குடி

குடி

பதின்ம வயதில் விளையாட்டாக ஆரம்பித்தது, இன்று ஐம்பதுக்களில் மரணத்தின் வாயிலில்!!! – தமிழ் பெருங்’குடி’ மக்கள் – பகுதி 02

என் எதிரிக்குக் கூட இப்படி ஆகிடக் கூடாது என்று கட்டியவள் கண்கலங்கினாள். அன்று நவம்பர் 19 வெள்ளிக்கிழமை நானும் தான் கூடச் சென்றிருந்தேன். அவனுடைய வயிறு பெருத்துக் கொண்டு வந்தது. கண்கள் மஞ்சளாகிக் கிடந்தது. உணவு ரியூப் வழியாக வழங்கப்பட்டு கிழிவுகளும் ரியூப் வழியாக எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அவன் முக்கால் மயக்கத்தில் எவ்வித தூண்டலும் இன்றி இருந்தான். சுவாசிக்க கஸ்டப்பட்டு உள் வலியால் மட்டும் உடலை அசைக்க முற்பட்டான். மற்றும்படி எவ்வித உணர்ச்சிகளும் இல்லை. கட்டியவள் அழைத்துப் பார்த்தான் எவ்வித உணர்ச்சி வெளிப்படுத்தலும் இல்லை. நான் அழைத்துப் பார்த்தேன். அதற்கும் எவ்வித வெளிப்படுத்தலும் இல்லை. என் கையால் முகத்தை தடவினேன் பலனில்லை. ஒரிரு தடவை கண்ணை மட்டும் திறந்து பார்த்தான். அதில் எவ்வித உணர்ச்சியும் இல்லை. வெறுமையை அவன் கண்ணில் பார்க்க முடிந்தது.

அப்போது தமிழ் டொக்டர் வந்து கட்டியவளுக்கு நிலைமையை விழங்கப்படுத்த தனக்கு தெரிந்த தமிழில் நன்றாகவே விளங்கப்படுத்தினார். தான் இவர் முதல் வந்திருந்த போதும் சிகிச்சை அளித்ததாகவும் குடியை விட்டாலே தங்கள் சிகிச்சை பலனளிக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியதாகவும் தெரிவித்தார். அவருடைய கதையின்படி தாங்கள் எல்லாவகையிலும் அவரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றோம் ஆனால் நிலைமை மோசமானாலும் மோசமாகலாம் என்ற எச்சரிக்கையை வழங்கி அவளை அசுவாசப்படுத்தும் அதேசமயம் நேரக்கூடிய ஆபத்திற்கும் தயார்படுத்தினார்.

“நீங்களும் குடித்தால் வரும் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கிறீர்கள். இதனால் அரசுக்கு எவ்வளவு செலவு. ஏன் இவருக் பலாத்காரமாக குடியை வெறுப்பதற்கான சிகிச்சையை அளிக்கக் கூடாது” என்று வினவினேன். என்னைப் பார்த்து ஒரு நளினமான புன்னகையை விட்டபடி, ‘குடிப்பதா இல்லையா என்பது அவரவர் தனிப்பட்ட முடிவு. அவர்களாக திருந்த வேண்டும். இது ஒருவருடைய மனித உரிமை சம்பந்தப்பட்டது’ என்றார் அந்த டொக்டர். ‘இது வாழ்வதற்கான உரிமையல்ல. சாவதற்குமான உரிமை’ என்று சொல்லி அந்த உரையாடலை நிறுத்திக்கொண்டோம்.

2019இல் போதையில் வீழ்ந்து மரணத்தின் விளிம்புக்குச் சென்று மீண்டவனால் குடியில் இருந்து மீள முடியவில்லை. அதன் பின் மருத்துவமனை அவனது மாமியார் வீடானது. கிட்டத்தட்ட 20 தடவை வரை சென்று திரும்பி இருப்பான். இம்முறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இது முற்றுப்புள்ளியாக அமையும் என்ற உணர்வு என்னுள் வந்துவிட்டது. அவனுடைய உடல் மாற்றங்களில் அது தெரிந்தது. அவன் எவ்விதத்திலும் தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கவில்லை அல்லது அவனால் முடியவில்லை. அவன் கடந்த சில ஆண்டுகளாகவே வாழ்வதற்கான நோக்கத்தை தேவையை இழந்துவிட்டான். இவன் மட்டுமல்ல இவனைப் போல் பலர் எம்மத்தியில் வாழ்கின்றனர். நாம் இவர்களை அடையாளம் காணத் தவறிவிடுகின்றோம். அல்லது ஏன் மற்றையவர்களின் பிரச்சினையில் தலையிடுவான் என்று இருந்துவிடுகின்றோம். இதுவும் ஒரு சமூகப் பிரச்சினை என்பதை உணர மறந்துவிடுகின்றோம்.

ஒரு வகையில் இன்று சமூக மாற்றம் பற்றி பேசுவோரும் வைற் கொலர் சமூகசேவையாளர்களாகி விட்டனர். நோகாமல் பகுதிநேரமாக புரட்சி சமூக மாற்றம் பற்றி போஸ்ட் போட்டு சமூக மாற்றத்தை கொண்டுவரலாம் என்று நினைக்கிறோம். அரசியல் ரீதியாக தீவிரமாக ‘முற்போக்காக’ செயற்பட்ட இவனின் நிலையே இப்படி என்றால் சாதாரணர்களின் நிலை எப்படியிருக்கும். இவர்களைச் சார்ந்தவர்களின் குடும்பங்களின் நிலை என்ன. அவர்கள் தினம் தினம் ஆண்டாண்டுகளாக அனுபவித்த கொடுமைகள் யுத்தக் கொடுமையிலும் மோசமானது. சொந்த வீட்டிலேயே நிம்மதியிழந்து வாழ்வதென்பது எவ்வளவு பெரும் கொடுமை.

இவன் மருத்துவமனைக்கு சென்று இன்று நவம்பர் 22 பத்து நாட்களாகிவிட்டது. அதற்கிடையே லண்டனின் புறநகர்ப்பகுதியான சறேயில் குடி உபாதையால் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இவர் குடித்துவிட்டு மனைவியைக் கொடுமைப்படுத்துவது நாளாந்த செயற்பாடக இருந்துள்ளது. மனைவியின் உழைப்பில் வாழ்ந்து அவளின் பணத்திலேயே வாங்கிக் குடித்து எதிர்பாராத விபத்து ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன் அவள் உயிரிழந்தாள்.

தாயகத்தில் கிளிநொச்சி பாடசாலையில் தலைமையாசிரியராக இருந்து மாற்றம் பெற்றுச் சென்ற ஒரு தலைமையாசிரியரும் குடி காரணமாக ஏற்பட்ட உடலியல் பாதிப்பால் சென்ற வாரம் மரணமானார். இவர் பாடசாலையிலேயே வைத்து குடிக்கின்ற பழக்கத்தைக் கொண்டிருந்துள்ளார்.

அண்மைய மாதங்களில் அவன் எவ்வாறு சிந்திக்கின்றான், தன்னுடைய வாழ்வைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பதை அறிய அவனோடு பல்கோணங்களிலும் பேச்சுக்கொடுத்து பார்ப்பேன். சில வாரங்களுக்கு முன், “நீ எவ்வளவு நாள் உயிரோடு இருப்பாய் என நினைக்கிறாய்” என்று ஈவிரக்கமே இல்லாமல் கேட்டேன். அவன் எவ்வித சலனமும் இல்லாமல், “படுத்தால் நாளைக்கு எழும்புவேனோ தெரியாது” என்றான். “அப்ப உனக்கு சாகப்போறனே என்று பயம் இருக்கவில்லையா?” என்றேன். “என்னத்தை பயப்படுகிறது” என்றான். அதற்கு மேல் கேட்பதற்கு எனக்கு எதுவும் இருக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் பேசிய போது, “நான் இதற்கு வெளியே வருவேன்” என்றவன் அது செய்வேன் இது செய்வேன் என்றெல்லாம் சொல்வான். ஆனால் சில மணி நேரத்திலேயே குடித்துவிட்டு நான் சாகப்போகிறேன் என்று என்று ஒலமிட்டு அழுவான். முன்னர் மனைவி பிள்ளைகளோடு இருக்கும் போதும் அவ்வாறு தான். இப்போது அவர்கள் இல்லாதபோதும் பிள்ளைகளுக்கு போன் பண்ணி நான் இன்னும் பத்து நிமிடங்களில் சாகப் போகிறேன் என்பான். இன்று அவன் அந்த நிலைக்கு மிகக் கிட்ட வந்துவிட்டான். கடந்த சனிக்கிழமை பிள்ளைகளையும் கூட்டிச் சென்றோம். அவர்கள் ஒவ்வொருவராக ‘அப்பா’, ‘அப்பா’ என்று அழைத்தனர். ஆனால் எவ்வித உணர்வு வெளிப்பாடும் இல்லை. கைகளால் வயர்களைப் பிடுங்குவதால் கையை ஒரு சிறு தலையனை மாதிரியான பாக்குக்குள் வைத்துக் கட்டி இருந்தனர். வயிறு இன்னமும் வீங்கி இருந்தது.

மறுநாள் ஞாயிறு நவம்பர் 21 தாரமும் தாயும் சென்று பார்த்து வந்தனர். பெற்றவர்கள் உயிரோடு இருக்கின்ற போது பிள்ளைகள் உயிரிழப்பது மிகக் கொடுமையானது. ‘பெற்ற வயிறு பற்றி எரியும்’ என்பது இதைத்தான். நாளுக்கு நாள் அவன் நிலை மோசமாகிக்கொண்டு வருகின்றது. அதுவொன்றும் ஆச்சரியமானதும் அல்ல.

அண்மைய காலங்களில் அவன் என்னோடுதான் கூடுதலாக கதைத்திருந்தான் என நினைக்கிறேன். சில மாதங்களுக்கு முன்வரை சமைத்து சாப்பாடு எல்லாம் தருவான் என்னுடைய பிள்ளைகளுக்கும் சேர்த்து சமைப்பான். சமையலில் சாப்பாட்டில் அவ்வளவு நுணுக்கம். ‘என்னுடைய பிளைகள் வேறு உன்னுடைய பிள்ளைகள் வேறா’ என்பான். ‘நான் இல்லாவிட்டால் என்னுடைய பிள்ளைகளை பார்ப்பாய் தானே’ என்பான்.

இன்று நவம்பர் 22 இரத்தமாக வாந்தி எடுத்திருந்தான். இதயத்துடிப்பிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஈரல் செயற்பாட்டை இழந்துவிட்டது. சிறுநீரகமும் செயற்பாட்டை இழந்தது. அதனால் இன்று அவன் ஐசியு க்கு மாற்றப்பட்டான்.

பதின்ம வயதில் விளையாட்டாக பழகிய பழக்கம் பிள்ளைகளின் பதின்மப் பருவத்தைப் பார்க்காமல் தன் வாழ்வையும் வாழாமல் ஐம்பதுக்களின் முற்பகுதியிலேயே மரணத்தை வரவழைத்து வைத்துள்ளது.

“இதுக்காகவாடி நாங்கள் ஊரில் இருந்து சீதனம் கொடுத்து தாலி வாங்கி வெளிநாடு வந்தோம்” தமிழ் பெருங்குடி’மக்கள் – பாகம் 01

பகுதி 01: https://www.thesamnet.co.uk//?p=79491

“இதுக்காகவாடி நாங்கள் ஊரில் இருந்து சீதனம் கொடுத்து தாலி வாங்கி வெளிநாடு வந்தோம்” தமிழ் பெருங்குடி’மக்கள் – பாகம் 01

இக்கட்டுரைத் தொடரை எழுதுவது தொடர்பாக சில மாதங்களாகவே எனக்குள் போராடி, ஒரு முடிவுக்கு வந்து இதனை எழுத ஆரம்பிக்கின்றேன். அனுவம் அறிவு. சிலருடைய வாழ்க்கை அனுபவங்களைத் தெரிந்துகொள்வதனூடாக, அதனைப் புரிந்துகொள்வதனூடாக, சிலருடைய வாழ்க்கையில் திருப்பங்களை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றேன்.

._._._._._.

மேற்கத்தைய ஜாஸ் இசையில் ஆர்வம் உள்ள பலரும் அமி வைன்ஹவுசை (படம்) அறிந்திருக்க முடியும். 1983 இல் இங்கிலாந்தில் பிறந்து 12 வயதிலேயே இசைத்துறையில் நுழைந்து 19 வயதில் தன் பெயரை மேற்கத்தைய இசையுலகை அறிய வைத்தவள். ‘தன்னுடைய இசையைக் கேட்டு ஒரு ஐந்து நிமிடங்கள் மக்கள் தங்கள் சோகத்தை மறக்க வேண்டும்’ என்று விரும்பியவள். ஆனால் 19வது வயதிலேயே மது, போதை, கூத்தும் கும்மாளமும் ஆனது அவள் வாழ்க்கை. புகழின் உச்சியில் இருந்த போதே அவள் வீழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தால். 20,000 ரசிகர்களுக்கு முன்னாள் எந்த நாட்டில் நிற்கின்றோம் என்பதையும் மறந்து பாடலின் சொற்களையும் மறந்து நிறைபோதையில் நின்றாள். யூலை 22, 2011 அவளுடைய மருத்துவருக்கு போன் செய்து “நான் சாக விரும்பவில்லை” என்றவள் அடுத்த 24 மணிநேரத்தில் யூலை 23, 2011இல் அதீத போதை விசமாக மரணித்தாள். தனியாகப்படுத்து இருந்த அவளுடைய கட்டிலில் காலியான வொட்காப் போத்தலும் கிடந்தது.

._._._._._.

அப்போது லண்டனில் பொறிபறக்கின்ற அரசியல் செய்தவர்களில் இவனும் ஒருவன். இந்துவின் மைந்தன். புலம்பெயர் அரசியில் கூட்டங்கள், நாடக விழாக்கள், திரைப்பட விழாக்கள் என்று அறியப்பட்ட ஒருவன். ஒரு காலத்தில் இவனுக்கென்று ஒரு பெரும் குடும்ப வட்டம், ஊர் வட்டம், நட்பு வட்டம், பாடசாலை வட்டம், அரசியல் வட்டம், நாடக வட்டம் எல்லாம் இருந்தது.

எனக்கும் அவனில் கணிசமான மதிப்பும் மரியாதையும் இருந்தது. அவனை 1997 முதல் எனக்குத் தெரியும். நானும் அவனோடு அரசியலில் பயணித்துள்ளேன். நல்ல நண்பன். அவனது வீட்டிற்கு வெளியே யாருக்கும் எந்த தீங்கும் செய்ததாக நான் அறியவில்லை. என் பிளைகளுக்கும் சமைத்து சாப்பாடு தந்துவிடுகின்ற நல்ல மனிதன்.

இந்த கொரோனா பரவலுக்கு முன்னதாக 2019 பிற்பகுதியில் ஏதோ வீழ்ந்து மரணத்தின் வாயில்வரை சென்று மூன்று மாதங்களிற்கு மேலாக சிகிச்சை பெற்று மனைவியின் துணையால் மீண்டு வந்தான். அப்போது அவனை மருத்துவமனை சென்று பார்த்த போது அவனிருந்த கோலத்தைப் பார்த்து நான் மயக்கமாகிவிட்டேன்.

2020இல் ஒரு நாள் போன் அடித்து அழுதான். அப்போது தான் அவன் குடிப்பான் என்பதே எனக்குத் தெரியும். அவன் குடிக்கு அடிமையானவன் என்பது 2021இல் தான் தெரியும். அதற்குப் பிறகு நான் அறிந்தவை எதுவும் ஆரோக்கியமானவையல்ல. அவன் முன்னர் வீழ்ந்தது கூட விபத்து அல்ல. போதையால் வீழ்ந்து எழும்பியது என்பதை பின்னர் அறிந்து கொண்டேன்.

கடந்த வாரமும் பார்த்தேன். எழுந்து நடக்கவே திரணியில்லாமல் நின்றான். அவன் அறையில் இருந்து வரும் மணம் சற்று கனதியாக இருந்தது. அவன் பெரிதாக உணவருந்தியதாக தெரியவில்லை. ஆனால் வயிறு சற்று வீங்கி இருந்தது. கட்டிலருகில் ஒரு போத்தல். ஜக் டானியல் அரைப் போத்தல் குடித்து முடித்த நிலையில் கிடந்தது. அவனுடைய கோலத்தைப் பார்த்து எனக்கு பேசுவதற்கோ திட்டுவதற்கோ மனம்வரவில்லை. அன்று காலையும் வெளியே போய் ஒரு போத்தல் ஜக் டானியல் 25 முதல் 30 பவுண் வரை வரும், வாங்கி வந்துள்ளான்.

“எமேர்ஜன்சிக்கு அடித்தியா?” என்று கேட்டால் நீண்ட இடைவெளிக்குப் பின் “அவங்கள் வர மாட்டாங்கள்” என்று புறுபுறுத்தான்.

“நான் அம்புலன்ஸ்க்கு அடிக்கிறன். நீ முதலில் உடுப்பை போடு” என்று உடம்பில் ஒட்டுத் துணியுமின்றி நின்றவனிடம் சொல்லிவிட்டு எமேர்ஜனசிக்கு போன் பண்ணினேன்.

வழமையான கேள்விகள். “சுவாசிக்கின்றாரா? வெப்பநிலை இருக்கின்றதா? இரத்தப்பெருக்கா?” என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போனார்கள். ஆனால் அவனால் உடுப்பைக் கூட போட முடியவில்லை. உடுப்பைப் போட உதவி செய்து கட்டிலில் கிடத்தினேன்.

சிறிது நேரத்தில் முதலில் காரில் ஒரு பராமெடிக் வந்து உடலைச் செக் பண்ணினான். நல்ல காலத்திற்கு கோவிட் என்ற படியால் முகக்கவசம் கையுறை எல்லாம் அணிந்திருந்ததால் அந்த அறையின் மணம் அவருக்கு தெரிந்திராது.

வந்த பராமெடிக் மேலும் சில விசயங்களைக் கேட்டார்: “இரத்தம் சிவப்பாக போகிறதா கருப்பாக இருக்கா? மலம் என்ன நிறத்தில் உள்ளது? குறிப்பாக கருப்பாக தார் நிறத்தில் உள்ளதா?” “வாந்தியோடு சிவப்பாக வருகின்றது. மலம் தார் கருப்பில் இருந்தது” என்று சொன்னேன்.

இதை நானும் ஓரளவு கேட்டறிந்து இருந்தேன். உடம்பினுள் குருதிப் பெருக்கு இருந்தால் அது கருப்பாகி மலத்தோடு வெளியேறும் என்று. ஏற்கனவே ஈரலில் பிரச்சினை. உடம்பின் வடிகட்டல் செயல்முறைகள் எல்லாம் பாதிக்கப்பட்டு பலவீனப்பட்டு இருப்பதால் வயிறும் வீங்கியிருக்க வேண்டும். பரா மெடிக்கிற்கு மேலதிகமாக எதுவும் சொல்ல வேண்டியிருக்கவில்லை. மேலும் நீரிழிவு நோயாளியுமான அவன் வாந்தி எடுப்பதும் சிக்கலானது என பராமெடிக் கூறி உடனடியாக இவரை மருத்துவமனைக்கு இட்டுச்செல்ல அம்புலன்ஸிற்கு அழைப்பு விட சில நிமிடங்களிலேயே அம்புலன்ஸ்ம் வந்து சேர்ந்தது. ஒரு ஆணும் இரு பெண்களுமாக மூவர் வந்திறங்கினர்.

எனக்கோ ஒரு வகையில் மக்கள் வரிப்பணத்தை துஸ்பிரயோகம் செய்கின்றோம் என்ற குற்ற உணர்வு. வந்தவர்களிடம் சொன்னேன்: “என்னை மனித்துக்கொள்ளுங்கள். இவர் ஒரு பெரும் குடிமகன். இவரைச் சுற்றி இருந்த எல்லோருமே இவருடைய இந்தப் பழக்கத்தினால், இவரால் பாதிக்கப்பட்டு கைவிட்டுச் சென்றுவிட்டனர். இனி இவரை திருத்தலாம் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. எங்களுக்கும் உங்களை அழைப்பதைத் தவிர வேறு வழிதெரியவில்லை. கடந்த மாதமும் குடியை மறப்பதற்கான சிகிச்சையை குழப்பிவிட்டு வந்துவிட்டார்”, என்று புலம்பித் தள்ளினேன்.

அந்த பராமெடிக் மிக நிதானமாகவே, “அதைப்பற்றி நீங்கள் யோசிக்க வேண்டாம். நீங்கள் எப்போது தேவையானாலும் எங்களை அழையுங்கள். அதற்குத் தான் நாங்கள் இருக்கின்றோம்”, என்று சொல்லிய படியே “எத்தனை நாட்கள் மாதங்கள் வருடங்கள் குடிக்கின்றார்” என்று கேட்டார். “மூன்று தசாப்தங்களாகக் குடிக்கின்றார்” என்றேன். “அப்படியானால் நீங்கள் எங்களை அழைப்பது இது கடைசித் தடவையாக இருக்கப் போவதில்லை. இன்றைக்கு சில வேளை எங்களால் இவரைக் காப்பாற்றி அனுப்ப முடியும். அவர் திருப்பியும் குடிப்பார். நீங்களும் திருப்பி எங்களுக்கு போன் பண்ணுவீர்கள். அவராக திருந்தினாலேயொழிய வேறேதும் வழியில்லை”. என்றார் அப்பரா மெடிக். “அரசு ஏன் பலாத்காரமாக இவர்களுக்கு குடியை மறக்கும் சிகிச்சையைச் செய்யக் கூடாது?” என்று என் ஆதங்கத்தை கேட்டேன். புன்சிரிப்பினூடாக அவர்கள் தங்கள் இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டு, மிக அன்போடும் கனிவோடும் அவனை அழைத்துச் சென்றனர். அவன் சிலோமோசனிலும் மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்கி வீட்டுக்கு முன் நின்ற அம்புலன்ஸை அடைய பத்து நிமிடங்கள் எடுத்தது.

அவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இன்று நவம்பர் 18, 2021 ஒரு வாரமாகிவிட்டது. இன்று அவனுடைய வாழ்க்கை ஆண்டுகள், மாதங்கள், வாரங்கள் என்று கேள்விக்குறியாகி நிற்கின்றது. இன்று அவனைச் சுற்றி எந்த வட்டமும் கிடையாது. கடமைக்காக கட்டியவள் மட்டும் சென்று பார்த்து வருகின்றாள். இதில் யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை.

உளவியல் எடுகோளின்படி ஒன்பது பேரில் எட்டுப் பேர் வாழ்வா சாவா என்று மரணத்தின் விளிம்பில் நிற்கின்ற போதும் நிதானித்து, தீர்க்கமாக முடிவெடுப்பதில்லை. அசட்டுத்தனமான நம்பிக்கையின் அடிப்படையில் தங்களுடைய நிலையை உணர்ந்துகொள்ள முடியாமல் தான் முடிவுகளை எடுக்கின்றனர். நாம் இயலுமானவர்களாக இருக்கின்ற போது எதிர்காலம் பற்றிய எவ்வித சிந்தனையும் இல்லாமல், எஞ்சி இருக்கின்ற காலமும் இவ்வாறே இருந்துவிடலாம் என இவர்கள் நினைக்கின்றார்களா என்று தெரியவில்லை. இதன் விளைவுகள் மிகப் பாரதூரமாக அமைந்துவிடுகின்றது.

கற்றறியும் வன்அறிவிலும் (hard skill) எமது இயல்புசார்ந்த மென்அறிவு (soft skill) மிக முக்கியமானது. தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய (ability to change) என்ற மென் அறிவு ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது. ஆனால் கணிசமான மனிதர்கள் மத்தியில் இது காணப்படுவதில்லை. அவர்கள் மிகத் திறமையானவர்களாக மிகச் சிறந்த அறிவாளிகளாக இருந்த போதும் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய இந்த மென்அறிவைக் கொண்டிராதவர்கள் ஒரு கட்டத்தில் தடம்புரள்வது தவிர்க்க முடியாதது.

மாற்றம் ஒன்றைத்தவிர எதுவுமே நிரந்தரமில்லை. அந்த அடிப்படையில் மாற்றங்களை உள்வாங்கி எம்மை மாற்றிக்கொள்ளத் தவறினால் தடம்புரள்வது தவிர்க்க முடியாதது. மனித நடத்தை கொள்கையாளர்களின் படி அறிவு என்பதே நாங்கள் எங்கள் இயல்புகளை மாற்றிக்கொள்வது தான். நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களானால் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டுள்ள புறச்சூழலில் வாழ்வதற்கான தகமையை நாங்கள் இழந்துவிடுகின்றோம்.

அவனும் அரசியல் பேசினான், சமூக விடுதலை பேசினான், பெண் விடுதலை பேசினான், முற்போக்கு பேசினான். எங்கும் எப்போதும் தன்னையும் ஒரு புள்ளியாக்கிக் கொண்டிருந்தான். ஆனால் அது எல்லாமே அவன் தன்னை மறைக்க போர்த்திக்கொண்ட போர்வைகளோ என்றே எண்ணத் தோன்றுகிறது. அவன் பேசிய அரசியலுக்கும் அவன் வீட்டினுள் நடந்து கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவ்வாறு தான் எம்மத்தியில் பலர் உலாவருகின்றனர்.

“இதுக்காகவாடி நாங்கள் ஊரில் இருந்து சீதனம் கொடுத்து தாலி வாங்கி வந்தோம்” என்று ஒருத்தி தன் சினேகிதியோடு குமுறி அழுதாள். ஐந்து மாதக் கர்பிணிப் பெண்ணாக தனது இரண்டாவது குழந்தையை சுமந்து கொண்டு; போதைக்கு அடிமையான கணவன் உடலில் ஒட்டுத்துணியில்லாமல் கட்டிலில் மலம்சலம் கழித்துக் கிடக்க, குழந்தையையும் சுமந்தபடி அதனைத் துப்பரவு செய்வது தான் அவளின் நாளாந்த கடமைகளில் ஒன்று. வயிற்றில் சுமந்த குழந்தையை அவள் பெற்றொடுத்த போது அவன் உயிருடன் இல்லை.

இவைகள் எதுவுமே கற்பனைகள் அல்ல. எங்களோடு பயணித்துக்கொண்டிருக்கும் சக மாந்தர்களின் இதயத்தை கனக்க வைக்கும் வாழ்க்கைப் பதிவுகள். உண்மைகளைப் புறக்கணித்து வாழ முடியாது. எமது சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை நாங்கள் முதலில் ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வுகளையும் தேட வேண்டும்.

(இன்னும் வரும்.)