கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் உள்ளிட்டவர்களை மட்டு சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தர்.

 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் மீது திணிக்கின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம்.

 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 25, 27 ம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த இருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதில் அரசாங்கமே நினைவு கூறலாம் என தெரிவித்துவிட்டு வடக்கு கிழக்கிலே மூதூர் சம்பூரை தவிர தவிர அனைத்து நீதிமன்றங்களிலும் தடை உத்தரவு பெறுவதற்கு பொலிசார் முயற்சி எடுத்து போது அனைத்து நீதிமன்றங்களிலும் நினைவு கூறுவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

அதேவேளை விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்ற வகையில் அந்த அமைப்பின் சின்னங்கள் இல்லாமல் அந்த நினைவேந்தல் நடைபெறமுடியும் எனவும் கட்டளை வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில் அந்த நினைவேந்தலில் கலந்துகொண்டு அதனை ஒழுங்கு செய்த ஒரே ஒரு காரணத்திற்காக இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழ் மக்கள் நியாயமில்லாத பயங்கரவாத தடைச் சட்டத்தை தெரிந்து அதனுள் போகாது நடந்து கொண்ட போதும் அவர்கள் மீது குறிவைக்கப்படுகின்றது.

 

இதனை தமிழத் தேசிய மக்கள் முன்னணியாக கடுமையாக எதிர்க்கின்றோம்.

 

இந்த பயங்கரவாதத்தை மக்கள் மீது திணிக்கின்ற செயற்பாடுகளுக்கு அடிபணியாது நாங்கள் இதை எதிர்நோக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நாங்கள் இதனை எதிர்கொள்வோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள தமது மக்களையே கூட கொல்லத்தயங்க மாட்டார்கள் என்பதையே ஈஸ்டர் தாக்குதல் காட்டுகின்றது.” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள தமது மக்களையே கூட கொள்ளத்தயங்க மாட்டார்கள் என்பதையே ஈஸ்டர் தாக்குதல் காட்டுகின்றது.” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் தற்போதைய அரசாங்கமே உள்ளது என வெளிக்கொணரப்பட்டுள்ள விடயங்கள் என்பது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல.  இது ஒரு ஆச்சரியமான விடயமும் அல்ல. சனல் 4 காணொளியில் உள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தாக்குதலின்போது இடம்பெற்ற உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் காரணமாக நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

எவ்வாறாயினும் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கும், ஆட்சி அதிகாரங்களை தக்கவைத்துக்கொள்வதற்கும், அதனை வெற்றி கொள்வதற்கும் இராணுவத்தை பயன்படுத்தி இவர்கள் எந்தவொரு உச்சக்கட்டத்துக்கும் செல்வார்கள்.  தமது மக்களையும் இழப்பதற்கு தயார் என்பதை சரியான கோணத்தில் அறிந்துகொள்ள முயற்சித்தால் இந்த தாக்குதலின் பின்னணி குறித்த உண்மைகள் அனைத்தையும் சிங்கள மக்கள் விளங்கிக்கொள்வார்கள் என நான் நினைக்கிறேன்.

மேலும் நாட்டின் உள்ளக விசாரணைகள் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி மற்றும் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.  பாராளுமன்றத்தில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே பெரும்பான்மை காணப்படுகிறது.

இந்த பெரும்பான்மை, அரசாங்க தரப்பினரையே இன்று சனல் 4 நிறுவனம் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தியுள்ளது.  தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ஷ தரப்பினரே உள்ளனர் என்பதை இந்த காணொளி மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்ஷ தரப்பினரே பாராளுமன்றத்தில் தெரிவுக் குழுவொன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொள்வது என்பது வேடிக்கையானது.

அதாவது குற்றவாளி ஒருவர் தன்னுடைய குற்றத்தையே தானே விசாரிப்பது போன்றது. இது போன்ற முட்டாள்தனமான விடயத்துக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

நீதிமன்றமத்தின் தடை உத்தரவை மீறி திருகோணமலையில் விகாரை அமைப்புக்கு எதிராக போராட்டம் !

திருகோணமலை நீதிவான் நீதிமன்றமத்தின் தடை உத்தரவை மீறி திருகோணமலை – பெரியகுளம் பகுதியில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சட்ட விரோதமான முறையில் திருகோணமலை பகுதியில் அமைக்கப்படவிருக்கும் விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

இதேவேளை குறித்த போராட்டம் இன முறுகலை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் 14 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு நிலாவெளி பொலிஸார் திருகோணமலை நீதிவான் நீதிமன்றிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

அதன் அடிப்படையில் இரு தரப்பிலும் தலா 7 பேர் வீதம் 14 பேருக்கு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் அண்ணாத்துரை தர்ஷினி நேற்று தடை விதித்துள்ளார்.

இவ்வாறு தடை விதிக்கப்பட்டவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விகாரை அமைப்பதற்கு ஆதரவாக செயற்படும் பௌத்த பிக்குகள் உள்ளிட்டோரும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளவர்களில் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

“பொலிசாரை கண்டபடி விமர்சித்து விட்டு இன்று அவர்களிடமே தஞ்சமடைந்துள்ளார் கஜேந்திரகுமார்.” – உதய கம்மன்பில

துணிவு இருந்தால் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ள பொலிசாரை அகற்றிவிட்டு மக்கள் முன்னிலையில் விவாதம் செய்ய வருமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது.

பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும்,  கடும்போக்கு நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இந்தச் சவாலை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

“பொலிசாரைக் கண்டபடி விமர்சித்து அரசியல் செய்யும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தற்போது பொலிசாரை தனது கொழும்பு வீட்டுக்கு வரவழைத்து பாதுகாப்பிற்கு நிறுத்தியுள்ளார். இது அவருக்கு வெட்கக்கேடான விடயம்.

வடக்கில் தமிழ் மக்கள் மத்தியிலும், தெற்கில் சிங்களவர்கள் மத்தியிலும் இனவாத கருத்துக்களால் தனது அரசியலை முன்நகர்த்துகின்றார் கஜேந்திரகுமார். கொழும்பில் மக்களின் எதிர்ப்புக்குப் பயந்த அவர், முன்கூட்டியே பெருமளவு காவல்துறையினரை தனது வீட்டுக்கு வரவழைத்து பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளார்.

கஜேந்திரகுமாருக்கு துணிவு இருந்தால் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ள பொலிசாரை அகற்றிவிட்டு மக்கள் முன்னிலையில் விவாதம் செய்ய வரட்டும்” என சவால் விடுத்துள்ளார்.

இதேவேளை, கொழும்பில் உள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வதிவிடத்தை  நேற்று முற்றுகையிட்ட தமது நகர்வு இலங்கையில் உள்ள சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நடவடிக்கையின் ஆரம்பம் என பௌத்த பிக்கு தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழு சூளுரைத்துள்ளது.

கொழும்பில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வதிவிடங்களை முற்றுகையிடுமாறு கடும்போக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அழைப்பு விடுத்த நகர்வை அடுத்து நேற்று இந்த முற்றுகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்தச் சம்பவத்தை அடுத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வதிவிடப்பகுதியில் அதிகளான காவல்துறையினரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை இன்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பாக பௌத்தமதகுருமார் அடங்கிய குழுவொன்றை சேர்ந்தவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றநிலையேற்பட்டுள்ளது.

அந்த பகுதியில் பெருமளவு இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட பிவிதுரு ஹெல உருமய கட்சி !

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் பெருமளவு காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீடிருக்கும் பகுதிக்கு விரைவதாக தகவல் கிடைத்துள்ள நிலையிலேயே அப்பகுதியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும்.

 

சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க, ஆரம்பமாக கொழும்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இந்த போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும், இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துகொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

“கொழும்பில் வாழ்ந்துகொண்டு விடுமுறை நேரத்தில் வடக்குக்கு சென்று இனவாதத்தை பரப்புகின்றார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.” – உதய கம்மன்பில

“முன்று தலைமுறைகளாக கொழும்பில் வாழ்ந்துகொண்டு விடுமுறை நேரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று இனவாதத்தை பரப்புகின்றார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எனவும்  கொழும்பில் உள்ள வீட்டின் முன்பாக இந்த வாரம் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறும்  பிவித்தூறு ஹெல உறுமய அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தமது யூரியூப் சமூக வலையத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார்.

குறித்த காணொளியில் மேலும் பேசியுள்ள அவர்,

தமிழ் இனவாத கொள்கையுடைய பொன்னம்பலம் பரம்பரையின் மூன்றாவது தலைமுறையான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குருந்தூர் மலைக்கு சென்று அரங்கேற்றிய நாடகத்தை நாங்கள் அனைவரும் பார்த்தோம். தமிழ் அடிப்படைவாதிகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதிமன்ற அனுமதியை பெற்று அங்கு வருகை தந்ததால் நாங்கள் அவர்களை தடுக்கவில்லை.

நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாக கருதப்படும் என்பதால் நாங்கள் அமைதியாக இருந்தோம். தொடர்ந்து அமைதியாக இருப்பது அவர்கள் வெற்றிப் பெற்றார்கள் என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்கும். குருந்தூர் விகாரை 2200 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. குருந்தூர் மலையை சூழ்ந்த பகுதிகளில் புராதன தொல்பொருள்கள் பௌத்த உரிமையை பறைசாற்றுகின்றன.

குருந்தூர் மலை குறித்து மகாவசம்சம் உள்ளிட்ட பௌத்த நூல்களில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குருந்தூர் விகாரை பௌத்தர்களுக்கு சொந்தமானதா என்பது சந்தேகத்துக்குரியதொரு விடயமல்ல. குருந்தூர் மலை தமிழர்களுக்கு சொந்தமானது என்பதற்கும் அங்கு இந்து கோயில் இருந்ததற்கும் எவ்வித தொல்பொருள் சான்றுகளும் கிடையாது.

இதனடிப்படையில், அங்கு சென்று மத வழிபாடுகளை மேற்கொள்ள கஜேந்திரகுமாரருக்கு முடியாது. விகாரையில் உள்ள தூண்களில் ஒரு தூண் வட்ட வடிவில் உள்ளது. இந்த தூண் சிவலிங்கம் என்று குறிப்பிட்டு முறையற்ற தர்க்கத்தை முன்வைத்துள்ளார்கள். இதற்கமைய, குருந்தூர் மலை இந்துக்களுடையது என்ற போலியான தர்க்கத்தையும் முன்வைக்கிறார்கள். இந்த நாடகத்தை அரங்கேற்ற அரசாங்கம் இடமளித்துள்ளது. ஆனால் பௌத்த மரபுரிகளை பேணி பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கையுடைய பௌத்தர்களுக்கு இந்த நாடகத்தை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

தமிழ் அடிப்படைவாதிகளின் நாடகத்துக்கு இடமளித்தால் பௌத்தர்களின் மரபுரிமைகள் இல்லாதொழிக்கப்படும். பௌத்த மரபுரிமைகளை அழிக்கும் செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு அரசாங்கம் கோழைத்தனமாக இருக்கலாம். ஆனால் பௌத்தர்கள் கோழைத்தனமாக இருக்க மாட்டார்கள்.

ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருக்கும் காலத்தில் தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அழிக்கப்பட்டுள்ளன. ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் வேண்டியதை செய்யலாம் என்ற நம்பிக்கை உள்ளதால் தமிழ் அடிப்படைவாதிகள் பௌத்த மரபுரிமைகளை அழிக்கிறார்கள். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொள்ளுப்பிட்டியில் வாழ்கிறார். அவரின் தந்தையும் கொழும்பில் வாழ்ந்தார் . அவரது பாட்டனாரும் கொழும்பில் வாழ்ந்தார். இவர் கொழும்பில் வாழ்ந்துகொண்டு விடுமுறை நேரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று இனவாதத்தை பரப்பி அதனூடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி சுகபோகமாக வாழ்க்கையை வாழ்கிறார்.

அவர் கொழும்பில் வாழ்வதற்கு எவரும் இடையூறு விளைவிக்கவில்லை. அவரது பரம்பரைக்கும் எவரும் இடையூறு விளைவிக்கவில்லை. கொழும்பில் உள்ள இந்து கோயில்களுக்கு நாங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுகிறோம். கொழும்பில் இருந்துகொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை இனவாத செயற்பாடுகளில் ஈடுபட தூண்டிவிடும் வரிசையில் பொன்னம்பலம், சுமந்திரன், சம்பந்தன் உள்ளிட்ட அனைவரும் உள்ளடங்குகிறார்கள்.

தெற்கில் இவர்கள் வாழ்வற்கு உள்ள சுதந்திரத்தை வடக்கில் சிங்களவர்களிடமிருந்து பறிப்பதற்கும் தடையேற்படுத்துவதற்கும் இவர்களுக்கு தார்மீக உரிமையில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும். அந்த கோரிக்கையை முன்வைக்க எமக்கு உரிமை உண்டு.

ஆகவே சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க இந்த வாரம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் வசிக்கும் வீட்டின் முன்பாக ஆரப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.

இதில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும். இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துக் கொள்ள வேண்டும்” – என்றார்.

தமிழ் மக்களின் வாக்குகளுக்காக போலி நாடகம் போடுகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

தழிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போலியான நாடகங்களை முன்னெடுத்துள்ளதாக தழிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன் தழிழ் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும் தழிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு அவர் முன்வரவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறான நிலையில் சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லாத மாகாண குழுவொன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சார்பானவர்களை இணைத்துக் கொள்வதற்காகவே மாகாண சபை குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பினர் இந்தியாவிடம் கையேந்துகிறார்கள் என விமர்சித்த முன்னணியினர் அரசியல் தீர்வு கோரி இந்திய பிரதமருக்கு மகஜர் !

திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

 

13 ஆவது திருத்தச் சட்டமானது தமிழ் மக்களை அடிமைகளாக வைத்திருப்பதை மாத்திரம் இலக்காகக் கொண்டு அமைந்துள்ளமையினால் அதனால் எந்தவொரு தீர்வும் கிடைக்காது என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகம் ஊடாக அனுப்பி வைத்த பின்னர் இதனை கூறியுள்ளார்.

 

ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள், அரசியல் தீர்வுகளை சுட்டிக்காட்டி சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தியப் பிரதமருக்கு தமிழ்க் கட்சிகள் பல இணைந்து ஒருமித்து கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இவ்வாறானதொரு சூழலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனியாக பிரதமருக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அண்மையில் இந்தியா தமிழர்களின் எதிரி என்ற தோரணையிலும் – இந்தியா முன்மொழிந்த 13ஆம் திருத்தச் சட்டம் தேவையில்லை எனவும் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னணியினர் மேற்கொண்டு இருந்தனர். மேலும் இந்தியாவையே சார்ந்து இருக்கும் கூட்டமைப்பினர் பா.ஜ.க அரசின் எடுபிடிகளாக செயற்படுவதாகவும் கஜேந்திரர்களும் அவர்களின் முன்னணி ஆதரவாளர்களும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருந்த நிலையில் இன்றையதினம் தீர்வு விடயமாக இந்தியாவுக்கே முன்னணி கட்சியினர் மகஜர் கொடுத்துள்ளமை தொடர்பில் பலரும் விசனம் வெளியிட்டு வருகிறார்கள்.

கடந்த வருடம் 2022 ஜனவரி மாதமளவில் இந்தியாவின் தமிழர்கள் தொடர்பில் முகம்பாராமல் இருக்கும் நடவடிக்கைகளை கண்டித்தும் – 13ஆவது திருத்தம் வேண்டாம் என்பதையும் வலியுறுத்தியும் பாரிய போராட்டங்களை மேற்கொண்ட போது இன்று மகஜர் வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது” கடந்த 70 வருட காலமாக தமிழர்களை அடிமைப்படுத்தும் அரசியலமைப்பை, தீர்வாக ஏற்றுக்கொள்கின்றோம் என்ற அடிப்படையிலேயே, 13வது திருத்தத்தை அமல்படுத்துமாறு, தமிழ் கட்சிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக” தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.”இந்தியாவிடம் கூட்டமைப்பினால்  முன்வைக்கப்பட்ட கோரிக்கையானது, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை கொண்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பை, தீர்வாக ஏற்றுக்கொள்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதாக பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தேசிய சமாதானப் பேரவை விசனம் !

“யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தேசிய சமாதானப் பேரவை விசனம் வெளியிட்டுள்ளது.

நாட்டில் தனிமனிதர்களும் சமூகங்களும் அசமத்துவமான முறையில் நடத்தப்படுகிறார்கள் என்ற உணர்வை வலுப்படுத்தும் இன்னொரு சம்பவமாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது அமைந்திருக்கிறது. பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்வதற்கு இடையூறு விழைவித்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

பொது மைதானம் ஒன்றில் பொன்னம்பலம் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய கூட்டத்துக்கு முன்கூட்டியே அறிவிக்காமல் சிவில் உடையில் வந்த இருவர் தங்களை அடையாளப்படுத்த மறுத்ததையடுத்து அவர்களுக்கும் பொன்னம்பலத்துக்கும் இடையில் வாக்குவாதம் மூண்டது. இந்த சம்பவம் தாங்கள் வேறுபட்ட முறையில் தாங்கள் நடத்தப்படுவதாக தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள உணர்வை மீளக்  கிளறியிருக்கிறது.

நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் அரசியல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவது வழமையான ஒரு நடைமுறை. தங்களை அவமதிப்பதாகவும் அச்சுறுத்துவதாகவும் அந்த நடைமுறை இருப்பதாக அந்த மக்கள் கருதுகிறார்கள்.

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 14 வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட துப்பாக்கிகளுடனும் கமராக்களுடனும் சீருடையில் படையினர் பெருமளவில் பிரசன்னமாக இருப்பது அந்த மக்கள் மத்தியில் ஒரு அநாதரவான உணர்வை ஏற்படுத்துகிறது.  தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் அக்கறையாக இருந்தால்  அவர்களின் மனங்களை வென்றெடுக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தும் அறிகுறியாக இந்த நிலைமை இருக்கிறது.

நாட்டின் ஏனைய பாகங்களில் வாழும் மக்களை விடவும் வேறுபட்ட முறையில் வடக்கு,கிழக்கு மக்களை நடத்தவேண்டாம் என்று தேசிய சமாதானப் பேரவை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது. அந்த மக்களும் ஏனைய மக்களைப் போன்று சமத்துவமான உரிமைகளுக்கு உரித்துடையவர்களே.

பாராளுமன்றத்தில் உள்ள ஏனைய சமூகங்களின் பிரதிநிதிகள் தவறாக நடந்துகொள்கின்ற போதிலும்  மரியாதையாக நடத்தப்படும் அதேவேளை சிறுபான்மை இனத்தவர்களான தமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைவர் கைதுசெய்யப்படுவது  இலங்கையின் அரசியல் கட்டமைப்புக்கு நீண்டகாலமாக பெரும் பாதிப்பாக அமைந்த இனத்துவ பரிமாணத்தை மீண்டும் வெளிக்காட்டி நிற்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலத்தின் கைது பாரபட்சமான முறையில் பிரயோகிக்கப்படுகிறது என்பதன் வெளிப்பாடாகும். இது ஒரு நாடு ஒரு சட்டமா அல்லது ஒரு நாடு இரு சட்டங்களா என்ற கேள்வியைக் கிளப்புகிறது.

உலகின் முதன்மையான மனித உரிமைகள் சாதனமான குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை ( International Covenant  on Civil and Political Rights — ICCPR) நடைமுறைப்படுத்துவதற்கென்று கொண்டவரப்பட்ட சட்டத்தை அரசாங்கம் தவறாக பயன்படுத்திவருகின்ற போக்கில் இந்த தோற்றப்பாட்டை காணக்கூடியதாக இருக்கிறது.

அதாவது பெரும்பான்மை இனத்தவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக இந்த சட்டம் பயன்படுத்தப்படுகின்ற அளவுக்கு சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகளை புண்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக பயன்படுத்தப்படுவதில்லை.

சமூக வாழ்வின் சகல அம்சங்களிலும் பாரபட்சம் காட்டப்படாமல்  சகலரும் சமத்துவமான முறையில் நடத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு அரசியலமைப்புக்கான 21 வது திருத்தத்துக்கு இசைவான முறையில் சமத்துவம் மற்றும் பன்மைத்துவ ஆணைக்குழு (Equality and Pluralism Commission) ஒன்றை நிறுவுமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம்.

நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கும் மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்துமாறும் அரசியலமைப்பின் பிரகாரம் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பரவலாக்கப்படக்கூடியதாக அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் இன,மத அடிப்படையில் அரச அதிகாரிகள் அடாத்தான முறையில் நடந்துகொள்ளும் சாத்தியத்தைக் குறைப்பதற்கு சகல சமூகங்களையும் அரவணைக்கும் அணுகுமுறையுடன் சேவைகளை வழங்குவதற்கும் பன்மைத்துவ பண்புகளை விளங்கிக்கொள்வதற்கும் பொலிசார் உட்பட அரசாங்க அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குமாறும் அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம்.

அத்தகைய நிறுவனரீதியான ஒரு ஏற்பாட்டின் மூலம் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என்பதுடன் வெளியுலகில் எமது நாட்டின் விழுமியங்களை பிரதிபலிக்கக்கூடியதாகவும் இருக்கும்.

கஜேந்திரகுமார் கைது விவகாரம் – நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம்!

கஜேந்திரகுமார் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவில்லையென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நேற்று (07) காலை கைதான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் மாலை பிணையில் விடுவித்தது.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், “கடந்த 2 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான காணொளிகளை பார்த்தேன். அதில் பொலிஸார் தமது கடமைகளை சரிவர செய்துள்ளனர்.

ஆனால் கஜேந்திரகுமார் குறித்த பொலிசாரை அச்சுறுத்தும் வகையிலும் அவர்களை தகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டியும் உள்ளார். இதனை வைத்துப் பார்க்கும் பொழுது கஜேந்திரகுமார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நடந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகின்றது” எனக் கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட கஜேந்திரகுமார் அவர்கள், “அந்த சந்தர்பத்தில் குறித்த இடத்திற்கு சிவில் உடையில் வந்த இருவர் தம்மை பொலிசார் என கூறினர். அவர்களிடம் நான் அவர்களின் அடையாள அட்டையை காண்பிக்கும்படிக் கேட்ட பொழுது அதற்கு மறுப்பு தெரிவித்து என்னை தாக்கினர்” என குறிப்பிட்டார்.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இரண்டு கேள்விகளை முன்வைத்தார் .

சிவில் உடையில் வந்து தம்மை பொலிஸார் என கூறிய இருவரும் ஏன் தமது அடையாள அட்டைகளை காண்பிக்க மறுத்தனர் ?

கஜேந்திரகுமார் தான் இன்று நாடாளுமன்றத்திற்கு செல்லவேண்டும் என கூறிய போது அவ்வளவு அவசரமாக அவரை கைது செய்வதற்கு காரணம் என்ன ? என அமைச்சர் டிரான் அலசிடம் கேட்டார்.

பொலிசார் தமது கடமைகளை சரிவர செய்துள்ளனர். காவல்துறையினர் மீது எந்த தவறும் இல்லை என அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டார்.

இதன்போது கஜேந்திரகுமார் அவர்கள், “அப்போது பாதுகாப்பு அமைச்சரான ( டிரான் அலஸ்) உங்களின் உத்தரவின் பேரிலா என்னை கைது செய்தனர் என கேள்வி எழுப்பினார்.

இதன்போது குறுக்கிட்ட சாபாநாயகர் இந்த சம்பவம் குறித்த பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருவதால் இது குறித்து விவாதிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதோடு இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.