இலங்கை – இந்தியா

இலங்கை – இந்தியா

பொருளாதார மீட்சி என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் – விமல் வீரவன்ச

பொருளாதார மீட்சி என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கிறது.எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கையில் இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜைகள் சொந்த நாட்டுக்குள் இரண்டாம் தரப்பினராக அடையாளப்படுத்தப்படுவார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

 

பாதுக்க வேரகல பகுதியில் சனிக்கிழமை (02) மாலை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

நாட்டுக்கு என்ன நேர்ந்துள்ளது.மக்கள் சொல்லனா துயரங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.வாழும் சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.பொருளாதார மற்றும் சமூக பாதிப்பை அரசாங்கம் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.இந்தியாவின் செல்வந்தரான அதானிக்கு இலங்கையின் பெரும்பாலான வளங்களை வழங்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

 

மன்னார் காற்றாலை மின் உற்பத்தியின் பங்குகளை அதானி நிறுவனத்துக்கு வழங்குவதால் நடுத்தர மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்காது. நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் டெலிகொம் நிறுவனத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோல் இலங்கை மின்சாரத்தை பல கூறுகளாக பிரித்து அதனையும் இந்தியாவுக்கு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

இலங்கையின் பொருளாதார கேந்திர மையங்களை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கும் செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படும். இவ்வாறான நிலையில் இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

 

எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையில் சுதந்திரமாக தமது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் சொந்த நாட்டுக்குள் இரண்டாம் தர பிரஜைகளாக கருதப்படுவார்கள். இலங்கை இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாற்றமடையும்.

 

நாடடின் தேசிய வளங்களை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் குறித்து எதிர்க்கட்சிகள் ஏதும் பேசுவதில்லை.அனைவரும் இந்தியாவுக்கு துதி பாடிக் கொண்டிருக்கிறார்கள்.பொருளாதார பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு நாட்டின் சுயாதீனத்தை இந்தியாவிடம் விட்டுக் கொடுக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்படும் ராஜபக்ஷர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதற்காக மக்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கு இடமளித்துக் கொண்டு இருக்க முடியாது.

யாழ்ப்பாணத்தின் தீவுகளில் கால் பதிக்கும் இந்திய நிறுவனம் – அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை !

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தீவுப்பகுதிகளில் மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய நிறுவனம் பெற்றுள்ளது.

 

நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய இடங்களில் புதிதாக 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவின் மானிய உதவியுடன் அமைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் புதிய மின்உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஹைபிரிட் மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை U Solar Clean Energy Solutions (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

 

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி S.ஜெய்ஷங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

இந்த விவகாரம் தொடர்பில் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்ஷங்கருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

 

மீன்பிடித் தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக தமிழக முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எனவே, இலங்கைக் கடற்படையினரால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது வசமுள்ள 133 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வெளியுறவுத்துறை அமைச்சர் S.ஜெய்ஷங்கரை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

“திருகோணமலையில் முதலீடு செய்ய இந்தியாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள்.” -. அமைச்சர் பந்துல குணவர்தன வேண்டுகோள் !

“திருகோணமலையில் முதலீடு செய்ய இந்தியாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள்.” என என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

 

நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் அபிவிருத்தி திட்டங்களுக்கான முதலீடுகளை மேற்கொள்வதற்கு சகல நாடுகளுக்கும் வாய்ப்பளிக்கப்படும். அந்த அடிப்படையிலேயே திருகோணமலையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. எனவே இவ்விடயத்தில் இந்தியா, சீனா, அமெரிக்கா என்று பாகுபாட்டுடன் சிந்திப்பது தவறாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை (29) இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்தார் .

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வீழ்ச்சியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்குள் நடைமுறை சாத்தியதமான வழிமுறைகள் எவையும் இல்லை.

நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்காவிட்டால் இலங்கையை என்றுமே கட்டியெழுப்ப முடியாது.

 

இவ்வாண்டுக்குள் கடன் மறுசீரமைப்புக்களை நிறைவு செய்தால், அடுத்த வருடத்தில் அபிவிருத்தி திட்டங்களை மீளத் தொடங்குவதற்கான கடனுதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு எந்த நாடுகள் முன்வந்தாலும் அவற்றுக்கு வாய்ப்பளிக்கப்படும்.

 

இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா என்று பாகுபாட்டுடன் சிந்தித்தால் அது தவறாகும். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, சீனா, வியட்நாம் போன்ற நாடுகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை நன்கு அவதானிக்க வேண்டும்.இவ்வனைத்து நாடுகளும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதன் ஊடாகவே அசுர வேகத்தில் அபிவிருத்தியடைந்து கொண்டிருக்கின்றன.

 

அதன் அடிப்படையிலேயே திருகோணமலையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

திருகோணமலையில் மாத்திரமின்றி இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலும், வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதே எமது இலக்காகும். அதற்கு வாய்ப்பளிக்காவிட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது.” என அவர் தெரிவித்துள்ளார்.

“இலங்கை அரசாங்கம் இந்தியாவின் கருத்துக்கு இடமளிக்கவேண்டும்.” – எம்.ஏ.சுமந்திரன்

இந்தியாவின் கரிசனைகளுக்கு முரணான எந்தவொரு செயற்பாட்டையும் தாம் ஆதரிக்கப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் அதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி ‘ஷி யான் 06’ என்ற சீன ஆய்வுக்கப்பல் நாட்டுக்கு வருகைதரவுள்ளது.

இவை இலங்கையில் இந்திய – சீன இராஜதந்திர மோதலுக்கு வழிவகுக்கும் எனவும், மேற்குறிப்பிட்ட நாடுகளுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அரசியல் விமர்சகர்கள் அபிப்பிராயம் வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும் இலங்கைக்கும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் எவ்விதமான பதற்றங்களும் இல்லை என்றும், இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் மற்றும் சீன ஆய்வுக்கப்பலின் வருகை என்பன நிகழ்ச்சி நிரலிடப்பட்டதன் அடிப்படையில் நடைபெறுவதனால் எவ்விதமான குழப்பங்களும் இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகள் நியாயமானவை என்று இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், இவ்விவகாரத்திலும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்தியா வெளிப்படுத்தும் பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள் முற்றிலும் நியாயமானவை என்று சுட்டிக்காட்டினார்.

இந்தியாவுக்கு சார்பாக செயற்படவேண்டும் என்ற நோக்கில் இக்கருத்தை வெளியிடவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ‘இந்தியா இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் உள்ளது. இருப்பினும் சீனா இப்பிராந்தியத்துக்கு உட்பட்ட நாடு அல்ல. எனவே இந்தியாவின் நட்பு நாடு அல்லாத சீனா, இப்பிராந்தியத்தின் பிறிதொரு நாட்டில் முன்னெடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பாதுகாப்புசார் கரிசனைகளைத் தோற்றுவிப்பது நியாயமானதொன்றேயாகும்’ என்று தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் கூறுவதில் அர்த்தமில்லை என்றும், மாறாக இதில் இந்தியாவின் கருத்துக்கு இடமளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்திய சுமந்திரன், இந்தியாவின் கரிசனைகளுக்கு முரணான எந்தவொரு செயற்பாட்டையும் தாம் ஆதரிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டார்.

தமிழர்களை தன்னுடைய அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தி வரும் இந்தியா தான் தமிழரின் எதிரி – தேசம் திரை YouTube !

இந்திய அரசை நம்பியதினால் தமிழர்களுக்கு முதலில் ஏற்பட்டது அழிவு இரண்டாவது ஏற்பட்டது பேரழிவு இனி ஏற்பட இருப்பது மீள முடியாத பேரழிவு. இலங்கையில் தமிழ் – சிங்கள மக்களிடையே இருந்த முரண்பாட்டை தீர்த்து வைக்கத் திறமையற்ற, படித்த ஆனால் மூன்றாம் தர சிங்கள, தமிழ் அரசியல் தலைமைகள், தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்ப போட்டி போட்டு, இனவாதத் தீயை வளர்த்தன. இவர்கள் இலங்கையை அந்நிய சக்திகளிடம் கையளித்து, கடந்த 75 ஆண்டுகளாக நாட்டைச் சீரழித்து வருகின்றனர். அதன் உச்சமாக தற்போது இலங்கையின் இயற்கைத்துறைமுகமான திருகோணமலை எதிர்கால யுத்தத்தின் மையப்புள்ளியாக மாற்றப்பட்டு வருகின்றது. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் 30 பேர்வரை இரு இரு விசேட விமானங்களில் பெப்ரவரி 14 அன்று இலங்கை வந்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர்.

இன்று பெப்ரவரி 18இல் தமிழகத்தின் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வவுனியா ஆலயத்தில் மதக் கலகத்தை தூண்டிவிடும் வகையில் உரையாற்றினார். இது “சிவ பூமி, ராமஜன்ம பூமி, ஆரியச் சக்கரவர்த்தி பிறந்த பூமி” என்றெல்லாம் புகழாரம் சூட்டி ராமாயண யாத்திரை இலங்கையில் இருந்து ஆரம்பிக்கும் என்றும் இந்தியாவில் இருந்தும் யாத்திரை வரும் அதற்காகவே தமிழகத்தில் இருந்து பலாலிக்கு விமானப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. மன்னார் – ராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்றெல்லாம் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெயரை உச்சரிக்காது அர்ஜூன் சம்பத் வெளிநாட்டவர்கள் இங்கு வந்து மதமாற்றம் செய்வதாகவும் ஈஸ்டர் குண்டுவெடிப்பு மதவாதத்தை தூண்டும் செயல் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஊடகவியலாளராக ஒளிப்பதிவாளராகக் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் “இந்தியாவின் தமிழகத்தின் சாத்தான்கள் வந்து எங்களுக்கு வேதம் கற்றுக் கொடுக்கிறார்கள்” என்று சினந்து கொண்டார். இந்த சாத்தான்கள் ராமர் யாத்திரையை இங்கும் நடத்தி மசூதிகளையும் தேவாலயங்களையும் நொருக்குவதற்கு இப்பவே திட்டமிட்டுவிட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார். அந்த ஆலயத்தின் அடியவர் தேசம்நெற் வட்ஸ்அப்க்கு அனுப்பி வைத்த குறிப்பில் இவ்வாறான மதத்தை அரசியலோடு கலக்கின்ற பிரச்சாரங்களுக்கு ஆலயங்கள் இடமளிப்பதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்த மயூரன், சண்முகரத்தினம் போன்றவர்கள் இவ்வாறான மதஅடிப்படைவாதிகளை ஆலயங்களுக்கு அழைத்து எமது ஆலயங்களை மத அடிப்படைவாதிகளின் கூடாரங்கள் ஆக்குவதை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தேசம்நெற் க்கு கிடைக்கும் செய்திகளின்படி திருகோணாமலையில் உள்ள 90 எண்ணைக் குதங்களில் 80 வரையான குதங்கள் இந்தியாவுக்கு கையளிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகின்றது. அமெரிக்க ராஜதந்திரிகளின் வருகை திருமலை விவகாரம் பற்றியது அல்ல என அமைச்சர் பண்டார தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் ஒவ்வொரு எண்ணைக் குதமுமே நூறு பெற்றோல் நிலையங்களுக்கான பெற்றோலியத்தை சேகரித்து வைக்கும் கொள்ளளவைக் கொண்டன எனத் தெரிவித்தார். இவ்எண்ணெய்க் குதங்கள் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் யுத்த தளபாடங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பிரித்தானியாவால் உருவாக்கப்பட்டவை. இன்றைய உக்ரைன் நிலைமையொன்று அதாவது அமெரிக்க சக இந்தியா எதிர் சீனா உருவாகுமானால் அதன் முதல் பொறி திருகோணமலையிலேயே தெறிக்கும் என்பது உறுதியாகி வருகின்றது.

இந்தியா காலம் காலமாக தன்னுடைய நலனை மட்டும் கருத்தில் கொண்டே இலங்கைத் தமிழர்களைப் பகடைக்காய்களாக பாவித்து வருகின்றது. தமிழர்களும் தமிழ் தலைவர்களும் குனியக் குனிய இந்தியா மேலும் மேலும் தமிழர்களைக் குட்டிக்கொண்டே இருக்கின்றது. இந்தியாவின் இந்திய நலன்சார்ந்த அரசியலால் இதுவரை தமிழர்கள் இழப்பைத் தவிர எதனையும் சந்தித்தில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைக் கூட இந்தியா முழுமையாக அமுல்படுத்த முயற்சிக்கவில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 36 ஆண்டுகள் ஆகியும் அது இன்னமும் தமிழ் மக்களுக்கு எட்டாத கனியாகவே உள்ளது. 36 ஆண்டுகளாக நாய்க்கு எலும்புத்துண்டு போடுவது போல் இந்திய அரசு 13ஆவது திருத்தச் சட்டத்தைக் காட்டிக் காட்டி தமிழ் மக்களை அவர்களின் தன்மானத்தை நொறுக்கி வருகின்றது.

இலங்கையில் உள்ள இன முரண்பாட்டுக்கு உயிரூட்டி அதற்கு வன்முறை வடிவம் கொடுத்து. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உசுப்பி விட்ட இளைஞர்களை இந்திய உளவுப்படை கோழிக்குஞ்சுகளை பிடிப்பது போல் துப்பாக்கிகள் தாறோம், குண்டுகள் தாறோம், பயிற்சியும் தாறோம் என்று வளைத்துப் போட்டனர்.

சிங்கள கிராமங்களுக்குள் சென்று சிங்களவர்களைக் கொல்லுங்கள் நிறைய துப்பாக்கிகளும், குண்டுகளும், பயிற்சிகளும் தருவோம் என்றதும், நான் முந்தி நீ முந்தி என்று தமிழீழ விடுதலைப் புலிகள் முந்திக் கொண்டனர். கொக்கிளாய், நாயாறு, அனுராதபுரம் படுகொலைகள் நடந்தேறியது.

நஞ்சுப்போத்தல்களை தந்து எங்களை கொலை செய்யுங்கள் – யாழ்ப்பாண மீனவர்கள்

இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கினால் எமக்கு நஞ்சுப் போத்தலைத் தந்து கொலை செய்யுங்கள் என்று யாழ்ப்பாணம் காரைநகர் அம்பாள் கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு மாத காலத்துக்குள் 60 இலட்சம் ரூபா வலை, உடைமைகள் இந்திய இழுவைப் படகுகளினால் சேதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாள் கடற்றொழிலாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டது.
“எங்களது கடற்றொழில் அமைச்சர் சரி, எங்களது அரசாங்கம் சரி எமது பிரச்சினைகளில் கரிசனை கொள்கிறார்கள் இல்லை. இப்போது மீன்பிடி பருவ காலம். இவ்வாறான சூழ்நிலையில் எமது மீனவர்கள் தொழில் செய்து உழைக்கும் நேரத்தில், அவர்களது பல இலட்சம் ரூபா பெறுமதியான முதல்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இதனால் ஏனைய தொழிலாளிகள் கடலுக்குச் சென்று தொழில் செய்வதற்குப் பயப்படுகின்றனர். இது குறித்து கடற்படையினருக்கு தெரிவித்த வேளை தமக்குக் கைது செய்வதற்கு அனுமதி இல்லை எனக் கூறுகின்றனர்.

இதற்கு முன்னர் படகுகள் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அவ்வாறு நடப்பதில்லை, எமது கரையிலிருந்து 5 கிலோமீற்றர் எல்லைக்குள் வந்து தொழில் செய்து எமது வளங்களை அழிக்கின்றனர்.” என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

“இந்தியாவின் உதவியே புலிப்பயங்கரவாதத்தை நாம் தோற்கடிக்க உதவியது.”- இலங்கை வெளிவிவகார அமைச்சர்அலிசப்ரி

“இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் 26 வருடங்களாக எங்கள் நாட்டிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த  பயங்கரவாத அமைப்பை நாங்கள் தோற்கடித்திருக்க மாட்டோம்.”  என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் தெரிவித்துள்ளது

இந்தியாவுடனான உறவுகள் வரலாற்று ரீதியிலானவை, நாங்கள் ஒரு நாகரீகத்தை பகிர்ந்துகொள்கின்றோம். எங்கள் மத கலாச்சார பொருளாதார சமூக பாதுகாப்பு  கரிசனைகள் பொதுவானவை.

கருத்துவேறுபாடுகள் ஏற்பட்ட காலங்களும் உள்ளன. குடும்பங்களில் கூட அது சாத்தியம்,ஆனால் நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளோம். இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருந்துள்ளது,இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் 26 வருடங்களாக எங்கள் நாட்டிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த  பயங்கரவாத அமைப்பை நாங்கள் தோற்கடித்திருக்க மாட்டோம். அதற்காக நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம்.

ஆனால் இறைமையுள்ள நாடு என்ற அடிப்படையில் நாங்கள் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படவேண்டும்,உங்கள் நாட்டின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி உங்களிற்கு விருப்பமில்லாத நாடாகயிருக்கலாம்.ஆனால் நீங்கள் அவ்வாறே செயற்படவேண்டியுள்ளது உலகம் அவ்வாறே மாறிவருகின்றது.

ஆனால் இதன் அர்த்தம் நாங்கள் இந்தியாவின் நலன்களை அலட்சியப்படுத்துகின்றோம் அதற்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றோம் என்பதல்ல,நாங்கள் இந்த விவகாரத்தை வித்தியாசமாக கையாள்கின்றோம்.

இலங்கையை பொறுத்தவரை இந்தியாவுடனான உறவே மிகமுக்கியமானது. ஆனால் முற்றிலும் ஒரு நாட்டையே நம்பியிருப்பது நியாயமற்றது. இலங்கைக்கு ஏனைய நாடுகள் நியாயபூர்வமாக வந்து உதவி செய்வது முதலீடு செய்வது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை என ஜெய்சங்கரே தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு கரிசனைகள் உள்ளன. ஆனால் நாங்கள் இந்தியாவின் நியாயபூர்வமான பாதுகாப்பு கரிசனைகளிற்கு யாரும் பாதிப்பு ஏற்படுத்த அனுமதிக்கமாட்டோம். எவரும் அதனை செய்யமுயலவில்லை நாங்கள் இந்தியாவின் உணர்வுகளை புரிந்துகொண்டுள்ளோம்.” எனவும் தெரிவித்துள்ளார்.

“மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையேயான போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு உறவை கட்டி எழுப்பப்பட வேண்டும்.” – சி.வி.விக்னேஸ்வரன்

“மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையேயான போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு உறவை கட்டி எழுப்பப்பட வேண்டும்” என தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

திருகோணமலைத் துறைமுகத்தில் சீன ஆதிக்கம் பெருக விடாது தடுப்பதே இந்தியாவுக்கு பாதுகாப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தில் துறைமுகம்சார் பாரிய கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கம் கொண்ட பாரிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கான சாத்தியப்பாடுகள் கண்டறியப்பட்டு அவற்றை இந்திய அரசும் முதலீட்டாளர்களும் விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்றார்.

இதன் மூலம் வட கிழக்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி மலையக தமிழ் இளைஞர் யுவதிகள் பலரும் பெருநன்மையடைவர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்கள் தாயகத்தில் முதலிட முன் வரும்போது தென்னிந்தியாவைச் சேர்ந்த தொழில் முனைவாளர்கள், உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்கள், சேவைத்துறை சார்ந்தவர்களுடன் இணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், இந்தியாவுடன் இலகுவில் இணைக்கப்படக் கூடிய மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையேயான போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு உறவை கட்டி எழுப்பப்பட வேண்டும் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான மேம்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உதவ தயார் – இந்தியா!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தமைக்கு இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அவர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலாலி விமான நிலையத்திற்கு நேற்று மூன்று வருடங்களின் பின்னர் விமானம் வந்திறங்கியதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே கோபால் பாக்லே இதனைத் தெரிவித்துள்ளார்.

காங்கசந்துறை துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு பின்னர், அங்கிருந்து காரைக்கால் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே படகு சேவையை விரைவில் தொடங்குவது குறித்து அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.