செல்வம் அடைக்கலநாதன்

செல்வம் அடைக்கலநாதன்

கொடுங்கோல் ஆட்சியை முறையடிக்கின்ற அகிம்சை போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் – அடைக்கலநாதன் கோரிக்கை!

இலங்கை அரசின் கொடுங்கோல் ஆட்சியை முறையடிக்கின்ற அகிம்சை போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் தமிழ்நாட்டில் இடம்பெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஈழத்தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தமிழக அரசு என்றும் துணை நிற்கும் என நம்புவதாகவும் மேலும் சிறப்பு முகாம்களிலுள்ள இலங்கை தமிழரை தமிழக அரசு விடுவிக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அகதிகளாக தமிழ்நாட்டை சென்றடைந்த இலங்கை தமிழ் மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள உதவிகள் தொடர்பிலும் இதன்போது நினைவுகூர்ந்தார்.

“வவுனியாவில் உருவாகவுள்ள சீனித்தொழிற்சாலை இந்தியாவுக்கு எதிரானது என்றால் கட்டாயம் எதிர்ப்போம்.” – செல்வம் அடைக்கலநாதன்

சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் கஷ்ட பட வேண்டாம். வவுனியா மக்கள் வேணாம் என்றால் திருப்பி அனுப்புறோம் என தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (03) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியாவில் சீனித் தொழிற்சாலை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில் – சீனித் தொழிற்சாலை தொடர்பில் 4 ஆவது தடவையாக அமைச்சரவை அனுமதி கிடைத்திருக்கின்றது. ஆனாலும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை.

நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலீட்டாளர்கள் இன்னும் தமது கருத்துக்களை சொல்லவில்லை. ஆனால் பலர் அதில் பெரிதும் விருப்பம் தெரிவிக்கவில்லை . சிங்கள குடியேற்றம் வரும் எனவும், சீனா முதலீடு எனவும் கூறுகிறார்கள்.

எம்மைப் பொறுத்த வரை தமிழீழ விடுதலை இயக்கம் சீனாவின் முதலீட்டை அதாவது இந்தியாவுக்கு எதிரான முதலீட்டை ஏற்கமாட்டோம்.

இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு விடயங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சீனா முதலீட்டை எதிர்ப்போம். நாம் ஒரு போராட்ட இயக்கம். நிச்சயமாக சிங்கள குடியேற்றங்களையும் எதிர்ப்போம்.

 

சீனித் தொழிற்சாலை முறையாக நடைமுறைப் படுத்தப்படாத நிலையில், வவுனியா மக்களோ அல்லது வவுனியாவில் உள்ள அரசியல்வாதிகளோ இது தொடர்பில் கருத்து சொல்லவில்லை.

 

வவுனியாவிற்கு வரும் முதலீடு என்ற அடிப்படையில் எங்களது மக்களின் கருத்துக்களையும், இங்குள்ள அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோரது கருத்துக்களையும் பெற்ற பின் தான் இங்கு கொண்டு வருவதா இல்லையா என முடிவெடுப்போம்.

 

ஆகவே, தயவு செய்து யாரும் தேவையில்லமால் தலையிட வேண்டாம். சீனித் தொழிற்சாலையால் சிங்கள குடியேற்றம் வரும். சீனா வரும் என நிரூப்பிக்க முடிந்தால் நிரூப்பிக்கவும்.

 

இந்த தொழிற்சாலை தாய்லாந்து நிறுவனத்தின் முதலீடு. இதில் தமிழீழ விடுதலை இயக்கம் எந்தப் பங்காளியும் இல்லை. இது தென்னிலங்கைக்கு செல்வதற்கான வாய்ப்பை தடுத்து நிறுத்தி வடக்கிற்கு கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியே. இதற்கான பங்காளிகளாக நாம் இருக்கப் போவதில்லை.

 

முதலீட்டாளர்களை கொண்டு வருவதற்கான ஒரு செயற்பாட்டு பங்காளர் இல்லை. மக்களின் நலன், விவசாயிகளின் நலன் என்பன பற்றி கவனம் செலுத்தி வவுனியா மக்களோடு கலந்தாலோசித்து எமது கருத்தை சொல்ல தெரிவிக்கின்றோம்.

 

வவுனியா மக்கள் விரும்பவில்லை என்றால் சிங்கள இடத்திற்கு போகட்டும். மக்கள் அபிப்பிராயம் பெற்று தான் நாம் முடிவெடுப்போம்.

 

எங்களைப் பொறுத்த வரை எமது தேசத்தில் முதலீடுகள் நடைபெற வேண்டும். ஆகவே இதில் முதலீட்டை பார்ப்பதை விட்டுவிட்டு கனவுகளோடு பார்க்க வேண்டாம். ஆதாரம் இல்லாத கருத்துக்களை கூற வேண்டாம்.

 

வவுனியா மக்கள் ஆதரவு தந்தால் கொண்டு வர முயற்சி செய்வோம். அவர்கள் வேணாம் என்றாம் திருப்பி அனுப்புவோம். தமிழீழ விடுதலை இயக்கம் முதலீட்டை கொண்டு வர முயற்சிக்கின்றது என்பதற்காக சிலர் இதை எதிர்க்கிறார்கள். இது எங்களது ஒரு முயற்சி அவ்வளவு தான். இதை பற்றி யாரும் கவலை பட தேவையில்லை என தெரிவித்தார்.

 

“தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வதை ஏனைய பங்காளி கட்சிகளே விரும்பவில்லை.” – எம்.ஏ.சுமந்திரன்

உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து கூட்டாக தேர்தலில் களமிறங்க தமிழரசுக் கட்சி தயாராகவே இருந்தது என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், இருப்பினும் அதனை ஏனைய தமிழ்க் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டார்.

மேலும் முடிவு எடுப்பதற்கு முன்னர் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை மற்ற கட்சிகள் மீறியதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

எவ்வாறாயினும் வடக்கிலும் கிழக்கிலும் தமிழரசு கட்சி பெருவாரியான வெற்றியை பெறும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழரசு கட்சி நிர்வாகத்தை அமைத்திட அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.

இதே நேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி உள்ளூராட்சி தேர்தலை தனித்து எதிர்கொள்கின்ற பங்காளி கட்சிகள் எம்.ஏ சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து பிளவு பட செய்தார் என குற்றம் சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்தவர் சுமந்திரன் தான் – செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியவர் எம்.ஏ.சுமந்திரன் என்ற விடயம் பகிரங்கமான விடயம் என ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்றையதினம் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

அறிமுக நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

“இலங்கை தமிழ் மீனவர்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள்.”  – செல்வம் அடைக்கலநாதன்

“இலங்கை தமிழ் மீனவர்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள்.”  என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (29) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாரதப் பிரதமர் தமிழ் நாட்டிற்கு வந்திருந்த போது கச்சதீவு பிரச்சனை அதில் எழுப்பப்பட்டுள்ளது. கச்ச தீவை மீட்பதற்கு இது சரியான தருணம். ஆகவே அதனை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ முதலமைச்சர் ஊடாக பாரத பிரதமரிடம் முன் வைத்தது மனவருத்தம் தருகின்றது.

இந்திய அரசாங்கம் இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனை ஏற்பட்ட போது முதன் முதல் உதவி செய்த அரசாங்கமாக உள்ளது. பல உதவிகளை அவர்கள் செய்து வந்தார்கள். அதே நேரத்தில் தமிழ் நாட்டு முதலமைச்சர் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் மக்களுக்கு உதவி செய்ய காத்திருக்கின்றோம் என்ற கருத்தை முன் வைத்த போது எங்களுடைய தரப்பில் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் தமிழ் நாடு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைத்தோம். இந்த பொருளாதாரப் பிரச்சனை சிங்கள மக்களையும் பாதித்திருக்கிறது. இது தான் தமிழர் பண்பாடு என்ற விடயத்தை முதலமைச்சருக்கு எடுத்துக் கூறினோம். இலங்கை பூராகவும் அவர்களுடைய உதவி வந்து கொண்டிருகிறது.

அத்துடன் இந்தியாவில் ஒரு சிறுமி சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை எங்களுடைய மக்களுக்கு கொடுக்கின்ற நெகிழ்ச்சியான விடயத்தைப் பார்க்க முடிந்தது. அன்றாடம் பிச்சை எடுத்து வாழும் ஒரு பெரியவர் தனது பணத்தை இலங்கை மக்களுக்கு கொடுக்கின்ற நிகழ்வையும், ஒரு தேநீர் கடைக்காரர் பலரையும் கூப்பிட்டு தேநீர் அருந்த வைத்து அவர்களிடம் விரும்பிய பணத்தை தரும்படி கேட்டு அதனையும் வழங்கியிருந்தார். இவ்வாறு தமிழ் நாட்டு மக்கள் இலங்கைப் பொருளாதாரப் பிரச்சனைக்கு பாரிய நல்லெண்ணத்துடன் உதவி செய்துள்ளார்கள். அந்த உதவி எங்களால் மறக்க முடியாது. தமிழ் நாட்டு மக்கள் மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கத்தை நாம் மறக்க முடியாது. தமிழ் நாட்டு அரசாங்கம் அன்று முதலே தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படுகிறது.

உண்மையில் கஸ்ரப்படுகின்ற நிலையில் இருக்கும் போது கச்சதீவைப் பெறுவதென என தமிழக முதல்வர் எண்ணியது கவலை தருகிறது. இதனால் மனவருத்தம் அடைகின்றோம். தமிழர்களுக்கு தற்போதைய தமிழக முதல்வரின் தந்தையார் பாரிய சேவைகளை செய்துள்ளார். இந்த நிலையில் கஸ்ரமான நிலையப் பயன்படுத்தி கச்சதீவை இந்தியா பெற முயல்வது ஏற்றுக் கொள்ள முடியாது. கச்சதீவைப் பொறுத்தவரை அதில் எங்களது மீனவர்கள் பயன்பெறும் வாய்ப்பு கூட இருக்கிறது. கச்சதீவை விட்டுக் கொடுக்க முடியாது. அது தமிழர்களின் தீவாக உள்ளது.

வடக்கில் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் தீவாக இருக்கின்ற போதும், இந்தியாவிற்கு பங்கம் ஏற்படும் வகையில் அதனை பயன்படுத்த தமிழ் மக்கள் ஒரு போதும் அனுமதியளிக்க மாட்டார்கள். அதனால் இந்திய தனது பாதுகாப்பு விடயத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாரத பிரதமர் கூட இலங்கை தமிழர்களை காப்பாற்ற முயற்சிப்போம் என கூறிய நிலையில் தமிழக முதல்வர் கூறியதை ஏற்க முடியவில்லை. இலங்கை தமிழ் மீனவர்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும்.”- கஜேந்திரகுமார்

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியுடனான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பு நடைபெற்ற போதும் கூட இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு தொடர்பில் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடக்கவில்லை என்பது ஊடகங்கள் மூலம் உறுதியாகின்றது.

அதேசமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பக்கத்திலிருந்து 13ஆம் திருத்தத்தை அமல்படுத்துவதற்கான அழுத்தங்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிப்படுத்துகின்றன. இது சம்பந்தமாக நாம் தெரிவித்து வந்த கருத்துக்களானது மீண்டும் மீண்டும் உறுதியாவதாகவே கருதுகிறோம்.

கடந்த காலங்களில் புலம்பெயர் தமிழர்களை தடை செய்த அரசு தற்போது பொருளாதார நெருக்கடி எழுந்துள்ளபோது அந்த புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கின்றது. புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையை நீக்குவதற்கு கூட அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி உள்ளது. இது எதை காட்டுகிறது என்றால் தடை என்பது இலங்கை அரசாங்கத்தினுடைய தேசிய பாதுகாப்பு சம்பந்தமான விடயம் அல்ல என்பதே ஆகும்.

13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே. அவ்வாறெனில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் என்றார்.

13 ஐ எதிர்த்துக்கொண்டு ஏன் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.? – முன்னணியிடம் அடைக்கலநாதன் கேள்வி !

இந்தியாவின் தலையீட்டால் தான் தமிழை பிரதான மொழியாக ஏற்றுக் கொண்டனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் ,இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவு படுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஏனைய நாடுகள் வர்த்தக உடன்படுக்கையை மட்டுமே எமது நாட்டுடன் செய்கிறார்கள். இந்தியா மட்டும் தான் அன்று தொடக்கம் எம்முடன் இன பிரச்சினை,தொடர்பில் கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றனர்.

அவர்களின் தலையீட்டை அடுத்து தான் தமிழ் மொழியும் பிரதான மொழியாக ஏற்றுக்கொண்டனர்.

நாம் 6 கட்சிகள் முட்டாள்கள்,கஜேந்திக்குமார் அணி அறிவாளிகள் அப்படியா?.அப்படியென்றால் ஏன் மாகாண சபைகளின் அதிகாரங்களை கேள்வி குறியாக்கும் திருத்தங்களை நீங்கள் எதிர்த்துக்கொண்டு ,மாகாண சபை தேர்தலில் போட்டியிட போகின்றீர்கள் என்று சொல்கிறீர்கள்.

இந்தியாவின் உரித்து எங்கள் சார்பில் அரசிடம் அவர்கள் பேச வேண்டும் என்றார்

“தமிழ் மக்களின் விடுதலைக்காக துப்பாக்கி ஏந்தி போராடியவர்கள் நாம்.” – செல்வம் அடைக்கலநாதன்

எமது இயக்கத்துக்கும் வரலாறு இருக்கின்றது. அந்த வரலாற்றையும் காரணங்களையும் சொல்லமுடியும்.  தமிழ் மக்களின் விடுதலைக்காக துப்பாக்கி ஏந்தி போராடியவர்கள் நாம். இப்போதும் மக்களின் விடுதலைக்காக போராட வேண்டும் என்ற சிந்தனையே எமக்குள்ளது.” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று  (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் கட்சிகளால் ஐ.நா சபைக்கு கடிதம் அனுப்பிய விவகாரம் ஏற்கனவே பேசப்பட்டு முடிந்திருக்கின்றது.  அது தொடர்பாக விரிவாக பேச விரும்பவில்லை.   கூட்டமைப்பை உருவாக்கிய பொறுப்பு எங்களையும் சார்ந்திருக்கின்றது. அது மக்களின் விடுதலைக்காக உருவாக்கப்பட்டது. அதனை சிதைப்பதற்கு நாம் அனுமதிக்க முடியாது.   எமது மக்கள் திண்டாடி கொண்டிருக்கும் இந்த சூழலில் மாறிமாறி நாங்கள் கருத்து சொல்வதை விரும்பவில்லை. சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களை பற்றி பல்வேறு கருத்துக்களை சொல்லியிருக்கின்றார்கள். அதற்கான விளக்கத்தினை எங்களால் சொல்ல முடியும். எமது இயக்கத்துக்கும் வரலாறு இருக்கின்றது. அந்த வரலாற்றையும் காரணங்களையும் சொல்லமுடியும்.  தமிழ் மக்களின் விடுதலைக்காக துப்பாக்கி ஏந்தி போராடியவர்கள் நாம். இப்போதும் மக்களின் விடுதலைக்காக போராட வேண்டும் என்ற சிந்தனையே எமக்குள்ளது.

தனிப்பட்ட முறையில் மாறி மாறி கருத்துக்களை சொல்வதால் மக்கள் வெறுப்படைகின்றனர். நாம் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்ற விடயத்தினை கடந்த தேர்தல் மூலம் மக்கள் எமக்கு உணர்த்தியுள்ளனர். பதில் சொல்லாமல் விடுவதால் அந்த விடயத்திற்கு ஒத்துப்போவதாக யாரும் கருதமுடியாது. எனவே எமது தலைவர்கள் விட்டுச்சென்ற பணியினை தொடர்ந்து முன்னெடுப்போம்.

இதேவேளை  ஜிஎஸ்பி பிளஷ் வரிச்சலுகையினை பெற்றுகொள்வதற்கான யுக்தியாகவே கோட்டாவின் ஐநா உரையை பார்கின்றேன். இலங்கையில் வாழும் அனைத்து இனமும் சமம் என்று  அவர் தெரிவித்தார். ஜனாதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து அடிக்கடி ஒரு விடயத்தை அவர் குறிப்பிட்டு வருகின்றார். தான் சிங்கள மக்களின் வாக்குகளாலேயே வெற்றிபெற்றேன் என்றார்.

அத்துடன் தமிழர் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகள் இராணுவபிரசன்னம், உயிரிழந்தவர்களை நினைவுகூரக் கூட முடியாத இக்கட்டான நிலையில் தமிழினம் இருக்கின்றது. எனவே இனங்கள் அனைத்தும் சமன் என்று தெரிவிப்பதை ஏற்க முடியாது. அது உண்மைக்கு புறம்பானது. காணாமல் போனவர்களுக்கு இறப்பு பத்திரம் வழங்கமுடியும் என தெரிவித்ததன் மூலம் அவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். காணாமல் போனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை அவர் ஏற்றுள்ளார். அப்படியானால் படுகொலை செய்தவர்களுக்கு என்ன தீர்ப்பு. அவர்களுக்கான நீதி என்ன. கொலை செய்தவர்களை தண்டித்த பின்னரே பத்திரம் வழங்க முடியும்.   அவர் இராணுவத்தை காப்பாற்றும் ஒரு நிலைப்பாட்டினையே கொண்டுள்ளார். எனவே அந்த கூற்று எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக உள்ளது.

இன்று விடுதலை புலிகள் தொடர்பான புகைப்படங்களை வைத்திருந்தால் கூட கைது செய்வதற்கான நிலமை பயங்கரவாத தடைச்சட்டத்தினூடாக உருவாக்கப்பட்டுள்ளது. அது மோசமாக எமது இளைஞர்களை வஞ்சித்துக்கொண்டிருக்கின்றது. எனவே அவரது உள்ளக பொறிமுறை என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது.   அவர் முழுக்க முழுக்க ஏமாற்றத்தை ஏற்படுத்தும் விடயத்தினையே தனது உரையில் முன்வைத்துள்ளார். அது நம்ப முடியாத ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது முழுக்க முழுக்க சுயநலத்தின் உரையாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு பெறுமதி மிக்க எங்களது உயிர்களை துச்சமாக மதித்துள்ளார்.

அத்துடன் தவத்திரு அகத்தியர் அடிகளாரும், திருகோணமலை மாவட்ட ஆயரும் இணைந்து வடக்கு கிழக்கில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து  மக்களின் பிரச்சினைகளை ஒருமித்து கையாள்வதற்கான முயற்சியை ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகிறது. அதனை நாம் வரவேற்கின்றோம்.   ஒற்றுமை முக்கியம் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி எங்களது இனத்தின் பிரச்சினையை உலகத்திற்கு சொல்லுகின்ற ஒரு வாய்ப்பை இந்த முயற்சி ஏற்படுத்தும்.

இந்த விடயத்தில் ஒரு ஆலோசனையை சொல்ல விரும்புகின்றேன். வடக்கு– கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் சகோதரர்களுடைய பிரச்சனைகளை எடுத்துரைப்பதற்காக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது முஸ்லிம் தலைவர்களையோ இணைந்து கொள்ள வேண்டும். இரண்டாவது மலையகம் சம்மந்தமாக மக்கள் படுகின்ற துன்பங்களை வெளியில் கொண்டு வருகின்ற மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்த விடயத்தில் உள்வாங்க வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைக்கின்றேன் என்றார்.

“ வடுக்கள் இருந்தாலும் இந்த தேசத்தின் விடுதலைக்காக நாங்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றினோம்..” – நாடாளுமன்றில் அடைக்கலநாதன் !

ஸ்ரீசபாரத்தினத்தினை விடுதலைப்புலிகளே கொன்றனர்.  வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும், தேசத்தின் விடுதலைக்காக விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றினோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

 

ரெலோ அமைப்பின் தலைவரை கொன்றது யார் என்பதை வெளிப்படுத்த முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் பாராளுமன்றில் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

நாங்கள் பகிரங்கமாகவே சொல்லி வந்திருக்கின்றோம். அது ஒரு சகோதரப் படுகொலை. விடுதலைப் புலிகள் தான் எமது ரெலோ இயக்கத்தின் தலைவரான ஸ்ரீசபாரத்தினத்தினை கொலை செய்தார்கள். இது உலகறிந்த உண்மை.

பாராளுமன்ற உறுப்பினர் திலீபனுக்கு புதிதாக சொல்ல வேண்டிய தேவை ஒன்றுமில்லை. நாங்கள் ஏற்கனவே அதனை சொல்லியிருந்தோம்.  விடுதலைப் புலிகள் இருக்கின்ற போதும் நாங்கள் வெளிப்படையாக சொல்லியிருக்கின்றோம். உண்மையை நாம் மறக்க முடியாது. இதனை நாம் வெட்ட வெளிச்சமாக சொல்லிக் கொள்கின்றோம்.

வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும் இந்த தேசத்தின் விடுதலைக்காக நாங்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றினோம்.

இதேவேளை போராட்டத்தின் உச்சகட்டத்தில் இலங்கை அரசாங்கம் போராடிக்கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் விடயத்தில்  கடந்த காலங்களில் இந்த அரசாங்கம் மெத்தனப்போக்கினை காட்டியமையினாலேயே இந்த நிலமை உருவாகியுள்ளது.

மக்களை பாதுகாப்பதில் இருந்து அவர்கள் தவறியிருக்கின்றனர். வைரஸை தடுப்பதற்காக களனிப்பாலத்தில் முட்டிகளை போட்டு மூடநம்பிக்கைகளை கொண்டுள்ளவர்களை இந்த அரசாங்கம் அமைச்சர்களாக வைத்துள்ளது. எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் மெத்தனப்போக்கினையே காட்டி வருகின்றது.

வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் வடக்கில் நடக்கும் போது தென்னிலங்கையில் வாய்மூடி மௌனிகளாக இருந்தார்கள். ஆனால் இன்று தென் இலங்கையில் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றது.  இவ்வாறான சம்பவங்களை யாரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது என்பது எனது கருத்து என்றார்.

50 ஆண்டுகளாக: அமிர்தலிங்கம் முதல் அடைக்கலநாதன் வரை ஆடும் முறை மாறவில்லை! ஆனால் ஆட்டம் தொடர்கிறது!! – த.ஜெயபாலன் .

கிரேக்கத் தத்துவஞானி சாக்கிரட்டீஸ் தன்னை ஒரு மேதை என்றார். அவர் தான் அவ்வாறு எண்ணியதற்கு என்ன காரணம் என்பதையும் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, “எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு நன்கு தெரியுமாதலால்  நான் ஒரு மேதை – I know that I am intelligent, because I know that I know nothing” என்கிறார் சாக்கிரட்டீஸ். தனக்கு ஒரு விடயம் தெரியாது என்பதை உணர்ந்த ஒருவரே அந்த விடயத்தைத் தேடுவதற்கும் அறிவதற்கும் தூண்டப்படுவார். அதன் மூலம் அறிவை வளர்த்துக்கொள்வார். ஆனால் தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று நம்புவவர்களிடம் தேடல் இருக்காது அறிவும் வளராது. இன்றும் சிறந்த விஞ்ஞானியாகக் கருப்படும் ஐசாக் நியூட்டன் கூட எமது மூதாதையர் குறிப்பிட்டது போல கற்றது கைமண் அளவு கல்லாதது உலக அளவு என்றே கூறுகின்றரர். இன்னும் கற்பதற்கும் அறிவதற்கும் நிறைந்த விடயங்கள் இருக்கின்றன என்பதையே அது குறிக்கின்றது.

ஆனால் தங்கள், தங்கள் கிணற்றுக்குள் வாழும் தமிழ் தேசிய வாதிகளோ தாங்கள் அனைத்தும் அறிந்துவிட்ட தோரணையில் அறிக்கைவிடுவதும் முடிந்த முடிவாக கருத்துக்களை முன்வைப்பதும் வேடிக்கையாக உள்ளது. இது ஒருவகை அதிமேதாவித்தனக் கோளாறு – superiority complex. பட்டும் இன்னமும் புத்தியில் தெளிவில்லை. சில சமயம் இது இவர்களுக்கு தீர்க்க முடியாத மரபணு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகவும் இருக்கலாம்.

இந்தப் பழமொழி அரசியல் அடிப்படையில் தவறு என்றாலும் தமிழ் தேசியத்திற்கு பொருத்தமாக இருப்பதால் குறிப்பிடுகிறேன். ‘குருடன் பெண்டிலுக்கு அடித்தது போல’ தமிழ் தேசிய வாதிகள் எப்போதாவது சொல்லவது, கத்துவது சரியாக இருந்துவிடுவதும் உண்டு. அதை வைத்துத்தான் அவர்களது அரசியல் பிழைப்பு நடக்கின்றது. ஆனால் தமிழ் மக்களுக்கு இவர்களால் எப்போதுமே இழப்புத்தான். உயிரை வகைதொகையின்றி இழந்தனர். அளவில்லாத உடைமைகளை இழந்தனர். இப்போது எஞ்சியிருக்கின்ற உரிமைகளை இழக்கின்றனர். பொருளாதாரத்தை இழக்கின்றனர். கல்வியை இழக்கின்றனர்.

தமிழ் மக்களின் உரிமைகளை, பொருளாதாரத்தை, கல்வியை அழிக்கின்ற விடயத்தை மிகச்சிரத்தையாக செய்துவருகின்றனர், தமிழ் தேசிய வாதிகள். பாராளுமன்றத்திலும் மாகாணசபையிலும் இவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டு மக்களை அழித்தனர். அரசியல் என்பதன் அடிப்படையே இயலாததை இயலுமாக்கும் திறன் – politics is the art of making imposible posible என்பதை உணராமல், தங்களை வளர்க்கும் திறன் என்று புரிந்து வைத்துள்ளனர். இவ்வளவு காலத்தில் இவர்கள் தங்களையும் ஒன்றும் பெரிய அளவில் வளர்த்துக் கொண்டதாகத் தெரியவில்லை. வைக்கோல் பட்டறையைச் சுற்றிச் சுற்றி வந்து குரைப்பவர்களாகவே உள்ளனர்.

இந்த லட்சணத்தில் மாவை சேனாதிராஜா வாரிசு அரசியலுக்கும் மகனைக் களமிறக்கி உள்ளார். மாவை சேனாதிராஜா ஒன்றும் தன் திறமையால் முன்னுக்கு வந்தவரல்ல. தனக்கு மேலுள்ளவர்கள் சுட்டுக்கொல்லப்பட படிப்படியாக முன்னுக்கு நகர்ந்தவர். இதே பாணியில் இப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி எப்போது பாடையில் ஏறுவார் தான் எப்போது பதவியேற்கலாம் என்று லண்டனில் இருந்து வந்த சாதிமான் எஸ்.அரவிந்தன் கிளிநொச்சியில் காத்துக்கிடக்கின்றார். இவருக்கு அரசியலுக்கு வர உள்ள ஒரே தகுதி யாழ்ப்பாண மேயர் செல்லன் கந்தையனை தன்னுடைய நண்பர் தங்கமுகுந்தனோடு சேர்ந்து அடித்ததே.

தங்கமோ பித்தளையோ முகுந்தன் யாழ்பாண நூலகம் எரிக்கப்பட்ட நாளை மாற்றி வைப்பேன் என்று சன்னதம் ஆடுகின்றார். மே 31 1981இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை யூன் 1இல் எரிக்கப்பட்டது என்று எழுதி நூலக எரிப்பின் சூத்திரதாரிகளான காமினிதிஸ்சநாயக்காவைவும் சிறில் மத்தியூவையும் காப்பாற்ற முனைகின்றார். அ அமிர்தலிங்கம் மே 31 முதல் யூன் 2 வரை நடந்த சம்பவங்களை தொகுத்து குறிப்பிட்டுள்ளார். அதில் அ.அமிர்தலிங்கத்திற்கே எந்த நாள் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது என்பதில் உறுதி இருக்கவில்லை. அப்போதைய ஈழநாட்டின் தவறான செய்தியின் அடிப்படையிலேயே இந்தக் குழப்பம் ஏற்பட்டது. இவ்வாறு தான் தமிழ் தேசியம் புனைவுகளையே வரலாறாக்க கொக்கரிக்கின்றது. இப்படி சொந்த விடயங்களிலேயே விவரம் போதாதவர்கள் தற்போது வெளிவிவகாரம் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டனர்.

How LTTE killed TULF leader Amirthalingam - NewsIn.Asiaதமிழ் தேசியம் எப்போதும் பிரச்சினைகளைத் தணிக்க அல்லது தீர்த்துவைக்க விரும்புவதில்லை. எப்போதும் முரண்பாடை மோசமடையச் செய்யும் வகையிலேயே செயற்படும். அதற்கு அவர்களது அரசியல் போதாமை முக்கியகாரணம். 1980க்களில் அவர்களுடைய சமன்பாடு ‘எதிரியின் எதிரி, தங்களின் நண்பன்’. இந்த உலுத்துப்போன சமன்பாட்டைத் தான் அவர்கள் இன்றும் கடைப்பிடிக்கின்றனர். இலங்கை அமெரிக்காவின் நண்பன். இந்தியாவின் எதிரி. அதனால் இந்தியாவுக்கு சேவகம் செய்து, இந்தியாவை தமிழர்களின் நண்பனாக்கினால் தமிழர்களின் பிரச்சினையை, இந்தியா தீர்த்து வைக்கும். இதுதான் அன்று முதல் இன்று வரை தமிழ் தேசியம் பின்பற்றுகின்ற சமன்பாடு.

இந்தியாவின் அரசியல் வாரிசான ராஜீவ் காந்தியயைப் படுகொலை செய்த பின்னரும் கூட இந்தக் கூட்டம் இந்தச் சமன்பாட்டை மாற்றவில்லை. ராஜீவ் படுகொலை ஒரு துன்பியல் சம்பவம். ”கள்ளத்தோணிகள், தோட்டக்காட்டான்கள், வடக்கத்தையான்’ என்றெல்லாம் நாங்கள் செல்லமாகத்தான் கூப்பிடுகிறோம்.  மற்றும்படி நாங்களும் நீங்களும் நண்பர்கள் தான். எங்களுக்கு ஒன்றென்றால் தமிழகம் கொந்தளிக்கும்” என்றெல்லாம் இவர்கள் சில பஞ்டயலக் வைத்து அரசியல் செய்ததைவிட இவர்களிடம் ஒரு துளி அரசியல் தெளிவும் இருந்ததில்லை.

சங்கானை நிச்சாமத்தில் சாதியப் போராட்டத்திற்காக குண்டெறிந்த பொழுது அ அமிர்தலிங்கம்  சங்கானையயை சங்ஹாய் ஆக்குகிறார்கள் என்று புலம்பினார். இன்றோ யாழ்ப்பாணத்தில் சீனா பனிப்போர் தொடுக்கிறது என்று முன்னாள் மாகாணசபை அமைச்சர் அனந்தி அறிக்கைவிடுகின்றார். கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் மாறியிருக்கிறார்களே அல்லாமல் அவர்களுடைய அரசியலில் எந்தவித மாற்றமும் இல்லை.

2009இல் தமிழ் தேசியம் முள்ளிவாய்க்காலில் மண்கவ்வியதை அவர்களால் இன்றும் ஜீரணிக்க முடியவில்லை. தங்களுடைய அரசியல் போதாமையின் விளைவே இது என்பதை அவர்கள் இன்றும் ஏற்றுக்கொள்ளவில்லை. கீ போர்ட் மார்க்ஸிட்டுக்களும் தமிழ் தேசியப் பூநூல் அணிந்த காலம் அது. மதியுரைஞர் பாலசிங்கத்தின் இடத்தை நிரப்ப கீ போர்ட் மார்க்ஸிட்டுக்களுக்கு ஐபிசி இல் நேர்முகத் தேர்வுகள் பல நடந்தன. காற்றடிக்கும் பக்கம் சாய்ந்து இவர்கள் தமிழ் தேசியத்துக்கு மார்ஸிய மூலாம் பூசினர். பூசிய மூலாம் கொட்டிண்ண, தமிழ் தேசியம் வேகமாகக் கறள்பிடித்தது. இந்த கீ போர்ட் மார்க்ஸிட்டுகள் இன்று கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியில் ‘ஓர்கானிக்’  வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். வறுமையில் வாழும் மாணவர்களுக்கு கல்வியூட்டுவதே அரசுக்கு துணைபோகும் என்று புரட்சிகர தமிழ் தேசியம் பேசியவர்கள் இன்று, ஓர்கானிக் தமிழ் தேசியப் புரட்சியில் மும்மரமாக ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் தேசிய அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள்,  கீ போர்ட் மார்க்ஸிஸ்டுக்களும் அ.அமிர்தலிங்கம் விட்டுப்போன சமன்பாட்டையே பயன்படுத்துகின்றனர். இந்தச் சமன்பாட்டில் எதிரியும் நண்பர்களும் மாறிவிட்டனர். இலங்கைக்கு இப்போதும் இந்தியா தான் எதிரியாம். அமெரிக்கா உட்பட மேற்குநாடுகளும் இலங்கைக்கு எதிரியாம். சீனா தான் இலங்கையின் நண்பனாம். அதனால் சீனாவுக்கு எதிராக தமிழ் மக்கள் கிழர்ந்து எழுந்து இந்தியாவையும்  அமெரிக்க நேசநாடுகளையும் குசிப்படுத்தினால், அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பார்களாம். இதுதான் தமிழ் தேசியவாதிகளான பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் முதல் அனைவரதும் முடிவான நிலைப்பாடு. இந்தப் பின்னணியில் தான் இவர்கள் இப்போது கத்தி வருகின்றனர்.

இந்தப் பின்னணியில் வைத்துத்தான் தமிழ் தேசியவாதிகள் ஏன் அறிக்கை விடுகின்றனர்; கத்துகின்றனர்; ஏன் அறிக்கைவிடவில்லை; கத்தவில்லை என்பதைப் பார்க்க வேண்டும். வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் “இலங்கை அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியாவை எதிர்த்து சீனாவின் பக்கம் நிற்பதனாலேயே கொரோனா தடுப்பூசிகளை வழங்க குறித்த நாடுகள் முன்வருவதில்லை” என்று முற்று முழுதான பொய்யான தகவலை வெளியிட்டது வேறொன்றுக்கும் அல்ல. அமெரிக்க, பிரித்தானிய நேச நாடுகளையும் இந்தியாவையும் குசிப்படுத்தி அவர்களுடைய தூதரகங்களில் கவனத்தைப் பெறவே.

உலகின் செல்வந்த நாடுகளான அமெரிக்க, பிரித்தானிய நேச நாடுகளின் கூட்டத்தொடர் பிரித்தானியாவின் சுற்றுலாக் கடற்கரைப் பிரதேசமான கோன்வோலில் நடைபெறுகின்றது. அங்கு  வைத்துத் தான் இந்த நேசநாடுகள் ஒரு பில்லியன் (பத்துக்கோடி) வக்சீன்களை வறிய நாடுகளுக்கு வழங்க முன்வந்தன. இந்த உதவியயைச் செய்ய முன் வந்தமைக்கு காரணமே எங்கே சீனா இந்நாடுகளுக்கு வக்சீனை வழங்கி ராஜதந்திர ரீதியில் தங்களை தோற்கடித்துவிடும் என்ற பயத்தினால் என்பதை பிரித்தானியாவின் முன்னணிப் பொருளியல் பத்திரிகையான ‘பினான்சியல் ரைம்ஸ்’ நேற்று முன்பக்கத்தின் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. இன்னும் பல ஊடகங்களும் இதனை வெளியிட்டு இருந்தன. இந்த செல்வந்த நாடுகளின் மாநாட்டில் சீனா இடம்பெறாத போதும், இம்மாநாட்டில் சீனாவே ஆளுமை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஆபிரிக்க ஒன்றியம் இந்தச் செல்வந்த நாடுகளின் உதவியயே வரவேற்றிருந்த போதும், இந்நாடுகளின் போக்கை ‘தடுப்பூசி இனவாதம்’ என பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் கண்டித்து இருந்தது. நோயைக் கட்டுப்படுத்தும் வக்சீனை ஏனைய நாடுகள் உருவாக்கத் தடைவிதித்துவரும் இந்தச் செல்வந்த நாடுகள், உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டதால் பத்துவீதத்தையே வறிய நாடுகளுக்கு கையளிக்க முன்வந்துள்ளன. அதுவும் எப்போது இந்நாடுகளைச் சென்றடையும் என்பது இன்னமும் புதிராகவே உள்ளது. சீனாவும் ரஸ்யாவும் தங்களது வக்சீனை வறிய நாடுகளுக்கு வழங்கி வருவதால் தான் இந்தச் செல்வந்த நாடுகள் தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள குறைந்தளவு வக்சீனை அதுவும் காலதாமதமாக வழங்க முன்வந்தன.

யாழ்ப்பாணத்தில் இந்தியா – சீனா இடையே பனிப்போருக்கான வாய்ப்பு என்று அனந்தி சசிதரன் யூன் 11இல் வலம்புரியில் வெளியிட்ட கருத்துக்களும் இந்தப் பின்னணியிலேயே நோக்கப்பட வேண்டும். செல்வந்த நாடுகளின் தூதராலயங்கள் சார்ள்ஸ் நிர்மலநாதன், அனந்தி சசிதரன் போன்ற விபரமும் விவேகமுமற்றவர்களைக் கொண்டு அந்தந்த நாடுகளில் தங்களுக்கான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன.

Selvam Adaikalanathan - Photos | Facebookதிருகோணமலை சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்கப்படுவது தொடர்பிலும் திருச்சியில் விடுதலை செய்யுங்கள் அல்லது எங்களை கருணைக்கொலை செய்யுங்கள் என்று கூறும் இலங்கைத் தமிழ் அகதிகள் விடயத்தில் தமிழ் தேசியவாதிகள் மௌனமாக இருப்பதும், இதனால் தான். இந்த அகதிகளோடு தொலைபேசியில் உரையாடியதாகக் கூறும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளிப்படையாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற சமன்பாட்டில் அரசியல் விபரமும் விவேகமுமற்ற அ அமிர்தலிங்கம் முதல்  செல்வம் அடைக்கலநாதன் வரை பிரபாகரனின் முன்னாள் ஆலோசகர் மு திருநாவுக்கரசு உட்பட எல்லாத் தமிழ் தேசியவாதிகளும் இந்தியாவின் தாளத்துக்கு தப்பாமல் ஆட்டத்தை தொடர்கின்றனர்.
_._._._._._
அகர வரிசையில் அனந்தி முதல் உயிர்மெய் வரிசையில் கடைசியில் வரும் விக்கினேஸ்வரன் வரை தமிழ் தேசியத்தை தூக்கிப்பிடிப்பவர்கள் தாங்கள் வாழும் கிணற்றுக்கு வெளியே பெரியதொரு உலகம் இருக்கின்றது என்பதை ஒரு போதும் எண்ணிப் பார்க்காமலேயே வாழ்ந்தும் கத்தியும் பழகிவிட்டனர். இந்த இருவருக்கும் இடையேதான் மற்றைய தமிழ் தேசியவாதிகளும் தங்கள் தங்கள் கிணற்றுக்குள் வாழ்ந்தும் கத்தியும் வருகின்றனர். இவர்களது கத்தல்களையும் புலம்பல்களையும் காதுகுத்து மற்றும் மரணச் செய்திகளுக்கிடையே வெளியிடுவதற்கு சில ஊடகங்கள்: உதயன், வலம்புரி, காலைக்கதிர், லங்காசிறி ஜப்னா நியூஸ் என்று காத்திருக்கும் அளவுக்குத் தான் தமிழ் தேசியத்தின் இருத்தல் இருக்கின்றது.

 

தமிழ் தேசியத்துக்கு கிடைத்த ஒரேயொரு மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தையும் தலைவர் துரத்திவிட்டதும் அவர் இயற்கை எய்தியதும் வரலாறாகிப் போனபின் அந்த இடம் இன்னமும் வெற்றிடமாகவே உள்ளது. அந்த இடத்தை நிரப்ப பலர் போட்டி போட்டாலும் யாராலும் அதனை நிரப்ப முடியவில்லை. இப்போது அதற்குத் தேவையும் இல்லாமல் போய்விட்டது. தமிழ் தேசியம் இப்போது அல்ஸமியர் எனும் ஞாபகமறதி நோய் (தமிழில் அறளைபேர்ந்துவிட்டது என்றும் சொல்வார்கள்) க்கு ஆளாகிவிட்டது. அவர்களுக்கு பழையதும் ஞாபகம் இருக்காது. தாங்கள் என்ன கதைக்கின்றோம் என்பதும் ஞாபகம் இருக்காது. அதனால் அவர்கள் அரசியலில் இருந்து சுகவீன விடுமுறையில் செல்வது அவர்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும்.