சஜித் பிரேமதாஸ

சஜித் பிரேமதாஸ

இரண்டாவது முறையாகவும் அரசியலமைப்பு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு !

அரசியலமைப்பு பேரவையினால் பொலிஸ்மா அதிபர் நியமனத்தை அங்கீகரிக்கவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசியலமைப்பு பேரவையினால் பொலிஸ்மா அதிபர் நியமனத்தை அங்கீகரிக்கவில்லை. அதற்கு ஆதரவாக 4 வாக்குகளும், எதிராக 2  வாக்குகளும் மற்றும் 2 பேர் வாக்களிப்பதை தவிர்த்தும் இருந்தனர்.

முடிவெடுக்க குறைந்தபட்சம் 5 வாக்குகள் தேவை. வாக்குகள் சமமாகும் போது மாத்திரம் பயன்படுத்தக்கூடிய அறுதியிடும் வாக்கு சபாநாயகருக்கு உள்ளது. 4/2  என்பது சமமான வாக்குகள் அல்ல! இரண்டாவது முறையாகவும் அரசியலமைப்பு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

வெட்கம் சபாநாயகர் அவர்களே! என்று குறிப்பிட்டுள்ளது.

போதைப்பொருள் சோதனைகளின் போது மாணவர்களின் புத்தகப்பைகளில் வெற்று உணவுப் பெட்டிகளே உள்ளன – எதிர்க்கட்சித் தலைவர் கவலை !

தகவல் தொழிநுட்பம், தகவல் தொழிநுட்ப அறிவியல், செயற்கை நுண்ணறிவு என புதிய போக்குகளால் இந்நாட்டில் பாடசாலை கல்வி கட்டமைப்பு முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பைகளை போதைப்பொருளுக்காக தற்போதைய அரசாங்கம் சோதனை செய்கிறது எனவும், போதைப்பொருளுக்கு பதிலாக வெற்று உணவுப் பெட்டிகளைக் கொண்ட பைகள் மாத்திரமே காணக்கிடைப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

போதைப்பொருள் வியாபாரம் செய்யும் பெரும் புள்ளிகளை கைது செய்யாமல், சரியான ஊட்டச்சத்து கூட இல்லாத பாடசாலை மாணவர்களின் பைகளை சோதனை செய்வது வேடிக்கையானது எனவும் தெரிவித்தார்.

நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு,திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 45 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்றை இன்று (20) கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கி வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து,பெற்றோருக்கு உணவளிக்க வழியில்லாத நிலையில்,பாடசாலை பைகளை பரிசோதிப்பதை விடுத்து,அவர்களுக்கு சரியான போஷாக்கை அளிக்கும் திட்டத்தை தயாரிப்பதே அரசாங்கத்தின் பணியாக இருக்க வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்நாட்டில் உள்ள 43 இலட்சம் பாடசாலை மாணவ மாணவிகளுக்கும் அவர்களின் பாடசாலை காலத்தில் போஷாக்கான உணவுவேளையொன்று வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானின் ஹிரோஷிமா,நாகசாகி நகரங்களில் அணு குண்டுகள் வீசப்பட்டபோது,அந்நகரங்களில் பெரும் அழிவுகள் நிகழ்ந்த போதிலும்,நவீன உலகிற்கு ஏற்ற கல்வி முறையை நடைமுறைப்படுத்தியதன் மூலம் ஜப்பான் மீண்டும் தலை தூக்கி உலகின் சக்தி வாய்ந்த நாடாக மாறியதாகவும்,பின்லாந்து போன்ற நாடுகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னோக்கிய கல்வித் திட்டங்களை உருவாக்கி மேம்பட்ட கல்வி பயணத்தை செயல்படுத்தி வருவதாகவும்,கல்வியை வலுப்படுத்தியதன் மூலம் வியட்நாம் போன்ற நாடுகள் தொழில்நுட்ப மற்றும் கைத்தொழில் துறையில் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

காலங்காலமாக, நம் நாட்டில் ஒரு மனப்பாட கல்வி முறையே உள்ளதாகவும், நம் நாட்டிற்கு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் கல்வி முறையொன்றே தேவைப்படுவதாகவும், தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

போஷாக்கில்லாத ஒரு சமூகமாக இந்த பாடசாலை மாணவர்கள் உருவெடுத்துள்ளதாகவும்,அவர்களுடைய சாப்பாட்டு பெட்டிகளை பரிசோதனை செய்வதை விட்டு அவர்களுக்கு எவ்வாறான திட்டங்களை வழங்க முடியும் என்று அரசாங்கம் கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் இந்த நாட்டினுடைய அனைத்து மாணவர்களுக்கும் இலவச உணவு, இலவச சீறுடை திட்டங்களை வழங்கிய ஒரு ஜனாதிபதி எனவும், இந்நாட்டில் இருக்கக்கூடிய நாற்பத்து மூன்று இலட்சம் மாணவர்களுக்கும் அவ்வாறான திட்டங்களை தான் நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையர்களாக சகோதரத்துவத்தோடு, நட்புறவோடு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மனோபாவத்துடன் நாமனைவரும் செயற்பட வேண்டும் எனவும், இலங்கை பெஸ்ட் என்பது எங்களுடைய ஒரு வேலைத்திட்டமாக இருப்பதாகவும், இருநூற்று இருபது இலட்சம் மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்நாட்டை உலகில் முதலிடத்திற்கு ஸ்தானப்படுத்துவதே தங்களுடைய கருத்திட்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“ராஜபக்சர்களால் தற்போதைய ஆட்சியாளர்கள் கூட உலகம் முழுவதும் பிச்சை எடுக்கிறார்கள்.”- சஜித் பிரேமதாஸ

“ராஜபக்சர்களால் தற்போதைய ஆட்சியாளர்கள் கூட உலகம் முழுவதும் பிச்சை எடுக்க வேண்டியுள்ளது.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இந்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இன, மத, சாதி, நிற பேதங்களுக்கு அப்பாற்பட்டு நாட்டின் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கலகெதர தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கடந்த (23) ஆம் திகதி கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

அதற்கான சரியான வேலைத்திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருப்பதாகவும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒரு நல்ல அணியைக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாஸ, தேர்தலில் வெற்றி பெற்றால், அதன் உண்மையான வெற்றியாளர்கள் தாய் நாடும் அதன் 220 இலட்சம் மக்களும் தான் எனவும் தெரிவித்தார்.

ஸ்மார்ட் தீர்வுகள், புத்திசாலித்தனமான தீர்வுகளை வழங்குவதாகக் கூறி ஆட்சி வந்த சேர்மார்கள் இறுதியில் நாட்டையே வங்குரோத்தாக்கினர் எனவும், இதனால், சிறு குழந்தை முதல் கர்ப்பிணித் தாய் வரை அனைத்து மட்டங்களிலுமுள்ள குடிமக்கள் தற்போது மிகவும் அவல நிலையில் இருப்பதாகவும், இறுதியாக உணவு வேளையைக் கூட தயாரிக்க முடியாத நிலையில் உள்ளனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

கல்வித் துறையின் பிரச்சினைகள், சுகாதாரத் துறையின் பிரச்சினைகள், கைத்தொழில் துறையின் பிரச்சினைகள் உட்பட பல தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது வலியுறுத்தினார்.

அரசாங்கம் போராட்டத்திற்கு பயந்து பல்வேறு கட்டளைச் சட்டங்களைப் பிரயோகித்து மக்களை ஒடுக்குவதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இந்த அடக்குமுறையைத் தாங்கும் உச்ச வரம்பை மக்கள் எட்டிவிட்டனர் எனவும், அதன் காரணமாக பல்வேறு துறைசார் தொழில் வல்லுநர்கள் மற்றும் புத்திஜீவிகள் இலட்சக்கணக்கில் நாட்டை விட்டு வெளியேற ஆயத்தமாகி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

விரைவில் முழு நாட்டு மக்களும் வீதியில் இறங்கி மக்களுக்கு பக்கபலமாக இருக்கும் பொது மக்கள் ஆட்சியொன்றை உருவாக்குவர் எனவும் சுட்டிக்காட்டினார்.

“ராஜபக்சவினரை பாதுகாக்கும் பொறுப்பை ரணில் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.”- சஜித் பிரேமதாஸ

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ராஜபக்சவினரை அரசியலுக்கு வரவழைப்பதற்காக தரை விரிப்பு விரிக்கப்படுவதாகவும் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் நிராகரித்த ராஜபக்சவினரை பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடு இழந்த நில உரிமையையும் பணத்தையும் ராஜபக்ச அரச குடும்பம் மீளப் பெற்றுத் தர வேண்டும் என மக்கள் கோருவதாகவும், மக்களின் குரல்களுக்கு செவிசாய்த்து ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் மக்களின் பொதுச் சொத்துக்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்தையும் மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதாகவும், மோசடிகளுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

ராஜபக்சவினர் ஆட்சியில் இல்லாவிட்டாலும், தற்போதைய அரசாங்கம் ரத்துபஸ்வல கொலைக் கலாசாரத்தை மீண்டும் உருவாக்க முயல்வதாகவும், ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இந்நாட்டு இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி மிலேச்சத்தனமான முறையில் நசுக்கப்படுவதாகவும் இளைஞர்கள் மீதான அடக்குமுறையை எதிர்க்கட்சி என்ற வகையில் முழுமையாக எதிர்ப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

“ராஜபக்ஸர்களின் குப்பைகளை இழுக்கும் குப்பை வண்டியாக செயற்பட தயாரில்லை.”- சஜித் பிரேமதாஸ

அண்மையில் ராஜபக்சக்களின் ஆட்சி ஒரு குப்பை எனவும் அந்த குப்பை வண்டியை ரணில் இப்போது இழுத்துச்செல்வதாகவும் அதற்கு அவருக்கு ஓட்டுபோட்டவர்கள் உதவுவதாகவும் ஜே.வி.பி குற்றஞ்சாட்டிருந்ததது.

 

இந்தநிலையில் , இந்நாட்டை இந்தளவு அதலபாதாளத்திற்கு கொண்டு சென்றது ராஜபக்ஸ ஆட்சிதான் எனவும், அந்த ராஜபக்ஸர்களின் குப்பைகளை இழுக்கும் குப்பை வண்டியாக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எவரும் மாற மாட்டார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று முழு நாடும் பொருளாதார சமூக அரசியல் ரீதியாக மோசமான நிலையில் உள்ளதாகவும், 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் மக்கள் சரியான பாதைக்கு பதிலாக தவறான பாதையை தேர்ந்தெடுத்தமையே இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

இந்த வங்குரோத்து நாட்டில் நடக்கும் சமீபத்திய அதிசயம் சர்வகட்சி அரசாங்கம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டுக்கு தேவை அமைச்சுப் பதவிகளை அணிந்து கொண்டு பதவிக்குப் பின்னால் செல்லும் நாடு அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது உடனடியாக மேற்கொள்ள வேண்டியது தேர்தலை நடத்தி மக்களின் முடிவைக் கேட்பதுதான் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதற்கு மேல் தீர்வொன்று இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினை – சஜித்பிரேமதாச விசனம் !

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினையை கையாளும் முறை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை கண்டித்துள்ளார்.

நாட்டின் சுற்றுலா துறையின் பிரதான ஆதாரமாகவும், இலங்கையின் தேயிலை ஏற்றுமதியின் பிரதான ஏற்றுமதித் தளமாகவும் ரஷ்யா விளங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இராஜதந்திர மட்டதிற்கு செல்லும் முன்னர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் ஏன் தலையிடவில்லை என்றும் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

நிலைமையை மோசமாக்க அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் தனது திறமையின்மையை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இதனால் ஏற்படும் பொருளாதார விளைவுகளை ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் கடுமையாக சாடினார்.

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு 3 ஆண்டுகள் பூர்த்தி – சஜித் பிரேமதாச வழங்கியுள்ள உறுதி !

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு 3 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், கொலை செய்யப்பட்டவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்தோடு, இன்றைய தினம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு ஆடையுடன் நாடாளுமன்றத்திற்குள் பிரசன்னமாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமாக அனைவரையும் தண்டிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றுகையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச,

“3 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாத் தாக்குதலில் நாம் எமது உறவுகளை இழந்தோம். இந்த பயங்கரவாத் தாக்குதலால் நாடு என்ற ரீதியில் நாம் பல பாதிப்புக்களை எதிர்கொண்டோம்.

இந்த நேரத்தில், கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் நாம் ஒன்றைக் கூறிக்கொள்கிறோம்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் பாரபட்சம் பாராது சட்டநடவடிக்கை எடுப்போம் என்றும் அவர்களுக்கு உச்ச தண்டனை கிடைக்க வழிவகை செய்வோம் என்றும் பேராயருக்கு நாம் எழுத்துமூலமாக இவ்வேளையில் அறியத்தருகிறேன்.

இன்று ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டு மக்கள், பேராயர் மற்றும் எதிர்க்கட்சியாக எமக்கு என அனைவருக்கும் சந்தேகம் இருந்துக்கொண்டேதான் உள்ளது.

இதுதொடர்பான உண்மைகள் இன்னமும் வெளிவரவில்லை. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்னமும் பொது மக்களுக்கு காண்பிக்கவில்லை. இதனை நாடாளுமன்ற இணையத்தில் வெளியிடவேண்டும் என நான் இவ்வேளையில் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாரிய சூழ்ச்சியொன்று இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்திருந்தார். இதனை கண்டுபிடிக்க வேண்டியது இந்த அரசாங்கத்தின் பிரதான கடமையாகும். உண்மைகள் வெளிவர வேண்டும். உண்மைகளை பேச வேண்டும்.

எனது தந்தையும் பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றில்தான் கொல்லப்பட்டார். அன்று எனக்கு இருந்த மனநிலை, இன்றும் என்னுள் இருக்கிறது. இதனால், ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை என்னால் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

எனவே, இவர்களை கருத்திற்கொண்டு தகவல்களை மறைத்துக்கொண்டிருக்காமல், வெளிப்படையாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதுதொடர்பாக புதிய விசாரணையை அரசாங்கம் நடத்த வேண்டும். இதில் கொழும்பு பேராயர் உள்ளிட்ட கத்தோலிக்க மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களை உள்வாங்க வேண்டும்.

இந்த விடயத்தில் நாம் யாரையும் பாதுகாக்கவே, காப்பாற்றவோ முற்படக்கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

“நான் பதவி விலகப்போவதில்லை.”- ஜனாதிபதி கோட்டாபய உறுதி!

“கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற கோஷத்துடன் எனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் அரசியலே உண்டு” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நாடெங்கும் வலுப்பெற்றுள்ளன. இந்நிலையில், போராட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அரச தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், எனக்கு எதிராக உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகளால் களமிறக்கப்பட்ட சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரைத் தோற்கடித்து 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் ஆணையுடன் நான் ஆட்சிப்பீடம் ஏறினேன்.

தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் எனது ஜனாதிபதி பதவிக்குரிய காலம் வரை நான் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன். நாடாளுமன்றத்திலும் எனக்கு எதிராக மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பிரேரணை கொண்டுவருவதற்குரிய பலம் எதிர்க்கட்சிகளிடம் இல்லை.

அன்று எனக்கு எதிராகக் களமிறக்கப்பட்ட இருவரும் (சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க) இன்று எனக்கு எதிரான போராட்டங்களை நடத்துகின்றனர். அவர்களின் கட்சிகளின் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களுமே எனக்கு எதிராக வீதிகளில் பொங்குகின்றனர்.

‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற கோஷத்துடன் எனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் அரசியலே உண்டு என்பதை நாடாளுமன்றத்தில் இந்த வாரம் எதிரணியினர் நடத்திய போராட்டங்களும் பகிரங்கப்படுத்தியுள்ளன. எனவே, நாட்டில் எனக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் உண்மையில் மக்கள் போராட்டங்கள் அல்ல” – என்றார்.

“ நான் தமிழன். என்னிடம் நாடு வராது.” – மனோ கணேசன்

“சஜித் பிரேமதாசவும், பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்த்தால் மட்டுமே  இந்த காட்டாட்சியை வீழ்த்த முடியும் .” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்  தெரிவித்துள்ளார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் 43ஆவது படையணியின் மாநாடு கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்றுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் கலந்துகொள்ள கூடாது என கட்சியினால் அறிவறுத்தல் வழங்கப்பட்டடிருந்தது.  எனினும் நேற்றைய தினம் மனோ கணேசன், தலதா அத்துக்கோரளை மற்றும் குமார வெல்கம ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த விடயம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மனோ கணேசன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்,

நான் மனோ கணேசன். நான் ஒரு யதார்த்தவாதி. கொள்கைக்கும், நடைமுறைக்கும் இடையில் சமநிலை பயணம் செய்பவன். நான், இருப்பதை விட்டு விட்டு, பறப்பதை பிடிக்க அலைபவன் அல்ல. அன்றும், இன்றும், சமீப எதிர்காலம் வரைக்கும் இந்நாட்டில் பெரும்பான்மை ஆட்சிதான்.

அதற்குள் நாம் எப்படி எமது காரியங்களை செய்வது என்பதை நான், முயன்று, செய்து வருகிறேன். ஏதோ, நாட்டில் நான்தான் சர்வ அதிகாரம் கொண்ட அரச தலைவராக இருந்தது – இருப்பது போல் என்னிடம் கேள்வி கேட்பவர்களை கண்டால் எனக்கு சிரிப்புதான் வருகிறது.

முடியுமானால், என்னிடம் நாட்டை கொடுத்து பாருங்கள். மாற்றி காட்டுகிறேன். ஆனால், நான் தமிழன். என்னிடம் நாடு வராது. அதுதான் யதார்த்தம். நான் சுதந்திரமாக முடிவுகளை தைரியமாக எடுப்பதால்தான் எனக்கு எங்கும் அழைப்பு இருக்கிறது. எந்தவொரு பெரும்பான்மை கட்சிகள் – அரசியல்வாதிகள் நடத்தும் கலந்துரையாடல்களிலும் நான் கலந்துக்கொள்வேன்.

ஒருகாலத்தில் அதிகார பரலாக்கலுக்கு எதிராக இருந்த நண்பர் சம்பிக்க ரணவக்க இன்று அதுபற்றி சாதகமாக பேசுகிறார். அதுபற்றி பொது முடிவு எடுக்க வேண்டும் என்று என் பெயரை குறிப்பிட்டு கூறுகிறார். அது எமது வெற்றி. நாம் முன்னோக்கி செல்வோம். சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது. அதன்மூலமே இந்த காட்டாட்சியை வீழ்த்த முடியும் என நம்புகிறது.

தமிழ் முற்போக்கு கூட்டணி, எவருக்கும் எடுபிடி வேலை செய்யாத, ஒரு பலமான சுதந்திரமான கட்சி. இது காட்சி அல்ல, மக்களின் கட்சி. அதை இன்னமும் பலமாக நாம் வளர்ப்போம். அது ஒன்றே எமது பலம். அதன் மூலமே எம்மால் சாதிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

“ராஜபக்ஷ அரசு முழுமையாக இலஞ்சத்தால் நிறைந்துள்ளது.” – சஜித் பிரேமதாச

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி இயற்கை உரங்களை பயன்படுத்தி அறுவடை செய்யப்பட்டதா..? என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நிர்ணயித்த விலைக்கு இலங்கையில் அரிசியை கொள்வனவு செய்ய முடியாது. தொற்றுநோயின் போது பொதுமக்கள் எவ்வாறு சிரமப்பட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அரசாங்கம் பொய்களை கூறி மக்களை ஏமாற்றி வருகிறது.  அரிசி மீதான விலைக் கட்டுப்பாட்டை அமுல்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது.

தற்போதைய நிர்வாகம் கப்பம் மற்றும் இலஞ்சம் நிறைந்தது. ஆட்சியில் இருக்கும்போது உர மானியம் வழங்குவதாக உறுதியளித்த நிலையில் , அரசாங்கத்தின் தவறான முடிவுகளால் விவசாயிகள் சுமைக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.