ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தி

குறுகிய காலத்தில் 11 சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் – குற்றவாளிகள் யார்..?

நாடளாவிய ரீதியில் பதிவாகும் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறிய சம்பவங்கள் தொடர்பாக ஆராய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் புலனாய்வொன்றை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் பல பாகங்களில் இருந்து எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறும் சம்பவங்களைத் தொடர்ந்து உள்நாட்டில் தினசரி எரிவாயுவைப் பயன்படுத்தும் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற பல இடங்களை பட்டியலிட்ட பிரேமதாச, கடந்த 48 நாட்களில் 11 சம்பவங்கள் பதிவாகியுள்ள அதேவேளை, இந்த சம்பவங்கள் அசாதாரணமானது எனவும் குறிப்பிட்டார்.

அரசாங்கம் வீட்டு உபயோகத்திற்காக 18 லிட்டர் கலப்பின எரிவாயு உருளையை அறிமுகப்படுத்திய பின்னரே இந்த நிகழ்வுகள் தொடங்கியது என்றும் இது மக்களை ஏமாற்றி பாரிய இலாபத்தை ஈட்டும் அரசின் தந்திரம் என்றும் அவர் கூறினார்.

மேற்கூறிய விடயத்தில் முக்கிய விடயங்களில் ஒன்று வாயு கலவை மாற்றப்பட்டு எடை குறைக்கப்பட்டது எனவும் ஏனைய முக்கிய விடயம் எரிவாயு சிலிண்டர்களில் புரொப்பேன் மற்றும் பியூட்டேன் வீதங்கள் பூர்த்தி செய்யப்படாத நிலைக்கு மாற்றப்பட்டமை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

“யுத்தத்தின்போது இறந்தவர்களை நினைவுக்கூறுவதில் எந்த தவறும் இல்லை.” – எதிர்க்கட்சி

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதென்பது உலக நடைமுறை. அதில் எவ்வித தவறும் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே எதிரணியின் பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மட்டுமன்றி 2005 இல் வந்த அரசாங்கம், 2010 இல் வந்த அரசாங்கம் என அனைத்து அரசாங்கங்களும், சர்வதேசத்துடன் பகைமையையே வளர்த்துக் கொண்டன. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த 2012 முதல் 2015 வரையான காலப்பகுதியில் எமது நாட்டுக்கு எதிராக மூன்று பிரேரணைகள் ஐ.நா.வில் நினைவேற்றப்பட்டன.

2015 இல் அவர் ஜனாதிபதியாக இருந்திருந்தால், நாம் பொருளாதாரத் தடைக்கு முகம் கொடுத்திருப்போம். இதனால்தான் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே, அன்று ஜனாதிபதித் தேர்தலை வைத்தார். பின்னர் நாம் ஆட்சிக்கு வந்தவுடன், மஹிந்த ராஜபக்ஷவையும் காப்பாற்றிக் கொண்டே 4 அரை வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தோம். சர்வதேசத்துடனும் ஒன்றித்து பயணித்தோம்.

இன்று மீட்டும் இந்த அரசாங்கம் பழைய போக்கையை கடைப்பிடித்து வருகிறது. சர்வதேசம் இன்று மீண்டும் எமது நாடு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. இதில் பிரதானமாக நாட்டின் சிவில் நிர்வாகம் இராணுவத்தின் கைகளில் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பு சுயாதீனத்தன்மையை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 19 ஐ இல்லாதொழித்து 20 ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்தமையினால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கம் அக்கரைச் செலுத்துவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நாம் ஆட்சியில் இருந்தக் காலத்தில் தேசியக் கீதத்தைக்கூட தமிழில் இசைத்தோம். இதனாலேயே நாம் சர்வதேசத்தினால் பாராட்டப்பட்டோம். சிறுபான்மையினருக்கு எதிராக செயற்படும் ஒரு அரசாங்கத்திற்கு எந்தக் காரணம் கொண்டும் சர்வதேசத்தின் ஆதரவு கிடைக்காது என்பதை இந்த அரசாங்கம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அத்தோடு, ஊடக சுதந்திரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், யுத்தத்தின்போது இறந்தவர்களை நினைவுக்கூற தடை செய்யப்பட்டுள்ளமைக்கும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களாகும். இதற்கெல்லாம் அரசாங்கம் பதில் கூறியே ஆகவேண்டும்.

அதேநேரம் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பாகவும் சர்வதேசம் சில நிபந்தனைகளை விதித்துள்ளன. அவர்களின் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையாகவே காணப்படுகின்றன.

அரசாங்கத்தினால் இவற்றை நிறைவேற்ற முடியும். இதுதொடர்பாக அரசாங்கம் திருத்தங்களையேனும் கொண்டுவந்தால் நாம் முழுமையான ஆதரவினை வழங்குவோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

“ராஜபக்ஷக்களின் ஆட்சியால் ஒவ்வொருவர் வீட்டிலும் வெடிகுண்டுகளை வைத்துக்கொண்டிருக்கிறோம்.” – முஜிபூர் ரஃமான்

சமையல் எரிவாயு கொள்கலன் எப்போது வெடிக்கும் என்ற அச்சத்தில் இலங்கை மக்கள் வாழ்ந்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஃமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை குறிப்பிட்ட அவர், இந்த ஆபத்தான சூழலை ராஜபக்ச அரசாங்கமே ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு கொள்கலன் எப்போது வெடித்துச் சிதறும் என்ற அச்சத்துடன் மக்கள் இன்று வாழ்ந்து வருகின்றனர். இன்று நாட்டில் ஐந்து எரிவாயு கொள்கலன்கள் வெடித்துச் சிதறியுள்ளன. இது எவ்வாறு வெடித்தது. இவ்வளவு காலமும் இத்தகைய அனர்த்தத்தினை மக்கள் எதிர்கொள்ளவில்லை.

இந்த ராஜபக்ஸ அரசாங்கம் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடி வருகின்றது. இன்று சகல வீடுகளிலும் எப்போது வெடிக்கும் என்ற நிலை தெரியாத அளவிற்கு, எரிவாயு கொள்கலன் என்னும் வெடி குண்டை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.

இதற்கான முழுப்பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம். ஆகவே இந்த ஆபத்தான சூழ்நிலையை நிறுத்துவதற்கு அமைச்சர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பதாக கூறியுள்ளார்.

இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி – முடிவுக்கு வந்த அரசின் 07 மாத நாடகம் !

இரசாயன உரம், களை கொல்லி மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்  வெளியாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் இரசாயன உரம், களை கொல்லி மற்றும் திரவ உரம் என்பவற்றை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில் இரசாயன உர நடனம் இன்றுடன் முடிந்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

இரசாயன உரத்தை எக்காரணம் கொண்டும் மீண்டும் இறக்குமதி செய்ய மாட்டோம் என்றும் இதனைச் செய்ய முடியாதவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் கூறினர்.

வாயால் வற்றாலை  நடுவது போல்தான் இருந்தது அவர்களின் கருத்து. தற்போது நாங்கள் உதவித் தொகை வழங்கப்போவதில்லை. இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் இரசாயன உரம், களை கொல்லி மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்படும் என்றும் ஆளும் தரப்பினர் கூறினர்.

நாட்டில் கடந்த 7 மாத காலமாக நடித்த நாடகம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. நடித்த நாடகமும் தட்டிய தாலமும் இன்று இல்லை. அரசாங்கம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நடனம் ஆடியது என்றும் தோ்தலின்போது “அரசாங்கம் பாம்பு நடனம் ஆடியது”,” கொரோனா பாணி நடனம் ஆடியது”, ”இப்போது காபனிக் நடனம் ஆடுகிறது” என்றும் காபனிக் நடனம் இன்றுடன் முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் மீண்டு வந்து குண்டு தாக்குதல் நடத்த உள்ளாரா? – நாடாளுமன்றில் நளின் பண்டார கேள்வி !

நாட்டில் திடீரென ஏன் இத்தனை சோதனை சாவடிகள். பிரபாகரன் மீண்டு வந்து குண்டு தாக்குதல் நடத்த உள்ளாரா? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தின் இன்றைய (16) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எதுவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா? பிங்கிரிகமயிலிருந்து நான் பாராளுமன்றத்துக்கு வரும் வழியில் 21 பொலிஸ் சோதனை சாவடிகளை கடந்து வர வேண்டியிருந்தது. இதில் 10 இடங்களில் எனது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தார்கள்.

பிங்கிரியவிலிருந்து பாராளுமன்றத்துக்கு வரும்வரையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஏன் இத்தனை சோதனை சாவடிகளை அமைத்துள்ளார்? பாராளுமன்றம் மீது எவரும் குண்டுத்தாக்குதல்கள் நடத்த உள்ளார்களா? இல்லை என்றால் பிரபாகரன் மீண்டு வந்து குண்டு தாக்குதல் நடத்த உள்ளாரா? எதற்காக இத்தனை சோதனை சாவடிகள்? எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

“புதிதாக உருவாகவுள்ள சஜித் கொரோனா கொத்தணி.” – காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன

“கொரோனாவுடன் விளையாடக்கூடாது. போராட்டம் நடத்தி அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல. எதிரணியின் போராட்டத்தால் ‘சஜித் கொத்தணி’ உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.” இவ்வாறு காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“மக்களை வீதியில் இறக்கி, சீரற்ற காலநிலையில் அவர்களை வதைப்படுத்தி அரசியல் நடத்தும் நேரம் இதுவல்ல. நாட்டில் கொரோனா இருப்பது எதிரணி உறுப்பினர்களுக்குத் தெரியாதா? அவர்களுக்குத் தெளிவில்லை என்பதுதான் அவர்களின் நடத்தைமூலம் அறியமுடிகின்றது.

ஆரம்பத்தில் ஆடைத்தொழிற்சாலை கொத்தணி ஏற்பட்டது. அதன்பின்னர் புத்தாண்டு கொத்தணி உருவானது. ஆசிரியர்களின் போராட்டத்தாலும் கொத்தணி பரவியது.

சஜித்தின் போராட்டத்தில் சஜித் கொத்தணியும் உருவாகும் அபாயம் உள்ளது. எமது அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. தேர்தல் ஊடாக அரசை வீழ்த்துங்கள். மாறாக மக்களைப் பணயம் வைக்க வேண்டாம்” – என்றார்.

அரசுக்கு எதிராக கொழும்பை முற்றுகையிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு !

விவசாயம் அழிப்பு, பொருட்களின் விலையேற்றம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் அரச எதிர்ப்புப் போராட்டம் கொழும்பில் இன்று மாலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

“இது ஆரம்பம் மட்டுமே. மக்களின் வாழும் உரிமை உறுதிப்படுத்தப்படும்வரை போராடுவோம். உயிர்த் தியாகம் செய்வதற்கும் நாம் தயார்.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சூளுரைத்தனர்.

காவல்துறை உள்ளிட்ட அரச படைகளின் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் பெருந்திரளான மக்கள் கொழும்பு நோக்கி வந்து நிவாரணம் வேண்டும், வாழ்க்கைச்சுமை குறைக்கப்பட வேண்டும், நாட்டு வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், உரப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு முன்னால் பேரணி ஆரம்பமாகி, ஹெட் பார்க் மைதானம் வரை சென்று அங்கு கவனயீர்ப்புப் போராட்டத்துடனான கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தப் போராட்டத்தால் கொழும்பிலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

“இந்த அரசாங்கம் இலங்கை மக்களை தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளிவிட்டது.” – பாட்டலி சம்பிக்க ரணவக்க

டொலர் பிரச்சினைக்கு, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. எனவும் எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க  தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

“இவ்வாறு ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட முடியாத அளவிற்கு டொலர் பிரச்சினை பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

உரம், கிருமி நாசி ஆகியவற்றுக்கான இறக்குமதி தடை மற்றும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக இன்று மரக்கறி விலைகள் வானம் அளவிற்கு உயர்வடைந்துள்ளது.இவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை பொதுமக்களினால் பொருத்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால், மக்களின் வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சி அடைந்துள்ள பின்னணியில், அவர்கள் கொள்ளையடிக்கும் நிலைக்கும், தற்கொலை செய்துக்கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் பழைய தலைவர்களுக்கு இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பதனை ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். நாட்டை புதிய தலைமுறைக்கு கையளிக்க வேண்டும்.இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலுள்ள அங்கத்துவ கட்சிகளுக்கு மாத்திரமன்றி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுக்கு கூட இன்று தமது பிரதேசத்திற்கு செல்ல முடியாத நிலைமை எழுந்துள்ளது.

வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள பிரச்சினையை அனைத்து மக்களும் எதிர்நோக்கியுள்ளமை மற்றும் விவசாயிகளுக்கு உரம் கிடைக்காத பிரச்சினை ஆகியவற்றினாலேயே இவர்களுக்கு தமது பிரதேசத்திற்கு கூட செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பிரச்சினைகளை மறைப்பதற்காக தனிமைப்படுத்தல் சட்டம், இரகசிய பொலிஸாரை முறையற்ற விதத்தில் பயன்படுத்துதல், பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை தவறாக கையாளுதல் போன்ற செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறான விடயங்களினால், இந்த பிரச்சினைகள் வலுப் பெறும் எனவும், மக்களை இனிவரும் காலங்களில் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் கூறுகின்றார்.

“ஈஸ்டர் தாக்குதலை விடுதலைப்புலிகள் கணக்கில் சேர்த்து திட்டமிட்ட சூழ்ச்சி நடந்துள்ளது.” – நாடாளுமன்றில் மனுஷ நாணயக்கார !

ஈஸ்டர் தாக்குதலை விடுதலைப்புலிகள் கணக்கில் சேர்த்து திட்டமிட்ட சூழ்ச்சி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஆளுந்தரப்பு உறுப்பினரும் கோபா குழு தலைவருமான கலாநிதி திஸ்ஸ விதாரணவினால்  கொண்டுவரப்பட்ட அரச கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

ஈஸ்டர் தாக்குதல் நடத்த சில தினங்களுக்கு முன்னர் வனாதவில் பகுதியில் இரண்டு காவல்த்துறை அதிகாரிகள் கொலைசெய்யப்பட்ட வேளையில் அவர்களை கொலை செய்தது யார் என ஆராய முயற்சித்த வேளையில் அதனை விடுதலை புலிகளின் மேல் சுமத்தினர்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் முக்கியமான 42 வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன, தேசிய பாதுகாப்பு நெருக்கடி, பிணைமுறி ஊழல் என்பவற்றை கூறி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு மத்திய வங்கி ஊழல் வாதிகளையோ அல்லது ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளையோ பிடிக்க முடியவில்லை.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து  தொடர்ச்சியாக கேள்வி எழுப்பியும் அதற்கு பதில் தெரிவிக்கவில்லை.பொதுமக்கள் அரசதலைவரிடமும் பாதுகாப்பு அமைச்சரிடமும் கேள்வி எழுப்பியும் அவர்கள் உறுதியான பதில் கூறவில்லை.

ஷாரா என்ற பெண் எங்கே? என நாமும் சபையில் கேள்வி எழுப்பிய வேளையில் அவரது மரபணுவை பெற்றுக்கொண்டு அவர் இறந்துவிட்டார் என நிருப்பிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஷாரா என்ற பெண் இன்றும் இராணுவ முகாமில் உள்ளாரா? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா? அல்லது இந்தியாவிற்கு தப்பிசெல்ல விட்டீர்களா என்ற உண்மையை எமக்கு தெரிவிக்க வேண்டும்.

ஏன் அரசாங்கம் இவற்றை மூடி மறைக்கின்றது. அதுமட்டுமல்ல சஹாரானின் மனைவின் வாக்குமூலத்தில் உள்ள தகவல்களை ஏன் வெளிப்படுத்தவில்லை. அவரது வீட்டிற்கு வந்த புலனாய்வு அதிகாரி யார்?

உண்மைகள் வெளிவந்துவிடும் என்ற அச்சத்தில் சகலரும் அச்சமடைகின்றனர். தேசிய பாதுகாப்பு நெருக்கடிகளை தீர்க்க ஆட்சிக்கு வந்தவர்கள் உண்மையில் என்ன நடந்தது என கூறுங்கள் என்றார்.

இது குறித்து கேள்வி எழுப்பும் வேளையில் எம்மை அடக்காது உண்மை என்ன என்பதை கூற வேண்டும் என்று மனுஷ நாணயக்கார சபையில் தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் கடன்களுக்கு மகிந்தராஜபக்ஷவே காரணம்.” – ஹர்ச டி சில்வா காட்டம் !

“இலங்கை இன்று செலுத்திக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கடனுக்கும் காரணம் மகிந்தராஜபக்ஸவே.” என  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தற்போதைய அரசாங்கம் வருடாந்தம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பில்லியன் டொலர் கடனும் கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த சமயத்தில் பெற்றுக்கொண்டவை. சுற்றுலாத்துறை மூலம் இலங்கை  ஒருபோதும் 5 பில்லியன் டொலர்களை அந்நிய செலாவணியாக பெற்றுக்கொண்டதில்லை.

சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கப் பெறும் 5 பில்லியன் டொலர் தற்போது முற்றாக இல்லாமல் போயுள்ளதாக அரச தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையின் ஊடாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 5 பில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றதில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டில் மாத்திரமே சுற்றுலாத்துறை ஊடாக 4.5 பில்லியன் என்ற அதிகபட்ச அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றது. மாறாக ஏனைய வருடங்களில் சராசரியாக 2.4 பில்லியன் மாத்திரமே சுற்றுலாத்துறை ஊடாகக் கிடைக்கப் பெறும். இலங்கையின்  அந்நிய செலாவணி கிடைக்கப் பெறும் அதேவேளை இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது 1.6 பில்லியன் டொலர் செலவிடப்படுகிறது.

தற்போது சுற்றுலாத்துறை மூலமான அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான காரணம் கொவிட் தொற்று அல்ல. அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமேயாகும். கொவிட் தொற்றின் பின்னர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இலங்கையில் 0.7 வீதமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய நாடுகளில் 4.5 வீதமளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி தடுப்பூசி கொள்வனவு உள்ளிட்ட கொவிட் செலவுகளுக்காக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்டவற்றிடமிருந்து நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றன.

கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களையே தற்போது தாம் செலுத்திக் கொண்டிருப்பதாக அரச தலைவர் கூறுவது உண்மைக்கு புறம்பானது. காரணம் கடந்த ஆண்டு செலுத்திய ஒரு பில்லியன் டொலர் 2010 இல் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பெற்ற கடனாகும். அதேபோன்று இவ்வாண்டு செலுத்திய ஒரு பில்லியன் டொலர் 2011 இல் மஹிந்த ராஜபக்ச பெற்றுக் கொண்டதாகும். இவ்வாண்டு ஜூலை மாதமளவில் பெற்றுக் கொண்ட ஒரு பில்லியனும் 2012 இல் தனது சகோதரன் பெற்றுக் கொண்ட கடன் என்பதை ஜனாதிபதி நினைவில் கொள்ள வேண்டும். நாடு தற்போது பாரிய அபாயத்தில் உள்ளது என்பதை அவர் உணர வேண்டும். தாம் ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்தை நாடப் போவதில்லை என்றும், அஜித் நிவாட் கப்ரால் முஸ்லிம் நாடுகளிடம் கடன் பெறுவார் என்றும் அரச தலைவர் செயலர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இங்கு நீதி அமைச்சர் அலி சப்ரி பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். அவ்வாறிருக்கையில் எவ்வாறு முஸ்லிம் நாடுகளிடமிருந்து உதவியை எதிர்பார்க்க முடியும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.