சிறை உடைப்பு

சிறை உடைப்பு

பாகம் 13: மட்டக்களப்பு சிறை உடைப்பா? சிறைத் திறப்பா?

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 12 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 13

தேசம்: மட்டக்களப்பு சிறை உடைப்பு பற்றி பேசிக்கொண்டிருக்கிறம். நீங்கள் ஆயுதங்கள் எல்லாம் எடுத்து சேகரித்திருந்தா லும் கூட, ஆயுதங்கள் எதுவும் பெரிசா பயன்படுத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். சிறைக்குள் என்ன நடந்தது?

அசோக்: ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. உள்ளுக்குள்ள ரிவால்வர் தான் அனுப்பப்பட்டது. ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் தங்களுக்கு தேவையானதை அனுப்பி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். புளொட்டில் இரண்டு ரிவால்வர் அனுப்பப்பட்டது. வெளியில கூடுதலா சொட் கண்கள்தான். அடுத்தது பால் ரின்னில் கிரானைட் மாதிரி ஜலற்றின் வைத்து செய்யப்பட்ட திரிவைத்த எறி குண்டு. திரியில் நெருப்பு பற்ற வைத்து எறியவேண்டும். ஆனால் இவை எதையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் வரவில்லை.

சிறைக்குள் இருந்தஎல்லோரும் கூட்டாக இணைந்துதான் முயற்சி எடுத்தாங்க ராஜன் டக்ளஸ் தேவானந்தா, பனாகொடை மகேஸ்வரன் போன்றவங்க முக்கியமானவங்க. பலருக்கும் பொறுப்புக்கள் பிரித்துப் பிரித்து கொடுகப்பட்டன. உதாரணமாக டேவிட் ஐயாவிடமும் , டொக்டர் ஜெயகுலரா ஜாவிடம் மும் கட்டிப்போடப்படும் ஜெலர்களுக்கு வாயில் பிளாஸ்டர் ஒட்டும்வேலை பொறுப்பு கொடுகப்பட்டது. இப்படித்தான் எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்தது.

தேசம்: ராணுவ பாதுகாவலர்கள் மாறுகிற நேரத்தில்தான் சிறை உடைப்பு நடந்தது..

அசோக்: ஓம், . குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு தடவைதான் சிறையை சுற்றியுள்ள வீதிகளில் பொலிஸ் அல்லது இராணுவம் ரோந்து வரும் . அந்த இடைவெளிக்குள் சிறை உடைப்பு செய்யவேண்டும்.

அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள்ள நடந் ததால எந்தவொரு சிக்கலும் ஏற்படவில்ல. சிறைக்குள்ள பிரச்சனையில்லை. தெரிந்த ஜெயிலர்ஸ் தானே அதனால் பெரிய பிரச்சனைகள் ஏற்படவில்லை.

தேசம்: அப்போ சிறைப் பாதுகாவலர்கள் சிறைக் கதவுகளின் சாவிகளை உங்களுக்குத் தந்து…..

அசோக்: இல்லை இல்லை உள்ளுக்க ரெண்டு மூன்று ஜெயிலர்ஸ் தான் சப்போர்ட் பண்ணினார்கள். மற்ற ஜெயிலலர்களை பிடித்து கட்டிப்போட்டு அவர்களிடமிருந்த சாவிகளை பறித்து ஒவ்வோரு செல்களும் திறக்கப்பட்டன. அதனோட நாங்க செய்த சாவிகளும் பயன்படுத்தப்பட்டன முழு ஜெயிலர்சையும் சப்போர்ட் பண்ணுவாங்க என்று எதிர்பார்க்க இயலாதுதானே.

தேசம்: எல்லாருமே தமிழ் காவலர்களா

அசோக்: சிங்கள காவலர்களும் இருந்தவங்க. சிறை உடைக்கப்பட்டு எல்லாரும் வெளியேறியவுடன், அங்கு சிறை வைக்கப்படடிருந்த சாதாரண கைதிகள் அவங்களும் வெளியேறி தப்பிட்டார்கள். அரசியல் கைதி அல்லாத, வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட கைதிகள் முழுப்பேரும் வெளியேறி போய்விட்டார்கள். தமிழ்க் கைதிகளுக்கு சிறை இருந்த இடம் பற்றி, அந்த சுற்றாடல் பற்றி ஓரளவு தெரியும். அவங்க தப்பி போயிற்றாங்க. சிங்களக் கைதிகளுக்கு இடம் தெரியாது. மட்டக்களப்பு ஒரு தீவு. மேலிருந்து பார்த்தீர்களென்றால் மட்டக்களப்பு என்பது வாவிகளால் சூழப்பட்ட ஒரு பிரதேசம். மட்டக்களப்பை புளியந்தீவு என்றும் சொல்வதுண்டு. மட்டக்களப்பை ஏனைய பிரதேசங்களோடு இணைப்பது பாலங்கள்தான்.

தேசம்: தமிழ் கைதிகள் எல்லோரும்…

அசோக்: தமிழ் கைதிகள் பாலம் எல்லாம் தாண்டி தப்பி போயிட்டாங்க. தோணிகள் பயன்படுத்தி ஆற்றைக் கடந்தும் தப்பிவிட்டாங்க. சிங்கள சிறைக் கைதிகளுக்கு ஒன்றும் செய்ய இயலாமல் போய் விட்டது. போலீஸ் அவங்க முழுப் பேரையும் அரெஸ்ட் பண்ணி விட்டது.

தேசம்: வெளியேறின அரசியல் கைதிகளை எப்படி வெளில கொண்டு போறீங்க

அசோக்: அரசியல் கைதிகளை வெளியில கொண்டு போறதுக்கு ஈபிஆர்எல்எஃப் தோழர் குன்சி தங்களுக்குரிய ஏற்பாட்டை செய்திருந்தார். தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் தங்களுக்குரிய ஆட்களை ஏற்பாடு செய்திருந்தார். புளொட்டுக்கான ஏற்பாட்டை பார்த்தன் செய்தது. பனிச்சம் கேணியிலிருந்து, இந்தியா கொண்டு போற வரைக்கும் எல்லா பாது காப்பையும் தோழர் பார்த்தன்தான் செய்தார்.

தேசம்: அதாவது சிறை உடைத்த பிறகு வெளியில வந்தவர்களைக் கொண்டு போற வேலைகளைப் பார்த்தன் செய்தது.

அசோக்: பனிச்சம்கேனியிலிருந்து இருந்து திருகோணமலைக்கு கொண்டு போய், அங்க இருந்து இந்தியாவுக்கு அனுப்புற வேலைகளை பார்த்தன், ராதாகிருஷ்ணன், ஜெயகாந்தன், செல்வன் இவங்கதான் செய்தாங்க. நேரடியாக இந்தியா போகவில்லை. பல இடங்களில் தங்க வைக்கப்பட்டு, கொஞ்ச கொஞ்ச பேராக பின் தளத்திற்கு அனுப்பப்பட்டாங்க. மாதகல் ஊடாகத்தான் அனுப்பப்பட்டாங்க. இதற்கான போக்குவரத்து பொறுப்புக்களை தோழர் குமரன் செய்தார். குமாரதுரை என்று ஒருத்தர் இருந்தவர். கிளிவெட்டியை சேர்ந்தவர். அவருடைய உதவியும் இருந்தது.

டேவிட் ஐயா சிறைக்குள்ளிருந்து எல்லாரும் போகேக்க அவரால வெளியேற முடியவில்லை. சிறையில் இருந்து வாகனத்தில் இவங்க எல்லாரும் ஏறும்போது, அவரைக் கவனிக்கவில்லை. இவர் ரோட்டில நின்றுட்டார். இவங்க எல்லாரும் போனதற்குப் பிறகு தனிமைப்பட்டுட்டார். பிறகு ஜெயிலில் இருந்து தப்பிய சாதாரண கைதிகள் இரண்டு பேர் , டேவிட் ஐயாவை தற்செயலா கண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் டேவிட் ஐயாவை கொண்டு பாதுகாப்பா வச்சு, ஒரு பாதரிட்ட ஒப்படைத்து பாதர் தான் அனுப்பி வைத்தவர்

தேசம்: இந்தியாவுக்கு அனுப்பி வைத்தவரோ?

அசோக்: இல்ல எங்கட தோழர்களிடம் ஒப்படைத்து நாங்க பொறுப்பெடுத்தம்.

தேசம்: இந்த சிறை உடைப்புக்கு பிறகு உங்களுக்கு உதவி செய்த தமிழ் சிறைக்காவலர்கள் இருக்கினம் தானே அதுக்கு ஏதாவது பிரச்சனை வந்ததா

அசோக்: ஒரே ஒருத்தருக்கு பிரச்சனை வந்தது, கிருஷ்ணமூர்த்தியை ஐடிடென்டி பண்ணிட்டாங்க. அவர் பிறகு புளொட்டுக்கு வந்துட்டார். பிறகு வெளியிலிருந்து உதவி செய்த மாசிலாமணி அவருக்கும் பிரச்சினை வந்து, அவரும் திரும்ப புளொட்டுக்கு வந்துட்டார். இவர்கள் பற்றி முன்னர் கதைத்திருக்கிறன்.

அதுல என்னை விசாரித்த டிஎஸ்பி மகேந்திரன் அவரோட உதவியும் கொஞ்சம் இருந்தது. இல்லாட்டி காந்திய வாகனம் எல்லாம் உடனே பிடிபட்டிருக்கும். பிறகு சிங்கள பொலிசாருக்கு தெரிய வந்து, காந்தீயமும் தடை செய்யப்பட்டு, வாகனங்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன.

தேசம்: சிறை உடைப்பில் காந்திய வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது

அசோக்: காந்திய வாகனங்கள்தான் பயன்படுத்தப்பட்டது. வாகனங்களை பயன்படுத்திட்டு, அந்தந்த இடத்தில் விட்டுட்டு போயிட்டாங்க. அவற்ற திருப்பி கொண்டு வரவில்லை. அடுத்த நாள் போலீஸ் போகும்போது, டிஎஸ்பி மகேந்திரனுக்கு தெரியும் இது காந்திய வாகனங்கள் என்று. அவர் காந்தியதுக்கு அறிவித்து உடனடியாக வாகனங்களை எடுக்க சொல்லி, பிறகு வாகனங்களை அந்த இடத்திலிருந்து எடுத்தார்கள்.

தேசம்: வேற அமைப்புகளில் இருந்த முக்கியமான ஆட்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? குறிப்பாக விடுதலை புலிகள் இருந்த முக்கியமான ஆட்கள்

அசோக்: சென்ற அத்தியாயத்தில இதுபற்றி கதைத்திருக்கிறம். விடுதலைப்புலிகள் என்று அதன் ஆதரவாளர்கள் என்று நித்தியானந்தன், நிர்மலா , டாக்டர் ஜெயகுலரா ஜா பாதர் சிங்கராயர் பாதர் சின்னராஜா, பாதர் ஜெயதிலகராஜா இவங்க இருந்தாங்க. வேறு ஆட்கள் என்று கோவை மகேசன் டாக்டர் .தர்மலிங்கம் பெயர்கள் ஞாபகம் இல்லை இருந்தாங்க. இவங்க முன்று பேரும் சிறை உடைப்புக்கு முன்னரே பிணையில் வெளியில் வந்துட்டாங்க. நான் நினைக்கிறேன் பாதர் சிங்கராஜரும் பிணையில் வெளியில் வந்துவிட்டார் என விடுதலைப் புலிகளுக்கு தாங்கள் தனித்துவமாக சிறை உடைக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தது என்று நினைக்கிறேன். சிறை உடைப்பில் அவங்கள் சப்போர்ட் பண்ணல.

தேசம்: இவர்களெல்லாம் எப்படி புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தார்கள் ? . இவர்கள் சிறை உடைப்பில் வெளியில் வரவில்லையா?

போராட்ட வரலாற்றை நீங்கள் அவதானித்தால் புலிகள் மோசமான கருத்தியல் கொண்டவர்கள். வலது சாரிய நிலவுடமைச்சிந்தனைகளின் எல்லா எச்சங்களையும் கொண்டவர்கள்.முற்போக்கான சிந்தனைகள் எவையும் அவர்களிடம் இருந்ததில்ல. ஆனா இந்த பாதர்களும், நிர்மலா , நித்தியானந்தன் சேர் போன்றவர்கள் புலிகளைத்தான் அதரிச்சாங்க. எல்லாம் வர்க்க கூட்டு. இதைப்பற்றி முன்னர் சொல்லியிருக்கிறன்.

நிர்மலா தவிர்ந்த மற்ற இவங்க எல்லோரும் சிறை உடைப்பில் வெளியில் வந்துட்டாங்க. நிர்மலா வரவில்லை. . புலிகள் சம்பந்தப்பட்ட ஆட்களை கொண்டு செல்லும் பொறுப்பை பரமதேவா, புளோட் வாசுதேவாவின்ற தம்பி, இவர் புலிகளில் இருந்தார். மட்டக்களப்பு சிறையில் இருந்து சிறை உடைப்புக்கு முன்னர் பிணையில் வெளியில் வந்திருந்தார். இவர்தான் பொறுப்பெடுத்தவர். இவர்களை பாதுகாத்து இந்தியாவுக்கு அனுப்பியதில் தம்பிரா ஜா அண்ணரும் முக்கியம் என நினைக்கிறன். இப்போது லண்டனில் இருக்கிறார்.சிறைக்குள் நிர்மலாவை காப்பாற்றி வெளியில் கொண்டு வரும் பொறுப்பை எடுத்தவர் புளொட் வாமதேவன். அவர் விட்ட தவறினால் , அவங்க வெளியேற முடியல்ல.
பிறகுதான் புலிகள் தனியாக அவரை மீட்டாங்க.

தேசம்: அதற்குப் பிறகுதான் உங்கட மத்தியகுழு உருவாக்கப்பட்டது.

பாகம் 12: சிறைக்குள் நடந்த படுகொலைகளும் சிறைக்கு வெளியே நடந்த படுகொலைகளும் – படுகொலை அரசியலை தேர்ந்தெடுத்த இன்றைய மார்க்ஸியர்கள்!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 12 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 12

தேசம்: 83 ஜூலைக் கலவரம். இது இலங்கையில் தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமான காலப்பகுதி. விடுதலை அமைப்புகள் சாதாரண தாக்குதல்களை ஒரு ராணுவத்தையும் போலீசையும் அடித்து துவக்கு பறித்த நிலைமை போய், மிகத் திட்டமிட்ட ஒரு தாக்குதல் 83 ஜூலை 23 இரவு நடக்குது. அந்தத் தாக்குதலில் தான் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களுடைய உடல் மறுநாள் மாலை கொழும்புக்கு கொண்டு வரப்படுகிறது. அதைத்தொடர்ந்து கலவரம் ஆரம்பிக்குது. அந்த காலகட்டத்தில் இந்த விடயங்களை நீங்கள் எப்படி அறிகிறீர்கள்? என்ன மாதிரி அந்த காலகட்டத்தில் உங்கள் உணர்வுகள் இருந்தது? எப்படி நீங்கள் அதை உள்வாங்கிக் கொண்டீர்கள்? எங்கே இருந்தீர்கள் நீங்க எந்த செய்திகளைக் கேள்விப்படும்போது?

அசோக்: ஜூலை இனக்கலவரம் ,படுகொலைகள் நடக்கும்போது எனது கிராமமான களுதாவளையில்தான் நான் இருந்தேன். அது ஒரு உணர்ச்சி கொந்தளிப்பான கவலையான மனநிலையை எங்களுக்கு தந்தது. சிங்கள அரசு மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அன்றைக்கு பிலிப்பைன்ஸில் இருந்து வந்த வெரித்தாஸ் வானொலியில் தான் இந்த செய்திகளை அதிகமாகக் கேட்கக்கூடிய தரக்கூடியதாக இருந்தது. வேற வானொலிகளும் இல்ல. ஊடகங்களும் பெருசா இல்லைதானே கிழக்கு மாகாணத்தில். ஒன்றேயொன்று வெரித்தாஸ் வானொலி தான்.

தேசம்: அந்த நேரம் முக்கியமாக இருந்தது வெரித்தாஸ் வானொலி, பிபிசி தமிழோசை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்திகள்…

அசோக்: அன்றைக்கு இனக்கலவரம் பற்றிய ஒரளவு உண்மையான செய்திகளை கேட்கிறதென்றால் வெரித்தாஸ் வானொலியில் தான் கேட்க வேண்டும். அடுத்தது டாக்டர் ராஜசுந்தரம் படுகொலை என்பது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் காந்தியத்தில் இருந்தவர்கள். அவரோடு பழகியவர்கள். அந்த வெலிக்கடை படுகொலை என்பது உணர்வுபூர்வமான கவலையை அளித்தது. எங்களுக்கு மனக் கொந்தளிப்பை கொடுத்தது. 53 பேர் கொல்லப்பட்டு, பெயர்களெல்லாம் அறிவித்தார்கள். வெரித்தாஸ் வானொலியில் அதை விவரமாக சொன்னார்கள். ஒரு ஊடகத்தால் எத்தகைய தாக்கத்தை கொடுக்கமுடியும் என்பதை அக்காலங்களில உணர்ந்து கொள்ளமுடிந்தது. உண்மையிலேயே அந்த இரவுதான், நிறைய பேரை இயக்கங்களுக்கு போக வேண்டும் என்ற உணர்வை கொடுத்ததும், சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக போராட வேண்டும் சிந்தனையை கொடுத்ததும் அதுதான். இந்த படுகொலைகள் எங்க கிராமத்தில் இளைஞர்கள் மக்கள் மத்தியில் பெரிய சோகத்தை கோபத்தை, கொடுத்தது. மற்றக் கிராமங்களைப் பற்றி தெரியல. எங்க கிராமத்தில் அரசியல், இலக்கியம், சமூக அக்கறை கொண்ட குருப் ஒன்று இருந்தது ஆரம்பத்திலிருந்து. அவங்களுக்கு இயக்கங்களுக்கு போவதற்கான தூண்டுதலாக இது இருந்தது. பிறகு எங்கட கிராமத்தில் இருந்து நிறைய தோழர்கள் புளொட்க்கு வந்தார்கள்.

தேசம்: அந்த சம்பவத்துக்குப் பிறகு..

அசோக்: எங்கட கிராமத்து பையன்கள் இனவாத தாக்கத்தையோ, இனவாத ஓடுக்குமுறைகளையோ நேரடியாக அனுபவிக்காதவர்கள். கருத்தியல் சார்ந்து பல்வேறு ஒடுக்குமுறைகள் பற்றி அறிந்திருந்தார்களேயொழிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படாத ஆட்கள். அவர்களை சிந்திக்க வைத்தது இப்படியான சம்பவங்கள் தான்.

தேசம்: தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தில் நீங்கள் முக்கியமான உறுப்பினராக இருக்கிறீர்கள். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பாரிய தாக்குதல்கள் எதையும் பெரிய அளவில் செய்யவில்லை. நான் நினைக்கிறேன் விமானப்படை தாக்குதல் ஒன்றுதான் தமிழிழ மக்கள் விடுதலைக் கழகம் செய்தது. அதுவும் திட்டமிடப்படாத தாக்குதல் என்று நினைக்கிறேன்.

அசோக்: யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையம், குறிகட்டுவான் கடல்படையினர் மீதான தாக்குதல் ஆரம்பத்தில் நடந்தது. இந்த தாக்குதல்கள் விமர்சனங்களுக்கு உரியவை.

தேசம்: அப்படியான சூழலில விடுதலைப் புலிகள் இப்படி ஒரு பாரிய தாக்குதலை செய்தது சம்பந்தமா கழகத்தில் எப்படி உணரப்பட்டது. கழகமும் இப்படியான தாக்குதல்களை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடுகள் முன்தள்ளப்பட்டதா?

அசோக்: தனிநபர் பயங்கரவாதம், தனிநபர் நடவடிக்கைகள், ராணுவத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக தெளிவான பார்வை, சுத்த ராணுவக்கண்ணோட்டத்திக்கு எதிரான கருத்தியல் சார்ந்த அரசியல் பார்வை எங்கள் பலரிடம் இருந்தது. இந்தத் தாக்குதல் வெறுமனே அரசாங்கத்தை பலமடையச் செய்யும் என்பதும், எங்களின் போராட்டத்தை பலவீனமடையச் செய்யும் என்பதும், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை வளர்ப்பதற்கு பயன்படுத் தப்படும் என்பதும் தெரியும். எங்கட போராட்டம் மக்களை அனுசரிப்பதனூடாக, அரசியல் மயப்படுத்தப்பட்ட மக்கள் போராட்டத்துக்கூடாகத்தான் கொண்டு வரவேண்டுமென்று நாங்க விரும்பினம். எங்களுக்கு சீனா, வியட்நாம், கியூபா போராட்டங்களும் படிப்பினைகளும் முன்மாதிரியாக இருந்தது தானே.

தேசம்: அந்த நேரம் இவைகள் பற்றி எல்லாம் நீங்கள் வாசித்திருக்கிறீர்களா…

அசோக்: ஓம். அனேகமாக கழகத்தில் நிறைய தோழர்களிடம் அரசியல் வாசிப்பு இருந்தது. மக்கள் இராணுவம், முண்ணனிப்படை பற்றியெல்லாம் அரசியல் அறிவு ஒரளவு கொண்டவர்களாக நாங்க இருந்தோம். எங்களுக்கு தெரியும் இப்படியான தாக்குதல்கள் அரசாங்கத்தை பலமடைய வைக்கும். எங்களை பலவீனமடைய வைக்கும் என்று. அதுல தெளிவா இருந்தனாங்கள். புலிகள் செய்றதால நாங்களும் செய்ய வேண்டும் என்ற அபிப்ராயம் எங்களிடம் இல்லை. ஆனா புளொட்டில் பல தோழர்களிடம் புலிகளைப்போல் தாக்குதல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அடுத்தது மக்கள் போராட்டம் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தனாங்கள். காந்தியமும் அதுதானே. மக்கள் மயப்படுத்தல்… காந்தியத்தை புளொட் பயன்படுத்தியதற்கான காரணமும் அதுதானே. காந்தியத்துக்கூடாக துரிதமாக மக்களை அரசியல் மயப்படுத்தலாம், அதை அடிப்படையாக பயன்படுத்தலாம் என்ற போக்குத்தான் எங்களிடம் இருந்தது. இது தவறான போக்கு என்பது வேறு.

இதுபற்றி முன்னமே கதைத்திருக்கிறம். யாழ்ப்பாணம் தாண்டிய ஏனைய பிரதேசங்களில் அரசியல் பாசறைகள் நிறைய நடத்தியிருக்கிறோம். அரசியல் வாசிப்புகள் நிறைய இருந்தது. அப்போ ஓரளவு எங்களுக்கு தெரிந்தது இவ்வாறான தாக்குதல்கள் எந்தவிதமான விடுதலையையும் பெற்றுத் தராது என்று. இயக்கங்கள் எல்லாத்தையும் வென்று தரும் என்ற எண்ணப்பாட்டை மக்களிடம் உருவாக்கி, மக்களை வெறும், பார்வையாளர்ளாகவும் ஆக்கிவிடும் என்று நினைத்தோம். மக்கள் மயப்படுத்தப்பட்ட முழுமையான போராட்டம் அவசியம் என்பதில் மிகக் கவனம் இருந்தது.

அடுத்தது விடுதலைப்புலிகள் தொடர்பான விமர்சனப் பார்வை எங்களிடம் இருந்தது. இவ்வாறான தாக்குதல்களைத்தான் அவர்கள் செய்வார்கள் என்று. அவர்களிடம் மக்களை அரசியல் மயப்படுத்துவது என்ற சிந்தனை இருக்கவில்லை தானே. அவங்கள் சுத்த இராணுவாதம் கொண்ட ஒரு மரபு ரீதியான ராணுவமாகத்தான் வளர்ந்து வந்தார்கள்.

தேசம்: அதை நீங்கள் அந்தக் காலகட்டத்தில் உணர்ந்திருந்தீர்களா?

அசோக்: அந்தக் காலகட்டத்திலேயே நாங்கள் தெளிவாக உணர்ந்து இருந்தம். புலிகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் இருந்தது. புலிகளோடு இருந்த ஆட்கள் தானே, புளொட்டுக்குள்ள இங்கே வந்தவர்கள். அவர்கள் புலிகள் பற்றிய பல விமர்சனங்ளை சம்பவங்களை சொல்வாங்க.

தேசம்: புலிகளுக்கு உள்ளேயே நடந்த கொலைகள் தொடர்பாய் அது சம்பந்தமாக என்ன அறிந்திருந்தீர்கள்?

அசோக்: கூடுதலாக புலிகளுக்குள் இருந்து வந்தவர்களுடைய அபிப்பிராயம்… அங்க நடந்த தனிநபர் படுகொலைகள் தொடர்பாக கடும் விமர்சனம் இருந்தது. கணேசய்யர், நாகராஜ் வாத்தி, உமாமகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம், கண்ணன் நிறைய பேரிட்ட கொலைகள் தொடர்பாக மிக அதிருப்தி இருந்தது. புலிகளுடைய தனிப்பட்ட தாக்குதல்கள், தனிநபர் பயங்கரவாதம். பிரபாகரனின் தன்னிச்சையான போக்குகள்… கொலை செய்யப்பட்ட முறைகள்…

தேசம்: சில கொலைகளை சொல்லுங்கள்

அசோக்: பற்குணம், மட்டக்களப்பு மைல்கல், கண்ணாடி பத்மநாதன்… அது ஒரு நீண்ட கொலை பட்டியல். எல்லாம் சந்தேகத்தின் அடிப்படையிலும், இந்த தனிநபர் தாக்குதலுக்கு ஊடாக, படு கொலைகளுக்கு ஊடாக இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லலாம் என்ற ஒரு நம்பிக்கையும் தான். அது கடைசி வரைக்கும் நீடிக்குது.

தேசம்: இந்தக் கொலைச் சம்பவங்கள் நடந்துகொண்டு இருக்கேக்கையும் நீங்கள் முதலில் குறிப்பிட்ட மாதிரி ராகவன், நித்தியானந்தன், நிர்மலா எல்லாரும் அப்பவும் விடுதலைப் புலிகளோடு தான் இருக்கினமா?

அசோக்: நித்தியானந்தன், நிர்மலா அந்தக் காலகட்டத்தில் இல்லை. அதுல ராகவன் மாத்திரம்தான் ஆரம்பகால உறுப்பினராக மிக நெருக்கமாக பிரபாகரனோடு இருந்து வாரார். இவர்கள் பிற்காலத்தில்தான். நான் நினைக்கிறேன், 80க்கு பிற்பாடுதான் நிர்மலா, நித்தியானந்தன் எல்லாம் அவர்களுடைய ஆதரவாளர்களாக மாறியிருப்பார்கள் என. இவர்களும் ஒரு முழுநேர ஊழியர்கள் இல்லை தானே. ஆதரவு தளத்தை வழங்கியவர்கள். பிறகு புலிகளுக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைக்குள்ளே போனார்களேயொழிய, முழு நேர உறுப்பினர்களாக இருக்கவில்லை. கருத்தியல் சார்ந்து அறிக்கைகள் எழுதுவதற்கு, கருத்தியல் சார்ந்து விளக்கம் கொடுக்கிறதுக்கு, நியாயப்படுத்துவதற்கு, ஒரு கிரவுட் தேவைதானே. அதற்கு இவங்க தேவைப்பட்டாங்க. அந்த நேரத்தில உணர்வுகள் என்ற ஒரு பத்திரிகையும் யாழ்ப்பாணத்தில புலிகள் வெளியிட்டவர்கள். அப்ப அதற்கு கட்டுரை எழுதுவதற்கான தேவையும் இருந்திருக்கும். ஆனா இவர்கள் சிறையில் இருந்து தப்பி இந்தியா சென்ற பின் எல்ரீரீஈயில் முழு நேரமாக வேலை செய்கிறாங்க.

ஒரு சந்தேகம் என்னிடம் உண்டு. அந்த நேரத்தில ஈபிஆர்எல்எப், ஈரோஸ், புளொட் என மார்ச்சியம் பேசிய இயக்கங்கள் இருக்கும் போது, வலதுசாரித்தனமும், தனிநபர் பயங்கரவாதத்தையும், படுகொலைகளையும் தங்கள் அரசியலாக் கொண்ட புலிகளுக்கு இவங்க எப்படி ஆதரவளிச்சாங்க என்று. ராகவனை விட்டுத்தள்ளுங்கள். அவர் அன்று தொடக்கம் இன்று வரை அதிகார நலன்களோடு, அந்த நபர்களோடு கூட்டுச்சேரும் ஒரு அடிமை மனநிலை கொண்டவர். அப்பவும் சரி இப்பவும் சரி நேர்மையற்ற மனிதர் அவர். நான் அவரை அறிந்த வரை சுயமான அரசியல் தேர்வு அவரிடம் இருந்ததில்லை. இதைப்பற்றி முன்னமே கதைத்திருக்கிறன். ஆனா நித்தியானந்தன் சேர் , நிர்மலா அப்படியானவர்கள் அல்ல. அரசியல் கருத்தியல் சார்ந்து சிந்திக்கக் கூடியவர்கள். அவர்கள் புலிசார்பு நிலையை எடுத்ததிற்கான காரணங்கள் இருக்கக்கூடும். இவர்கள் எல்லோருடனும் உரையாடல் செய்ய வேண்டும். புலிகள் படுகொலைகளையும், அராஜ கங்களையும் செய்த காலங்களில் இவங்க புலிகளோடு இருந்திருக்காங்க.

தேசம்: 83 ஜூலை படுகொலையில் கொல்லப்பட்ட உறுப்பினர்களில் யாரை யாரையெல்லாம் அறிந்து வைத்திருந்தீர்கள்?

அசோக்: டாக்டர் ராஜசுந்தரம் அவருடன் மாத்திரம் நெருக்கம் இருந்தது.

தேசம்: காந்தியத்துடன் இருந்தபடியால்…

அசோக்: ஆனால் நிறைய பேரை கேள்விப்பட்டிருக்கிறோம். நடேசானந்தன், குட்டிமணி, ஜெகன், கிருஷ்ணகுமார் என்று பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பாக நேரடி உறவு இல்லையே ஒழிய, அவங்களுக்கும் எங்களுக்கும் உணர்வுபூர்வமான நெருக்கம் இருந்தது. எங்கட தோழர்கள், போராளிகள், எங்களுக்காக சிறைக்கு சென்றவர்கள் என்ற உணர்வு ஒன்று இருந்தது. மற்றது படுகொலை செய்யப்பட்ட முறைகளும் வெளிவர வெளிவர பெரிய தாக்கம் வந்தது. குட்டிமணி மீது நடத்தப்பட்ட அந்த கொடுரமான படுகொலை, அது ஒரு இனவாதத்தின் உச்சகட்டமாக தான் நாங்க பார்த்தோம். இனவாத அரசின், ஒரு அதிகார வர்க்கத்தின் துணையோடு நடந்த திட்டமிட்ட படுகொலைகள். பேரினவாத அதிகாரவர்க்கத்தின் இனவாத படுகொலையாக தான் பார்த்தோம்.

தேசம்: இந்தப் படுகொலைகளைத் தொடர்ந்து எவ்வாறான அரசியல் நடவடிக்கைகளை இயக்கங்கள் கையில் எடுத்தது?

அசோக்: எல்லா மட்டங்களிலும் இலங்கை அரசு மீது இருந்த கோபம், கொந்தளிப்பு இயக்கங்களுக்கு சாதகமாக அமைந்ததுவிட்டது. இளைஞர்கள் மத்தியில், இயக்கங்களின் அரசியல் அற்ற வெறும் உணர்ச்சியூட்டல் நடந்தது. இது இயக்கங்கள் வீங்குவதற்கும், போராளிகளின் எண்ணிக்கை கூட்டுவதற்கும் சாதகமாக போய்விட்டது. அரசியல் சார்ந்து நடக்கவில்லை. வெறும் சிங்கள மக்களுக்கு எதிரான பிரச்சாரமாக, ஒரு மனநிலையை கட்டமைக்கிற மாதிரி சில இயக்கங்கள் செய்யத் தொடங்கிற்று. அது இன்னொரு இனவாதம்தானே. இளைஞர்கள் வர வர பின்தளத்திற்கு அனுப்பபட்டடார்களே தவிர தேர்வுகள், பரிசீலனைகள் எதும் இருக்கல்ல. பிறகு இந்தியாவும் டிரெய்னிங் கொடுக்க தொடங்கிவிட்டது.

தேசம்: வெலிக்கடை சிறைச்சாலை தொடர்ந்து கொழும்பில் கலவரம் வெடிக்குது. கொழும்பிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வடக்கு-கிழக்குக்கு வாரார்கள். அவர்களுடைய பராமரிப்பு அந்த விடயங்களில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்களா? அல்லது இயக்கங்கள் அவர்களை பராமரிக்கிறதில் புனர்வாழ்வளித்து ஈடுபட்டிருக்கின்றனவா?

அசோக்: ஓம். வவுனியா முல்லைத் தீவுக்கு வந்த நிறையபேருக்கு நாங்கள் பொறுப்பெடுத்து செய்தம்.

தேசம்: எவ்வாறான வேலைத்திட்டங்கள்? நீங்கள் அல்லது அந்த இயக்கங்கள் காந்தியம் ஈடுபட்டு இருக்குதா?

அசோக்: அதுல பிரச்சனை என்னவென்று கேட்டால், வவுனியா முல்லைத்தீவில் காந்தியம் தடை செய்யப்பட்டு விட்டது. வவுனியாவில் நடந்த பிரச்சனைக்கு பிறகு டேவிட் ஐயா ஆட்கள் கைது செய்யப்பட்டவுடன் காந்தியம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு எல்லாத்திலயும் தடைசெய்யப்பட்டது. மட்டக்களப்பில் இயங்கினது.

அங்க எந்த தடையும் இல்லை. அதற்கு என்ன காரணமோ தெரியல. சிலவேளை, வேறு பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததோ தெரியல. அங்க இயங்கியது. மட்டக்களப்பில் சகல வேலைத் திட்டங்களும் நடந்தது. குடியேற்றங்கள், சத்துணவு திட்டம், காந்தியத்தின் சகல வேலைத் திட்டங்களும் கிழக்கு மாகாணத்தில் நடந்தது. குறிப்பாக மட்டக்களப்பில்.

தேசம்: கிட்டத்தட்ட மட்டக்களப்பில் நடந்த காந்தியத்தின் செயற்பாடு என்பது, புளொட்டின் செயற்பாடு தான்…

அசோக்: ரெண்டும் இணைந்த செயற்பாடு தான். ஆனால் நாங்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மட்டக்களப்பு காந்திய செயற்பாடுகளுக்கு நாங்கள் போகவில்லை. நாங்கள் தேடப்படுற ஆட்கள் தானே. நான் தேடப்படுறேன், ஈஸ்வரன் தேடப்படுது. வாசுதேவா மாத்திரம்தான் பிணையில் வரக்கூடியதாக இருந்தது.

தேசம்: வெலிகடை சம்பவத்தின் போது கொல்லப்பட்டவர்கள் தவிர வேற யார் யார் சிறையில் இருந்தவை…

அசோக் : நிறையப் பேர் இருந்தவங்க . எல்லா இயக்கங்களையும் சேர்ந்த போராளிகள், இயக்க ஆதரவாளர்கள், பொதுமக்கள் என கைதுசெய்யப்பட்ட பலரும் இருந்தனர். உயிர் தப்பிய அவங்களைத்தான் மட்டக்களப்பு சிறைக்கு மாத்திராங்க.

தேசம் : அதற்குப் பிறகும் கைதுகள் நடந்தனவா?

அசோக்: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் நிறைய நடந்தது. வெலிக்கடை படுகொலைகளுக்கு பின்னான காலங்களில்தான் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

தேசம்: அதுல முக்கியமான ஆட்கள் யார் யார் கைது செய்யப்படுகினம்?

புளொட்டின் தோழர்கள் சலீம், சத்தியமுர்த்தி, ஜெயகாந்தன், ரமணன், மீரான் மாஸ்டர், லவன், மாறன், சிவா, கல்லாறு சதீஸ், சண் தவராஜா, வைத்தியலிங்கம், சக்தி வடிவேல், மாணிக்கம்பிள்ளை, துரைசிங்கம் இப்படி நிறைய தோழர்கள் கைது செய்யப்படுகிறார்கள். எங்கள் கிராமத்தில் புளொட் தோழர்கள் நிறையப் பேர் கைது செய்யப்ப டாங்க. நல்லீஸ், கராட்டி அரசன், வன்னியசிங்கம், பேரின்பம், சிவஞானம், பூபாலசிங்கம், தில்லையம்பலம் செல்லக்கிளி, கனகசூரியம் இப்படி நிறையத் தோழர்கள். ஆனா இவர்கள் வெலிக்கடை சிறையில் அடைக்கப்படவில்லை. பூசா இராணுவ சிறை முகாம்மில்தான் அடைக்கப்பட்டாங்க… தோழர் கராட்டி அரசன் கராட்டியில் பிளாக் வெலிட் எடுத்தவர். திறமையான தோழர். இவரை பூசா சிறையில் வைத்து இராணுவம் அடித்துக் கொன்றது.

இவரின்ர தம்பி அவரை நாங்க செல்லக்கிளி என்றுதான் கூப்பிடுவோம். அவரும் பூசா சிறையில் இருந்தவர். வெளியில் வந்தவுடன் புலிகள் படுகொலை செய்தாங்க.

வன்னியசிங்கமும் பூசா சிறையிலிருந்து வெளிவந்த பின் அவரையும் புலிகள் சுட்டுக் கொன்றாங்க. அவரின் தலையை வெட்டி எடுத்து, அவரின் உடலை தெருத் தெருவாக டிரக்டரில் கட்டி இழுத்தாங்க. செல்வரெத்தினம் என்றொரு தோழர் கைது செய்யப்பட்டு பொலிசாரல் சுட்டுக் கொல்லப்பட்டார். பல தோழர்கள் பயங்கரமான சித்திரவதைகளை அனுபவிச்சாங்க. ரவிராஜ் என்ற தோழர் இன்றைக்கும் இந்த சித்திரவதைகளினால பாதிக்கட்ட நிலையிலதான் வாழ்கிறார்.

யோசித்துப் பாருங்க. எவ்வளவு கொடூரம். இதையெல்லாம் நினைத்தால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும். இந்த தோழர்களையெல்லாம் எங்கேயாவது பதிவு செய்யணும் என எண்ணி இருந்தன். இந்த போராட்டத்தில தங்கட வாழ்கையை இழந்தவங்க இவங்க. இவங்களெல்லாம் தோழர்கள் மாத்திரம் இல்ல, என்னுடைய இளமைக்கால நண்பர்கள் இவங்க.

தேசம்: ஏற்கனவே வெலிக்கடைச் சிறையில் இருந்தவர்களை மாத்திரம்தான் மட்டக்களப்பு சிறைக்கு கொண்டு வரார்களா?

அசோக்: ஓம். மட்டக்களப்புக்கு கொண்டு வரப்படும் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலையில் உயிர் தப்பியவர்களைத்தான், பழைய ஆட்களைத்தான் கொண்டு வாறாங்க. வெலிக்கடை சிறையில் படுகொலை நடந்தவுடன், அவங்களுக்கு பாதுகாப்பின்மை இருக்குது. தற்காலிகமாக அவங்களை மட்டக்களப்பு சிறையில் வைத்துக் கொண்டு, இன்னுமொரு சிறைக்கு மாற்றுவதற்கு, அவகாசத்துக்காக மட்டக்களப்பு சிறைக்கு கொண்டு வரார்கள். இங்க குறிப்பிட்ட காலம் தான் வைத்திருக்க முடிவு செய்திருந்தார்கள். அதற்குப்பின் வேறு சிறைக்கு மாத்துவது அவர்களின்ர திட்டம். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் ட புதிய போராளிகளை, நிறைய தமிழ் மக்களை பூசா சிறையில் தான் அடைத்தார்கள். எங்கட கிராமத்திலேயே நிறைய பேரை கைது செய்திருக்கிறார்கள். பூஸாவில் எங்கட நிறைய தோழர்கள் இருந்திருக்கிறார்கள்.

தேசம்: இந்த விடுதலைப் போராட்டத்தில் முக்கியமாக கருதப்பட்ட கனபேர் அந்த காலகட்டத்தில் மட்டக்களப்பு சிறையில் இருந்திருக்கிறார்கள். நிர்மலா… நித்தியானந்தன்…

அசோக்: டேவிட் ஐயா, ராஜன், டக்ளஸ் தேவானந்தா, சுகுதோழர், வரதராஜபெருமாள், நித்தியானந்தன், பாதர் ஜெயகுலராஜா, தங்க மகேந்திரன்.

தேசம்: வேற யார் யார்…

அசோக்: பனாக்கொடை மகேஸ்வரன், ஈரோஸ் அந்தோனிப்பிள்ளை, புளொட்டில் மாணிக்கதாசன், அற்புதம், வாமதேவன், சுபாஸ், மகேந்திரன் மாமா இவங்களெல்லாம் சிறைக்குள்ள இருந்தவங்க.

தேசம்: இவர்களெல்லாம் வெலிக்கடை சிறையில் இருந்து மட்டக்களப்புக்கு மாற்றப்படுகிறார்கள்…

அசோக்: ஓம்…

தேசம்: இவர்கள் இந்த வெலிகடை படுகொலையில் இருந்து தப்பிய ஆட்கள்…

அசோக்: படுகொலையில் இருந்து தப்பி ஆட்கள் அவ்வளவு பேரும் தான், மட்டக்களப்பு சிறை உடைப்புக்குள்ளால வெளியில வாறார்கள்.

வெலிக்கடை சிறையிலிருந்து மட்டக்களப்பு சிறைக்கு மாற்றும் போது எல்லா இயக்கங்களை சேர்ந்தவங்களும் அதில் இருக்காங்க. அதுல ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் இருந்திருக்கிறார்கள், ஈரோஸ் தோழர்கள் இருந்திருக்கிறார்கள், தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் ஆட்கள் இருந்திருக்கிறார்கள், புலிகளின் ஆட்கள் இருந்திருக்கிறார்கள்.

தேசம்: மட்டக்களப்பு சிறையை உடைக்க வேண்டும் என்ற அந்த எண்ணக்கரு எப்படி உருவாகுது?

அசோக்: நான் சொன்னேன் தானே தற்காலிகமாகத்தான் இங்க வைத்திருக்கிறார்கள் என்று.

தேசம்: இதுல முக்கியம் என்னென்றால், வெலிக்கடை சிறையில் இருந்த ஆட்கள் எல்லாரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கியமானவங்க. எஞ்சியவர்களும் மிக முக்கியமான ஆட்கள் தான்.

அசோக்: அவர்களும் வேறு சிறைக்கு மாற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்பட்டிருந்தால், போராட்டத்திற்கான முன்னெடுப்புகள் இல்லாமல் போயிருக்கும். ஏதோ ஒரு வகையில் மிக முக்கியமான ஆட்கள் இவங்க… காலப்போக்கில் பிற்காலத்தில் அவர்கள் தொடர்பான விமர்சனங்கள் இருந்தாலும் கூட, அன்றைய காலகட்டத்தில் சிறைக்குள் இருந்த அவ்வளவு பேரும் மிக மிக முக்கியமான ஆட்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகள். அவர்கள் இன்னொரு சிறைக்கு மாற்றப்பட்டு இன்னொரு படுகொலை நடந்திருந்தால் ஈழப் போராட்டத்தின் வரலாறு அன்றைக்கு அழிந்து போயிருக்கும். அப்போ இன்னொரு சிறைக்கு மாற்றுவதற்கு முன்னர் இவங்களை வெளியில் எடுக்க வேண்டிய தேவை எல்லா இயக்கங்களுக்கும் இருந்தது. புளொட்டுக்கும் அந்த ஐடியா இருந்தது. ஈபிஆர்எல்எஃப் தோழர்களுக்கும் அந்த ஐடியா இருந்தது. புளொட் குறிப்பிட்ட காலத்துக்குள்ள அதை செய்யவேண்டும் என்று சொல்லி அதற்கான வேலைகளை தொடங்கினது. அதற்கான ஆயுதங்கள் எங்களிடம் இல்லாமல் போய்விட்டது.

தேசம்: மட்டக்களப்பு சிறை உடைப்பு எப்ப நடக்குது…

அசோக்: 83 செப்டம்பர். எங்களிட்ட ஆயுதங்கள் இல்லை. குறிப்பிட்ட சில ஆயுதங்கள் தான் இருந்தது. ரகுமான் ஜான் தோழர் ஆயுதங்கள் எடுத்து வருவதற்கு இந்தியாவுக்கு போறார். போயிட்டு, அவர் வெறும் கையோடுதான் வாறார். வந்து சொல்லுறார் அங்க ஆயுதங்கள் இல்லை என்று. ரகுமான்ஜான் தோழர் மன்னாரில் வந்திறங்கிய போது கடற்படையின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பி, நேரடியா எங்கட வீட்ட தான் வாறார் களுதாவளைக்கு. அன்றிரவு எங்கட வீடு பொலிசால் ரவுண்டப் பண்ணுப்படுது. அன்று இரவு நானும் ரகுமான்ஜானும் வீட்டில் தங்கியிருந்தா நாங்களும் மாட்டுப்பட்டு இருப்போம்.

தேசம்: ஏற்கனவே நீங்கள் தேடப்படுற ஒரு ஆளாக இருந்தபடியால்…

அசோக்: எப்படியோ பொலிசிக்கு தெரிந்து விட்டது. அன்றைக்கு வேறு ஒரு வீட்டில இருந்தபடியால் தப்பி விட்டோம். பின் தளத்திலிருந்து ஆயுதங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு தோழர் ரகுமான் ஜான் ஆயுதங்கள் கிடைக்கவில்லை என்று சொன்னது ஏமாற்றமாக இருந்தது. குறிப்பிட்ட காலத்தினுள் சிறை உடைப்பு செய்ய வேண்டும். காலம் போனால், வேறு சிறைக்கு மாற்றி விடுவார்கள். பிறகு ஒன்றும் செய்ய இயலாது. பிறகு ஈபிஆர்எல்எஃப் தோழர்களுக்கும் இது சம்பந்தமாக ஆர்வம் இருக்கின்றபடியால் அவங்களோட தொடர்பு கொள்கிறோம். குறிப்பாக யோகராஜ் என்று எங்களுக்கு நெருங்கிய தோழராக இருந்தவர். அவரோடதான் முதலில் தொடர்பு கொள்ளுகிறேன். அவர் சொல்கிறார் எங்களிட்ட ஆயுதம் இருக்கு சேர்ந்து செய்யலாம் என்று.

அடுத்தது சிவலிங்கம் என்று ஒரு தோழர். அருமையான தோழர். தோழர் பாலா, தோழர் கணேஸ் இவர்கள் எல்லாம் ஈபிஆர்எல்எஃப் தோழர்கள். அதில் குன்சி தான் முக்கியமானவர். குன்சியோடு வாசுதேவா தொடர்பு கொள்கிறார். குன்சிக்கும் வாசுதேவாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது சேர்ந்து செய்யலாம் என்று சொல்லி.

தேசம்: புளொட்டில் மட்டக்களப்பு சிறை உடைப்பை மேற்கொள்வதில் யார் முன்னுக்கு நின்று செயற்பட்ட ஆட்கள்…

அசோக்: முக்கியமாக தோழர் வாசுதேவாதான். மற்றது தோழர் பார்த்தன். சிறையிலிருந்து வந்தவங்களை பாதுகாத்து, இந்தியாவுக்கு கொண்டு சென்றதில் தோழர் பார்த்தனின் பங்களிப்பு முக்கியமானது.

வாசுதேவா மட்டக்களப்பில் சிங்கள வாடி என்ற இடத்தை சேர்ந்தவர். அங்க இருக்கிற பல பேர் மட்டக்களப்பு சிறையில் ஜெயிலராக இருக்கிறார்கள். இயல்பாகவே வாசுதேவுக்கும் இந்த ஜெயிலர்களுக்கும் இடையில் உறவு ஒன்று இருந்தது. சிறையில் நடக்குற எல்லாம் இந்த தமிழ் ஜெயிலர்களுக்கூடாக தெரியவரும். அதில முக்கியமானவர் கிருஷ்ணமூர்த்தி என்றவர். அவர்
வாசுதேவாவின் நல்ல ஃப்ரெண்ட். சிறை உடைப்புக்கு பிற்பாடு இவரும் புளொட்டிக்கு வந்து, பி எல் ஒ ட்ரெயினிங் எடுத்தவர். தோழர் பிரசாத் என்று சொல்றது. புலிகள் தான் அவரை பிறகு மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொன்றார்கள். மிகத் திறமையான தோழர். உண்மையிலேயே அந்த ஜெயில் உடைப்புக்கு பெரும் உதவியாக இருந்தவர் இவர்தான்.#

இவருக்கூடாகத்தான் உள்ளே இருந்தவர்கள் தப்புவதற்கான தற்காப்பு ஆயுதங்கள், இரண்டு ரிவோல்வர்கள், வடிமைக்கப்பட்ட மெசின் கன், சாவிகள் கொடுக்கப்பட்டன.

தேசம்: கிட்டத்தட்ட ஜெயில் உடைப்பு என்பது திறந்துவிடப்பட்டது மாதிரித்தான்…

அசோக்: ஆனால், அதற்கான தயாரிப்புகள் நிறையச் செய்யப்ப ட்டது. எங்களிடம் ஆ யுதங்கள் இல்லை. ரிவோல்வர்கள் இருந்தன. இவற்றை வைத்து ஒன்றும் செய்யமுடியாது. ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதாக சொன்னாங்க. பிறகுதான் தெரியும் அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை என்று. ஆயுதம் இல்லாதபடியால், குறைந்தபட்சம் ஆயுதம் தேடவேண்டும் என்று சொல்லி கிராமங்களிலிருந்து சோட் கண்களை எடுத்தோம். அதுல வரதன், வைத்திலிங்கம், விஜி, ஜீவா அகஸ்டின், நிறைய தோழர்கள் ஈடுபட்டார்கள்.

தேசம்: அதுல ஈஸ்வரனும்…

அசோக்: ஈஸ்வரன், கராட்டி அரசன், நான் சில இடங்களில் ஆயுதங்களை சேகரித்தோம். அதற்குப் பிறகு அரசாங்கம் மிகக் கடுமையாக சொல்லிவிட்டது விவசாயிகள் இருக்கிற ஆயுதங்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று.

தேசம்: நீங்கள் விவசாயிகளிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க முயற்சித்தீர்கள்.

அசோக்: அது ஒரு பிழையான காரியம்தான். அன்றைய நேரத்தில் அதைப்பற்றி யோசிக்கவில்லை. சிறையிலிருப்பவர்களை எடுக்க வேண்டும் என்ற நோக்கம்தான் முக்கியமாகபட்டது.

மட்டக்களப்பு ஜெயில் உடைப்பில் நான், ஈஸ்வரன் நேரடியாக பங்கு கொள்ளவில்லை… அப்போது நாங்கள் பொலிசாரால் தேடப்பட்டுக் கொண்டிருந்தோம்… முழுக்க முழுக்க ஈடுபட்டது வாசுதேவாதான். இந் நேரத்தில் தோழர் மாசிலாமணியின் பங்களிப்பை நினைவு கூறுவது மிக அவசியம். அவர்தான் சிறைச்சாலை கதவு திறப்புக்களை செய்து உதவியவர். அவரின் இந்த உதவியின்றி சிறைச்சாலை கதவுகளை திறந்திருக்க முடியாது.

அவர் லேத் மெசின் கராஜ் வைத்திருந்தார். அவர் கடைசியாக புளொட்டில வந்துட்டார். இப்ப கனடாவில இருக்கிறார் என்று நினைக்கிறேன். தப்பிச் செல்வதற்கு காந்திய வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இது பின்னர் பொலிசிக்கு தெரியவந்து மட்டக்களப்பு காந்தியத்தை தடைசெய்துவிட்டாங்க. பொறுப்பாக இருந்த சின்னத்துரை மாஸ்ரரும், துரைசிங்கமும் கைது செய்யப்பட்டாங்க.

இந்த சிறை உடைப்பில், தோழர்கள் சக்தி வடிவேல், சங்கர், வரதன், வைத்திலிங்கம் கணன், கராட்டி அரசன், விஜீ போன்றோர் முக்கியமானவங்க. ஈபிஆர்எல்எப் தோழர்களும் மிகமுக்கியமானவங்க. குறிப்பாக தோழர் குன்சி. இவர்கள் எல்லோருடைய ஒத்துழைப்போடுதான் மட்டக்களப்பு சிறையுடைப்பு நடைபெற்றது. பிறகு தோழர்கள் சக்தி வடிவேல், வைத்தியலிங்கம், மாணிக்கம்பிள்ளை போன்றவங்ககளும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டாங்க…

தேசம்: அந்த நேரத்தில் புளொட் தாம் செய்ததாக உரிமை கோரி அறிக்கை விட்டதென நினைக்கிறேன்.

அசோக்: புளொட் முழுக்க உரிமை கோர இயலாது. அது உண்மையிலேயே புளொட்டும், ஈபிஆர்எல்எஃப் பும், சேர்ந்து செய்த சிறை உடைப்பு தான். யாழ்ப்பாணத்தில் புளொட் அறிக்கை விட்டு, பின்பு ஈபிஆர்எல்எஃப் ஒரு அறிக்கை விட, முரண்பாடு வந்து அறிக்கைப் போராகவே மாறிவிட்டது. இரு அமைப்புக்களும் புரிந்துணர்வு அடிப்படையில் தோழமையோடு இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்க முடியும்.

புளொட் தலைமையினால் அது முடியாமல் போயிற்று. இந்த அறிக்கைப் போர் தோழமையோடு இருந்த ஈபிஆர்எல்எப் தோழர்களுக்கும் எங்களுக்குமிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி, பரஸ்பரம் நம்பிக்கையின்மையையும் உருவாக்கி விட்டது.

தேசம்: இவ்வாறான பல முரண்பாடுகள் உரிமை கோரல்கள் பல எழுந்திருக்கு…

அசோக்: அது எனக்கு ஒரு பெரிய மனவருத்தம். இப்படியான சம்பவங்களை வடிவா பேசித் தீர்த்துக்கலாம். ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் உரையாடலுக்கு தகுதியற்ற ஆட்கள் இல்லை தானே. எங்களைவிட அவங்களிட்ட ஜனநாயகப் பண்பு இருந்திருக்கு. அவங்களோட உரையாடல் செய்து இருக்கலாம். இது புளொட்டில் நடந்த பெரிய தவறு.

உதாரணமாக மட்டக்களப்புகச்சேரி துப்பாக்கி பறிமுதல் சம்பவம். அது எனக்குத் தெரிந்த நண்பர்களால் செய்யப்பட்டது. அதற்கு நான் தனிப்பட்ட வகையில் ஒத்துழைப்பு கொடுத்தனேயொழிய, அதற்கும் புளொட்டிக்கும் தொடர்பு இல்லை. பிறகு அவங்க எல்.ரீ. ரீ . ரீக்கு போயிட்டார்கள். மட்டக்களப்பு சிறை உடைப்புக்கு பிறகு, இதை நாங்கள் செய்யத்தான் இருந்தோம். செய்யுறதுக்கு அதற்கான ஆட்பலம் இல்லாமல் போய்விட்டது. நானும் ஈஸ்வரனும் தான் மட்டக்களப்பில் இருந்தோம். மிச்ச எல்லோரும் சிறை உடைப்போட அப்படியே இந்தியாவுக்கு போயிட்டார்கள். அதால செய்ய முடியாமல் போயிற்று. கச்சேரி துப்பாக்கி பறிமுதல் நடந்தது பற்றி பின் தளத்தில் கேள்விப்பட்ட புளொட் தலைமை இதனைச் செய்தது புளொட் என அறிக்கைவிட்டது. இது தவறான புரிதலின் அடிப்படையில் நடந்தது. புளொட் செய்வது பற்றிய திட்டமிருந்ததினால் புளொட்தான் செய்திருக்கும் என்ற அனுமானத்தில் இவ் அறிக்கை வெளியிட்டதாக பின்னர் சொல்லப்ட்டது.