சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

“கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் வலுவடைந்துள்ளது” – வைத்தியசாலையிலிருந்து சுகாதாரதுறை அமைச்சர் !

கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் தான் சிகிச்சை பெற்று வருகின்றமையால், கொரோனாத்  தடுப்பூசி ஆரம்ப நிகழ்வில் தன்னால் பங்கேற்க முடியவில்லை எனச் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

எனினும், தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவால் வழங்கப்பட்ட கொரோனாத் தடுப்பூசியை முதலில் சுகாதாரப் பிரிவுக்கும், பாதுகாப்புப் பிரிவுக்கும் வழங்க கிடைத்தமையை எண்ணி தான் மகிழ்ச்சி அடைகின்றார் எனவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்ததன் ஊடாக, கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் வலுவடைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி, கொரோனாத் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முக்கியத்துவத்தைத் தான் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்திருந்தார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பவித்ரா வன்னியாராச்சி, ஹிக்கடுவ பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதைத் தொடர்ந்து, அவர் இரத்மலானை பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“இன்னமும் கண்டுபிடிக்கப்படாத ஒரு தடுப்பூசிக்காக எதிர்பாத்துக்கொண்டுள்ளோம்.அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி கிடைத்தவுடன் இலங்கையில் 4.2 மில்லியன் மக்களுக்கு கிடைக்கும்” – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

“இன்னமும் கண்டுபிடிக்கப்படாத ஒரு தடுப்பூசிக்காக எதிர்பாத்துக்கொண்டுள்ளோம்.அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி கிடைத்தவுடன் இலங்கையில் 4.2 மில்லியன் மக்களுக்கு கிடைக்கும்” என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாராளுமன்றில் மேலும் அவர் கூறுகையில்,
“கொரோனா வைரஸ் பரவல் விடயத்தில் தேசிய மட்டத்திலான விடயங்கள், கண்காணிப்பு, அவசர நிலைமைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கிறோம். சர்வதேச போக்குவரத்து பயணங்கள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய சுகாதார சேவைகள் எக்காரணம் கொண்டும் வீழ்ச்சி கண்டிராத விதத்தில் கொவிட்-19 நிலைமைகளையும் கையாண்டு வருகின்றோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள், கடன் உதவிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பி.சி.ஆர், அன்டிஜன் பரிசோதனைகளை எவ்வாறு கையாண்டு வருகிறோம் என்பதை இந்த சபைக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துரைத்துள்ளேன்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தெளிவான வேலைத்திட்டம், மற்றும் அதனை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதன் அடுத்த கட்டமாக கொரோனா வைரஸ் பரவலுக்கான தடுப்பூசியை கொண்டுவரும் தேவையே உள்ளது. இந்த வேலைத்திட்டம் உயரிய தரம் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போதும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் போட்டித்தன்மை உள்ளது. எனினும் எமது மக்களுக்கு தடுப்பூசிகளை கொடுக்கையில் எமது மக்கள் சுகாதார துறை மீதும் தடுப்பூசி மீதும் வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாக்க வேண்டும்.
குறைந்தகால மற்றும் நீண்டகால உபாதைகள் வராத விதத்திலான தடுப்பூசிகளை வழங்குதல். தேசிய பொருளாதாரத்திற்கு தாக்கம் ஏற்படாத விதத்தில் விலைகளை சமாளிக்கக்கூடியதான தடுப்பூசியாக அது இருக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸை தடுக்கும் வேலைத்திட்டத்தில் இவை பாரிய சவாலாக இருக்கும் என நம்புகிறேன். எனவே இந்த சவால்களை வெற்றி கொண்டு அதற்கான சிறந்த தடுப்பூசி ஒன்றினை பெற்றுக்கொடுக்கவும் அதற்கான ஆய்வுகளை செய்யவும் சுகாதார அமைச்சின் சார்பில் சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே தடுப்பூசி குறித்து கவனம் செலுத்தி வந்தோம். அதற்கமைய உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து உடன்படிக்கைகளை செய்துள்ளோம். இதன்போது பரிசோதனைக்காக 20 வீதமான இலங்கையர்களுக்கு இந்த தடுப்பூசியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. அந்த வகையில் தடுப்பூசி கண்டறியப்பட்டவுடன் 4.2 மில்லியன் மக்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும். ஆனால் இன்னமும் தடுப்பூசி கண்டறியும் நடவடிக்கைகள் மூன்றாம் கட்டத்தை தாண்டவில்லை. எப்போது தடுப்பூசி வழங்கப்படும் என்பது எவருக்குமே தெரியாதுள்ளது.
தடுப்பூசி வழங்கப்பட்டதும் அதனை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்னமும் கண்டறியப்படாத ஒரு தடுபூசிக்காக நாம் இவ்வாறான முன்னாயத்த வேலைத்திட்டங்களை செய்துள்ளோம்.
மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் மூலமாக பாதிக்கப்பட்டவர்களின் வர்த்தகத்தை சமாளிக்க தற்காலிக காப்புறுதி வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான வேலைத்திட்டம் என்றே நாம் கருதுகிறோம். 2021 ஆம் ஆண்டில் உலகில் அதிகளவில் கொவிட் -19 கட்டுப்பாட்டில் வரும். நாமும் அதனை இலக்காக கொண்டு இலங்கையில் தேசிய வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய வரவு செலவு திட்டத்தில் கவனத்தில் கொண்டுள்ளோம். மாவட்ட வைத்தியசாலைகளின் தரத்தை உயர்த்தும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.