கோட்டாபய ராஜபக்ஷ

கோட்டாபய ராஜபக்ஷ

“முட்டாள்களை கூட வைத்திருந்ததால் தான் கோட்டாபய வீழ்ந்தார். ரணிலும் அதையே செய்கிறார்.” – இரா.சாணக்கியன்

“முட்டாள்களை இராஜாங்க அமைச்சர்களாகவும் ஆலோசகர்களாகவும் வைத்திருந்தே கோட்டாபய பதவியில்லாமல் போகவேண்டிய சூழல் ஏற்பட்டது.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதன்போது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் வட்டாரங்கள் மேற்கொள்ளவேண்டிய பிரசார செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்;  மக்கள் தேர்தல் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். ஒரு தேர்தல் நடந்தால்தான் அது ஜனநாயக நாடு என்று ஏற்றுக்கொள்ளப்படும். அதன்மூலம் தான் எமது அபிலாசைகளை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் சொல்லக்கூடிய சூழல் ஏற்படும். உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விவாதிப்பதற்கு இரண்டு நாட்கள் பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.

அங்கு எமது கருத்துகளை பதிவுசெய்வதற்கு தயாராகவுள்ளோம். தேர்தலுக்காக மக்கள் வீதியிலிறங்கி போராடவும் தயாராகவுள்ளனர்.

ஜனாதிபதி அண்மையில் வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். அத்தியாசிய சேவையாக சிலவற்றை அறிவித்துள்ளார். கழிவு நீர்வெளியேற்றப்படும் கால்வாய், வோக்குகள் கூட இந்த வர்த்தமானியில் வந்துள்ளது. ஜனாதிபதி அவர்கள் ஓடி ஒழிப்பதற்காக இந்த வோக்குகளை அத்தியாவசிய சேவையாக அறித்துள்ளாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.

நாங்கள் கல்லடி பாலத்தில் கறுப்பு சுதந்திர தின போராட்டம் நடாத்திய பின்னர் இன்று பாலங்களும் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த தேர்தலை ஜனாதிபதி உடனடியாக நடாத்தவேண்டும்.அவ்வாறு நீங்கள் நடாத்தாவிட்டால் சர்வதேச ரீதியாக உங்களுக்கு பாரிய அழுத்தங்கள் வரும். நீங்கள் எதிர்பார்த்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்காமல்போகும்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவர்கள் இந்த சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் சிலவேளைகளில் தேவைப்படாது, சீனாவிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வர ஆரம்பித்துள்ளார்கள். அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் தேவைப்படாது என கூறுகின்றார்.

சர்வதேச நாணய நிதியத்தினை காட்டி காட்டி மக்களை ஏமாற்றுவதுடன் தேர்தலையும் பிற்போட்டு பொருளாதாரத்தினை நல்ல நிலைக்கு கொண்டுவரலாம் என்று ஜனாதிபதி கருதுகின்றாரானால் அவரை யாரோ ஏமாற்றுகின்றார்கள்.

கோட்டாபய ராஜபக்ஸ அவர்களையும் இவ்வாறான பொய்களை கூறியே ஏமாற்றினார்கள். கோட்டாபய ராஜபக்ஸ சேதன பசளை ஊடாக நாட்டின் வருமானம் அதிகரிக்கும் என்று கூறினார். ஏன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முட்டாள் ஒருவரும் மில்லியனர் பில்லியனர் உருவாகபோகின்றார்கள் என்று கூறியிருந்தார்.

அவ்வாறான முட்டாள்களான இராஜாங்க அமைச்சர்களையும் ஆலோசகர்களையும் வைத்திருந்துதான் கோத்தபாய அவர்கள் பதவியில்லாமல்போகும் சூழல் ஏற்பட்டது. அவ்வாறு ரணில் விக்ரமசிங்கவுக்கும் தேர்தல் நடாத்ததேவையில்லை, பொருளாதாரத்தை கட்டியெழுப்பலாம், சர்வதேச நாடுகளின் உதவி தேவையில்லையென்றால் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வரும்.

வித்தியாசம் என்னவென்றால் ரணில் விக்ரமசிங்க என்பவர் தனி நபர். கோட்டாபயவினை சுற்றி மொட்டு கட்சி என்ற ஒரு பாராளுமன்றமே சுற்றியிருந்தும் அவர் நாட்டைவிட்டு தப்பியோடவேண்டிய ஒரு சூழல்வந்தது. ஜனாதிபதி தனியொருவராகயிருப்பதன் காரணமாக அவர் அத்தியாவசிய சேவையாக அறிவித்த வோக்குக்குள்ளேயே ஒழிக்கவேண்டிய சூழல் ஏற்படும்.” எனவும் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய அரசுக்கு எதிரான காலி முகத்திடல் போராட்டத்தில் விடுதலைப் புலிகளும் பங்கேற்றனர் – எஸ்.பி.திசாநாயக்க

அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்ததாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் பிரதான சூத்திரதாரி தொடர்பிலான முழுமையான விபரங்களும் நாம் அறிவோம். ஆனால், அதனை பகிரங்கப்படுத்த போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மே மாதம் இடம்பெற்ற கலவரத்தின் போது மக்கள் விடுதலை முன்னணியே அனைவரின் விட்டிற்கும் தீவைத்திருந்தாகவும் அமரகீர்த்தி அத்துக்கோறளவையும் ஜே.வி.பியே கொலை செய்திருந்தாகவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

அன்றைய கலவரத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியே தலைமை தாங்கியிருந்ததாகவும், காலி முகத்திடல் போராட்டத்திற்கு தலைமை வகிக்க முயற்சித்து ஜே.வி.பியினர் தோல்வி கண்டிருந்ததாகவும் அங்கு ஏற்கனவே முன்னிலை சோசலிச கட்சி ஆதிக்கம் செலுத்தியிருந்தாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

வெளிநாடுகளில் செயற்படுகின்ற புலிகளின் அமைப்புகளை சேர்ந்தவர்கள் காலிமுகத்திடலுக்கு வருகை தந்திருந்தாகவும் அதற்கான ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி, முஸ்லிம், அடிப்படைவாதிகளும் காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த கோட்டாபய ராஜபக்சவினால் முடியாமல் போனதாகவும் ஆனால் ரணில் அதனை கனகச்சிதமாக நிறைவுக்கு கொண்டு வந்திருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இந்த போராட்டத்தின் போது இராணுவத்தினர் ஏன் அமைதியாக இருந்தார்கள் என்பதும் தனக்கு தெரியும் என்றும் ஆனால் அதனை இப்போது கூற முடியாது என்றும் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக கோட்டாபய ராஜபக்ஷவை விட அதிகமாக செலவு செய்த ரணில் விக்கிரமசிங்க !

இவ்வருட சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக அரசாங்கம் அதிகளவிலான தொகையை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2022 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக 950 இலட்சம் ரூபா அல்லது 9.5 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் இந்த வருட சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக 40 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு நாட்டில் பணவீக்கம் அதிகமாக உள்ளதால் பெரும் செலவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வருடங்களில் சுதந்திர தின விழாக்களுக்காகச் செய்யப்பட்ட செலவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

2021 இல் 80,662,000.36
2020 இல் 63,214,561.99
2019 இல் 68,130,091.15
2018 இல் 86,805,319.35

“சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பையே மாற்றிய உலகின் ஒரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ .” – உதய கம்மன்பில

“சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகில் ஒரே ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இடம் பிடித்துள்ளார்.” என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை வெளியிடும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்ல பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பல்வேறு நோக்கங்களுக்கு மத்தியில் நாட்டு மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷர்கள் தோல்வியடைவதற்கு குடும்ப ஆட்சி பிரதான காரணமாக அமைந்தது. ஆகவே 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு பாடம் கற்றுக்கொண்டிருப்பார்கள் என எதிர்பார்த்தோம். இருப்பினும் எமது நிலைப்பாடு இறுதியில் தவறானது.

2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமைச்சரவையில் ராஜபக்ஷர்கள் தான் அதிக ஆதிக்கம் கொண்டிருந்தார்கள்.சிரேஷ்ட அமைச்சர்கள் ராஜபக்ஷர்களின் இளவரசரான நாமல் ராஜபக்ஷவிடம் ஆலோசனை பெற வேண்டிய சூழலை கோட்டாபய ராஜபக்ஷ ஏற்படுத்தினார்.

அமைச்சரவையில் பொருளாதார துறைசார் நிபுணர்கள் அங்கம் வகித்த போதும் நிதி நிலைமை தொடர்பில் அடிப்படை தகைமை கூட இல்லாத பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சராக நியமிக்கப்பட்டதுடன் 55 அரச திணைக்களங்கள் அனைத்தும் அவரது பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.

ராஜபக்ஷர்கள் அமைச்சரவை முழுமையாக ஆக்கிரமித்தமை தொடர்பில் வாராந்தம் இடம் பெறும் கட்சி தலைவர் கூட்டம் இரத்து செய்யப்பட்டது. அமைச்சரவை கூட்டம் ராஜபக்ஷர்களின் குடும்ப உறுப்பினர்களின் இரவு விருந்து உபசாரத்தின் ஊடாக எடுக்கப்பட்டது.

தவறான பொருளாதார தீர்மானங்கள் முழு நாட்டையும் சீரழிக்கும் என நாங்கள் எடுத்துரைத்ததை தொடர்ந்து நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனது சகோதரரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முறையிட்டார். சகோதரரின் தவறான ஆலோசனைகளை கேட்டு கோட்டாபய ராஜபக்ஷ எங்களை பதவி நீக்கினார்.எம்மை பதவி நீக்கி விட்டு மூன்று மாதத்திற்கு பின்னர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் நிலை அவருக்கு ஏற்பட்டது.

ராஜபக்ஷர்களின் குடும்ப ஆதிக்கத்தினால் 69 இலட்ச மக்களின் அரசியல் தீர்மானம் சூன்யமாக்கப்பட்டது.போராட்டத்தின் ஊடாக ராஜபக்ஷர்களை மக்கள் புறக்கணித்தார்கள். ஆனால் ராஜபக்ஷர்களை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

ராஜபக்ஷர்களின் தவறான பொருளாதார கொள்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின்பற்றுகிறார்.மக்கள் படும் துயரத்தை அவர் கண்டு கொள்ளவில்லை. ஏனெனில் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் அல்ல. தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைய நேரிடும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்கு அறிவார்.  அதனால் தான் தேர்தலை பிற்போட சூழ்ச்சி செய்கிறார்.கௌரவமான முறையில் செயற்பட்டால் இறுதி காலத்தை கௌரவமாக கழிக்கலாம் என்றார்.

அரச வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ..?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 19 அரச வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்துவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

இந்த வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட பாவனைக்காக அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தனிப்பட்ட வாகனத்தை மாத்திரமே பயணத்திற்கு பயன்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட 17.5 மில்லியன் ரூபா பணம் – கோட்டாபாயவிடம் விசாரணை!

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து கண்டுபிடிக்கப்பட்ட 17.5 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு,இன்று பொலிஸ் விசேட குற்றப் பிரிவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்களுடன் நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது உறவினர்கள் கட்டுநாயக்காவில் இருந்து டுபாய் நோக்கி சென்ற அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“பாதை அமைக்கவும் , சுத்தப்படுத்துவதற்கும் பயன்படுத்தி இராணுவத்தை அழித்தவர் கோட்டாபய ராஜபக்ஷ” – இரா.சாணக்கியன் குற்றச்சாட்டு!

வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இனி போராட்டத்தில் ஈடுப்பட்டால் இராணுவத்தை கொண்டு போராட்டத்தை அடக்குவேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலங்கை சிவில் பிரஜைகள் தான் இராணுவத்திலும், பாதுகாப்பு தரப்பிலும் சேவையாற்றுகிறார்கள் என்பதை ஜனாதிபதி தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இராணுவத்தினரும் பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளார்கள் என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். இராணுவத்தை கொண்டு போராட்டத்தை அடக்க வேண்டுமாயின் ஜனாதிபதி இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இராணுவத்தை வரவழைக்க நேரிடும். இராணுவத்தினரும் பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளார்கள்

வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள். ஆகவே போராட்டத்தை முடக்குவது குறித்து அவதானம் செலுத்துவதை விடுத்து பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண அவதானம் செலுத்துமாறும், அதற்கு கட்சி என்ற ரீதியில் ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டை மாத்திரமல்ல, இராணுவத்தையும் இல்லாதொழித்து சென்றுள்ளார் என இராணுவத்தினர் குறிப்பிடுகிறார்கள்.

கோட்டபய ராஜபக்ஷ கால்வாய், சுத்தப்படுத்துவதற்கும், கட்டடம் அமைப்பதற்கும், வீதி நிர்மாணிப்புக்கும் இராணுவத்தை பயன்படுத்தினார். அமுதா கத என்ற விசேட படையணியை உருவாக்கி 40 ஆயிரம் பேரை இணைத்துக்கொண்டு தனது இராணுவ நிலைப்பாட்டை மேம்படுத்தினார்.

இதன்பிறகு விவசாயத்துறை தொடர்பில் படையணியை ஸ்தாபித்து விவசாயத்தையும் முழுமையாக இல்லாதொழித்தார். நான் இராணுவத்தை அவமதிக்கும் வகையில் செயற்படவில்லை. இன்று இராணுவத்திற்காக வரிந்துக் கொள்பவர்கள் இராணுவத்தின் சம்பளம் தொடர்பில் கருத்துரைக்கவில்லை.

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இராணுவத்தினரது சம்பள அதிகரிப்புக்காக 20 பில்லியன் ரூபா மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராகிய எமக்கே ஒன்றும் தெரியாது. தெரிந்தவர்களினால் நாடு சீரழிந்துள்ளது. இருப்பதையும் சீரழிக்க வந்துள்ளார்கள். இராணுவத்தினரை விற்று பிழைத்து அரசியல் செய்யும் தரப்பினர் இராணுவத்தினரது சம்பளம் பற்றி கருத்துரைக்கவில்லை.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாளிகைக்குள் வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டது – விமல் வீரவன்ச பகீர் !

கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்தபோது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி நாட்டில் பல்வேறு இடங்களில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அத்தோடு, கோட்டை ஜனாதிபதி மாளிகை, மற்றும் அலரி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்து அவற்றை ஆக்கிரமித்திருந்தனர்.

இதன்போதே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை கொல்லும் திட்டம் தீட்டப்பட்டதாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு கோடியே 78 இலட்சம் ரூபா பணம் – கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் !

ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு கோடியே 78 இலட்சம் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவை கோட்டை நீதவான் திலின கமகே கோட்டை பொலிஸாருக்கு வழங்கியதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்ட பணம் இலஞ்சமாக அல்லது வேறு ஏதாவது விடயம் தொடர்பில் பெறப்பட்டதா என்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதியின் சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிரிஹானவில் உள்ள அவரது இல்லத்தில் இல்லை என பொலிஸார் வழங்கிய தகவலை கவனத்தில் கொண்ட நீதவான், அவர் தற்போது வசிக்கும் இல்லத்திற்கு சென்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.