சிவஞானம் சிறிதரன்

சிவஞானம் சிறிதரன்

பகலில் கூட வெளியே வர அச்சப்படும் மாணவிகள் – வன்முறைகள் நிறைந்த பகுதியாக மாறிக்கொண்டிருக்கும் கிளிநொச்சி!

கிளிநொச்சி மாவட்டத்தில் வேகமாக அதிகரித்து வரும் சமூக சீர்கேடுகளை எடுத்துக் காட்டும் ஒரு சம்பவம் அண்மையில் செல்வா நகர் பகுதியில் கோவில் திருவிழாவின் போது பாடசாலையில் கல்வி கற்கும் இளைஞர் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல்.

வடபகுதியில் குறிப்பாக கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் திரும்பும் திசையெல்லாம் இராணுவ முகாம்களும் காவல் நிலையங்களும் காணப்பட்டும் கூட இந்த வன்முறை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக இந்த வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் கைதாவோர் இளைஞர்களாக காணப்படும் அதேவேளை போதைப் பொருள் பாவனைக்கு பழக்கப்பட்டவர்களாகவும் – கசிப்பு காய்ச்சுதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவோராகவுமே அடையாளம் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் காணப்படும் வன்முறையான நிலை ஆக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது என்பதே உண்மை.

இதனை கடந்தகால செய்திகளின் தலைப்புக்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

கிளிநொச்சியில் பரபரப்பு : செல்வாநகர் ஐயப்பன் கோயிலில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு. (07.05.2022)

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் கெரொயின் மற்றும் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது. (28.07.2020)

கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் வாள்வெட்டு – கர்ப்பிணி பெண் உட்பட 9 பேர் படுகாயம். (29.05.2019)

கிளிநொச்சியில் உள்ள தனது காணியை பார்வையிட வந்த அமெரிக்க பிரஜை ஒருவர் அடித்துப் படுகொலை (7.05.2018)

டியூசனுக்கு படிக்க சென்றாலும் ஐந்து மணிக்கு பிறகு எந்த பாடங்களிலும் பங்கு கொள்வதில்லை. ஏனெனில் ஆறு மணிக்கு முன்பாக ஊருக்குள் நுழைந்தால் தான் பாதுகாப்பாக வீடு செல்ல முடியும் என்ற துர்பாக்கிய நிலை உருவாகியுள்ளது.” என அந்த மாணவி தெரிவித்தார்.

“மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தை சிறைக்கு கொண்டு செல்லவே பயங்கரவாத தடைச் சட்டத்தை ஜனாதிபதி ரணில் கொண்டுவருகிறார்.” – சிறீதரன்

“மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தை சிறைக்கு கொண்டு செல்லவே பயங்கரவாத தடைச் சட்டத்தை ஜனாதிபதி ரணில் கொண்டுவருகிறார்.” என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (16) கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது இவ்வாறு கூறிய அவர், மேலும் பேசுகையில்,

அடுத்தடுத்த வாரங்களில் மிக மிக ஆபத்தான பயங்கரவாத தடைச் சட்டம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டுவரப்படும்போது, அது விவாதத்துக்கு விடப்படும். அப்போது அதற்கு பெரும்பான்மை பலம் தேவைப்படும்.

இந்நிலையில் இப்போது, பெரும்பான்மை வாக்குகளை அளிக்கக்கூடிய மஹிந்த ராஜபக்ஷ குடும்பமே இந்த சட்டத்துக்குள் அகப்பட்டு சிறை செல்லும் நிலை ஏற்படலாம்.

ஏற்கனவே, ஜே.ஆர். ஜெயவர்தனவினால் பாராளுமன்றத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை வைத்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை கொன்று குவித்துத் தள்ளியுள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உள்ள எதிர்கால சிந்தனை வேறு; மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்திடம் உள்ள எதிர்கால சிந்தனைகள் வேறு. அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டால் இந்த சட்டத்தை பயன்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

ரணில், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியாக தான் வரவேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார். அவ்வாறான முயற்சிகளில் எந்த ஒரு தேர்தலையும் தற்போது நடத்துவதற்கு அவர் தயாராக இல்லை.

ஏற்கனவே, இருந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் மிக மிக ஆபத்தான சட்டமாகவே இப்புதிய சட்டம் உள்ளது. தனிநபர் கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஈழத் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினை குறித்து ஒரு மாநாட்டை இந்தியா ஏற்பாடு செய்யவேண்டும்.” – சிவஞானம் சிறிதரன்

“ஈழத் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினை குறித்து ஒரு மாநாட்டை இந்தியா ஏற்பாடு செய்யவேண்டும்.” என இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை ஆகியோரை நேற்று (11) இரவு யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே சிறிதரன் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்.

இந்த சிநேகபூர்வ சந்திப்பின்போது வடக்கின் நிலைவரம் குறித்து இந்திய பிரதிநிதிகளிடம் சிறிதரன் எம்.பி எடுத்துக் கூறியுள்ளார்.

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியாவும் தமிழகத் தலைமைகளும் பேசி வருகின்றபோதிலும் – இப்போது 13ஆவது திருத்தம் பலவீனம் அடைந்திருக்கிறது.  இத்திருத்தத்துக்கு எதிராக 28 வழக்குகள் தொடுக்கப்பட்டு மாகாண சபை முறைமை சீரழிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி, ‘அப்போது இந்தியா வழங்கிய 13ஆவது திருத்தச்சட்டம் வேறு, இப்போது காணப்படும் 13ஆவது திருத்தம் வேறு. இதனை இந்திய தரப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்.

வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைமைகளுடன் இந்திய ஆய்வாளர்கள், புத்திஜீவிகள், புலனாய்வு மற்றும் இராணுவ ஆலோசகர்கள் சந்திப்பொன்றை ஏற்படுத்த வேண்டும்.  அத்தகைய சந்திப்பொன்றை ஏற்படுத்தினால் இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும், 13ஆவது திருத்தத்தின் பலவீனமான தன்மை குறித்தும் எம்மால் எடுத்துக்கூற முடியும், அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

அத்துடன் தமிழகத்தில் உள்ள தலைவர்கள், இலங்கையின் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து தமிழர் மாநாடொன்றை ஏற்பாடு செய்யவேண்டும். இதில் தமிழர்களின் இறுதித் தீர்மானம் என்னவென்பது குறித்து சகலரும் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரவேண்டும். அத்தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு புதுடெல்லிக்கு அழுத்தம் பிரயோகித்து, அதனூடாக இந்தியாவின் தலையீட்டை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதற்கு தமிழகம் துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அரசாங்க குழுவிலிருந்து சாணக்கியன் விலகல் – சிவஞானம் சிறிதரன் இணைவு !

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் விலகியுள்ளார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமானதும் இந்த விடயம் தொடர்பாக சபாநாயகரின் அறிவித்தலை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்தார்.

இதனையடுத்து, அவரது வெற்றிடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்ட கலாநிதி ஹர்ஷ டி சில்வா அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அந்த வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித ஹேரத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

“மனநிலை பாதிக்கப்பட்டுள்ள விமல் வீரவங்ச முதலில் பாடசாலை செல்ல வேண்டும்.” – சிவஞானம் சிறிதரன்

“விமல் வீரவங்ச மனநிலை பாதிக்கப்பட்டவர். அவர் முதலில் பாடசாலை செல்ல வேண்டும்.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்கள் என்ன செய்தாலும் அதற்கு எதிரான கருத்துக்களையே பேச வேண்டும் என்று நினைக்கின்ற மனநிலை பாதிக்கப்பட்டவராகவே விமல் வீரவன்ச சிங்களதேசத்தில் பார்க்கப்படுகிறார். இவரை சிங்கள மக்கள் சிறந்த தலைவராக கணிக்கவில்லை. சிங்கள மக்கள் ஒரு நல்ல தலைவராக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவரிடம் இல்லை. இனவாதத்திற்கு எதிராக சிங்கள மக்கள் தற்பொழுது எழும்பி இருக்கிறார்கள்.

தியாகி திலீபன் அவர்கள் இந்த மண்ணிலே உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை மக்களுக்காக தியாகம் செய்தவர். இதே விமல் வீரவன்ச அவர்கள் இருந்த ஜே.வி.பி கட்சியும் போராடி இலங்கையிலே கிளர்ச்சி செய்து இலங்கையில் இருக்கும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக போராடி இறந்திருக்கிறார்கள். அவர்களை நினைவு கூறுவதற்கு இந்த நாட்டில் ஒரு நியாயம் இருக்கின்றது என்றால் இந்த மண்ணிலே தமது இழந்து போன இறைமையை மீட்பதற்காக போராடிய ஒரு இளைஞர் பரம்பரையின் நினைவு நாளை நினைவு கூற ஏன் எமக்கு தடை விதிக்கப்படுகிறது.

தியாகி திலீபன் அவர்களை நினைவு கூறுவதற்குரிய அனைத்து உரித்துக்களும் சர்வதேச விதிமுறைகளுக்கும் ஐநாவுடைய தீர்ப்பாயத்தினுடைய சட்ட விதிமுறைகளுக்குமையவும் தமிழர்களுக்கு உரித்து உண்டு. ஒரு தனியான மொழி பேசுகின்ற வரலாற்று அடையாளங்களை கொண்ட தன்னுடைய தேசத்திலே வாழ்கின்ற ஒரு இன குழுமம் தனக்காக இறந்து போனவர்களை நினைவு கொள்கின்ற தனக்காக வாழ்ந்தவர்களை நினைக்கின்ற அனைத்து உரிமைகளும் உலக பட்டையத்தின் அடிப்படையிலயே உண்டு.

விமல் வீரவன்ச முதலில் பாடசாலை செல்ல வேண்டும் பாடசாலை சென்றால் தான் இந்த அறிவுகள் தெரியும். விமல் வீரவன்ச போன்றவர்களுக்கு பாடசாலை அனுப்பி புனர்வாழ்வு பெற்று வந்தால்தான் உலகம் என்ன நாடு என்ன வரலாறு என்ன என்பது புரியும், விமல் வீரவன்ச போன்றவர்களின் கூச்சலுக்காக நாங்கள் பயப்பிடவேண்டியதில்லை.

எமது பணிகள் எந்தவொரு அச்சமும் இல்லாமல் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்திருந்தார்.

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிடிக்குள் அகப்பட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கொல்லப்பட்டுள்ளனர்.” – சிறிதரன் சாடல் !

தமிழ் மக்களைச் சாகடிக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னும் நீக்கப்படாமல் இருப்பது நாட்டுக்கு மிகப்பெரிய அவமானமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துக் செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் பல பகுதிகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் ஸ்கந்தபுரம் பொதுச் சந்தையில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் பொதுச் செயலாளருமான சுப்பிரமணியம் சுரேன், கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் பிரதேச அமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் இன்று கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் சந்தையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிடிக்குள் அகப்பட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மியன்மாரில் இருந்து நெல் இறக்குமதி – சிவஞானம் சிறீதரன் விசனம் !

பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை அந்த பொருளாதார தடை தற்போதுதான் சிங்களவர்கள் உணர்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வும் பாரம்பரிய தமிழர் விளையாட்டு நிகழ்வும் உருத்திரபுரம் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது குறித்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

தமிழர்களின் பாரம்பரியத்தினையும் பண்பாட்டினையும் நாங்கள் தான் பேணிவளர்க்க வேண்டும், நாங்கள் தான் அவற்றை கட்டிக்காக்க வேண்டும், நாங்கள் அதற்கான முதுகெலும்பாக செயற்பட வேண்டும் என்கின்ற அடிப்படையில் தான் இன்றைய நாள் ஒரு பண்பாட்டு நாளாக உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் முன்னெடுத்திருக்கிறது.

மிக முக்கியமாக தமிழர்களிடமிருந்து அருகிப் போகின்ற போர்த்தேங்காய் உடைத்தல், தலையணைச்சமர், முட்டி உடைத்தல், கிளித்தட்டு போன்ற எங்களுடைய பண்பாட்டோடும் பாரம்பரியத்தோடும் தமிழரோடு பிறந்து வளர்ந்த அவர்களுடைய கலாச்சாரத்தோடு இயல்புடைய கூடிய இந்த நிகழ்வுகள் எங்களை விட்டு விலகிச் செல்லுகின்றன. அவ்வாறு விலகிச் செல்லுகின்ற இந்த விளையாட்டுக்களை மீண்டும் நினைவூட்டுகின்ற வகையில் பண்பாட்டு விழாவாக தமிழர்களுடைய திருநாளான தைப்பொங்கலை மையமாக வைத்து நீங்கள் முன்னெடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியானது.

இங்கே வருகிறபோது பார்த்தேன் நெற்கதிர்கள் பூத்துக்குலுங்க இந்த மண்டபம் மேடையை அலங்கரித்து இருக்கிறீர்கள். எங்கள் மக்களுடைய வரலாற்றிலே நாம் நெல்லோடும் இந்த நெல்லின் வாழ்வோடும் வாழ்ந்தவர்கள். இம்முறை விவசாயிகளுக்கான பசளைகள் தடை செய்யப்பட்ட காரணத்தால் விவசாயிகளின் அறுவடை என்பது மிகப் பாரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஏக்கரில் 8 அல்லது ஒன்பது பை நெல்லுத்தான் அறுவடை செய்கின்ற அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. ஆனால் அரசாங்கம் இப்போது மியன்மாரில் இருந்தும் வேறு நாடுகளில் இருந்தும் எத்தனையோ இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியைக் கொள்வனவு செய்ய தயாராக இருக்கிறது.

இவ்வாறு அங்கு இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட அரிசிகளை இங்கு இறக்குமதி செய்ய முனைகிறார்கள் இங்கு விவசாயம் செய்பவர்களுக்கு உரத்தை பயன்படுத்த அரசு தடை விதித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கிலே அறுவடை செய்கின்ற காலத்தில் இலங்கையில் ஏனைய பகுதிகளில் சிலவற்றில் இனித்தான் விதைப்பு ஆரம்பமாக இருக்கின்றது. வடக்கு கிழக்கில் விவசாயிகள் நெல் அறுவடை செய்கின்ற காலத்தில் இந்த அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து அரசியினை இறக்குமதி செய்வது மேலும் எமது மக்களை துன்பத்துக்கு உள்ளாகும்.

ஆனால் நாம் கடும் நெருக்கடியோடு வாழ்ந்தவர்கள். ஒரு கால கட்டத்தில் 90 களில் இலங்கையில் மண்ணெண்ணெய் 12 ரூபாய்க்கு விற்ற போது நாம் 300 ரூபாய்க்கு வாங்கியவர்கள் அப்போது யூரியாவை கண்ணால் காணவில்லை உடுப்பு துவைப்பதற்கு சவர்க்காரங்களைக் காணவில்லை நாங்கள் இந்த மண்ணிலே பெட்ரோலை கண்டிருந்ததில்லை சீமெந்துகளை கம்பிகளை கண்டிருந்ததில்லை அவ்வாறு இருந்தும் இந்த மண்ணிலே நாங்கள் வாழ்ந்து இருந்தோம் எங்களுடைய வாழ்க்கை நகர்ந்திருந்தது.

அதனை இப்போது தான் சிங்கள மக்கள் படிக்கவும் உணரவும் ஆரம்பித்திருக்கிறார்கள் ஆகவே பொருளாதார தடை என்பதும் பொருளாதாரத்தின் மீதான ஒரு வகையான ஆக்கிரமிப்பு என்பதும் இப்போதுதான் சிங்கள மக்களை உணர வைத்திருக்கிறது . தமிழர்கள் ஏற்கனவே இவற்றை நேரடியாக அனுபவித்து வாழ்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“சிங்கள மக்களையே முட்டாளாக்கும் கோாட்டபாய அரசு.” – சிறீதரன் விசனம் !

புலம்பெயர் தமிழர்களை காட்டி சிங்கள மக்களுடைய வாக்குகளை பெற்ற கோட்டாபய அரசாங்கம் தற்போது சிங்கள மக்களை மூடர்களாக்குகின்றனரென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மன்றம் வரை சென்று இலங்கையினுடைய ஜனாதிபதி சில கருத்துக்களை தெரிவித்தார். அதில் இலங்கையினுடைய தமிழ் மக்களின் குரலாக இருக்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை நீங்கள் வாருங்கள் நாங்கள் பேசுவோமென அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இதே ஜனாதிபதி தான் தனது தேர்தல் காலத்தில் புலம்பெயர் தமிழர்கள் தமிழீழத்தை பெற்று விடுவார்கள். எம்மை மின்சார கதிரையில் ஏற்றிவிடுவார்கள் என்றும் சர்வதேச சமூகத்திற்கு பிழையான கருத்தை கொடுத்து நாட்டை பிளவுபடுத்துகிறார்களென சிங்கள மக்களினிடைய புலம்பெயர் தமிழர்கள் பற்றிய இனவாதக் கருத்துக்களை தெரிவித்து ஆட்சிக்கு வந்தார்.

புலம்பெயர் தமிழர்களை காட்டி சிங்கள மக்களுடைய வாக்குகளை பெற்ற கோட்டாபய அரசாங்கம் தற்போது சிங்கள மக்களை மூடர்களாக்குகின்றனர். சிங்கள மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் பொருளாதார நிலையை அழித்து நாசமாக்கி சிங்கள இளைஞர்களை இனவாத ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்பிய இந்த அரசாங்கம் இன்று அரேபிய நாடுகளுக்கு சென்று கெஞ்சுகின்றனர்.அரசாங்கம் ஏன் இரண்டு முகத்தை கொண்டு இதனை செய்கிறது.

புலம்பெயர்ந்தவர்களை பேச அழைப்பது தொடர்பாக,மக்களின் ஆணையை அதிகமாக பெற்ற கட்சி என்கிற அடிப்படையில் இதனை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். ஆனால் இந்த அரசாங்கம் இதயசுத்தியுடன் அதனை செய்ய முன்வரவேண்டும் என்றார்.

“யார் யாரெல்லாம் எப்படி எம்மை ஆளப்போகிறார்கள் என்கிற அச்சம் மிகுந்த சூழ்நிலையில்த்தான் நாம் இருக்கிறோம்” – சிறிதரன்

“யார் யாரெல்லாம் எப்படி எம்மை ஆளப்போகிறார்கள் என்கிற அச்சம் மிகுந்த சூழ்நிலையில்த்தான் நாம் இருக்கிறோம்” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மிகமுக்கியமாக இன்றைய காலகட்டம் என்பது எல்லோருக்குமே ஒரு அச்சம் மிகுந்த சூழ்நிலையைத்தந்திருக்கிறது. இன்று என்ன நடக்கிறது நாளை நாளை மறுதினம் என்ன நடக்கும் என்ற கேள்விகளோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

அடையாளத்தை தொலைத்த மனிதர்களாக அடையாளம் அற்ற மனிதர்களாக நாம் வாழவேண்டிய காலம் வருமோ? அல்லது யார் யாரெல்லாம் எப்படி எம்மை ஆளப்போகிறார்கள்? என்கிற அச்சம் மிகுந்த சூழ்நிலையில்த்தான் நாம் இருக்கிறோம்.

இந்த வேளையில் நான் இளைஞர்களை கோருவது இந்ம மண்ணிலே நாம் தமிழ்த்தேசிய இனமாக எங்கள் அடையாளத்தை தொலைத்து விடாமல் நிமிர்ந்து வாழ்கின்ற இனமாக உணர்வுகள் சூழ்ந்த இனமாக இந்த மண்ணிலே நாம் வாழவேண்டும்.

யாழ்ப்பாணம் இந்துக்கலர்லூரியின் மாணவன் ஒருவன் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த மாணவனிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு உணர்வு என்பது என் உள்ளத்தில் மட்டும் இருந்து வந்தால் போதுமானது தாய்தந்தையிரிடம் கேட்கவேண்டும் என்று நான் யோசிக்கவில்லை. இங்கே எனது இனம் அழிக்கப்படுகிறது. என் இனத்தின் அடையாளங்கள் தொலைக்கப்படுகிறது அதனால் இந்தப்போராட்டத்தில் குதித்து இருக்கின்றேன் என்றும் குறிப்பிட்டிருந்தான்.

இந்த செய்தியெல்லாம் நாங்கள் இன்னும் இன்னும் எத்தனையோ இடர்களை சந்திக்கப்போகின்றோம்.சிங்கள பௌத்த அரசுகளால் சூழப்பட்டுள்ள இந்த நிலை மிகப் பெரிய கேள்விகளை எங்கள் முன்னால் வைத்திருக்கிறது. இவற்றுக்கெல்லாம் அஞ்சாது சோரம் போகாதவர்களாக வாழவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

“ சிங்கள இனத்தின் பூர்வீகத்தினை விடவும் நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழினம் இன்றும் தேற்றுவாரற்று, நீதியற்று கையறுநிலையில் இருக்கிறது ” – ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு சிவஞானம் சிறிதரன் கடிதம் !

“சிங்கள இனத்தின் பூர்வீகத்தினை விடவும் நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழினம் இன்றும் தேற்றுவாரற்று, நீதியற்று கையறுநிலையில் இருக்கிறது ” என ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

ஈழத்தமிழர்களாகிய நாங்கள் இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட பின்னர், கடந்த பத்து ஆண்டுகளாக நீதியை எதிர்பார்த்து போராடிக்கொண்டிருக்கின்றோம் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். பாதிக்கப்பட்ட தரப்பான நாம் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் முன்மொழியப்பட்ட பொறிமுறைகளின் ஊடாக நீதியான விசாரணை நடைபெறும் என்று பெரு நம்பிக்கை கொண்டிருந்தோம்.

உள்நாட்டில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் உள்ளிட்ட முன்னேற்றகரமான விடயங்கள் நடைமுறைச்சாத்தியமாகும் என்று எதிர்பார்த்திருந்தோம்.

ஆனால் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 30.1 பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அதில் முன்மொழியப்பட்ட விடயங்களை இலங்கை அரசாங்கம் தனது ‘இறைமையை’ காரணம் காட்டி நிராகரித்து விட்டது. இதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் மக்கள் எதிர்பார்த்த பொறுப்புக்கூறும் செயன்முறை தேக்க நிலையிலேயே உள்ளது.

வடக்கு கிழக்கினை பூர்வீக தாயகமாக கொண்ட தமிழினம் சிங்கள இனத்தின் பூர்வீகத்தினை விடவும் நெடிய வரலாற்றைக் கொண்டது. அத்துடன் தமிழினம் தனித்துவ கலாசார, பண்பாடுகளையும், இறைமையையும் கொண்டதாகும். அத்தகைய மூத்த பூர்வீக இறைமையைக் கொண்ட தமிழினம் இன்றும் தேற்றுவாரற்று, நீதியற்று கையறுநிலையில் இருக்கிறது. “ சிங்கள இனத்தின் பூர்வீகத்தினை விடவும் நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழினம் இன்றும் தேற்றுவாரற்று, நீதியற்று கையறுநிலையில் இருக்கிறது ”

2010இல் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூனுக்கு இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழங்கிய வாக்குறுதி, இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட கற்றுத்தந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் இணை அணுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30.1, 34.1, 40.1 தீர்மானங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் தற்போது ஆட்சியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.

இவ்வாறான நிலையில் புதிய அரசியல் சாசன உருவாக்கம் மற்றும் இதர சில பொருளாதார விடயங்களை மையப்படுத்தி உள்ளகத்தில் தமிழர்கள் உட்பட சிறுபான்மை தேசிய இனங்களை அடிமைப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்கும் ஏககாலத்தில் சர்வதேசத்திற்கு அவை குறித்து வேறொரு பிம்பத்தை காண்பிப்பதற்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்பதை தாங்கள் அறியாதவர் அல்லர்.

இந்நிலையிலிருந்து தமிழர்களைக் காப்பாற்ற ஐக்கிய நாடுகள் சபையினால் மட்டுமே முடியும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களினதும் ஏகோபித்த நம்பிக்கை ஆகும். அதனடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் பொறுப்புக்கூறலை மறுதலித்து வரும் இலங்கை அரசாங்கம் தொடர்பில் புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிஸ் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சரா ஹல்டன் ஆகியோர் திடமாக தெரிவித்துள்ளனர்.

அந்தக் கூற்றுக்கள் எமக்கு நம்பிக்கை அளிக்கும் அதேசமயம் தாங்கள் இலங்கையின் சமகால நிலைமைகளையும் இனவழிப்பின் நேரடிச் சாட்சியங்களையும் நேரடியாக கண்டிருப்பவர் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினை வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றினுள் வைத்திருப்பதற்கான அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று விநயமாக கேட்டுக் கொள்கின்றேன். அதுமட்டுமன்றி, கடந்த ஐ.நா.தீர்மானங்களின்போது பாதிக்கப்பட்ட தரப்பாக இருக்கும் தமிழினம் என்பது தெளிவாக குறிப்பிடப்படாத நிலைமையொன்று காணப்படுகின்றது. அவ்விதமான மயக்க நிலைமைகளைத் தவிர்க்கும் வகையில் புதிதாக அமையும் பிரேரணை காணப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கும் எனது மக்களுக்கும் அதீதமாக உள்ளது.

அந்த விடயம் குறித்து தாங்கள் கரிசனை செலுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன் சாத்தியமான நீதிப் பொறிமுறை ஒன்றினூடாக ஐக்கிய நாடுகள் சபையும், அதன் உறுப்பு நாடுகளும் அதியுச்ச அழுத்தத்தை இலங்கைக்கு கொடுப்பதன் மூலம் மட்டுமே நீதி, நியாயம் உள்ளிட்டவை நிலைநாட்டப்படும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

எனது மக்கள் சார்ந்து நான் இத்தால் தங்களிடத்தில் முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பாக மிகக்கூடிய கரிசனையை செலுத்துவீர்கள் என்ற பெரும் நம்பிக்கையுடன் இக்கடிதத்தை சமர்ப்பிக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.