சி.வி.விக்னேஸ்வரன்

சி.வி.விக்னேஸ்வரன்

“கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றிலே பறக்க விடும் ரணில் விக்கிரமசிங்கவை நம்ப முடியாது.” – ஜனாதிபதியின் முன்னாள் சகபாடி சி.வி. விக்னேஸ்வரன் !

ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு விஜயம் அரசியல் ரீதியானது. அவரது வருகையால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கபோவதில்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு விஐயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஜனாதிபதியின் வடக்கு விஐயம் தொடர்பில் தெற்கில் இருக்கும் கட்சிகள் கூட பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து இருக்கின்றன. குறிப்பாக அவர் மக்களுடைய பணத்தைச் செலவழித்து வீணாக வடக்குச் சென்று இருக்கின்றார் என்றும், இதனால் மக்களுக்கு எதுவும் கிடையாது என்றும் பல குற்றச்சாட்டுகளை அந்தக் கட்சிகள் முன்வைத்திருக்கின்றன.

அரசியல் நோக்கமாகவேதான் அவர் இங்கு வந்திருக்கின்றார் என்பது உண்மையிலேயே எல்லோருக்கும் தெரியும். அவருடைய செயற்பாடுகளும் அதனையே வெளிப்படுத்தி இருக்கின்றன. ஆனால், எங்களுக்கு இதில் மன வருத்தத்தைத் தருகின்ற விடயம் என்னவென்றால் அரசியல் ரீதியாக சில நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்தபோது அதைத் தருகின்றோம், இதைத் தருகின்றோம் என்றெல்லாம் எங்களுக்கு அவர் கூறியிருந்தார்.

ஆனால், இங்கே வந்திருந்து பொருளாதார முன்னேற்றம் தொடர்பாகவும், அபிவிருத்தி வேலைத்திட்டம் சம்பந்தமாகவும் அவர் பேசி இருக்கின்றார். அதுவும் எங்களிடத்தே சொல்லியது போல் மக்களிடத்தேயும் அதைத் தருவேன், இதைத் தருவேன், அதைச் செய்வேன் என்பதாக அவர் சொல்லியிருக்கின்றார். எனினும், இதற்குரிய பணத்தை எங்கிருந்து எடுக்கப் போகின்றாரோ தெரியவில்லை. பணத்தை எங்கிருந்து, எந்த நாட்டில் இருந்து எடுக்கப் போகின்றார் என்றோ அல்லது இலங்கையில் அவ்வளவு பணம் இருக்கின்றதா என்றோ எனக்குத் தெரியவில்லை.

ஆனால், ரணில் விக்ரமசிங்க இதுவரையில் சொன்ன வேலைத்திட்டங்கள் அல்லது வாக்குறுதிகள் ஒன்றும் நடைமுறைப்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆகவே, இங்கு வந்து அவர் செல்வதில் எந்தவிதமான நன்மைகளும் நமது மக்களுக்குக் கிடைக்கப்போவதில்லை.

இந்த அரசைப் பொறுத்தவரையிலோ அல்லது ஜனாதிபதியை பொறுத்தவரையிலோ வடக்குக்கான இந்த விஐயம் என்பது பல்ஸை (பல்ஸ்) பார்ப்பதாகத்தான் அமைந்திருந்தது. இதற்கு என்ன விதமான வரவேற்பு தனக்கு இருக்கும் என அறிவதாகக் கூட அவருடைய விஜயம் அமைந்திருக்கலாம். ஆனால், முன்னரைப் போன்று அவருக்கு ஆதரவு இங்கே இல்லை என்றுதான் நான் நினைக்கின்றேன்.

அவருடைய வருகை அரசியல் ரீதியானது என்பது வெளிப்படை. ரணிலின் வருகையால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்காது. தானே கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றிலே பறக்க விட்டுவிட்டு இங்கு வந்து புதிதாக வாக்குறுதிகளைக் கொடுக்கும் ஒருவரை நாங்கள் நம்புவது மிகக் கடினமானது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒருபறமிருக்க ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பொறுப்பேற்ற போது தமிழ்தேசியம் பேசிய கட்சிகள் அவரை ஆதரிக்காத போதும் சி.வி. விக்னேஸ்வரன் ஆதரவு வழங்கியிருந்தமையும் கவனிக்கத்தக்கது.

“கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜனாதிபதி பொதுவேட்பாளராகக் களமிறங்கினால், நான் அவருக்கே வாக்களிப்பேன்.” – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழர்களின் பிரச்சினைகளை உலகுக்கு எடுத்துரைப்பதற்கும், சிங்கள வேட்பாளருக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கப்பெறாமல் தடுப்பதற்கும் மும்மொழிகளிலும் தேர்ச்சிபெற்ற தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

‘எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படவேண்டுமென நீங்கள் கூறியிருக்கின்றீர்கள். இருப்பினும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றார். இதுபற்றிய உங்களது கருத்து என்ன?’ என்று எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

எப்போதும்போல் இதிலும் அவரது கருத்து நடைமுறைக்குச் சாத்தியமானதல்ல. விடுதலைப்புலிகள் இருந்தபோது தேர்தல் பகிஷ்கரிப்பு வெற்றியடைவதை அவர்களால் உறுதிசெய்யமுடிந்தது. ஆனால் வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தேர்தல் பகிஷ்கரிப்பு வெற்றியடைவதை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் எவ்வாறு உறுதிசெய்யமுடியும்?

அதேபோன்று சிங்கள தேசிய கட்சிகளுக்கு ஆதரவான ஏனைய உள்ளகத்தரப்பினர் வாக்களிப்பதைத் தடுக்கமுடியாது. எனவே தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு கோருவதன் மூலம் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கான தனது ஆதரவினை கஜேந்திரகுமார் உறுதிப்படுத்த விரும்புகின்றாரா?

ஏற்கனவே கடந்த பொதுத்தேர்தலின்போது யாழ்மாவட்டத்துக்கான வாக்கு எண்ணும் பணிகளில் பல்வேறு குழறுபடிகள், தவறுகள் இடம்பெற்றதாகக் கூறுப்படுகின்றது.

இந்நிலையில் தேர்தல் பகிஷ்கரிப்பு இடம்பெற்றால், வேறு எதனைத்தான் செய்யமுடியாது? வாக்களார்கள் வீட்டில் இருக்கும்போது அவர்களது வாக்குகள் மாத்திரம் பயன்படுத்தப்படும்.

தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலம் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறுவதை உறுதிப்படுத்தமுடியாது. அநேகமான பத்திரிகைகள் குறிப்பிடத்தக்களவிலான வாக்குப்பதிவு இடம்பெறவில்லை என்றே செய்தி வெளியிடும். அல்லது அரசியல் கட்சிகள் அவற்றின் இராணுவத்தின் துணையுடன் போதிய நடவடிக்கைகளை எடுத்தால், தமிழர்கள் தேர்தலைப் பகிஷ்கரித்து வீட்டில் இருந்தாலும் போதிய வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகவே செய்திப்பத்திரிகைகள் கூறும்.

அதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைப் போன்று மும்மொழிகளையும் அறிந்த ஒரு பொதுவேட்பாளரால் தமிழ்மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றமுடியும். வாக்காளர்கள் மத்தியில் இடம்பெறக்கூடிய ஆள்மாறாட்டத்தையும் குறைக்கமுடியும். போதியளவான வாக்குப்பதிவு இடம்பெறுவதை உறுதிசெய்யமுடியும்.

மேலும் மும்மொழிகளையும் அறிந்த பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்குவதன் மூலம் தொலைக்காட்சிகளில் வேட்பாளர் ஒருவருக்காக ஒதுக்கப்படக்கூடிய நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளமுடியும். இன்றளவிலே சிங்களமொழி மூலமான எந்தவொரு ஊடகமும் குறிப்பாக வட, கிழக்கு தமிழர் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில்லை.

ஆங்கில ஊடகங்கள்கூட எமது பிரச்சினைகளை வெளியிடுவதில் பின்நிற்கின்றன. ஆகவே தமிழர்கள் சார்பில் களமிறங்கும் பொதுவேட்பாளர் எமது பிரச்சினைகள் குறித்து சிங்களமக்களுக்குத் தெளிவுபடுத்தக்கூடியவகையில் தமக்குரிய தொலைக்காட்சி நேரத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

அதேபோன்று தமிழ் பொதுவேட்பாளர் மூலம் எந்தவொரு சிங்கள வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெறுவதைத் தடுக்கமுடியும். அத்தோடு சிங்களமக்கள் பலர் தமது இரண்டாம் விருப்புவாக்கை தமிழ் வேட்பாளருக்கு அளிக்கக்கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

ஆகவே எமது பிரச்சினைகளைப் பரந்த அடிப்படையில் உலகுக்குத் தெரியப்படுத்துவதற்கு தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் நிச்சயமாகக் களமிறக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுவேட்பாளராகக் களமிறங்கினால், நான் அவருக்கே வாக்களிப்பேன். ஆனால் அதற்கு அவர் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்களமக்களை அறிவூட்டக்கூடிய விதத்தில் தொலைக்காட்சியில் சிங்களமொழியில் உரையொன்றை நிகழ்த்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

“சிங்கள பெண்ணை திருமணம் செய்து சிங்களவராகவே வாழ்ந்த விக்கினேஸ்வரன் இன்று தமிழராக நடிக்கிறார்.” – சரத் பொன்சேகா

“இலங்கை ஒற்றையாட்சி நாடாகும், இங்கு சமஷ்டிக்கு இடமில்லை, இங்கு வாழ முடியாவிட்டால் பிரித்தானியாவில் போய் வாழுங்கள்.” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சமஷ்டி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் தென்பகுதி அரசியல்வாதிகள் பலர் தங்களது எதிர்க் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

விக்னேஸ்வரன் சிங்களப் பெண்ணை திருமணம் செய்துள்ளார், பிள்ளைகளும் சிங்கள வழியில் வாழ்கின்றனர், தெற்கில் படித்துள்ளார், தெற்கில் தொழில் செய்தார், தற்போது தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர் போல் நடித்துக் கொண்டிருக்கிறார், அவர் ஒரு சிறந்த சந்தர்ப்பவாதி.

இவ்வாறு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மான் சின்னத்தில் இணையும் விக்கி – மணி கூட்டணி !

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் அணியினர் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.

மான் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இரு தரப்பும் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டணியின் கலந்துரையாடலில் இருந்து சி.வி விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

“மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையேயான போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு உறவை கட்டி எழுப்பப்பட வேண்டும்.” – சி.வி.விக்னேஸ்வரன்

“மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையேயான போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு உறவை கட்டி எழுப்பப்பட வேண்டும்” என தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

திருகோணமலைத் துறைமுகத்தில் சீன ஆதிக்கம் பெருக விடாது தடுப்பதே இந்தியாவுக்கு பாதுகாப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தில் துறைமுகம்சார் பாரிய கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கம் கொண்ட பாரிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கான சாத்தியப்பாடுகள் கண்டறியப்பட்டு அவற்றை இந்திய அரசும் முதலீட்டாளர்களும் விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்றார்.

இதன் மூலம் வட கிழக்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி மலையக தமிழ் இளைஞர் யுவதிகள் பலரும் பெருநன்மையடைவர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்கள் தாயகத்தில் முதலிட முன் வரும்போது தென்னிந்தியாவைச் சேர்ந்த தொழில் முனைவாளர்கள், உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்கள், சேவைத்துறை சார்ந்தவர்களுடன் இணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், இந்தியாவுடன் இலகுவில் இணைக்கப்படக் கூடிய மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையேயான போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு உறவை கட்டி எழுப்பப்பட வேண்டும் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

“மாவை சேனாதிராஜாவின் தலைமைத்துவத்தை ஏற்கத்தயார்.”- சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் நன்மை கருதி, தற்போது தமிழ் கட்சிகள் சேர்ந்தே பயணிக்க வேண்டும் எனவும் அதற்கு மாவை சேனாதிராஜாவின் தலைமைத்துவத்தை ஏற்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற 6 பேரின் கூட்டணிக்கு மாவை சேனாதிராஜா தலைமை வகிப்பதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அவர் சிரேஷ்ட உறுப்பினர் என்பதால், அதற்கு பொருத்தமானவர். ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு விடயங்களை எடுத்துக்கூறும் விவகாரத்தை இணைந்து மேற்கொள்ள வேண்டும். தனித்து போட்டியிட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் சிலர் கூறினாலும் மக்களின் நலன் கருதி இந்த காலகட்டத்தில் சேர்ந்து போவது தான் சிறந்தது என்ற முறையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல் அல்லவெனவும் உத்தியோகபூர்வ கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்து தமக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தமக்கு கடிதம் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதே நேரம் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்றாலும் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் எனவும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

“இராணுவத்துக்கு 530 பில்லியன் ரூபா ஒதுக்கிவிட்டு கல்வி, சுகாதார துறைகளுக்கு குறைந்தளவு நிதியை ஒதுக்கியுள்ளார்கள்.”- சி.வி.விக்னேஸ்வரன்

“530 பில்லியன் ரூபா பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அளவுக்கதிகமான இராணுவத்தினருக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதே தவிர மக்களுக்காக அல்ல.” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  பாதுகாப்பு  அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வரவு செலவுத் 530 பில்லியன் ரூபா பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அளவுக்கதிகமான இராணுவத்தினருக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதே தவிர மக்களுக்காக அல்ல.

2009 க்கு பின்னர் இராணுவத்தினருக்கான செலவு குறையும் என்று எதிர்பார்த்தாலும் ஒவ்வொரு வருடமும் இது அதிகரித்துக்கொண்டே போகின்றது. கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு குறைந்தளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை சமூக பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது இது தொடர்பில் கேள்வியெழுப்புகின்றனர். மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாதுகாப்பு செலவீனம் வருடாந்தம் அதிகரிக்கின்றது. இவ்வாறு பாதுகாப்புக்கான செலவீனம் அதிகரிப்பதன் ஊடாக வடக்கு ,கிழக்கில் இன்னும் சமாதானம் ஏற்படவில்லை என்பதனையே காட்டுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவம் மக்களின் காணிகள், விவசாய காணிகளை கைப்பற்றி வைத்திருக்கின்றது. மக்களுக்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் காணிகள் அதிகளவில் இராணுவத்தினர் வசமுள்ளது. மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர்.

மாகாண சபைகள் மக்களுக்காக நல்ல வேலைத்திட்டங்களை கொண்டு வந்த நிலையில் இராணுவம் காணிகளை கைப்பற்றி செயற்படுகின்றது. மேலும் வடக்கில் இராணுவ முகாம்கள் மற்றும் சோதனை சாவடிகள் இருக்கின்றன. இங்குள்ள காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும்.

நியாயமான அதிகார பரவலாக்கத்துடனான  சமஷ்டி அரசியலமைப்பே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும். ஒற்றையாட்சி முறைமை அமுலில் இருக்கும் வரை புலம் பெயர் தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை, நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வரவு செலவுத்திட்டத்தில் அவதானம் செலுத்தப்படாமல் இருப்பது பிரதான குறைப்பாடாக கருதப்படுகிறது.

இதேவேளை ஒற்றையாட்சிக்குள் இருந்துகொண்டு வெளிநாட்டு தமிழர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாது. வடக்கு, கிழக்கிற்கு நீதி வழங்க வேண்டும். எங்களுடைய தேவைகள் எங்களுக்கு முன்னுரிமையதாகவே இருக்குமே தவிர மத்திய அரசுக்கு தேவையானதாக இருக்காது.

ஒற்றையாட்சியை முடிவுக்கு கொண்டு வந்து நியாயமான அதிகார பகிர்வை செயற்படுத்த வேண்டும். இதன்படி சமஷ்டி அரசியலமைப்பே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும் என்றார்.

ரணில் அரசாங்கத்தின் தேசிய பேரவையில் சி.வி.விக்கி, கஜேந்திரகுமார் – தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயல் என்கிறது கூட்டமைப்பு!

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில், சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்து கொண்டுள்ளமையானது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை களுத்துறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு விசனம் வெளியிட்டுள்ளார்.

சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்வதானது தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.” என தெரிவித்துள்ளார்.

……………………….

கடந்த நல்லாட்சி அரசு காலத்திலும் சரி, 2009ஆம் ஆண்டு முதல் மகிந்தராஜபக்ச தரப்பினரையும் எதிர்க்கவும் சரி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினருடன் இரா.சாணக்கியன் அங்கத்துவம் வகிக்கும் தமிழ்தேசியகூட்டமைப்பு இணைந்து செயலாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கடந்த பல ஆண்டுகளாக ரணில் விக்கிரமசிங்க தமிழர் தேசியபிரச்சினைக்கு தீர்வு வழங்ககூடிய தலைவர் என கூறி வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் ரணில் அரசாங்கத்தின் தேசிய பேரவையில் இணைந்தது தொடர்பில் இரா.சாணக்கியன் விசனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட புதிய பிரேரணை திருப்தியளிப்பதாகவில்லை – சி.வி.விக்னேஸ்வரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், அதற்கு முன்னதாகவே இம்முறை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வலியுறுத்தவேண்டுமெனவும் அதற்கேற்றவாறான மிகவும் வலுவான பிரேரணையொன்றை பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் கொண்டுவரவேண்டுமென்றும் பெரும்பாலான தமிழ்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.

அந்தவகையில் இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை வரைவு சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ள நிலையில், அதன் உள்ளடக்கம் திருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளதா என்று வினவியபோது

இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பில் பெருமளவிற்குத் திருப்தியடையமுடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள பிரேரணையில் நாம் எதிர்பார்த்ததை விடக் குறைந்தளவிலான விடயங்களே உள்ளடக்கப்பட்டுள்ளன. மிகமுக்கியமாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தப்படுமென எதிர்பார்த்தபோதிலும், அவ்விடயம் உள்ளடக்கப்படவில்லை. அதேபோன்று அரசியல் காரணங்களுக்காகவும் வெறுமனே வாக்குமூலங்களின் அடிப்படையிலும் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தப்படும் என்றும், பயங்கரவாத்தடைச்சட்டம், காணி அபகரிப்பு மற்றும் இராணுவயமாக்கல் ஆகிய விடயங்கள் தொடர்பில் வலுவான கருத்துக்கள் முன்வைக்கப்படும் என்றும் எதிர்பார்த்தோம். இருப்பினும் அத்தகைய கருத்துக்கள் உள்ளடக்கப்படவில்லை.

இப்பிரேரணையில் பல்வேறு விடயங்கள் எமக்குச் சார்பானவையாக அமையாதபோதிலும், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் புதிதாகக் கொண்டுவரப்படும் ஒவ்வொரு பிரேரணைகளும் சற்று முன்னேற்றகரமானவையாகவே காணப்படுகின்றன. எனவே இலங்கை தொடர்பில் எதிர்வருங்காலங்களில் கொண்டுவரப்படக்கூடிய பிரேரணைகள் மேலும் காத்திரமான விடயங்களை உள்ளடக்கிய வலுவான பிரேரணைகளாக அமையவேண்டியது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.

“பாராளுமன்றம் தமிழீழத் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு தீர்வைத் தராது.” – சி.வி.விக்னேஸ்வரன்

“நாங்கள் எங்கள் மக்களுக்கு உணர்வூட்டுவதிலும் பார்க்க அவர்களுக்கு அறிவூட்ட வேண்டும். எமது அரசியல் போராட்டங்களுக்கு மக்களின் நேரடி நடவடிக்கைகளே வலுச் சேர்க்கக்கூடும். இனிவருங்காலத்தில் பாராளுமன்றத்தில் பேசுவதால் விளையும் நன்மை மிகக் குறைவே. ஆனால் மக்களுக்குப் பிழையான அரசியல் அறிவைப் புகட்டக்கூடாது. ஆகவே பாராளுமன்றம் தமிழீழத் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு தீர்வைத் தராது.” என  சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஆறு கட்சிகள் இணைந்து நேற்று நடத்திய ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும் கருத்தரங்கு நேற்று கல்வியங்காடு இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும்போதே விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“சென்ற வாரம் இந்தியப் பத்திரிகையொன்றின் இலத்திரனியல் ஊடகத்திற்கு ஒரு பேட்டி அளித்தேன். அங்கு நான் கூறிய ஒரு விடயம் பத்திரிகைகளில் வெளிவரவில்லை. அதனை இப்பொழுது  உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

இதுகாறும் பிரிந்து நின்ற ஆறு கட்சிகளும் எவ்வாறு ஒருமித்து அந்தக் கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுத முடிந்தது என்று செவ்விகண்டவர் என்னிடம் கேட்டார்.

அதற்கு நான், எமது அரசியல் குறிக்கோள்களைப் பொறுத்தவரையில் எமக்குள் அதிகம் வித்தியாசம் இல்லை என்றேன். அவற்றை அடையும் மார்க்கம் பற்றியே எமக்குள் முரண்பாடுகள் உண்டு என்றேன். அதை விளக்குமாறு கோரப்பட்ட போது, நான், எமது தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்துமே ‘ஒற்றையாட்சி வேண்டாம் சமஷ்டி ஆட்சி முறையே வேண்டும்’ என்று தான் கோரி வருகின்றோம் என்றேன்.

எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஒருபடி மேலே போய் கூட்டு சமஷ்டியை எமது குறிக்கோளாகக் குறிப்பிட்டுள்ளோம் என்றேன். ஆகவே எமது குறிக்கோள் ஒன்றே அதனை அடையும் விதத்தில் எமக்குள் வேற்றுமைகள், வித்தியாசங்கள், முரண்பாடுகள் உண்டு என்றேன். நான் அங்கு கூறியதை இங்குள்ள அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகின்றேன். ஏதோ காரணத்திற்காக செவ்வி கண்டவர் இக்கேள்வியையும் பதிலையும் தணிக்கை செய்துவிட்டார்.

ஆகவே முக்கியமான ஒரே குறிக்கோளை வைத்திருக்கும் எமது ஆறு கட்சிகளும் இன்று இந்த கருத்தரங்கத்தை ஒருமித்து நடத்துவதில் வியப்பொன்றுமில்லை.

இந்தியாவிற்கெதிரான கருத்துடைய எமது 24 கரட் கட்சி, அதன் தாய்க் கட்சியின் யாப்பு இன்று வரையில் ஒற்றையாட்சியே எமக்கு வேண்டும் என்று கூறினாலுங்கூட, தேர்தல் காலத்தில் சமஷ்டியே தமது குறிக்கோள் எனக் கூறி வருகின்றார்கள். ஆகவே அவர்களும் கொள்கை ரீதியாக எங்களுடன் தான்! மலை உச்சியில் இருந்து உண்மை உணர்ந்து அவதரணம் செய்து மக்களுடன் மக்களாக நின்று சிந்தித்து எங்கள் எல்லோருடனும் ஒருங்கிணைந்து செயலாற்ற அக்கட்சி ஒத்துக் கொண்டிருந்தால் எமதுமக்களின் அரசியல் பலம் இன்னும் மேலோங்கியிருக்கும். இப்பொழுதும் காலம் கடந்துவிடவில்லை என்று அவர்களுக்கு இந்த உரையின் ஊடாக அன்புடன் எடுத்துக்கூறிவிட்டு இன்றைய தலையங்கத்திற்கு வருகின்றேன்.

‘ஈழத் தமிழர் தீர்வில் நாடாளுமன்றத்தின் வகிபாகம்’ என்பது தலையங்கம். எனவே தமிழ்ஈழத் தமிழருக்கு அப்பாற் போய் இலங்கை எங்கிலும் வாழும் சகல தமிழ் மக்களையும் உள்ளடக்கியே தலையங்கம் நிற்பதை நாங்கள் அவதானிக்க வேண்டும். தமிழீழம் என்றால் இலங்கையின் வடக்கு கிழக்கையே அச் சொல் குறிக்கும். ஈழம் என்றால் முழு இலங்கையையும் குறிக்கும். எனவே வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கு அப்பால் சென்று மலையகத் தமிழர்களையும் வடக்குகிழக்கு தவிர்ந்த கொழும்புத் தமிழர்களையும் உள்ளடக்கிய மற்றைய மாகாணத் தமிழ் மக்களையும் ஒன்று சேர்த்தே மேற்படி தலையங்கம் தரப்பட்டுள்ளது. அதாவது பொதுவாக இந்நாட்டின் தமிழ் மக்களின் தீர்வில் பாராளுமன்றத்தின் வகிபாகம் என்னவாக இருக்கலாம் என்பதே கேள்வி. அப்படித்தான் நான் இந்தத் தலையங்கத்தைப் புரிந்து கொண்டுள்ளேன். எனினும் நான் பொதுவாகவும் தமிழீழத் தமிழர்கள் பற்றி சிறப்பாகவும் சிந்தித்துப் பேச விழைகின்றேன்.

 

எமக்கு சுதந்திரம் கிடைத்த காலத்தில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக இருக்க மற்றைய மாகாணங்களில் சிங்களவர்கள் பெரும்பான்மையினராக இருந்தார்கள்.

ஆகவே தமிழ்ப் பேசும் வட கிழக்கு மாகாணம் ஒரு அலகாகவும் மற்றைய மாகாணங்கள் இன்னொரு அலகாகவும் மொழிவாரியாகக் காணப்பட்டன.

எனவே நாடு பிரித்தானியரால் அவ்வாறே பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு மொழிவாரியாகப் பிரித்துப் பார்த்திருந்தால் சமஷ்டி முறையிலான அரசியல் யாப்பு கட்டாயமாகத் தரப்பட்டிருக்கும். ஏனென்றால் கண்டியர்கள் கூட சமஷ்டியையே விரும்பினார்கள்.

அவ்வாறு இலங்கைக்குச் சமஷ்டி வராது செய்தவர்தான் இலங்கை தேசத்தின் தந்தை என்று சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டுவரும் டி.எஸ்.சேனநாயக்க அவர்கள்.

அவரே இலங்கையின் முதல் பிரதம மந்திரியானார். ஆனால் அவர் தனது திருகுதாளங்களை சுதந்திரம் கிடைக்க முன்னரே தொடங்கியிருந்தார்.

தமிழ் மக்களுக்கு எதிரான முதல் சதி அவராலும் பின்னர் ஆளுநர் நாயகமாக பதவி வகித்த சேர். ஒலிவர் குணதிலகவாலுமே தான் இயற்றப்பட்டது. அவர்கள் இருவரும் எப்படியாவது இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாக ஆங்கிலேயர்களால் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற திடமான நினைப்பில் இருந்தார்கள்.

அதனால்தான் 1943ல் பிரித்தானியா கூடிய அதிகாரங்களை இலங்கைக்கு வழங்க இருப்பதாக அறிவித்த பின் சேர் ஜவர் ஜெனிங்க்ஸ் என்ற அரசியல் யாப்பு சட்ட நிபுணருடன் சேர்ந்து இலங்கையின் சிறுபான்மையினர் எவருடனும் கலந்தாலோசியாது ஒரு ஒற்றையாட்சி அரசியல் யாப்பு வரைவை இலங்கைக்கெனத் தயாரித்து பிரித்தானிய கொலனி ஆதிக்க அரசிற்கு அவசர அவசரமாக கொண்டுபோய்ச் சேர்த்தார்கள்.

அப்படியிருந்தும் கொலனி அரசாங்கம் சிறுபான்மையினரை கலந்தாலோசியாது தமக்கு தரப்பட்ட வரைபை ஏற்காது சோல்பரி பிரபுவின் தலைமையில் ஒரு ஆணைக்குழுவை இங்கு அனுப்ப ஆயத்தமானார்கள். இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற சேனநாயக்காவும் குணதிலகாவும் இரண்டாவது சதியில் இறங்கினார்கள்.

இலண்டன் சென்று ஆணையாளர்களைச் சந்தித்து அவர்களைத் தம்பக்கம் ஈர்ப்பதே அந்தச்சதி. ஆணையாளர்கள் இங்கு வருமுன் சேர் ஒலிவர் குணதிலக இலண்டன் சென்று ஒலிவர் ஸ்டன்லி என்ற பிரித்தானிய மாநில செயலாளரைச் சந்தித்து அவருக்கூடாக சோல்பரி பிரபுவைச் சந்தித்து தமது வரைவே இலங்கைக்குச் சிறந்தது என்ற கருத்தை முன்கூட்டியே ஆணைக்குழுத் தலைவரின் மனத்தில் ஆழப்பதியப் பண்ணினார்.

இவ்வளவையும் மறைமுகமாகச் செய்துவிட்டு இருவரும் மூன்றாவது சதியில் இறங்கினார்கள். 22.12.1944ல் சோல்பரி ஆணைக்குழுவினர் இங்கு வந்தபோது டி.எஸ். சேனநாயக்கா ‘இந்த ஆணைக்குழு எமக்கு வேண்டாம்’ என்ற ஸ்லோகத்தை எழுப்பி அதிகாரபூர்வமாக ஆணைக்குழுவை பகிஷ்கரித்தார்.

இதன் காரணம் கண்டியர்களாலும் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க போன்றவர்களாலும் தமிழர்களாலும் சமஷ்டி முறை பற்றி சமர்ப்பணங்கள் எழலாம் என்பதால். அவ்வாறான சமர்ப்பணங்களைத் தடுக்கவே இவ்வாறு செய்தார்.

ஆகவே கண்டியர்களும் பண்டாரநாயக்கவும் பொன்னம்பலமும் சமஷ்டியை முன்வைக்க முன் பகிஷ்கரிப்பின் மூலமாக அவர்களின் வாய்களை டி.எஸ்.சேனநாயக்க அடைத்துவி;ட்டார். இவ்வளவுக்கும் ஏற்கனவே தமது வரைவை ஆணையாளர்கள் ஏற்கவேண்டும் என்பதற்கான பூர்வாங்க ஆயத்தங்களை டி.எஸ்.சேனநாயக்கவும் சேர் ஒலிவரும் சேர்ந்து செய்த பின்னர் தான் பகிஷ்கரிப்பு நடந்தது.

சமஷ்டியை ஆதரிக்கவேண்டிய ஜி.ஜி.பொன்னம்பலம் தன் கெட்டித்தனத்தை வெளிக்கொண்டு வருவதுபோல் 50 க்கு 50ஜ முன்வைத்தார். அவர் சமஷ;டியை முன்வைத்திருக்கலாம். ஆனால் அவரின் 50க்கு 50ஐ ஆணைக்குழு நிராகரித்தது.

ஒற்றையாட்சி முறையை ஆதரித்து தமது அறிக்கையை அவர்கள் வெளியிட்டனர். சேனநாயக்க மீனுக்கு வாலையும் பாம்புக்குத் தலையையும் காட்டி தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டார்.

சேர் ஐவோர் ஜெனிங்ஸ் ஒருமுக்கிய கருத்தை அப்போது வெளியிட்டிருந்தார்-‘சோல்பரி ஆணையாளர்களின் சிபார்சு என்று புதிய அரசியல் யாப்பு வரைவு அழைக்கப்பட்டாலும் உண்மையில் திரு.சேனநாயக்காவின் வரைவே அது’ என்றார்.

‘செனட் சபை மட்டுந்தான் ஆணையாளர்களின் சிபார்சு’ என்று கூறினர். (ஹுலுகல்ல 2014 ல் எழுதிய நூலின் 177ம் பக்கத்தில் இவையாவும் கூறப்பட்டுள்ளன.

திரு.செல்வேந்திரா சபாரட்ணம் அவர்களால் விரைவில் வெளியிடப்படப் போகும் நூலிலும் இவை முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளன.

ஆகவே பாராளுமன்றத்தின் வகிபாகம் என்று நாங்கள் ஆராயும் போது அதன் பின்னணியில் நடைபெற்ற பல திருகுதாளங்களை நாங்கள் மனதில் வைத்தே இக் கருப்பொருளை நோக்கவேண்டும்.

பாராளுமன்றத்தின் வகிபாகம் பற்றிப் பார்க்கும் போது 1972ம் ஆண்டின் குடியரசு அரசியல் யாப்பு பாராளுமன்றத்தில் இயற்றப்படும் வரையில் பாராளுமன்றமே தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் முக்கிய பங்கு வகித்தது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. 1948ம் ஆண்டின் அரசியல் யாப்பு தனது உறுப்புரை 29(2)ன் மூலமாக சிறுபான்மையினரின் உரித்துக்களை ஓரளவு பாதுகாக்க எத்தனித்தது.

ஆகவே சிங்கள பெரும்பான்மையினரின் ஆதிக்க நடவடிக்கைகளைப் பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டி பெரும்பான்மையினரை ஓரளவு பின்வாங்கச் செய்யக் கூடியதாக இருந்தது. அப்படியிருந்தும் ‘சிங்களம் மட்டும்’ சட்டம் உறுப்புரை 29(2)ன் ஏற்பாடுகளுக்கு முரணாக பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இது சிறுபான்மையினருக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தாலும் தொடர்ந்து பாராளுமன்றமே தமிழ் மக்களின் உரித்துக்களுக்கான போராட்டத் தளமாக தொடர்ந்து இருந்து வந்தது.

அடுத்த காரணம் 1972 வரையில் கூட பாராளுமன்றத்தில் ஆங்கில மொழியே கோலோச்சி வந்தது. அதன் காரணத்தினால் சகல இன மக்களும் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே பேசியதால் உடனுக்குடன் இரு தரப்பாரின் கருத்துக்களும் மற்றையவர்களால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. கருத்துப் பரிமாற்றங்கள் மூன்றாம் நபரான மொழி பெயர்ப்பாளர் உதவியின்றி நேரடியாக நடைபெற்றன.

1972ம் ஆண்டின் முதல் குடியரசு அரசியல் யாப்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. வெளிநடப்பு செய்தனர்.

அப்பொழுதிருந்து பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்களுக்கு பாராளுமன்றம் ஒரு அரசியல் பேசும் தக்க புகலிடமாகத் தென்படவில்லை. சிங்கள ஆதிக்கம் பெருகியது. அதே நேரம் காணி உச்ச வரம்புச் சட்டம், வீடுகள் உச்ச வரம்புச் சட்டம் ஆகியன 1972ம் ஆண்டின் பின்னர் வெளிவந்து சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆகவே 1972ன் பின்னர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றமானது வெறும் அரசியல் பேசும் அரங்கமாகவே அமைந்தது. ஆனால் அவர்கள் பேச்சுக்கள் சிங்கள மக்களைப் போய் அடையவில்லை. இதற்குக் காரணம் எமது பாராளுமன்றமானது பெரும்பான்மையினரது அடாவடித்தனத்துக்குத் துணை போக சம்மதித்தமையே. ஜனநாயக முறைமைகள் பேணப்படவில்லை.

சிறுபான்மையினரின் கருத்துக்கள் பொருட்படுத்தப்படவில்லை. அத்துடன் சிங்கள ஊடகங்கள் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களைத் தமது ஊடகங்களில் வெளியிடப் பின்நின்றனர்.

அவர்களின் ஆங்கிலப் பேச்சுக்கள் கூட கொழும்பு ஊடகங்களில் வெளிவருவது மிக அரிதாகவே இருந்தன. இதனால் தமிழ்ப்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் சிங்கள மக்களைச் சென்றடையவில்லை. எவ்வளவு தான் உண்மைகளைத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்தாலும் அவை சிங்கள மக்களைச் சென்றடையவில்லை என்பதே உண்மை.

தமிழர்கள் யாவரும் பயங்கரவாதிகளே என்ற எண்ணந்தான் சிங்கள மக்களிடையே மேலோங்கியது. இதனால் தமிழ் மக்களின் உண்மை நிலை பாராளுமன்றத்தினுள் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு முறை சிங்கள ஊடகத்தின் கேள்விக்கு சிங்களத்தில் பதில் அளித்தேன். அப்போது அந்த சிங்கள ஊடகவியாளர் உங்கள் உறுப்பினர்கள் இது பற்றி எதுவுமே கூறவில்லையே என்றார்.

அப்போது நான் கூறினேன் ‘நாங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கூறிக்கொண்டு தான் இருக்கின்றோம். உங்களுக்குத்தான் விளங்கவில்லை’ என்றேன்.

ஆனால் 1972ன் முன்னர் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசியவை பொதுமக்களைப் போய் அடைந்தன. இன்றோ ஆங்கிலத்தில் பேசினாலும் சிங்கள மக்களைச் சென்றடைவதில்லை. தமிழில்ப் பேசினாலும் எமது கருத்துக்கள் சிங்களப் பெரும்பான்மை மக்களை அடைவதில்லை.

இந்த கால கட்டத்தில்த் தான் தமிழ் இளைஞர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்கத் தொடங்கினர். பாராளுமன்றத்தில் எத்தகைய அறிவுக் கூர்மைசார் பேச்சுக்களை நிகழ்த்தினாலும் அவற்றால் பயன் ஏதும் புலப்படவில்லை என்று கண்டு வன்முறையை விடுதலை ஆயுதமாக்கினர்.

2009ல் இளைஞர்களின் ஆயுதங்கள் மௌனிக்கப்படும் வரை தமிழ்ஈழத் தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தின் வகிபாகம் மிகக் குறைந்தே காணப்பட்டது. எனினும் தமிழ்ப் பிரதிநிதிகள் 22 பேர் அப்போது இருந்துங்கூட அவர்களால் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் போர் நடந்துகொண்டிருந்தமையே.

2009ம் ஆண்டின் பின்னரான பாராளுமன்றத்தை எடுத்துப் பார்த்தோமானால் பாராளுமன்ற தமிழ் சிங்கள உறுப்பினர்களுக்கிடையேயான இடைவெளி நீண்டு கொண்டு செல்வதை அவதானிக்கலாம். மலையகத் தமிழர்கள் சிலர் சிங்களத்தில் பேசுவதை சிங்கள உறுப்பினர்கள் புரிந்து கொள்கின்றார்கள். ஆனால் தமிழில் பேசுவோரின் பேச்சின் மொழிப் பெயர்ப்பைக்கூட கேட்கும் பொறுமை சிங்கள உறுப்பினர்களுக்கு இல்லை என்றே சொல்லலாம்.

அடுத்து தமிழ்ப் பேசும் உறுப்பினர்களின் தொகை குறைந்து வருகின்றது. அரசாங்கம் தமிழ்ப் பேசும் உறுப்பினர்களின் கருத்துக்களைப் பொருட்படுத்துவதில்லை. ஆங்கிலம் கூட பல சிங்கள உறுப்பினர்களுக்கு புரிவதில்லை. ஆகவே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தைப் பொறுத்த வரையில் பாராளுமன்றத்தின் வகிபாகம் குறைந்து கொண்டே செல்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் ஆர்ப்பாட்டங்கள், காணி அபகரிப்பை எதிர்க்கும் கிராமத்தவரின் எதிர்ப்புப் போராட்டங்கள், மீனவர்களின் போராட்டங்கள், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடைபவனி போன்றன மக்கள் தாங்களே களத்தில் முன் நின்று போராட வேண்டிய அத்தியாவசியத்தை அவரகளுக்கு உணர்த்தியுள்ளன.

மக்கட் தலைவர்களும் இதையுணர்ந்து பாராளுமன்றத்தில் இருந்து கொண்டே சர்வதேச ரீதியாக எவ்வாறு தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லலாம் என்;பது பற்றி சிந்தித்து செயலாற்றி வருகின்றார்கள்.

பாராளுமன்றத்தின் வகிபாகத்தை ஆராயும் போது ஒன்றை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பது ஒற்றையாட்சியின் கீழ்; நாம் கோருவது சமஷ;டி அல்லது இணைப்பாட்சியையே!

ஒற்றையாட்சி முறையைக் கைப்பற்றிக் கொண்டவர்கள் ஒரு போதும் அதன் இறுக்கத்தைத் தளரவிட முன்வரமாட்டார்கள். சமஷ;டி என்பது அந்த இறுக்கப் பிடியைத் தளரச் செய்வது. பாராளுமன்றத்தில் பங்கு சிங்களப் பிரதிநிதித்துவம் இருக்கும் போது சிங்கள மக்களின் அளுங்குப் பிடிக்குப் பாதிப்பு ஏற்படும் வண்ணம் எதனையும் செய்ய சிங்களப் பிரதிநிதிகள் எவரும் முன்வரமாட்டார்கள். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு உதாரணம் கூறுகின்றேன். பேரூந்தில் பயணம் செய்யும் போது பெண்களுக்கென்று சில ஆசனங்கள் அவற்றில் ஒதுக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அந்த ஆசனங்களில் ஆண்கள் உட்கார்ந்திருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

கேட்டால் ‘இப்பொழுது தானே ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை தந்தாகிவிட்டதே. பின் எதற்கு உங்களுக்கு பிரத்தியேக ஆசனங்கள்’ என்று கூறி இருக்கைகளைத் தர மறுக்கின்றார்கள் ஆண்கள்.

வாகன சாரதி, கண்டக்டர் யாவருமே ஆண்கள். அவர்களும் சம உரிமை பற்றிக் கூறி எந்த நடவடிக்கைகளையும் எடுக்க மறுக்கின்றார்கள்.

ஆகவே அங்குள்ள பெரும்பான்மையினரான ஆண்களிடம் பேசிப் பயனில்லை. வேறு வழிமுறைகளையே பெண்கள் கையாள வேண்டும்.

நான் என்ன கூற வருகின்றேன் என்றால் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரமும் பலமும் கொண்டவர்கள் இணைப்பாட்சிக்கு ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஆகவே தான் சர்வதேச கருத்துப் பரிமாற்றங்களின் மூலம் நெருக்குதல்களை ஒற்றையாட்சியின் மீது ஏற்படுத்த வேண்டிய காலகட்டம் தற்போது உருவாகியுள்ளது. இதை உணர்ந்து தான் முதலமைச்சர் என்ற எனது பதவியைப் பயன்படுத்தி இங்கு வந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை அலுவலர்களுக்கும் எமது நிலை பற்றிய விரிவான விபரங்களையும் புள்ளி விபரங்களையும் என் பதவியின் போது தந்துதவினேன். அப்போதைய செயலாளர் நாயகம் ஹுசெயின் அவர்கள் எமது ஆவணங்களைப் பரிசீலித்ததின் பலனாக எமக்கு சாதகமான கருத்துக்களை அக்காலகட்டத்தில் எடுத்தியம்பினார்.

சர்வதேச ரீதியாக நாங்கள் எமது அரசியல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒரு சார்பான ஏதுவாக அமைகின்றது. அன்றாடப் பிரச்சனைகளை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து அவற்றைத் தீர்க்க முடியும். ஆனால் தமிழீழத் தமிழர்களின் அரசியல் தீர்வில் பாராளுமன்றத்தின் வகிபாகம் தற்போது மிகவும் வேதனைக்குரிய அவல நிலையையே அடைந்துள்ளது.

அத்துடன் இன்னுமொரு விடயம் ஆராயப்பட வேண்டியுள்ளது. வெளிநாடொன்றுடன் 13வது திருத்தச்சட்டம் பற்றிப் பேசி எமது ஆறு கட்சிகளும் துரோகம் இழைத்துவிட்டன என்று ஒரு சாரார் குற்றம் சாட்டி வருகின்றார்கள். அவர்கள் அவ்வாறு கூறுவதற்குக் காரணம் அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு தமிழ் மக்கள் கோரிக்கைகளுக்கு இடமளிக்கும் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் கூறியமையே.

இவர்களின் அரசியல் அப்பாவித்தனம் இதில் இருந்து புலப்படுகின்றது. புதிய அரசியல் யாப்பானது அதிகார மையத்தை மாகாணத்தில் இருந்து மாவட்டத்திற்கு மாற்ற இருக்கின்றது. மாவட்டங்களுக்கு அதிகாரப் பரவலாக்கத்தை உண்டுபண்ணி ‘பார்த்தீர்களா! உங்கள் கிராமங்கள்,மாவட்டங்கள் இனித் தம்மைத்தாமே ஆளப் போகின்றன’ என்று கூறப் போகின்றார்கள். வட கிழக்கு இணைப்பு, மாகாண அரசாங்கம் அல்லது அரசாங்கங்கள் என்பவற்றைத் தாண்டி மத்தியின் கைப்பொம்மைகளாக மாவட்டங்களை ஆக்கவிருக்கின்றார்கள்.

எம்மைக் குறை கூறுவோர் இலவு காத்த கிளிகளாக மாறப் போகின்றார்கள். புதிய அரசியல்யாப்பு எமது மாகாணசபை முறைமையை அடியோடு அழித்து இந்தியாவின் தலையீட்டையும் அண்டவிடாமல் செய்துவிடும். இதை உணர்ந்து எம்மைக் குறைகூறுவோர் விழித்துக் கொள்ள வேண்டும். பதின்மூன்றுக்குப் பதில் மாவட்ட அரசாங்கமே வரவிருக்கின்றது. மாவட்டங்கள் மத்தியின் அதிகாரத்தினுள் சிறைப்பட்டிருப்பன.

நாங்கள் எங்கள் மக்களுக்கு உணர்வூட்டுவதிலும் பார்க்க அவர்களுக்கு அறிவூட்ட வேண்டும். எமது அரசியல் போராட்டங்களுக்கு மக்களின் நேரடி நடவடிக்கைகளே வலுச் சேர்க்கக்கூடும். இனிவருங்காலத்தில் பாராளுமன்றத்தில் பேசுவதால் விளையும் நன்மை மிகக் குறைவே. ஆனால் மக்களுக்குப் பிழையான அரசியல் அறிவைப் புகட்டக்கூடாது. ஆகவே பாராளுமன்றம் தமிழீழத் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு தீர்வைத் தராது ஆட்சியில் உள்ளவர்களுக்கு நெருக்குதல்களை நாம் உருவாக்காவிட்டால்.” என அவர் மேலும் தெரிவித்தார்.