ஜே.வி.பி

ஜே.வி.பி

இலங்கையை அதிகார போட்டிக்குள் நுழைத்து இன்னுமொரு உக்ரைனாக மாற்ற நாம் தயாரில்லை – இந்தியாவிடம் ஜே.வி.பி !

இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான பூகோள அரசியல் போட்டிக்கு மத்தியில் மற்றுமொரு உக்ரைனாக மாறுவதற்கு இலங்கை தயாரில்லை என்ற விடயத்தை இந்தியாவிடம் நாம் தெரிவித்துள்ளோம் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

இராஜதந்திர தொடர்பு என்பது மெஜிக் கிடையாது.அது எமக்கு நன்கு தெரியும். வடகொரியா, கியூபா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் மட்டும்தான் எமது தொடர்பு இருக்கும் என சிலர் கூறுகின்றனர்.

இலங்கையை வடகொரியாவாக்குவதற்கு முற்படுகின்றனர் எனவும் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இது தவறு. உலகம் இன்று மாறியுள்ளது.

 

உலக பூகோள அரசியலும் மாறியுள்ளது. நாம் இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா , ஜப்பான் உட்பட உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் கொடுக்கல் – வாங்கல்களிலும் ஈடுபடுவோம். அதற்கான உறவு கட்டியெழுப்பட்டுள்ளது.

 

இலங்கை சீனாவிடம் அதிகமாக கடன் வாங்கியுள்ளது, அதற்கு அடுத்தப்படியாக இந்தியாவிடம் கடன் வாங்கப்பட்டுள்ளது. தற்போது சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளனர்.

ஐஎம்எவ் என்பது அமெரிக்காதான். இவ்வாறு கடன்வாங்கியுள்ளதால்தான் நாடு இறுதியுள்ளது. அமெரிக்கா, இந்தியா, சீனா என்பன உலக அதிகார அரசியலில் ஈடுபடுகின்றன.

அந்த போட்டியில் எமது நாடு சிக்ககூடாது. நாம் இந்தியா சென்றிருந்தவேளை, நாம் மற்றுமொரு உக்ரைனாக மாறுவதற்கு தயாரில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தோம்.

 

பிராந்திய பாதுகாப்பு சார்ந்த விடயத்தின்போது சரியான இடத்தில் நாம் நிற்போம். அவர் அதனை ஏற்றுக்கொண்டார் என்றார்.

புலம்பெயர் தமிழர்களை சந்திக்க தயாராகும் அனுரகுமார தரப்பு!

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் வாரம் கனடாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதன் போது, கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களையும் அவர் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கடந்த 5 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, இந்தியாவின் முக்கிய தரப்பினரை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுத்திருந்தார்.

இந்த நிலையில், எதிர்வரும் வாரம் அனுரகுமார திஸாநாயக்க கனடாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பயணத்தின் போது கனடாவில் உள்ள அரசியல்வாதிகளை அவர் சந்திக்கவுள்ளதுடன், ரொரன்டோ பகுதியில் நடைபெறவுள்ள கூட்டமொன்றிலும் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜே.வி.பியினருக்கு ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளும் அழைப்பு விடுக்க வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்தன

ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மக்கள் விடுதலை முன்னணிக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியுடன் விரிவுபடுத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதற்கு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வெல்லவாய பகுதியில் இன்று திங்கட்கிழமை (12) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. முறையான மறுசீரமைப்புக்களுடன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளோம் என்பதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

பொருளாதார மீட்சிக்காக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்களை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மாற்றியமைத்தால் அல்லது இடைநிறுத்தினால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும் என்பதை அரசியல் தரப்பினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டு மக்களை தவறான வழிநடத்தும் வகையில் போலி அரசியல் வாக்குறுதிகளை வழங்குவதை அரசியல்வாதிகள் அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அரசியல் வாக்குறுதிகளினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் அரசியல் வாக்குறுதிகளை அனைவரும் தவிர்த்துக் கொள்வது அத்தியாவசியமானது. இந்தியா, சீனா உள்ளிட்ட முன்னிலை நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய எதிர்ப்பு கொள்கைகளை கடைப்பிடித்த மக்கள் விடுதலை முன்னணியினர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டமை வரவேற்கத்தக்கது. மக்கள் விடுதலை முன்னணிக்கு ஜப்பான், தென்கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க வேண்டும் என்றார்.

மக்கள் விடுதலை முன்னணியினரை இந்தியா அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தததது பாரிய பேசுபொருளானது. இலஙட்கை அரசியலில் சீனச்சார்புக்கு எதிரான நிலைப்பாட்டை ஜே.வி.பி எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் என்ற நிலையிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதற்கு பின்னணியில் இருப்பதாக பலரும் குறிப்பிட்டிருந்த நிலையில் ஜே.வி.பியினர் இதனை முழுமையாக மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே அமைச்சர் பந்துல குணவர்த்தன மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அரசியல்வாதிகள் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும் கலாச்சாரத்தை உருவாக்குவேன் – அனுரகுமார திசநாயக்க

அரசியல்வாதிகள் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும் கலாச்சாரத்தை உருவாக்குவேன் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளில் அரசியல்வாதிகள் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் மக்களுடன் சேர்ந்து பணியாற்றுவதை பார்த்திருப்பீர்கள் எங்களுக்கு அவ்வாறான அரசியல் கலாச்சாரம் இங்கு தேவையா என கேள்வி எழுப்பியுள்ள அவர் நாங்கள் அந்த மாற்றத்தை அரசியல்கலாச்சாரத்தை உருவாக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை பொறுப்பேற்பதற்கான பொருளாதாரத்திற்கு புத்துயுர்கொடுப்பதற்கான துணிச்சல் எங்களுக்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

“வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்.” – அனுர குமார திஸாநாயக்க

வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது

 

இலங்கை பல்லின சமூகம். தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கம் உறுதி செய்யப்பட்டால் தான் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இனவாத கருத்துக்களின் வெளிப்பாடுகளினால் தான் 30 வருட கால யுத்தம் தோற்றுவிக்கப்பட்டது.

 

ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு கட்டவிழ்த்து விட்ட இனவாதங்களினால் தான் இந்த நாடு 30 வருட கால யுத்தத்தை எதிர்கொண்டது.

 

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இனங்களுக்குகிடையில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை.

 

வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பின் உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்.

 

இவர்கள் ஒருபோதும் தேசிய நல்லிணக்கத்தை எதிர்பார்க்கவில்லை. இனவாதம் தோற்றம் பெறும் வகையில் தான் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

 

இனவாதத்தை பரப்பி அதன் ஊடாக தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளவே தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். வடக்கு மற்றும் தெற்கில் அரசியல் தீர்வுகளுக்கு முன்னர் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும். எமது அரசியல் செயற்பாடுகள் தேசிய நல்லிணக்கத்தை நிலை நாட்டுவதாக அமையும் என்றார்.

பொருளாதார குற்றவாளிகள் பட்டியலில் அமைச்சர் பந்துல குணவர்த்தனவையும் சேர்க்க வேண்டும் – அனுர குமார

பொருளாதார குற்றவாளிகள் பட்டியலில் அமைச்சர் பந்துல குணவர்த்தனவையும் சேர்க்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவாட் கப்ரால், உள்ளிட்டவர்கள் தான் பொருளாதார குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

தற்போது இன்னொருவரையும் இதில் சேர்க்க வேண்டும். அவர் தான் அமைச்சர் பந்துல குணவர்த்தன.

 

ஏனெனில், இவர்தான் பொருளாதாரம் தொடர்பாக இந்த நாடாளுமன்றில் அதிக தடவை கதைத்துள்ளார்.

 

எனவே, தனது பெயர் இந்தப்பட்டியலில் இல்லாதமையை நினைத்து பந்துல கவலையடைகிறாரோ தெரியவில்லை. அத்தோடு, நாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்றமை தொடர்பாக ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால், உயர்நீதிமன்றின் தீர்ப்போடு இந்தத் தெரிவுக்குழு பயனற்றதாகிவிட்டது. இதனால், இந்தத் தெரிவுக்குழுவை கலைக்க வேண்டும் என நான் சபாநாயகரிடம் கேட்டுக் கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“மக்கள் மீதான தாங்க முடியாத வரிச்சுமையைத் தவிர, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து எதுவுமே கிடைக்கவில்லை.” -ஜே.வி.பி

மக்கள் மீதான தாங்க முடியாத வரிச்சுமையைத் தவிர, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து இலங்கை இதுவரை எதையும் பெறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடன்களை மறுசீரமைக்கும் நம்பிக்கையுடன் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதாகவும், 17 மாதங்களுக்குப் பிறகும் இலங்கையால் ஒரு டொலரில் மறுசீரமைக்கவோ முடி வெட்டவோ முடியவில்லை என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையானது இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நிச்சயமற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி அரசாங்கம் பல்வேறு வரிகளை விதித்ததுடன் மின்சாரம், நீர் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகளை அதிகரித்தது, இது மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றார்.

“இலக்கு அரச வருமானம் அடையப்படவில்லை. அதிக வரிகளை விதிக்கவும், மின் கட்டணங்களை மேலும் அதிகரிக்கவும், IMF தொடர்ந்து அரசாங்கத்தை வற்புறுத்துகிறது. IMF அறிக்கையின்படி, இலங்கை எதிர்பார்த்த இலக்கை விட 15 சதவீதம் குறைவாகவே அரச வருவாயைப் பெறுகிறது.”

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வருமான வரிக் கோப்புகளைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. மின்சாரக் கட்டணங்களும் 22 சதவீதம் அல்லது முதல் அலகிற்கு 8 ரூபா வரை அதிகரிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்கும் – ஜே.வி.பிக்கும் தொடர்பு உள்ளது.” – நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ஷ!

செனல் 4 யுத்த வைராக்கியத்துடன் செயற்படுகிறது. கொள்கைக்கு அப்பாற்பட்டு, சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை எமக்கில்லை. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் விசாரணைகள் அரசியலுக்காக பயன்படுத்தப்படும் வரை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைப்பது சாத்தியமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (06) இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்காகவே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்ற தவறானதொரு நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். நாங்கள் கொள்கை அடிப்படையில் செயற்படுகிறோமே தவிர சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடவில்லை.

 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை பொதுஜன பெரமுன தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது.

பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது. குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தற்கொலை குண்டுதாரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார மேடையில் கலந்துகொண்டார்.

 

பிரதான குண்டுதாரி ஒருவரின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராகவும் இருந்தார். அவ்வாறாயின் இவர்கள் அனைவரும் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றிக்காக ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்று குறிப்பிட வேண்டும்.

 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 720 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு 70 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மட்டத்துக்கு அப்பாற்பட்டு அமெரிக்காவிலும் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 

குண்டுத்தாக்குல் சம்பவம் மற்றும் விசாரணைகள் தற்போது தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது. ஆகவே அரசியல் நோக்கத்துக்காக இவ்விடயம் பயன்படுத்திக்கொள்ளப்படும் வரை குண்டுத்தாக்குதலின் உண்மை சூத்திரதாரியை கண்டுபிடிப்பதும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதும் சாத்தியமற்றது என்றார்.

“1980 களில் இருந்ததைப் போன்ற அடக்குமுறை மனப்பான்மையுடன் இனியும் நாட்டை ஆள முடியாது.” – அனுரகுமார திஸாநாயக்க

1980 களில் இருந்ததைப் போன்ற அடக்குமுறை மனப்பான்மையுடன் இனியும் நாட்டை ஆள முடியாது என்பதை சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உணர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறிய அவர், இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது முழுமையான தோல்வியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “1980 களுடன் ஒப்பிடும்போது உலகமும் சமூகமும் இப்போது முற்றிலும் மாறிவிட்டன.

 

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு சாதாரண மக்கள் பொறுப்பல்ல. பொருளாதார தோல்விக்கான பழியை ஆட்சியாளர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.பொருளாதார குற்றங்களுக்கு காரணமான ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் தங்களை ஒருங்கிணைத்து போராடவும், அவர்களை வெளியேற்றவும் உரிமை உள்ளது. மக்களின் போராட்டத்தை தடுக்க அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.

எந்தவொரு போராட்டத்தையும் நசுக்குவதற்கு ரணில் விக்ரமசிங்கவை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஜனாதிபதியின் அடக்குமுறை மற்றும் ஜனநாயக விரோத நகர்வுகளை முறியடிக்க நாங்கள் மக்களுடன் நிற்போம்.

நியாயமற்ற மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஏற்பாடு செய்த போராட்டங்களை நசுக்குவதன் மூலம் எதிர்காலத்தில் மக்கள் எழுச்சியைத் தடுக்க அரசாங்கம் களம் அமைத்து வருகிறது.

 

பொருளாதாரம் புத்துயிர் பெறுவதைக் காட்டுவதற்கான அரசாங்கத்தின் தோல்வியுற்ற முயற்சியை மக்கள் இப்போது உணர்ந்துள்ளனர். அரசாங்கத்தின் அழிவுகரமான நகர்வுகளுக்கு எதிராக அவர்கள் போராடத் தொடங்கியுள்ளனர்.

சமீபத்திய மத்திய வங்கியின் அறிக்கை நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமையை வெளிப்படுத்துகிறது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

அதே நேரத்தில் தொழில்கள் வீழ்ச்சியடைந்துள்ளன, இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர் என்பதை இந்த அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்து துறைகளும் நெருக்கடியில் உள்ளன. இந்த நிலைமையை இனியும் பொறுத்துக் கொள்ள மக்கள் தயாராக இல்லை.

அரசாங்கத்திற்கு எதிராக பேசி நாட்டின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அரசாங்கம் வேட்டையாடத் தொடங்கியுள்ளது. ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாகவும் அவரை துன்புறுத்திய காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

 

 

“அரசமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒழிந்து கொண்டிருக்கிறார் ஜனாதிபதி ரணில் “- அநுரகுமார திஸாநாயக்க

அரசமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதி ஒழிந்து கொண்டிருக்கிறார் என்று ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பெல்மடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்ற காலத்திலிருந்து, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் மக்கள் மத்தியில் பொதுக்கூட்டமொன்றைக்கூட நடத்தி நாம் காணவில்லை.

 

மக்கள் ஆணையால் ஆட்சிக்கு வராத அவர், அரசமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒழிந்து கொண்டிருக்கிறார்.

 

இன்று வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால், ஜனாதிபதியோ நாட்டின் பொருளாதாரம் உயர்வடைவதாக குறிப்பிடுகிறார்.

 

மத்திய வங்கியின் அறிக்கையொன்று அண்மையில் வெளியானது. இதில், 68 வீதமான மக்கள் இரண்டு வேளை உணவினை மட்டுமே உற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்தாண்டு, கடனை திருப்பிச் செலுத்தியும் எரிபொருள், எரிவாயு இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இவ்வாண்டு 600 கோடி டொலர் கடனை திருப்பிச் செலுத்தப் போவதில்லை என்று கூறப்படுகிறது.

 

அரச சொத்துக்களை விற்பனை செய்து, அதன் ஊடாக கிடைக்கும் டொலரைக் காண்பித்து, இந்த நாடு முன்னேறி விட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.