கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இலங்கையில் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ் தொற்று – மேலும் 5பேர் பலி !

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு – 14 பகுதியைச் சேர்ந்த 83 வயது பெண்ணொருவரும், சிலாபம் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவர், இரத்மலானை பகுதியை சேர்ந்த 69 வயது ஆண், கொழும்பு – 13 பகுதியைச் சேர்ந்த 78 வயது ஆண் மற்றும் 64 வயதுடைய கொழும்பு – 13 பகுதியைச் சேர்ந்த ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் மேலும் 198 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்து 12 ஆயிரத்து 425ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 921ஆக அதிகரித்துள்ளது.

இதே நேரம் “நாட்டில் கொரோனா தொற்று சமூகமயமாக்கப்படவில்லை. இலங்கை இன்னும் கொரோனா தொற்று மூன்றாம் கட்டத்திலுள்ளது . நிலைமையைக் கட்டுப்படுத்துவது கடினமல்ல”   என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-V 92சதவீத பயனளிக்கிறது” – ரஷ்யா தகவல் !

அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி இருந்தது. அது 90 சதவீத பாதுகாப்பானது என நேற்றையதினம் அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் உலகின் முதன் கொரோனா தடுப்பூசி என ரஷ்யா அங்கீகரித்திருந்த தன்னுடைய தடுப்பூசியான ஸ்புட்னிக்-V
92 சதவீத பயன் அளிக்கிறது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டபோது, ரஷ்யா ‘ஸ்புட்னிக்-V’ என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளோம். தன்னார்வலர்கள் உடலில் செலுத்தி பரிசோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது என்று ரஷ்யா அறிவித்தது. மேலும், உலகின் முதன் கொரோனா தடுப்பூசி என ரஷ்யா அங்கீகரித்தது.
ஆனால் உலக சுகாதார அமைப்பு, உலக நாடுகள் ரஷியாவின் தடுப்பூசி குறித்து கேள்வி எழுப்பின. நம்பகத்தன்மை இல்லை. நீண்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான ஆய்வு குறிப்புகளை வெளியிட வேண்டும் என வலியுறுத்தின.
அதன்பின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கல் சற்று குறையத் தொடங்கியதும், கொரோனா தடுப்பூசி குறித்து பெரிதாக பேசப்படவில்லை.
இந்நிலையில் ‘ஸ்புட்னிக்-V’ 3-ம் கட்ட பரிசோதனையில் 20 ஆயிரம் பேருக்கு ஒரு டோஸ் கொடுக்கப்பட்டது. 14 நாட்கள் இடைவெளியில் 16 ஆயிரம் பேருக்கு இரண்டு டோஸ் கொடுக்கப்பட்டது. அதன்பின் கொரோனா பாசிட்டிவ் நபர்கள் 20 பேருக்கு வழங்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் 92  சதவீதம் பயன் அளிப்பது தெரியவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் கொரோனா தடுப்பூசி பாவனையால் பிரேசிலில் மோசமான பாதிப்புக்கள் –

உலகளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பில் 3ஆவது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு 56.75 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் கூறுகிறது. பிரேசில், உலகளவில் இரண்டாவது அதிக உயிரிழப்பையும் கொரோனாவால் சந்தித்துள்ளது. அங்கு 1.62 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கான தடுப்பூசி உருவாக்க முயற்சிகளில் உலகின்  பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் சீன மருந்து நிறுவனமான சைனோவேக், ‘கொரோனாவேக்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி பிரேசில் நாட்டில் 7 மாகாணங்களில் பொதுமக்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வந்தது. இந்த தடுப்பூசியின் 60 லட்சம் ‘டோஸ்’களை இறக்குமதி செய்வதற்கு பிரேசில் நாட்டின் சுகாதார கட்டுப்பாட்டு நிறுவனம் ‘அன்விசா’ அனுமதி அளித்தது.இந்த நிலையில் ‘கொரோனாவேக்’ தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கும் பரிசோதனையின்போது மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக இந்த தடுப்பூசியின் பரிசோதனையை பிரேசில் நாட்டின் சுகாதார கட்டுப்பாட்டு நிறுவனம் ‘அன்விசா’ அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் அந்த தடுப்பூசியை பிரேசிலில் தயாரித்து வந்த சாவ் பாவ்லோ மாகாண அரசு நிறுவனமான புட்டான்டன் நிறுவனம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதையொட்டி சாவ் பாவ்லோ மாகாண அரசு வெளியிட்ட அறிக்கையில், “தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளில் பொதுவாக இத்தகைய பாதிப்பு நிகழ்கிறது. இது குறித்த தகவல், அன்விசா மூலம் வராமல் ஊடகங்கள் மூலம் வந்தது வருத்தம் அளிக்கிறது. இந்த தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தி வைக்கும் அன்விசாவின் முடிவு ஆச்சரியம் அளிக்கிறது” என கூறி உள்ளது.

ஏற்கனவே இந்த தடுப்பூசி பிரேசிலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெயிர் போல்சொனரோ சந்தேகங்களை எழுப்பி இருந்தார். இந்த தடுப்பூசியை பகிரங்கமாக நிராகரித்த அவர், பிரேசில் மக்கள் கினிப்பன்றிகளாக தடுப்பூசி பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட மாட்டார்கள் என அவர் கூறி இருந்தார்.

இந்த தடுப்பூசியை சோதனையின்போது போட்டுக்கொண்ட ஒருவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது இறப்புக்கு தடுப்பூசிதான் காரணமா என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் அங்கு 10 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசியை போட்டு சோதிப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அமெரிக்காவின் பைஸர் மற்றும் அதன் கூட்டாளியான ஜெர்மனியின் பயோஎன்டெக், தங்களது தடுப்பூசியின் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனைக்காக 44 ஆயிரம் பேரை பதிவு செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது தடுப்பூசியில் பாதுகாப்பு கவலைகள் எதுவும் எழவில்லை என்று பைஸர் கூறி உள்ளது. ஆனால் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எப்.டி.ஏ., தங்களை மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி ஆய்வுக்காக நாடுவதற்கு முன் குறைந்தபட்சம் அதை போட்டுக்கொண்ட பாதி எண்ணிக்கையிலான தன்னார்வலர்களையாவது தொடர்ந்து 2 மாதங்கள் கண்காணிக்க வேண்டும் என்று கூறி உள்ளது. இந்த நிலையை இம்மாத இறுதியில் பைஸர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் அடைந்து விடும் என தகவல்கள் கூறுகின்றன.

மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா மற்றும் பிற நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசிகளின் இறுதிக்கட்ட பரிசோதனைக்கு தொலைவில் இல்லை என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

 

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் நால்வர் பலி !

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 04 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

51 வயதுடைய ஆண், கொழும்பு 10 ஐ சேர்ந்த 45 வயதுடைய ஆண், கம்பஹாவை சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரும் 55 – 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி பாரிய வெற்றி – மகிழ்ச்சியில் உலக நாடுகள் !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவ ஆரம்பித்ததாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
5 கோடிக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு 12 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன.
ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.  பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.
இதற்கிடையில், அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி இருந்தது.
இந்த தடுப்பூசியின் முதல் 2 கட்ட பரிசோதனைகள் வெற்றியடைந்ததையடுத்து இறுதிகட்ட பரிசோதனைகள் நடைபெற்று வந்தது. ஜூலை 27-ம் தேதி 3-ம் கட்ட பரிசோதனைகள் தொடங்கியது.
இந்த பரிசோதனையில் உலகின் பல நாடுகளை சேர்ந்தவகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மொத்தம் 43 ஆயிரத்து 538 பேர் தடுப்பூசி பரிசோதனைக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் நேற்றுவரை மொத்தம் 38 ஆயிரத்து 955 பேருக்கு இரண்டாவது முறையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மனிதர்களை பாதுகாக்கிறது என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஃபிப்சர் நிறுவனத்தின் தலைவர் ஆல்பர் கூறுகையில், ‘மனித குலத்திற்கும் அறிவியலுக்கும் இன்று மிகச்சிறந்த நாள். 3-ம் கட்ட பரிசோதனையின் முதல் முடிவுகள் எங்கள் தடுப்பூசி கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கிறது என்பற்கான முதல்கட்ட ஆதாரங்கள் உள்ளது என்பதை உறுதி செய்கிறது’ என்றார்.
ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி கொரோனா பரவலை 90 சதவீதத்திற்கு அதிகமான அளவில் தடுக்கிறது. மேலும், இந்த தடுப்பூசியால் மிகப்பெரிய பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் இந்த தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கும் என உலக நாடுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் அமெரிக்காவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா வைரஸ் – ஒரே நாளில் ஒரு லட்சத்தை நெருங்கும் புதிய தொற்றாளர் தொகை !

சீனாவின் வுகான் நகரத்தி பரவ ஆரம்பித்ததாக கண்டுபிடிக்கப்பட்ட  கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. அத்துடன் புதிய உச்சத்தையும் தொட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் ஒருநாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. தற்போது அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 93 லட்சத்தைக் கடந்துள்ளது.
மேலும், ஒரே நாளில் 970-க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 35 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போது 30 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வரும் செவ்வாய்க்கிழமை அங்கு ஜனாதிபதி தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில், கொரோனா தாக்கம் வேகம் எடுத்திருப்பது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்து விட வேண்டும் என்ற ஜனாதிபதி டிரம்பின் முயற்சி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் சுமார் 4.42 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த  கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.42 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.24 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 10.62 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 79 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

“தொற்று நோயியல் நிபுணர்கள் வழங்கியுள்ள தரவுகளின் பிரகாரம் இன்னமும் வைரஸ் பரவல் சமூகத் தொற்றாக மாறவில்லை“ – அமைச்சர் ரமேஷ் பத்திரன

கொவிட்-19 வைரஸ் இலங்கையில் சமூகப் பரவலடைந்துள்ளதாக நிபுணர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்ததுள்ளார்.

முழு நாட்டையும் முடக்கி மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு அரசாங்கம் தயாராகவில்லை. அதேபோன்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கும் எதிர்காலத்தில் நெருக்கடிக்கு உள்ளாகும் மக்களுக்கும் பொருளாதார சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்குமெனவும் அவர் கூறினார்.

அத்துடன், நாட்டில் நிரம்பல் ஏற்பட்டுள்ள மீன் வகைகளை கொள்வனவு செய்து டின் மீன் உற்பத்திகளை அதிகரிக்க உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ரமேஸ் பத்திரன இவ்வாறு கூறினார். ஊடகச்சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில்களையும் வழங்கியுள்ளார்.

கேள்வி : – வைத்தியசாலைகளில் கட்டில்கள் பற்றாக்குறையாகவுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளரே?

பதில் :- இலங்கையில் தற்போதைய சூழலில் 4,468 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நோயாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களை வேறாக பராமரிப்பதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். தனிமைப்படுத்தல் நிலையங்களாயின் அங்கு விசேட கண்காணிப்பின் கீழ் அவர்களை பேணவும் வைத்தியசாலைகளில் விசேட சிகிச்சை பிரிவுகளை உருவாக்கமும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி :- நாடு முழுவதும் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறிப்படுகின்றனர். இது ஒரு கொத்தணியா அல்லது வைரஸ் சமூகப் பரவலைடைந்துள்ளதா?

பதில் :- நோயை கட்டுப்படுத்துவது மற்றும் ஒழிக்கும் செயற்பாடுகள் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனையின் பிரகாரம்தான் அரசாங்கம் செயற்படுகிறது. தொற்று நோயியல் நிபுணர்களின் வழங்கியுள்ள தரவுகளின் பிரகாரம் இன்னமும் வைரஸ் பரவல் சமூகத் தொற்றாக மாறவில்லை.

கேள்வி :- கொவிட் 19 க்கு உள்ளானவர்களுடன் முதல் தொடர்பை பேணியுள்ளவர்களை வீடுகளிலேயே தனிமையில் இருக்குமாறு அரசாங்க அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடர்த்தி அதிகரித்துவிட்டதா?

பதில் :- தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடர்த்தி அதிகரித்துள்ளமை தொடர்பிலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளமையால்தான் முதல் தொடர்பாளர்களை வீடுகளிலேயே தனிமையில் இருக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலின் வேகம் தீவிரமாக அதிகரித்துள்ளது. முதல் முறை பரவலிலிருந்த வைரஸையும் விட தற்போது பரவியுள்ள வைரஸ் தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மிகவும் உயர்வாகவுள்ளது. அதனால் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும். சுகாதார வழிக்காட்டல்களை முழுமையாக பின்பற்றுவதும் அவசியமாகும்.

ஆகவே, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் சுகாதார ஆலோசர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் முழுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றார்.

இலங்கையில் வேகமடையும் கொரோனா வைரஸ் பரவல் – நோயாளர் எண்ணிக்கை இன்று சடுதியான அதிகரிப்பு !

இலங்கையில் மேலும் 293 பேருக்கு கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னைய நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகிய 291 பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 2 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8,706 ஆக உயர்வடைந்துள்ளதுடன்  4,646 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 27  கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் இன்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,043ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 445பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன்  கொரோனா தொற்று காரணமாக 19 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இவர்களுள் 03 பேர் இன்று மட்டுமே மரணமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நாட்டில் இன்றுவரை 460455 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட இலங்கையின் 13 மாவட்டங்களில் கொரோனா பரவல் – ஏனைய மாவட்டங்களுக்கும் பரவும் அபாயம் !

மினுவாங்கொடயிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 13 மாவட்டங்களுக்கு பரவத் தொடங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ள தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி வைத்தியர் சுடத்சமரவீர ஏனைய மாவட்டங்களுக்கும் கொரோனா பரவும் ஆபத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
குருநாகல், புத்தளம், கேகாலை, கண்டி, காலி, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், பொலனறுவை உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் விசேடமாக கம்பஹாவிலிருந்தும் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பேலியகொட மீன் சந்தையில் மீன் விற்பவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மீன் விற்பவர்கள் ஊடாக கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளில் பரவும் ஆபத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பேலியகொட மீன் சந்தையிலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் மீன்களை விற்பனை செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக தொற்றிற்குள்ளானவர்கள் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.