இரா.சாணக்கியன்

இரா.சாணக்கியன்

ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் – ரணில் விக்கிரமசிங்க மீது சாணக்கியன் சாடல் !

இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது சர்வதேச விசாரணைக்கு தயார் எனக் கூறியவர் இன்று 300 கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சர்வதேச விசாரணையை செய்வதற்கு தயங்குகின்றார் என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இனிவரும் காலங்களிலும் தங்களுடைய அதிகாரத்தை தக்கவைப்பதற்கு, தங்களுடைய எஜமானர்களின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களுடைய பிள்ளைகளையும் இவர்கள் பலிக்கடாவாக்கலாம். ஆகவே எங்களுடைய மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு புனித செபஸ்தியன் பேராலயத்தில் இன்றைய தினம் ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான விசேட திருப்பலி பூஜையும் நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.

ஆலயத்தின் பங்குத்தந்தை அனஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலியில் அருட்தந்தை நவரெட்னம் நவாஜி அடிகளார், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈஸ்டர் தாக்குதலில் உயிர் நீர்த்தவர்களின் ஆதம்சாந்திக்கான விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டுவர விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆலய முன்றிலில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் போது உயிர்நீர்த்தவர்களின் உருவப்படம் தாங்கிய பதாகை வைக்கப்பட்டு அதற்கு முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பொதுமக்கள், அருட்சகோதரிகள், ஆலய பங்குமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,

கொடூரமான ஈஸ்டர் குண்டுவெடிப்புக் கொலை நடந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்கின்றது. இந்தக் குண்டுத் தாக்குதல் இயல்பாக நடந்ததா, இதற்குப் பின்னால் ஒரு பின்புலம் இருந்ததா, அரசியல் இலாபம் அடைவதற்காக செய்யப்பட்டதா எனப் பல சந்தேகங்கள் அந்த நேரத்தில் எழுந்தது. ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அந்த சந்தேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து சந்தேகத்திற்கிடமில்லாமல் இதுவொரு அரசியல் பின்புலத்துடன் சம்பந்தப்பட்டது என்பது போல் தென்படுகின்றது. இந்தக் கொலைக்குப் பின்னாலிருந்த எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இது விசாரணைக்குரிய காலமல்ல தீர்ப்பு வழங்கவேண்டிய காலமாகும். வத்திக்கான் போப்பாண்டவர் உட்பட மதத்தலைவர்கள் பலராலும் எத்தனையோ அழுத்தங்கள் கொடுத்தும் இலங்கை அரசாங்கம் மக்கள் நம்பக்கூடிய வகையில் இதுவரை மக்களுக்கு எந்தவொரு நீதியும் வழங்கவில்லை என்பதே சந்தேகத்திற்குரிய விடயமாகும்.

ஈஸ்டர் குண்டு வெடிப்பிற்குப் பின்புலத்தில் இருந்தவர்கள் யாரென்பது கடந்த வருடம் சனல்-4 ல் வெளிவந்த ஆவணப்படம் மூலமாக பல சந்தேகங்கள் இன்றும் எழுப்பப்பட்டிருக்கின்றது.

இன்று நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவுடன் தான் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். கடந்த வருடம் ஒரு சர்வதேச ஊடகவியலாளர் ஏன் இதற்கு ஒரு விசாரணை ஆரம்பிக்கப்படவில்லை, சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் உண்மை கண்டறியப்படலாம் என்று கூறியபோது உள்நாட்டு விசாரணை போதும் எனக் கூறியிருந்தார்.

இதே ஜனாதிபதி பிரதமராக இருந்தபோது 2017ல் ஐ.நா மனிதவுரிமைப் பேரவையிலே 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டுமென்றால் சர்வதேச விசாரணைக்கு நான் தயாரெனக் கூறியிருந்தார்.

இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது சர்வதேச விசாரணைக்கு தயார் எனக் கூறியவர் இன்று முந்நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சர்வதேச விசாரணையை செய்வதற்கு தயங்குகின்றார் என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றது.

ஈஸ்டர் குண்டுவெடிப்பானது கொழும்பு, நீர்கொழும்புடன் சேர்ந்து ஏன் மட்டக்களப்பில் மட்டும் நடத்தப்பட்டது. வடக்கு கிழக்கிலே எட்டு மாவட்டங்கள் இருக்கின்றபோது ஏன் மட்டக்களப்பில் மட்டும் நடத்தப்பட்டது என்பது பற்றி எமது மக்கள் மிக அவதானமாக சிந்திக்க வேண்டும். தமிழ் மக்கள் அதிகமான வாழ்கின்ற, தமிழ் வாக்காளர்கள் அதிகம் இருக்கின்ற மட்டக்களப்பிலே ஏன் இந்தக் குண்டுவெடிப்பு நடந்தது என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்புக் காணொளியிலே மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டிருக்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுடைய ஊடகப்பேச்சாளர் அசாத் மௌலானா அவர்களின் வாக்கு மூலத்திலே சொல்லப்படுகின்ற விடயங்களைப் பார்த்தால் எம்முடைய மக்களுக்கு உண்மை புரியும்.

அதாவது ராஜபக்ச குடும்பத்தினர் இந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடந்ததினூடாக நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளது, நாட்டில் பலமானதொரு தலைவர் இருந்தால்தான் இங்குள்ள சிங்கள மக்களுக்குப் பாதுகாப்பு என்பதுபோல ஒரு மாயை உருவாக்கினார்கள்.

ஆயுத முனையிலே எமது மக்களை கடந்த காலத்தில் அழித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் பிள்ளையான் அவர்களை ஏதோ தமிழ் மக்களின் ஒரு காவலர் போன்றதொரு விம்பத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடந்த காலப்பகுதியிலே உருவாக்கியது.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடந்த காலப்பகுதியிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பல வன்முறைகள் தூண்டப்பட்டிக்கும். அன்று தமிழரசுக் கட்சியினரான நாங்கள் மட்டக்களப்பிற்கு தலைமைத்துவம் வழங்கிய காரணத்தினால்தான் துரதிஷ்டவசமான சம்பவங்கள், கலவரங்கள் எதுவும் நடைபெறாமல் பொறுப்புள்ள தலைவர்களாக மக்களை வழிநடத்தியிருந்தோம்.

இவர்களைப்போல கொடூரமான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நபர்கள் அதாவது கிறிஸ்மஸ் ஆராதனையின்போது தேவாலயத்தினுள்ளே ஒரு பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவை சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டிலே சிறையிலிருந்த ஒருவர் அந்த நேரத்தில் இருந்திருந்தால் எவ்வாறான வன்முறைகள் நடந்திருக்கும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு புத்தகத்தை எழுதுவதனூடாக தங்களுடைய இரத்தக் கறைகளை கழுவியூற்ற முடியாது. ஆலயங்களிலே இந்த நிகழ்வுகளை நாங்கள் ஒழுங்கமைத்து மக்களை நாங்கள் திரட்டியெடுத்து ஆராதனையையும் நீதிக்கான அஞ்சலி நிகழ்வையும் நடத்துகின்றோமென்றால் இலங்கை சட்டத்திலே இவர்களுக்கு தண்டனை இல்லாதுபோனாலும் இறைவனுடைய நீதியின் கிழ் இவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். இவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. மட்டக்களப்பிலே கொல்லப்பட்டது பிஞ்சுக் குழந்தைகள். அவர்களுடைய இறுதிக் கிரியைகளைச் செய்வதற்கு தாயோ தந்தையோ அங்கு இல்லாத நிலை காணப்பட்டது. அவர்கள் வைத்தியசாலையில் இருந்தனர், சிலர் உயிரிழந்திருந்தனர்.

அன்றைய தாக்குதலில் ஒரு குழந்தை தனது தாயையும் தந்தையையும் இழந்ததுடன் தனது இரு கண்களையும் இழந்து இன்றும் உயிருடன் இருக்கின்றது.

நீங்கள் உங்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து தப்புவதற்காக, சிறையிலிருந்து தப்புவதற்காக, ஆட்சிக்கு வரவேண்டும் என்பற்காக செய்த பாவச் செயலுக்கு மக்கள் மன்னிப்பு வழங்கினாலும் இறைவன் உங்களுக்கு மன்னிப்பு வழங்கப்போவதில்லை. நீங்கள் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்தே தீரவேண்டும். உங்களுக்கான தண்டனைணை எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் வழங்குவார்கள்.

முந்நூறு பேரின் இரத்தக்கறைகளின் மீதுதான் நீங்கள் கொங்கிறீட் பாதைகளில் பயணிக்கின்றீர்கள். பாதைகளுக்கு கொங்குறீட் இடுவதும் மக்களின் வரிப்பணத்தில்தான். வீதி அபிவிருத்தி செய்வதனூடாக மகாத்மா காந்தி ஆகிவிட முடியாது. வீதி அபிவிருத்தி செய்வதனூடாக நீங்கள் செய்த கொலைகளுக்கு பரிகாரம் செய்துவிட முடியாது.

குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் அணுவணுவாக செத்துக் கொண்டிருக்கின்றார்கள். என்னுடைய கணவரும் இரண்டு குழந்தைகளும் மரணித்தது ஒரு தடவைதான். ஆனால் நான் அவர்களைப் பற்றி சிந்தித்து தினமும் செத்துக் கொண்டிருக்கின்னே; என அண்மையில் ஒரு தாய் தெரிவித்திருக்கின்றார்.

அன்று சியோன் தேவாலயத்தில் வெடித்த குண்டானது எந்தத் தேவாலயத்திலும் வெடித்திருக்கலாம். அவர்கள் சீயோன் தேவாலயத்தை தெரிவு செய்ததற்கான காரணம் என்னவென்பது தெரியாது. எங்கு வேண்டுமானாலும் அது நடந்திருக்கலாம். மரணித்தவர்கள் உங்களுடைய உறவினர்களாகக் கூட இருந்திருக்கலாம். இவர்களுடைய இரத்த வெறியிலே அகப்பட்டது உங்களுடைய பிள்ளைகளாக இருந்திருக்கலாம். இனிவரும் காலங்களிலும் தங்களுடைய அதிகாரத்தை தக்கவைப்பதற்கு, தங்களுடைய எஜமானர்களின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களுடைய பிள்ளைகளையும் இவர்கள் பலிக்கடாவாக்கலாம். ஆகவே எங்களுடைய மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இந்தக் கொலைக் கும்பலை இந்த மாவட்டத்திலிருந்து நாங்கள் அகற்ற வேண்டும், இந்தக் கொலைக் கும்பலை இந்த நாட்டைவிட்டே அகற்ற வேண்டும். நாட்டைவிட்டு அகற்றவேண்டுமானால் அவர்களை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும்.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடைபெற்று ஐந்தாவது வருடம் முடிவடைந்த இந்நாளில் இந்த மக்களுக்கான நீதியை கோருவதற்காக எங்களுடன் கைகோர்த்து வாருங்கள், நாங்கள் தனியாக இதனை செய்ய முடியாது, ஒரு கட்சியாக இந்தப்பொறுப்பை தனியாக முன்னெடுக்க முடியாது, மக்கள் எங்களுடன் ஒன்றாக நின்றால் இந்தக் கொலைகாரர்களுக்கு தண்டனை வழங்கலாம். மிகவிரைவில் ஒரு தேர்தல் நடைபெறவிருக்கின்றது. தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது.எதிர்காலத்தில் நாங்கள் தலைவராக தெரிவுசெய்பவர் ஊடாக இந்த கொலைகார கும்பல்களுக்கு தண்டனைப்பெற்றுக்கொடுக்க எங்களுடன் இணைந்துவரவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றேன் என்றார்.

‘நீதிக்காக ஏங்கிக் கொண்டு இருக்கின்ற சமூகமாக இருந்து கொண்டிருக்கின்றோம்..” – இரா.சாணக்கியன்

2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய நாங்கள் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடியதான தீர்மானமாக இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (14) பல்வேறு நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு, இருதயபுரம் மற்றும் கறுவப்பன்கேனி பகுதியில் உளள இளைஞர் விளையாட்டுக் கழகம் ஒன்றினால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பல்வேறுபட்ட விளையாட்டு நிகழ்வுகள் நேற்று மாலை இடம் பெற்றது.

இந்நிகழ்வில் தலையணை அடித்தல், மெதுவாக மோட்டார் சைக்கிள் ஓடுதல், கயிறு இழுத்தல், தேங்காய் துருவுதல், தொப்பி மாற்றுதல் போன்ற பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஆண்கள் பெண்கள் சிறுவர்களுக்கென இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்து கொண்டதுடன் விளையாட்டு கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
2024 ஆம் ஆண்டு சித்திரை மாதம் புதிய வருடம் பிறந்திருக்கின்றது இந்த புதிய வருடத்திலேயே எமது தமிழ் மக்களுக்கு தமிழ் பேசும் மக்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை நாங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய அவா.

எங்களுடைய தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை நமது அரசியல் அபிலாசைகளை இந்த வருடத்தில் பூர்த்தியாக வேண்டும் என்பது நமது அனைவருடைய அவாவாக இருக்கின்றது அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு தேர்தல்கள் நிறைந்த வருடங்களாக இருக்க கூடும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.

இந்த காலப்பகுதியில் நமது மக்கள் ஒரே ஒரு விடயத்தை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டு எமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் முடிவுகளை எடுக்க வேண்டும் 2024 ஆம் ஆண்டு இன்று நாம் சித்திரை புத்தாண்டை கொண்டாடுகிறோம் ஆனால் இன்னுமொரு மாதம் சென்றால் மே 18ஆம் தேதி 15 வருடங்களுக்கு முதல் எமது மக்கள் முள்ளிவாய்க்காலில் அந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாக போகின்றது.

இந்த 15 வருடங்களாக நமது மக்களுக்கு நீதி இல்லாமல் நீதியை கோரிக் கண்டு நீதிக்காக ஏங்கிக் கொண்டு இருக்கின்ற சமூகமாக இருந்து கொண்டிருக்கின்றோம்.

அந்த வகையில் இந்த வருடத்தில் நாங்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் அரசியல் ரீதியாக எம்முடைய இனம் சார்ந்த நமது இனத்தை தலை நிமிர்ந்து வாழ வைக்க கடிய வகையில் நமது இனத்திற்கான நீதியை கேட்டு கிடைக்கக்கூடிய வகையான தீர்மானங்களை எமது மக்கள் எடுக்க வேண்டும்.

நேற்றைய தினம் பார்த்தேன் ஒரு அமைச்சர் கூறி இருந்தார் நிமல் சிறிபாலடி சில்வா என்கின்ற அமைச்சர் இருக்கின்றார் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இந்த நாட்டினுடைய ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் கூட அந்த அமைச்சர் அவருடைய அரசாங்கத்தின் அமைச்சராக இருந்திருப்பார் என்று கூறி இருக்கின்றார்.

தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த இடத்தில் இன்று நீதியினை கோறுகின்றோமே தவிர இந்த ஊழல் மோசடிகள் செய்யும் அமைச்சுப் பதவிகளையோ அல்லது ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அமைச்சர்களை எமது பக்கம் எடுப்பதோ ஒருபோதும் செய்யப் போவதில்லை.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய நாங்கள் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியதான தீர்மானமாக இருக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன் என தெரிவித்தார்

”நாட்டின் ஜனாதிபதியைத் தீர்மானிப்பவர்கள் தமிழர்களாக இருக்கவேண்டும்” – இரா.சாணக்கியன்

”நாட்டின் ஜனாதிபதியைத் தீர்மானிப்பவர்கள் தமிழர்களாக இருக்கவேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” வடமாகாணத்தில் கிளிநொச்சி என்னும் இடத்திற்குள்ளேயே செல்லமுடியாத அமைச்சர் ஒருவரின் ஆதரவினை கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவார் என நினைத்தால் அது ஒரு சவாலான விடயம் தான்.

 

ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அனுரகுமார திசாநாயக்காவினை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்த கட்சியில் போட்டியிடப் போகின்றார்? கூட்டமைப்பினை எவ்வாறு அமைக்கப்போகின்றார்? என்பதே தற்போது எழுந்துள்ள பிரச்சினை.

 

இன்று மொட்டுக்கட்சியும் பிரிந்த நிலையில் உள்ளது.மொட்டுக்கட்சி உருவாக்கப்பட்டது ராஜபக்ஸக்களின் எதிர்காலத்திற்காகும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அனைத்து பொறுப்புகளும் மகிந்த ராஜபக்ஸவிடம் இருந்தநேரத்தில் அதனை மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கிவிட்டு மொட்டுக்கட்சியை ஆரம்பித்தனர். இன்று அந்த கட்சி குழப்பநிலையில் உள்ளது.

 

இன்று நாமல் ராஜபக்ஸ தனது தந்தையினைப் போன்று கும்பிடு போட்டுக்கொண்டு விகாரைகள் எல்லாம் சுற்றித்திரிகின்றார். இவர்கள் விகாரைகளை சுற்றித் திரிவதே நாட்டுக்கு ஒரு ஆபத்தான நிலைமையாகப் பார்க்கப்படுகின்றது.

 

அதேநேரம் மொட்டுக்கட்சின் பிரதான உறுப்பினரும் பசில் ராஜபக்ஸவின் வலதுகையுமான பிரசன்ன ரணதுங்க நாமல் ராஜபக்ஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால் மொட்டு பிளவுபடும் என்று சொல்கின்றார்.

 

இன்று அவர்களுக்குள்ளே குழப்பம் இருக்கின்றது. எதிர்வரும் காலத்தில் தேர்தல் ஒன்று நடந்தால் அந்த சந்தர்ப்பத்தினை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஐந்து வருடத்திற்கு ஓரு முறை வரும் சந்தர்ப்பத்தினை மக்கள் சரியாக பயன்படுத்தாமல் விட்டால் அடுத்த ஐந்து வருடத்திற்கு எமது எதிர்காலம் மிக மோசமான எதிர்காலமாகவே இருக்கும்” இவ்வாறு இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழரசு கட்சி போராடும் – இரா.சாணக்கியன்

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழரசு கட்சி போராடும் எனவும் மக்களின் வரிப்பணத்தில் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு திருப்தி அளிக்காதவிடத்து வடக்கில் அமைச்சருக்கு வெள்ளிக்கிழமை நடந்த அதே நிலை கிழக்கிலும் உள்ள அமைச்சர்களுக்கும் நடக்கும். மக்களால் அவர்களும் வெகுவிரைவில் துரத்தியடிக்கப்படுவார்கள். ஜனாதிபதி தேர்தலை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக தமிழ் மக்கள் காணப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

 

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட திக்கோடை கிராமத்தில் நேசக்கரங்கள் சமூக நல அமைப்பின் சாதனையாளர் பாராட்டு விழா நேற்று சனிக்கிழமை (06) அறிவொளி கல்வி நிலையத்தில் அமைப்பின் தலைவர் ந.கதிரவன் தலைமையில் நடைபெற்றது.

 

இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

 

இந்த நாட்டிலே வாழ முடியாத அளவிற்கு விலைவாசிகள் அதிகரித்துள்ளன. செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால் தற்காலத்தில் கிராமங்களிலுள்ள இளைஞர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலே தொழிலுக்காகச் சென்றுள்ளனர். எதிர்காலத்தில் தேர்தல்கள் வரும்போது அதில் மக்கள் தீர்க்கமான முடிவெடுக்கும்போது, மாற்றங்களை நாம் கொண்டுவரலாம். ஜனாதிபதித் தேர்தலிலே சாணக்கியன் எம்.பியை போட்டியிட வைக்கலாமே என சிங்கள சகோதரர் வினவியதாக அதிபர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

 

இந்த நாட்டிலே ஜனாதிபதித் தேர்தல் வருவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலிலே பேரம் பேசுவதற்காக பலர் அணி அணியாக சேர்ந்துகொண்டு செல்கின்றார்கள். கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால தாம் பேரம் பேசும் சக்தியாக திகழலாம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அது அவர்களின் நிலைப்பாடு.

 

ஆனால் தமிழ் சமூகமாகிய நாங்களும், எங்களை பலப்படுத்த வேண்டிய காலப்பகுதி இதுவாகும். இலங்கைத் தமிழரசுக் கட்சி 1949ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வினை நோக்கி செயற்பட்டுக்கொண்டு வருகின்றது. அதற்காக நாங்கள் மக்களுக்குக் காட்டும் வழியிலே மக்கள் நின்று செயற்பட்டால் எமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு அது ஒரு சந்தர்ப்பமாக அமையும். எனவே, நாங்கள் அனைவரும் ஒரே அணியாக நின்று செயற்பட்டால் நாங்கள்தான் இந்த நட்டில் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்போம் என்றார்.

 

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் சாதனையாளர்களுக்கான நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டன.

சுதந்திர தினத்துக்கும் அமைச்சர்களின் சுக போகத்துக்கும் செலவழிக்கும் பணத்தை அரசு விவசாயத்திறகு செலவு செய்தால் நாட்டின் பொருளாதாரம் சரி உயரும் – இரா.சாணக்கியன்

நேற்று (22) பாராளுமன்றத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட பிரேரணையின் போது, சுதந்திரமே இல்லாத நாட்டில் சுதந்திர தினத்துக்கும் அமைச்சர்களின் சுக போகத்துக்கும் செலவழிக்கும் பணத்தை அரசு விவசாயத்திறகு செலவு செய்தால் விவசாயிகளினதும் நாட்டு மக்களினதும் வாழ்க்கைத்தரம் உயர்வடையும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நெல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் விவசாயம் சம்பந்தமான பிரச்சனைகளான சந்தைப்படுத்தல், பரிந்துக்கப்பட்ட நெல்வகை தொடர்பான பிரச்சனைகள், உர விநியோகம், யானைத் தாக்கம், மானியம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் நஷ்டத்துக்கான இழப்பு.

 

விவசாயிகளுடன் தொடர்புடைய ஒரு முக்கிய பிரேரணை இன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் வடக்கு கிழக்கில் வாழும் எமது மக்கள் விவசாயம், கால்நடை, மீன்பிடியினை நம்பி தமது வாழ்வாதாரத்தினை நடத்திச் செல்கின்றனர்.

 

கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தினை உதாரணமாக வைத்து நான் சில விடயங்களை கூறுகின்றேன். இது வடக்கு கிழக்கில் காணப்படுகின்ற அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் ஒரு பிரச்சனை ஆகும். அந்த வகையில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்பன ஒன்றாக பயணிக்கும் துறைகளாக காணப்படுகின்றன. ஆகவே விவசாயிகளுக்கு கடந்த போகத்திலே மிக முக்கிய பிரச்சனையாக காணப்பட்டது மேய்ச்சல் தரை நிலப் பிரச்சனை. மயிலத்தமடுவிலிருந்து 150 நாட்களுக்கும் மேலதிகமாக போராட்டங்கள் நடை பெறுகின்றன.

 

ஆனால் அரசாங்கத்தினுடைய இனவாத செயற்பாட்டின் காரணமாக எங்களது மேய்ச்சல் தரையை வர்த்தமானி ஊடாக அறிவிக்காமல் பெரும்பான்மை இனத்தினை குடியேற்றி விவசாயம் மேற்கொள்ள முன்வந்தமையினால் இன்று கால்நடை வைத்திருக்கும் எமது தமிழ் மக்கள் கால்நடைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்; விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோர் விவசாயத்தை ஆரம்பிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது வெருகல், திருகோணமலை, அம்பாறை ஆகிய இடங்களிலும் இப் பிரச்சனைகள் நிலவுகின்றன. ஆகவே இப் பிரச்சனைகளுக்கு விவசாய அமைச்சரும் சரியான தீர்மானத்தை பெற்றுத் தர வேண்டும்.

 

“2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்களை அமைப்போர் மகாவலி கங்கை B வலயத்தினுள் உள்ளடக்கப்படமாட்டார்கள்” எனக் கூறியும் அத்துமீறிய குடியேற்றங்களை அமைத்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். இதற்கான தீர்வினை ஜனாதிபதி, விவசாய அமைச்சர், மாகவலிக்குரிய அமைச்சர் ஆகியோர் இணைந்து கலந்துரையாடி பெற்றுத் தர வேண்டும்.

 

நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் முதலாவது போகத்தினை முதலில் ஆரம்பிப்பது கிழக்கு மாகாணத்தில் ஆகும். கிழக்கில் விவசாயிகள் தமது நிலத்தை தயார்படுத்தி; விதைப்பை ஆரம்பிக்கும் போது பொலன்நறுவை, அனுராதபுரம், அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் ஆரம்பிக்க மாட்டார்கள். விவசாய ஆரம்ப திகதியை கிழக்கு மாகாணத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் எனக் கூறி நான் அமைச்சராகிய 4 வருடங்களாக கோரிக்கை முன்வைத்துள்ளேன்.

 

கடந்த போகத்திலும் அறுவடையின் பின்னரே விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. இதற்கான காரணம் பொலன்நறுவை, அனுராதபுரம், அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் நெற்பயிர்ச்செய்கை ஆரம்பிக்கும் திகதியிலேயே திறைசேரியில் இருந்து நிதி ஒதுக்கப்படுகின்றது. விவசாயிகள் வட்டிக்கு பணம் வாங்கியே விவசாயம் மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.

 

இந்தப் போகத்திலாவது உரிய நேரத்தில் மானியங்கள் வழங்காவிட்டால் எமது விவசாயிகள் கடனாளிகளாகவே மாறக்கூடிய சந்தர்ப்பம் காணப்படும். இதற்குரிய தீர்வினை விவசாய அமைச்சர் பெற்றுத் தராவிட்டால் அமைச்சராக இருந்தும் தீர்வுகளை பெற்றுத்தரவில்லை என என்றும் பழி சுமத்துவோம்.

 

எமது மக்கள் கஷ்டத்தின் மத்தியில் தமது தங்க நகைகளை அடகு வைத்து உரத்தினை கொள்வனவு செய்தாலும் விவசாயிகள் அறுவடை செய்யும் காலப்பகுதி காணப்படுகின்ற போது யானைகளின் தொல்லை காணப்படுகின்றது. உயிரிழப்பும் காணப்படுகின்றது.

 

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கௌரவ அதாவுல்லா அவர்களும் இருக்கும் போது இவ் யானைப் பிரச்சனைகளைப் பற்றி கூறினேன். யானை வேலிகளை அமைப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது வரை 10 Km யானை வேலியை கூட அமைக்கவில்லை. இராப்பகலாக கண்விழித்து யானைகளிலிருந்து நிலத்தினைப் பாதுகாத்தால் இயற்கை அனர்த்தங்களின் பிரச்சனை காணப்படுகின்றது.

இதற்கு மக்களும், அரசாங்கமும் எதுவும் செய்ய முடியாது. கடந்த போகத்தில் பெருமளவான விவசாய நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து இப் பிரச்சனை தொடர்பில் தரவுகளை மேற்கொள்ள வந்த Insurance Co-operation ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை பார்த்துவிட்டு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் எனக் கூறி சென்றுவிட்டனர்.

 

2 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் காணப்படும் மாவட்டத்தில் ஒரு நாளினுள் எவ்வாறு மதிப்பீடு செய்ய முடியும்? மட்டக்களப்பில் வெல்லாவெளி, போரதீவுப்பற்றினை நோக்கினால் அங்குள்ள ஒரு சில நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று வரை எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு Insurance Co-operation நஷ்டஈடு வழங்கவில்லை.

 

இது விவசாயிகளை தொடர்ந்து கடனாளிகளாக்கும் செயன்முறையாகும். இவ்வாறு கஷ்டத்துக்கு மத்தியிலும் எமது விவசாயிகள் நெல்லைப் பெற்றாலும் அதனை உரிய விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த அரசாங்கம் ஒரு வக்கில்லாத அரசாங்கமாக உள்ளது. அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டிய நெல்லை எமது மக்களுக்கு நீங்கள் தெரிவித்தால் அந்த இன நெல்லை எமது மக்கள் உற்பத்தி செய்வர்.

 

நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கத்திடம் பணமில்லை என்றால் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கியுள்ள ஆடம்பர செலவுகளை குறைத்தால் நெல்லினை கொள்வனவு செய்ய வேண்டிய பகுதியளவு பணத்தினை பெற முடியும்.

 

சுதந்திரமற்ற இலங்கையில் சுதந்திர தினம் கொண்டாட செலவழிக்கப்பட்ட பணத்தினை வைத்து நெல் கொள்வனவு செய்வதற்காக ஒதுக்க முடியும். அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நெல் கொள்வனவிற்காக சில உத்திகள் கையாளப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் எமது மாவட்டத்தில் எவ்வித திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்

சாணக்கியனை தாக்க முற்பட்ட அரச தரப்பு எம்.பி – வெளியாகியுள்ள விளக்கம்!

சாணக்கியன் எம்.பி.யை நான் பாதுகாப்பாக பிரதமரிடம் அழைத்து செல்லவே லிப்டுக்கு (மின்தூக்கி )அருகில் வருமாறு அழைத்தேன் என அரச தரப்பு எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

சாணக்கியனின் குற்றச்சாட்டு தொடர்பில் சிறப்புரிமை மற்றும் ஒழுக்காற்று குழு ஊடாக விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டுமென பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தி கருத்து தெரிவித்த போதே ரோஹித அபேகுணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமரை சந்திக்க வந்த தன்னை நான் தாக்க முற்பட்டதாக சாணக்கியன் எம்.பி கூறி சிறப்புரிமை மற்றும் ஒழுக்காற்று குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். நான் அந்த விசாரணைக்குழு முன்பாக ஆஜராவேன் .எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

பிரதமரை சந்திக்க வந்த சாணக்கியனிடம்” நீங்கள் பிரதமரையா சந்திக்க வந்தீர்கள்.லிப்டுக்கு வாருங்கள் அழைத்து செல்கின்றேன் என்றே கூறினேனே. அதாவது பிரதமரை சந்திக்க வந்த சாணக்கியன் எம்.பி. யை பாதுகாப்பாக பிரதரிடம் அழைத்து செல்லவே நான் முயற்சித்தேன். ஆனால் இவரிடம் இந்தளவுக்கு பயம் இருக்கும் என்பது எனக்குத்தெரியாது என்றார்.

தமிழ்மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவோ பூர்த்தி செய்யும் எந்த ஒரு நடவடிக்கை தொடர்பான கொள்கையோ திட்டமிடலோ அரசிடம் இல்லை. – சாணக்கியன் சாடல் !

இந்த நாட்டைப் பொறுத்தளவில் தமிழ் மக்களின் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய சில சட்ட மூலங்களை பாராளுமன்றத்தில் கொண்டு வந்ததுடன் சிலவற்றை மாற்றுவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது அரசு என இன்று (20) பாராளுமன்றத்தில் சாணக்கியன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பை, முகம் கொடுக்கும் பிரச்சனைகளை தீர்க்கவோ பூர்த்தி செய்யும் எந்த ஒரு நடவடிக்கை தொடர்பான கொள்கையோ திட்டமிடலோ அரசிடம் இல்லை. ஓர் கண்துடைப்பாகவே இந்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழு TRC – Truth, Unity and Reconciliation Commission உண்மைக்கும் ஒற்றுமைக்குமான நல்லிணக்க ஆணைக்குழு இனை அரசு சர்வதேசத்தை மகிழ்விக்க கொண்டுவரும் ஓர் திட்டமே. எம் மக்கள், வட கிழக்கு காணமல் அக்கப்பட்டோர் சங்கம் மற்றும் சிவில் சங்கம் இதனை நிராகரித்துள்ளார்கள்.

தாம் தமிழ் மக்கள் சார்பாக பல திட்டங்களை முன்னெடுக்கின்றோம் என்பதனை காட்டும் ஓர் கண்துடைப்பே இதுவாகும். எமக்கான அதிகார பரவலாக்கல் பற்றியோ அரசியல் அதிகாரம் பற்றியோ எமக்கான தீர்வு பற்றியோ எவ்வித முன்னேற்றமோ நடவடிக்கையும் இல்லை.

இவ் TRC மூலம் கொல்லப்பட்ட மற்றும் காணமல் ஆக்கப்பட்ட எம் மக்களுக்கான நீதி கிடைப்பதற்க்கான எவ்வித வாய்ப்பும் இல்லை.

நேற்றைய தினம் நான் ஜனாதிபதியின் ஓர் உரையை பார்த்தேன் அதில் அவர் வரும் ஜனாதிபதி தேர்தலை குறி வைத்ததாக தமிழ் மக்களை சமரசம் செய்யும் முயற்சி போல் இருந்தது. தேர்தலுக்கு முன் எம் மக்களின் பிரச்னையை தீர்ப்பது போல் கூறியிருந்தார்.

நேற்றைய தினம் நடந்த ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கூட்டத்தில் திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் கட்டப்படும் விகாரைகள் மிகவும் முக்கிய தேவையான விகாரைகள் என்று பேசப்பட்டுள்ளது. எமது வட, கிழக்கு பிரச்சனைகளை விட இவ் நான்கு விகரைகளின் முக்கியத்துவம் தான் ஜனாதிபதி செயலகத்தில் பேசப்படுகின்றது. இவரா எம் பிரச்சனைகளை தீர்க்கப்போகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் தொல் பொருள் பிரச்சனைகளில் முக்கியமாக குடும்பிமலைக்கு அருகாமையில் புதிய விகாரை அமைக்கும் திட்டம் இடம்பெறுகின்றது அதற்கான 800 மீட்டர் நீளமான பாதையும் அமைக்கப்படுகின்றது அவ் இடத்தில் எவ் வித குடியேற்றமும் இல்லை. ஆனால் எமக்கான முக்கிய வீதிகளை மற்றும் திட்டங்களை அமுல் படுத்த வினவும் போது நிதியில்லை என்பார்கள். எம் மக்களின் வரிப்பணம் இவ்வாறாக வீணடிக்கப்படுகின்றது. எமது வரிப் பணத்தை பெற்று எமக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.

ஜனாதிபதி உடனான சந்திப்பில் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறுகின்றார் ஆனால் இங்கு வந்தால் எமது மாவட்ட இராஜங்க அமைச்சர் அதற்கு மாறாக அதற்கான இணக்கமில்லை என்று சொல்கின்றார். குருக்கள் மடம் மற்றும் முறக்கொட்டான்சேனை போன்ற இராணுவ முகாம்கள் இவ்வாறு விடுவிக்க முடியாமல் உள்ளது.

ஆக்குறைந்தது எமது முக்கிய வாழ்வாதாரங்களில் ஒன்றான விவசாயம் போன்ற வற்றுக்கான திட்டமிடலில் கூட அரசாங்கம் தவறி இருக்கிறது. பெரும் போகத்தில் நெல் கொள்வனவில் பாரிய பிரச்சனைகள் காணப்படுகின்றது. அரசு நிலக்கடலைகளை இறக்குமதி செய்வதால் உள்ளூர் நிலக்கடலை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் அவர்களால் தங்கள் உற்பத்தியை விற்க முடியாமல் உள்ளது. யானை வேலி அமைப்பதில் கூட பிரச்சனைகள் காணப்படுகின்றது. நாம் நேரடியாக சென்று தலையிட்டு தீர்க்க வேண்டியுள்ளது.

ஆனால் ஜனாதிபதி ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்ற முயற்சி எடுக்கின்றார். ஆனால் இவர் எமக்கான தீர்வுகளுக்கான ஆரம்ப நடவடிக்கைகளை எடுக்காது விடின் இவரது இவ்வாறான செயல்பாடுகள் மூலம் மக்கள் இவருக்கான சரியான படிப்பினையை மேற்கொள்வார்கள் என தெரிவித்தார்.

இப்போதும் தமிழக அரசிடம் ஆயுதம் நான் கேட்கிறேன் – சென்னையில் இரா.சாணக்கியன்

முன்னரான காலப்பகுதியில் ஈழத் தமிழர்கள் தமிழக அரசிடம் ஆயுதங்களைக் கோரியதாகவும் அதற்கு தமிழக அரசு உதவியதாகவும், இப்போதும் தமிழக அரசிடம் ஆயுதம் நான் கேட்கிறேன், அந்த ஆயுதம் பொருளாதார ஆதரவே, என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சென்னையில் நேற்றையதினம் (11) ஆரம்பமான 2024ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர் தினத்தின் முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது தமிழக மாநில அரசு செய்த உதவிக்கு சாணக்கியன் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், நெருக்கடியான நேரத்தில் தமிழக அரசு நிவாரணப் பொருட்களை அனுப்பியது, பெருமையான தருணம், ஏனெனில் நிவாரணப் பொருட்கள் தமிழர்களுக்குமட்டுமல்ல, அனைத்து இலங்கையர்களுக்கும் அனுப்பப்பட்டது என்று சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

 

அதேவேளை, 1980 களில், ஈழத் தமிழர்கள் தமிழக அரசிடம் ஆயுதங்களைக் கோரியதாகம் அதற்கான உதவிகளை தமிழக அரசு வழங்கியது இப்போது தமிழக அரசிடம் நான் ஆயுதம் கேட்கிறேன், பொருளாதார ஆதரவே, அந்த ஆயுதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக தமிழ்நாட்டு அரசிடம் கேட்கும் ஆயுதமே இந்த பொருளாதார வளர்ச்சி. இந்த பொருளாதார வளர்ச்சியை வைத்து ஈழத்தமிழர்களுக்கு நிம்மதியான சிறந்த எதிர்க்காலத்தை அமைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விக்னேஸ்வரனை போல மூன்று மாதத்துக்கு ஒரு முறை கொள்கை மாற்றுபவர்கள் அல்ல நாம். – இரா.சாணக்கியன்

விக்னேஸ்வரனை போல மூன்று மாதத்துக்கு ஒரு முறை கொள்கை மாற்றுபவர்கள் அல்ல நாம். மக்களுக்காக ஒரே பாதையில் பயணிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சாணக்கியன் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், அவரை போல நாம் நேரத்துக்கு நேரம், மூன்று மாதத்துக்கு ஒருமுறை கொள்கை மாற்றுபவர்கள் கிடையாது. எடுத்த முடிவில் எமது கட்சி இறுதி வரை செயற்படும்.

இதேவேளை, தமிழ் தரப்புக்களுக்கு தீர்வினை வழங்குவதாக கூறுகின்ற ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக மார்ச் மாதம் தீர்வுத் திட்டத்தினை வழங்குவதாக பொய்யுரைத்துள்ளார்.

இவ்வாறான நிலையில், பல ஏமாற்றங்கள் இருந்தாலும், நாம் சந்திப்புக்களில் கலந்துகொள்கின்றோம். இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல விடயங்களை என்னால் முன்னெடுக்க முடிகிறது.

தேர்தலினை நடத்துவது தொடர்ச்சியாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மூலம் நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டு தேர்தல் அரசியலை மேற்கொள்ளவுள்ளார். குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதிகளில் கூட மோசடிகள் இடம்பெறுகின்றன என்றார்.

2024ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திலும் தமிழர்களுக்கு எதுவுமேயில்லை – நாடாளுமன்றத்தில் இரா.சாணக்கியன் !

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினுடைய மூன்றாம் வாசிப்பான நேற்று (13) கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதம் நடந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த நாங்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

அதற்கான காரணம் ஜனாதிபதி கடந்த வருடம் 04.02.2023 அன்று அதாவது 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ் மக்களினுடைய தேசிய இனப் பிரச்சினையினை தீர்ப்பதற்கு தான் முயற்சி எடுப்பதாக கூறினார்.

 

ஆகவே அவரது கூற்றினை வரவேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நாங்கள் அந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்து அதனை தோல்வியடைச் செய்ய முடியுமாக இருந்திருந்தால் நாங்கள் அதற்கு வாக்களித்திருப்போம்.

 

2023 ஆம் ஆண்டிற்குள்ளே தமிழ் மக்களுக்கு எவ்வித நலன் சார்ந்த விடயமும் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படவில்லை என்பதே உண்மை. இன்று வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் இந்த அரசாங்கத்தினால் இழைக்கப்படும் பாரிய கொடுமைகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

 

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் கால்நடைகளை சுட்டு அழித்துக் கொண்டிருக்கும் கொடூர செயல் 90 ஆவது நாளாகவும் தொடர்கிறது. மேலும் இன்று தொல்பொருள் என்ற பெயரில் இனவாதிகள் இணைந்து வடக்கு, கிழக்கில் இருக்கும் எங்களின் ஆலயங்களை அழித்து கொண்டிருக்கின்றனர்.

 

கடந்த வாரம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் இளைஞர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். எமது மக்களினுடைய பிரதான ஜீவனோபாயமாக விவசாயம், மீன்பிடி, கால்நடை போன்றவை காணப்படுகின்றன.

 

பெரும்போக விவசாயத்தினை மட்டக்களப்பில் மேற்கொள்வதற்கான திகதியினைக் குறிக்கும் படி கூறியிருந்தும் இன்று வரை அதற்கான திகதி குறிக்கப்படவில்லை. இந்த வருடமும் உரத்திற்கான நிதியின்றி விவசாயிகள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

 

வட மாகாணத்தில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மக்கள் அச்சுறுத்தலின் காரணமாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற தமிழ் மக்கள் வாழும் பல இடங்களிலும் மேய்ச்சல் தரைகளை இனங்கண்டு கால்நடைகளை அழித்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

 

இவ்வாறான காலப்பகுதியிலேயே 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டமானது பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 

30 வருட காலமாக நிகழ்ந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மற்றும் வட மாகாண மக்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை. வட மாகாணத்திலுள்ள விமான நிலையத்தினை விஸ்தரித்து சர்வதேச விமான நிலையமாக மாற்றி பல விமானங்களும் வந்து செல்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிதியினை ஒதுக்கவில்லை ஆனால் 4 ஆவது விமான நிலையத்தினை அமைப்பதற்கு பேசிக்கொண்டு இருக்கின்றார்.

இவ்வாறான வரவு செலவுத் திட்டத்திற்கு வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு ஆதரவு வழங்கலாம் எனும் கேள்வியை எமது மக்கள் எழுப்ப வேண்டும். வரவு செலவுத் திட்டத்தினூடாக எமது மக்களுக்கு நிதி ஒதுக்கவில்லையாயினும், பொருளாதார ரீதியாக அவர்களை எழுச்சியடையச் செய்யாதுவிடினும் எமது மக்களை அவர்களது கிராமங்களில் நிம்மதியாக வாழச் செய்யலாம்.

 

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் விடலாம். இவ்வாறு எமது மக்களை அவர்களது இயல்பு நிலைக்கு ஏற்ப வாழ விடாத அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால் எமது மக்கள் சரியான பாடத்தினை அவர்களுக்கு புகட்ட வேண்டும்.

 

18% வரியினை அதிகரித்துள்ள அரசாங்கம் பால்மா தொடங்கி அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரியினை அதிகரிப்பதற்கு முயன்றுள்ளனர்.

 

எமது மக்களிடமே பணத்தைப் பெற்று மீண்டும் கிள்ளி எரிகின்றனர். கிள்ளி எறியும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்போம் எனக் கூறுபவர்களை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எமது பிரதேசத்தில் மலசலகூடமொன்றினை அமைப்பதாக இருந்தாலும் எமது மக்களது வரிப்பணத்திலேயே அதனை மேற்கொள்கின்றனர்.

 

நல்லாட்சி அரசாங்கம் இருந்த காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல அபிவிருத்திகளை வடக்கு, கிழக்கில் மேற்கொண்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்தியாவின் அனுசரணையுடன் வீதிகள் புனரமைப்புச் செய்யப்பட்டதோடு நெடுஞ்சாலைகளும், புகையிரத நிலையங்களும் அமைக்கப்பட்டன.

 

ஆனால் இலங்கை அரசாங்கத்தின் பணத்தில் எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை. நல்லாட்சி காலப்பகுதியிலேயே இலங்கை அரசாங்கத்தினுடைய நிதி வரவு செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்டது.

 

2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு சார்பாக வாக்களிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அத்துடன் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கும் எமது தமிழ் மக்கள் எதிர்காலத்தில் சிறந்த பதிலடியினை வழங்குவார்கள் என்பது முற்றிலும் உண்மை என தெரிவித்தார்.