இளவரசர் அன்ரூ

இளவரசர் அன்ரூ

பிரிடிஸ் இளவரசராக இருந்தால் என்ன பிரதமரக இருந்தால் என்ன எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியுமா!!!

               Photo by Nils Jorgensen/REX 

வழமைபோல் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது தைப்பொங்கள் வாழ்த்துக்களை ‘வணக்கம்’ என்று ஆரம்பித்து ‘நன்றி’ என்று கூறி முடித்தார். அவருடைய 100 செக்கன்கள் கொண்ட வாழ்த்துச் செய்தியில் பெரும்பாகம் கோவிட் கால நடைமுறைகளை மீள ஞாபகப்படுத்தி அதன்படி தைப்பொங்கலை கொண்டாடும்படி கேட்டுக்கொண்டார். தமிழர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் கோவிட் நடைமுறைகளை அடிக்கடி ஞாபகப்படுத்தும் பிதரமர் தனக்கென்று வரும்போது அவற்றை மறந்துவிடுகின்றார். இந்த தமிழ் புதுவருடமோ ஆங்கிலப் புதுவருடமோ நமக்கெல்லாம் எப்படி அமையப் போகிறதோ இல்லையோ பிரதமர் பொறிஸ்க்கும் பிரித்தானிய மகாராணி எலிசபத்தின் செல்ல மகன் அன்ரூவுக்கும் அட்டமத்தில் சனி ஆரம்பித்துவிட்டது.

பிரதமர் பொறிஸ் ஒரு கவர்ச்சிகரமான அரசியல்வாதி. வாயாலேயே சுடச்சுட வடை சுட்டுத்தரும் வல்லமை அவருக்கு உண்டு. அவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே ‘அவுன் ரெடி’ டீல் இருப்பதாக மக்களை ஏமாற்றியவர். பதவிக்கு வந்து இவ்வளவு காலமாகிவிட்டது இன்னமும் அந்த இழுபறி முடிந்தபாடில்லை. பொதுவாகவே பிரித்தானிய பிரதமர் நாட்டு மக்களோடு கதைக்கின்ற போதோ அல்லது நாட்டு தலைவர்களோடு கதைக்கின்ற போதோ கூட உள்ளடக்கம் இல்லாமல் நுனிப்புல் மேயும் போக்கிலேயே பேசுவார். அவருடைய உரைகளில் உள்ளடக்கம் மட்டுமல்ல உண்மையும் இருப்பதில்லை என்பது பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆனால் அவரது பதவியை பாதிக்காத விடயமாக இதுவரை இருந்தது. இவர் தமிழ் மக்களுக்கு தலைவராகவோ அல்லது ஆசிய நாடுகள் ஒன்றின் தலைவராகவோ இருந்திருந்தால் அவருடைய மரணம் வரை அவர் தலைவராக இருந்திருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். நிறம் மட்டும் திராவிட நிறமாக இருந்திருந்தால் பொறிஸ் தமிழர்களுக்கே தலைவராகி இருக்க முடியும்.

துரதிஸ்டவசமாக பொறிஸ் பிரித்தானிய பிரதமராக இருப்பதால் அவருடைய அண்மைய எதிர்காலம் அவ்வளவு இலகுவானதாக இருக்கப் போவதில்லை. மக்கள் பிரித்தானியாவின் பின்னடைவுக்கு ஐரோப்பிய ஒன்றியமே காரணம் என நம்பவைக்கப்பட்டனர். ஆரம்பத்தில் மதில் மேல் பூனையாக நின்ற அன்றைய பொறிஸ் பின்னர் பிரதமர் பதவிக்கு வருவதற்கு கொன்சவேடிவ் கட்சியின் அடிப்படைவாதத்தை ஏற்றுக்கொள்வதே சரியெனத் தெரிவுசெய்து, ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா வெளியேறினால் சுபீட்சம் வந்துவிடும் என்று பிரச்சாரம் செய்து, 2016 கருத்துக்கணிப்பில் வெற்றி பெற்று, பின் 2019இல் பிரதமரும் ஆனார்.

அவர் பிரதமராகி ஓராண்டுக்கு உள்ளாக கோவிட் தலைவிரித்தாடியது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் பிரதமர் பொறிஸ் ஒரு காத்திரமான தலைவர் அல்ல. அவருக்கு மக்களைக் கவர்ந்து அவர்களது வாக்குகளைக் கவர்ந்து ஆட்சிக்கு வர முடியுமேயொழிய ஆட்சியை திறம்பட நடத்தும் ஆற்றலும் பொறுப்புணர்வும் இருக்கவில்லை.

அவருடைய பொறுப்பற்ற முடிவுகளால் குறிப்பாக மிக்க காலதாமதமாக முதலாவது லொக்டவுன் கொண்டுவரப்பட்டது முதல் பல அடுத்தடுத்த தவறுகளால் முதல் ஆண்டில் பிரித்தானியாவிலேயே அதன் மக்கள் தொகைக்கு கூடுதலான மக்கள் கோவிட்-19 இல் கொல்லப்பட்டனர். இந்த கோவிட் காலத்தில் பிரித்தானிய பெற்றுக்கொண்ட கடன் தொகை 200 பில்லியன் பவுண்கள். பிரதமர் பொறிஸின் நட்பு வட்டங்களில் இருந்த நிறுவனங்கள் கோவிட் பாதுகாப்பு அங்கிகளை இறக்குமதி செய்வதற்கு அங்கிகாரம் வழங்கி, அதற்கு செலுத்தப்பட்ட லஞ்சம், வாங்கப்பட்ட கடனில் 10 வீதம் 20 பில்லியன் பவுண்கள்.

இவையெல்லாம் போதாது என்று 2021 ஏப்ரலில் புதிய பிரளயம். பிரதமர் பொறிஸ் தனது வீட்டை அழகுபடுத்துவதற்கு கட்சிக்கு நன்கொடை வழங்கும் ஒருவர், அவர் பிரபுக்கள் சபைக்கு தெரிவானவர், அதற்கான செலவு 200,000 பவுண்களை செலுத்தி இருந்தார். அதனை அந்த நபர் இலவசமாகச் செய்யவில்லை. அதற்கு பிரதியுபகாரமாக மற்றுமொரு கொன்ராக் பேசப்பட்டுள்ளது. இந்தப் பொட்டுக்கேடுகளெல்லாம் வெளிச்சத்திற்கு வர பொறிஸ் ஓடிப்போய் தானே திருத்தச் செலவின்கான நிதியைச் செலுத்தினார்.

இதற்கு முன்னரே பிரதமரின் விசேட ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ் கோவிட்-19 விதிகளை மீறியது தொடர்பில் சிக்கலில் இருந்தவர். இவரே அன்றைய நாட்களில் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தவர் என கொன்சவேடிவ் கட்சிக்குள்ளேயே பெரும் புகை கிளம்பிக்கொண்டிருந்தது. இறுதியில் 2020 நவம்பரில் கட்சி அவரை பிரதமரின் நம்பர் 10 உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இருந்து கலைத்துவிட்டது.

அன்று டொமினிக் கம்மிங் கோவிட் -19 விதிகளை மீறியதாகக் குறம்சுமத்தப்பட்டது. கடந்த சில வாரங்களாக நம்பர் 10 இல் நடந்த குடியும் கும்மாளங்களும் அம்பலத்துக்கு வந்துள்ளது. 2020 முதலாம் இரண்டாம் லொக்டவுன்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அரசு அனைவரையும் தனிமைப்படுத்தச் சொல்லிவிட்டு அந்த விதியை உருவாக்கிய அரசின் மைய அலுவலகத்திலேயே குடியும் குத்துப்பாட்டு கும்மாளங்களும் இடம்பெற்றுள்ளது.

இதில் ஒரு கும்மாளத்தில் பிரதமர் பொறிஸ் 25 நிமிடங்கள் கலந்துகொண்டுள்ளார். அவர் அடிக்கடி வந்து பார்ட்டியில் கலந்துகொண்டு அம்பலப்படாமல் இருக்க அவரை கீழே பார்ட்டிக்கு வரவிடாமல் தடுக்க கதிரைகளை அடுக்கி அவரை கீழே வரவிடாமல் வேறு செய்துள்ளனர். கிட்டத்தட்ட குழந்தைப் பிள்ளைகளுக்கு சைல்ட் லொக் (chilf-lock) போடுவது போல் என இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடி நடவடிக்கைக்கு வைக்கப்பட்ட பெயர் ‘protect the top wild dog‘. இவையெல்லாம் அம்பலமாகி வரும் வேகத்தைப் பார்த்தால் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அடுத்த தேர்தல் வரை தாக்குப் பிடிப்பாரா என்ற சந்தேகம் பரவலாக எழுந்து வருகின்றது.

இதுவரை பிரதமர் தப்பிக்கொண்டதற்கு காரணம் கொன்சவேடிவ் கட்சிக்குள் பிரதமர் பொறிஸ்க்கு எதிரான காத்திரமான தலைமைகள் இல்லாததே அல்லது இருந்தும் யார் பூனைக்கு மணி கட்டுவது என்ற பிரச்சினையாகவும் இருக்கலாம். அடுத்த தலைமைக்கு தயாராக இருப்பவர்களில் முக்கியமானவர்கள் மைக்கல் கோவ், ரிஷி சுனாக், சஜித் ஜாவட், ஜெரிமி ஹன்ட். ப்ரித்தி பட்டேலும் அதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளார்.

தற்போது கொன்சவேடிவ் கட்சியில் 360 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 54 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே பொறிஸ்க்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முடுக்கிவிட முடியும். இப்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வெறும் 22 உறுப்பினர்களே உள்ளனர். ஆனால் தற்போது நம்பர் 10 இல் இடம்பெற்ற பார்டிகள் பற்றி தனக்கு பெரிதாக எதுவும் தெரியாது என்றும் அவை வெறும் வேலை நேர அல்லது வேலையுடனான கூட்டே என பிரதமர் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றார்.

பிரதமரின் நம்பர் 10 கார்டின் 24 மணி நேர சிசிரிவி பொருத்தப்பட்டு அது பொலிஸாரின் கண்காணிப்பிலும் இருந்து வந்தது. இந்தப் பார்ட்டியை சிசிரிவி யில் பார்த்தும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இதையே மாணவர்கள் செய்த போது பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். அபராதம் வித்தித்தனர். தமிழ் திருமணங்களில் கலந்துகொண்ட பலருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரமும் பணமும் உள்ளவர்களுக்கு ஒரு சட்டம். இல்லாதவர்களுக்கு இன்னொரு சட்டம்.

பல்வேறு அழுத்தங்கள் காரணமாகவும் தற்போது சூ க்ரேவ் என்பவர் தலைமையிலான விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. சூ க்ரேவ் இன் அறிக்கையிலேயே பிரதமர் பொறிஸ்ஸின் எதிர்காலம் ஊசலாடுகின்றது. சூ க்ரேவ் ஓரளவு நேர்மையுடன் செயற்படுவார் எனவே பலரும் எதிர்பார்க்கின்றனர். அவரை பிரதமரே நியமித்தும் உள்ளார். பிரதமரே சர்ச்சைக்குள்ளான ஒருவராக இந்த விசாரணையில் இருக்கின்ற போது அவரால் நியமிக்கப்பட்டவர் எப்படி பிரதமருக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டை விசாரிக்க முடியும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகின்றது. சூ க்ரேவ் உண்மையில் நம்பர் 10 இல் என்ன நடந்தது என்பதையே ஆராய்கின்றார்.

பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் எதிர்காலத்தை கொன்சவேடிவ் கட்சியும் பாராளுமன்றமுமே தீர்மானிக்கும். அடுத்த வாரம் வரவேண்டிய அறிக்கை இன்று வெளியான புதிய தகவல்களை ஆராய மேலும் ஒருவாரம் நீடிக்கப்பட்டு இருக்கின்றது. இன்றைய தகவலின் படி நம்பர் 10 இல் குடிவகைகளை ஸ்ரோர் பண்ணுவதற்கு குளிரூட்டி ஒன்று கொண்டுவரப்பட்டு, அதில் குடிபானங்கள் நிரப்பப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள வெயிற்ரோஸ் சுப்பர்மார்க்கற்றுக்கு சூட்கேஸ் கொண்டு சென்று குடிபானங்களை வாங்கி கையிருப்பிலும் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

ஜெப்ரி எப்ஸ் ரீன் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்கள் புரிந்து வந்த ஒரு செல்வந்தர். முதலீட்டாளர். அமெரிக்கர். இவர் இளம் பெண்களை ஆசை வார்த்தைகளைக் காட்டி மயக்கி தனதும் தன்னைச் சார்ந்தவர்களது பாலியல் இச்சைக்கும் வழங்கி வருபவர். ஜெப்ரி எப்ஸ் ரீன் இந்த மாமா வேலைக்கு உடந்தையாக அவருடைய மிகச் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த க்ளைன் மகஸ்வெல் இருந்துள்ளார். இவ்வாறான கிரிமனல் சிந்தனையுடையவர்களுக்கு வின்சர் அரண்மனையில் மகாராண எலிசபத்தின் செல்ல மகன் அன்ரூ விருந்துபசாரம் செய்துள்ளார். ஜெப்ரி எப்ஸ் ரீனின் விடுமுறை வாஸஸ்தலங்களில் அன்ரூ சென்று தங்கியும் வந்துள்ளார். அதனை அவர் ஏற்றுக்கொண்டும் உள்ளார்.

பல பாலியல் குற்றங்களுக்காக 2019 யூலை 6 ஜெப்ரி எப்ஸ் ரீன் கைது செய்யப்பட்டு பிணை மறுக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். சில வாரங்களில் 2019 யூலை 23 இல் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக அறிவிக்கப்பட்டது, 84 வீதமான அமெரிக்கர்கள் ஜெப்ரி எப்ஸ் ரீன் தற்கொலை செய்துகொண்டதை நம்ப மறுக்கின்றனர். 45 வீதத்தினர் அவர் கொலை செய்யப்பட்டதாகவே நம்புகின்றனர். அந்த வழக்கு நீதி மன்றத்துக்கு வந்திருந்தால் ஜெப்ரி எப்ஸ் ரீன் யாருக்கு யாருக்கு எல்லாம் இளம் பெண்களை வழங்கி இருந்தார் என்பது அம்பலமாகி இருக்கும்.

பிரித்தானியா உட்பட மேற்கு நாடுகளில் மதுக்குடில்களில் (தவறணைகளில்) இளம்பெண்களை அரைநிர்வாண நடனங்களில் ஆட வைப்பதும் இதன் பின் அவர்களை இச்சைகொள்வதும் போதைவஸ்து பாவனையும் கண்டும் காணாமல் நடைபெறும் வியாபாரங்கள். தவறணை உரிமையாளர்களின் முக்கிய வருமானங்கள் இவ்வாறுதான் வரும்.

இந்த இச்சைக்கு பிரித்தானிய மகாராணியன் செல்ல மகன் அன்ரூவும் மயங்கி வேர்ஜினியா கிவ் என்ற பதின்ம வயதுப் பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார். வேர்ஜினியா கிவ் இன் இடுப்பை இளவரசர் அன்ரூ பற்றி நிற்பதும் அருகில் க்ளைன் மக்வெல் நிற்கும் படமும் பிரித்தானிய சம்ராஜ்யத்தின் மையத்தை தற்போது ஆட்டம்காண வைத்துக் கொண்டிருக்கின்றது. ஒரு பொய்யை மறைக்க இன்னுமொரு பொய் என்று இளவரசர் வேர்ஜினியா கிவ் என்பவரை தனக்கு தெரியவே தெரியாது என்று மறுத்து வருகின்றார். ஆனால் இவருடைய லீலைகள் பொதுவாக எல்லோராலும் அறியப்பட்ட விடயங்களாக இருந்தது. இளவரசர் அன்ரூ பிரித்தானிய இராணுவ பட்டங்கள் அதிகாரங்கள் உடைய பொறுப்பில் இருந்தவர்.

கடந்த வருட இறுதியில் க்ளைன் மகஸ்வெல் அமெரிக்காவில் குற்றவாளியாகக் காணப்பட்டதுடன் இவ்வாரம் இளவரசர் அன்ரூவ்க்கு எதிரான சிவில் வழக்கை ஆரம்பிப்பதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து இளவரசர் அன்ரூவின் எதிர்காலம் சிக்கலானது. நேற்று தைப்பொங்கலன்று இளவரசர் அன்ரூவின் பதவிகளை பறிக்க வேண்டும் அவருக்கு வழங்கப்பட்ட பதங்கங்களை நீக்க வேண்டும் என பிரித்தானிய இராணுவ தலைமைகள் மகாராணியை கேட்டுக்கொண்டதற்கு இணங்க இளவரசர் அன்ரூவின் பதவியும் பதக்கங்களும் பறிக்கப்பட்டு அவர் அரண்மனையின் உத்தியோகபுர்வ பங்குபற்றுதல்களில் இருந்தும் நீக்கப்பட்டார். இனிமேல் அவருக்கு மரணம் வரை இவை மீளளிக்கப்பட மாட்டாது. ஆனால் தொடர்ந்தும் இளவரசர் என்றே அழைக்கப்படுவார். பதவியும் பதக்கமும் ஆடை ஆபரணங்களும் இல்லாவிட்டாலும் இளவரசர்.

செல்வத்திலும் அதிகாரத்திலும் அதன் உச்சியில் இருந்தாலும் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.