக்கமான உறவும் இருந்து வருவதால் வங்கிகளின் ஊழல் வெளியே பெரும்பாலும் கொண்டு வரப்படுவதில்லை.

இந்தப் பின்னணயில் தான் மார்ச் 10, 2023 அன்று முதலாவதாக சிலிக்கன் வலி வங்கி திவாலானது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சிலிக்கன் வலி வங்கி ஏனைய வங்கிகளின் நிலையை வெளியுலகிற்குக் காட்டிக்கொடுத்தது. அமெரிக்காவும் அதன் நேட்டோ நாடுகளும் உடனடியாக அதன் ஆபத்தையுணர்ந்து 2008 லீமன் பிரதேர்ஸ், ரோயல் பாங்க் ஒப் ஸ்கொட்லன்ட்டுக்கு நடந்தது மீளவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தது. அமெரிக்கா டொலர்களை அச்சிட்டு வங்கிகளைக் காப்பாற்ற பில்லியன் கணக்கில் வங்கிகளுக்கு நிதியை வழங்கியது.

ரஷ்யாவை நொருக்குவோம் உக்ரைனில் இருந்து ரஷ்யாவை விரட்டுவோம் என்ற அமெரிக்க அரசின் ரீல்களை எல்லாம் நம்பிய அமெரிக்கர்கள், வங்கிகள் எல்லாம் ஸ்தீரமாக உள்ளது, வாடிக்கையாளரின் வைப்பீடுகள் பாதுகாக்கப்படும் என்பதை நம்பவில்லை. அமெரிக்க அரசை நம்ப மறுத்து வங்கிகளின் நடைமுறையில் நம்பிக்கையிழந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் வைப்பிட்டிருந்த நிதியை வெளியே எடுத்தனர். 2008இல் வங்கிகளில் நம்பிக்கையிழந்தவர்கள் வங்கிகளுக்கு முன் வரிசையில் நின்று தங்கள் பணத்தை பெற வேண்டியிருந்தது. தற்போது வாடிக்கையாளர்கள் இணைய வங்கி முறைமூலம் பட்டன்களை அழுத்தி தங்கள் பணத்தை மாற்றினர்.

வழமையாக வாடிக்கையாளர்கள் வைப்பிடும் தொகையை வங்கிகள் நிரந்த மூதலீடுகளுக்குப் பயன்படுத்திவிடுவார்கள். நாளாந்த வங்கி நடைமுறைக்கு மொத்த வைப்பீட்டில் 10 வீதம் மட்டுமே சுழற்சிக்கா வைத்திருப்பார்கள். வழமையாக வாடிக்கையாளர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் பணத்தை மீளெடுப்பதில்லை. ஆனால் வங்கி மீது நம்பிக்கையீனம் ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் எல்லோருமே பணத்தை அந்த விங்கியில் இருந்து மீளப்பெறவே முயற்சிப்பார்கள். சிலிக்கன் வலி வங்கி சிக்கலில் இருப்பதை சில முதலீட்டாளர்கள் மணந்து பிடித்ததும், அது சில மணி நேரங்களுக்குள்ளாகவே வங்கியின் நிதிக்கையிருப்பை வறளச் செய்தது. உடலுக்கு குருதிச் சுற்றோட்டம் எவ்வளவு முக்கியமோ வங்கிகளுக்கு பணச்சுற்றோட்டம் மிக மிக முக்கியம். பணத்தை வைப்பிட்டவர்கள், முதலிட்டவர்கள் தாங்கள் தேவைப்படும் போது பணத்தை மீளப்பெற முடியாவிட்டால் – வங்கியின் கையிருப்பில் பணம் இல்லாவிட்டால் அந்த வங்கி மரணத்தைச் சந்திக்கும். அதுவே சிலிக்கன் வலி வங்கிக்கு நிகழ்ந்தது.

இதுவொரு டொமினோ அபக்ற் (domio effect). மார்ச் 10இல் சிலிக்கன் விலி வீழ்ந்ததும், அடுத்து சிக்னேச்சர் பாங்க், அடுத்து பெஸ்ற் ரிபப்ளிக் பாங், நாளை காலை (மார்ச் 20) காலை பங்குச் சந்தைகள் திறப்பதற்கு முன் கிரடிட் சுவிஸ் பாங்கை பாதுகாக்க சுவிஸ் அரசும் நேட்டோ நாடுகளும் கடும் முயற்சியில் இறங்கியது. கிரடிட் சுவிஸை அரசுடமையாக்கி வைப்பீட்டாளர்களையும் முதலீட்டாளர்களையும் பாதுகாக்க வேண்டும், இல்லாவிட்டால் ஒட்டுமொத்த வங்கிகளின் எதிர்காலமும் கேளவிக்குறியாகும். ஆனால் வங்கி அரசுடமையாக்கப்பட்டால் அது முதலாளித்தவ பொருளாதாரத்திற்கு கொள்கை அடிப்படையில் வீழ்ந்த மிகப்பெரும் அடியாக இருந்திருக்கும். ஆனால் கிரடிட் சுவிஸ் வங்கியின் போட்டியாளரான யுபிஎஸ் (UBS) வங்கி கிரடிட் சுவிஸ் வங்கியை ($3.25 billion) வாங்கி வங்கிகளின் வீழ்ச்சியை சற்றுத் தள்ளிப் போட்டுள்ளது. யுபிஎஸ் – UBS, கிரடிட் சுவிஸை மட்டும் வாங்கவில்லை. கிரடிட் சுவிஸ் வங்கிக்கு கடந்த பல ஆண்டுகளாக இருந்த நெருக்கடியையும் சேர்த்தே வாங்கியுள்ளது. யுபிஎஸ் – UBS, கிரடிட் சுவிஸ்க்கு ஏற்பட்ட பிரச்சினையை மேவிவருமா அல்லது வந்த வெள்ளம் நின்ற வெள்ளத்தையும் கொண்டு போனது போல் ஆகுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்தது எந்த பாங்க் வீழ்ச்சியடையும் என்பது காலையில் எழும்போது தான் தெரியவரும். ஏற்கனவே குறிப்பிட்டது போல் முதலாளித்துவத்தின் முதுகெலும்பு வங்கிகள். வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கையிழந்தால் அவர்கள் காட்டாற்று வெள்ளம்போல் பாய்ந்து தங்கள் முதலீட்டை வைப்பீட்டை மீளப்பெறத் துடிப்பார்கள். வங்கிகளின் கையிருப்பு வறளும். வங்களின் குருதிச் சுற்றோட்டம் பணச் சுழற்சி. வங்கியில் பணம் இல்லாவிட்டால் எமக்கு ஒக்ஸிஜன் இல்லாத நிலைமை தான். அதற்காக பணத்தை அச்சடித்து வங்கிகளை நிரப்பினால் பணத்தின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடையும். டொலர் வீழ்ச்சியடையும். அதற்கும் அமெரிக்காவின் வீழ்ச்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. டொலரும் அமெரிக்காவும் ஒன்றுதான்.

கிழக்கு உக்ரைனில் இரு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை! திடீர் திருப்புமுனை!!!

இன்று யூன் 9, முன்னாள் பிரித்தானியா இராணுவ வீரர் ஒருவர் உட்பட பிரித்தானியர் இருவருக்கு ரஷ்ய ஆதரவோடு இயங்கும் டொனேஸ்க் படைகள் மரண தண்டனை விதித்துள்ளன. பிரித்தானியர்கள் இருவருக்கும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குமாக மூவருக்கு பயங்கரவாதிகள் எனக் குற்றம்சாட்டி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னதாகவே 2018இல் பிரித்தானியர்கள் இருவரும் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. பிரித்தானியாவில் இருந்து உக்ரைன் இராணுவத்தில் இணைந்த மற்றையவர் எய்டன் அஸ்லின், பெட்போர்ட்செயரைச் சார்ந்தவர். இவரும் மொரோக்கோ நாட்டு பின்னணியை உடையவர்.

மரியோபோலில் சரணடைந்த பல நூற்றுக்கணக்கான ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் இவர்கள் மூவரும் அடங்குகின்றனர். டொனேஸ்க் படைகள், சரணடைந்த உக்கிரைன் படைகளை சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய யுத்தக்கைதிகளாக நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரித்தானியர்கள் இருவரும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவரும் நாடுவிட்டு நாடுவந்த கூலிப்படைப் பயங்கரவாதிகள் என்றும் அவர்களுக்கு சர்வதேசச் சட்டங்கள் பொருந்தாது என்று குறிப்பிட்டுமே மரண தண்டனை அழிக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதற்கான காnணொலியும் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய சம்பவம் நடப்பதற்கு இருவாரங்களுக்கு முன் ரஷ்ய ராங்கர் படையைச் சேர்ந்த ஒருவர் தங்களால் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் அப்பாவி உக்ரைனியர்களைக் கொன்றதாக ஒப்புக்கொண்ட காணொலியை உக்ரைன் மற்றும் பிரித்தானிய நேட்டொ அணி நாடுகள் தொடர்ச்சியாக வெளியிட்டன. குறிப்பிட்ட ரஷ்ய படை வீரருக்கு எதிராக யுத்தக் குற்றங்கள் சுமத்தப்பட்டு அவர் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டு வந்தார். அதே பாணியில் பிரித்தானியாவுக்கு ஒரு பாடம் புகட்டுவதற்காகவும் யுத்தக்கைதிகளை பரிமாறுவதற்காகவும் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே நடக்கின்ற யுத்தத்தில் ஒரு நாளைக்கு 250 பேர் கொல்லப்படுவதாக மதிப்பிடப்படுகின்றது. பிரித்தானியாவில் இருந்தும் சில நூறுபேர்கள் உக்ரைன் இராணுவத்துடன் இணைந்துகொண்டுள்ளனர். யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லிஸ் ரஸ் உக்ரைன் இராணுவத்துடன் சென்று போராடும் பிரித்தானியர்களை ஊக்கப்படுத்தியும் வரவேற்றும் இருந்தார். உக்ரைன் இராணுவத்துடன் இணைந்துகொண்ட சில நூறு பிரித்தானியர்களில் இதுவரை 20 பிரித்தானியர் கொல்லப்பட்டு இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு பிரித்தானியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை பிரித்தானிய அரசை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஏற்கனவே பிரித்தானிய அரசு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாகின்றது. “பிரித்தானிய பிரஜைகளுக்கு ஏதாவது நடந்தால் …” என்றெல்லாம் தொனிகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் ரஷ்யாவுக்கோ “தலைக்கு மேலால் தண்ணி போய்விட்டது. இனி சான் ஏறினாள் என்ன முழம் ஏறியால் என்ன?” என்ற நிலையே. மேலும் ரஷ்யா ஒடிசா துறைமுகத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் தானிய ஏற்றுமதி முற்றாகத் தடைப்பட்டுள்ளது. தற்போது இவை இரண்டையும் ரஷ்யா தனக்கு சார்பாகப் பயன்படுத்தி யுத்தக் குற்றவாளிகளை பரிமாறுவது, ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை தளர்த்துவது போன்ற பேரம் பேசலுக்கு தயாராகலாம்.

பிரித்தானிய வீரர்கள் உட்பட தினமும் 250 படையினர் கொல்லப்படுகின்றனர்!! உக்ரெய்ன் இன்னுமொரு வன்னி!!!

பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் லிஸ் ரஸ், உக்ரெய்ன்னுக்கு சென்று யுத்தத்தில் ஈடுபடுபவதை தான் ஆதரிப்பதாக அறிவித்ததையடுத்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உக்ரெய்ன் யுத்தத்திற்குச் சென்றுள்ளனர். இவர்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தினமும் உக்ரெயினில் நடைபெறும் யுத்தத்தில் இரு தரப்பிலும் 250 படையினர் கொல்லப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் லிஸ் ரஸ், யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட சில தினங்களிலேயே இந்த அறிவிப்பை வெளிளிட்டார். இதுவரை மரணித்துள்ள 20 பிரித்தானியர்கள் பற்றி பிரித்தானிய பிரதமரோ அமைச்சர்களோ எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.

உக்ரெய்ன் யுத்தத்திற்குச் சென்றவர்களில் பிரித்தானிய இராணுவத்தில் பணிபுரிந்தவர்களும் அடங்குகின்றனர். ஆனால் இவர்கள் யாரும் பிரித்தானிய அரசு அனுமதியோடு சென்றதாகச் சொல்லப்படவில்லை. உக்ரெய்ன் யுத்தத்திற்குச் சென்று அங்குள்ள இராணுவச் செயற்பாடுகளால் விரக்தியடைந்து நாடு திரும்பிய இருவரை பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி இன்று மே 31 நேர்கண்டு ஒளிபரப்பி இருந்தது. இந்நேர்காணல்களைத் தொடர்த்து பிரித்தானிய தொலைக்காட்சி தனது செய்திகளில் உக்ரெய்ன் வெற்றிபெற்று வருவதாக கூறுவதை நேற்றைய தினம் மே 30 முதல் அடக்கி வாசிக்கின்றது.

உக்ரெய்ன் யுத்தத்தில் உக்ரெய்ன் இராணுவத்துடன் சேர்ந்து யுத்தம் புரியச் சென்ற 18 வயதேயான இளைஞர், தங்களுக்கு உறுதியளித்தது போல் எவ்வித ஆயதப் பயிற்சியும் வழங்கப்பட வில்லை என்றும் உக்ரெய்ன் இராணுவத்திடம் எவ்வித இராணுவ ஒழுங்கமைப்புகளும் இருக்கவில்லை என்றும் அடிப்படை பாதுகாப்பு அங்கிகளே தங்களுக்கு தரப்படவில்லை என்றும் தெரிவித்தார். தன்னையும் தன்னைப் போன்ற வேறுநாடுகளில் இருந்தும் இராணுவத்தில் சேர வந்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தின் மீது மறுநாள் ரொக்கற் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்த இளைஞன் தெரிவித்தார். இத்தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக உக்ரெய்ன் தெரிவித்து இருந்தபோதும் இதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றும் அதில் நூறுபேர்வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் அவ்விளைஞர் தெரிவித்தார்.

இதே போல் பிரித்தானிய இராணுவத்தில் பணியாற்றிய ஒருவரும் அங்குள்ள நிலைமைகளை கடுமையாக விமர்சித்ததுடன் அங்கு எவ்வித இராணுவ கட்டுப்பாட்டு விதிமுறைகளும் இல்லையென்றும் ஒழுங்கற்ற கும்பலாகவே அவர்கள் இயங்குவதாகவும் அவர்களுடைய தொலைபேசி உரையாடல்களை வைத்தே ரஷ்யா தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். அங்கு யுத்தத்தில் பயிற்சிபெற்ற அனுபவமிக்கவர்களை காணமுடியவில்லை என்றும் பெரும்பாலும் எவ்வித பயிற்சியுமற்ற இளைஞர்களும் ஆர்வத்தால் உந்தப்பட்டவர்களுமே களமுனைகளில் நிற்பதாகத் தெரிவித்தார். மேலும் முன்னைய இளைஞர் குறிப்பிட்டது போல் அடிப்படைப் பாதுகாப்பு அங்கிகள் மற்றும் உணவுக்கே தட்டுப்பாடு நிலவுவதாகவும் சாதாரண மக்கள் இராணுவ நிலைகளை தங்கள் செல்போன்களில் படமெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

நேற்று மே 30 முதல் பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி உக்ரெய்ன் யுத்தம் பற்றிய செய்திகளை வெளியிடுவதில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் பிற்பகுதியில் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இந்தியாவில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் கிழக்கு உக்ரெய்ன் ரஷ்யாவிடம் வீழ்ந்துவிடும் என்ற தொனியிலேயே குறிப்பிட்டு இருந்தார். உக்ரெய்ன் யுத்தத்தில் தோல்வியைத் தழுவலாம் என்றும் கோடிகாட்டி இருந்தார். ஆனால் நாடுதிரும்பியதும் மீண்டும் வீரமுழக்கங்களையே வெளியிட்டார்.

ஆனால் இப்போது உக்ரெய்ன் பற்றி பேசுவதற்கே நேரம் இல்லாத அளவுக்கு பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் குடியும் கும்மாளமும் கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. தான் வரைந்த அமைச்சரவை ஒழுக்கவிதிகள் தனக்கே ஆபத்தாகும் என்றதால் அவற்றை நேற்று மே 30 அழித்துவிட்டார். சூ கிரே இன் சுயாதீன விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து தற்போது பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கட்சியைச் சேர்ந்தவர்களே அவரை பதவி விலகும்படி கோரிக்கை வைக்கின்றனர். இலங்கை ஜனாதிபதி வீட்டிற்கு போவதற்கு முன்னரே பிரித்தானிய பிரதமர் வீட்டிற்குப் போக வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

யுத்தம் என்பது அழிவை ஏற்படுத்தும். யுத்தத்தால் எதனையும் சாதித்துவிட முடிவதில்லை. அமெரிக்கா வியட்நாமில் தொடுத்த யுத்தம், அமெரிக்கா அப்கானிஸ்தானில் தொடுத்த யுத்தம், அமெரிக்கா ஈராக்கில் தொடுத்த யுத்தம், அமெரிக்கா சிரியாவில் தொடுத்த யுத்தம், பிரித்தானியா லிபியாவில் தொடுத்த யுத்தம் இவை எல்லாமே அந்நாடுகளைச் சீரழித்தது மட்டுமல்லாமல் அங்கு யுத்தத்திற்கு வழங்கப்பட்ட ஆயதங்கள் அமெரிக்க, பிரித்தானிய படைகளுக்கு எதிராக திருப்பப்பட்டது மட்டுமல்லாமல் அங்கு பயிற்சி பெற்றவர்கள் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குள்ளளும் ஊடுருவி தாக்குதல்களை நடத்தினர்.

இப்போது ரஷ்யாவுக்கும் உக்ரெயினுக்கும் இடையேயான யுத்தம், படையெடுப்பிற்கு முன்னதாகவே ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையேயான யுத்தமாக மாற்றப்பட்டு விட்டது. பிரித்தானியாவில் இருந்து உக்ரெய்ன் இராணுவத்துடன் இணையச் சென்றவர்களின் தகவல்களின் படி நேட்டோ நாடுகள் வழங்கிய ஆயதங்கள் ஏதும் அவர்களைச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நேட்டோ நாடுகளில் உள்ள ஊடகங்களோ தினம் தினம் ஆயதங்கள் அனுப்பப்படுகிறது என்றும் அந்த ஆயதங்களைக் கொண்டு உக்ரெய்ன் ரஷ்ய இராணுவத்தை பின்னடையச் செய்வதாகவும் செய்திகள் வெளியிடுகின்றன. உக்ரெய்ன் ஜனாதிபதி ஸ்லென்ஸ்கி தாங்கள் கிழக்கு உக்ரெய்னின் மரியோபோலை மீண்டும் கைப்பற்றுவோம் என்று குறிப்பிட்ட சில தினங்களிலேயே மரியோபோல் இரும்புத் தொழிற்சாலையில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரெய்ன் இராணுவத்தினர் (இவர்களில் ஒரு பகுதியின் தீவிர வலதுசாரிகள் என்றும் கூறப்படுகின்றது) ரஷ்ய இராணுவத்திடம் சரணடைந்தனர்.

பிரித்தானிய மற்றும் நேட்டோ நாட்டு ஊடகங்கள் உசுப்பிவிட்டதேயல்லாமல் உக்ரெய்னின் நிலைமைகள் மோசமானதாகவே உள்ளது. பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் ஜனாதிபதி ஜோ பைடனும் உள்ளுர் அரசியலில் தங்களைத் தக்கவைக்க உசுப்பிவிட்டதில் உக்ரெய்ன் மிக மோசமான நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவில் இருந்து எரிவாயு, மற்றும் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதை முற்றாக தடை செய்வதாகக் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் இன்று அந்த முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளது. ஜேர்மன் உக்ரெய்ன் க்கு கனரக யுத்த தளபாடங்களை வழங்குவதாக கூறப்பட்டது. அதுவும் தற்போது கைவிடப்பட்டு உள்ளது. அமெரிக்க நெடுந்தூர ஏவகணைகளை வழங்கமாட்டோம் என தற்போது அறிவித்துள்ளது. உசுப்பிவிட்டவர்களை நம்பிய உக்ரெய்ன் இப்போது கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரிலும் இந்த நேட்டோ நாடுகளில் வாழ்ந்த புலம்பெயர்ந்த புலிகளின் பிரதிநிதிகள் மிகக் கச்சிதமாக தமிழீழ விடுதலைப் புலிகளை உசுப்பிவிட்டனர். இந்த உசுப்பலால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்பதால் அவர்கள் அதனை கச்சிதமாகச் செய்தனர். அங்குள்ள மக்கள் போரின் வலியை அனுபவிக்க வேண்டிவரும் என்று எண்ணம் பெரும்பாலும் வரவில்லை. 2009 ஜனவரியில் இருந்தே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து சரணடைவதே ஒரே வழியென்று தேசம்நெற் இல் பல கட்டுரைகள் வெளிவந்தது. மே 17 2009 வரை தமிழீழத்தை நாங்கள் நெருங்கிவிட்டோம் என்று தான் புலிசார் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஒரு சமயத்தில் கட்டுடைக் குளத்தை புலிகள் தகர்த்தால் அந்த வெள்ளத்தில் ஆயிரக் கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இராணுவத்தின் உடல்கள் இறக்கப்படுவதாகவும் செய்திகள் பரப்பப்பட்டது. இதே மாதிரியான செய்திகளை தற்போது பிரித்தானிய ஊடகங்களிலும் கேட்க முடிகின்றது, உக்ரெய்ன் பற்றி.

உக்ரெய்ன் மீது படையெடுப்பதற்கு ரஷ்யாவுக்கு எவ்வதி தார்மீக உரிமையும் கிடையாது. ஆனால் ரஷ்யா படையெடுத்தபின் அழிவை எப்படி குறைத்துக்கொள்ளளலாம் என்பது பற்றி சிந்தித்து செயற்படுவதே உக்ரெய்ன் மக்களுக்கு நன்மையளிக்கும். உசுப்பிவிட்டு தங்கள் தங்கள் நலனை எட்டுவது நேர்மையற்றது. தற்போது உக்ரெய்ன் மிக நீண்ட கால அழிவுக்குள் தள்ளப்பட்டு உள்ளது. உக்ரெய்னுக்குள் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் கொட்டும் ஆயதங்கள் பல்வேறு நாடுகளிலும் செயற்படும் சட்டவிரோதமான ஆயதக் குழக்களிடம் சென்றடையும். உக்ரெய்ன் ஆயதக் கருப்புச் சந்தையின் மையம். இவ்வாயுதங்கள் மீண்டும் தீவிரவாத சக்திகளால் நோட்டோ நாடுகளிலேயே தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுவே கடந்த காலங்களிலும் நடந்தது. இனிமேல் நடக்காது என்பதற்கு எவ்வித உத்தவவாதமும் இல்லை.

நேட்டோ நாடுகளால் குவிக்கப்படும் ஆயதங்கள் உக்ரெய்னில் ஆயுதக் கலாச்சாரம் ஒன்றைத் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறது. அங்கு எல்லோரும் விரும்பி ஆயதம் ஏந்தவில்லை. பதினெட்டு வயதிற்கும் நாற்பது வயதிற்கும் உட்பட்டவர்கள் தங்கள் பிரதேசங்களைவிட்டு வெளியேறத் தடைவிதிக்கப்பட்டு கட்டாய ஆட்சேர்ப்பிற்கு உட்படுத்தப்படுகின்றனர். நேட்டோ நாடுகளின் உந்துதலால் ஒரு சிறு பிரிவினர் தொடர்ந்தும் ரஷ்யாவுக்கு எதிரான யுத்தத்தை தொடர்வார்கள். ஆனால் இந்த யுத்தத்தை உக்ரெய்னால் நீண்ட காலத்திற்கு முன்னெடுக்க முடியாது. அதற்கான உள்ளுணர்வையும் ஆட்பலத்தையும் உக்ரெய்ன் இழந்து வருகின்றது.

அதேசமயம் ரஷ்யாவுக்கும் இதுவொரு சிக்கலான பலப்பரீட்சையே. ரஷ்யா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பிரதேசங்களை நேட்டோ உதவியோடு உக்ரைன் படைகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தும். இந்த யுத்தம் மிக நீண்ட யுத்தமாக மாறிவருகின்றது என்பதை உணர முடிகின்றது.

ரூபிளில் மட்டுமே எரிவாயுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் -ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவிப்பு

ரஷ்யாவால் உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயுவிற்காக அந்த நாடுகள் செலுத்தும் கட்டண தொகையை இனிமேல், ரஷ்ய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே கட்டணத்தை திரும்பச்செலுத்த வேண்டும். டொலர் அல்லது யூரோ போன்ற வெளிநாட்டு பணத்தை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தகூடாது என்று ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்தாவது,

எங்கள் எரிவாயு விநியோகத்திற்கான கட்டணத்தை மாற்றுவதற்கு சில நடவடிக்கைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளேன். அதன்படி, ரஷ்யாவிடம் தோழமை அல்லாத நாடுகள் தாங்கள் செலுத்தும் கட்டண தொகையை இனிமேல், ரஷ்ய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே
திரும்பச்செலுத்த வேண்டும். டொலர் அல்லது யூரோ போன்ற வெளிநாட்டு பணத்தை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தகூடாது. எனினும், ரஷ்யா தனது ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எரிவாயு அளவை தொடர்ந்து உலக நாடுகளுக்கு வழங்கும்.

புதிய கட்டண முறையை ஒரு வாரத்திற்குள் அமல்படுத்துமாறு ரஷ்யாவின் மத்திய வங்கியை கேட்டுகொள்கிறேன். இது வெளிப்படையாகவும் ரஷ்யாவின் உள்நாட்டு சந்தையில் ரூபிள் வாங்குவதை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்றார்.

உக்ரேன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அதன்மீது உலக நாடுகள் விதித்த சமீபத்திய பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டது உக்ரேன் மோதலின் தொடக்கத்தில் இருந்து சரிந்து வந்து ரஷ்ய பணமான ரூபிளின் மதிப்பு, இப்போது யூரோ மற்றும் டாலருக்கு எதிராக வலுப்பெற்றது.
புட்டின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், தனது சர்வதேச கூட்டாளிகள் விண்வெளி ஒப்பந்தம் தொடர்பான தொகையை இனி ரூபிளாக தான் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது.

ரூபிளை வலுப்படுத்தும் ரஷ்யாவின் முயற்சிகளை உக்ரைன் உடனடியாகக் கண்டனம் செய்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன், ரஷ்யாவோடு உடன்பாட்டை எட்டுவது அல்லது சரணடைவதே அறிவுபூர்வமானது!

பாறாங்கல்லை தலையால் அடித்து உடைப்பது ஒன்றும் கெட்டித்தனமான காரியம் அல்ல. அப்படிச் செய்ய நினைப்பது முட்டாள்தனமானது. இந்த முட்டாள் தனத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் செய்து அது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை நிரூபித்துச் சென்றனர். சாட்சிக் காரனின் காலில் வீழ்வதைக் காட்டிலும் சண்டைக்காரனின் காலில் வீழ்ந்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதே புத்திக் கூர்மையுடையவர்கள் செய்யக் கூடியது. இதில் நியாயம், நீதி, தர்மம் எல்லாம் எங்கட பக்கம் இருக்கு என்று கதை சொல்லிக் கொண்டிருக்கவும் கேட்கவும் நல்லாத்தான் இருக்கும் ஆனால் அதனால் எந்தப் பிரயோசனமும் கிடையாது.

நாங்கள் இந்த ஹோமோ சப்பிபயன்ஸ் சப்பியன்ஸ் கள், எங்களுடைய முதாதையர்களை கொன்றொழித்தே இன்றைய நிலைக்கு வந்துள்ளோம். சார்ள்ஸ் டாவினின் ‘தக்கன பிழைக்கும்’ என்ற விதி இன்றைக்கும் மிகப்பொருத்தமானதே. சார்ள்ஸ் டார்வின் நியாயம் பிழைக்கும், நீதி பிழைக்கும், தர்மம் பிழைக்கும் என்றெல்லாம் ரீல் விடவில்லை. ‘செர்வைவல் ஒப் தி பிற்றஸ்ற்’ என்று தான் சொல்லி இருக்கின்றார். அந்தந்தச் சூழலில் தன்னை தக்கவைத்து இனவிருத்தி செய்யக் கூடிய இனங்களே தங்களை தக்க வைத்துக்கொள்ளும் என்பதே கூர்ப்புக் கொள்கை. இதனையே ‘ஆலமரமும் நாணல் புல்லும்’ கதையில் சிறு வயதில் படித்துக்கொண்டோம். அது தமிழர்களுக்கும் பொருந்தும் உக்ரேனியர்களுக்கும் பொருந்தும்.

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின்னணிக்கு வருவதற்கு முன் ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பானது மிக மோசமானது. மிலேச்சத்தனமானது. அப்பாவி உக்ரைன் மக்களின் நாளாந்த வாழ்வியலைத் தலைகீழாகப் புரட்டிப்போடப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பும் யுத்தமும் மிகப் பாரிய மனித அவலத்திற்கு இட்டுச் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உக்ரைன் மக்களின் பக்கம் நீதி, நியாயம், தர்மம் எல்லாம் இருக்கின்றது. ஆனால் யுத்தம் தொடர்ந்தால் அவர்களைக் காப்பாற்ற எந்தக் கடவுளரும் வர மாட்டார்கள். உக்ரைனை உசுப்பி விடும் அமெரிக்கா – பிரித்தானியா உட்பட்ட நேட்டோ நாடுகளும் வரமாட்டார்கள். அவர்களால் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவையே நிறுத்த முடியவில்லை. தங்களுடைய எரிபொருள் தேவைக்கு ரஷ்யாவிலேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில் ‘அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது’ போலாகிவிட்டது உக்ரைனுக்கு. இது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நடக்கும் யுத்தம் அல்ல. இது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் நடக்கின்ற யுத்தம். அதற்கு உக்ரைன் களப்பலியாகி உள்ளது.

பெப்பரவரி; 21: ரஷ்யாவின் ஆட்சித் தலைவர் விளாடிமீர் பூட்டின் மேற்குலகின் பின்னணியில் இருக்கும் உக்ரைனின் கிழக்குப் பிராந்திய பிரதேசங்களான டொனேற்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிரதேசங்களை தனிநாடாக அங்கீகரித்தார்.

பெப்பரவரி 22 ரஷ்ய மக்களுக்கு ஆற்றிய ஒரு மணிநேர நீண்ட தொலைக்காட்சி உரையில் டொனேற்ஸ்க் மக்கள் குடியரசு லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றின் இறையான்மையை அங்கீகரிப்பதாக ரஷ்யத் தலைவர் அறிவிதார். அத்தோடு ரஷ்யாவுக்கு வெளியே நாட்டுப்படைகளை பயன்படுத்துவதற்கு ரஷ்ய பாராளுமன்றம் அங்கீகரித்தது.

பெப்ரவரி 23: உக்ரைன் நாடுதழுவிய அவசரகாலச் சட்டத்தை அறிவித்தது.

பெப்ரவரி 24: ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பித்தன. பெப்ரவரி 16 அன்று ரஷ்ய படைகள் உக்ரைனை ஆக்கிரமிக்கும் என மேற்கு நாட்டு உளவு ஸ்தாபனங்கள் கணிப்புகளை வெளியிட்டு இருந்தன.அதற்கு ஒரு வாரம் களித்து ரஷ்யா தனது தாக்குதலை ஆரம்பித்தது. இதனை ஒரு விசேட இராணுவ நடவடிக்கையாக ரஷ்யா அறிவித்தது. உக்ரைன் மீது படையெடுப்பு அல்லது ஆக்கிரமிப்பு என்ற பதங்கள் தற்போது ரஷ்யாவில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்ரை மீது படையெடுக்கும் என உக்ரைன் அரசோ உக்ரைன் மக்களோ எதிர்பார்க்கவில்லை. தங்களை மிரட்டுவதற்காகவே ரஷ்யா கடந்த எட்டு ஆண்டுகளாக தங்கள் எல்லைகளில் படைகளை குவித்து வருவதாகத் தெரிவித்து வந்தனர். ரஷ்யப் படைகள் உக்ரைனுள் நுழைவதற்கு சில தினங்கள் முன்பாகவும் உக்ரைனின் நாளாந்த வாழ்வு அவ்வளவு பதட்டத்துடன் காணப்படவில்லை. ஆனால் லண்டன், பாரிஸ், நியூயோர்க் நகரங்கள் மிகுந்த பதட்டத்துடனேயே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் இந்நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினைகளை சரிக்கட்டுவதற்கு அவர்களுக்கு உக்ரைன் மீது ரஷ்யப் படையெடுப்பு மிக வாய்ப்பானதாக அமைந்தது.

பிரித்தானிய பிரதமரின் வீட்டுக்கு வர்ணம் அடிக்க நிதியயை வழங்கியவருக்கு அரச ஒப்பந்தம் ஒன்று வழங்குவது பற்றியும் பேசப்பட்டு இருந்தது. அத்தோடு கோவிட் லொக் டவுன் காலத்தில் தனது உத்தியோக பூர்வ வாசஸ்தலமான நம்பர் ரென் டவுனிங் ஸ்ரீற்றில் 17 வரையான குடியும் கும்மாளமும் இடம்பெற்றிருந்தது. இதில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் கலந்துகொண்டிருந்தார். அதற்கு எதிரான விசாரணைகள் முடக்கி விடப்பட்டு பொறிஸ் ஜோன்சன் அம்பலப்பட்டு இருந்த சமயத்திலேயே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கப் போகின்றது என்ற துருப்புச் சீட்டை பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வீசி தன் இருப்பை தக்க வைத்துக்கொண்டார்.

அதே போல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனாலும் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியை அவரால் தக்க வைக்க முடியாத நிலையில் இருந்தார். பொருளாதாரப் பிரச்சினைகள் அதனைத் தொடர்ந்து அவருக்கான அதரவும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தது. மேலும் அடுத்த தேர்தலிலும் அவர் டொனால் ட்ரம்மை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சமும் அவருக்கு இருந்தது. வழமையாக உள்நாட்டில் தங்கள் செல்வாக்குகள் சரியும் போது அதனை நிமிர்த்துவதற்கு அமெரிக்க, பிரித்தானிய தலைவர்களுக்கு ஒரு யுத்தம் தேவைப்படும். இத்தடவை இவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் பூட்டின் நல்ல வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பு ரஷ்யாவுக்கு எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் ஜோ பைடனுக்கும் பொறிஸ் ஜோன்சனுக்கும் சுக்கிரன் உச்சத்தில்.

உலக இயக்கம் என்பது கள்ளன் – பொலிஸ் விளையாட்டுப் போன்று அவ்வளவு கருப்பு – வெள்ளை அளவுக்கு தெளிவான வேறுபாடுடையது அல்ல. இப்பொழுதெல்லாம் இந்த மேற்குலக ஆங்கில ஊடகங்களில் ரஷ்யாவை ‘பறையா ஸ்ரேற் – Pariah State’ என்ற அடைமொழியோடே அழைக்கின்றனர். ‘பறையா – Pariah’ என்பது தமிழில் இருந்து ஆங்கில மொழியால் தத்தெடுக்கப்பட்ட சொல். இந்தியாவில் தீண்டத்தகாதவர்களாகக் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு சாதியயைக் குறிக்கின்ற இச்சொல்லையே இவர்கள் தங்களுக்கு எதிரானவர்களை கேவலப்படுத்தும் நோக்கத்தோடு பயன்படுத்துகின்றனர். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் வெளியார் தீண்டத்தகாதோர் என்போரை குறிப்பிட்டு பயன்படுத்தப்படும் இச்சொல்லை தற்போது விளாடிமீர்பூட்டினுக்கும் ரஷ்ய அரசுக்கும் எதிராக மேற்குலகம் பிரச்சாரப்படுத்தி வருகின்றது. சாதியம் இன்னும் கொழுந்துவிட்டெரியும் தெற்காசியப் பிராந்தியத்தில் இவ்வாறான சாதிய அடைமொழிகள் குறிப்பிட்ட சமூகங்களின் மீதான அழுத்தங்களை இன்னும் பல ஆண்டுகளுக்கு மேலும் ஒடுக்குவதற்கே உதவியாக அமையும்.

இதுவரை யாரும் செய்யாத அநீதியை ரஷ்யா செய்துவிட்டது போன்று மேற்கு நாடுகளும் மேற்கு நாட்டு ஊடகங்களும் ஒப்பாரி வைக்கின்றன. உண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் முடிவுகளை மீறி தம் இஸ்டத்திற்கு எந்த நாட்டின் மீதும் படையெடுக்கலாம் எந்த நாட்டின் ஆட்சியையும் வீழ்த்தி தங்களுக்கு சாதகமான ஆட்சியை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தை உலகிற்கு வழங்கியதே அமெரிக்காவும் பிரித்தானியாவும் இவற்றினது ஜால்ரா கோஸ்டியும் தான். ஈராக், அப்கானிஸ்தான், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் இந்த மேற்கு நாடுகள் புரிந்த யுத்தக் குற்றங்கள் பல லட்சங்கள், கோடிகள். இவர்கள் தங்களது பிரச்சினை என்று வருகின்ற போது ஜனநாயகம் பற்றியோ மனித உரிமை பற்றியோ சுயாதீன ஊடகங்கள் பற்றியோ மூச்சுவிடுவதில்லை. ஈராக் யுத்தத்திற்கு எதிராக ஒரு மில்லியன் பிரித்தானியர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். மேற்குலக யுத்த வெறியர்களான ஜோர்ஜ் புஷ்சோ ரொனி பிளேயரோ அதற்கு செவிசாய்க்கவில்லை. இவர்களின் யுத்தக் குற்றங்களை அம்பலப்படுத்திய எட்வேர்ட் சுனோடன், யூலியன் அசான்ஜ் ஆகியோரை பிரித்தானியாவும் அமெரிக்காவும் அவர்களுக்கு மரணத்தை வழங்கத் துடித்துக்கொண்டுள்ளனர். எதற்காக? குவான்டனாமோ பேயிலும் ஈராக்கிலும் சிறைக்கைதிகளை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்திய தகவல்களை அம்பலப்படுத்தியதற்காக.

ஆனால் இப்போது எந்தவொரு ஜனநாயக நாடும் இன்னொரு நாட்டின் மீது படையெடுக்குமா? மனித உரிமைகள் மீறப்படுகின்றது யுத்தக் குற்றங்கள் நிகழ்கின்றது, ஊடக சுதந்திரம் இல்லை என்றெல்லாம் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் உக்ரேனியர்களின் கைகளில் ஆயதங்களைக் குவிக்கின்றனர். அதனை மேற்கு நாட்டு ஊடகங்கள் கொண்டாடுகின்றனர். சாதாரணர்களின் கைகளில் சக்தி வாய்ந்த ஆயதங்கள் வழங்கப்படுவதன் மூலம் இவ்வாயுதங்கள் தகாதவர்களின் காடையர்களின் கைகளையும் அடைந்துள்ளது. அங்கு களவு, கொள்ளை, தனிப்பட்ட பழிவாங்கல்களிலும் இவ்வாயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றது. இன்னும் சில வாரங்களில் உக்ரைன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் வாரி வழங்கப்பட்ட இந்த ஆயதங்களும் மேற்குலகம் அங்கு தொடர்ச்சியாக விநியோகிக்கும் ஆயதங்களும் உக்ரைனின் எதிர்காலத்தை இருளாக்கும் என்பது மட்டும் உறுதியாகி வருகின்றது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமான பிரச்சினை இவ்வாறு யுத்த மூலம் வன்முறையால் தீர்க்கப்பட முடியாதது. உக்ரைன் ரஷ்யாவோடு நல்லுறவாக இருந்த காலப்பகுதியில் மட்டுமே உக்ரைனால் பொருளாதார வளர்ச்சியை அடைய முடிந்தது. 50 மில்லியன் மக்களைக் கொண்ட உக்ரைனில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 50 வீதமாக உள்ளது. இளம்தலைமுறையினரால் முந்தைய தலைமுறையினரை பராமரிப்பதற்கான செலவை (வரியை) ஈட்ட முடியவில்லை. இளம் தலைமுறையினர் உக்ரைனை விட்டு வேகமாக வெளியேறி வருக்னிறனர். இவர்களது முதலாவது இலக்காக ரஷ்யாவே இருக்கின்றது. மேலும் உக்ரைனின் 17 வீதமானவர்கள் ரஷ்யர்கள்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பானது மிகத்தவறான அணுகுமுறையே. ஆனாலும் அந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மீது வைக்கின்ற எந்தவொரு அருகதையும் மேற்கு நாட்டு தலைமைகளுக்கு கிடையாது. இவர்கள் சர்வதேச ரீதியாக மேற்கொண்டு வரும் அடாவடித்தனங்கள் விளாடிமீர்பூட்டினது அடாவடித்தனங்களிலும் பார்க்க எவ்விதத்திலும் குறைந்தது அல்ல. உண்மையில் சொல்லப் போனால் மேற்கு நாட்டு தலைமைகள் மேற்கொள்ளும் அடாவடித்தனங்கள் அராஜகங்கள் விளாடிமீர்பூட்டினைக் காட்டிலும் மோசமானது. இந்த மேற்கு நாட்டு தலைமைகளின் பூரண ஆதரவுடனேயே இஸ்ரேல் பாலஸ்தீனர்களை வகைதொகையின்றி கொன்றொழிக்கின்றனர். சவுதிய அராபிய யேர்மன் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டை சின்னாபின்னாமாக்கி வருகின்றது. பர்மிய அரசு ரொஹிஞ்சா மக்களைக் கொன்றொழித்த போது இந்த மேற்கு நாட்டு அரசுகள் எல்லாம் பர்மிய அரசோடு வியாபாரத்தில் ஈடுபட்டுத்தானே இருந்தனர். இப்போது உக்ரைன் மீது தாக்குதல் நடப்பதற்கு முன்னமே இந்த நேட்டோ அணிகள் உரு வந்தது போல் ஜிங்கு ஜிங்கு என்று ஆடுகிறார்கள்.

சோழியன் குடுமி சும்மா ஆடுமா? 1949 இல் 12 நாடுகள்: அமெரிக்கா, பிரித்தானியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லண்ட், இத்தாலி, லக்ஸ்சம்பேர்க், நெதர்லாந், நோர்வே போரத்துக்கல் ஆகியன இணைந்து நேட்டோவை உருவாக்கின. 1997 இல் இந்த நேட்டோ விஸ்தரிப்பு ரஷ்யாவின் எல்லையை நெருங்கியது. ஹங்கேரி, செக் ரிபப்ளிக், போலந்த், பல்கேரியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவெனியா, ரொமேனியா, சுலொவேனியா, அல்பானியா, குரொவேசியா ஆகிய ரஷ்யாவின் எல்லை நாடுகள் அல்லது எல்லையை அண்மித்த நாடுகள் நேட்டோவோடு இணைக்கப்பட்டு நேட்டோ விஸ்தரிக்கப்பட்டது.

இந்நாடுகள் சுதந்திரமான இறைமையுள்ள நாடுகள் தான். தாங்கள் யாராடு இணையலாம் என்பதை தீர்மானிக்கும் உரிமை இந்நாடுகளுக்கு உள்ளது என்பது உண்மையே. அப்படியானால் அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் ரஷ்ய சார்பான கியூபாவில் ரஷ்யா ஏன் படைத்தளத்தை உருவாக்க முமயாது. ரஷ்யாவின் நட்பு நாடான லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுவெலாவில் ரஷ்யா ஏன் தனது இராணுவத்தளத்தை நிறுவ முடியாது. நேட்டோ அணிகள் அதனை அனுமதிக்கத் தயாரா. இந்த விடயத்தில் சீனா மிகத் தெளிவாக அறிவித்துள்ளது. பிராந்திய பாதுகாப்புப் பற்றிய ரஷ்யாவின் விசனத்தில் நியாயம் இருப்பதை சீனா வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளது. நேட்டோவின் பொருளாதாரத் தடைகளை தாங்கள் பின்பற்றப் போவதில்லை என்பதோடு ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளை சீனா வலுப்படுத்தி உள்ளது. இந்தியாவும் தாங்கள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

மேற்கு நாடுகளின் சர்வதேச ரவுடித்தனத்திற்கு ரஷ்ய – உக்ரைன் (நேட்டோ) மோதல் முடிவு கட்டும். இதுவரை சர்வதேச வர்த்தகம் டொலரிலேயே இடம்பெற்று வந்ததால் அமெரிக்கா யார் மீதும் பொருளாதார தடையைக் கொண்டுவந்து ஆட்டிப்படைக்கலாம் என நினைக்கின்றது. ஆனால் எதிர்காலத்தில் அதற்கு மாற்றீடாக சீனா தனது நாணயத்தை சர்வதேச வர்த்தகத்திற்கு பயன்படுத்த ஆரம்பிக்கும். அதன் முதல் எத்தனிப்பு ரஷ்யா – சீனா வர்த்தகமாக அமையும். BRICS – பிரிக்ஸ் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா நாடுகள் தங்கள் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதன் மூலமும் விஸ்தரிப்பதன் மூலமும் உலக சந்தையை இவர்களால் எதிர்காலத்தில் கட்டுப்படுத்த முடியும்.

இன்று மேற்கு நாட்டு நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவுடனான தங்கள் உறவை நான் முந்தி நீ முந்தி என்று துண்டித்து வருகின்றன. இதுவொன்றும் உக்ரைன் மக்கள் மீதான அனுதாபத்தில் கிடையாது. எங்கே தங்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு தங்கள் நிறுவனத்தின் பெயர் பாதிக்கப்பட்டால் பின் தங்களுடைய நிலைமை அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாகிவிடக்கூடாது என்ற ஒரு தற்காப்பு உத்தியே. புpரச்சினைகள் மெல்லத் தணிய கள்ளக் காதலியிடம் போவது போல் சத்தமில்லாமல் மீண்டும் போய் கடைவிரித்து விடுவார்கள். இந்நிறுவனங்களால் ரஷ்யாவுக்கு எவ்வளவு பெரிய நன்மைகள் கிடையாது. இந்நிறுவனங்கள் பெரும்பாலும் ரஷ்யாவின் நடுத்தர வர்க்கத்தை குஷிப்படுத்தும் பொருட்களையே விற்பனை செய்கின்றன. ஒரு வகையில் ரஷ்யாவின் செல்வத்தை இவர்கள் வெளியே கொண்டு செல்கின்றனர். ஆனால் இதற்கு மாற்றீடான பொருட்கள் ரஷ்யாவிலோ ஆசியாவிலோ உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் ரஷ்யா எரிவாயுவை பெற்றோலை நிறுத்தினால் நேட்டோ அணி நாடுகளில் அடுப்பு எரிப்பதே போராட்டமாகும். இதுவரை மின்சாரத்திற்கும் எரிவாயுவிற்கும் காலாண்டுக்கு 300 பவுண்கள் செலுத்தி வந்தனான் இப்போது மாதத்திற்கு 300 பவுண்கள் செலுத்த வேண்டியுள்ளது. ஈராண்டுகளுக்கு முன் பெற்றோலுக்கு லீற்றருக்கு ஒரு பவுண் செலுத்தியது இன்னும் சில மாதங்களில் லீற்றருக்கு இரு பவுண்களாகிவிடும் அபாயம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவில் ஏற்பட்ட வறட்சியால் கோதுமை விலையேறி பாணிண் விலையேறியது. உலகின் பாண் கூடையாக கருதப்படுவது ரஷ்யாவும் உக்ரைனும். இவர்களே 30 வீதமான கோதுமையை உலகிற்கு வழங்குகின்றனர். ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு அடுத்ததாக பெரிய நாடு உக்ரைன் அதுவும் இப்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
நேட்டோ அணிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் நாளை நெருங்கிக் கொண்டுள்ளனர். இன்றைய வரைக்கும் ஈரானோடும் வெனிசுவெலாவோடும் வம்பிளித்துக்கொண்டு இருந்தவர்கள் இப்பொழுது ஈரானிடமும் வெனிசுவெலாவிடமும் மடிப்பிச்சைக்கு போய் நிற்கப் போகின்றனர். பெற்றோல் பிச்சை.

மூக்குக்கு அணியும் மாக்ஸ், வைத்தியர்களுக்கான பாதுகாப்பு கவசம் இல்லாமல் தங்கள் சொந்த மக்களையே ஆயிரக்கணக்கில் மரணிக்க விட்டவர்கள் இன்றும் நூற்றுக்கணக்கில் மரணித்துக் கொண்டிருப்பதைப் பற்றி அக்கறையற்றவர்கள் லாபத்தை மட்டுமே சுவாசிக்க விரும்பும் இந்த முதலைகளின் நீலக்கண்ணீரில் மயங்காமல் உக்ரைன், ரஷ்யாவோடு உடன்பாட்டை எட்டுவது அல்லது சரணடைவதே அறிவுபூர்வமானது!

புதன் கிழமை ரஷ்யப் படையெடுப்பு ஒரு அமெரிக்க – பிரித்தானிய Sexed Up Intelligence செக்ஸ்டப் இன்ரலிஜன்ஸ்

எங்களுடைய சாத்திரிகளையும் மிஞ்சிய அமெரிக்க – பிரித்தானிய உளவுப் பிரவுகள் இன்று புதன் கிழமை பெப்ரவரி 16 சுக்கிரன் உக்ரைனில் நிற்கும் என்றும் சனி பகவான் ஏழு அரையின் உச்சத்திற்கு வரும் என்றும் அதனால் ரஷ்யா படையெடுக்கும் என்றும் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்திருந்தனர். அமெரிக்காவும் பிரித்தானியாவும் தங்களது படையணிகளை ரஷ்யாவை நோக்கி நகர்த்தி இருந்தனர். லண்டனிலும் நியூயோர்க்கிலும் இராஜதத்திரிகள் மத்தியில் ஒரே அல்லோல கல்லோலம். ஆமெரிக்க மற்றும் மேற்கு நாட்டு தூதரகங்கள் தங்களுடைய மக்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறும் யுத்தம் ஆரம்பித்தால் விசேட விமானங்களை அனுப்பியெல்லாம் காப்பாற்ற முடியாது என்று சர்வதேச பதட்டத்தையே ஏற்படுத்தி இருந்தன. மேற்கு நாட்டு ஊடகங்களில் யுத்தம் வெடிக்கப் போகின்றது, இதோ ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழையப் போகின்றன என்ற பாணியில் செய்திகளுக்கு தயாராக இருந்தனர்.

தாங்களும் ஒரு சமநிலையில் நின்று செய்திகளை வழங்குகின்றோம் என்பதைக் காட்ட மேற்கு ஊடகங்கள் ரஷ்ய உத்தியோகபூர்வ பிரதிநிதி ஒருவரையும் அழைத்து “நீங்கள் புதன் கிழமை உக்ரைனுக்கு படையெடுக்கப் போகின்றீர்களா? நேட்டோ படையணிகள் ஆயத தளபாடங்களை குவிப்பதால் பின் வாங்குவீர்களா?” என்று கேள்விகளைக் கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஷ்ய பிரதிநிதிகள், “நாங்கள் ஒரு போதும் படையெடுப்பது பற்றி பேசவே இல்லையே. இது அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் பிரச்சாரமே அல்லாமல் வேறொன்றுமில்லை” என்று பதிலளித்தனர். ரஷ்ய பிரதிநிதியின் கூற்றைப் பிரதிபலிப்பது போல் மேற்கு நாட்டு ஊடகங்களே உக்ரைனில் மக்கள் எந்தவொரு யுத்தப் பதட்டமும் இல்லாமல் வழமைபோல் தங்கள் நாளாந்த கடமைகளில் ஈடுபட்டு இருந்தனர் என்று செய்திகளை வெளியிடுகின்றன.

படையெடுப்பிற்கு தயாராகி விட்டதாக சொல்லப்பட்ட ரஷ்யாவிலும் பதட்டமில்லை. யுத்தம் நடந்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்த்த உக்ரைனிலும் பதட்டமில்லை. ஆனால் நியூயோர்க்கிலும் லண்டனிலும் மட்டும் பெரும் பதட்டம். அதிஸ்ரவசமாக பிரதமர் பொறிஸ் ஜோன்சனினதும் ஜனாதிபதி ஜோ பைடனதும் கதையைக் கேட்டு லண்டனில் மக்கள் ரோய்லற் ரோலை வாங்கிக் குவிக்கவோ அல்லது பெற்றோல் ராங்குகளை நிரப்பவோ முற்படவில்லை.

“சதாம் ஹூசைனிடம் பேரழிவு ஆயதங்கள் இருக்கின்றது. சதாம் ஒரு பட்டனைத் தட்டிவிட்டால் டமார் என்று லண்டனிலும் நியோர்க்கிலும் பேரிழவுக் குண்டுகள் வெடிக்கும் என்று 2003 இல் பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் ஒரு மெகா ரீல் விட்டார். அதன் விளைவால் ஈராக் யுத்தம் தொடங்கி 500,000 பேர் வரை கொல்லப்பட்டு இன்றும் யுத்தம் வேறு வடிவில் தொடர்கிறது. ஜோர்ஜ் புஸ்ஸிற்கு தன்னுடைய இருப்பை தக்க வைக்க ஒரு யுத்தம் தேவைப்பட்டது. அதற்கு ஜால்ராவும் சிஞ்சாவும் போட பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் ரெடியானார்.

அதற்குப் பின் டேவிட் கமரூன் லிபியாவுக்குள் மூக்கை நுழைத்தார், சிரியாவுக்குள் மூக்கை நுழைத்தார். அந்நாடுகளை சின்னா பின்னமாக்கி இப்போது உக்ரைனில் வந்து நிற்கின்றனர்.

தன்னுடைய வீட்டு சுவருக்கு பெயின்ற் அடித்த கணக்கில் இருந்து தப்பவும் கோவிட் காலத்தில் சனங்கள் சாக இங்கால் குடித்து கும்மாளம் அடித்த கதையை மறைக்கவும் உக்ரைனில் இரத்த ஆறு ஓட வேண்டும் என்று நினைக்கின்றார் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன். அவர் மட்டுமல்ல ஜோ பைடனுக்கும் ரேற்றிங் ரொம்ப படான்.

கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மேற்கு நாடுகளில் விலைவீக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 7.5 வீதம் விலைவாசி உயர்வு ஏற்பட்டு உள்ளது. பிரித்தானியாவில் இன்றைய கணிப்பின்படி 5.5 வீதம் விலைவாசி உயர்ந்துள்ளது. வரும் ஏப்ரலில் இது 7.5 வீதமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதனை ஈடுகட்டும் அளவுக்கு சம்பளங்கள் உயர்த்தப்படவில்லை. அது மட்டுமல்லாமல் சம்பளங்களை கூட்டிக் கேட்க வேண்டாம் என பாங்க் ஒப் இங்லன்ட் கவர்னர் அன்ரூ பெய்லி தொழிலாளர்களைக் கேட்டுள்ளார். அதிகரிக்கும் விவாசியோடு ஒப்பிட்டால் குடும்ப வருமானம் இரண்டு வீதத்தால் வீழ்ச்சி அடையும் என கணிக்கப்படுகின்றது. ஒரு பக்கம் விலைவாசி உயர்வு குறிப்பாக எரிபொருட்கள் ரொக்கட் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. மறுபக்கம் குடும்ப வருமானம் வீழ்ச்சியடைகின்றது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு வட்டிவீதத்தை அதிகரிக்கின்றது. வட்டிவீதம் அதிகரிக்கப்பட்டால் வீட்டுக்கு செலுத்தும் மோட்கேஜ் அதிகரிக்கும். வாடகைக்கு இருப்பவர்களின் வாடகை அதிகரிக்கும். மக்களின் கையிருப்பில் உள்ள பணம் வறண்டு போய்விடும். மக்கள் நெருக்கடிக்கு உள்ளானால் அது அரசுக்கு எதிராகத் திரும்பும். இந்த அபாயநிலை மேற்கில் ஏற்பட்டுள்ளது. அதனால் ஒரு யுத்தம் வந்தால் மக்களின் கவனத்தை திசை திருப்ப முடியும். அதற்கு மேற்குலகிற்கு ஒரு யுத்தம் அவசியமாகின்றது.

அமேரிக்காவும் அதன் நேச நாடுகளும் இன்றும் தாங்கள் உலகைக் கோலோச்ச முடியும் என்ற பழைய நினைப்பிலேயே செயற்பட்டு வருகின்றன. கோவிட் அவர்களை அம்மணமாக அம்பலப்படுத்தியதை கண்டுகொள்ளவேயில்லை. அவர்களுக்கான பாதுகாப்பு அங்கிகள் கூட சீனாவில் இருந்தும் ரஷ்யாவில் இருந்தும் தான் வந்தன. மேற்குநாடுகளின் விலைவாசி உயர்வுக்கு மாறாக சீனாவின் விலைவாசி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது. அவர்களது விலைவாசி உயர்வு தசம எண்ணிலேயே இருக்கின்றது. அது ஒன்றைக்கூட எட்டவில்லை. அதனால் சீனா மேற்கு நாடுகளுக்கு மாறாக வட்டி வீதத்தை குறைக்க உள்ளது. அந்நாடு கோவிட்டை மிகக் கவனமாகக் கட்டுப்படுத்தி இருப்பதுடன் கோவிட் மரணங்களை முற்றாக இல்லாமல் அல்லது ஒற்றை இலக்கத்துக்குள்ளேயே வைத்துள்ளது. பிரித்தானியாவில் இவ்வளவு வக்சீன் ஏற்றப்பட்டும் மரணங்கள் தினமும் 300 வரை செல்கின்றது. அமெரிகாவில் இதனிலும் அதிகம்.

ரஷ்யா ஒன்றும் பாலும் தேனும் ஓடும் நாடு கிடையாது. ரஷ்ய அதிபர் விளாடிமீர் பூட்டின் ஒன்றும் புனிதரும் அல்ல. ரஷ்யாவுக்கு உக்ரைனில் கண் இருப்பதும் மீண்டும் பரந்த சோவியத் குடியரசை கட்டமைக்கும் கனவு விளாடிமீர் பூட்டினுக்கு இல்லாமல் இல்லை. ஆனால் இதில் மேற்கு நாடுகள் குளிர்காய முற்படுகின்றனர் என்பது தான் உண்மை.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க போகின்றதாம்? அதை பைடனும் பொறிஸ்சும் தடுக்கப் போகிறார்களாம்? – முதலைக் கண்ணீர்!!!

கொரோனோ பெரும்பாலும் இந்த மேற்கு நாடுகளையெல்லாம் ஒரு உலுப்பு உலுப்பி விட நாளொன்றொக்கு இன்னமும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்துகொண்டிருப்பதே இன்றைய சாதாரண நிலையாக வந்துவிட்டது. அதனை சர்வ சாதாரணமாக கருதும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொரோனாவை சீனாவோடு தொடர்புபடுத்தி மக்களின் பழியையும் பாவத்தையும் சீனா மீது திருப்பிவிட்டுவிட்டு இப்போது கூடுதலாகப் பேசுவது உக்ரைன் பற்றி. அமெரிக்காவில் ஜனாதிபதி பைடனும் பிரித்தானியாவில் பிரதமர் பொறிஸ்சும் உள்ளுரில் பெரும் நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்க அவர்களுக்கு அவல் கிடைத்தது மாதிரி அமைந்தது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கப் போகின்றது என்ற கதையாடல்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கின்ற விவகாரம், ரஷ்யா கிரேமியாவைக் கைப்பற்றியது முதல் இருக்கின்ற ஒரு விசயம். இதனை ஏதோ ரஷ்யா இப்ப தான் படையெடுப்பிற்கு தயாராகின்றது என்று அமெரிக்க பிரித்தானிய ஊடகங்கள் ரீல் விடுகின்றன. இந்நாடுகளின் உளவுத்துறைகளுக்கும் இந்த ஏழு வருடங்களில் தெரியாததெல்லாம் அமெரிக்க ஜனாதிபதி மீதும் பிரித்தானிய பிரதமர் மீதும் நம்பிக்யையீனம் ஏற்பட்ட பின் தான் புதிய புதிய தகவல்கள் தெரிய வருகின்றதாம். இப்போது இவ்விரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் உள்ளுர் நெருக்கடியை சமாளிக்க உக்ரைனை பந்தாட முற்பட்டு உள்ளனர்.

பிரித்தானிய பிரதமர் தனது வீட்டை திருத்தம் செய்வதற்கு விதிமுறைகளுக்கு விலக்காக நிதியைப் பெற்றுக்கொண்டது, தானே முன்னின்று அமுல்படுத்திய லொக்டவுன் விதிகளை அவரும் அவரது சகாக்களும் அவருடைய உத்தியோகபூர்வ அலுவலகமான நம்பர் 10 டவுனிங் ஸ் ரீற்றில் ஒன்றல்ல இரண்டல்ல 18 முறை மீறியது அம்பலத்திற்கு வந்துள்ளது. இது ஆளும் கொன்சவேடிவ் கட்சிக்கு உள்ளேயே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் சிரேஸ்ட்ட அரசாங்க பணியாளர் சூ கிரேயின் அறிக்கையை மேலும் இழுத்தடித்து அதில் முக்கியமான விடயங்கள் எதுவும் இடம்பெறாமல் செய்யும் வகையில் ஸ்கொட்லன்ட் யாட் தாங்களும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் முக்கிய தகவல்களை ஆதாரங்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நம்பர் 10 டவுனிஸ் ஸ் ரீற் கார்டனில் நடந்த பார்ட்டிகளை நேரடியாக சிசிரிவி இல் அதே நேரத்தில் பார்த்துக் கொண்டிருந்த ஸ்கொன்லன்ட் யாட் உத்தியோகத்தர்கள் யாரும் இதுவரை எந்த விசாரணையையும் மேற்கொள்ளாமல் இருந்தனர். இப்போது உண்மைகள் வெளியே வரப்போகின்றது என்றதும் தங்களையும் ஆளும் குழுமத்தையும் காப்பாற்ற துரித நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை உட்பட்ட ஆசிய நாடுகளில் சட்டத்தை உருவாக்குபவர்கள், சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க வேண்டியவர்கள், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்கள் எல்லோரும் கூட்டாக இணைந்து ஊழலில் ஈடுபடுவது போன்ற ஒரு நிலையே இன்று ஜனநாயகத்தின் காவலர்களாக தங்களை அறிவிக்கும் பிரித்தானியாவில் நடைபெறுகின்றது.

இலங்கையில் ஜனாதிபதி சந்திரகா குமாரதுங்கா ஒரு இனவாதியாக இருக்கவில்லை. ஓராளவு லிபரலான தலைவராகவே இருந்தார். ஆனால் அவருடைய காலத்திலேயே நாட்டில் ஊழல்கள் அதிகரித்திருந்தது. அதற்கு அவருடைய தனிப்பட்ட பழக்கவழக்கங்களும் காரணமாக இருந்தது. இதே நிலையிலேயே பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் உள்ளார். இவரும் கொன்சவேடிவ் கட்சியாக இருந்தாலும் லிபரல் போக்குடையவர். ஆனால் தனிப்பட்ட முறையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு நேர்மையற்றவர். அரசியல் கொள்கையுடையவரும் அல்ல. மதில் மேல் புனையாக இருந்து எந்தப் பக்கம் சரிந்தால் தனக்கு அரசியல் ஆதாயம் வருமோ அப்பக்கம் சாய்பவர். ஜரோப்பாவில் இருந்து பிரித்தானியா பிரிய வேண்டும் என்ற அவரது முடிவும் அவ்வாறே எடுக்கப்பட்டது.

கோவிட் காலத்தில் அவருடைய விவேகமற்ற போக்குகளே பிரித்தானியா தனது சனத்தோகை விகிதாசாரத்தைக் காட்டிலும் பல்லாயிரக் கணக்காணோரை கோவிட்இல் பலிகொள்ளக் காரணம். மேலும் கோவிட் கால நெருக்கடிக்கு கடன் பெறப்பட்ட 200 பில்லியன் பவுண்களில் 10 வீதம் (20 பில்லியன் பவுண்கள்) லஞ்சம் மற்றும் ஊழலில் வீணடிக்கப்பட்டது. முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு அங்கிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களை தங்கள் ஆளும் குழுத்திற்குள் வழங்கி இந்த 20 பில்லியனை இந்த ஆளும் குழுமத்தை அண்டிப்பிழைப்பவர்கள் சுரட்டிக்கொண்டனர். இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் நடைபெறும் அதே மாதரியான லஞ்சம் ஊழல் பிரித்தினிய ஆட்சிபீடத்திலும் மிகச் சர்வசாதாரணமாக்கப்பட்டு உள்ளது.

20 பில்லியனை ஒரு காலாண்டில் ஏப்பம் விட்ட பொறிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசு வரும் ஏப்ரல் மாதம் முதல் சராசரி ஊதியமீட்டும் பல மில்லயன் கடும் உழைப்பாளர்களின் வரியை அதிகரித்து 12.5 பில்லியன் பவுணை அறவிடவுள்ளது.

இந்த நெருக்கடியில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள இன்னும் சில தினங்களில் பிரித்தானிய பிரதமர் உக்ரைன் சென்று போர்பறை முழங்க உள்ளார். கடந்த காலங்களில் அமெரிக்க – பிரித்தானிய கூட்டு மேற்கொண்ட யுத்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியே காரணமாக இருந்தது.

தற்போது கூட உக்ரைன் ஆட்சித் தலைவர் அமெரிக்க பிரித்தானிய நாடுகளின் போர் முழக்கத்தை தனக்கு விளங்கவில்லையென்றே தெரிவித்து வருகின்றார். ரஷ்யாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடுடைய அவர் ரஷ்யாவை வலிந்து யுத்ததிற்கு இழுக்க வேண்டாம் என்றே கேட்டுக்கொண்டுளார். ரஷ்யா உக்ரைன் நாட்டின் எல்லையோரமாகக் படைகளைக் குவிப்பது ஒன்றும் புதிதல்ல என்று குறிப்பிடும் அவர், ரஷ்யா தன் நாடுமீது உடனடியாகப் படையெடுக்கும் நிலையில்லை என்ற பாணியிலேயே நடந்துகொள்கின்றார்.

உக்ரைனில் அவ்வாறான ஒரு யுத்தப் பதட்டம் காணப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவும் தனது படையணிகளை உக்ரைனில் குவித்திருந்த போதும் இது கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஒரு விடயமே என்றும் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லையென்றுமே தெரிவித்து வருகின்றது. நேட்டோ தனது பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்படுவதனாலேயே தாங்கள் உக்ரைன் எல்லையில் படைகளைக் குவிப்பதாக ரஷ்யா தெரிவிக்கின்றது.

ஆனாலும் விளாடிமீர் பூட்டினுக்கு சோவியத் ரஷ்யாவை மீண்டும் கட்டியெழுப்பும் கனவு இல்லையென்று சொல்வதற்கில்லை. அதனை அவர் படைபலத்தின் மூலம் சாதிக்க முயற்சிக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் கலங்கிய குட்டையில் தங்கள் இருப்பைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் மீண்டும் கை கோர்த்துள்ளன. உக்ரைனில் ஆயதங்களை இவர்கள் குவிக்கின்றனர்.

ஆமை புகுந்த வீடு உருப்படுகிறதோ இல்லையோ அமெரிக்காவும் பிரித்தானியாவும் தலையிட்ட எந்த நாடும் உருப்படவில்லை. காலனித்துவ காலத்திற்குப் பின்னான நவகாலனித்துவ காலத்தில் அப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா என இவர்கள் தலையீடு செய்த நாடுகள் அத்தனையும் இவர்கள் தலையீடு செயவதற்கு முன்பிருந்த நிலையைக் காட்டிலும் மிக மிக மோசமான நிலைக்கே சென்றுள்ளன. அந்நாடுகளில் சாதாரண உயிர்வாழ்வே தற்போது மிக மோசமானதாக்கப்பட்டு உள்ளது.

இவ்விரு நாடுகளினதும் மிக நெருங்கிய நேசநாடான சவுதியரேபியாவின் மன்னன் துருக்கியில் உள்ள தங்கள் தூதராலயத்தில் வைத்து ஒரு ஊடகவியலாளனை கண்டதுண்டமாக வெட்டி படுகொலை செய்ததையே கண்டுகொள்ளாமல் தங்களை இன்னமும் மனித உரிமைக்காவலர்களாகக் காட்டிவருகின்றனர். சவுதியரேபியா, அமெரிக்க பிரித்தானிய ஆயதங்களைப் பயன்படுத்தி யேர்மன் நாட்டினை கடந்த சில ஆண்டுகளாகவே சின்னா பின்னமாக்கி வருகின்றது. அது பற்றி இந்நாடுகள் வாயே திறக்கவில்லை. இப்போது உக்ரைனை சின்னா பின்னமாக்க தயாராகிக் கொண்டுள்ளனர்.

இப்போது உலகின் பொருளாதார தொழில்நுட்ப படைப்பலச் சமநிலையில் பாரிய மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கையில் ஆண்ட பரம்பரைதான் ஆழ வேண்டும் என்ற திமிருடன் தொடர்ந்தும் இந்நாடுகள் உலகின் அமைதியைக் குலைத்து யுத்தத்தை உற்பத்தி செய்து வருகின்றனர். ரஷ்யாவுக்கு எதிராக இவ்வளவு துள்ளும் பிரித்தானியாவில் தான் ரஷ்யாவின் சட்ட விரோதப் பணத்தின் பெரும்பகுதி குவிந்துகிடக்கின்றது. அதைப் பற்றியும் பிரித்தானியா மௌனமாகவே உள்ளது.