சிறீதரன்

சிறீதரன்

யாழ்ப்பாணத்திலிருந்து திருட்டுத்தனமாக திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படும் சுண்ணக்கல் – யார் அனுமதி கொடுத்தது என சிறீதரன் கேள்வி!

யாழ்ப்பாணத்தில் இருந்து தற்போதும் தினசரி சுண்ணக்கல் அகழப்பட்டு இரகசியமான முறையில், திருட்டுத் தனமாக திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

 

நேற்று (18) இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இதனை சிறீதரன் இதனைக் குறிப்பிட்டார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “காங்கேசன்துறையில் இயங்கிய சீமெந்து ஆலைக்காக சுண்ணக்கல் அகழ்ந்த பிரதேசங்களான காங்கேசன்துறை, பலாலி தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள பாரிய இரு குழிகளும் இன்று மூடப்படமால் இருக்கின்றது.

ஆபத்தான நிலையில் குடிமனைகளின் நடுவே இந்த குழிகள் உள்ளன. இந்தநிலையில், தற்போது புத்தூர், மாதகல், இளவாலைப் பகுதிகளில் சிலர் இரகசியமான முறைகளில் சுண்ணக்கல்லை அகழ்ந்து மூடிய பார ஊர்திகளில் எடுத்துச் செல்கின்றனர்.

இவ்வாறு தினமும்10 முதல் 15 வரையான பார ஊர்திகளில் (கெண்டெயினர்களில்) கற்கள் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு எந்தத் திணைக்களமாவது அனுமதி வழங்கியதா“ எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

 

இதேவேளை இதற்குப் பதிலளித்த புவிச் சரிதவியல் திணைக்களத்தைச் சேர்ந்த மயூரன் அவ்வாறான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கு இணக்கம் என்கிறார் சிறீதரன்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவதற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவிக்கும் அதேநேரம், கட்சியின் தீர்மானமும் முக்கியமானது என்று இலங்கைத் தமழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முன்முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

தற்போதைய நிலையில், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட எந்தவொரு விடயங்களிலும் கரிசனைகளைக் கொண்டவர்களாக தம்மை வெளிப்படுத்தவில்லை.

 

ஆகவே, எந்த அடிப்படைகளுமின்றி தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிப்பது பொருத்தமற்றதொரு முயற்சியாகும். அந்த வகையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளரை நிறுத்துகின்றமை பொருத்தமான அணுகுமுறையாகும்.

 

அந்த முயற்சிக்கு நான் கொள்கை அளவில் இணக்கம் தெரிவிக்கின்றேன். எனினும், இலங்கைத் தமிழரசுக்கட்சியினுள் இந்த விடயம் சார்ந்து கலந்துரையாடி கட்சியாக தீர்மானம் எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகின்றது.

ஆகவே, குறித்த விடயம் சம்பந்தமாக கட்சியாக கூடி ஆராய்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என்றார்.

இதேவேளை தமிழரசுக் கட்சியின் இன்னுமொரு முக்கிய உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தமிழர் சார்பில் பொது ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவதன் பின்னணியில் ராஜபக்சக்கள் இருப்பதாக சந்தேகம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அநுரகுமார திஸாநாயக்கவின் பேச்சில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை – சிறீதரன் காட்டம் !

அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை எனவும், மாறாக ஏனைய சிங்களத் தலைவர்களை விடவும் தமிழர் நலன்கள் தொடர்பான மிகக் குறைந்தளவிலான கரிசனையுடனேயே அவர் பேசியிருக்கின்றார் எனவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறிதரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் கடந்த வியாழக்கிழமை (04) நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வட மாகாண மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, ‘எமக்கு வாக்களியுங்கள் என்றோ, 13 பிளஸ் தருகின்றோம் அல்லது சமஷ்டியை தருகின்றோம் – எமக்கு வாக்களியுங்கள் என்றோ கூறுவதற்காக நான் இங்கு வரிவல்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பிரதேச பேதங்களும், இன, மதபேதங்களுமின்றி நாம் அனைவரும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணையவேண்டும். நாட்டை புதியதொரு பாதையில் கொண்டுசெல்லவேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை முன்னிறுத்தி ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைக்க முன்வருமாறு வடக்கின் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்’ என்று தெரிவித்தார்.

 

இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவர் எஸ்.சிறிதரன், அநுரகுமார திஸாநாயக்கவின் உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை எனவும், மாறாக, ஏனைய சிங்களத் தலைவர்களை விடவும் தமிழர் நலன்கள் தொடர்பான மிகக் குறைந்தளவிலான கரிசனையுடனேயே அவர் பேசியிருக்கின்றார் எனவும் சுட்டிக்காட்டினார்.

 

அதேபோன்று யுத்தம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் சுமார் 40,000 இராணுவ வீரர்களை இணைத்தமை, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட வடக்கு, கிழக்கு இணைப்பை பிரிப்பதில் முன்னின்று செயற்பட்டமை, யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதுகுறித்து குறைந்தபட்சம் அனுதாபம் கூட வெளியிடாமை போன்ற பல்வேறு பிரச்சினைக்குரிய விடயங்கள் அநுரகுமார திஸாநாயக்க தரப்பில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

அண்மைய காலங்களில் வட, கிழக்கு மாகாணங்களில் பௌத்த பிக்குகளின் பங்கேற்புடன் இடம்பெற்றுவரும் அத்துமீறல்கள் தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க ஒருமுறைகூட கண்டனத்தை வெளிப்படுத்தவில்லை எனக் குறிப்பிட்ட சிறிதரன், இன மதவாதமற்ற, அனைத்து மக்களுக்குமான சிறந்த தலைவர் என்ற ரீதியில் அநுரகுமார திஸாநாயக்க முதலில் தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

மேலும், 13 ஆவது திருத்தம் அல்லது சமஷ்டி முறையிலான தீர்வு குறித்து எவ்வித உத்தரவாதத்தையும் வழங்குவதற்கு தான் வரவில்லை என்று கூறுபவருக்கு தமிழ் மக்கள் எந்த அடிப்படையில் வாக்களிப்பார்கள் என்று கேள்வி எழுப்பிய சிறிதரன், அநுரகுமார திஸாநாயக்க தமிழர்களிடத்தில் மாத்திரமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலேயே இன்னமும் தன்னை ஒரு சிறந்த தலைவனாக காண்பிக்கவில்லை என்றார்.

இந்தியச் சிறையில் இருக்கின்ற முருகன், ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்யுங்கள் – நாடாளுமன்றத்தில் சிறீதரன்!

இந்தியச் சிறையில் இருக்கின்ற முருகன், ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்து அவர்களுடைய குடும்பத்தோடு சேர நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர், இந்தியப்பிரதமர் மற்றும் இலங்கை அரசிடம் கேட்கிறோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச்) சட்டமூலம், ஈட்டுச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம், நிதி குத்தகைக்குவிடுதல் (திருத்தச்) சட்டமூலம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இன்றைய நாள் 16 வருடங்களுக்கு முன்னர் எங்களுடைய மண்ணிலே மாமனிதர் கிட்டினன் சிவனேசன் இலங்கையினுடைய படையினரால் ஆழ ஊடுருவும் படை என்ற பெயரில் மிக மறைமுகமாக கொலை செய்யப்பட்டிருந்தார் இந்த பாராளுமன்றத்தினுடைய உறுப்பினராக இருந்த சிவனேசன் அநியாயமாக கொல்லப்பட்டார்.

 

அதேவேளை இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை ஆகியும் கூட வீடு வர முடியாமல் சில நாட்களுக்கு முன்னர் மரணத்தை தழுவிக் கொண்ட சாந்தன்னுக்கும் நான் இந்த இடத்திலே எங்களுடைய அஞ்சலிகளை செய்து கொள்கிறேன்

 

தன்னுடைய தாயைப் பார்க்க, உறவினர்களை பார்க்க தன்னுடைய ஊரை பார்க்க துடியாய் துடித்த 20 வயதில் புறப்பட்ட இளைஞன் 53 வயதைக் கடந்து சடலமாக வரவேண்டிய மிகப்பெரிய நெருக்கடியும் ஒரு மன உளைச்சலும் இந்த மண்ணிலே ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய ஆதங்கம்.

 

இது தொடர்பாக நான் மனோகணேசன் எம்.யுடன் சென்று இலங்கையினுடைய வெளியுறவுத் துறை அமைச்சர் அலிசப்ரி மற்றும் நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் பேசி இருந்தேன் அதேபோல இந்தியாவிலே இருக்கிற இலங்கை தூதரகத்தினுடைய தூதரக அதிகாரியையும் கூட தொடர்பு கொண்டு சாந்தனின் வருகைக்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அந்த முயற்சிகள் தோல்வி கண்டிருந்தது. உயிருடன் வீட்டுக்கு வர ஆசைப்பட்ட சாந்தனின் உயிரற்ற உடல் மட்டும்தான் இங்கு வந்தது என்பது மக்கள் மனங்களிலே மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 

எனவே தற்போது இந்தியச் சிறையில் இருக்கின்ற முருகன் ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்து அவர்களுடைய குடும்பத்தோடு அவர்கள் சேர வேண்டும் அதற்கு உயர்ந்த சபையின் ஊடாக தமிழ்நாட்டினுடைய முதலமைச்சரையும் பாரதத்தினுடைய பிரதமரையும் இலங்கையினுடைய அதிகாரிகளையும் அவர்களை இந்த மண்ணிலே தங்களுடைய குடும்பத்தோடு சேர்ந்து வாழக்கூடிய வகையிலே ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

தமிழரசு கட்சி தலைவர் தெரிவை ரத்து செய்ய உடன்படுவதாக அதிபர் சட்டத்தரணி கே.வி தவராசா அறிவிப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுகளை இரத்துசெய்ய உடன்பட்டுள்ளதாக அதிபர் சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்துள்ளார்.

 

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவானது இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், ”கடந்தமாதம் 21 ஆம் மற்றும் 27 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பொதுச்சபை கூட்ட தெரிவுகளை இரத்துசெய்யக்கோரி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

இதன்படி மனுதாரர்களின் கோரிக்கைக்கு அமைவாகவும், கட்சியின் நலன்கருதியும் குறித்த கோரிக்கைகளுக்கு நாங்கள் உடன்பட்டோம். இதற்கு காரணம் இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினை மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினை.

இந்த வழக்கு நீடிக்குமாக இருந்தால் அது சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும். இதன்படி வழக்கானது எதிர்வரும் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றுக்கு முன்னிலையாகியுள்ள நிலையில் தமது கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

 

 

எனினும் எம். எ சுமந்திரன் நீதிமன்றுக்கு முன்னிலையாகாத நிலையில் அவரது நிலைப்பாடு தொடர்பில் கலந்தாலோசித்து முடிவை எடுப்போம்.” என்றார்.

தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவை இரத்துச் செய்யக் கோரிய வழக்கு – நீதிமன்றம் கட்டாணையை நீடித்து கட்டளை !

தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவை இரத்துச் செய்யக் கோரியும், மாநாட்டை தடை செய்யக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றைய தினம் (29) மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது கட்டாணையை நீடித்து கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.,

 

ஜனநாயகத்தின் சிறந்த பண்பின் ஓர் அங்கமாக இருக்கின்ற கட்சியின் யாப்பு இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. கட்சியின் யாப்பு என்பது கட்சியின் கட்டமைப்புக்களினாலும், கட்சியின் நிர்வாகிகளினாலும், கட்சியின் அனைத்து அங்கத்தவர்களினாலும் பின்பற்றப்பட்டேயாக வேண்டும் என்ற கருத்தில் மாற்று கருத்து இல்லை.

 

நீதிமன்றுக்கு நீதி வேண்டி வருவதற்கான அனைத்து உரிமைகளும் உங்களுக்கு இருக்கின்றது. ஆனால் இங்கு வருவதற்கு முன்பு கட்சி மட்டத்தில் தீர்க்க முடிந்த பிரச்சினைகளை அங்கேயே தீர்த்து விடுவதுதான் சிறந்த ஒரு ஜனநாயக பண்பு எனவும் மக்களின் நலன்கருதி இரு தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வருமாறும் யாப்பில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதனை இந் நீதிமன்றில் இருதரப்பும் இணங்கும் பட்சத்தில் தமது வழிமொழிகளை சமர்ப்பித்து சட்ட ரீதியாக இணக்கப்பாட்டை எட்ட முடியும் எனவும் குறித்த கட்டாணையானது தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாகவும் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

 

இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு யாப்பு விதிகளுக்கு முரணானது எனவும், இடம்பெறவுள்ள மாநாட்டுக்கு தடை விதிக்கக்கோரியும் கடந்த 15 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட நீதிமன்றி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன்போது மாநாட்டை நடாத்துவதற்கு இரண்டு வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றானது கட்டானையொன்றினை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இளம் குடும்பம் ரெயில்வே கடவையில் மரணம்! தலைவர் சிறிதரன் தவறணையில் புட்டும் கருவாட்டுப் பொரியலுடனும் தூள் கிளப்புகிறார்!

வடக்கில் புகையிரதக் கடவைகளிலும் வீதிகளிலும் தமிழர்கள் மரணத்தைத் தழுவிக் கொண்டிருக்கின்றனர். யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் வானொன்று மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பயணித்த மூவரில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஜனவரி 14 மாலை இடம்பெற்ற இவ் விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரிழந்துள்ளனர். இறந்தவரின் மனைவியும் குழந்தையின் தாயாருமான படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத கடவை காப்பாளர் இல்லாதமையே இவ்விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு கிழக்கிலும் விபத்துக்கள் பெருமளவு நடைபெறுகின்ற போதும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது பற்றி எவ்வித அக்கறையின்றியே செயற்படுகின்றனர்.

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை நடத்த யாழ். மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு !

எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம், தேசிய மாநாட்டை நடத்த நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவை சேர்ந்த பீட்டர் இளஞ்செழியன் சார்பில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பான மனுவை தாக்கல் செய்திருந்தார்.

தேசிய மாநாடு நடத்துவதாயின், 21 நாட்களுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் என்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்பின் பிரகாரம், எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாடு 21 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படாததால், குறித்த மாநாட்டுக்கு தடை கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனு மீதான அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

இதேவேளை, திருகோணமலையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளை தொடர்ந்து திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மா. கணேசராஜா இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார்.

05 பேர் கொண்ட நிர்வாக சபையின் தெரிவுகள், யாப்பின் படி இடம்பெறவில்லை என்பதால், மாநாட்டை நடத்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரரால் கோரப்பட்டிருந்தது.

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது பொலிஸ் தாக்குதல்- நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தொடங்கி பலர் மீது தாக்குதல் – 5 பல்கலைக்கழக மாணவர்கள் கைது !

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த, கரிநாள் பேரணியில் பொதுமக்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மோற்கொண்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பொது முடக்கத்துக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

 

இந்த நிலையில், இன்று கொழும்பில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வுகளுக்கு எதிராக கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டு அடக்க முற்பட்டனர்.

 

தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமித்தேசிய அரசியல் ஆதரவாளர்களும் போராட்டத்தில் பங்குபற்றினர். அத்துடன் பொது மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சுதந்திர தினத்திற்கு எதிராக வடக்கு கிழக்கில் தமிழர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். பேரணிகளை தடுப்பதற்காக கலகம் அடக்கும் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

நீர்த்தாரை, கண்ணீர் புகை குண்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

தசாப்தங்களாக தொடரும் இன பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் இலங்கையில் 76ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இலங்கை தீவில் வாழும் தமிழர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

 

தமிழர் பிரதேசங்களில் பல இடங்களில் சுதந்திர தின நிகழ்வுக்கு எதிராக பேரணிகள் இடம்பெறுகின்றன.

 

கொழும்பில் காலி முகத்திடலில் நடைபெற்ற எதிர்கட்சி உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லை. பொருளாதார நெருக்கடியின்போது இவ்வாறான நிகழ்வுகள் அவசியமற்றவை என எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

 

தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் இந்நிகழ்வை முற்றாக புறக்கணித்துள்ளன. மலையக தமிழ் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் ஆகியவற்றின் சில பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பற்குபற்றியிருந்தனர்.

 

இதனையடுத்து பொலிசாரால் தண்ணீர் தாரை மற்றும் கண்ணீர் புகை என்பன போராட்டக் காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதுடன் போராட்டக்காரர்கள் மீதும் பொலிசாரால் மிலேச்த்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

அத்துடன் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது பொலிசாரல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இதனைதொடர்ந்து கைதுசெய்யபட்ட மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி குறித்த போராட்டமானது நான்கு மணிநேரமாக இடம்பெற்றதுடன் இருதரப்புக்களின் இணக்கப்பாட்டையடுத்து

 

பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட நான்கு மாணவர்களையும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சட்டவைத்திய அதிகாரியின் முன் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

 

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி தெரிவில் குளறுபடி- ஒத்திவைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் மாநாடு !

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ள மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் பெரும்பான்மையான பொதுச்சபை உறுப்பினர்கள் அப்பதவிக்கு மீள் தெரிவைச் செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பில் தெரியவருவதாவது,

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், மற்றும் 17ஆவது தேசிய மாநாட்டின் பொதுச்சபை கூட்டத்தின் முதலாம் நாள் அமர்வு ஆகியன சனிக்கிழமை (27) திருகோணமலை உப்புவெளியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதன்போது முதலில் நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கான தெரிவு நடைபெற்றது. அச்சயமத்தில் அரியநேத்திரன், ஸ்ரீநேசனை முன்மொழிந்தார். அதனையடுத்து குலநாயகம் தனக்கு அப்பதவியை வழங்குமாறு கோரினார். பின்னர் சுமந்திரன் தனக்கு சிரேஷ்ட துணைத்தலைவர் பதவியை வழங்குவதாக புதிய தலைவர் சிறீதரன் தெரிவித்துள்ளபோதும் தான் பொதுச்செயலாளர் பதவியையே விரும்புவதாக தெரிவித்தார்.

அதனையடுத்து ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக அப்பதவியை ஸ்ரீநேசனுக்கே வழங்க வேண்டும் என்று அரியநேத்திரன் மற்றும் யேகேஸ்வரன் வலியுறுத்தினார்கள். அச்சமயத்தின் கொழும்புக்கிளையின் உறுப்பினர் ஒருவர் மட்டக்களப்புக்கு அப்பதவி வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், அதனை சாணக்கியனுக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதன்பின்னர் சுமந்திரன்;, கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் தலைவர்களாக உள்ள சாணக்கியன், கலையரசன், குகதாசன் ஆகிய ஒருவருக்கு அப்பதவி வழங்குவது பொருத்தமானது என்றுரைத்தார்.

இதற்கிடையில் சிறீதரன் ஸ்ரீநேசனுடன் உரையாடி, ஒருவருடத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டவாறாக அப்பதவியை குகதாசனுக்கு வழங்குவதற்கு இணக்கப்பாட்டை எட்டினார்.

அதனடிப்படையில் பதவிநிலைகள் தெரிவு செய்யப்பட்டன. அதனடிப்படையில், பொதுச் செயலாளராக சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டதோடு, சிரேஷ்ட உபதலைவராக சி.வி.கே.சிவஞானமும் இணை பொருளாளர்களாக ஞா.சிறிநேசன், கனகசபாபதி ஆகியோரும், துணைத் தலைவர்களாக கே.வி.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், பாக்கியசெல்வம் அரியநேந்திரன், வைத்தியர் சத்தியலிங்கம், ஆகியோரும் இணை செயலாளர்களாக திருமதி சாந்தி, சிறிஸ் கந்தராஜா, திருமதி ரஞ்சனி கனகராஜா, சரவணபவன், சாணக்கியன், சிவமோகன் ஆகியோரும் சுமந்திரன் உட்பட 13உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதனையடுத்து பொதுச்சபைக் கூட்டத்தின் முதன் நாள் அமர்வு நடைபெற்றது.  இதன்போது, குகதாசனின் நியமனத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டத்தின் பெரும்பாலான பொதுச்சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக, அரியநேத்திரன், கோடிஸ்வரன், யோகேஸ்வரன் போன்றவர்கள் வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு அமைவாக ஸ்ரீநேசனுக்கே அப்பதவி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தொடர்ந்து ஸ்ரீநேசன், தான் பதவிக்காக போட்டியிட வேண்டும் என்ற மனநிலையில் இல்லாது விட்டாலும் தனது ஆதரவாளர்களும், பொதுச்சபை உறுப்பினர்களும் அப்பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதால் அதல் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

இதனையடுத்து பொதுச்செயலாளர் தெரிவுக்காக வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் அதில் ஸ்ரீநேசன் மற்றும் குகதாசன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும் முடிவானது. தேர்தலை நடத்துமாறு மாவை.சோ.சேனாதிராஜா, சுமந்திரனை நியமித்தார்.

அச்சமயத்தில், சுமந்திரன், மத்திய குழு ஏற்கனவே நிருவாகம் ஒன்றை தெரிவு செய்துள்ளதால் தனியாக பொதுச்செயலாளரை தெரிவு செய்வதற்காக மட்டும் வாக்கெடுப்பை நடத்தமுடியாது. ஓட்டுமொத்தமாக மத்திய குழு அனுமதித்த நிருவாகத்தை அங்கீகரிப்பதா இல்லையா என்பதற்காகவே பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடத்த முடியும். அதில் மத்திய குழு உறுப்பினர்கள் பங்கேற்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

அதற்கு அமைவாக நிருவாகத்தினை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் புதிய தலைவர் சிறீதரனால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு பீற்றர் இளைஞ்செழியன் வழிமொழிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 112வாக்குகளும், எதிராக 104வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகளின் அடிப்படையில் புதிய நிருவாகத்திற்கு பொதுச்சபை அங்கீகாரம் அளித்துள்ளதாக சுமந்திரன் அறிவித்ததோடு கூட்டம் நிறைவடைவதாகவும் அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

இதனையடுத்து, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் பொதுச்சபை உறுப்பினர்கள் மிகக் கடுமையாக புதிய தலைவருடன் தர்க்கம் செய்தனர். புதிய பொதுச்செயலாளரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டனர். அதுமட்டுமன்றி, தமக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக ஸ்ரீநேசனையே நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இந்த நிலைமைகளை சுமூகமாக்குவதற்கு புதிய தலைவர் சிறீதரனும், சேனாதிராஜாவும் முயன்ற போதும் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில், தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை புதிய தலைமையின் மீது ஏமாற்றத்தை அளிப்பதாக அவர்கள் நேரடியாகவே தெரிவித்தனர். இதனையடுத்து சேனாதிராஜா மாநாட்டை ஒத்திவைத்தார்.

அதனையடுத்து கருத்து வெளியிட்டுள்ள, பொதுச்சபை உறுப்பினர்கள், பொதுச்செயலாளர் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது பொதுச்சபைக்கு வருகை தந்திருந்த 115 உறுப்பினர்கள் அரங்கிலிருந்து வெளியேறியிருந்தார்கள். அத்துடன் அரங்கிற்கு வருகை தந்திருந்த பொதுச்சபை உறுப்பினர்களின் ஆதரவாளர்களில் சிலரும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், பொதுச்செயலாளர் தொடர்பில் வாக்கெடுப்பை நடத்துமாறே கோரியபோதும் அது திசைதிருப்பப்பட்டு நிருவாகத்திற்கன அங்கீகரம் தொடர்பான வாக்கெடுப்பாக மாற்றப்பட்டுள்ளது.

ஆகவே இந்த முடிவினை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக புதிய தலைவர் ஸ்ரீநேசனை பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிக்க வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் பொதுச்செயலாளர் பதவிக்காக மீண்டும் பொதுச்சபையில் வாக்கெடுப்பு உரிய முறையில் வாக்கெடுப்பை நடத்த வேண்டும். இந்தச் செயற்பாடுகள் நடைபெறாது, தற்போது மேற்கொள்ளப்பட்ட தெரிவுகளை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அந்த தெரிவுகளுடன் மாநாடு நடைபெற்றால் அதில் பங்கேற்கப்போவதுமில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டின் பொதுச்சபைக் கூட்டத்தின் முதலாவது நாள் அமர்வின்போது பதவிநிலைத் தெரிவுகள் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தக்கம் கைகலப்பில் முடிந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொதுச்சபை உறுப்பினர்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.