உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

தடை செய்யப்பட்ட ஐந்து இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடையை நீக்க அரசாங்கம் தீர்மானம் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தடை செய்யப்பட்ட ஐந்து இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடையை நிபந்தனைகளுடன் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒருவருடகால விசாரணையின் பின்னர் விசாரணை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் நிபுணர்கள் குழுவொன்று வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் அரசாங்கம் இந்த தடையை நீக்கவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏப்பிரல் 2021ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஐந்து இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்தார்.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆறுபேருக்கு எதிராகவும் தடைகளை அறிவித்தார்.

புலனாய்வு அமைப்புகளுடனான பேச்சுவார்த்தைகளின் போது இந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்கள் உறுப்பினர்களின் நடவடிக்கைகளிற்கு தாங்கள் பொறுப்பு என்ற வாக்குறுதியை வழங்கியுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தடைகள் நீக்கப்பட்ட பின்னரும் இந்த அமைப்புகளை உன்னிப்பாக கண்காணிக்கவேண்டும் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது குறிப்பாக அவர்களிற்கான நிதி மற்றும் அவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கவேண்டும் எனவும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்புகள் ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தடைகளை மீண்டும் விதிக்கவேண்டும் எனவும் நிபுணர்குழுபரிந்துரைத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையிலிருந்து ஜனாதிபதி ரணில் விடுதலை – மைத்திரிபாலவின் மனு நிராகரிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை கொழும்பு மாவட்ட நீதிபதி மகேஷ டி சில்வா அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததால், தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்ததுடன், தமது கட்சிக்காரர் தற்போது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சுட்டிக்காட்டினர்.

அதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தற்போது வழக்குத் தொடர முடியாது என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்து, பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை 21,000 ரூபா கட்டணத்திற்கு உட்படுத்தப்பட்டு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சஞ்சீவ மொரேஸ் மற்றும் பிராங் குணவர்தன ஆகிய  இருவரடங்கிய நீதிபதிகள்  குழு முன்னிலையில் புதன்கிழமை (1) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் திரை மறைவில் வெளிச்சத்துக்கு வராத பல விடயங்கள் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வெளிப்புற தோற்றத்தில் காண்பதை விட அதன் உட்புற தோற்றத்தில் அதிக வேலைப்பாடு இருப்பதாக நாங்கள் தற்போது உணர்ந்து வருகிறோம்  என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் குண்டுத்தாக்குதல் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாடகத்தில் நடிக்கும் நடிகர்களைப் போன்று கிரீடத்தை அணிந்து கொண்டு செயற்படாது மக்களின் துயரங்களுக்காகக் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அதனைச் செய்ய முடியாவிட்டால் அதனைக் கழற்றிவிட்டு வெளியேற வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் தாக்குதலின் வெளிப்புற தோற்றத்தில் காண்பதை விட அதன் உட்புற தோற்றத்தில் அதிக வேலைப்பாடு இருப்பதாக நாங்கள் தற்போது உணர்ந்து வருகிறோம்.

நாம் யாரையும் பழிவாங்க விரும்பவில்லை. ஆனால் உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தாக்குதலை அறிந்த உயர் பதவியில் இருப்போர் மற்றும் வாக் குறுதிகளை வழங்கியோர் இப்போது எதுவும் தெரியாதது போல் இருக்கிறார்கள்.  அதுதான் எம்மால் தாங்க முடியாத விடயம் என்றும் இதற்கு அவர்களின் பங்கு இருக்குமோ..? என்ற சந்தேகம்  எழுந்துள்ளது.

எனவே இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை அனைத்து கத்தோலிக்கர்களும் ஒன்றிணைந்து நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

“ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்கு அல்லாஹ்தான் முழுக்காரணம் எனக்கூறிய ஞானசார தேரரை கைது செய்யுங்கள்.” – விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை !

ஞானசார தேரர் அண்மையில் சிங்கள தனியார் ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தினமன்று குண்டுத் தாக்குதல் நடத்திய குழு மற்றும் அவர்களை அந்த நடவடிக்கையில் ஈடுபடத் தூண்டிய விடயம் சில குர்ஆனின் போதனைகளாக இருப்பதுடன், அவர்கள் வணங்கும் இறைவனான அல்லாஹ்தான் இதற்கு முழுக்காரணம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் , முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவற்துறை தலைமையகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், அல்ஹாபிழ் இசட். நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், அலிசப்ரி ரஹீம், சட்டத்தரணி முஸாரப் முதுநபின், இசாக் ரஹ்மான் ஆகியோரே இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்கள்.

ஞானசார தேரரின் கருத்தால் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொதிப்படைந்துள்ளனர். தாம் வணங்கும் இறைவனை நிந்திக்கும் இந்தக் கருத்து பாரதூரமானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இவ்வாறான கருத்தைத் தெரிவித்த ஞானசார தேரரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவற்துறைமா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது,

“கடந்த காலங்களில் ஞானசார தேரர் சமூகத்துக்கு எதிராக செயற்பட்டதற்கு அமைய சட்ட ரீதியாக அணுகி அவர் தண்டிக்கப்பட்டார். அதேபோன்று இவ்விடயம் சம்பந்தமாக தாங்கள் நாட்டின் முக்கிய உலமாக்கள், சட்டத்துறை விற்பன்னர்கள், சமூக நலவாதிகள் ஆகியோருடன் கலந்துரையாடினோம். அவர்கள் கூறிய ஆலோசனை இது சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் கடுமையான முறையில் விவாதிக்கும்போது ஞானசார தேரருக்குச் சார்பாக சிங்களப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைப் பாரிய சிங்கள – முஸ்லிம் குழப்பத்துக்குக் கொண்டுபோகச் செய்வார்கள். எனவே இவ்வாறான சூழ்நிலையை விட இறைவனுக்குச் செய்த நிந்தனையையும் முஸ்லிம் மக்களுக்கு அச்சுறுத்தலாகச் செயற்படும் ஞானசார தேரரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பது நல்லது என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அதற்கமையவே மிக நிதானமாகவும் சமூகப் பொறுப்புடனும் இவருக்கு நடவடிக்கை எடுக்க காவற்துறையினரை அணுகியுள்ளோம். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவைச் சந்தித்தும் பேசியுள்ளோம். ஞானசார தேரருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தியதுடன் அதற்கான துரித நடவடிக்கை எடுக்கப் காவற்துறையினரைப் பணிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

மேலும், நாடு திரும்பியவுடன் ஜனாதிபதியை நேரில் சந்தித்து ஞானசார தேரர் இந்த நாட்டில் சமூகங்களிடையே பெரும் குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பதைச் சுட்டிக்காட்டி அவருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவதற்கும் தீர்மானித்துள்ளோம்” – என்றார்.