ஜுலி ஜியோன் சங்

ஜுலி ஜியோன் சங்

அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தின் 247ஆம் ஆண்டு நிறைவு விழா இலங்கையில் !

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தின் 247ஆம் ஆண்டு நிறைவினையும், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த பங்காண்மையின் 75ஆம் ஆண்டு நிறைவினையும் குறிக்கும் வகையில், ஜூன் 22ஆம் திகதி கொழும்பில் ஒரு வைபவத்தினை நடத்தினார்.

இதில் பிரதம அதிதியாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்து கொண்டார்.

அமெரிக்காவின் ஸ்தாபகத் தந்தைகள் 1776 ஆம் ஆண்டு பென்சில்வேனியாவிலுள்ள பிலடெல்பியாவில் சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்காக ஒன்றுகூடிய ஜூலை 4 ஆம் திகதியினை உலகெங்கிலுமுள்ள அமெரிக்க குடிமக்கள் சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

 

அப்பிரகடனத்துடன், வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைப் பின்தொடர்தல் மற்றும் ஆளப்படும் மக்களின் ஒப்புதலுடன் பெறப்பட்ட அரச அதிகாரங்கள் உட்பட சில பராதீனப்படுத்தவியலாத உரிமைகளின் அடிப்படையிலமைந்த தன்னாட்சியினை நோக்கி அமெரிக்கா தனது முதல் படியினை எடுத்து வைத்தது.

இவ்வைபவத்தில் உரையாற்றிய தூதுவர் சங்,

 

“ஒரு நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய விசையாற்றல் மற்றும் தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றுடன் இணைந்து அதைப் பாதுகாக்கும் அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை என்பன சுதந்திரம், தனியுரிமை மற்றும் மகிழ்ச்சியைப் பின்தொடர்தல் ஆகியவற்றிலிருந்தே ஊற்றெடுப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அமெரிக்காவிலும், இலங்கையிலும், மற்றும் எல்லா நாடுகளின் விடயத்திலும் அது உண்மையாகும்.” எனக் குறிப்பிட்டார்.

 

அமெரிக்காவானது இலங்கையின் மிகவும் பழமையான பங்காளர்களில் ஒன்று என்பதை முன்னிலைப்படுத்திக்கூறிய தூதுவர் சங், பரஸ்பர மதிப்பீடுகள் மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு என்பன இரு நாடுகளும் இணைந்து வெற்றிபெற முடியும் என்பதை நிரூபித்துள்ளன என வலியுறுத்தினார்.

 

“அமெரிக்காவின் தேசிய சுதந்திரம் மற்றும் எமது இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு ஆகியவற்றை நாம் கொண்டாடுகையில், உண்மையில் அனைத்து குடிமக்களுடனும் இலங்கை அரசாங்கத்துடனும் எமக்கிருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க பங்காண்மையினை நாம் கொண்டாடுகிறோம். அமெரிக்கர்களைப் பொறுத்தவரை, எங்கள் ஸ்தாபகர்கள் அதைத் தெளிவாகக் கூறியுள்ளனர், இன்றுவரை, அவர்கள் வகுத்த பாதையினை நாங்கள் பின்பற்றுகிறோம் – மிகவும் பூர்த்தியான ஒரு இணைப்பினை உருவாக்குவதற்காக எங்கள் அரசியலமைப்பை நாங்கள் மரியாதையுடன் பின்பற்றுகிறோம். இலங்கையுடன் அமெரிக்கா கொண்டுள்ள பங்காண்மையின் குறிக்கோள் அதற்குச் சற்றும் குறைந்ததல்ல.” என அவர் மேலும் கூறினார்.

 

அமெரிக்கர்களுக்கும் இலங்கையர்களுக்கும் நன்மைகளை வழங்கும் இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் மற்றும் மக்களுக்கும் இடையிலான உறவுகளில் எங்களது பங்காண்மை செழித்து வளர்கிறது.

 

1956 ஆம் ஆண்டு முதல், போசாக்கு, சுகாதாரம், கல்வி, மனித உரிமைகள் மற்றும் ஆட்சி, அனர்த்தங்களின் போதான பதிலளிப்பு மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் USAIDஆனது 2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியுடைய உதவிகளை வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டில், இலங்கை பொருளாதார நெருக்கடியின் மத்தியில்

இருந்தபோது, விவசாயிகளுக்கு உரம் வழங்கியது முதல் சிறு வணிகங்களுக்கு வழங்கிய நிதி உதவிகள் வரை 270 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பெறுதியுடைய புதிய உதவிகளை அமெரிக்க அரசாங்கம் வழங்கியுள்ளது.

பல ஆண்டுகளாக நிலையாக வளர்ச்சியடைந்துள்ள எமது இராணுவங்களுக்கிடையிலான உறவானது, இருதரப்பு பயிற்சி, பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்துகிறது.

இவையனைத்தும் இறுதியில் ஒரு திறந்த, சுதந்திரமான மற்றும் அமைதியான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய ஒரு மீண்டெழும் தன்மையுடைய படையினை கட்டமைப்பதற்கு உதவி செய்யும்.

இலங்கை சமூகங்களில் திறன்களை வளர்த்து, வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் உறவுகளை வளர்ப்பதற்காக 500இற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் தமது வாழ்வின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களை அர்ப்பணித்துப் பணியாற்றியது உட்பட 1962 ஆம் ஆண்டு முதல் மிகப்பெரிய கலாச்சாரங்களுக்கிடையிலான உறவுகளை உருவாக்குவதற்கு Peace Corps உதவி செய்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் மாத்திரம் 3.3 பில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதியுடன், இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்கா விளங்குகிறது. இலங்கையின் திறமையான மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளுக்காக தெரிவு செய்யும் விருப்பத்திற்குரிய இடங்களில் அமெரிக்காவும்  ஒன்றாகும்.

கடந்த ஆண்டில் 3,000 இலங்கை மாணவர்கள் அமெரிக்காவிற்கு கல்வி கற்பதற்காகப் பயணித்துள்ளனர். Fulbright மற்றும் International Visitor Leadership Programs போன்ற பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாக ஏனைய கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் நேரடியாக உதவி செய்கிறது. கடந்த 75 வருடங்களாக இந்த நிகழ்ச்சிகளில் ஏறக்குறைய 3,000 இலங்கையர்கள் பங்குபற்றியுள்ளனர்.

எதிர்காலத்தில் எமது மக்களுக்கிடையிலான உறவுகளின் இன்னும் பெரிய வளர்ச்சிக்கும்; பொருளாதார, அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கும்; மற்றும் புவியியல் ரீதியாக எவ்வளவு முக்கியமானதாக இப்பிராந்தியம் இருக்கிறதோ அதேயளவு சுதந்திரமாகவும் திறந்ததாகவும் அது இருப்பதற்கும் நாம் கட்டமைத்துள்ள பங்காண்மையானது அடித்தளமாக அமையும்.

இலங்கையில் அமெரிக்காவின் நட்பு, அர்ப்பணிப்பு மற்றும் உதவி என்பன கடந்த 75 வருடங்களில் கொண்டாடுவதற்குத் தகுதியான பல சாதனைகளைப் படைத்துள்ளன. அந்த நட்பும், அர்ப்பணிப்பும், உதவியும் தொடர்ந்தும் நீடித்திருக்கும் என்பதுடன், ஒன்றாக இணைந்து இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை எம்மால் உருவாக்க முடியும்.

“இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்க பங்களிப்பு வழங்குங்கள்.” – ஜுலி ஜியோன் சங்கிடம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை !

இலங்கையில் நிலவும் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவசியமான பங்களிப்பை வழங்குமாறு, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜுலி ஜியோன் சங்கிடம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து 6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மறுக்க முடியாத அச்சுறுத்தல்கள் மற்றும் மோசமான நிலைமைகளை கருத்திற்கொண்டு சாதகமான பங்களிப்பை வழங்குமாறு தமிழ் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

ஜனநாயக ரீதியில் அரசியல் தீர்வை அடைந்து கொள்ள, சர்வதேச மட்டத்திலான கண்காணிப்புடன் பொதுசன வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.