அமைச்சர் சரத் வீரசேகர

அமைச்சர் சரத் வீரசேகர

சட்டத்தரணிகள் சங்கம் எம்.ஏ. சுமந்திரனுக்கு பயந்து போயிருக்கிறதா..? – சரத்வீரசேகரக கேள்வி..!

நீதிமன்றத்தை அச்சுறுத்தியதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்துள்ள பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்குள் நடந்துகொள்ளும் முறைமை தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குண்டர்களால் பௌத்த உரிமை நாசமாக்கப்படுகின்றது. அவற்றை வடக்குக்கு சென்று பார்த்துவருமாறு சட்டத்தரணிகள் சங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

பௌத்த உரிமைகளை நாசமாக்கும் பிரிவினைவாத குண்டர்களுக்காக முன்னிலையாகுவதற்கு முன்னர், இரண்டொரு தடவைகள் சிந்தித்துப் பார்க்குமாறும் சட்டத்தரணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘நாங்கள் அனைவரும் நீதிமன்றத்தை மதிக்கிறோம்’ என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரன், உயர்நீதிமன்றம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா, அவருக்குப் பயந்து தானா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

இலங்கையின் நீதித்துறை குறித்து வெளியிடப்பட்ட அவமானகரமான மற்றும் அருவருப்பான அறிக்கைகள் தொடர்பில், தானாக முன்வந்து ஜெனீவா சென்று கண்டித்ததாகவும் சரத் வீரசேகர அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த அரசாங்கமே யுத்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு நாட்டை காட்டி கொடுத்தது.” – அமைச்சர் சரத் வீரசேகர

அண்மையில் ஊடகவியலாளர் சமுதிதவின் வீட்டின் மீதான தாக்குதல் இடம்பெற்றபோது, அங்கு வந்து தாக்குதலை நடத்தியவர்கள் வெள்ளைவானில் வந்திருந்தார்கள் இந்தநிலையில் எதிர்க்கட்சியினர் இது தொடர்பான தங்களுடைய அனுதாபத்தையும் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கருத்து சுதந்திரம் மீதான அடக்குமுறை மற்றும் ஊடகவியலாளர்களின் மீதான அச்சுறுத்தல் குறித்து  சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

குறித்த கேள்விக்கு பதிலளித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர,

ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக  தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் பேதிலளித்த அவர்,

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலமாக ஜெனிவா கூட்டத்தொடரை இலக்கு வைத்தே எதிர்க்கட்சி காய் நகர்த்துகின்றது என்பது புலனாகின்றது. கடந்த அரசாங்கமே யுத்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு நாட்டை காட்டி கொடுத்தது. இனிமேலும் இவ்வாறான கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்.

 

“யுத்தத்தின் போது நாங்கள் திட்டமிட்டு வடபகுதிக்கான உதவிப்பொருட்களை தடுக்கவில்லை.” – அமைச்சர் சரத் வீரசேகர

“அனைவரும் நாங்கள் எந்த யுத்த குற்றங்களையும் இழைக்கவில்லை என உறுதியாக தெரிவித்தும் கூட  அப்படியான சூழ்நிலையில் ஏன் சில நாடுகள் எங்கள் யுத்த வெற்றி வீரர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கையிலிருந்தே ஆரம்பமாகின. இந்த அறிக்கை எங்களிற்கு எதிராக யுத்த குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியமை தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகள் ,சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறியமை தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. நான் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு தனியாக சென்று அந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தேன்.

உதாரணத்திற்கு யுத்தத்தின் போது நாங்கள் திட்டமிட்டு வடபகுதிக்கான உதவிப்பொருட்களை தடுத்தோம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அது தவறானது. நான் அவ்வேளை கடற்படையிலிருந்தேன். வடபகுதிக்கு உதவிப்பொருட்களுடன் நூற்றுக்கணக்கான கப்பல்கள் சென்றன.
ஐ.நா உட்பட சர்வதேச சமூகம் இலங்கையை இதற்காக பாராட்டின.

முல்லைத்தீவு அரசாங்கஅதிபராகயிருந்த இமெல்டா சுகுமார் ஒருமுறை மூன்று மாதங்களிற்கு அவசியமான உணவுப்பொருட்கள் இருப்பதாக தெரிவித்தார். இப்படியிருந்த போதிலும் மங்களசமரவீர யுத்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார். புரணகம ஆணைக்குழுவுடன் ஆறு சர்வதேச அளவில் பெயர் பெற்ற யுத்த குற்ற நிபுணர்கள் இணைந்து செயற்பட்டனர். அவர்கள் அனைவரும் நாங்கள் எந்த யுத்த குற்றங்களையும் இழைக்கவில்லை என உறுதியாக தெரிவித்தனர். அப்படியான சூழ்நிலையில் ஏன் சில நாடுகள் எங்கள் யுத்த வெற்றி வீரர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.

அமைச்சர் ஜிஎல்பீரிஸ் சிறப்பாக செயற்படுகின்றார். பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுபவர்களை காப்பாற்ற சட்டங்களை தேவைப்பட்டால் திருத்துவேன் என தெரோசா மே தெரிவித்தார். அவர் அவ்வளவு தூரம் சென்றார் ஆனால் ஏன் எங்களிற்கு இதனை செய்கின்றனர். இவை அனைத்தும் போலியான பிழையான திட்டங்கள் நாங்கள் இவற்றை சவாலிற்கு உட்படுத்தவேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

“வைரசுடன் இணைந்து அரசை அழிக்க சஜித் தரப்பு முயற்சி.” – சரத் வீரசேகர

“எதிரக்கட்சியினர் வைரசுடன் இணைந்து அரசாங்கத்தை அழிக்கக்கூடாது.”என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பிரதான எதிர்க்கட்சியினர் கொழும்பில் செவ்வாய்க்கிழமை (16) ஏற்பாடு செய்த பல கூட்டங்களை அரசாங்கம் தடுத்து நிறுத்த காவல்துறையினரை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையில் குற்றம் சுமத்திய வேளையில் அதற்கு பதில் தெரிவித்த போதே அமைச்சர் சரத் வீரசேகர இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

எதிர்க்கட்சிக்கு துளியளவேனும் நாட்டின் மீது பற்று இருக்குமென்றால் எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் எதிர்கட்சிகள் செய்ய வேண்டியது என்னவென்றால், அரசாங்கத்துடன் இணைந்து வைரஸை அழிக்க வேண்டுமே தவிர, வைரசுடன் இணைந்து அரசாங்கத்தை அழிக்கக்கூடாது.

ஆனால் எதிர்க்கட்சி அரசாங்கத்தை அழிக்கவே முயற்சிக்கின்றது. நாட்டின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றவே காவல்துறையினர் உள்ளனர். ஆர்ப்பாட்டங்கள் அல்லது மக்கள் கூட்டங்களினால் வைரஸ் பரவுகின்றது என சுகாதார தரப்பினர் ஏதேனும் ஆலோசனைகளை வழங்கினால் அதனையும் காவல்துறையினரே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எனவே சட்டத்தை காப்பாற்றும் பணியையே காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

அதேபோல் தேசிய பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். எதிர்கட்சியின் தரப்பில் ஒருவரது தந்தை, நாட்டில் குண்டு வெடிக்கப்போவதாக கூறியும் அது குறித்து கவனத்தில் கொள்ளாது உறங்கிவிட்டு மக்களின் உயிரை பறிகொடுக்க வேடிக்கை பார்த்த நபர்கள் எதிர்க்கட்சி தரப்பிலே உள்ளனர்.

எமது ஆட்சியில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அதில் அச்சம் கொள்ளத்தேவையில்லை. ஆனால் சுகாதார தரப்பின் வலியுறுத்தலுக்கு அமைய காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

“சஹ்ரான் தொடர்பான விசாரணை அறிக்கைகள் ஏன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.?” – ரணில் கேள்வி !

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த எவரையும் சந்திக்கவில்லை என்பது ஆதாரங்களின்படி தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர், ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் சஹ்ரானின் மனைவி விசாரிக்கப்பட்டதாகவும், தனது கணவர் புலனாய்வு அதிகாரிகளை சந்தித்ததாக அவர் ஒருபோதும் குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார். தான் ஆதாரங்களின் பதிவுகளை ஆய்வு செய்ததாகவும் அவருடைய கணவர் உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்தது பற்றி எந்த ஆவணங்களும் வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சஹ்ரானுக்கு புலனாய்வுப் பிரிவுகளுடன் அல்லது பாதுகாப்புப் படையினருடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

இதே நேரம் சஹ்ரான் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய போது , “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நான் இங்கு ஒன்றைக் கூற வேண்டும். சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ். பயங்கரவாதப் பயிற்சிப் பெற்ற எந்தவொரு நபராலும் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த விடயத்தை யாரும் அரசியல் மயப்படுத்தக்கூடாது. விசாரணை அறிக்கைகளை ஏன் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கவில்லை என்பதுவே எமது கேள்வியாகும். சாதாரணமாக எந்தவொரு ஆணைக்குழுவில் விசாரணைகள் நடக்கும்போதும் சாட்சிகளின் வாக்குமூலம் உள்ளிட்டவற்றின் அறிக்கைகளை வெளிப்படுத்திக்கொண்டுதான் வருகிறோம்.

இவற்றை சபையில் இருந்து மறைக்க முடியாது. அவ்வாறு விசாரணைகளை மறைப்பது எமது வரப்பிரசாதங்களை மீறும் செயற்படாகும். தாக்குதல் இடம்பெற்ற உடனனேயே, பொலிஸாரும் சி.ஐ.டியினரும் இணைந்துதான் பொரளை உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கியிருந்த சூத்திரதாரிகளை கைது செய்தார்கள். மாறாக புலனாய்வுப் பிரிவினர் அல்ல என்பதையும் நான் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

“தேசிய நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து சுதந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்துபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.” – அமைச்சர் சரத் வீரசேகர

“தேசிய நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து சுதந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்துபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.”  என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

முல்லேரியாவ பிரதேசதத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை முடக்கும் வகையில் சட்டம் உருவாக்கும் யோசனை ஏதும் கிடையாது. தற்போது நடைமுறையில் உள்ள தண்டனை சட்டகோவையின் உள்ளடக்கங்களில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தவும், புதிய விடயங்களை இணைத்துக் கொள்ளவும் மாத்திரம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளில் கருத்து சுதந்திரம் பிரதான ஒன்றாக காணப்படுகிறது. ஜனநாயக நாடுகளில் கருத்து சுதந்திரம் தாராள மயமாக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டிலும் அத்தன்மையே காணப்படுகிறது. நல்ல நோக்கத்திற்காக வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை ஒரு தரப்பினர் தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் சிலர் போலியான செய்திகளை பதிவேற்றம்’ செய்து சமூகத்தின் மத்தியில் மாறுப்பட்ட நிலைப்பாட்டை தவறான முறையில் தோற்றுவிக்கிறார்கள். ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் பதிவுகள் வெறுக்கத்தக்க வகையில் காணப்படுகிறது.

இவை தேசிய நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி இறுதியில் அடிப்படைவாத முரண்பாடுகளை தோற்றுவிக்கும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. கருத்து சுதந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்துபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.” என்றார்.

“சமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கு கனவிலும் இடமில்லை.” – விக்கினேஸ்வரனுக்கு சரத் வீரசேகர பதில் !

“புதிய அரசமைப்பிலும் ஒற்றையாட்சியே பேணப்படும். ஒற்றையாட்சியால் நாடு எந்தப் பேரழிவையும் சந்திக்கவில்லை. சமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பு உருவாக்க நிபுணர் குழுவிடம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யோசனைகளை அந்தக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் சமர்ப்பித்திருந்தார். அதில் ஒற்றையாட்சியால்தான் நாடு பேரழிவைச் சந்தித்தது என்றும், புதிய அரசமைப்பில் சமஷ்டி அல்லது கூட்டாட்சி முறைமை உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

சமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்சு இந்த ஆட்சியில் இடமில்லை. இந்த முறைமைகள் புதிய அரசமைப்பில் இருக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் அணியினர் கனவு காணக்கூடாது. நடைமுறையில் இருக்கும் ஒற்றையாட்சி முறைமை மூலம்தான்  தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.

புதிய அரசமைப்பில் இது தொடர்பில் தெளிவாகப் குறிப்பிடப்படும்.

ஒற்றையாட்சி முறைமையால் இந்த நாடு பேரழிவுகளைச் சந்திக்கவில்லை. பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நாட்டை மீட்டெடுத்தோம். தமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழக் கனவைத் தவிடிபொடியாக்கினோம். அவர்களை இல்லாதொழித்தோம்.

சமஷ்டி அல்லது கூட்டாட்சி முறைமைதான் பிரிவினைக்கு வழிவகுக்கும். அது நாட்டைப் பிளவுபடுத்தும்; நாட்டின் நல்லிணக்கத்துக்குப் பாதகமாக அமையும்.” என்றார்

“மணிவண்ணன் தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யவே முயன்றார்.” – அமைச்சர் சரத் வீரசேகர

“யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்ற குற்றச்சாட்டிலேயே  கைதுசெய்யப்பட்டார்.” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஊடக நேர்காணல் ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவரிடம் மணிவண்ணன் கைது தொடர்பாக கேட்கப்பட்ட போது ,

கேள்வி:- யாழ்ப்பாணம் முதுல்வர் தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றார் என்று எந்த அடிப்படையில் சொல்கின்றீர்கள்?

பதில்:- தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் காவல்துறை பயன்படுத்திய சீருடையை ஒத்த சீருடையைத்தான் யாழ்ப்பாணம் மாநகர சபைமுவல்வர் மணிவண்ணன் பயன்படுத்தியுள்ளார்.

கேள்வி:- இதே சீருடையைத்தானே கொழும்பு மாநகர சபையும் பயன்படுத்தியுள்ளதே?

பதில்:- கொழும்பு மாநகர சபையின் சீருடைக்கும் இதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. கொழும்பு மாநகர சபை மேற்படி திட்டத்தை சபையின் முழுமையான அனுமதியுடன் செயற்படுத்துகின்றது. ஆனால், யாழ்ப்பாணம் மாநகர சபையில், முவல்வர் மணிவண்ணனின் தனிப்பட்ட விருப்பில்தான் இந்தப் படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சீருடையும் அவரின் விருப்புக்கு அமைவாகவே தயாரிக்கப்பட்டுள்ளன. இது எமது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் மாநகர காவல் படைக்கோ அவர்களது சீருடைக்கோ மாநகர சபையின் அனுமதியை மணிவண்ணன் பெற்றுக் கொள்ளவில்லை. மாநகர சபையின் அதிகாரங்களை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

மேலும், யாழ். மாநகர காவல் படை காவற்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட ஆரம்பித்தது. சமூக ஊடகங்களில் யாழ். மாநகர சபையின் சீருடையையும் விடுதலைப்புலிகளின் காவல்துறையின் சீருடையையும் ஒப்பிட்டுப் படங்கள் பகிரப்பட்டுள்ளன. இதனைத் தமிழ்த் தரப்பினரே சுட்டிக்காட்டியுள்ளனர்.” என்று அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்

“பாரதிய ஜனதா கட்சியின் இலங்கைப் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உருவாகலாம்” – அமைச்சர் சரத் வீரசேகர

“பாரதிய ஜனதா கட்சியின் இலங்கைப் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உருவாகலாம்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் ,

இந்திய பாரதிய ஜனதா கட்சி இலங்கையிலும் ஆதிக்கம் செய்யும் என அமைச்சர் அமித் ஷா கூறினார் என வெளிவரும் செய்திகளில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் என எதுவும் இல்லை.

நிகழ்வொன்றில் அவர் உணவு உட்கொண்டவேளையில் அருகில் இருந்தவர் களுக்குக் கூறினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.ஆனால் எனது தனிப்பட்ட நிலைப்பாட்டை என்னால் கூற முடியும்.

பாரதிய ஜனதா கட்சியினால் நேரடியாக இலங்கையில் அரசியல் செய்ய முடியாது. அதற்கான அரசியல் அமைப்பு ரீதியிலான அனுமதியும் இல்லை. தேர்தல்கள் திணைக்களமும் அதற்கு அனுமதிக்க வாய்ப்புகள் இல்லை. எனவே, இது ஒரு கதையாக வேண்டுமானால் கூறலாம்.

ஆனால் அவர்களால் மறைமுக அரசியலில் ஈடுபட முடியும். அதற்கு அனுமதி இலங்கையில் உள்ளது. எவ்வாறெனின், இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியினூடாக இலங்கையில் அவர்களின் கொள்கையைப் பரப்பி
அவர்களின் இலங்கைப் பிரதிநிதிகளாக இங்கு ஒரு கட்சி இயங்க முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்றொரு கட்சியை அவர்களின் பிரதிநிதிகளாக வைத்துக்கொள்ள முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை அவர்கள் இன்று வரை இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளாக இலங்கையில் செயற்பட்டு வருகின்றனர்.அவர்களுக்காக முழு நிதியும் மேற்கு நாடுகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் மூலமாகவும்,புலிகளை ஆதரிக்கும் அமைப்புகள் மூலமாகவும் கிடைத்து வருகின்றன.

தேசியக் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கட்சியை உருவாக்கினாலும் வாக்களிக்க வேண்டிய கடமை மக்களிடம் உள்ளது. மக்கள் ஆதரிக்க வேண்டுமே ”என அவர் மேலும் தெரிவித்தார்.

“ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் இம்முறை இலங்கைக்கு ஆதரவாக 47 இற்கும் அதிகமான நாடுகள் ஒன்றிணைந்து செயற்படவுள்ளன” – அமைச்சர் சரத் வீரசேகர

“ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் இம்முறை இலங்கைக்கு ஆதரவாக 47 இற்கும் அதிகமான நாடுகள் ஒன்றிணைந்து செயற்படவுள்ளன” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் நடைபெறவுள்ள ஐ.நா.கூட்டத்தொடர் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஒருமித்த நாட்டின் கொள்கையினை மாணவர்களுக்கு ஆரம்ப காலத்தில் இருந்து கற்றுக் கொடுக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை,சுயாதீனத்தன்மை ஆகியவை குறித்து இளம் தலைமுறையினர் அதிக அக்கறை கொள்ள வேண்டும். பாரிய போராட்டத்திற்கு மத்தியில் நாடு பாதுகாக்கப்பட்டுள்ளது.

தற்போதைய இளம் சந்ததியினர் நாடு குறித்து பற்று இல்லாமல் செயற்பட்டால் எதிர்காலத்தில் பிரிவினைவாதம் நாட்டை பிளவுபடுத்தும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் இம்முறை இலங்கைக்கு ஆதரவாக 47 இற்கும் அதிகமான நாடுகள் ஒன்றிணைந்து செயற்படவுள்ளன.

நல்லாட்சி அரசாங்கம் நாட்டை அரசியலமைப்பின் ஊடாக பிளவுபடுத்த பல நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதற்கு நாங்கள் இடமளிக்கவில்லை. ஒற்றையாட்சி நாட்டுக்குள் ஒரு சட்டம் மாத்திரமே செயற்படுத்தப்பட வேண்டும். அனைத்து இன மக்களும் பொது சட்டத்திற்கு அடிபணிய வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு நல்லாட்சி அரசாங்கம் இணையனுசரணை வழங்க இணக்கம் தெரிவித்தமை தேசத்துரோக செயற்பாடாக கருதப்படும்.

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் சார்பாக செயற்பட்டமையினால் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 30(1) பிரேரணையில் இருந்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக விலகியது. நாட்டுக்கு எதிரான பிரேரணைகளுடன் இணைந்திருக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது” என்றார்.