ஏ ஆர் சிறிதரன்

ஏ ஆர் சிறிதரன்

வட்டுக்கோட்டை ‘மாவடி சிறி’யின் படைப்புகள் – நாடகங்கள் ஒரு பகிர்தல்

நாடகத்துறையில் அண்மைக் காலமாக வளர்ந்து வருகின்ற ஒரு கலைஞர் மாவடி சிறி என்று அறியப்பட்ட ஏ ஆர் சிறிதரன். யாழ் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த அவர் நான் கற்ற யாழ் வட்டு இந்துக் கல்லூரியிலேயே கற்றவர் எனப்தும் எனக்கு சில ஆண்டுகள் சீனியர் என்பதாலும் எனக்கு அவர் மீது எப்போதும் ஒரு ஈடுபாடு ஏற்படக் காரணமாக இருந்துள்ளது.

அன்றைய காலகட்டங்களில் வடக்கில் பஷனைக் கொண்டுவருவது யாழ் வட்டுக்கோட்டையும் மானிப்பாயும். அதற்குக் காரணம் இப்பிரதேசங்களில் காணப்பட்ட கிறிஸ்தவர்களின் அளுமை. யாழ்ப்பாணக் கல்லூரி. அதுவே தமிழ் பிரதேசத்தின் முதல் பல்கலைக்கழகமாகவும் மாறியது. கலைத்துறையைப் பொறுத்தவரை சோமசுந்தரப் புலவர் குறிப்பிடத்தக்கவர்.

யாழில் சனத்தொகை செறிந்த பிரதேசங்களில் ஒன்றாகவும் வட்டுக்கோட்டை இருந்துள்ளது. அதுவொரு தனியான தேர்தல் தொகுதியுமாகும். வட்டுக்கோட்டை இல்லாமல் இலங்கைத் தமிழரின் வரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது. இலங்கையின் ஒரேயொரு தமிழ் எதிர்க்கட்சித் தலைவரை தந்த மண். போராட்ட காலங்களில் ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக இருந்த மண். இராணுவ மற்றும் கடற்படை முகாம்களில் இருந்து சில மைல் தூரத்தில் இருந்த படியால் பாரிய இழப்புகளை சந்திக்காத மண்.

ஆனால் விடுதலைப் போராட்ட அரசியலில் மிகவும் அரசியல் மயப்பட்ட மண். முதலாவது அரசியல் படுகொலை – சுந்தரம் படுகொலை வட்டுக்கோட்டையிலேயே நடந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் புதிய பாதை சுந்தரத்தை படுகொலை செய்தனர். வட்டுக்கொட்டையிலேயே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மிகக் காட்டுமிராண்டித்தனமாக தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த பள்ளிமாணவர்களான ஆறுவரை படுகொலை செய்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் இடையே நடந்த மோதலில் வட்டுக்கோட்டையில் மட்டுமே படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்க போராளிகளின் உடல்கள் மக்களால் பொறுப்பேற்கப்பட்டு கௌரவமான முறையில் தகனம் செய்யப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் பெயர்பெற்ற அமைப்புகள் எல்லாம் இருக்கின்ற போதும் தனியொருவனாக சாகசம் புரிந்து தாக்குதல்களை நடத்திய ரெலி என்கின்ற இயக்கத்தின் தலைவர் ஜெகனின் ஊரும் வட்டுக்கோட்டை. அவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதும் வட்டுக்கோட்டையில் தான்.

சாதியத்திற்கு எதிராக முதல் முதல் ஆயதம் ஏந்தியதும் வட்டுக்கோட்டையில் தான். ஆனாலும் இன்று சாதியம் மையங்கொண்டிருப்பதும் வட்டுக்கோட்டையில் தான்.

ஒரு காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய வட்டுக்கோட்டையில் இன்றும் மலாயன் பென்சனியர்களை அதிகம் காணலாம். வட்டுக்கோட்டைக்கும் மலேசியாவுக்கும் இன்றும் நெருங்கிய உறவு உள்ளது.

இது வட்டுக்கோட்டை பற்றிய என் மனப்பதிவுகளில் இருந்து குறிப்பிட்ட சில. அப்பேற்பட்ட பிரதேசத்தில் இருந்து வருகின்ற ஒரு எழுத்தாளனோ படைப்பாளியோ அரசியலற்ற ஒருவராக இருப்பது முடியாத காரியம். அந்த வகையில் மாவடி சிறி ஒரு அரசியல், சமூக படைப்பாளியே. அதனாலோ என்னவோ அவருடைய படைப்புகளில் கலையையும் கடந்து அரசியல் வெளிப்பட்டுவிடுகின்றது. அதனால் படைப்பின் கலையம்சத்திற்கும் அதன் அரசியல், சமூக கருத்தியலுக்கும் இடையேயான சமநிலை மாறிப்போய்விடுகின்றது.

2014 முதல் இதுவரை 5 நாடகங்களை மாவடி சிறி மேடையேற்றி உள்ளார். கனவுகள் மெய்ப்பட வேண்டும், நல்லதோர் வீணை செய்து, உன் பார்வை ஒருவரம், கும்மியடி பெண்ணே கும்மியடி, அக்கினிக்குஞ்சு ஆகியவற்றோடு அண்மையில் கொரோனாவுடன் தொடர்புபடுத்தி ஒரு மணிநேர படத்தையும் தந்திருந்தார். மாவடி சிறி கலையை கலைக்காக படைப்பவரல்ல. கலையை மக்களுக்காக படைப்பவர். அவருடைய படைப்புகள் மக்களின் வாழ்நிலையை பிரதிபலிக்கும் விதத்தில் அமைக்கப்படுகின்றது.

ஆனால் பல சந்தர்ப்பங்களில் அவருடைய அரசியல் சமூக கருத்தியல் அவருடைய கலையுணர்வுச் சமநிலையை மீறி பிரச்சாரச் சாயலை ஏற்படுத்திவிடுகின்றது. அதற்கு அவர் ஒரு சமூக செயற்பாட்டாளராக இருப்பதும் காரணம் எனலாம். பன்முக ஆளுமை மிக்க மாவடி சிறி திங் ருவைஸ் என்ற அமைப்பை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மோலாக நடத்தி வருபவர். ஒன்றினது தாக்கம் அவர்களை அறியாமலேயே மற்றைய அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது. மாவடி சிற புலம்பெயர்ந்த வாழ்வின் பல்வேறு இன்னல்கள் தடைகள் மத்தியிலும் இவ்வாறான படைப்புகளை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருப்பதற்கு அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் அவருடைய குழவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

‘சமூக செயற்பாட்டில் படைப்பாளர் பற்றிய பகிர்தல் வெளி’ என்ற தலைப்பில் செம்முகம் ஆற்றுகைக் குழு சூம் ஊடாக இணைய வெளி கலந்துரையாடல் ஒன்றை நாளை டிசம்பர் 30 2021இல் இலங்கை நேரம் மாலை 6:30 ற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் மீரா பாரதி, யதார்த்தன், செம்முகம் ஆற்றுகைக் குழு இயக்குநர் சத்தியசீலன், நாடகச் செயற்பாட்டாளர் தருமலிங்கம் புலவர் சிவநாதன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். மாவடி சிறி இறுதியில் ஏற்புரை நிகழ்த்துவார்.