தமிழீழ மக்கள் கட்சி

தமிழீழ மக்கள் கட்சி

புலிப்பொறியினுள் வீழ்ந்த தீப்பொறி புளொட்டின் புலியின் இன்னுமொரு பிரதிபலிப்பே – பகுதி 35

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 35 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 15.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 35

தேசம்: இந்த புலம்பெயர் அரசியல் சூழலில் நாங்கள் பல்வேறு அரசியல் இலக்கிய நகர்வுகளை பார்த்திருக்கிறோம். நீங்கள் வந்த 92ஆம் ஆண்டு காலப்பகுதியில் தீப்பொறியும் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. இவ்வளவு அரசியலிலும் ஈடுபட்ட நீங்கள், தீப்பொறி அமைப்பிலிருந்து போன ஆட்களோடு அமைப்பிலும் இருந்திருக்கிறீர்கள் தொடர்பிலும் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் ஏன் அவர்களோடு ஒரு அரசியல் இணக்கப்பாட்டையோ தீப்பொறியை மீளக் கட்டமைக்கின்ற அந்த விடயங்களில் செயல்படவில்லை? அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? ஏனென்றால் அவர்களுக்கும் 92 காலப்பகுதியில் இருந்து 2010 அதற்கு பிற்பாடும் தமிழீழ மக்கள் கட்சி, பிறகு மே 18 என்ற ஒரு தொடர்ச்சி இருக்குதானே. அது எதிலயும் நீங்கள் உங்களை இணைத்துக் கொள்ளவில்லை. என்ன காரணம்?

அசோக்: ஓம் 86 ஆம் ஆண்டில் பின் தளத்தில் நடந்த மத்திய குழுக் கூட்டத்தில் இருந்து தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் வெளியேற அதன் பிறகு சந்திக்கவும் இல்லை. தொடர்வும் இருக்கவில்லை. நாங்களும் இயக்கத்தினுள் உட்கட்சிப் போராட்டம், தள மகாநாடு, பின் தள மகாநாடு என பிரச்னைகளில் முழ்கி இருந்த நேரம். அவர்களும் சந்திக்கவில்லை. நானும் முயலவில்லை. நான் இங்கு ஐரோப்பாவுக்கு வந்து தான் அவரை சந்திக்கிறேன். தொடர்பு கிடைக்குது எனக்கு. அவர் கனடாவில் இருக்கிறார். நான் பிரான்சுக்கு வந்துட்டேன்.

தேசம்: அது 2016இல் நடக்குது என? அதற்கு முதலே கண்டீர்களா?

அசோக்: இல்லை. இங்க வந்து தான் சந்திக்கிறேன்.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் நீங்கள் தொலைபேசி உரையாடலில் இருந்தீர்கள்? 90களில்…

அசோக்: வந்து கொஞ்ச காலம் அவர் தலைமறைவாக இருந்தார். அதற்குப் பிற்பாடு அவருக்கும் எனக்குமான உறவு வருது. அப்போ தமிழீழ மக்கள் கட்சி உருவாகிவிட்டது என்று நினைக்கிறேன்.

தேசம்: தமிழீழ மக்கள் கட்சி நான் நினைக்கிறேன் ஆனையிறவு தாக்குதல் கட்டத்தில்தான் உருவாகுது. அதற்கு முதல் அவர்கள் தீப்பொறி என்ற பெயரில் தான்…

அசோக்: எனக்கு நல்ல ஞாபகம் கனடாவிலிருந்து ரவி என்று சொல்லி அவரின் உண்மையான பெயர் இளங்கோ என நினைக்கிறேன். அவர் பாரிசுக்கு வாரார். வந்த இடத்தில் அவர் என்னை சந்திக்கிறார். தீப்பொறியா தமிழீழ மக்கள் கட்சியா என்று தெரியவில்லை. அந்தக் கட்சியினுடைய பத்திரிகை ஒன்று கொண்டு வந்தவர்.

தேசம்: தமிழீழ மக்கள் கட்சி ஒரு பத்திரிகை யை வெளியிட்டது.

அசோக்: அந்தக் கட்சி பத்திரிகையோடு வந்து என்னை சந்திக்கிறார்.

தேசம்: அதற்கு முதல் உங்களோடு தொடர்பு கொள்ளவில்லையா?

அசோக்: அந்த கட்சியோடு எந்த தொடர்பும் இருக்கவில்லை. முதலில் தீப்பொறி என்ற பெயரில் இயங்கிய அமைப்பு பிறகு தமிழீழ மக்கள் கட்சி என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது என நினைக்கிறேன்.

தேசம்: …. சுவிஸ் மாநாடு ஒன்று நடத்தினது தானே.

அசோக்: சுவிஸ் சில் அல்ல. தாய்லாந்தில் இந்த மாநாடு நடக்குது. சபாலிங்கம் தோழர் இங்கே படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் தான் இந்த மாநாடு நடக்குது. 94 ஏப்ரல் கடைசி காலங்களில் மே முதல் வாரத்தில நடந்த தென நினைக்கிறேன். ஏனென்றால் எனக்கு தெரிந்த தோழர்கள் சிலர் இந்த மாநாட்டிக்கு சென்றிருந்தனர்.

தேசம்: அப்போ நீங்கள் அவர்களோடு தொடர்பு இல்லை.

அசோக்: அரசியல் சார்ந்து அந்த அமைப்போடு நான் எந்த தொடர்பும் வைத்துக் கெதள்ளவிரும்பவில்லை.

தேசம்: அவர்களும் உங்களோடு தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை.

அசோக்: அவர்களுக்குத் தெரியும். அவர்கள் மீது தீப்பொறி மீது எனக்கு கடும் விமர்சனம் இருக்கு என்று. ஏனென்றால் கண்ணாடி சந்திரன், நேசன் தொடர்பாக கடும் விமர்சனம் இருக்குதானே. அவங்களும் தீப்பொறியில் இருக்கிறபடியால் தெரியும் நான் தீப்பொறிக்குள் வரமாட்டேன் என்று. நேசன், கண்ணாடி சந்திரன், பாண்டி போன்ற யார் யாரெல்லாம் புளொட்டுக்குள்ள மிக மோசமாக அதிகாரதுஸ்பிரயோகம் செய்தார்களோ, பல்வேறு தவறுகளுக்கு உடந்தையாக இருந்தார்களோ அவர்கள் தான் தீப்பொறிக்குள் இருக்கிறார்கள். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் புளொட்டில் இருந்து கடைசி வரை உட்கட்சிப் போராட்டம் நடாத்தி வெளியேறிய தோழர்கள் எவரும் தீப்பொறிக்குள் இல்லை.

இவர்களுடைய அரசியல் நடவடிக்கைகள் கடந்தகாலம் பற்றி தெரிந்த யாருமே அதற்குள் போகத் தயாராக இல்லை. ரகுமான் ஜான் தோழர் தொடர்பாக நல்ல அபிப்ராயம் இருக்கலாம். ஆனால் அவரை நம்பி யாரும் போக மாட்டார்கள். அவர் கோட்பாடு சார்ந்து சிந்திக்கக் கூடியவர். ஆனால் செயற்பாட்டு நடைமுறை தளத்தில் சரியாக அவரால் செயற்பட முடிவதில்லை. வழி நடத்தும் திறன் அவரிடம் இருப்பதில்லை.

அப்போ இளங்கோ வாரார் என்னை சந்திப்பதற்கு வந்து அந்த பத்திரிக்கையைத் தந்து அதனுடைய கொள்கைகள் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

தேசம்: இவர் விடுதலைப் புலிகளில் இருந்து வந்தவரா?

அசோக்: அதற்குப் பிறகுதான் தெரியும் இவர் விடுதலைப்புலிகளில் இருந்தவர் என்றும் கிட்டுவினனுடைய வொடிகாட்ஸ் சாக இருந்தவர் என்றும். அவரும் தீப்பொறிக்குள் இருக்கிறார். அவர்தான் என்னை சந்திக்க வாரார். இந்த சந்திப்பு கலைச்செல்வனுடைய வீட்ட தான் நடக்குது.

தேசம்: கலைச்செல்வனும், லக்ஷ்மியும் தீப்பொறியில் இருக்கிறார்கள்…?

அசோக்: அந்தக் காலகட்டத்தில் அங்க வந்தபடியால் அவர்களுக்கு தொடர்வு இருந்திருக்கலாம். தாய்லாந்து மாநாட்டுக்கு கலைச்செல்வனும், லக்ஷ்மியும் போனது தெரியும். ஏனென்றால் சபாலிங்கம் படுகொலை செய்யப்படும் போது அவர்கள் இங்கு இல்லை. மரண இறுதி நிகழ்வுகளுக்தான் வந்தவர்கள்.

இளங்கோ கொள்கைப் பிரகடனம் எல்லாம் கதைக்கிறார். அவர் கதைத்து முடிய நான் கேட்டேன் ஏன் புதிய அமைப்பை தொடங்குகிறீர்கள் புலிகளோடு சேர்ந்து வேலை செய்யலாம் தானே என்று. ஏனென்றால் அதே இராணுவக் கண்ணோட்டம் அதே தமிழீழம். நான் சொன்னேன் எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று சொல்லி அந்த பேச்சை அப்படியே ஆரோக்கியமாக முடித்துக்கொண்டோம். அதற்குப் பிற்பாடு எந்தவிதமான தொடர்பும் என்னுடன் வைத்துக் கொள்ளவில்லை. ரகுமான் ஜான் தோழருடன் தொடர்பு இருந்தது. அவர் இங்க பாரிசுக்கு மூன்று தடவை வந்தார். தீப்பொறி எல்லாம் உடைந்த பிறகுதான் பாரிசுக்கு வந்தவர். அவருக்கு தெரியும் கடும் விமர்சனங்கள் இருக்கிறபடியால் நான் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யமாட்டேன் என்று முதலே தெரிந்திருக்கும்.

தேசம்: உங்கள் விமர்சனங்களை தோழர் ரகுமான் ஜானிடம் வைத்துள்ளீர்களா?

அசோக்: ரகுமான் ஜான் தோழர் இங்கு வந்தபோது கடும் விவாதம். நீங்கள் எந்த அடிப்படையில் தோழர்களை விட்டுப்போட்டு போனீர்கள்? நாங்களும் விட்டுட்டு போயிருக்கலாம் தானே? நீங்கள் உண்மையிலேயே உட்கட்சி போராட்டம் நடத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் நாட்டுக்கு வந்திருக்கலாம். ஏன் எங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லையா? நாங்களும் தோழர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தானே தளத்துக்கு போய் தள மாநாடு நடத்துறோம், நீங்கள் எங்களோடு வந்து இருந்தால் எவ்வளவு உறுதியான மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம். கடைசியா தீப்பொறியை உருவாக்கி என்னத்தை நாங்கள் சாதித்தோம்? யாரும் உங்களோடு வரவே இல்லை, அதுவும் அதே புலிக் குணாம்சம். புளொட்டின் இன்னொரு பிரதி பிம்பமாக கூட தீப்பொறி இருக்கவில்லை. அதை விட மிக மோசமாக இருந்தது என்பதுதான் உண்மை என்று கடும் உரையாடல்.

நாட்டில் நடந்த ஆரம்பகால அனைத்து தவறுகளுக்கும் உடந்தையாக இருந்தது தீப்பொறியில் இருந்த ஆட்கள் தான். நாட்டில் குறிப்பிட்ட காலங்களில் நடந்த படுகொலைகளுக்கும், அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பாக இருந்தது நேசனும், கண்ணாடிச் சந்திரனும் தான். மத்தியதர வர்க்க குணாம்சம் இருக்கும்தானே அந்த சொகுசுகளை அனுபவிப்பது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பை எப்படி சொகுசு வாழ்க்கைக்கு பயன்படுத்தினார்கள் என்று சொல்லி எனக்கு தான் தெரியும். அதை நான் கண்ணால் பார்த்தேன். இவர்களை நம்பி நாங்கள் எப்படி போக முடியும்?

தேசம்: தோழர் ரீட்டாவின் மீதான பாலியல் பலாக்காரம் தொடர்பாக என்ன அபிப்பிராயம்?

அசோக்: இந்த பிரச்சனை தொடர்பாக சம்பந்தப்பட்ட நேசன், ஜீவன் நந்தா கந்தசாமி அவங்க இரண்டு பேரும் நேரடியாக சம்பந்தப்படவில்லை. பாண்டி நேரடியாக சம்பந்தப்பட்டவர். அவர்களை இன்று வரையிலும் பாதுகாத்துக் கொண்டு நியாயப்படுத்தி கொண்டிருக்கின்ற நபர்கள் என்றால் அப்போது எப்படி இருந்திருப்பார்கள்? குறைந்தபட்சம் ஒரு சுயவிமர்சனம் வேண்டாமா? புளாட்டை போன்றே மோசமான அமைப்பாக தீப்பொறி இருந்தது.

தேசம்: அதைவிட மோசமாக போயிட்டுது…

அசோக்: தோழர் ரீட்டா தொடர்பான பிரச்சனையை ஜென்னியின் திட்டமிட்ட நாடகம் என்றார்கள். பிறகு ஆதாரங்கள், சாட்சியங்கள் இருந்த போது, சம்பவம் உண்மைதான் ஆனால் இதற்கும் தீப்பொறிக்கும் தொடர்பு இல்லை என்றும், வேறு ஆட்கள் தொடர்பு என்றும் சொன்னார்கள். ஆதாரம் கேட்டபோது பிறகு சொன்னார்கள், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று. இப்போது ஜென்னியின் நாடகம் என்ற பழைய பல்லவியை பாடுகிறார்கள். எந்த நேர்மையும் உண்மையும் இவர்களிடம் இல்லை.

அடுத்தது தனிநபர் பயங்கரவாத செயல்களும் இராணுவ வாத கண்ணோட்டமும்தானே தீப்பொறிக்குள் இருந்தது. கோட்பாடுகளுக்கும் அவர்களின் செயற்பாடுகளுக்கும் தொடர்பே இருக்கவில்லை. இல்லாவிட்டால் கிட்டுக்கு குண்டு விசுவார்களா? யோசித்துப் பாருங்கள். வெறும் இரரணுவ வாதம். என்ன ஆரோக்கியமான முன்னெடுப்பை செய்தீர்கள்? கட்டாயம் எங்களுக்கு சுய விமர்சனம் தேவை. இன்றைக்கு என்னை பொருத்தவரை நான் உட்பட யாருமே நல்லவர்கள் இல்லை. எல்லாருமே மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய ஆட்கள் தான். யாருமே சுய விமர்சனம் செய்யத் தயாரில்லை. குறைந்தபட்சமாவது நாங்கள் சுய விமர்சனம் செய்யவில்லை தானே. என்னை பொருத்தவரை யாராவது என் மீது குற்றச்சாட்டு வைத்தால் அந்தக் குற்றம் உண்மை என்றால் அதை நான் முதலில் ஏற்றுக் கொள்வேன்.

தேசம்: மற்றது புளொட்டில் இருந்த மாசில்பாலன் அவர் அல்லது அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தான் பிறகு தீப்பொறியில் இருந்தவர்கள் என்று நினைக்கிறேன். லண்டனில் தீப்பொறி யிலும் செயற்பட்டார்கள். அதுக்கப்புறம் 2010 வரைக்கும் 2009 முள்ளிவாய்க்கால் பிரச்சனை வரைக்கும் அவர்கள் தமிழீழ கட்சியிலிருந்து ஆனையிறவு தாக்குதல் எல்லாம் கொண்டாடுற மனநிலையில்தான் இருந்தது. அதற்கு பிறகு அவர்கள் திருப்பி புதிய திசைகள் என்று உருமாற்றம் பெறுகிறார்கள். அதில உங்களோடு நெருங்கி செயற்பட்ட நாவலன் தான் முக்கியமான ஆள். அதுக்குள்ளே ஏன் நீங்கள் போகவில்லை?

அசோக்: நான் மிகக் கவனமாக இருந்தேன். வார்த்தைகள் அல்ல முக்கியம். செயற்பாடே எனக்கு முக்கியம். மார்க்சியம், முற்போக்கு என்று எதையும் எங்களால் கதைக்க முடியும். ஆனால் அதற்கேற்றவாறு உண்மையாக நாம் வாழ்வதில்லை. செயற்படுவது இல்லை. நிறைய வாழ்வில் அனுபவப்பட்டு விட்டேன். எப்படி இவங்கள நம்பி போகமுடியும். மாசில் மாசில்பாலன் அப்பா இடதுசாரி என்று நினைக்கிறேன். நாட்டில் இருந்தவர்.

தேசம்: இருக்கலாம் பிற்காலத்தில் அவர் விடுதலைப்புலிகளின் நிதி சேகரிப்பில் பங்காற்றி இருந்தவர். நீங்கள் அதை தவறாக எடுக்கக்கூடாது அவர் உண்மையிலேயே புனர்வாழ்வு … சேர்த்தவர் ஏமாத்தியது என்று இல்லை.

அசோக்: அவர் இடதுசாரி பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்துதான் வந்தவர். அவரோடு எனக்கு உறவு இருக்கவில்லை. அறிந்திருக்கிறேன். அவருக்கு இரண்டு மூன்று சகோதரர்கள் லண்டனில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் தொடர்பாக எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அவர் இப்ப நோர்வேயில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் எழுதிய எழுதின கட்டுரைகளுக்கு எல்லாம் மிக மோசமான கமெண்ட்ஸ் கொடுத்தார். என் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டினார். அவர் இப்ப நோர்வேயில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனா மாசில்பாலன் அவங்க கொஞ்சம் ஆரோக்கியமான விழிப்புணர்வு கொண்ட தோழர் என்று நினைக்கிறேன்.

தேசம்: தீப்பொறியில் இருந்தவர்?

அசோக்: இப்ப அவர்களுடைய நடவடிக்கைகளை பார்க்கும்போது அரசியல் கோட்பாட்டு ரீதியாக சிந்திப்பவர்களாக தெரிகிறாங்க.

தேசம்: அவர்கள் ஒரு காலகட்டத்திலும் 2009 வரைக்கும் விரும்பியோ விரும்பாமலோ புலிகளின் ஆதரவு தளத்திற்கு போயிட்டு திருப்பி புலிகள் இல்லாமல் போனதும்…

அசோக்: நிறைய தோழர்கள் அப்படி இருந்திருக்கிறார்கள். தவிர்க்க முடியாமல் சிங்கள பேரினவாதத்தின் செயற்பாடுகள் அவர்களை அவ்வாறான நிலைக்கு கொண்டுபோய் விட்டது என நினைக்கிறன். அவங்களுக்கு வேறு தெரிவு இல்லை. ஆனால் விமர்சன ரீதியாக புலிகளை விளங்கிக் கொண்டு அதன் மீது விமர்சனம் வைத்து புலிகளை தேர்ந்தெடுத்திருந்தால் அது ஆரோக்கியமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் தனிப்பட்ட நலன்களுக்காக புலிகளை ஆதரித்தார்கள். ஆனால் இங்க வந்த பிறகுதான் கேள்விப்பட்டேன் தீப்பொறியும், அதன் பின்னான தமிழிழ மக்கள் கட்சியும் புலி ஆதரவு நிலையை கொண்டிருந்தது பற்றி. அவங்களுடைய தமிழிழம் என்ற பத்திரிகை படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அது புலிகளின் ஆதரவுத் தளமாக தான் அந்த பத்திரிகை இருந்தது. ஆணையிறவு தாக்குதலை ஆதரித்து தமிழ்தேசிய முற்போக்கு சக்தியான புலிகளை அடையாளப்படுத்துகின்ற போக்கு தீப்பொறியிடம் இருந்தது.

தேசம்: அந்த இடத்தில் அப்படித்தான் மாசில் பாலன் தோழர்களை நான் அடையாளம் காண்கிறேன்.

அசோக்: நான் நினைக்கிறேன் அது அவருடைய அரசியலில் உள்ள தவறான பார்வை. பேரினவாதத்திற்கு எதிராக செயற்பட முனையும் பலர் அரசியல் புரிதலில் தவறிழைத்து அவர்களும் மறுபுறம் தீவிர இனவாத தமிழ்த்தேசியததை தேர்வு செய்து விடுறாங்க. தீவிர இனவாத தமிழ் தேசியம் என்ன செய்யும் என்று கேட்டால் புலிகளையே ஆதரிக்க செய்யும். ஆரோக்கியமான முற்போக்கு தமிழ் தேசியத்தை தேர்ந்தெடுக்காத வரைக்கும் தமிழ்தேசிய போக்கு இப்படியான பிழையான வழிகளில்தான் கொண்டு போகும்.

தேசம்: தீப்பொறி தமிழீழ மக்கள் கட்சியாக புலிகளோடு இருந்திட்டு இப்ப மே 18 இயக்கம் அதுல நீங்க ஏதாவது தொடர்புபட்டிருக்கிறீர்களா?

அசோக்: தீப்பொறி, தமிழிழ மக்கள் கட்சியின் புலி ஆதரவு நிலைப்பாடு தொடர்பாக பிற்காலங்களில் தோழர் ரகுமான் ஜானோடு பேசி இருக்கிறன். அவர் புலிகள் தொடர்பாக கடும் விமர்சனம் கொண்டவராகவே இருந்தார். தீப்பொறி புலி ஆதரவு நிலை எடுத்த காலகட்டத்தில் அவர்வெளியேறி விட்டார் என நினைக்கிறேன்.

தோழர் ரகுமான் ஜானோடு அரசியல் தளத்தில் எந்தசெயற்பாட்டு உறவும் எனக்கு இருக்கவில்லை. தனிப்பட்ட உறவே இருந்தது. நிறைய அரசியல் உரையாடல் இருந்தது. அவரிடம் இருந்து அரசியல் கோட்பாட்டுத்தளங்களில் நிறைய கற்றுக்கொள் முடியும். இன்றைய தமிழ்ச் சூழலில் அவர் முக்கியமானவர் என்ற எண்ணம் என்னிடம் உண்டு. அவரும் சில தோழர்களும் சேர்ந்து வியூகம் என்று ஒரு சஞ்சிகை வெளியிட்டாங்க. வியூகம் வெளியிட்ட போது இங்க வந்தவர். நாங்க இங்க அதற்கு விமர்சன கருத்தரங்கு ஒன்றை செய்தோம். முள்ளிவாய்க்கால் முடிந்தபிறகு மே 18 தொடங்கிறார். மே 18 தொடங்கி இங்க வாரார். அப்போ நாங்கள் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தோம். அதில் மே 18 பற்றிய கொள்கை பிரகடன விளக்கங்கள் சொல்லப்படுது. நான்தான் அந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். தலைமைதாங்கும் போதே சொல்லிட்டேன் இவர் என்னுடைய தோழர் மே 18 அமைப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று.

தேசம்: அப்போ ஏன் நீங்கள் தலைமை தாங்கினீர்கள்?

அசோக்: தலைமை தாங்குவதற்கு முழுக்கமுழுக்க அதில் உடன்பாடு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை தானே.

தேசம்: அதை அரசியல் கலந்துரையாடலாக தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.

அசோக்: தலைமை உரையில் நான் சொல்லிட்டேன் இதற்கும் எனக்கும் தொடர்பில்லை, மே18 அமைப்பு தொடர்பான கருத்துக்கள் விமர்சனங்கள் பற்றி ரகுமான் ஜான் தோழருடன் கதையுங்கள். இந்த அமைப்பை பற்றி சுதந்திரமான வெளியில் கலந்துரையாட நான் தலைமை தாங்குகிறேன் என்று சொல்லிட்டேன். ஆரோக்கியமான அரசியல் விமர்சன உரையாடல் வெளியை உருவாக்க முனையும் தளத்தில் நாம் கலந்து கொள்வதில் தவறில்லை. அதே நேரம் எங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அதை நான் செய்தேன்.