கல்வி

கல்வி

ஒடுக்கப்பட்டவர்களுக்கான கல்வி: ஒடுக்குமுறையை உடைத்து முளைத்த வீரியமான மானிடன் அதிபர் பெருமாள் கணேசன்!

கடந்த ஏழு தசாப்தங்களாக திறந்த வெளிச் சிறைச்சாலையாக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் குறிப்பாக காசாவில் வாழ்ந்த பாலஸ்தீனியர்கள் இன்று மிகமோசமான மனிதக் கொடூரத்தின் சாட்சியங்களாக மாறியுள்ளனர். ஹிட்லரின் இனப்படுகொலைக்கு பலியாகி துரத்திவிடப்பட்ட யூதர்களுக்கும் உலகெங்கும் பரந்து வாழ்ந்த யூதர்களுக்கும் வாக்களிக்கப்பட்டதாக சொல்லப்படும் பாலஸ்தீனத்தில்; அடைக்கலம் கொடுக்கப்பட்டது. இன்று அடைக்கலம் புகுந்தவர்கள் அங்குள்ள அந்த மண்ணை விட்டு நீங்காத பாலஸ்தீனியர்கள் மீது இனப்படுகொலையைப் புரிகின்றது இஸ்ரேலிய இராணுவம். காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை ஒழித்துக்கட்டுவதற்கு அதிநவீன ஆயதங்களை மட்டும் இஸ்ரேலிய கொடுங்கோல் அரசு பயன்படுத்தவில்லை, அவர்களுக்கு கிடைக்கும் தண்ணியை நிறுத்தினர். உணவை நிறுத்தினர். பாண் ரொட்டி தயாரிக்கும் வெதுப்பகங்களை குறி வைத்துத் தாக்கினர். வாழ்விடங்களை தரைமட்டமாக்கினர், வீதிகளைக் கிளறி நாசம் செய்தனர். கழிவுகளை பரவவிட்டு தொற்றுநோய்கள் பரவச் செய்தனர். யாரும் மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவிடாதபடி மருத்துவமனைகளை அழித்தனர். காலனித்துவ காலத்தில் ஐரோப்பிய வெள்ளையின மேலாதிக்கவாதிகள் உலகெங்கும் சென்று இன அழிப்புச் செய்து அந்த நாடுகளைச் சுரண்டிக் கொள்ளையடித்து தங்கள் செல்வத்தை வளர்த்தனர். அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் என்றழைக்கப்பட்ட பூர்வகுடிகள் அழித்தொழிக்கப்பட்டனர். அவுஸ்திரேலியாவில் பூர்வகுடிகள் அழிக்கப்பட்டனர். கதை முடியவில்லை தொடர்கிறது. காஸாவில் பாலஸ்தீனியர்களை அழிக்கின்றனர். பாலஸ்தீன நிலத்தை அபகரிக்கின்றனர். இதற்கும் மணிவிழாக் கொண்டாடும் நாயகன் பெருமாள் கணேசனுக்கும் என்ன சம்பந்தம்? இதற்கும் கல்விக்கும் என்ன சம்பந்தம்?

காலனியாதிக்கவாதிகளின் கொள்ளைக்கும் அதிகாரத்திமிருக்கும் பலியான பல நூறு ஆயிரம் சமூகங்களில் ஒன்றான மலையக சமூகத்திலிருந்த வீரியமுடைய விதையில் முளைத்த மானிடன் தான் பெருமாள் கணேசன். இப்போது மலையகத்தின் 200 ஆண்டுகள்ளை எண்ணிப் பார்க்கின்றோம். ஐரோப்பிய காலனித்துவ வாதிகள் 200 ஆண்டுகளுக்கு முன் என்ன செய்தார்கள் என்பதைக் காட்டுவது தான் காஸா மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர். காலனித்துவ காலத்தில் தமிழகத்தில் கொடிய பட்டினியால் மக்கள் இலட்சக் கணக்கில் இறந்தபோது, தானியங்களை இந்தியாவில் இருந்து பிரித்தானியாவுக்கு ஏற்றியவர்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள். பஞ்சத்தை பயன்படுத்தி அம்மக்களை தேயிலை, ரப்பர் தோட்டங்களில் பணியாற்ற இலங்கைக்கு கொண்டு வந்தனர். அந்த மலையக மக்கள் அன்றுபட்ட அவலம் காஸாவில் இன்று அதே ஏகாதிபத்தியம் செய்கின்ற கொடுமைகளுக்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல. அன்றும் சரி, இன்றும் சரி அவர்கள் ஏனைய மக்களை மனிதர்களாகவே கணிக்கவில்லை. மனித விலங்குகளாகவே கணிக்கின்றனர். அவ்வாறே இஸ்ரேலிய தலைவர்கள் மனித விலங்குகள் என்று கூறுகின்றனர்.

இந்த மலையக மக்கள் அவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியில் இலங்கைக்கு பொய்வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டனர். இன்று இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த போதும் இலங்கை மக்கள், தமிழ் மக்களும் கூட அவர்களை கண்ணியமாக அன்றும் நடத்தவில்லை. இன்றும் நடத்தவில்லை. நாளை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இன்னமும் ஏற்படவில்லை. மலையகத் தமிழர்களை இந்திய ஏகாதிபத்தியத்தின் நீட்சியாக ஜேவிபி உட்பட பேரினவாதக் கட்சிகள் பார்த்தன. அம்மக்களை தங்கள் எதிரிகளாக பார்த்து இன்றும் தோட்ட அடிமைகளாக நடத்துகின்றனர். தமிழ் மக்களும் அந்த மக்களை கள்ளத் தோணிகள், வடக்கத்தையான் என்றெல்லாம் முத்திரைகுத்தி தங்கள் அடிமைகளாகவே தொடர்ந்தும் வைத்திருந்தனர். பின்நாட்களில் படித்த வாலிபர் திட்டத்தின் கீழ் யாழ் மேட்டுக்குடிகள், கிளிநொச்சியில் பெற்றுக்கொண்ட காணிகளுக்கு தோட்டங்களுக்கு படிக்க வாய்ப்பளிக்கப்படாத மலையக மக்கள் தோட்டக்காரர்களாகினர்.

இவர்களில் சில லட்சம் பேர் தமிழகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட போதும் அங்கும் அவர்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாகவே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். வறுமை தலைவிரித்தாடும் உத்தரப் பிரதேசத்தில் ஆயிரம் கோடி இந்திய ரூபாயில் ராமர் கோயில்கட்டி மக்களுக்கு ‘நாமம் போடும்’ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு பாடசாலைகளையோ தொழிலகங்களையோ அமைக்கத் தயாரில்லை. ராமர் கோயிலைக்கட்டி மக்களை முட்டாள்களாக வைத்திருந்தால் மட்டுமே தாங்கள் தலைவர்களாக இருக்கலாம் என்ற சமன்பாட்டை உணர்ந்த பழுத்த அரசியல்வாதி அவர். யாழ் மேட்டுக்குடியின் நீட்சியாக இருக்கும் தமிழரசுக் கட்சிக்கு தற்போது தலைவரான எஸ் சிறிதரனும் மோடியின் சமன்பாட்டையே நம்புகின்றார்.

இவற்றுக்கு மறாக தனது சமூகத்தின் மத்தியில் மூட நம்பிக்கைகளைக் களைந்து அம்மக்களை அறியாமை எனும் அடிமைத்தளைகளில் இருந்து நீக்குவதை தன் வாழ்வியலாக மாற்றிக்கொண்டவர் அதிபர் பெருமாள் கணேசன். பெயர்பெற்ற பாடசாலைகளுக்கு போட்டி போட்டுச் செல்லாது, பின் தங்கிய பிரதேசங்களில், பாடசாலைக்கு ஆசிரியராகி, அதிபராகி அதனை மேன்நிலைக்கு கொண்டுவரப் பாடுபடுகின்ற அதிபர் பெருமாள் கணேசன் போன்ற மிகச் சிலர் இருப்பதால் கிளிநொச்சி மண் இன்றும் தன் கல்விநிலையில் முன்னேறத் துடிக்கின்றது. கல்வி நிலையில் பின் தங்கியுள்ள கிளிநொச்சியில் தமிழ் ஆசிரியர்களுக்கே போதாமை உள்ள போது ஆங்கிலக் கல்வியில் புலமைபெற்று அம்மண்ணில் ஆங்கில மொழியறிவையும் வளர்த்து வருகின்றார்.

அதிபர் பெருமாள் கணேசனுக்கும் எனக்குமான உறவு அகலமான, ஆழமான, நீண்ட உறவல்ல. நாங்கள் அடிக்கடி உறவாடியவர்களும் உரையாடுபவர்களும் அல்ல. கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக்கு ஓரிரு முறை உரையாடி இருப்போம். ஆனாலும் அந்த உறவு மிக ஆரோக்கியமானதாக இருக்கக் காரணம் இருவரிடமும் இருந்த சமூகத்தின் மீதான நேசம். அதனால் அதிபர் பெருமாள் கணேசன் பற்றிய எனது விம்பம் அவர்சார்ந்த அவரைச் சூழ உள்ளவர்களால் கட்டப்பட்டது. இதற்கெல்லாம் மணிமகுடம் சுட்டியது போல் அமைந்தது அவருடைய அகச்சீற்றம். அவருடைய போராட்ட குணாம்சம். ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவர் முன்நிறுத்துகின்ற அடையாளம். அதனை அவர் எதிர்கொள்கின்ற பாணி. “நான் தோட்டக்காட்டான்!”. அதில் அவர் தன்னுடைய அடையாளத்தையே தன்னுடைய பலமாக மாற்றுகின்ற துணிச்சலைக் காண முடிகின்றது. இது வெறும் துணிச்சல் அல்ல. தன்நம்பிக்கையின் அடையாளம். இந்தத் துணிச்சல், ஒடுக்கும் மேட்டுக்குடிகளுக்கு சவாலாக உள்ளது. ஒரு சமூகத்தை சீர்குலைக்க வேண்டும் என்றால் அவர்களின் அடையாளத்தை கீழ்நிலைப்படுத்த வேண்டும். அவர்கள் யார் என்பதை வெளியே சொல்ல அவர்களே தயங்குகின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அதனையே காலம் காலமாக மேட்டுக்குடிகள் செய்தன. அவர்களை அந்த அடையாளத்தைப் பயன்படுத்தியே ஒடுக்கினர். பாதிக்கப்பட்டவர்கள் நிலவுக்குப் பயந்து பரதேசம் சென்றது போல் தங்களுக்கு வேறு அடையாளங்களை போர்த்திக்கொள்ள முயன்றனர். ஒடுக்குபவன் விடவில்லை. அவர்களின் அடையாளத்தை தோண்டி எடுத்து மீண்டும் அவர்களை அடிமைப்படுத்த முயற்சிக்கிறான். அதிபர் பெருமாள் கணேசன் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதனால் அதிபர் பெருமாள் கணேசனை யாராலும் ஒடுக்க முடியவில்லை, பாசத்தாலும் நட்பாலும் அல்லாமல்.

இலங்கையின் தமிழர் தாயகங்களில் யாழ்மாவட்டத்துக்கு இருக்கின்ற கல்விப் பாரம்பரியம் ஏனைய மாவட்டங்களுக்கு இல்லை. யாழ்ப்பாணத்தின் கல்விப் பாரம்பரியம் சிலநூறு ஆண்டு வரலாற்றைக் கொண்டது. காலனியாதிக்க காலம் முதலாக அங்கு ஒரு கல்விப் பாரம்பரியம் உருவானது. அது மேட்டுக்குடிகளுக்கான கல்வியாகவே அமைந்தது. அதன் தாக்கத்தை இன்றும் தமிர்களிடையே பரவலாகக் காணலாம். கல்வி என்பது காலனித்துவ காலத்தில் கத்தோலிக்க வெள்ளாளர்களுக்கானதாக இருந்து பின் ஆறுமுகநாவலரின் சைவ மறுமலர்ச்சியைத் தொடர்ந்து யாழ் வெள்ளாள ஆண்களுக்கானதாக மாறியது. பின்னாளில் அது யாழ் சைவ வேளாளர்களுக்கானதாக மாற்றமடைந்தது. யாழ் பல்கலைக்கழகத்தின் அண்மையில் வெளியான தமிழ் வாழ்த்துக் கூட கல்வியை யாழ் மாவட்டத்துக்கானதாகவே சித்தரிக்கின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாக விதிவிலக்காக அதிபர் பெருமாள் கணேசன் போன்ற கல்வி ஆளுமைகள் பல்வேறு சமூகங்களில் இருந்து உருவான போதும் இன்றும் கல்வி அனைவருக்குமானதாக உருவாக்கப்படவில்லை என்பது துரதிஸ்டவசமான உண்மை.

இலங்கை அரசினால் கொண்டுவரப்பட்ட இலவசக் கல்வித்திட்டம் என்பது இந்த நாகரீக உலகத்தின் மிக உன்னதமான வளர்ச்சித்திட்டம். உலகின் செல்வந்தர்களில் ஐம்பது வீதத்திற்கும் அதிகமானவர்களைத் தன்நாட்டில் கொண்டுள்ள உலகின் மிகச் செல்வந்த நாடான அமெரிக்காவில் கல்வி ஜனநாயகமயப்படுத்தப்படவில்லை. பிரித்தானியாவில் பல்கலைக்கழகம் சென்று திரும்பும் ஒவ்வொரு மாணவனும் 2 கோடி ரூபாய் கடனுடனேயே பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறுகின்றனர். ஆனால் சின்னஞ் சிறிய இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் மாணவர்கள் ஒரு சதம் கடன் இல்லாமல் வெளியே வருகின்றனர். இந்தப் பட்டதாரிகளை அமெரிக்காவும் கனடாவும் பிரித்தானியாவும் அவுஸ்திரேலியாவும் உடனேயே உள்வாங்குகின்றனர். இப்பட்டதாரிகளுடைய கல்வித்தரம் அம்மேற்கு நாடுகளின் கல்வித் தரத்துக்கு ஒப்பானதாக உள்ளது. இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வரும் மருத்துவர்களை மருத்துவ தாதிகளை நம்பியே பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகள் இயங்குகின்றன.

இலங்கையில் இலவசக் கல்வி இருந்த போதும் கல்விக் கட்டமைப்புகள் காலனித்துவத்தின் நீட்சியாகவே இன்றும் இருக்கின்றது. இக்கல்வித் திட்டம் பொருளாதார நிலையில் கீழ் மட்டத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மலையக மக்களை முழுமையாகச் சென்றடையவில்லை. தாய்மொழிக்கல்வி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சம வாய்ப்பை அளித்தாலும் மொழிக்கு அப்பாலான பொருளாதார, பிரதேச, சாதிய தடைகள் இன்றும் பரவலாக உள்ளது. இத்தடைகளை நீக்குவதற்கான முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சமூகம் அரசியல், பொருளாதார, இன, மத, சாதிய, பிரதேச அடிமைக்கட்டுக்களில் இருந்து விடுபட வேண்டுமானால் அந்த சமூகத்திற்கு கல்வி இன்றியமையாதது. ஆனால் ஆண்டாண்டு காலமாக நூற்றாண்டு காலமாக ஒடுக்குமுறைக்கு தொடர்ச்சியாக உட்பட்ட ஒடுக்கப்படும் சாதிகளும் மலையக மக்களும் அவர்களுடைய குழந்தைப் பருவம் முதலே கனவுகள் மிதிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அவர்களுக்கு விதிக்கப்பட்டது இதுதான் என்று நம்ப வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது தன்னம்பிக்கைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படுகின்றது.

காலனித்துவத்தின் நீட்சியாக உள்ள இலங்கைக் கல்விக் கட்டமைப்பு இங்குள்ள அதிகாரக் கட்டமைப்புக்கு சேவகம் செய்கின்ற வகையிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுவே பிரித்தானிய கல்விக் கட்டமைப்பாகவும் உள்ளது. அதன்படி கல்வியில் மேன்நிலை அடையக்கூடியவர்களை மட்டும் வளர்த்தெடுத்து பயன்படுத்திக்கொள்ளும் இம்முறை ஏனையவர்களைப் பற்றிக் கணக்கெடுப்பதில்லை. இவ்வாறான சிந்தனைமுறைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டு உயர் கல்வி வரை அது அனைவருக்குமான வகையில் ஜனநாயகப்படுத்தப்படாவிட்டால் சமூக ஏற்றத் தாழ்வுகளும் முரண்பாடுகளும் ஒடுக்குமுறையும் இன்னும் ஆண்டாண்டு காலத்திற்குத் தொடரும்.

துரதிஸ்டவசமாக கல்வியில் மேன்நிலை அடைபவர்கள் பெரும்பாலும் மேட்டுக்குடியினராகவே இருக்கின்றனர். ஏனெனில் அவர்களுக்கு அந்தக் கல்விக் கட்டமைப்பில் வெற்றிபெறுவதற்கான தடைகள் பாரிய அளவில் இருப்பதில்லை. ஆனால் மலையக மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பொருளாதார நிலை, குடும்பத்தினுடைய கல்வி நிலை, அவர்களுடைய குடும்பத்தில், அவர்கள் வாழ்கின்ற சமூகத்தில் கல்வி பற்றிய பார்வை, அவர்களுடைய சூழலில் கல்விக்கான வாய்ப்பு வசதிகள், கல்விக்கான நவீன சாதனங்களுக்கான வாய்ப்பு என மலையக மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தொடர்ந்தும் கல்வியில் முன்னேற முடியாமல் பாரிய தடைகளை எதிர்கொள்கின்றனர்.

இத்தடைகளைத் தாண்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் முன்னேறுகின்ற போது கல்வி மற்றும் அதிகாரக் கட்டமைப்புகளின் மேல்மட்டங்களில் உள்ளவர்கள் அவர்களுக்கு தடைகளைப் போட்டு அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கின்றனர். மலையக, ஒடுக்கப்பட்ட சமூகங்களில் உள்ளவர்கள் பாடசாலைகளுக்கு அதிபர்களாக வருவது, கல்வி அதிகாரிகளாக வருவது, பல்கலைக்கழக துறைசார் தலைவர்களாக வருவது, துணை வேந்தர்களாக வருவது, மாகாணசபை உறுப்பினர்களாக வருவது, பாராளுமன்ற உறுப்பினர்களாக வருவது இன்றுவரை குதிரைக்கொம்பாகவே உள்ளது. அன்று ‘சூரனின் சுயசரிதை’ நூலில் குறிப்பிட்டவாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கட்டிய ஆரம்பப் பாடசாலையை தங்களை உயர்சாதியினர் என்று சொல்லிக் கொள்பவர்கள் எரித்து நாசமாக்கிய வரலாறு இன்று இடம்பெறவில்லை. ஆனால் மலையக மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்தை தடுப்பதற்கு இக்கட்டமைப்புகளும் கட்டமைப்புகளில் உள்ளவர்களும் துணைபோகின்றனர்.

கல்வி என்பது சான்றிதழ்களாக மட்டும் குறுக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியில் வினைத்திறனற்றவர்களாக உள்ளனர். நடைமுறையில் உள்ள தொழில்நுட்பக் கல்வியும் பிரதேசத் தேவைகளைச் சார்ந்ததாகவோ உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிப்பதாகவோ இல்லை. கைக்கடக்கமான அப்பிளைக் கொண்டு ஐரோப்பாவில் நூற்றுக்கு மேற்பட்ட துணைப்பொருட்கள் உள்ளன. ஆனால் நாம் எவ்வளவோ பெரிய பலாப்பழத்தை வைத்துக்கொண்டு பெரிதாக ஏதும் செய்யவில்லை.

கல்வி என்பது அனுபவம். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான பொறிமுறை. இன்றில்லாத, நாளை உருவாகப் போகின்ற பிரச்சினையைத் தீர்க்கின்ற ஆற்றலை இன்றைய கல்வி வழங்க வேண்டும். ஆனால் நடைமுறையில் இன்றுள்ள பிரச்சினையைக் கூட தீர்க்க முடியாத கல்வியைத்தான் தற்போதுள்ள கல்வி;க் கட்டமைப்புக்கள் இன்று வழங்குகின்றன. அதனால் தான் மலையக மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இன்றைய கல்விக் கட்டமைப்பில் இருந்து அந்நியப்பட்டுள்ளனர். அவர்களுடைய வாழ்நிலையை, வாழ்க்கைச் சூழலை, கலாச்சாரத்தை புரிந்துகொள்ளாதவர்கள் தான் இன்றைய கல்வி மற்றும் அதிகாரக்கட்டமைப்புகளில் உள்ளனர். ஆசிரியர்களாகவும் அதிபர்களாகவும் பெரும்பாலும் உள்ளனர். இந்த அந்நியத்தன்மை, இந்த இடைவெளி அகற்றப்பட வேண்டும்.

இதனையே பதியுதீன் மொகமட் கல்வி அமைச்சராக இருக்கும் போது மாற்றி அமைத்தார். முஸ்லீம் பிரதேசங்களில் முஸ்லீம் பாடசாலைகளில் முஸ்லீம்களே ஆசிரியர்களாக நியமிக்கப்படும் வகையில் ஆசிரியர் தெரிவுக்கான தகமை எல்லையை சற்று தளர்த்தினார். முஸ்லீம் பாடசாலைகளில் அவர்களின் வாழ்நிலை, வாழ்க்கைச் சூழல், கலாச்சாரத்தை உணர்ந்துகொண்டவர்கள், புரிந்து கொண்டவர்கள் ஆசிரியர்களாக ஆகினர். அச்சமூகத்தின் மத்தியில் ஒரு கல்விப் பாரம்பரியம் உருவாக ஆரம்பித்தது. இந்நிலை வெவ்வேறு சமூகங்கள் மத்தியிலும் ஏற்படவேண்டும். ஒவ்வொரு பாடசாலையும் அச்சமூகத்திலிருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கல்வியும் வாய்ப்புகளும் மேலும் மேலும் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்.

கல்வியில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை குறைக்க முடிந்தால் சமூகத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும் ஒடுக்குமுறைகளையும் நீக்க முடியும். ஆனால் தற்போதைய கல்விமுறை என்பது ஆரம்பம் முதலே மிக ஏற்றத் தாழ்வானதாக உள்ளது. முன்பள்ளிகளை எடுத்துக்கொண்டால் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் 4,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாய் வரை வேறுபடுகின்றது. இதில் யார் எந்த முன்பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புவார்கள்? எந்த முன்பள்ளியில் கற்கும் பிள்ளையின் கல்வியின் எதிர்காலம் நிச்சயமானதாக இருக்கும். இந்நிலை தற்போது தனியார் பல்கலைக்கழகங்களின் வருகையோடு உயர்கல்வியிலும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியோடு பாடசாலைகள் இரண்டாம் தரமானவையாக்கப்பட்டு பெரும்பாலான பாடசாலைகளின் தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது நாம் அனுபவ வாயிலாகக் கண்டுகொண்டது. தனியார் மருத்துவமனைகளின் வளர்ச்சியும் இதனையே காட்டுகின்றது. அதே போல் தனியார் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி அரச பல்கலைக்கழகங்களின் தரவீழ்ச்சியை இன்னும் ஊக்குவிக்கும். அரச பாடசாலைகளை, அரச பல்கலைக்கழகங்களை தரமுயர்த்தாமல் கல்வியை தனியார் கைகளில் ஒப்படைப்பது நீண்டகாலத்தில் கல்வியில் தற்போதுள்ள ஏற்றத் தாழ்வுகளை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும். மலையக மக்களுக்கு, பொருளாதார ரீதியில் கீழ்நிலையில் உள்ள மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியை எட்டாக் கனியாக்குவதற்கான முயற்சியாகவே இது அமையும்.

இதனைத் தடுப்தற்கு அதிபர் பெருமாள் கணேசன் போன்ற தீர்க்கமான சிந்தனையுடையவர்கள் பலர் பல்வேறு சமூக மட்டங்களில் இருந்தும் உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களில், பாடசாலைகளில் தங்கள் சேவையை ஆற்ற வேண்டும். பொறுப்பான பதவிகளில் அதிபர் பெருமாள் கணேசன் போன்ற பொறுப்பான மனிதர்கள் அமர்வது மட்டுமே வளமான, ஏற்றத் தாழ்வற்ற சமூக உருவாக்கத்திற்கான முன்நிபந்தனையாக இருக்க முடியும். அதிபர் பெருமாள் கணேசனின் இந்த மணிவிழா அவருடைய கடந்த கால கல்விப்போராட்டத்தை நினைவு கூரவும் அவருடைய அடுத்த இலக்கை செயற்திட்டத்தை திட்டமிடவும் உதவும். அண்மைய எதிர்காலத்தில் இவர் ஓய்பெற முடியாது. இவருக்கான பொறுப்புகள் அதிகம்.

எம்மோடு சம காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு கல்விப் போராளியைப் பற்றிய ஒரு பதிவை வரைய முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி!

நட்புடன் த ஜெயபாலன்.

மட்டக்களப்பில் ஒரு கல்விச் சுனாமி! பல்கலைக்கழகம் செல்வோர் 200 பேர்வரையால் அதிகரிப்பு! நாடு முழவதும் பல்கலைக்கழகம் புகும் மாணர்களின் எண்ணிக்கை 16,000 மாணவர்களால் வீழ்ச்சி!!

அண்மையில் அரசு வெளியிட்ட சட் ஸ்கோர் அடிப்படையிலான பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை புள்ளிவிபரங்களின் படி 2021 பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 16,000 மாணவர்களால் மிகச் சரியாகச் சொல்வதானால் 15765 மாணவர்களால் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களிலில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் 192 மாணவர்களை 2020 கல்வியாண்டைக் காட்டிலிலும் 2021 கல்வியாண்டில் கூடுதலாக அனுப்பி வைத்து தீவில் ஒரு கல்விச் சாதனையை நிலை நாட்டியுள்ளது.

எண்பதுக்களில் கல்வியில் கோலோச்சிய யாழ் மாவட்டம் 2021 ஒன்று கல்வியாண்டில் 477 மாணவர்களைக் குறைவாக பல்கலைக்கழகம் அனுப்பி வைத்துள்ளது. 2020 கல்வியாண்டோடு ஒப்பிடுகையில் இது 9.5வீதம் குறைவாகும். மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய 24 மாவட்டங்களும் சராசரியாக 9.5 வீதமான மாணவர்களை குறைவாகவே பல்கலைக்கழகம் அனுப்பி வைத்துள்ளது. விகிதாசார அடிப்படையில் அனுராதபுரம், காலி, பொலநறுவை ஆகிய மாவட்டங்களிலேயே கூடுதலான 14 முதல் 15 வீதத்திற்கு வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் தலைநகர் கொழும்பில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 2377 மாணவர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.

பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி காணப்படுகின்றது. பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் வீழ்ச்சியும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் வீழ்ச்சியும் அண்ணளவாக ஒரே அளவில் அதாவது 16,000 ஆகக் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு:
மட்டக்களப்பிலும் ஏனைய மாவட்டங்களைப் போன்று உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டாலும் பல்ககை;கழககங்களுக்குச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை 5.3 வீதத்தால் அதாவது 192 மாணவர்களால் அதிகரித்து இருக்கின்றது. இது தொடர்பாக பிரித்தானியாவில் கென்ற்இல் வதியும் கணித ஆசிரியர் டேவிட் நோபல் தேசம்நெற்க்குக் கருத்துத் தெரிவிக்கையில் சூம் வழியான கல்விச் செயற்பாடுகள் மட்டக்களப்பு மற்றும் கல்வியில் பின் தங்கியிருந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார். மாணவர்கள் எந்த மூலையில் கிராமத்தில் இருந்தாலும் மறுமூலையில் உள்ள நல்லாசிரியர்களிடம் இருந்து கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனத் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டுப் பணமோகத்தின் தாக்கங்களும் அது ஏற்படுத்தும் போதைவஸ்து, மது அருந்தல் மற்றும் வாள்வெட்டுக் கலாச்சாரம் யாழ்ப்பாணத்துக்கு வெளியேயான தமிழ் மாவட்டங்களில் குறைவாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புக தகுதிபெற்ற மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 22வது இடத்திலிருந்து 2021 கல்வியாண்டில் 3வது இடத்திற்கு வந்து தீவில் ஒரு கல்விச் சுனாமியை ஏற்படுத்தியது. மட்டக்களப்பில் 2021 கல்வியாண்டில் 3804 பேர் பல்கலைக்கழகம் செல்லத் தகுதிபெற்றனர். அத்தோடு தமிழ்வாணணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானத்தில் தீவிலேயே அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விச் சுனாமி அதிரடியாக இருந்த போதும் மட்டக்களப்பு கல்வியில் இன்னமும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. தமிழ் மக்கள் செறிந் வாழ்கின்ற வடக்கு கிழக்கில், தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு ஆயிரம் பேருக்கு 6 மாணவர்களையே பல்கலைக்கழகம் அனுப்புகின்றது. கிழக்கு மாகாணத்தின் நிலையும் இதுவாகவே உள்ளது. ஆனால் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மட்டும் ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களைப் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது.

திருகோணமலை:
மூவின மக்களும் சரிக்குச் சமனாக வாழும் திருகோணமலை மாவட்டம் 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் 14வது இடத்தில் இருந்து 2ம் இடத்திற்குத் தாவியுள்ளது.

அம்பாறை:
அம்பாறை மாவட்டம் 2020 கல்வியாண்டில் ஆயிரம் பேருக்கு 7 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பியதில் இருந்து 2021 கல்வியாண்டில் ஆயிரம் பேருக்கு ஆறு மாணவர்களை மட்டுமே ஆனுப்பும் நிலைக்கு வந்துள்ளது. இருப்பினும் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் 2020இல் 24வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு வந்துள்ளது. பல்கலைக்கழகம் புகும் தகுதியுடைய மாணவர்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணம் முன்னேறிப் பாய்ந்துள்ளது.

முல்லைத்தீவு:
இலங்கையில் உள்ள மாவட்டங்களில் தங்களுடைய சனத்தொகைக்கு கூடுதலான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்ற நான்கு மாவட்டங்களில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்டம் இருக்கின்றது. 2021 கல்வியாண்டில் முல்லைத்தீவு மாவட்டம் ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்றது. வடக்கு கிழக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மட்டுமே ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைக்கின்றது. ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்ற ஏனைய மாவட்டங்கள் பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை.

பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் 2020இல் 17வது இடத்திலிருந்த முல்லைத்தீவு மாவட்டம் 2021 கல்வியாண்டில் 8 வது இடத்திற்கு முன்னேறி யாழ் மாவட்டத்திற்கு அடுத்த படியாக உள்ளது. ஆனாலும் ஏழாவது இடத்தில் உள்ள யாழ் மாவட்டத்தைக் காட்டிலும் முல்லைத்தீவு மாவட்டம் தனது சனத்தொகைக்கு அதிகமான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைக்கின்றது.

மன்னார்:
மன்னார் மாவட்டம் தீவில் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் மாவட்ட அடிப்படையில் மிகக் கூடுதலாக 69 வீதமான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைத்து தீவின் முன்னணிக் கல்வி மாவட்டம் என்ற இடத்தைத் தக்க வைத்துள்ளது. யாழ் மாவட்டத்தைப் போன்று மன்னார் மாவட்டமும் ஆயிரம் பேருக்கு 7 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வருகின்றது.

வவுனியா:
பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் வவுனியா மாவட்டமும் முன்னேறிப் பாய்ந்துள்ளது. 2020 கல்வியாண்டில் தீவின் கடைசி மாவட்டமாக இருந்த வவுனியா 2021 கல்வியாண்டில் 15வது இடத்திற்கு தன்னை நகர்த்தியுள்ளது. மாணவர்களைப் பல்கலைக்கழகம் புகச் செய்யும் விகிதாசாரத்தை 59.5 வீதத்தில் இருந்து 63.5 வீதமாக வவுனியா மாவட்டம் அதிகரித்துள்ளது.

கிளிநொச்சி:
வடக்கு கிழக்கில் கிளிநொச்சி மாவட்டம் மட்டுமே கல்வியில் பாய்ச்சலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சறுக்கியுள்ளது. 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புகு விகிதாசாரத்தில் 21வது இடத்திலிருந்த கிளிநொச்சி மாவட்டம் 2021இல் 23வது இடத்திற்று சறுக்கியுள்ளது. மேலும் கிளிநொச்சியின் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதம் 2.5 வீகிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. வடக்கு கிழக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டுமே பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. யாழ் மாவட்டம் தன்னுடைய விகிதத்தை அதிகரிக்கத் தவறியிருந்தாலும் வீழ்ச்சியடையவில்லை. அண்ணளவாக தன்னுடைய முன்னைய நிலையை தக்க வைத்துக்கொண்டது.

இதன் மூலம் வடக்கு கிழக்கில் கல்வியில் பின்னிலையான மாவட்டமாக கிளிநொச்சி காணப்படுகின்றது.
இலங்கையிலேயே பல்கைலக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை ஆகக் கூடிய வீதத்தால் 4.72 வீதத்தால் உயர்த்திய மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் முன்னணி வகிக்கின்றது. அதனைத் தொடர்ந்து பல்கைல்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை உயர்த்திய மாவட்டமாக வவுனியா மாவட்டம் திகழ்கின்றது. வவுனியா பல்கலைகம் புகும் மாணவர்களின் விகிதத்தை 3.95 ஆல் உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெற்கில் பதுளை, யாழ்ப்பாணம் போன்று தன்னுடைய முன்னைய விகிதத்தை தக்க வைத்துக்கொண்டது. மலையகத்தைச் சேர்ந்த நுவரெலியா மாவட்டம் மட்டும் தன்னுடைய பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை 1.78 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஏனை தெற்கு மாவட்டங்கள் அனைத்துமே பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தில் வீழ்ச்சி கண்டுள்ளன. ஆகக் கூடுதல் வீழ்ச்சி 5.42 வீகிதம் காலியிலும் அதனைத் தொடர்ந்து 4.94 விகிதம் வீழ்ச்சி கம்பகாவிலும் ஏற்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை கல்வியில் மட்டக்களப்பு பெரும் பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டம் கல்வியில் குறிப்பிடத்தக்க மைல்கலை எட்டியுள்ளது. வவுனியா மாவட்டம் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தை மட்டக்களப்பு மாவட்டத்தைப் போல் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மன்னார் மாவட்டம் தொடர்ந்தும் கல்வியில் தன் நிலையை முன்னேற்றி தற்போது முதல் இடத்தில் உள்ளது. யாழ் மாவட்டம் கல்வியில் குறிப்பிடத்தக்க அசைவை ஏற்படுத்தவில்லை. பெரும்பாலும் தன்னிலையை தொடர்ந்தும் தக்க வைத்து வருகின்றது. ஆனால் கிளிநொச்சி தொடர்ந்தும் தன் கல்விநிலையை உயர்த்தத் தவறிவருகின்றது.

சிவ அல்ல ‘சுய’புராணம்: வெற்றி பெறுவதால் பெறும் மகிழ்ச்சி நிரந்தரமற்றது. ஆனால் மகிழ்ச்சியாக இருந்தால் நீங்கள் வெற்றிபெற முடியும்!

தமிழ் சமூகம் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்குகின்ற சமூகமாகவே இருக்கின்றது. ஆனாலும் தமிழ் சமூகத்தில் கல்விபற்றிய புரிதல் என்பது மிகக் கீழ்நிலையிலேயே உள்ளது. இந்தக் கல்விக்காக எமது பிள்ளைகள், குடும்பங்கள் கொடுக்கின்றவிலை மிகக் கனதியானது. அதன் உச்சமாக சிலர் தங்களையே அழித்துக்கொண்டும் உள்ளனர். பல குடும்பங்கள் தங்கள் சந்தோசத்தையே இழந்தும் உள்ளனர். பலர் எதிர்காலத்தையும் இழந்துள்ளனர். ஒரு சேட்டிபிக்கற் எடுப்பதற்காக.

இந்தப் பதிவை இடுவதற்கு நான் ஒரு கால்நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. எனது கொள்கைகள், எனது இலட்சியங்கள், எனது எழுத்துக்கள் உட்பட என்னையே உரசிப்பார்த்து மதிப்பிடும் ஒரு தருணம். அந்த நாளும் வந்தது.

ஆயிரத்து தொழாயிரத்து எண்பதுக்களில் எங்களுக்கு இன்ரநெற் மட்டும் இல்லாமல் இல்லை. இன்றைய மதிப்பீட்டில் அத்தியவசிய தேவைகளே இருக்கவில்லை. தொலைபேசியில்லை. மின்சாரம் இல்லை அதையொட்டிய எந்த சாதனங்களும் இல்லை. கொம்பியூட்டரல்ல, ரீவியைப் பார்ப்பதே அதிசயம். ‘அடாது மழை பெய்தாலும் விடாது காண்பிக்கப்படும்’ என்று சொல்லி சிவராத்திரியில் தான் படம் ஓடியகாலம். தகவல் என்பது மிக மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் பொய்யான செய்திகள் நிலையாத காலம். எமது தலைமுறையில் தாயகத்தில் உயிர்வாழ்தல் என்பதுகூட ஒரு காலத்தில் விளையாட்டுத்தான். ஹர்த்தால், கடையடைப்பு, யுத்தம் என்று பாடசாலைகள் மூடப்பட அல்லது செயழிழக்க தனியார் கல்வி நிலையங்கள் பரவ ஆரம்பித்த காலம். பலதிக்கும் சென்று வேரூன்றினார்கள்.

இப்போது தொண்ணுறுக்களின் நடுப்பகுதியல் இளம் குடும்பஸ்தர்களாக வாழ்க்கையை ஆரம்பித்த காலம். எமது பிள்ளைகளுக்கு எதை வழங்குவது? பிள்ளையை என்னவாக ஆக்குவது? இலெவன் பிளஸ் – ’11+’? ரியுசன்? எந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது? கிரம்மர் ஸ்கூல் – grammer school? ப்ரைவேட் ஸ்கூல் – private school? தமிழ் படிப்பிப்பதா? இதுக்கு மேல், நடனம், சங்கீதம், … கிரிக்கட்? புட்போல்? எல்லாமே பிரச்சினையாக இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு மத்தியில் அகதி வாழ்வின் அடுத்த படியாக எமது மெலனியம் தலைமுறையினர் பிறந்தனர்.

எங்களுக்கு பிள்ளைகள் பிறக்க முன்னரேயே அவர்களுடைய வாழ்வை இப்படித்தான் அமைத்துக்கொடுப்போம் என்ற ஒரு திட்டம் இருந்தது. அன்றைய வாழ்க்கைத்துணையும் அதே புரிதலிலேயே இருந்தார். பிள்ளைகளை இயல்பாக அவர்களுடைய சுதந்திரத்துடன் வளரவிடுவது, நாங்கள் வழிகாட்டிகள் மட்டுமே. முடிவுகளை அவர்களையே எடுக்க அனுமதிப்பது. சமயம் பற்றி அக்கறைகொள்வதில்லை. 11 பிளஸ் (இலங்கையில் புலமைப்பரிசில் பரீட்சை போன்றதொரு பரீட்சை) பற்றியெல்லாம் அக்கறையெடுப்பதில்லை. அவர்களது குழந்தைப் பருவத்தை குழந்தைகளாகவே இருக்க அனுமதிப்பது. ஓரளவுக்கு தரமான வீட்டுக்கு அருகில் உள்ள அரச பள்ளியில் அவர்களைச் சேர்ப்பது. உயர்தரம் வரை தனியார் கல்விக்கு அனுப்புவதில்லை.

மேலும் எனக்கு எத்தனை பிள்ளைகள் பிறந்தாலும் அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு குறித்த வயது வந்ததும் எனது நண்பன் கந்தையா ரவீந்திரனிடம் தற்காப்பு கலைப் பயிற்சிக்கு அனுப்புவது. எமது பிள்ளைகள் அனைவரும் பல்கலைக்கழகம் செல்வார்கள் என்பதும் எமது தெளிவான முடிவாக இருந்தது. என்ன படிக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை காதலிக்கவும் திருமணம் செய்யவும் அவர்களுக்கு எவ்வித தடையும் கிடையாது. ஆனால் அவர்கள் பட்டிப்படிப்பை முடித்து கார் வாங்குதற்கு முன் வீடொன்றை வாங்கிக்கொண்டு திருமணம் செய்துகொள்ளலாம்.

இவ்வாறான ஒரு எண்ணத்துக்கு மத்தியில் தான் எனக்கு மூன்று குழந்தைகளும் பிறந்தனர். மேடு பள்ளங்களுக்கூடாக வாழ்க்கைச் சக்கரம் ஓடி இப்போது மூத்த மகன் 21 வயதில் நிற்கின்றான். நான் முப்பது ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த பருவம். இப்போது 30 ஆண்டுகள் கடந்து எனது கொள்கைகள், எனது இலட்சியங்கள், எனது எழுத்துக்கள் உட்பட என்னையே உரசிப்பார்த்து மதிப்பிடும் ஒரு தருணம்.

11 பிளஸ் பரீட்சையில் வெற்றிபெற கருத்தரித்தவுடனேயே நல்ல ஆசிரியரிடம் ஆங்கிலம் கணிதம் படிக்க பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் கைதேர்ந்த ஆசிரியரிடம் இடம் கிடைக்காது. இடம் கிடைத்து படிக்க ஆரம்பித்தால் வாரதித்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 15 முதல் 25 பவுண்கள். கணிதமும் ஆங்கிலமும் வாரத்திற்கு நாற்பது பவுண் வருடத்திற்கு இரண்டாயிரம் பவுண்களுக்கு மேல். ஐந்து வருடத்திற்கு பத்தாயிரம் பவுண்கள். அதைவிட ஆங்கிலத்தில் மேதையாக்குவதற்கு ‘குமோன் – Kumon’. அது 12 மாதங்கள் அதற்கு ஆயிரம் பவுண். கணிதத்தில் மேதையாக்குவதற்கு ‘அபகஸ் – Abacus’, அதில் 12 மட்டங்கள் ஒவ்வொரு மட்டத்திற்கும் ஐந்து மாதங்கள். ‘அபகாஸ் – Abacus’ முடித்து வர ஆறு வருடங்கள் ஆறாயிரம் பவுண். ஆக மொத்தத்தில் 11 பிளஸ் பரீட்சையில் தோற்றும் சராசரிப் பெற்றார் மொத்தமாக பதினாராயிரம் பவுண்களை செலவிழிக்கின்றனர்.

ஆனால் இந்த வகுப்புகள் என்ன சூமிலா நடக்கும். பிள்ளைகளை நேரடியாக அந்ததந்த இடங்களுக்கு கூட்டிச்சென்று இறக்க வேண்டும். அவர்களுக்கு வகுப்பு முடியும் வரை காத்துக்கிடக்க வேண்டும். இதற்காக வாரத்திற்கு 5 மணித்தியாலங்கள் என்று பார்த்தால் ஜந்து ஆண்டுகளுக்கு 1300 மணிநேரங்களைச் செலவிடுகின்றனர். இதற்கு பிரித்தானியாவின் குறைந்த சம்பள வீதத்தை போட்டுப் பார்த்தால் கூட பத்தாயிரம் பவுண்கள். பெற்றோல் செலவை விட்டால் கூட ஒரு பிள்ளையின் 11 பிளஸ் பரீட்சையின் செலவீனம் 25,000 பவுண்கள். ஒரு குடும்பத்தில் குறைந்தது இரு பிள்ளைகள் என்று கணக்குப் பார்த்தால் ஐம்பதிணாயிரம் பவுண். ஒருவர் பல்கைல்கழகம் சென்று பட்டப்படிப்பை முடிப்பதற்கும் இவ்வளவு செலவேயாகும்.

பெற்றோர் இப்பரீட்சைகளுக்ககாக ஒரு குழந்தைக்கு இருப்தியயையாயிரம் பவுண்களைச் செலவிடுவது ஒரு பிரயோசனமற்ற முதலீடே. மாறாக அவர்கள் இவ்வளவு பணத்தை அவர்களுடைய சேமிப்பில் போட்டிருந்தால் மிகக்கூடுதல் பயனைப்பெற்றிருப்பதுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையும் அனுபவித்து இருக்கலாம்.

மேலும் தீவிர கல்வி அழுத்தங்கள் பிள்ளைகளில் மிகக் கடுமையான காயங்களை உண்டுபண்ணுகின்றது. பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான நிரந்தர இடைவெளியை ஏற்படுத்துகின்றது. கல்வியின் மீது சில பிள்ளைகளுக்கு நிரந்தரமான வெறுப்பையும் ஏற்படுத்துகின்றது. மேலும் சுயமான தேடலையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்வதற்கு மாறாக; ஊட்டப்படும், திணிக்கப்படும் கல்வி பிள்ளைகளின் ஆளுமையை முளையிலேயே கருக்கிவிடுகின்றது. பால்போத்தலில் ஊட்டுவது போல் கல்வியூட்டப்பட்ட சில பிள்ளைகள் பல்கலைக்கழகங்களில் திணறுகின்றனர். பெற்றோர் சுற்றத்தாரினால் திணிக்கப்பட்ட எதிர்பார்ப்புகளை புர்த்தி செய்ய முடியாத பிள்ளைகள், பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டுவரை சென்று; இறுதியில் தற்கொலை செய்து கொண்டனர். இவ்வாறான தற்கொலைகள் தமிழ் சமூகத்தில் இன்னமும் தொடர்கின்றது. இவை குடும்பங்களுக்குள்ளும் நிம்மதியை இழக்கச்செய்து ஒரு நிம்மதியற்ற குடும்பச் சூழலுக்குள் எமது மெலனியம் குழந்தைகளை வளர நிர்ப்பந்திக்கிறது.

ஆனால் ஆய்வுகள் என்ன சொல்கின்றது என்றால் இந்த 11 பிளஸ் பரீட்சைக்கும் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கும் தொடர்பில்லை என்கிறது. தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் இப்பரீட்சைகளை இல்லாமலாக்கும் எனக்கு குறிப்பிட்டு இருந்தது. உலகத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் அதேசமயம் மகிழ்ச்சியான சிறுவர்களைக் கொண்ட ஸ்கன்டிநேவிய நாடுகள் பிள்ளைகளை ஆறுவயதுவரைக்கும் பள்ளிக்கு அனுப்புவதில்லை. ஒரு ஆசிரியனாக பலநூறு மாணவர்களின் பெறுபேறுகளை எனக்கு ஆராயும் வாய்ப்பு உள்ளது. அதன்படி பார்ததிலும் அவர்கள் ஆரம்பப்;பள்ளிகளில் பெற்ற பெறுபேறுகளுக்கும் இடைநிலைப் பள்ளிகளில் பெறும் பெறுபேறுகளுக்கும் சில சமயம் எவ்வித சம்பந்தமும் இருப்பதில்லை. உண்மையென்னவெனில்; இந்த அதீத கல்வித் திணிப்பைச் செய்யாவிட்டாலும் கூட அம்மாணவர்கள் தங்கள் எதிர்காலக் கல்வியில் வெற்றிபெற்றிருப்பதுடன் மிகவும் சந்தோசமானவர்களாகவும் இருந்திருப்பார்கள். அதுவே என் அனுபவமும் கூட.

எனது பிள்ளைகள் 11 பிளஸ்க்கு ரியுசன் போகவில்லை. அதைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. வீட்டுக்கு அருகில் உள்ள அரச பாடசாலைகளுக்கே சென்றனர். உயர்தர வகுப்பிற்குக்கூட சில நண்பர்களே கற்பித்தனர். தனியார் கல்வியில் தங்கியிருக்கவில்லை. எனது நண்பன் கந்தையா ரவீந்திரனிடம் மூவரும் தற்காப்புக் கலைப் பயிற்சி பெற்று முத்தவர்கள் இருவரும் கறுப்புப்பட்டியும் பெற்றுவிட்டனர். எனது அரசியல் மற்றும் நிலைப்பாடுகளால் எனது பிள்ளைகள் பழிவாங்கப்படலாம் என்பதால் அன்றைய நாட்களில் நான் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பவில்லை. ஆனால் என்னுடைய பிள்ளைகள் நாங்கள் ஆங்கிலத்தில் கேட்டாலும் பதிலை தங்களுக்குத் தெரிந்த தமிழில் தான் சொல்வார்கள். எங்களோடு ஆங்கிலத்தில் அவர்களுக்கு கதைக்க வராது.

மூத்தவன் கர்ணன் தற்போது பொருளியில் துறையில் முதல் தரத்தில் சித்தியடைந்து தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு உடனடியாகவே வேலையும் எடுத்துக்கொண்டான். நான் ரியூஷனுக்கு விடாமல் எனது பிள்ளைகளது கல்வியையும் பாழடிக்கிறேன் என்ற விமர்சனங்கள் அன்று ஏராளம் இருந்தது. சிலர் என்னை குற்றவுணர்வுக்குள் தள்ளியதும் உண்டு. கர்ணன் சதாராண தரப் பரீட்சையிலோ உயர்தரப் பரீட்சையிலோ எல்லாப் பாடங்களிலும் அதீத சித்திகளைப் பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் சராசரி அல்லது சராசரியிலும் குறைவான பெறுபேறுகளையே பெற்றான். அவை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் பல்கைலக்கழகத்தில் அவனால் சாதிக்க முடியும் என்ற ஊக்கத்தை அழித்தேன். அவனது முன்னேற்றத்தில் தான் எனது வெற்றியும் என்னைப் பற்றிய மதிப்பீடும் தங்கி இருந்தது. அவன் பட்டப்படிப்பில் தவறி இருந்தாலும் நாங்கள் துவண்டுவிடக்கூடாது எதற்காகவும் சந்தோசத்தை தொலைத்துவிடக்கூடாது என்ற உணர்வு எனக்குள் இருந்தது. ஒரு போதும் எதிர்காலத்தை எண்ணிப் பயந்து நிகழ்கால சந்தோசத்தை தொலைத்துவிடக் கூடாது என்பது எனது அனுபவப்பாடம்.

இந்த சமயத்தில் எம்மோடு கர்ணணின் கல்வியில் அவனின் வளர்ச்சியில் அக்கறைகொண்டிருந்த பலருக்கும் என் நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். குறிப்பாக என் பால்ய நண்பன் சிவக்குமார் லண்டனில் அவனது முதலாவது மாணவன் கர்ணன். நண்பன் கந்தையா ரவீந்திரன், நண்பன் டேவிட் நோபல் – வலிந்து இழுத்துவைத்து கற்பித்தவர், ரவி சுந்தரலிங்கம், எல்கின்ஸ், சோதிலிங்கத்தின் மகள் வர்சி இவர்களோடு எனக்கு தந்தையாக நண்பனாக இருக்கும் செல்வராஜா குடும்பத்தினர் அனைவருக்கும் என் நன்றிகள்.

நான் எனது பிள்ளைகளின் கல்விக்கு என்று பெரிய அளவில் பணத்தையோ நேரத்தையோ செலவழிக்கவில்லை. தன்னார்வக் கல்வியிலேயே நான் எப்போதும் நம்பிக்கையுடையவனாக இருக்கிறேன். ஆசிரியர்கள் கற்கின்றவரிலும் பார்க்க சற்று அதிகம் குறிப்பிட்ட விடயத்தில் அறிவுடையவர்கள் (more knowledgeable than others) அவ்வளவுதான். எப்படிக் கற்பது என்று வழிகாட்டுவதே எமது கடமை. சந்தேகங்களைத் தீர்த்து வைக்கலாம். கற்றல் கற்பித்தல் என்பது பால்போத்தலில் போர்மியுளா மில்க் ஊட்டி புஸ்டியாக்குவதல்ல.

பிள்ளைகளை விடுமுறையில் வசதிக்கு ஏற்ப வெவ்வேறு இடங்களுக்கு கூட்டிச் செல்லுங்கள். மியூசியங்கள், கண்காட்சியகங்கள், பல்தரப்பட்ட நிகழ்வுகளுக்கும் கூட்டிச்செல்லுங்கள். பரந்த விரிந்த உலகைப் பார்க்க வையுங்கள். பிள்ளைகளுடன் உரையாடுங்கள், விவாதியுங்கள், குடும்ப முடிவுகளை பிள்ளைகளையும் உட்படுத்தி எடுங்கள். பெற்றோராக தந்தையாக மட்டுமல்லாமல் நல்ல நண்பராகவும் இருங்கள். நாங்கள் இணைந்து தண்ணியும் அடிப்போம். அவர்கள் யாரில் கண் வைத்திருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். நான் யாரில் கண் வைத்திருக்கிறேன் என்பதும் அவர்களுக்குத் தெரியும். எல்லோருக்கும் எல்லோரது எல்லைகளும் தெரியும்.

ரஷ்யா – உக்ரைன் யுத்தம் பற்றி நான் எழுதிய கட்டுரையை கூகிள் உதவியோடு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து படித்துவிட்டு கர்ணன் என்மீது ஒரு மணி நேரத்திற்கு மேல் விமர்சனம் வைத்தான். இருமணி நேரம் விவாதித்தோம். மனஉளைச்சல் என்பது ஒரு தெரிவு என்று இரண்டாவது மகன் இன்னொருநாள் விவாதத்தைத் தொடங்கினான். மூவரும் ஒன்றரை மணிநேரம் விவாதித்தோம். நாங்கள் மூவருமே உடன்பட மறுப்பதற்கு உடன்பட்டு விவாதத்தை முடிப்போம். அவர்களுடைய விவாதத்திற்குள் என்னால் சிலசமயம் ஈடுகொடுக்க முடியாமல் இருப்பதையிட்டு மிகப் பெருமைப்படுகின்றேன்.

வாழ்வுக்கான பாதையை நீங்கள் திட்டமிடாவிட்டால் தோல்விக்கான பாதையை நீங்கள் தெரிவு செய்துவிட்டீர்கள் என்பதே அர்த்தம். அதற்காக திட்டங்கள் நூறுவீதம் திட்டமிட்டபடி நடக்கும் என்று எண்ணிவிட வேண்டாம். எனது மூத்தமகனுக்கு பத்துவயதாக இருக்கும் போதே நானும் துணைவியும் எமது மணவுறவை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம். ஆனால் அதன் தாக்கம் எங்கள் இருவரையும் தாண்டி பிள்ளைகளைப் பாதிக்காதவாறு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டோம்.

நாங்கள் சேர்ந்து வாழ்கின்றோமோ, பிரிந்து வாழ்கின்றோமோ, வாழ்க்கை என்பது மிகவும் அழகானது. அதன் ஒவ்வொரு திருப்பு முனைகளும் சுவாரஸியமானது. வலிகளும் வேதனைகளும் துயரங்களும் நிரந்தரமானவை அல்ல. மகிழ்ச்சியும், கொண்டாட்டங்களும் வெற்றிகளும் போல். அதுவும் கடந்து போகும். ஆனால் வாழ்க்கையை சற்றுத்தள்ளியிருந்து ரசிக்க ஆரம்பித்தால் அதன் சுவையே தனி. மகிழ்ச்சி வெளியே இருந்து வருவதில்லை. மற்றவர்கள் தருவதுமில்லை. அது எம்மிடமே இருக்கின்றது.

எதற்காகவும் மகிழ்ச்சியை விலைகொடுக்காதீர்கள்.

வெற்றி பெறுவதால் பெறும் மகிழ்ச்சி நிரந்தரமற்றது.

ஆனால் மகிழ்ச்சியாக இருந்தால் நீங்கள் வெற்றிபெற முடியும்.

இலங்கை தமிழர்களின் எதிர்கால நிலைத்திருப்பில் அரசியல் சாராத பொதுக்கட்டமைப்பு ஒன்றினுடைய தேவையும் அவசியமும்….! – அருண்மொழி

வடக்கு – கிழக்கு சமூக அக்கறையுடைய இளைஞர்களிடையேயும் அரசியல் விமர்சகர்களிடையேயும்  பொதுக்கட்டமைப்பு ஒன்றின் தேவை பற்றிய விடயங்கள் ஆழமான  பேசுபொருளாக மாறி வருகின்ற இந்த நிலையில் தேசம் நெற் இன் இந்தக்கட்டுரை பொதுக்கட்டமைப்பின் தேவை பற்றியும் அதன் செயல் கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் பேசுகின்றது.

முதலில் இந்த பொதுக்கட்டமைப்பு ஏன் தேவை..? என்பது பற்றி நோக்குதல் அவசியமாகின்றது.

இவ்வாறான பொதுக்கட்டமைப்பு ஒன்றின் உருவாக்கத்துக்கு மிக அவசியம் ஏற்பட்ட பின்னணியில் இலங்கை வாழ் தமிழ் மக்களை இணைக்ககூடிய ஒரு மையப்புள்ளியாக ஒரு பொது அமைப்பு ஒன்றின் தேவை அதிகமாக கடந்த காலங்களில் உணரப்பட்டமையேயாகும். உலகின் ஒவ்வொரு அடக்கப்பட்ட சமூகங்களிலும் அரசியல் சார்ந்த அமைப்புக்களே அரசிற்கும் அடக்கப்பட்ட சமூகங்களுக்குமிடையான தொடர்பாளராக செயற்பட்டு, மக்களினுடைய உரிமைகளை மையப்படுத்திய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியோராக காணப்படல்  வேண்டும். ஆனால் இலங்கை தமிழர் அரசியலை பொறுத்த வரை அப்படியான ஒரு அமைப்பு இல்லை என்பதே உண்மை.  தமிழர் மத்தியில் பல அமைப்புக்கள் அரசியல் சார்ந்து உருவாகியுள்ளமையால் மக்கள் எந்த அமைப்பின் பக்கம் நிற்பது என்ற குழப்பமான ஒரு சூழலே நிலவுகின்றது. கடந்த காலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஓரளவேனும் பலமான ஒரு அமைப்பாக காணப்பட்டமையால் மக்களுடைய வாக்குகள் முதல் ஆதரவு என அனைத்துமே அதனை மையப்படுத்தியதாக காணப்பட்டடது. எனினும் கூட்டமைப்பு தன்னுடைய அரசியலை மக்கள் நலன்சார்ந்து பெரியளவிற்கு நகர்த்தியிராத நிலையில் மக்கள் மாற்று அணிகளுக்கு வாக்களித்து பாராளுமன்றில் தமிழரின் வாக்கு பலத்தை சிதைத்துள்ளதுடன் சிறுபான்மை இனங்களின் ஆதரவு இல்லாமலேயே ஒரு கட்சி பெரும்பான்மையுடன் அரசமைக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கியமான காரணத்தை நாம் சிந்தித்தித்து பார்க்க வேண்டியோராகவுள்ளோம்.

தமிழ் மக்கள் பேரவையுடைய தோல்வியும் கூட பொதுக்கட்டமைப்புக்கான வெளி ஒன்றினை உருவாக்கியுள்ளது. முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பில் இருந்து விலகியதை தொடர்ந்து வடக்கு – கிழக்கின் புத்தி ஜீவிகளையும் இளைஞர்களையும் இணைத்து பாரிய கொள்கைப் பிரகடனங்களோடு உருவாக்கப்பட்ட அந்த அமைப்பானது தன்னுடைய அரசியலுக்காக மக்களுடைய எதிர்பார்ப்பை சிதைத்து எஞ்சி நின்ற நம்பிக்கையையும் தவிடுபொடியாக்கியது. இது பொதுக்கட்டமைப்பு பற்றி அதிக இளைஞர்கள் சிந்திக்க பயப்படுகின்ற ஒரு சூழலையும் உருவாக்கி விட்டது. இந்த நிலையிலேயே பொதுக்கட்டமைப்பு பற்றி சிந்திக்க வேண்டியோராக நாமுள்ளோம்.

தமிழர் சமூகத்தினுடைய பின்தங்கிய நிலையை அடிப்படையில் இருந்து கட்டமைக்க பொதுக்கட்டமைப்பு ஒன்றினுடைய தேவை அவசியமாகின்றது. கல்வி சார்ந்து தமிழர் சமூகம் அடக்கப்பட்டமை கூட கடந்தகால போராட்டங்களுக்கான மையமாகும். உண்மையிலேயே அந்த அடக்கு முறையில் நாம் தோற்றுப்போய் பெரும்பான்மை சமூகம் வென்றுவிட்டது என்பதே உண்மை. நம்முடைய தமிழர் சமூக கல்வி நிலை அண்மைக்காலங்களில் அதிகம் பின்தங்கியுள்ளது. மாணவர்களிடம் கல்விக்கு தடையாக போதைப் பொருள்பாவனை,  வறுமை , சமூக ஏற்றத்தாழ்வுகள் என பல காரணங்கள் துணை போகின்ற நிலையில் ஆக்கபூர்வமான சமூகம் ஒன்றை கட்டி எழுப்புவது தொடர்பாக கவனம் செலுத்தக்கூடிய பொது அமைப்பு ஒன்று இன்றியமையாததாகிறது.

அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்காக பிரச்சினைகள் ஏற்படும் போது எதிர்வினையாற்றக் கூடியோராகவோ..? அல்லது மக்களுடைய மனதை புரிந்து கொண்டோராகவோ..? இல்லை. மக்களுடைய நிலையை புரிந்து அதனை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக அரசியல் தலைவர்கள் இல்லை. நம்முடைய அரசியல் தலைவர்கள் தங்களுள் சண்டையிட்டு கொள்வதிலும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதிலும் கவனம் செலுத்துகின்றனரே தவிர மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கவில்லை என்பதே நிதர்சனமும் கூட. இந்த நிலையிலேயே மக்களுக்கான அரசியல் தலைவர்களை உருவாக்கவும் அடையாளம் காட்டவும் இந்த பொதுக்கட்டமைப்பு அவசியமாகிறது.

தமிழர் சமூகங்களிடையே பொருளாதார அபிவிருத்தியை உருவாக்க அரசியல் தலைமைகள் தவறிய நிலையில் பொருளாதார மேம்பாட்டை மையப்படுத்தி ஒரு பொது அமைப்பின் தேவை அவசியமாகின்றது. சொல்லப்போனால் மக்களுடைய வாழ்வை அபிவிருத்திப்பாதையில் கொண்டு செல்வோம் எனக்கூறும் தேர்தல்கால  அரசியல்வாதிகளுடைய வாழ்க்கையிலும் வாகனங்களிலும் மட்டுமே அபிவிருத்தி தென்படுகிறதே தவிர வட – கிழக்கில் ஏழை எந்த அபிவிருத்தியும் இல்லாமலே இருக்கின்றான். மேலும் ஆளும் கட்சியுடன் இணைந்து செயலாற்றும் அரசியல்வாதிகள்  பொருளாதார அபிவிருத்தி என்னும் பெயரில் உள்ள  வேலைவாய்ப்பு வெற்றிடங்களை நிரப்புகின்றனரே தவிர புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கவோ,  தொழில் முயற்சிகளை தமிழர் பகுதிகளில் உருவாக்கவோ முனைவதாக தெரியவில்லை. இதனாலேயே தமிழர் சமூகம் பொருளாதார நிலையிலும் பின்நிற்க வேண்டியுள்ளது. இந்தநிலையிலேயே தொழில்வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய அமைப்பு ஒன்றினுடைய தேவை அவசியமாகின்றது.

இதே வேளை இனம் எனும் போது தமிழர் என நம்மை நாமே குறிப்பிட்டாலும் கூட பிரதேசவாதத்தால் வடக்கு தமிழர்,  கிழக்கு தமிழர்,  மலையகத் தமிழர் எனவும் [அதற்குள்ளும் பல உபபிரதேச பிரிவுகள் உள்ளன] சாதிய கட்டமைப்புக்களாலும் சமயரீதியாகவும் பல கூறாக பிரிந்துள்ள தமிழர்களை ஒன்றிணைத்து பயணிக்க வேண்டிய ஒரு பொதுக்கட்டமைப்பு தேவையாக உள்ளது.

விமர்சனங்கள் தாண்டி 2009 க்கு முன்பு வரை மக்களை வழிப்படுத்த காணப்பட்ட ஒரு அமைப்பினுடைய தேவையை இன்று உணரக்கூடியதாக உள்ளது.

இந்தநிலையில் மக்களை வழிப்படுத்தவும் அரசியல் சார்ந்து நம்முடைய கருத்துக்களை ஒரு சேர பதிவு செய்யவும் அரசியலை தீர்மானிக்கூடிய எனினும் அரசியல் பின்னணியற்ற ஒரு அமைப்பினுடைய தேவை காலத்தின் கட்டாயமாகியுள்ளது. இங்கு பொதுக்கட்டமைப்பு என்னும் போது ஆயுதக்கலாச்சாரம் பற்றி சிந்திப்பதல்ல. ஆக்கபூர்வமான நகர்வுகளூடாக நம்முடைய உரிமைகளையும் நிலைப்பையும் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யபப்ட்டுள்ள அரசிடம்  இருந்து பாதுகாப்பதும் பெற்றுக்கொள்வதும் தமிழர் பகுதிகளின் சமூக,  பொருளாதார,  கல்வி, கலாச்சார  நிலைகளை மேம்படுத்துவதுமேயாகும்.

பொதுக்கட்டமைப்பின் செயல் பயணம் எப்படி இருக்க வேண்டும்..?

இந்த பொதுக்கட்டமைப்பினுடைய எழுச்சியானது திரையில் நாம் காண்பது போல ஒரு சில உணர்ச்சி பாடல்களுடன் முழுமை பெற மாட்டாது. அது தன்னுடைய தளத்தை ஒவ்வொரு கிராம மட்டங்களிலும் இருந்து தொடங்க வேண்டும். கிராமங்கள் ஒவ்வொன்றிலும் ஆக்கபூர்வமாக சமூகத்துக்காக சிந்திக்க கூடிய சரியான நபர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அவர்கள் மூலமாக அந்த கிராம முன்னேற்ற நடவடிக்கைகளை படிப்படியாக பொதுக்கட்டமைப்பு நகர்த்த வேண்டும். கிராமங்களின் இளைஞர் அமைப்புக்கள் / விளையாட்டுக் கழகங்களை கொண்டு அவர்களுடைய சமூகத்தின் தேவையை அவர்ககளே பொறுப்பெடுக்க கூடிய ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த பொதுக்கட்டமைப்பு வடக்கு – கிழக்கு – மலையகத்தின் கிராமங்களை மையப்படுத்தியதாக நகர ஆரம்பிக்க வேண்டும். இதுவே அமைப்பினுடைய முனைப்பான வளர்ச்சிக்கான அடிப்படைகளை ஏற்படுத்தும்.

பொதுக்கட்டமைப்பின் நகர்வுகள் ஏழ்மையை மாற்றக் கூடியதாக நகர வேண்டும். புலம்பெயர் தேசங்களிலிருந்து அனுப்பப்படும் பணம் முறையாக எல்லோரிடமும் போய் சேர்வதில்லை. அத்துடன் அந்த பணம் பசியோடு இருப்பவனுக்கு ஒரு வார காலமோ அல்லது குறிப்பிட்ட காலத்துக்கான உணவுத்தேவையை பூர்த்தி செய்யுமே தவிர பணம் முடிய அந்த குடும்பத்தின் நிலை…? எனவே புலம்பெயர் அமைப்புக்களுடாக கைமாற்றப்படுகின்ற பணத்தை முறையாக பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. பசியோடு இருப்பவனுக்கு நிரந்தமான சுயதொழில் ஒன்றை ஏற்படுத்திக்கொடுக்க அந்தப்பணத்தை பயன்படுத்தல் ஆரோக்கியமானது. மேலும் பண்ணைகள் அமைத்தல்,  தள்ளு வண்டிக்கடைகள் ஏற்படுத்திக்கொடுத்தல், தொழில் உபகரண வசதிகளை வழங்குதல், இப்படியாக பொருளாதார மாற்றங்களை அடிப்படையில் இருந்து ஏற்படுத்துவதுடன் தன்னம்பிக்கையாளர்களை உருவாக்குதும் வறுமை ஒழிப்பின் ஒரு படியே..!

இவ்வளவு பெரிய இழப்புக்களின் பின்னணியில் நம்முடைய கல்விக்கு பெரிய பங்குண்டு. நம்முடைய அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக வளப்படுத்துவது காலத்தின் அதிமுக்கிய தேவையாகவுள்ளது. போதைப்பொருள் பாவனை, வாள் வெட்டுக் கலாச்சார மோகம், என அடுத்த தலைமுறை தன்னுடைய கல்வியை நம்கண்முன்னேயே தொலைத்துக்கொண்டு நிற்கின்றது. நெல்சன் மண்டேலா கூறுவது போல ஒரு சமூகம் தன்னை மாற்றிக்கொள்ளவோ அல்லது முன்னேறவோ  நினைக்குமிடத்து கல்வி மட்டுமே தெளிவான ஒரு ஆயுதம் என கூறுகின்றார்.  எனவே எல்லா மாணவர்களுக்கும் சரியான முறையான ஆரோக்கியமான கல்வி கிடைக்க வகை செய்தல் அவசியமாகின்றது. மாணவர்களிடையே வாசிப்பு பழக்கதைத்தை மீள கட்டியெழுப்பல்,  நம்முடைய வரலாற்றை ஆரோக்கியமாக கடத்துதல்,  மாணவர் தொழில்வழிகாட்டல் கருத்தரங்குகளை மேற்கொள்ளல், பாடசாலை மட்டங்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வான நிலையை இல்லாதாக்க செயற்படல்,  மாணவர்களின் கல்விக்கான வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுதல் என பல நடவடிக்கைகளை தொடர்ச்சியாகவும் மாணவர்களோடு மாணவர்களாகவும் மேற்கொள்கின்ற பட்சத்தில் ஆரோக்கியமான அடுத்ததலைமுறையை உருவாக்க முடியும்.

மிக முக்கியமாக உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்பு தனித்து ஒரு மாவட்டத்தை மட்டுமே மையப்படுத்தி இயங்காது எல்லா பகுதி தமிழர்களையுப் மையப்படுத்தி இயங்குவதே பொதுக்கட்டமைப்பின் வளர்ச்சிக்கும் மக்கள் ஆதரவு கிடைக்கவும் இலகுவாக வழி செய்யும். இதை விடுத்து யாழ்ப்பாண பகுதியை மட்டுமே மையப்படுத்தி பொதுக்கட்டமைப்பு நகருமாயின் அது வீண் முயற்சியே..!

ஆக்கபூர்வமான வகையில் எங்களுடைய தேவைகளையும் வலிகளையும் பெரும்பான்மை சமூகத்திடம் முன்வைக்க வேண்டிய பொறுப்பினை பொதுக்கட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும். முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள், மாணவர் படுகொலை நிகழ்வுகள் என்பன பற்றிய நிகழ்வுகளை ஆக்கபூர்வமாக எல்லா தரப்பினருக்கும் தெரியப்படுத்தல் வேண்டும். அதாவது எங்களுடைய வலிகளையும் தேவையையும் அதன் நியாயப்பாட்டையும் பெரும்பான்மை சமூகத்துக்கு எடுத்துக்கூற கூடிய ஒரு ஊடகமாக இந்த பொதுக்கட்டமைப்பு செயற்பட வேண்டும்.

இவை தவிர பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்புக்கான உதவிகளை வழங்குதல்,  நுண்நிதி உள்ளிட்ட தொடரும் சமூக பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடையே பேசுதல், அழிந்து வரும் கலைகளையும் கடந்த கால வரலாறுகளையும் ஆவணப்படுத்துதலும் மீள் ஆக்கப்படுத்தலும் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்ற வகையிலாக சமூகப்பபொறுப்புடன் கூடிய ஒரு பொதுக்கட்டமைப்பே இன்றைய காலத்தின் தேவையாகும்.

இந்த வகையிலாக எல்லா பகுதி தமிழர்களையும் ஒரே கோர்வையாக இணைத்துக்கொண்டு செல்லக்கூடியதான நெகிழ்திறன் உள்ள ஒரு அமைப்பாகவும், தமிழர் சமூகத்தின்  அடிப்படையில் இருந்து ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களூடாக தன்னுடைய எதிர்கால தூரநோக்குககளையும் இலக்குகளையும் கட்டமைத்து பயணிக்க கூடிய ஒரு அமைப்பாகவும் இருக்கின்ற பட்சத்தில் மட்டுமே இந்த அமைப்பினுடைய பயணத்தின் மீது முழுமையான மக்கள் நம்பிக்கையும் திருப்பப்பட்டு அரசியல் சார்பற்ற ஆனால் அரசியலை தீர்மானிக்க கூடிய அமைப்பாக அது வளர்ச்சி கண்டு தமிழ் மக்களுக்கான அமைப்பாக மிளிர முடியும். இந்த அமைப்பினுடைய வெற்றிக்காக எத்தனை வருடங்களும் எடுக்கலாம். ஆனால் அமைப்பினுடைய வெற்றியின் இறுதியில் இந்த பொதுக்கட்டமைப்பு மக்களிடம் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கையின் அளவே மதிப்பீடாக காணப்படும். அந்த மக்கள் நம்பிக்கையே பொதுக்கட்டமைப்பு கைகாட்டும் வழி சரியெனும் நிலைக்கு மக்களை கொண்டு செல்ல அத்தியாவசியமானது.

பொறுத்திருந்து பார்க்கலாம் பொதுக்கட்டமைப்பு என்ற விடயத்தை இலங்கைத்தமிழ் இளைஞர்களும் புத்திஜீவிகளும் அரசியாலாளர்களும் எவ்வாறு கையாளப்போகின்றனர் என்று……..!

இங்கிலாந்தில் கொரோனாவோடு வாழ்வு

அரசு பாடசாலைகளை திறக்கக் கோருகின்றது!

விரிவுரையார் சங்கம் பல்கலைக்கழகங்கள் கோவிட்-19 போர்க்களமாகலாம் என்கின்றனர்!!

மக்களில் ஒரு பகுதியினர் கொரோணா தடுப்புச் விதிகளை நிராகரிக்கின்றனர்!!!

இங்கிலாந்தில் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவதற்கும் இன்னும் சில நாட்களே உள்ள நிவையில் வெளிவகின்ற செய்திகள் ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாணதாகவும் குழப்பகரமானதாகவும் உள்ளது. அடுத்து வரும் இரு ஆண்டுகள் வரை உலகம் கொரோணாவோடு தான் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இயல்பு நிலைக்கு எவ்வாறு மீள்வது என்பதில் பிரித்தானிய அரசு பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. முதற்கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் கொரோணாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஆரம்பகட்டத்தில் அசமந்தமாக இருந்ததினால் தற்போது உத்தியோகபூர்வமாக நேற்று வரை 41,498 பேர் மரணமடைந்ததாக அறிவத்துள்ளது. ஆனால் உண்மையில் இத்தொகை இரட்டிப்பானது என அஞ்சப்படுகிறது.

இப்பின்னணியில் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. அதன் முதற்கட்டமாக பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. அதற்கான திட்டமிடல்களை அரசு மேற்கொண்ட போதும் வினைத்திறனற்ற திட்டமிடல்களால் பல சந்தர்ப்பங்களில் அரசு தனது முடிவுகளை மாற்றிக் கொள்ள – யூ ரேன் – எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. அதனால் அரசின் அறிவிப்புகள் தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்தும் வருகின்றனர்.

தற்போது பாடசாலைகளை ஆரம்பிப்பதிலும் அலுவலகங்களுக்கு பணியாளர்களை வரவைப்பதிலும் அரசு மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அடுத்த சில வரங்களுக்கு இங்கிலாந்தைப் பொறுத்தவரை இதுவே அரசின் முக்கிய செயற்பாடாக அமைய உள்ளது. அதற்கான கொரோணா தடுப்புச் செயற்பாடுகளை பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும், அலுவலகங்களும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் பிரித்தானிய மக்களில் ஒரு பிரிவினர் அனைத்து கொரோணா தடுப்புச் செயற்பாடுகளும் அர்த்தமற்றவை என்றும் கொரோணா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வருமாறும் கோரி இலண்டனின் போராட்டமையமான ரவல்ஹர் ஸ்ஹயரில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டத்தினை நடத்தி உள்ளனர்.

ஆனால் இன்று விரிவுரையாளர் சங்கம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு திரும்ப வேண்டாம் என்ற ஆலோசணையை வழங்கி உள்ளது. கொரோணோ பரவிய ஆரம்ப காலத்தில் வயோதிபர் இல்லங்களே கொரோணாவினால் கூடுதலாக பாதிப்படைந்ததுடன், பல்லாயிரம் பேர் வயோதிப இல்லங்களில் மரணித்தும் இருந்தனர். கொரோணா இரண்டாம் கட்டம் பல்கலைக்கழகங்களின் விடுதிகளே கொரோணாவின் போர்க்களமாக மாறும் என விரிவுரையாளர் சஙங்கம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த லெயடஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நிஷான் கனகராஜா (படம்) அதற்காகத்தான் பல்கலைக்கழகங்கள் கொரோணா தடுப்பு நடவடிக்கைகளை கடந்த சிலமாதங்களாக திட்டமிட்டு தீவிரமாக செயற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்கள் இவற்றையெல்லாம் கருத்தில் எடுத்து மிகக் கவனமாக திட்மிட்டு அதன் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்கள் இயங்க ஆரம்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். பிரித்தானியாவில் லெய்ஸ்ரர் பிரதேசமே முதற் தடவையாக இரண்டாவது லொக்டவுன் க்கு உள்ளானது. ஆசியர்களை மிகச்செறிவாககக் கொண்ட இந்த லெய்ஸ்ரர் பிரதேசத்தில் கிழக்கிலங்கையைச் சேர்ந்த தமிழ், முஸ்லீம் மக்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இங்கிலாந்தில் கோடைகாலம் முடிவடைந்து குளிர்காலம் ஆரம்பிக்க உள்ளது. இந்த குளிர்காலத்தில் தான் வைரஸ் கிருமிகள் மிகத் தீவிரமாக பரவுவது வழமை. இப்பரவல் பெரும்பாலும் பள்ளி மாவணர்களுடாவவே பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக உருவாகியுள்ள இந்த வைரஸ்க்கு, பிரித்தானியாவைப் பொறுத்தவரை இதுவே முதற் குளிர்காலம் என்பதால் இந்த வைரஸின் பரவலும், தாக்கமும் எவ்வாறு அமையும் என்பது இன்னமும் மில்லியன் பவுண்ட் கேள்வியாகவே உள்ளது. இதற்குள்ளாக அலுவலர்களையும் தங்கள் அலுவலகங்களுக்கு திருப்புமாறு அரசு கோரத் திட்டமிட்டு உள்ளது. இந்தக் குளிர்காலம் பிரித்தானியாவைப் பொறுத்தவரை மிகக் கடினமான, அபாயமான குளிர்காலமாகவே நோக்கப்படுகின்றது.

அதே சமயம் தொடர்ச்சியாக மக்களை லொக் டவுனிலும் வைத்திருக்க முடியாது. ஏற்கனவே அரசு அளித்து வருகின்ற பேர்லோ திட்டம் இந்த ஒக்ரோபர் உடன் முடிவுக்கு வருகின்றது. அது முடிவுக்கு வருவதுடன் வேலை இழப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது. ஏற்கனவே வழங்கப்பட்ட உதவிகளை எவ்வாறு மீளப்பெறவது, எவ்வாறு பிரித்தானியாவின் கடன்தொகையைக் குறைப்பது என்ற குழப்பத்தின் மத்தியில் வேலை இழப்புகள் மக்களை மேலும் அரச உதவியை நோக்கித் தள்ள உள்ளது. சில ஆய்வுகளின் படி நேரடியாக கொரோணாவினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடியால் கூடிய மரணங்கள் சம்பவிக்கும் என ஆபாய முகாமைத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி 2025 வரையான ஐந்து ஆண்டுகளில் பிரித்தானியாவில் 700,000 பேர் கொரோணா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பால் மரணத்தை சந்திப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

இன்னும் இரு மாதங்களில் வரவுள்ள வரவுசெலவுத் திட்டத்தில் அரசு கொரோணாவிற்கு செலவழித் பணத்தை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதற்கு வரியயை அதிகரிக்க வேண்டி ஏற்படும். ஏற்கனவே கொரோணாவினால் பொருட்கள் விலையேறி உள்ள நிலையில் வரி அதிகரிக்கப்படும் பட்சத்தில் அந்த வரி அதிகரிப்பு மக்களை நோக்கியே தள்ளப்படும். அதனால் பொருட்கள் விலையேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் அரசு பொதுச் செலவீனங்களை குறைக்க நிர்ப்பந்திக்கப்படும். தற்போது அட்சியில் உள்ள கொன்சவேடிவ் கட்சியானது முற்றிலும் முதலாளிகளினதும் பெரும் கோப்ரேட்களினதும் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி. இவர்களுடைய பொருளாதாரக் கொள்கைகள் பெரும்பாலும் பின்தங்கிய கீழ் நிலையில் உள்ள மக்களையே கூடுதலாக பாதிக்கும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் கிடையாது. பொதுச்செலவீனங்கள் குறைக்கப்படும் போது அரச உதவிக்கொடுப்பனவுகள் குறைக்கப்படும். சுகாதார சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மக்கள் மேம்பாட்டுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் என பாரிய நிதிக்குறைப்புகள் பொதுச் செலவீனத்தில் மேற்கொள்ளப்படும். இவற்றின் ஒட்டுமொத்த விளைவாகவே 700,000 அடுத்த ஐந்து ஆண்டுகளில் மரணத்தை தழுவுவார்கள் என கணிக்கப்படுகின்றது.

இவற்றுக்கு மத்தியில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் வெளியேறுகின்றது. பிரித்தானியாவின் தான்தோண்றித் தனமான யெற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலடிகொடுக்க முயைலாம். அவ்வாறான ஒரு நிலையேற்பட்டால் பிரித்தானியாவில் அத்தியவசியப் பொருட்களின் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாததாகும். மேலும் ஐரோப்பிய சந்தையில் தங்கியுள்ள பிரித்தானிய நிறுவனங்கள் இலாபமீட்டமுடியாமல் திவாலாகிப் போகும் சூழல் ஏற்படும். பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கவும் நேரலாம். பிரித்தானிய பொருளாதாரம் கொரோணா என்ற இயற்கை அழிவினாலும் பொறிஸ் ஜோன்சன் என்ற வினைத்திறன் அற்ற செயற்திறனற்ற பிரதமராலும் இரட்டைத் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. இவ்வழிவுகளில் இருந்து பிரித்தானியா மீண்டும் பழையநிலையை எட்ட இன்னும் ஒரு தசாப்தம் – பத்து ஆண்டுகள் ஆகம் என பொருளியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

பிரித்தானியா: ஜசிஎஸ்சிஈ மற்றும் ஏலெவெல் பெறுபேறுகளும் அரசின் குளறுபடிகளும்!! மருத்துவக் கற்கை நெறியில் அதன் பிரதிபலிப்புகளும்!!!

இன்று (Aug 20, 2020) வெளியான 16 வயது மாணவர்களின் தரம் 11ற்கான ஜிசிஎஸ்ஈ பெறுபேறுகள் இன்று வெளியாகியது. இந்த ஜிசிஎஸ்ஈ முடிவுகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் நல்ல பெறுபேறுகளுடன் வந்திருப்பதை மாணவர்களும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் சித்தியடைந்த மாணவர்களின் பெறுபேறுகள் 10 வீதத்தால் அதிகரித்து உள்ளது. மேலும் உயர்சித்தி பெற்றவர்களின் வீதம் 25 சத விதத்தால் அதிகரித்து உள்ளது. ஆனால் ஜிசிஎஸ்ஈ பெறுபேறுகளுக்கு சமனான பிரெக் தொழிற்பயிற்சி பாடங்களின் பெறுபேறுகளை வெளியிடுவதை நேற்று (ஓகஸ்ட் 19, 2020) பெறுபேறுகளுக்கு பொறுப்பான அலுவலகம் ஓப்குவால் நிறுத்தி வைத்துள்ளது. அதனால் பிரெக் பாடங்களை எடுத்த மாணவர்கள் குழப்பநிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

இப்பெறுபேறுகள் பற்றிய குழறுபடிகள் கல்வி அமைச்சுக்கு ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட போதும் கல்வி அமைச்சு காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை எனக் குற்றமசாட்டப்படுகிறது. இவ்வளவு குழறுபடிகளுக்கும் யார் காரணம் என்பதற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. கல்வி அமைச்சுச் செயலாளர் கவின் வில்லியம்சன் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாகவும் அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

கொரோனா காலத்தில் அரச விதிமுறைகளை மீறிய டொமினிக் கம்மிங்கை பதவி விலக்கக் கோரிய போதும் பொறிஸ் ஜோன்சன் அதனை ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பொறிஸ் ஜோன்சன் செயற்திறனற்ற பிரதமராக இருப்பது மட்டுமல்லாமல் வெறும் விசுவாசிகளை வைத்து நாட்டை நிர்வகிக்க முறல்கின்றார் என்ற குற்றச்சாட்டு தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. புதிய தலைவர் கியர்ஸ்ராமர் தலைமையிலான தொழிற்கட்சி இன்னமும் ஸ்தீரனமான நிலையில் ஆளும்கட்சிக்கு சவால் விடாமல் உள்ளது.

கடந்த வாரம் வெளியான ஏலெவெல் பரீட்சைப் பெறுபேறுகளில் பெரும் குளறுபடி ஏற்பட்டது. ஆசிரியர்கள் எதிர்வுகூறிய பெறுபேறுகளை மாற்றி அல்கோரிதம் ஒன்றைப் பயன்படுத்தி மாணவர்களின் பெறுபேறுகள் குறைக்கப்பட்டது. அதனால் சமூகமட்டத்தில் கீழ்நிலையில் இருந்த மாணவர்களின் பெறுபேறுகளே மேலும் கீழிறக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட அழுத்தங்களைத் தொடர்ந்து அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டது. ஆனாலும் பல்கலைக்கழகங்களுக்கான இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் பல மாணவர்கள் தங்களுடைய முதல் தெரிவான கற்கைக்கோ முதல் தெரிவான பல்கலைக்கழகத்திற்கோ செல்வதற்கான வாய்ப்பு இந்தக் குழறுபடிகளால் பறிபோயுள்ளது. பல ஆண்டுகள் மாணவர்கள் செய்த உழைப்பை அரசு தனது செயற்திறன் இன்மையால் உதாசீனம் செய்துள்ளது.

பிரித்தானிய கொன்சவேடிவ் அரசு மீண்டும் மீண்டும் தன் இயலாமையை பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்தி விருகின்றது. கொரோனா ஒரு பெரும் உயிர்க்கொல்லி நோய்க்கிருமி என்பதை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தும் பொறிஸ் ஜோன்சனின் அரசு எவ்வித முன்நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது எழுபதினாயிரத்திற்கு அதிகமானோர் பிரித்தானியாவில் கொல்லப்பட்டனர். அதற்கு எவ்வித பொறுப்பையும் அரசு ஏற்கவில்லை. ஐரோப்பாவில் கொரோனாவில் கொல்லப்பட்டோர் அதிகமான நாடாக பிரித்தானியா உள்ளது. இந்த கொரோனா பேரழிவின் பின் என்எச்எஸ் இற்கு வாரா வாரம் கைதட்டி ஆதரவு தெரிவிப்பதாக மாயாஜாலம் போட்ட அரசு, பல்கலைக்கழகங்களில் மருத்துவதுறைக்கு விதிக்கப்பட்டு இருக்கும் எண்ணிக்கைக் கட்டுப்பாட்டை தளர்த்த மறுத்துவருகின்றது. ஏனெனில் ஒவ்வொரு புதிய மருத்துவரை உருவாக்கவும் அரசு அம்மருத்துவர்களை உருவாக்க அரசு முதலீடு செய்ய வேண்டியுள்ளது. அதனைச் செய்யத் தயாரில்லாததால் மருத்துவ படிப்பை மேற்கொள்வதில் எண்ணிக்கைக் கட்டுப்பாட்டை அரசு விதித்துள்ளது.

இது இம்முறை தகுதிபெற்ற பல மாணவர்களையும் தங்களது கனவுத் தொழலாக உள்ள மருத்துவத்துறைக்குள் நுழைவதற்கு தடையாக உள்ளது. அல்கோரிதம் காரணமாக சமூகத்தின் பிற்பட்ட தளத்தில் இருந்து மருத்துவத்துறைக்கு சென்ற மாணவர்களின் கனவுகளில் அரசு மண்ணைவாரி விசியது. அதனால் ஆசிரியர்களின் எதிர்வு கூறலின் அடிப்படையில் மருத்துவத்துறைக்கு தெரிவானவர்கள், அரசின் அல்கோரிதத்தினூடாக அவர்களின் பெறுபேறுகள் கீழிறக்கப்பட்டு மருத்துவத்துறையில் கற்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பை இழந்தனர். தற்போது அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட போதும், பல்கலைக்கழகங்கள் மருத்துவத்துறைக்கான இடங்களை ஏற்கனவே பூர்த்தி செய்துவிட்டதாலும், கல்வியில் சமூகஇடைவெளி பேணப்பட வேண்டி இருப்பதாலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாங்கள் விரும்பிய மருத்துவத்துறையில் கற்றுகும் வாய்ப்பை இழக்கின்றனர். அரசு கூடுதல் நிதியயை முதலிட்டு மருத்துவக் கல்விக்கான எண்ணிக்கையைத் தளர்த்தினால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும்.

பிரித்தானியாவில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்புகளுக்கு முக்கியமான காரணம் போதிய மருத்துவர்களும் மருத்துவ தாதிகளும் இல்லாமையே. இன்றும் பிரித்தானிய சுகாதார சேவைகளில் பல்லாயிரக்கணக்காண வெற்றிடங்கள் உள்ளது. கொரோனா போன்ற உயிர்க்கொல்லிகள் தாக்கினால் அதனைக் கையாள்வதற்கு வேண்டிய மருத்துவ மனிதவலு பிரித்தானியாவில் இல்லை. அதனால் மருத்துவத்துறைக் கல்விக்கான எண்ணிக்கையை தளர்த்துவது அவசியம். வெறும் கைதட்டி ஆதரவு தெரிவிப்பதாக பொறிஸ் ஜோன்சன் அரசு நீலிக் கண்ணீர் வடித்தது. ஆனால் காத்திரமான உதவிகளை செய்யத் தயாராகவில்லை. மாறாக இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் உருவாக்குகின்ற மருத்துவர்களையும் மருத்துவத்துறை சார்ந்தவர்களையும் கவர்ந்து இழுத்து தங்களது சுகாதார சேவைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புகின்றனர். இதன் மூலம் வளர்ந்துவரும் நாடுகளில் சுகாதார சேவைகள் பாதிப்படைகின்றது. இந்நாடுகள் உருவாக்கும் மருத்துவர்களால் பிரித்தானியா நன்மையயைப் பெற முயற்சிக்கின்றது.

யாழ்ப்பாணிய கல்விமுறைக்கு ஒப்பானதாக மாறும் பிரித்தானிய கல்வி

இங்கிலாந்தினுடை முன்னால் கல்விச் செயலாளராக இருந்த மைக்கல் கோவ் யாழ்ப்பாணிய கல்விச் சிந்தனைக்கு ஒப்பான சிந்தனையையே கொண்டிருந்தார். பரீட்சைகளே அறிவைத் தீர்மானிக்கும் என்ற நிலைப்பாட்டில் ஓலெவல் ஏலெவல் பரீட்சைகளைக் கடினமாக்கி பெறுபேற்றுக்கான வெட்டுப்புள்ளிகளையும் கடுமையாக்கினார். அதன் படியே 1 முதல் 9 வரையான புள்ளிகள் ஓலெவலுக்கும் ஏலெவலுக்கு வழமை போல் ஏ,பி, சி, …. என்ற முறையும் உள்ளது. இதனையும் 1 முதல் 9 ற்கு மாற்றும் எண்ணம் உள்ளது. இதன்படி மிகச் சிறுபான்மையினரான வசதி படைத்த மாணவர்கள் பாடசாலையைவிட தனிப்பட்ட வகுப்புகளை எடுக்கும் வசதி உள்ளவர்கள் மட்டுமே பலனடையும் வகையில் இப்புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. பரீட்சைக்கு மாணவர்களைத் தயார் செய்வதும் அவர்கள் பரீட்சையில் சித்தியடைவதுமே நோக்கமாக உள்ளது. இது முற்றிலும் அறிவுபூர்வமான விடயம் அல்ல.

குறிப்பாக யாழ்ப்பாணிய கல்விமுறை அவ்வாறே இருந்தது. அதனால் பாடசாலைகளில் நூல் நிலையங்கள் இல்லை. யாழ்ப்பாணத்தில் புத்தகக் கடைகளும் இல்லை. வினாவிடை புத்தகங்களும் துரித மீட்டல்களும் தான் புத்தகக் கடைகளில் விற்கப்படுகிறது. அவ்வாறே பிரித்தானிய கல்விமுறையும் மாற்றப்பட்டு வருகின்றது. இங்கிலாந்தின் அரச பாடசாலைகளில் பெரும்பாலும் நூலகங்கள் கைவிடப்படுகின்றன. உள்ளுராட்சி நூலகங்களையும் தற்போதைய கொன்சவேடிவ் கட்சி மூடிவருகின்றது. மாணவர்கள் அறிவை வளர்ப்பதற்குப் பதிலாக பரீட்சைக்கு தயார் செய்யப்படும் பரிசோதணைக்கூட விலங்குகள் ஆக்கப்படுகின்றனர். அறிவு பரீட்சைப் பெறுபேறுகளுக்குள் குறுக்கப்பட்டுவிட்டது. பின்தங்கிய பிரிவினரான மாணவர்கள் அரசின் கல்விக் கொள்கைகளால் கைவிடப்படுகின்றனர். இவர்களில் 80 வீதமானவர்கள் பிரித்தானிய சிறைக் கூடங்களை நிரப்புகின்றனர்.