காண்டீபன்

காண்டீபன்

அமிர்தலிங்கம் காண்டீபன் அவர்களின் இறுதி அஞ்சலி – காணொலி!

நாளை நவம்பர் 27 அன்று அமிர்தலிங்கம் காண்டீபன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் லண்டன் சறே பகுதியில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

அமிர்தலிங்கம் காண்டீபனின் நினைவுகள் பற்றி அவருடைய நண்பர்கள் பகிர்ந்துகொண்ட அஞ்சலிக் குறிப்பு.

காண்டீபன் அமிர்தலிங்கம் – ஒரு அரசியல் ஆளுமையின் இழப்பு!

காண்டீபன் அமிர்தலிங்கம் இன்று காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டது மட்டுமல்ல தமிழீழ இராணுவம் என்ற அமைப்பையும் இவர் கட்டமைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த மூன்று தசாப்தங்களாக அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்தார். ஈரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று இயற்கை எய்தியதாக தமிழீழ விடுதலைக் கூட்டணி நண்பர்கள் தெரிவித்தனர். தமிழரசுக் கட்சி தமிழ் காங்கிரஸ்சோடு சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி அதன் தலைவராகி எதிர்க்கட்சித் தலைவருமானவர் இவருடைய தந்தையார் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். இலங்கைத் தமிழர்களிடையே அரசியல் குடும்பமாக மிகவும் அறியப்பட்டது அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி குடும்பத்தினர். இவர்களுடைய மூத்தமகனே காண்டீபன் அமிர்தலிங்கம். இவருடைய இளைய சகோதரர் பகீரதன் அமிர்தலிங்கம் மருத்துவர் லண்டனில் வாழ்கின்றார். இந்த அரசியல் குடும்பத்தில் இறுதியாக எம்மத்தியில் வாழ்பவர் இவர் மட்டுமே.

காண்டீபன் இலங்கைத் தமிழ் அரசியல் வேகமாக கொதிநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையிலேயே பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கின்ற காலத்திலேயே தாயும் தந்தையும் அரசியல் போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்தப் பின்னணியில் வளர்ந்த காண்டீபன் தீவிர அரசியலில் விருப்பம் கொண்டதில் ஆச்சரியம் இல்லை. வே பிரபாகரன் யாழ்ப்பாண மேயர் துரையப்பாவை படுகொலை செய்யத் திட்டம் போட்ட காலங்களில் காண்டீபனும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். வே பிரபாகரனும் காண்டீபனும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அமைப்பில் இருந்த தீவிர செயற்பாட்டாளர்கள். நெருங்கிய நண்பர்கள். அமிர்தலிங்கம் குடும்பத்தினருக்கு பிரபாகரன் மீது அபரிதமான நம்பிக்கையும் நெருக்கமும் இருந்தது. பிரபாகரன் அல்பேர்ட் துரையப்பாவை படுகொலை செய்ததும் இந்தக் குழு தலைமறைவானது. அவ்வாறு தலைமறைவானவர்களில் காண்டீபனும் ஒருவர்.

மேயர் துரையப்பாவின் கொலையை புதிய தமிழ் புலிகள் உரிமை கோரினர். அத்தோடு தமிழ் இளைஞர்களுக்கு இடையே தலைமைத்துவப் போட்டிகளும் தலை தூக்க ஆரம்பித்துவிட்டது. தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் என்பன ஓரளவு அமைப்பு வடிவம் பெற ஆரம்பித்துவிட்டது. இந்த இயக்கங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வந்த நிலைசற்றறு நெகிழ்ச்சி பெறத் தொடங்கிவிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியை இந்த அமைப்புகள் விமர்சிக்கவும் ஆரம்பித்து விட்டன. அச்சமயத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சொல்லுக்கு கட்டுப்பட்ட ஒரு இராணுவக் கட்டமைப்பு இருந்தால் நல்லது என்ற எண்ணம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இருந்ததாகவும் அவ்வாறான ஒரு அமைப்புக்கு தங்களோடு மிக நெருக்கமாக இருக்கும் இந்தியா பூரண ஆதரவு வழங்கும் என்று அவர்கள் நம்பியுள்ளனர். இந்தப் பின்னணியில் ‘தமிழீழ இராணுவம்’ என்ற அமைப்பை காண்டீபன் உருவாக்கினார்.

இந்த அமைப்பு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அ அமிர்தலிங்கத்தின் ஆதரவோடு உருவாக்கப்பட்டது என்ற பரவலான அபிப்பிராயம் இருந்த போதும் அமிர்தலிங்கம் அதனைக் கடுமையாக எதிர்த்ததாகவும் அவருடைய ஆதரவு இல்லாததால் அவ்வமைப்பு முளைவிட முன்னரே கிள்ளி எறியப்பட்டுவிட்டதாகவும் அன்றைய காலத்தில் காண்டீபனுடன் தொடர்பில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

காண்டீபன் வன்முறை அரசியலில் நாட்டம் கொள்ள குடும்பத்தினர் இவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இருந்தாலும் இவருடைய அரசியல் நாட்டம் வெளிநாட்டிலும் தொடர்ந்தது. காண்டீபன் அரசியல் தஞ்சம்கோரி முதலில் ஐரோப்பாவுக்கு பிரான்ஸ்க்கு புலம்பெயர்ந்தார். பின்னர் லண்டனுக்கு வந்தார். பிரான்ஸ்ம் மனிதவுரிமைகள் சாசனத்திற்குக் கட்டுப்பட்ட, அரசியல் தஞ்சம் கோருக்கூடிய நாடு என்ற வகையில் பிரித்தானியா அவரை மீண்டும் பிரான்ஸ்க்கு நாடு கடத்தியது. அதன் பின் பிரபல சட்டத்தரணி ரொனி பற்றரசன் அவருடைய வழக்கை எடுத்து நடாத்தி காண்டீபனை லண்டனுக்கு எடுத்தார்.

லண்டன் வந்த காண்டீபன் மேயர் அல்பேர்ட் துரையப்பா கொலைசெய்யப்பட்டபின் தலைமறைவாகி இருந்தது பிரபாகரனின் மைத்துனியின் வீட்டில். அத்தலைமறைவின் போது மலர்ந்த காதல் பின் லண்டனில் திருமணத்தில் முடிந்து அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் கிடைத்தது. காண்டீபன் லண்டன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப்பாளராகச் செயற்பட்டார். அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையின் தலைவராக சிருனிவாசனும் செயலாளராக பொன் சிவசுப்பிரமணியமும் இருந்தனர்.

துரதிஷ்டவசமாக அடுத்தடுத்த தலைமுறையினரின் பொது வாழ்க்கை மட்டுமல்ல அதன் தாக்கத்தால் தனிப்பட்ட வாழ்;கையும் போராட்டமாகவே மாறியது. பலர் கல்வியைத் தொடர முடியவில்லை. அவ்வாறு காண்டீபன் பிறந்து வளர்ந்தது மட்டுமல்ல அவருடைய போராட்டம் இறுதிவரை தொடர்ந்தது.

இந்தப் பின்னணியில் 1989 யூன் 13 தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது பற்றி திருமதி மங்கையற்கரசி ஒருதடவை குறிப்பிடுகையில் “பிரபாகரனிடம் துப்பாக்கியைக் கொடுத்து அவரைச் சுடு என்று சொன்னால், ஒரு போதும் பிரபாகரன் சுட்டிருக்கமாட்டார்” என்று கூறி இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது வைத்திருந்த அபார நம்பிக்கை காரணமாக அவர்கள் ஆயுதங்களுடனேயே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதன் விளைவு அன்று அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு படுகொலை செய்த சம்பவம் இதுமுதற் தடவையுமல்ல. இது முற்றுப்புள்ளியுமல்ல.
அமிர்தலிங்கம் குடும்பத்தினருக்கு அவர் கொல்லப்பட்டது என்பதற்கும் அப்பால் தமிழீழ விடுதலைப் புலிகள் அவரைப் படுகொலை செய்தமை மிகவும் தனிப்பட்டவகையில் அவர்களைத் தாக்கியது. ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம்’ செய்ததாகவே கருதுகின்றனர். விடுதலைப் புலிகளின் பயிற்சிகளில் நம்பவைத்து கழுத்தறுக்கும் இவ்வகையான மனிதநேயமற்ற செயற்பாடுகள் அவவமைப்பில் இருந்த சில உறுப்பினர்களால் இன்றும் கடைப்பிடிக்கப்படுவதைக் காணலாம்.

அமீரின் மறைவுக்குப் பின் சிவசிதம்பரம் அவர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள மங்கையற்கரசி அமிர்தலிங்கம் இலங்கை சென்றிருந்தார். அப்போது தமிழ்ச்செல்வன் அவரின் பக்கத்தில் அமர்ந்துகொண்டார். “அவரை என்னத்துக்காக கொலை செய்தீர்கள்” என்று கேட்டபோது தமிழ்ச்செல்வன் பதிலளிக்கவில்லை என அவர் பொதுவெளியில் குறிப்பிட்டு இருந்தார். இதே கேள்வியை முதல் போராளி சிவகுமாரன் மற்றும் சிவசுப்பிரமணியத்தின் தாயார் தன்னுடைய மகனுக்காக பிரபாகரனிடம் கேட்டிருந்ததாகவும் அதற்கு பிரபாகரன், “அதுதன்னுடைய உத்தரவில்லை, அது மாத்தையாவின் செயல்” என்று குறிப்பிட்டதாகவும் பொன் சிவசுப்பிரமணியம் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார்.

மேலும் பிரபாகரன் காண்டீபனின் நண்பனும். அப்படி இருக்கையில் தன் தந்தையை தன்னுடைய நண்பனே கொலை செய்யத் துணிந்தான் என்ற தாக்கமும் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக காண்டிபனின் திருமணமும் முடிவுக்கு வர காண்டிபன் என்ற ஆளுமை தமிழ் அரசியலில் காணாமலேயே போய்விட்டார். வாழ்க்கை போராட்டமாக மது துணையானது.

ஆவரை நான் கடைசியாக அவருடைய தாயாரின் இறுதிக்கிரியைகளில் சந்தித்தேன். பெரிய நெருக்ம் இருக்கவில்லை. ஒரிரு தடவை கண்டிருப்பேன். அன்று அவர் அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தினார். இப்பதிவை விரும்பு வெறுப்பில்லாமல் எழுத வேண்டும் என்று தோண்றியது. காண்டீபன் ஒரு வரலாற்றின் சாட்சியம். ஒரு ஆளுமையை தமிழ் சமூகம் இழந்தது. இன்று அவர் பௌதீக உயிர் தன் சுவாசத்தை நிறுத்திக்கொண்டது.

அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் அனைவருடனும் என் துயரைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

விதி, வீதிகளில் விளையாடுகின்றது! – ஒரு மாணவியும் அவளின் கனவுகளும் வாகனத்தின் சக்கரத்தில் நசுங்கி ஒரு மாதம்!!!

இன்றைக்கு டிசம்பர் 15 காலை வீதிப் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஏ9 வீதியில் லிற்றில் எய்ட் அமைப்பினால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டது. லிற்றில் எய்டில் கல்வி கற்கும் மாணவர்கள் உட்பட வெளி மாணவர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வீதிப் போக்குவரத்தில் பாதுகாப்பை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டது. மாணவர்கள் வீதிப் பாதுகாப்பை வலியுறுத்தும் பதாதைகளை தாங்கி அமைதியான முறையில் இந்நிகழ்வை நிகழ்த்தினர்.

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பாக நவம்பர் 15 காலை 8:15 மணிக்கு கல்லூரிக் கனவுகளோடு மஞ்சள் கடவையில் பாடசாலையை நோக்கி கடந்த மாணவி மதுசாளினி திருவாசகம் (17) பாதசாரிகள் கடக்கின்ற கடவையிலேயே வாகன விபத்தில் கொல்லப்பட்டாள். அப்பதின்ம வயது மாணவியின் நினைவாக விபத்து நடந்த அந்த இடத்தில் லிற்றில் எய்ட் மாணவர்கள் இந்த விழிப்புணவு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். கிளிநொச்சியில் ஊற்றுப்புலம் கிராமப் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் கற்று சிறந்த பேறுபேறுகளைப் பெற்ற மூன்று மாணவிகள் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு உயர்தரம் கற்க அனுமதிபெற வந்த போதே இந்த மோசமான விபத்து நிகழ்ந்தது. தனது மகளை விறகுவெட்டி விற்ற பணத்தில் படிக்க வைத்த தந்தையின் தலையில் பேரிடி.

இலங்கையின் வீதிகள் மரண வீதிகளாகிக் கொண்டிருக்கின்றது என உலக சுகாதார நிறுவன புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் வீதிகளில் சராசரியாக ஒரு நாளைக்கு 10 மரணங்கள் வரை சம்பவிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது. 2020ம் ஆண்டில் இல்கையின் வீதிகளில் 3590 பேர் விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர். தெற்காசியாவிலேயே இலங்கையின் வீதிகளே ஆபத்தானவையாக உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவிக்கின்றது. இலங்கையில் ஒரு லட்சம் பேருக்கு 17 பேர் வீதி விபத்துக்களில் கொல்லப்படுகின்றனர். இவ்வாறு கொல்லப்படுபவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தை ஈட்டக் கூடிய வயதுடையோராகவும் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பாரிய பொருளாதார நெருக்கடியையும் சந்திக்கின்றனர்.

காண்டீபன் ஜெகநாதன் (44) விபத்தினால் தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஓகஸ்ட் 8இல் மரணமடைந்தார். இளம் குடும்பத்தவரான ஒரு குழந்தையின் தந்தையான காண்டிபன் வாகரை டிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர். ஓகஸ்ட் 2 இல் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது மட்டக்களப்பு மாங்கேணி பகுதியில் விபத்துக்கு உள்ளானார்.

காண்டீபனின் மறைவு அக்குடும்பத்தின் எதிர்காலத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் ஜயமில்லை. வீபத்துக்களினால் உயிரிழந்த வறுமைப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சி கண்டுள்ளதுடன் அவர்களில் மூன்றில் இரு பங்கினர் கடன்வாங்கி வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

2019யைக் காட்டிலும் 2020இல் இலங்கையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2019இல் 2840 ஆக இருந்து விபத்து மரணங்கள் 2020இல் 3590 ஆகா 26வீதத்தால் அதிகரித்துள்ளது. இவ்விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் பாதிக்கப்படுபவர்களில் 70 வீதமானவர்கள் பொருளாதார ரீதியாக சிக்கனமான போக்குவரத்தை பயன்படுத்துபவர்களாகவே உள்ளனர். விபத்துக்களில் கொல்லப்படுபவர்களில் 50 வீதமானவர்கள் இருசக்கர அல்லது முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள். வீதி விபத்துக்களில் கொல்லப்படுபவர்களில் பாதசாரிகள் மூன்றில் ஒரு பங்கினர் பாதசாரிகள். மேலும் 25,000 பேர்வரை விபத்துக்களில் காயமுறுகின்றனர். இலங்கையில் யுத்தத்திற்குப் பின் உடல் ஊனத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக வீதி விபத்துக்கள் உள்ளன.

லண்டன் சரேயில் வசிக்கின்ற முருகையா சங்கரப்பிள்ளை 2014 இல் தாயகத்திற்குச் சென்றிருந்த போது வீதியோரமாக நடந்த சென்றவரை மோட்டார் சைக்கிளில் வந்தர் மோதியதில் அவருக்கு காலில் பலத்த அடிபட்டுமூன்று இடத்தில் என்பு முறிவு ஏற்ப்பட்டது. அவர் யாழ் நொதேர்ன் மருத்துவமனையில் பத்து நாட்கள் இருந்து பலத்த கஸடங்களுக்கு மத்தியில் பிரித்தானியா திரும்பினார். டீப் வெயின் துரொம்போசிஸ் என்ற இதய – குருதி அழுத்த நோயுடன் இரத்தம் கசிய கசியவே லண்டன் திரும்பி உடன் லண்டன் கிஹ்ஸ்ரன் மருத்துவமனையிலும் பின் கிஹ் ஜோர்ஜ் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு மூன்று மாதங்கள் சிகிச்சையளிக்கப்பட்டு அடுத்த 12 மாதங்கள் வீட்டில் வைத்து மருத்துவ தாதி ஒருவர் சென்று பார்த்து சிகிச்சை பெற்று வந்தார். அவர் முற்றாக குணமடைய மூன்று ஆண்டுகள் எடுத்தது. இச்சம்பவம் ஊரில் உள்ள ஒருவருக்கு ஏற்பட்டு இருந்தால் அவர் மூன்று மாதங்களுக்குள் உயிரிழந்து இருப்பார் என்றார் முருகையா. அதிஸ்ரவசமாக உயிர் தப்பி இருந்தால் உடல் ஊனமடைந்திருக்க வேண்டி வந்திருப்பதுடன் பொருளாதார ரீதியிலும் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பார்.

தெருக்களில் வாகனங்களின் அதிகரிப்பு (கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் வாகன உரிமையாளர்களின் எண்ணிக்கை 70 வீதத்தால் அதிகரித்து இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.)இ பராமரிப்பற்ற அல்லது பாராமரிப்பு குறைந்த வீதிகள்இ வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் போது நம்பகத்தன்மை மற்றும் உறுதிப்படுத்தல்களில் காட்டப்படும் அசிரத்தைஇ வீதிக் குற்றங்கள் முறையாகத் தண்டிக்கப்படாமைஇ பொதுப் போக்குவரத்து வளர்த்தெடுக்கப்படாமை என்பன வீதி விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்துவிடும் இவ்விபத்துக்கள் பல்லாயிரம் குடும்பங்களை உருக்குலைய வைக்கின்றது. அவர்களுடைய கனவுகளை வண்டிச் சக்கரத்தில் நசித்துவிடுகின்றது. வேகம் ஒரு போதும் விவேகமானதல்ல. உயிரினும் மேலானது எதுவுமில்லை. இன்னொரு உயிரைப் பறிக்கின்ற, எம்முயிரை பறிக்கின்ற வேகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். வேகமாகச் சென்று நாம் எதனையும் சாதித்துவிடுவதில்லை. ஆகையால் விவேகத்துடன் நிதானத்துடன் வாகனத்தை ஓட்டுவோம்.